திருக்கோகர்ணம்   கோகர்ணேஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருக்கோகர்ணம் கோகர்ணேஸ்வரர் கோவில்

தொலைந்த பொருளை மீட்டுத் தரும் அரைக்காசு அம்மன்

புதுக்கோட்டை-திருச்சி சாலையில், புதுக்கோட்டை நகரத்திலிருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ளது திருக்கோகர்ணம். இறைவன் திருநாமம் கோகர்ணேஸ்வரர். இறைவியின் திருநாமம் பிரகதாம்பாள் (அரைக்காசு அம்மன்). குடைவரைக்குகைக் கோயிலான இக்கோயில் பல்லவ அரசனான முதலாவது மகேந்திர வர்மன் காலத்தைச் சேர்ந்தது.

புதுக்கோட்டை மன்னர்களில் சிலர் திருக்கோகர்ணம் கோவிலில் உள்ள அன்னை பிரகதாம்பாளைக் குலதெய்வமாகவும், பலர் இஷ்ட தெய்வமாகவும் வணங்கிவந்தனர். அதனால் புதுக்கோட்டையை ஆண்ட அரசர்களின் பெயரில் அடைமொழியாக ஸ்ரீ பிரகதாம்பாதாஸ் என்ற சொல் சேர்க்கப்பட்டது.

அந்நாளில் பிரகதாம்பாள் அம்பிகைக்கு நவராத்திரி விழாவினை, புதுக்கோட்டை மன்னர்கள் விமரிசையாகக் கொண்டாடுவார்கள். அப்போது அன்றைய தினத்திற்கு மட்டுமல்லாமல், பல நாட்களுக்கும் அன்னம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அரிசி, வெல்லம் போன்ற பொருட்களையும், அம்மன் பொறிக்கப்பட்ட, அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த அரைக்காசு ஒன்றையும் சேர்த்து மக்களுக்கு அவர்கள் தானம் செய்து வந்தனர். புதுக்கோட்டை மன்னர்களால் வெளியிடப்பட்ட அந்த அரைக்காசு நாணயம், புதுக்கோட்டை அம்மன் காசு அல்லது அம்மன் சல்லி என அழைக்கப்பட்டது. அந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் பிரகதாம்பாள் அம்மனின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான் மன்னர் ஒருவரின் முக்கியமான பொருள் ஒன்று தொலைந்துவிட்டது. எங்கு தேடியும் கிடைக்காத அந்தப் பொருள் கிடைக்க வேண்டும் என்று திருக்கோகர்ணம் பிரகதாம்பாளிடம் பிரார்த்தனை செய்தாராம் மன்னர். தான் வணங்கும் இந்த அரைக்காசு அம்மனே அதனை மீட்டுத் தர வேண்டும் என்று கூறி பிரார்த்தனையை தீவிரப்படுத்தினார். அவர் பிரார்த்தனை பலித்து, தேடிய பொருள் கைக்கு வந்தது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, வெல்லத்தைப் பிடித்து வைத்து பூஜை செய்துள்ளார். பின்னர் அந்த வெல்லப் பிரசாதத்தைத் தானும் உண்டு, பக்தர்களுக்கும் வழங்கினார். அதனால் அரைக்காசு அம்மனை வேண்டினால் தொலைந்த பொருள் கிடைக்கும் என்ற செய்தி நாடு முழுவதும் பரவியது. அந்த பழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.

பத்திரம், நகை, எந்த பொருள் தொலைந்தாலும் இந்த அம்மனை வேண்டிக் கொண்டு காசு எடுத்து வைத்தால் அந்தப் பொருள் கிடைத்து விடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.

Read More
நெய் நந்தீஸ்வரர் கோவில்

நெய் நந்தீஸ்வரர் கோவில்

நெய் மீது ஈ, எறும்பு மொய்க்காத அதிசயம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதிக்கு அருகே உள்ள வேந்தன்பட்டி என்ற ஊரில் அமைந்துள்ளது நெய் நந்தீஸ்வரர் கோவில். இறைவன் சொக்கலிங்கேசுவரர்.

