உடுமலைப்பேட்டை மாரியம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

உடுமலைப்பேட்டை மாரியம்மன் கோவில்

மங்கள வாழ்வு அருளும் மாங்கல்ய மாரியம்மன்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டையில் அமைந்துள்ளது 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மாரியம்மன் கோவில். அரைச்சக்கரவடிவில் ஊரைக்காக்கும் அரணாக மலை அமைந்திருந்ததால் 'சக்கரபுரி' என்றும், அம்மலையில் உடும்புகள் நிறைந்து காணப்பட்டதால் "உடும்புமலை' என்றும் அழைக்கப்பட்ட இவ்வூர், காலப்போக்கில் உடுமலைப்பேட்டை என்று அழைக்கப்படுகிறது. உடுமலைப்பேட்டை மாரியம்மன் பக்தர்களின் மனக்குறைகளை தீர்க்கும் மாங்கல்ய மாரியம்மனாக சுயம்பு மூர்த்தியாக,அருள்பாலிக்கிறார்.

இக்கோயிலில், வருடந்தோறும் மார்கழி திருவாதிரையில், 108 தம்பதியர்களை வைத்து 'மாங்கல்ய பூஜை' நடத்தப்படுகிறது. இப்பூஜையில், அம்மனுக்கு மாங்கல்யம் சாத்தி விசேஷ ஹோமங்கள், பூஜைகள் நடத்தி, பெண்களுக்கு தாலிக்கயிறு வழங்கப்படுகிறது. பூஜை செய்த தாலியை பெண்கள் அணிந்து கொள்வதால், அவர்கள் வாழ்வில் பிரச்னைகள் இன்றி, சிறந்து விளங்குவர் என்பது நம்பிக்கை. இதனால் இந்த அம்மனுக்கு மாங்கல்ய மாரியம்மன் என்ற பெயரும் உண்டு.

பிரார்த்தனை

கண்நோய், அம்மை நோய் தீர, திருமணத்தடை, புத்திரதோஷம், நாகதோஷம் நீங்க பக்தர்கள் இங்கு வழிபடுகிறார்கள்

நேர்த்திகடன்

அம்பாளுக்கு அவல், தேங்காய் பூ, சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் படைத்து பால்குடம், அக்னிசட்டி எடுத்தல், அங்கபிரதட்சணம், அன்னதானம் செய்தல், முடிகாணிக்கை செலுத்துதல் போன்றவற்றை பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்துகிறார்கள்.

Read More
கடத்தூர் அர்ச்சுனேசுவரர் கோவில்

கடத்தூர் அர்ச்சுனேசுவரர் கோவில்

ஆண்டு முழுவதும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது தினமும் விழும் அதிசயம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையில் இருந்து சுமார் 23 கி.மீ. தொலைவில், கணியூருக்கு அருகில் அமைந்துள்ளது கடத்தூர் அர்ச்சுனேசுவரர் கோவில் . இறைவியின் திருநாமம் கோமதி. கொங்கு மண்டலத்தில், அமராவதி ஆற்றின் கரையோரம் கொழுமம் முதல் கரூர் வரை அமைந்துள்ள 11 சிவன் கோவில்களில் இதுவும் ஒன்று. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவில் விக்ரம சோழன் காலத்தில் கட்டப்பட்டது.

கொங்கு மண்டலத்திலேயே மிகப்பெரிய கருவறை விமானம் கொண்ட கோவில் இது. மேலும் மூலவர் அர்ச்சுனேசுவரர், மிகப்பெரிய அவுடையாருடன் சுயம்பு சிவலிங்கத் திருமேனியாய் எழுந்தருளி உள்ளார். அமராவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இக்கோவிலில் ஒவ்வொரு தினமும், சூரியன் காலையில் உதித்ததும், சூரியனின் ஒளிக்கதிர்கள் அமராவதி ஆற்றின் தண்ணீரில் பட்டு, மூலவர் அர்ச்சுனேசுவரரின் மீது பிரதிபலிப்பது காண்பதற்கு மிகவும் ஆச்சரியம் ஊட்டுவதாக இருக்கும். இந்த சூரிய ஒளியானது, ஆற்றங் கரையைக் கடந்து மூன்று நிலை ராஜகோபுரம், நந்திதேவர், அர்த்தமண்டபம், மகாமண்டபம், வசந்த மண்டபம், கருவறை என சுமார் 200 அடிக்கும் மேலாக பயணம் செய்து சிவலிங்கத்தின் மீது விழுவது அதிசயிக்கத்தக்க நிகழ்வாகும். சூரியன் திசை மாறும் காலங்களான உத்திராயணம், தட்சிணாயணம் காலங்களிலும் கூட, அதாவது ஆண்டு முழுவதும், சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது விழும் வண்ணம், கோவிலை வடிவமைத்து இருப்பது, சோழர் கால கட்டிடக்கலையின் சிறப்பம்சமாகும். இந்த அதிசய நிகழ்வை காண, சுற்று வட்டார கிராமங்களில் இருந்து மட்டுமல்லாமல் நெடுந்தொலைவில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்

