குடுமியான்மலை சிகாநாதசாமி கோவில்

குடுமியான்மலை சிகாநாதசாமி கோவில்

சிற்பக்கலையின் பொக்கிஷமாக திகழும் குடுமியான்மலை

புதுக்கோட்டை – கொடும்பாளூர் – மணப்பாறை சாலையில், புதுக்கோட்டையில் இருந்து, 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது குடுமியான்மலை சிகாநாதசாமி கோவில்.

10-ம் நூற்றாண்டில் திருநலக்குன்றம் என அழைக்கப்பட்டுள்ளது. பின்னர் சிகாநல்லூர் எனவும், தற்போது குடுமியான் மலை என்றும் அழைக்கப்படுகிறது.

நம் தமிழகத்தில், சிற்பத்திலும், கட்டிடக்கலையாலும் சிறப்பு பெற்ற கோவில்கள் பல உள்ளன. அவற்றுள் உலகப் பிரசித்தி பெற்ற கோவில் குடுமியான் மலை. இன்றும் உலகின் பல நாடுகளிலிருந்தும் ஆய்வுமாணவர்கள் குடுமியான் மலையில் காணப்படும் சிற்பங்களை ஆய்வு செய்த வண்ணம் உள்ளனர்.

குடுமியான்மலை ராஜகோபுரத்தை அடுத்து உள்ளே நுழைந்தால், மிக அற்புதமாகவும், நேர்த்தியாகவும் சிற்பக்கலையின் பெருமையை பறைசாற்றுவிதமாக அமைந்துள்ள ஏராளமான சிற்பங்களை நாம் காணலாம். இவற்றில் மகாவிஷ்ணுவின் தசாவதாரங்கள், ஆஞ்சநேயர், விபீடணன், வாலி, சுக்ரீவன் சிலைகள் காணப்படுகின்றன்.

இக்கோவில் வசந்த மண்டபத்தில் அமைந்துள்ள சிற்பங்கள் ஒவ்வொன்றும் மிகுந்த நுணுக்கமான வேலைப்பாடுகளும், அற்புதமான அமைப்புகளுடனும் காணப்படுகின்றன.

இங்குள்ள சிற்பங்களின் முகத்தில் காணப்படும் தெய்வீக அழகு, அவைகளின் கைவிரல்கள், கால்விரல்கள் போன்றவற்றில் அணிந்துள்ள அணிமணிகளின் நுணுக்கமான வேலைப்பாடு, அங்கங்களின் துல்லியமான அம்சங்கள், ஆபரணங்களின் சிறந்த அம்சங்கள், மேலும் அவை வெளிப்படுத்தும் காவியக்காட்சிகள், அனைத்திலும் பெருகியுள்ள பேரெழில் நம்மை மீண்டும், மீண்டும் வியந்து போற்றும் வண்ணம் உள்ளது.

சங்கர நாராயணர் சிலையில் ஒருபாதியில் சிவபெருமானையும், மறுபாதியில் நாராயணைனையும் அவரவர்களுக்குரிய அடையாளங்களையும் சிற்பி வேறுபடுத்தி காட்டியிருப்பது மிகுந்த நுணுக்கமான வேலையாகும்.

ஊர்த்துவ தாண்டவர் சிற்பத்தில் அவர்முகத்தில் ஆவேச பாவத்தையும், கோதண்ட ராமர் சிற்பத்தில் அவர் முகத்தில் சாந்த பாவத்தையும் வேறுபடுத்தி காட்டியுள்ள இச்சிற்பங்களின் பெருமைக்கு ஈடுஇணையே இல்லை.

மோகினி அவதாரம் குறித்த சிலையும், அதற்கு எதிர்புறம் பெண்சிலையும் உயரத்திற்கு தக்கவாறு மாறுபட்ட சாமுத்திரிகா லட்சணங்களை சித்தரிப்பது சிந்திக்க வேண்டிய செயலாகும்.