ஒரு சமயம் இத்தலத்தில், சிவ பக்தர் ஒருவர் சிவ லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்தார். ஆனால் நந்தீஸ்வரரை பிரதிஷ்டை செய்யாமல் விட்டு விட்டார். நந்தியின் புனிதம் கருதி அதை தீர்த்த குளத்திற்குள் வைத்து விட்டார். ஒரு நாள் அவருக்கு கடுமையான வயிறு வலி ஏற்பட்டது. அப்போது மானசீகமாக சிவனை வேண்டிக்கொண்டார். தொடர்ந்து அவரின் கனவில் மாடுகள் விரட்டுவது போல காட்சிகள் கண்டு திடுக்கிட்டார். உடனே நந்தியை பிரதிஷ்டை செய்வதாகவும், அதற்கு நெய் அபிஷேகம் செய்வதாகவும் வேண்டிக்கொண்டார். இந்த நிகழ்வு நடந்த சில நாட்களிலேயே அந்த பக்தரின் உடல் பிணி தீர்ந்தது. அவர் நெய் அபிஷேகம் செய்து வழிபட்டது போல பலரும் நெய் அபிஷேகம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது. அதனால், இங்குள்ள நந்தி, நெய் நந்தீஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றார்.

பொதுவாக நம் வீட்டில் அல்லது வெளியில் சிறிதளவு நெய் கொட்டினாலும் எறும்பு, ஈக்கள் குவிந்துவிடும். ஆனால் இந்த நந்தீஸ்வரருக்கு நெய் அபிஷேகம் செய்யப்படும். நெய் மீது ஈ, எறும்புகள் மொய்ப்பதில்லை. இதற்கு நந்தியின் கொம்புகளுக்கு இடையே ஒரு சக்கரம் உள்ளது. இது இயற்கையாக அமைந்த அமைப்பாக உள்ளது. இந்த சக்கரம் ஆதார சக்தியாக அமைந்துள்ளது. இதன் காரணமாகத்தான் நந்தி மீது அபிஷேகம் செய்யப்படும் நெய் மீது ஈயும், எறும்பும் மொய்ப்பதில்லை. நந்தியம் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகிற நெய்யானது, கோவிலுக்குள் இருக்கும் கிணற்றில் சேகரிக்கப்படுகிறது. நெய் பல லிட்டர் கணக்கில் இருந்தும்,,அங்கும், ஒரு பூச்சியும் மொய்ப்பதில்லை.

ரிஷப ராசியினர் பரிகாரம் செய்ய சிறந்த தலமாக இந்த நெய் நந்தீஸ்வரர் கோயில் பரிந்துரைக்கப்படுகிறது.

Read More
ஆத்மநாதசுவாமி  கோயில்

ஆத்மநாதசுவாமி கோயில்

ஆவுடையார் மட்டுமே உள்ள சிவாலயம்

வித்தியாசமான அம்சங்கள் உள்ள சிவாலயம்

சிவாலயங்களில் உள்ள சிவலிங்கம் இரண்டு பகுதிகளால் ஆனது. கீழ்ப்பகுதி ஆவுடையார் என்றும் மேல்பகுதி பாணம் என்றும் கூறப்படும். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் என்னும் தலத்தில் உள்ள ஆத்மநாதசுவாமி கோவில் மூலவர் சன்னதியில், ஆவுடையார்(லிங்கத்தின் கீழ் பகுதி) மட்டுமே உள்ளது. மேல் பகுதியான பாணம் கிடையாது. இங்கு பாணம் அரூபமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இத்தலத்து அம்பிகை யோகாம்பிகை, அரூபமாக இருப்பதால் அம்பிகைக்கு திருவுருவம் இல்லை. அவள் தவம் செய்த போது, பதிந்த பாதத்திற்கு மட்டுமே பூஜை நடக்கிறது. இந்த பாதத்தைப் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக, கண்ணாடியில் பாதம் பிரதிபலிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவளது சன்னதி எப்போதும் அடைத்தே இருக்கும் என்பதால், சன்னதி முன்புள்ள கருங்கல் பலகணி வழியாகத்தான் பாதத்தை தரிசிக்க முடியும். மேலும் மற்ற சிவாலயங்களில் இருப்பது போல நந்தி, கொடிமரம், பலிபீடம் போன்றவை இங்கு கிடையாது.