இத்தல இறைவனை வழிபடுவோருக்கு நிழல் கிரகங்களான ராகு, கேதுவின் தோஷங்கள் மற்றும் காலசர்ப்ப தோஷமும் நீங்குவதாக ஐதீகம்.

Read More
குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி கோவில்

குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி கோவில்

தாயின் வயிற்றில், குழந்தையின் வளர்ச்சியை விளக்கும் வியப்பூட்டும் சிற்பங்கள்

திருப்பூர் மாவட்டத்தில், பல்லடத்துக்கும் தாராபுரத்துக்கும் நடுவில், பல்லடத்திலிருந்து 28 கி.மீ தூரத்திலும் தாராபுரத்திலிருந்து 16 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி கோவில். இறைவன் திருநாமம் விடங்கீசுவரர். இறைவியின் திருநாமம் விசாலாட்சி. இந்தக் கோவிலில் உள்ள காலபைரவ வடுகநாத சுவாமி மிகவும் சக்தி வாய்ந்தவர். காசி சென்று கால பைரவ சுவாமியை வணங்க முடியாதவர்கள் இவரை வணங்கினால் போதும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இக்கோவில் தூண்களில். ஒரு குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, வெவ்வேறு காலகட்டங்களில், அதாவது குழந்தை இந்த, இந்த மாதத்தில் இந்த, இந்த வடிவத்தில். இந்த விதமான நிலையில் (Position) இருக்கும் என்பதை சிற்பங்களாக தூணில் வடித்து வைத்திருக்கிறார்கள். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, ஸ்கேன் கருவி போன்ற நவீன மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் வயிற்றில் உள்ள குழந்தையை படம் பிடித்து, அதை சிற்பத்திலும் வடித்து வைத்திருப்பது நம் முன்னோர்கள் மருத்துவத் துறையிலும், அறிவியல் துறையிலும் அடைந்திருந்த உன்னத நிலையை விளக்குகின்றது. நம் முன்னோர்கள் கட்டிடக்கலை, சிற்பக்கலை, அறிவியல் துறை, மருத்துவத்துறை ஆகியவற்றில் அடைந்திருந்த வளர்ச்சி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

Read More
அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி கோவில்

பாலகனாக, ஆண்டி கோலத்தில் காட்சி தரும் முத்துக்குமாரசாமி

திருப்பூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி கோவில். கொங்கு நாட்டின் புகழ்பெற்ற முருகன் தலங்களில் இதுவும் ஒன்று. 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் மிகவும் ரம்மியமான இயற்கை சூழலில் அமைந்துள்ளது. இந்த மலைக்கோவிலுக்கு, நடந்து செல்ல 300 படிக்கட்டுகள் உள்ளன. வாகனத்தில் செல்ல சாலை வசதியும் உண்டு. அலகு என்றால் 'மூக்கு' என்பது பொருள். மூக்கின் வடிவம் போல் இந்த மலை அமைந்து உள்ளதால் 'அலகு மலை' என்று அழைக்கப்படுகிறது.

கோவில் கருவறையில், முருகன் நான்கரை அடி உயர திருமேனியுடன் பாலகனாக, பழனி மலையில் இருப்பது போல் ஆண்டி கோலத்தில், சிறிது குஞ்சம் போன்று முடியுடன் வலது கையில் தண்டாயுதத்தை தாங்கியபடி காட்சி அளிக்கின்றார். மூலவர் முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கண்களை சற்றே தாழ்த்திய நிலையில் ஞானகுருவாக அருள்புரிகிறார். வள்ளியும், தெய்வானையும் தனி சந்ததியில் காட்சி தருகிறார்கள்.