ரதி சிற்பத்தில் அவள் கையில் அணிந்திருக்கக்கூடிய மோதிரங்களில் ஒவ்வொன்றும் ஒவ்வோர் விதமாக அழகுபடுத்தப்பட்டு உள்ளது. மேலும் ரதியின் நெற்றிசுட்டு, காதணி, கழுத்தில் உள்ள நகைகள் உடலை மறைத்துள்ள மெல்லிய துணி போன்றவை மிகமிக சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளன.

பிரகாரத்தில் சுற்றி வரும்போது, சண்டிகேஸ்வரர் சன்னதிக்கு அருகில் ஒரு முகத்துடன் கூடிய இரு உடல் அமைப்பு. காண்போரை வியப்பில் ஆழ்த்தும். இதை செதுக்கிய சிற்பியின் கற்பனைத்திறன், நம்மை பிரமிக்க வைக்கின்றது.

இக்கோவில் சிற்பங்கள் அனைத்தும் மிக அற்புதமாகவும், நேர்த்தியாகவும் சிற்பக்கலையின் பெருமையை பறைசாற்றும் விதமாகவும் உள்ளன. சுருங்கச் சொன்னால் இக்கோவில், சிற்பக்கலையின் பொக்கிஷமாக திகழ்கின்றது. சிற்பக்கலை ரசிகர்களுக்கு, இக்கோவில் தெவிட்டாக விருந்தாக அமையும் என்பதில் ஐயம் இல்லை.

Read More
குடுமியான்மலை சிகாநாதசாமி கோவில்

குடுமியான்மலை சிகாநாதசாமி கோவில்

திருமேனியின் உச்சியில் குடுமியுடன் இருக்கும் அபூர்வ சிவலிங்கம்

புதுக்கோட்டை – கொடும்பாளூர் – மணப்பாறை சாலையில், புதுக்கோட்டையில் இருந்து, 18 கி.மீ தொலைவில் குடுமியான்மலை அமைந்துள்ளது.

மலைக் குன்றில், அடிவாரத்தின் கிழக்குப் பகுதியில் ஒன்று, அதன் அருகில் ஒன்று, குன்றின் மேல் ஒன்று என இங்கு மொத்தம் நான்கு கோவில்கள் உள்ளன. குன்றின் அடிவாரத்தின் கிழக்குப் பகுதியில் சிகாநாதசுவாமி கோவில் உள்ளது. இறைவியின் திருநாமம் அகிலாண்டேசுவரி.

குடுமியான் என்றால் உயர்ந்தவன் என்றும், குடுமி என்றால் மலை உச்சி என்றும் பொருள்படும்படி உள்ளது. உயர்ந்த மலைக் குன்றை ஒட்டி அமைந்த கோவிலில் குடிகொண்டுள்ளதால் குடுமியான்மலை என்ற பெயர் வந்தது.

இத்தலத்து இறைவன், சிவலிங்கத் திருமேனியின் உச்சியில், குடுமியுடன் காணப்படுகிறார். இதன் பின்னணியில் ஒரு சுவையான வரலாறு உள்ளது.

ஒரு சமயம் கோவிலில் பூஜை செய்து கொண்டிருந்த அர்ச்சகர், பூஜைக்கு வைத்திருந்த பூவை எடுத்து, அங்கு வந்த ஒரு பெண்ணுக்கு கோயில் கொடுத்துவிட்டார். அப்போது, கோவிலுக்குள் மன்னர் வந்துவிடவே, அர்ச்சகர் செய்வதறியாது அந்தப் பெண்ணிடம் இருந்து மீண்டும் அந்தப் பூவை எடுத்து, பூஜை செய்து மன்னருக்கு பிரசாதமாக கொடுத்தார். அந்தப் பூவில் இருந்த முடி குறித்து மன்னர் அர்ச்சகரிடம் விளக்கம் கேட்டார். அதற்கு சிவபெருமானின் தலையில் முடி இருப்பதாக அர்ச்சகர் விளக்கினார்..

சந்தேகம் விலகாத மன்னர் இன்று இரவு தான் இங்கேயே தங்க உள்ளதாகவும், விடியற்காலை சன்னதி திறந்ததும், தனக்கு இறைவனின் குடுமியை காட்டவேண்டும் எனவும் கட்டளை இட்டார். இல்லையெனில் அடுத்த நாள் சிரச்சேதம் செய்யப்படுவாய் என்றும் ஆணையிட்டார். அரசர் சொன்னது போல அங்கேயே தங்கியும் விட்டார்.