சிற்பக்கலையின் பொக்கிஷம்

இத்தலத்து சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்த கலைநயம் உடையவை. முற்காலத்தில் சிற்பிகள் தங்கள் சிற்ப வேலைக்கு ஒப்பந்தம் போடும்போது, ஆவுடையார் கோவில் கொடுங்கை தாரமங்கலம் தூண், திருவலஞ்சுழி பலகணி போன்ற வேலைப்பாடுகளை தவிர வேறு எந்த சிற்ப வேலைப்பாடுகளையும் தங்களால் செய்ய முடியும் என்று உறுதி அளிப்பார்களாம்.

கோவிலின் தாழ்வாரத்திலுள்ள கொடுங்கைகள் (Raft),எப்படி ஒரு வீட்டில் கொடுங்கைகளை, தேக்கு மரச் சட்டங்களை இணைத்து அதன் மீது மெல்லிய ஓடு வேய்ந்திருப்பார்களோ, அதேபோல அத்தனை அம்சங்களையும் கல்லிலே வடிவமைத்து இருப்பது காண்போரை வியக்க வைக்கும். இந்த கொடுங்கைக்கூரையில், கற்கள் எப்படி எந்த இடத்தில் இணை சேர்க்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இரண்டரையடி கனமுள்ள கற்களை இப்படி தாழ்வாரக் கூரையாக்கி, அவற்றை செதுக்கிச் செதுக்கி ஒரு அங்குல கனமுள்ள மேலோடு அளவிற்குச் மெல்லிய தாக்கியிருப்பது, சிற்பக் கலையின் உச்சக்கட்ட திறனாகும்.

தற்கால நாகரீகப் பெண்கள் அணியும் நவீன அணிகலன்கள், தங்க நகைகள், சங்கிலிகள் போன்ற விதவிதமான வடிவமைப்பு உள்ள அணிகலன்கள், இங்குள்ள சிற்பங்களில் காணப்படுவது நம்மை பிரமிக்க வைக்கும். சுருங்கச் சொன்னால் இத்தலமானது சிற்பக்கலையின் பொக்கிஷமாகும்.

Read More
பாலசுப்பிரமணியர் கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

பாலசுப்பிரமணியர் கோவில்

முருகனுக்கு கட்டப்பட்ட முதல் கற்றளி கோயில்

புதுக்கோட்டை அருகேயுள்ள ஒற்றைக்கண்ணூர் என்ற தலத்தில், முருகனுக்கு கட்டப்பட்ட முதல் கற்றளி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் முதலாம் ஆதித்த சோழனால் கட்டப்பட்டது. இங்கு முருகன், ஒரு திருக்கரத்தில் ஜபமாலை ஏந்தியுள்ளார். மறுகரம் சின்முத்திரையுடன் உள்ளது. முருகப்பெருமானுக்கு இங்கு வாகனமாக யானை உள்ளது.

Read More
சத்திய மூர்த்தி பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

சத்திய மூர்த்தி பெருமாள் கோவில்

ஸ்ரீரங்கம் ரங்கநாதரை விட பெரிய மூலவர்

புதுக்கோட்டை அருகில் உள்ள திவ்ய தேசமான திருமயம் ஆலயத்தின் மூலவர் திருமெய்யர் பெருமாள்,ஸ்ரீரங்கம் ரங்கநாதரை விட மிகப் பெரிய உருவம் உடையவர்.திருமயம் பாண்டிய நாட்டிலுள்ள 18 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்

Read More