முருகனின் அறுபடை வீடுகளுக்கான தனிச் சன்னதிகள் இக்கோவிலில் உள்ளன. ஆறுபடை வீடுகளில் முருகப்பெருமான் எந்தக்கோலத்தில் உள்ளாரோ, அதே போன்று இந்த சன்னிதிகளிலும் காட்சி தருவது சிறப்பம்சமாகும்.

சிவபெருமான் கேள்விக்கு முருகன் அளித்த சமயோசித பதில்

ஒரு முறை திருகயிலாயத்தில் பாலகனான முருகப்பெருமான் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பார்வதிதேவியும், கங்காதேவியும் தன் அருகில் வருமாறு அழைத்தனர். ஆனால் முருகப்பெருமான், அவர்கள் அருகில் செல்லாமல் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சிவபெருமான், முருகனின் அருகில் சென்று, 'இங்கே உள்ள இரண்டு தாய்மார்களில் உனக்கு கங்காதேவியை பிடிக்குமா? பார்வதிதேவியை பிடிக்குமா?' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு முருகப்பெருமான், 'அறன் மாதாவின் மீதுதான் எனக்கு மிகுந்த ஆசை' என்று முருகப்பெருமான் சமயோசிதமாக பதில் கூறினார். அதாவது 'அறன்மாதா' என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு. 'அறம் வளர்த்த நாயகி' என்பது ஒரு பொருள். அறம் வளர்த்த நாயகி என்றால் பார்வதி தேவியை குறிக்கும். மேலும் 'உயிர்களை காக்கும் நீர்' என்ற பொருளும் உண்டு. இது கங்காதேவியை குறிப்பதாகும். இவ்வாறு முருகப்பெருமான் ஒரு வார்த்தையில் இரண்டு அன்னையரையும் பிடிக்கும் என்று கூறினார்.

திருமணம் கைகூட முருகனுக்கு தேன் கலந்த அன்னாசி அபிஷேகம்

திருமணத்திற்கு காலதாமதம் ஆகும் ஆண் பெண்கள், இந்த முருகனுக்கு தேன் கலந்த அன்னாசி அபிஷேகம் செய்தால், நல்ல மணவாழ்க்கை அமையும். குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு, அதை நிறைவேற்றும் தெய்வமாக இந்த பாலமுருகன் திகழ்கிறார்.

Read More
திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில்

முப்பெரும் தேவியரும் ஒன்றாய் இணைந்திருக்கும் கோட்டை மாரியம்மன்

திருப்பூர் பிச்சம் பாளையம் பகுதியில் அமைந்துள்ளது கோட்டை மாரியம்மன் கோவில். இக்கோவில் திருப்பூர் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றது. தாயாய் இருந்து இந்தப் பகுதி மக்களை காப்பதால், இக்கோவிலுக்கு தாய்மை கோவில் என்ற பெயரும் உண்டு. விஜயநகரப் பேரரசு காலத்தில் இங்கு கோட்டை கட்டப்பட்டதாகவும், அதையடுத்து கோட்டைக்குள் அம்மனின் விக்கிரகத்தைப் பிரதிட்டை செய்து கோவில் அமைத்ததாகவும், அதனால் அம்மனுக்கு ஸ்ரீகோட்டை மாரியம்மன் எனத் திருநாமம் அமைந்ததாகவும் சொல்கின்றனர்.

ஸ்ரீதுர்கை, ஸ்ரீலட்சுமி, ஸ்ரீசரஸ்வதி ஆகிய மூன்று தேவியரும் ஒருங்கே இணைந்து காட்சி தரும் திருக்கோலத்தில் அமைந்திருக்கிறாள் கோட்டை மாரியம்மன். திருமுகத்தில் லட்சுமி கடாட்சம் பொங்க, யோக நிலை ஸ்ரீசரஸ்வதி தேவியின் அம்சமாகவும், ஆயுதம் ஏந்திய நிலை ஸ்ரீதுர்கையை நினைவூட்டுவதாகவும் இந்த அம்மனின் தோற்றம் விளங்குகின்றது.