தான் எத்தனை பெரிய தவறு செய்து விட்டோம் என்பதை உணர்ந்த அர்ச்சகர், சிவபெருமானின் காலடியினைப் பிடித்து மன்றாடினார். தன்னை இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காக்கும்படி வேண்டினார். அவர் முன் தோன்றிய பெருமான், 'நீ உன் தவறை உணர்ந்ததால் வெறும் மூன்று நாழிகை மட்டும் நான் குடுமியுடன் இருப்பேன், அதற்குள் நீ உன்னைக் காப்பாற்றிக் கொள்'', என்று கூறி மறைந்தார்.

அடுத்த நாள் காலை மன்னனனிடம் சிவபெருமானுக்கு குடுமி உள்ளது என்பதைக் காண்பித்தார் அர்ச்சகர். ஆனாலும் சந்தேகம் நீங்காத அரசர் குடுமியை இழுக்த்துப் பார்த்தார். இழுத்த வேகத்தில் சிவபெருமானின் தலையில் இருந்து இரத்தம் பீறிட்டது. இதனைக் கண்ட அனைவரும் அதிர்ச்சியுற்றனர். மன்னரும் சிவனின் தலையில் குடுமி இருப்பது உண்மைதான் என்பதை உணர்ந்து, சுவாமி தன்னை மன்னித்தருள வேண்டினார். தன் கருணை உள்ளத்துடன் அனைவரையும் மன்னித்தருளிய இறைவன், இது தனது திருவிளையாடல் என்பதையும் அனைவருக்கும் உணர்த்தினார். அன்று முதல் இத்தலத்து இறைவன், அழகிய குடுமியுடன் காணப்படுகிறார்.

Read More
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில்

பக்தர்கள் மாரியம்மனுக்கு காவடி எடுக்கும் தலம்

புதுக்கோட்டையில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில். தேவரிஷியான நாரத மாமுனி இங்குள்ள மலையில் தவம் செய்ததால், நாரதமலை என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் நார்த்தாமலை என மருவியதாக தல புராணம் விவரிக்கிறது. கருவறையில் அமர்ந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறாள் முத்துமாரியம்மன். கட்கம், கபாலம், டமருகம் மற்றும் சக்திஹஸ்தம் கொண்டு நான்கு கரங்களுடன் காட்சி அளிக்கிறாள். இத்தலத்தில் முத்துமாரியம்மன் சன்னதியில், வடபுறத்து சுவற்றில் கல்லிலான முருகன் எந்திரம் பதிக்கப்பட்டிருக்கிறது. இதில் மிகவும் அற்புதமான சக்தி உள்ளது என்கின்றனர் பக்தர்கள்.

பொதுவாக முருகப்பெருமானுக்கு பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனாக காவடி எடுப்பார்கள். இத்தலத்து மாரியம்மன், முருகப் பெருமானுக்கே உரிய சக்தி ஹஸ்தத்துடன் காட்சி தருவதால், பக்தர்கள் முத்துமாரியம்மனுக்கு காவடி எடுத்தும் வழிபடுகின்றனர். பக்தர்கள் மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் இந்த நடைமுறை, இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

பிரார்த்தனை

அம்மை நோய் கண்டவர்கள், இத்தலம் வந்து வழிபட்டால், அந்த நோய் குணமாவதால் இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். குழந்தை பாக்கியத்திற்கும் இந்த ஆலயம் புகழ்பெற்று விளங்குகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இங்கு வந்து கரும்பு தொட்டில் செய்து ஆலயத்தைச் சுற்றி வலம் வந்து வழிபட்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அக்னி கரகம் எடுத்தால், தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

முக்கிய திருவிழாக்கள்

இத்தலத்தில் 10 நாட்கள் நடைபெறும் பங்குனி திருவிழா மிகவும் சிறப்பு பெற்றது. அத்திருவிழாவில் 5 லட்சம் பக்தர்கள் திரள்வது முத்துமாரியம்மன் அருளுக்கும், ஆட்சிக்கும் சாட்சி. ஆடி கடைசி வெள்ளி அன்று நடைபெறும் ஒரு நாள் திருவிழாவின் போதும், பல லட்சக்கணக்கான பக்தர்கள் இத்தலத்தில் கூடுவார்கள்.

