நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில்

பக்தர்கள் மாரியம்மனுக்கு காவடி எடுக்கும் தலம்

புதுக்கோட்டையில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில். தேவரிஷியான நாரத மாமுனி இங்குள்ள மலையில் தவம் செய்ததால், நாரதமலை என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் நார்த்தாமலை என மருவியதாக தல புராணம் விவரிக்கிறது. கருவறையில் அமர்ந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறாள் முத்துமாரியம்மன். கட்கம், கபாலம், டமருகம் மற்றும் சக்திஹஸ்தம் கொண்டு நான்கு கரங்களுடன் காட்சி அளிக்கிறாள். இத்தலத்தில் முத்துமாரியம்மன் சன்னதியில், வடபுறத்து சுவற்றில் கல்லிலான முருகன் எந்திரம் பதிக்கப்பட்டிருக்கிறது. இதில் மிகவும் அற்புதமான சக்தி உள்ளது என்கின்றனர் பக்தர்கள்.

பொதுவாக முருகப்பெருமானுக்கு பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனாக காவடி எடுப்பார்கள். இத்தலத்து மாரியம்மன், முருகப் பெருமானுக்கே உரிய சக்தி ஹஸ்தத்துடன் காட்சி தருவதால், பக்தர்கள் முத்துமாரியம்மனுக்கு காவடி எடுத்தும் வழிபடுகின்றனர். பக்தர்கள் மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் இந்த நடைமுறை, இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

பிரார்த்தனை

அம்மை நோய் கண்டவர்கள், இத்தலம் வந்து வழிபட்டால், அந்த நோய் குணமாவதால் இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். குழந்தை பாக்கியத்திற்கும் இந்த ஆலயம் புகழ்பெற்று விளங்குகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இங்கு வந்து கரும்பு தொட்டில் செய்து ஆலயத்தைச் சுற்றி வலம் வந்து வழிபட்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அக்னி கரகம் எடுத்தால், தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

முக்கிய திருவிழாக்கள்

இத்தலத்தில் 10 நாட்கள் நடைபெறும் பங்குனி திருவிழா மிகவும் சிறப்பு பெற்றது. அத்திருவிழாவில் 5 லட்சம் பக்தர்கள் திரள்வது முத்துமாரியம்மன் அருளுக்கும், ஆட்சிக்கும் சாட்சி. ஆடி கடைசி வெள்ளி அன்று நடைபெறும் ஒரு நாள் திருவிழாவின் போதும், பல லட்சக்கணக்கான பக்தர்கள் இத்தலத்தில் கூடுவார்கள்.

செவ்வாய்க்கிழமை  கோவில் என்று பெயர் பெற்ற வில்லிவாக்கம்  அகத்தீஸ்வரர் கோவில்   பற்றிய  முந்தைய பதிவு (18.07.2023)

 செவ்வாய்க்கிழமை கோவில் என்ற சிறப்பு பெற்ற தலம்

 ஆடி செவ்வாய்க்கிழமைகளில் சுவாமி, அம்பாளுக்கு விசேஷ வழிபாடு

 https://www.alayathuligal.com/blog/zs5a8dadln99thwg5cax2dgld89pda?rq

 

 
Previous
Previous

கொட்டையூர் கோடீஸ்வரர் கோவில்

Next
Next

உறையூர் பஞ்சவர்ணேசுவரர் கோவில்