பிரார்த்தனை

திருமணத் தடை, தொழிலில் நஷ்டம், குடும்பத்தில் பிரச்னை எனத் தவிப்பவர்கள், செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளிலும், மாதாந்திர அஷ்டமி நாட்களிலும் தொடர்ந்து 12 வாரங்கள் வந்து, அம்மனுக்குத் திரிசதி அர்ச்சனை செய்து, நெய் தீபமேற்றி வழிபட்டால், கல்யாண வரம், பிள்ளை பாக்கியம் கைகூடும். தொழில் சிறக்கும். குடும்பத்தில் இருந்த கவலைகள் யாவும் நீங்கும் என்பது ஐதீகம்! கோவிலில் உள்ள நாகர் சந்நிதி மிகவும் சக்தி வாய்ந்தது . வெள்ளிக்கிழமை ராகு கால வேளையில், இங்கு வந்து நாகருக்குப் பாலபிஷேகம் செய்து வேண்டிக் கொண்டால், நாக தோஷம் விலகும். மார்கழி முழுவதும் வந்து அம்மனைத் தரிசித்தால், நிம்மதி தேடி வரும் என்பது ஐதீகம்.

Read More
குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி கோவில்

குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி கோவில்

காசி காலபைரவருக்கு இணையான குண்டடம் கொங்கு வடுகநாதர்

கோவை - மதுரை நெடுஞ்சாலையில், பல்லடத்துக்கும் தாராபுரத்துக்கும் நடுவில், பல்லடத்திலிருந்து 28 கி.மீ தூரத்திலும் தாராபுரத்திலிருந்து 16 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி கோவில். இறைவன் திருநாமம் விடங்கீசுவரர். இறைவியின் திருநாமம் விசாலாட்சி. இந்தக் கோவிலில் உள்ள காலபைரவ வடுகநாத சுவாமி மிகவும் சக்தி வாய்ந்தவர் என்றும்,காசி சென்று கால பைரவ சுவாமியை வணங்க முடியாதவர்கள் இவரை வணங்கினால் போதும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். 'காசு இருந்தால் காசிக்கு செல்லுங்கள்! காசு இல்லாவிட்டால் குண்டடத்தக்கு வாருங்கள்! ' என்று திருமுருக கிருபானந்த வாரியார் கூறி இருக்கிறார். அதாவது காசிக்குச் சென்று கால பைரவரை தரிசிக்க ஆயிரக்கணக்கில் செலவாகும். ஆனால் காசியில் இருக்கும் அதே கால பைரவரைதான், சிவபெருமானின் ஆணையால் தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் இருக்கும் குண்டடத்துக்கும் வந்து, அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். அதனால் ரொம்ப செலவில்லாமல் காசி கால பைரவரை இந்தக் குண்டடத்திலேயே கொங்கு வடுகநாதராக வழிபடலாம் வாருங்கள் என்று அழைத்தார் வாரியார்.

முன்னொரு காலத்தில், விடங்கர் என்ற முனிவர் இந்த காட்டில் தவம் இருக்கும்போது அரக்கர்களால் தவத்திற்கு இடையூறு ஏற்படாமல் இருக்க உதவ வேண்டும் என்று காசி விசுவநாதரை மனமுருக வேண்டினார். காசி விசுவநாதர் விடங்கரின் பிரார்த்தனைக்கு இணங்கி வடுக பைரவரை அனுப்பினார். பைவர் இடையூறு செய்த அரக்கர்களை அழித்தார், பின் இலந்தை மரத்தின் அடியில் இருந்த புற்றில் நிரந்தரமாய்க் குடிகொண்டார். அருகே ஒர் அரசமரத்தடியில் பாம்பாட்டீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். சேர நாட்டிலிருந்து மிளகு விற்க வரும் வியாபாரிகள் இந்த அரசமரத்தடியில் இளைப்பாறுவது வழக்கம். ஒரு நாள் காலபைரவர் வயதான அந்தணர் தோற்றத்தில், மிளகு வியாபாரியிடம் சென்று தனக்கு உடல்நிலை சரியில்லை, கஷாயம் வைக்க மிளகு கொஞ்சம் கேட்கிறார், ஆனால் கொடுக்க நினைக்காத வியாபாரி மாட்டு வண்டியில் உள்ள மூட்டையில் மிளகு இல்லை பயறு என்று பொய் சொல்லிவிடுகிறார்.