Read More
தபசுமலை பாலதண்டாயுதபாணி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

தபசுமலை பாலதண்டாயுதபாணி கோவில்

மூலிகை கலந்த பிரசாதம் வழங்கப்படும் முருகன் தலம்

புதுக்கோட்டையில் இருந்து 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தபசுமலை பாலதண்டாயுதபாணி கோவில். சிறிய குன்றின் மேல் அமைந்துள்ள இந்த கோவிலை அடைய, 75 படிக்கட்டுகள் உள்ளன. சப்த ரிஷிகள் தவம் செய்ததால், இந்த மலைக்குத் தபசு மலை என்ற பெயர் வந்துள்ளது. இக்கோவில், 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. கருவறையில் முருகப்பெருமான், கையில் தண்டத்துடன் நின்ற கோலத்தில் பாலதண்டாயுதபாணியாக காட்சி தருகிறார்.

இந்த கோவிலில் வழிபாடு செய்ய செல்லும் பக்தர்களுக்கு, மூலிகை கலந்த பிரசாதம் வழங்கப்படுவது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். இந்த பிரசாதத்தை சாப்பிட்டால் சர்க்கரை நோய், வயிறு நோய் உள்ளிட்டவைகள் அனைத்தும் குணமாகும் என்பது ஐதீகம்.

கிரக தோஷங்களால் பாதிக்கப்பட்டுள்ள பக்தர்கள் இங்கு வீற்றிருக்கக்கூடிய முருக பெருமானை வழிபட்டால் அனைத்து வித தோஷங்களும் நிவர்த்தி ஆகும் என நம்பப்படுகிறது. கந்த சஷ்டி திருநாளில் பெண்கள் விரதம் இருந்து ஒருமுறை தபசுமலையில் வீற்றிருக்கக்கூடிய முருகப்பெருமானை தரிசனம் செய்து, விளக்கேற்றி வழிபட்டால் விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்கள் முருகப்பெருமானின் காலடியில் வைக்கப்பட்ட எலுமிச்சை பழத்தை சாறு எடுத்து குடித்தால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

மனவேற்றுமையால் பிரிந்து வாழும் கணவன் அல்லது மனைவி முருகனிடம் மனமுருகி பிரார்த்தனை செய்தால் விரைவில் பிரிந்த தம்பதி ஒன்று சேர்வர் என்பது நம்பிக்கை. கிரக தோஷம், நாக தோஷம் உள்ளவர்களும் முருகப் பெருமானை வேண்டிக் கொள்கிறார்கள்.

Read More
திருக்கோகர்ணம்   கோகர்ணேஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருக்கோகர்ணம் கோகர்ணேஸ்வரர் கோவில்

தொலைந்த பொருளை மீட்டுத் தரும் அரைக்காசு அம்மன்

புதுக்கோட்டை-திருச்சி சாலையில், புதுக்கோட்டை நகரத்திலிருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ளது திருக்கோகர்ணம். இறைவன் திருநாமம் கோகர்ணேஸ்வரர். இறைவியின் திருநாமம் பிரகதாம்பாள் (அரைக்காசு அம்மன்). குடைவரைக்குகைக் கோயிலான இக்கோயில் பல்லவ அரசனான முதலாவது மகேந்திர வர்மன் காலத்தைச் சேர்ந்தது.

புதுக்கோட்டை மன்னர்களில் சிலர் திருக்கோகர்ணம் கோவிலில் உள்ள அன்னை பிரகதாம்பாளைக் குலதெய்வமாகவும், பலர் இஷ்ட தெய்வமாகவும் வணங்கிவந்தனர். அதனால் புதுக்கோட்டையை ஆண்ட அரசர்களின் பெயரில் அடைமொழியாக ஸ்ரீ பிரகதாம்பாதாஸ் என்ற சொல் சேர்க்கப்பட்டது.