மதுரை சென்று சேர்ந்த வியாபாரிகள் பாண்டிய மன்னரிடம் விலை பேசி மிளகு மூட்டைகளை விற்று விட்டார்கள். மிளகு மூட்டையை பரிசோதித்துப் பார்க்க, அவை பச்சைப் பயறாக இருப்பதைப் பார்த்து ஏமாற்றி விட்டதாய் கோபப்படுகிறார் மன்னர். வியாபாரிகள் ஒரு பெரியவர் மிளகு கேட்டதாகவும் தாங்கள் மிளகு கொடுக்க மறுத்து மூட்டையில் உள்ளது பச்சைப் பயிறு என்று சொன்னதாகச் சொல்கிறார்கள். நம்ப மறுக்கிறார் மன்னர். அப்போது பைரவர் திருவிளையாடல் புரிகிறார், எந்த வியாபாரியிடம் மிளகு கேட்டாரோ அந்த விபாபாரி மேல் அருள் வந்து நான்தான் மிளகு மூட்டைகளைப் பயிறு மூட்டைகளாக மாற்றினேன் என்று சொல்கிறார் பைரவர். அப்போதும் மன்னருக்கு நம்பிக்கை வரவில்லை.என் மகன், மகள் இருவரும் உடல்நிலை சரியில்லாதவர்கள் அவர்களைச் சரி செய்தால் நம்புவதாகச் சொல்கிறார்.

பைரவர் மன்னரிடம் புற்றில் இருக்கும் என்னைக் கோவில் கட்டிக் குடியமர்த்து .அபிஷேகம் செய்து மிளகு சாற்றி வழிபடு. உன் குழந்தைகளைக் குணப்படுத்துகிறேன் என்கிறார். பாண்டிய மன்னரும் அவ்வாறு செய்ய, குழந்தைகள் எட்டு நாட்களில் நலம் பெற்றார்கள்.. பேசமுடியாது இருந்த பெண் குழந்தை பேசியது, நடக்க முடியாது இருந்த ஆண் குழந்தை பைரவர் அருளால் நடந்தது. காசியிலிருந்து கொங்கு நாட்டுக்கு வந்ததால், பைரவருக்கு கொங்கு வடுகநாதர் என்ற பெயர் எழுநதது. கொங்கு நாட்டுக் காசியாக, குண்டடம் விளங்குகின்றது.

பிரார்த்தனை

தேய்பிறை அஷ்டமியில் இவரை தரிசித்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். இவரை வணங்கினால் நவக்கிரக தோஷம் நீங்கிவிடும். பதினோரு மிளகு வைத்து நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி எட்டு தீபங்களை ஏற்றி வைத்தால் நாம் வேண்டும் பிரார்த்தனை நிறைவேறும்.

ஆஞ்சநேயருக்கு சாற்றுவது போல் இவருக்கு வடை மாலை சாற்றப்படுகிறது. வெண்பொங்கல் நைவேத்தியமும் இவருக்கு விசேஷம். தேங்காய் மூடியிலும், வெட்டப்பட்ட பூசணித் துண்டிலும் எண்ணெய் ஊற்றி சிலர் பரிகாரத்துக்காக விளக்கேற்றுகிறார்கள்.

Read More
அபிசேகபுரம் ஐராவதீசுவரர் கோவில்

அபிசேகபுரம் ஐராவதீசுவரர் கோவில்

சிவபெருமானையும், அம்பாளையும் ஒருசேர தரிசிக்கும் நிலையில் அமர்ந்திருக்கும் அபூர்வ நந்தி

திருப்பூரிலிருந்து நம்பியூர் செல்லும் வழியில் உள்ள அபிசேகபுரத்தில் அமைந்துள்ளது, 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்த, ஐராவதீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் அபிஷேகவல்லி. இந்திரனின் வாகனமான வெள்ளை யானை வதத்திற்கு இறைவன் சாப விமோசனம் கொடுத்ததால் அவருக்கு ஐராவதீசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது. இக்கோவிலில் சிவபெருமானின் திருமண நிகழ்ச்சியை குறிப்பிடும் வகையில், ஐராவதீசுவரர், அபிஷேகவல்லி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகுராஜா பெருமாள் சன்னதிகள் இருக்கின்றன. ஒரே வளாகத்தில், ஈசுவரன் மற்றும் மற்றும் பெருமாள் கோவில்கள் அமைந்துள்ளதும், திருக்கல்யாண கோலத்தில் இருப்பதும் சிறப்பு.