அந்நாளில் பிரகதாம்பாள் அம்பிகைக்கு நவராத்திரி விழாவினை, புதுக்கோட்டை மன்னர்கள் விமரிசையாகக் கொண்டாடுவார்கள். அப்போது அன்றைய தினத்திற்கு மட்டுமல்லாமல், பல நாட்களுக்கும் அன்னம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அரிசி, வெல்லம் போன்ற பொருட்களையும், அம்மன் பொறிக்கப்பட்ட, அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த அரைக்காசு ஒன்றையும் சேர்த்து மக்களுக்கு அவர்கள் தானம் செய்து வந்தனர். புதுக்கோட்டை மன்னர்களால் வெளியிடப்பட்ட அந்த அரைக்காசு நாணயம், புதுக்கோட்டை அம்மன் காசு அல்லது அம்மன் சல்லி என அழைக்கப்பட்டது. அந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் பிரகதாம்பாள் அம்மனின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான் மன்னர் ஒருவரின் முக்கியமான பொருள் ஒன்று தொலைந்துவிட்டது. எங்கு தேடியும் கிடைக்காத அந்தப் பொருள் கிடைக்க வேண்டும் என்று திருக்கோகர்ணம் பிரகதாம்பாளிடம் பிரார்த்தனை செய்தாராம் மன்னர். தான் வணங்கும் இந்த அரைக்காசு அம்மனே அதனை மீட்டுத் தர வேண்டும் என்று கூறி பிரார்த்தனையை தீவிரப்படுத்தினார். அவர் பிரார்த்தனை பலித்து, தேடிய பொருள் கைக்கு வந்தது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, வெல்லத்தைப் பிடித்து வைத்து பூஜை செய்துள்ளார். பின்னர் அந்த வெல்லப் பிரசாதத்தைத் தானும் உண்டு, பக்தர்களுக்கும் வழங்கினார். அதனால் அரைக்காசு அம்மனை வேண்டினால் தொலைந்த பொருள் கிடைக்கும் என்ற செய்தி நாடு முழுவதும் பரவியது. அந்த பழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.

பத்திரம், நகை, எந்த பொருள் தொலைந்தாலும் இந்த அம்மனை வேண்டிக் கொண்டு காசு எடுத்து வைத்தால் அந்தப் பொருள் கிடைத்து விடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.

Read More
பாலதண்டாயுதபாணி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

பாலதண்டாயுதபாணி கோவில்

வாதம் நோய் தீர்க்கும் குமரமலை முருகன்

புதுக்கோட்டையிலிருந்து காரையூர் செல்லும் வழியில் 12 கி.மீ., சென்றால் குமரமலை விலக்கு வரும். அங்கிருந்து சற்றுதூரம் நடந்தால் மலை அடிவாரத்தை அடையலாம். மலையில் 45 படி ஏறினால் கோவிலை அடையலாம். சுவாமிக்கு பாலதண்டாயுதபாணி என்ற திருநாமம்.

குமரமலை முருகனின் வரலாறு

குமரமலை பகுதியில் சேதுபதி என்ற தீவிர முருக பக்தர் வாழ்ந்து வந்தார். அவர் சிறு வயது முதலே பழநிக்கு பாதயாத்திரை மேற்கொள்பவர். 80 வயதைக் கடந்த நிலையில், ஒருமுறை கார்த்திகையன்று பழனிக்கு காவடி எடுத்துச் செல்ல முடியாத அளவுக்கு அவர் உடல் நோயுற்றது. 'பழனிக்குச் சென்று வழிபட முடியவில்லையே? இனி நான் உயிர் வாழ்ந்து என்ன பயன்?' என்ற வேதனைப்பட்ட அவர் கனவில் தோன்றிய முருகன், இத்தனை ஆண்டுகள் நீ என்னைத் தேடி வந்தாய். இந்த ஆண்டு உன்னைத் தேடி நான் வருகிறேன். உன் ஊருக்கு அருகிலுள்ள குன்றில் சங்குச் செடிகள் வளர்ந்து கிடக்கும் இடத்திற்கு காலையில் நான் வருவேன். அங்கு வந்து என்னைத் தரிசனம் செய்து வழிபடு. நான் அங்கு குடிகொண்டதற்கு அடையாளமாக அந்த இடத்தில் ஒரு விபூதிப் பை, உத்திராட்ச மாலை, பிரம்பு, எலுமிச்சம் பழம் ஆகியவை இருக்கும்.

அந்த இடத்தில் மேற்கு நோக்கி ஒரு வேலை வைத்து நீயும் இப்பகுதி மக்களும் வழிபடுங்கள். இனி இந்தக் குன்று 'குமரமலை' என்ற பெயருடன் விளங்கும். இப்பகுதி மக்கள் அனைவரும் அனைத்து நன்மைகளும் பெறுவார்கள்! என்று சொல்லி மறைந்தார்.

கனவில் முருகன் சொல்லியபடி சங்குச் செடிகளின் இடையில் இருந்த விபூதிப் பை, பிரம்பு, உத்திராட்ச மாலை, எலுமிச்சம் பழம் அனைத்தையும் கண்டு, பழனி முருகன் வந்தமர்ந்த இடத்தில்,அவர் அருளாணைப்படி ஆள் உயர வேலை பிரதிஷ்டை செய்து, அப்பகுதி மக்களும் வழிபட்டனர்.

வேலை எடுத்து விட்டு, அந்த இடத்தில் பழனி தண்டாயுதபாணியின் திருவுருவத்தை எழுந்தருளச் செய்யலாம் என்று திட்டமிட்ட போதும் முருகன் தோன்றி, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் இருக்கும் சிற்பியின் பெயரைச் சொல்லி, 'அவர் ஒரு முருகன் சிலையை வடிவமைத்து வைத்திருக்கிறார். அதை நான் சொன்னதாகச் சொல்லி கேள், தருவார். வாங்கி வந்து நான் வந்து நின்ற சங்குச் செடி மண்டிக் கிடக்கும் இடத்தில் மேற்கு நோக்கி வைத்து வழிபடுங்கள்' என்று சொல்லி மறைந்தார்.

அந்த இடத்தில் கோவில் கட்டி, சிற்பியிடம் பெற்ற பாலமுருகன் சிலையை பிரதிஷ்டை செய்தார்.

சங்கு சுனைத் தீர்த்தம்

குமரமலைக்கு மேல் சங்கு வடிவிலான சுனைத்தீர்த்தம் உள்ளது. இங்கிருந்தே சுவாமிஅபிஷேகத்துக்கு தேவையான புனித நீர் எடுக்கப்படுகிறது. கோவிலில் வழங்கப்படும் இந்த தீர்த்தத்தை பக்தர்கள் பருகுவதன் மூலம் நோய் நொடிகள் நீங்குவதாகவும் நம்பிக்கையுள்ளது.

வாதநோய்க்கு பிரார்த்தனை

வாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குமரமலை அடிவாரத்திலுள்ள தீர்த்தத்தில் நீராடி முருகனுக்கு பால் அபிஷேகம் செய்வதுடன், அர்ச்சனை செய்து வழிபட்டு செல்வதால் வாதம் நோய் நீங்குகிறது.

வேலுக்கு வளையல் கட்டி, சுகப் பிரசவத்திற்கு பிரார்த்தனை

இப்பகுதி பெண்கள் தங்கள் வளைகாப்பு நிகழ்ச்சியன்று அர்த்தமண்டபத்திலுள்ள வேலில் வளையல்களை கட்டி வழிபடுகின்றனர். இவ்வாறு செய்தால் பிரசவம் எளிமையாகும் என்பது நம்பிக்கை. குமரமலைக்கு சஷ்டி திதிகளில் வந்து விரதம் இருப்பதன் மூலம் திருமணத்தடை நீங்கவும், குழந்தை பேறு கிடைக்கவும் செய்வதாக நம்பிக்கையுள்ளது.

Read More