இக்கோவில் மூலவரான ஆவுடையார், தரைமட்டத்தில் இருந்து பனை மரம் உயரம் இருந்ததாகவும், சுயம்புவாக இருந்ததாகவும் வரலாறு உள்ளது. ஆஜானுபாகுவான ஐராவதம், 48 நாட்கள் அருகிலிருந்த குளத்தில் நீராடி, தாமரை மலர் பறித்து வந்து பூஜித்துள்ளது. அளவிட முடியாத உயரம் இருந்த ஐராவதமே, தும்பிக்கையால் தொட முடியாத அளவுக்கு பிரமாண்டமாக இருந்த ஆவுடையாரை, சுற்றிலும் மண் நிரப்பி, பக்தர்கள் தரிசித்துள்ளனர். பிற்காலத்தில், கோவிலாக அமைக்கப்பட்டுள்ளது.

இறைவன் ஐராவதீசுவரர் முன் அமர்ந்துள்ள பிரதோஷ நந்தி அற்புதமான அழகுடன், மிகப்பெரியதாக காணப்படுகிறது. மற்ற கோவில்களில் உள்ளது போல், நேராக இல்லாமல், வித்தியாசமாக தலையை இடதுபுறமாக திருப்பி, வலது கண்ணால் சிவனை தரிசிப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளது, இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். சிவபெருமானையும், அம்மனையும் ஒருங்கே தரிசிக்கும் வகையில் நந்தி அமைந்துள்ளதாலும், பக்தர்களின் வேண்டுதலை கேட்கும் நிலையில் இருப்பதாலும் , இக்கோவில் பிரதோஷ கால பூஜை சிறப்பானதாகும். இங்கு வந்து 12 பிரதோஷ காலம் வழிபட்டு வந்தால், அனைத்து விதமான சாபங்கள், கஷ்டங்கள் நீங்கும் என்ற நம்பிக்கை பக்தர்கள் இடையே உள்ளது. அதேபோல், தொழில் தடை, திருமண தடை, புத்திர பாக்கிய தடை நீங்குவதாகவும் பக்தர்களிடையே நம்பிக்கை உள்ளது.

ஐராவதீசுவரர், அழகுராஜா பெருமாள் ஆகிய இரண்டு கோவில்களிலும் தனித்தனி தீபஸ்தம்பங்கள் உயரமாக அமைந்துள்ளன. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது; பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதாசி கொண்டாடப்படுகிறது.

Read More
சர்க்கார் பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில்

சர்க்கார் பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில்

பிரதோஷ காலங்களில், இரண்டு நந்தி சிலைகளுக்கு பூஜை நடத்தப்படும் தலம்

திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கி.மீ. தொலைவிலுள்ள சர்க்கார் பெரியபாளையம் என்ற ஊரில் அமைந்துள்ளது சுக்ரீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் ஆவுடைநாயகி. ராமாயண காலத்தில் ராமபிரானுக்கு உதவி புரிந்த சுக்ரீவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழங்கப்பட்டவர் இத்தல இறைவன். இதன் காரணமாகவே மூலவர் சுக்ரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இதனை மெய்ப்பிக்கும் விதமாக ஆலயத்தின் அர்த்த மண்டபத்தில் சுக்ரீவன், சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்யும் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. எந்த சிவன் கோவில்களிலும் இல்லாத சிறப்பாக, இந்த ஆலய மூலவரின் கருவறைக்கு நேர் எதிரில் பத்ரகாளி அம்மன் சன்னிதி இடம்பெற்றுள்ளது.

ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு நந்திகள் அமர்ந்திருக்கும் அபூர்வ கோலம்

இந்தக் கோவிலில் இரண்டு நந்திகள் உள்ளன. முதலில் உள்ள நந்திக்கு கொம்பு, காது இல்லை. ஒரு சமயம், இந்த கோவில் நந்தி அருகிலுள்ள விவசாய நிலத்துக்கு சென்று மேய்ந்துள்ளது. ஆத்திரமடைந்த விவசாயி, இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து நந்தியின் காதையும், கொம்பையும் வெட்டினார். மறுநாள் கோவிலுக்கு வந்து பார்த்தபோது, கற்சிலையான நந்தியின் காதில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது. அதிர்ச்சியடைந்த விவசாயி, தனது தோட்டத்துக்கு வந்தது நந்தி என்பதை அறிந்து இறைவனை வேண்டி மன்னிப்பு கேட்டார்.

பின்னர் தவறுக்கு பிராயச்சித்தமாக, மற்றொரு நந்தி சிலை செய்து அதனை கோவிலில் பிரதிஷ்டை செய்துள்ளார். பழைய நந்தியை அகற்ற முயற்சித்து முடியாமல் போனதால், அந்தப் பணியை கைவிட்டு விட்டனர். மறுநாள் வந்து பார்த்தபோது, பழைய நந்தி முன்பும், புதிய நந்தி பின்னாலும் மாறி இருந்துள்ளது. ஆகவேதான் இந்த கோவிலில் இரண்டு நந்திகள் அமைந்துள்ளன. பிரதோஷ காலங்களில், இரண்டு நந்தி சிலைக்கும் பூஜை நடத்தப்படுகிறது. இப்படி இரண்டு நந்திகள் ஒன்றன்பின் ஒன்றாக அமர்ந்திருக்கும் கோலத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோவில், சிதம்பரம், பேரூர் கோவில்களுக்கு அடுத்து, சிறப்பான வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது.

Read More
தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோவில்

சாந்த சொரூபமாக நின்ற கோலத்தில் இருக்கும் அபூர்வ லட்சுமி நரசிம்மர்

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இருந்து 17 கி.மீ. தொலைவிலுள்ள தாளக்கரை என்னும் ஊரில், 800 ஆண்டுகள் பழமையான லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு முன்புறம் ஓடை உள்ளது. முற்காலத்தில் எப்போதும் வற்றாத ஜீவ நதியாக இந்த ஓடை திகழ்ந்துள்ளது. தாளம் என்றால் ஓடை என்ற பொருள் உண்டு. எனவே இத்தலம் தாளக்கரை என்று அழைக்கப்படுகிறது.

கருவறையில் மூலவர் நரசிம்மர் கோரை பற்களுடன், நாக்கு தொங்கிய கோலத்திலும் கையில் சங்கு சக்கரம் ஏந்தி, ஸ்ரீ சக்கரம் அமைந்த பீடத்தில் நின்ற கோலத்தில் சாந்த சொரூபமாக எழுந்தருளி உள்ளார். பொதுவாக நரசிம்ம பெருமாள் மடியில் லட்சுமி தாயார் அமர்ந்த கோலத்தில் தான் இருப்பார். ஆனால் தாளக்கரையில், நரசிம்மரும் லட்சுமியும் தனித் தனியே நின்ற வண்ணம் காணப்படுகிறார்கள். இப்படி சாந்த சொரூப கோலத்தில் லட்சுமியுடன் நின்ற வண்ணம் நரசிம்மர் காட்சி அளிப்பது இந்த தலத்தின் தனிச் சிறப்பாகும். இத்தலத்தை போல், நரசிம்மரும் லட்சுமியும் தனித்தனியே நின்ற வண்ணம் காட்சி தரும் மற்றொரு தலம், ஐதராபாத் யாதகிரி குட்டா மலையில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலாகும்.

நரசிம்மர் அருளால் திருமணத்தடை, புத்திர பாக்கியம், தொழில், கடன் நிவர்த்தி, மன நிலை பாதிப்பு, பில்லி சூனியம், ஏவல் உள்ளிட்ட பிரச்சினைகளிலிருந்து விடுபட, பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபடுகிறார்கள்.

Read More
கொழுமம் மாரியம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

கொழுமம் மாரியம்மன் கோவில்

சிவலிங்க வடிவில் காட்சி தரும் மாரியம்மன்

பழனியில் இருந்து 20 கி.மீ துாரத்திலுள்ள கொழுமம் என்ற ஊரில் உள்ளது மாரியம்மன் கோவில். வணிகர்கள் குழுமியிருந்து வியாபாரம் செய்ததால் குழுமூர் என்று அழைக்கப்பட்டு வந்த இந்த இந்த ஊர், காலப்போக்கில் மருவி கொழுமம் என்று பெயர் பெற்றது.

அமராவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இக்கோவிலில், மாரியம்மன் கிழக்கு நோக்கி, சுயம்புத் திருமேனியுடன் வீற்றிருக்கிறாள். இந்த ஆலயத்தில் உள்ள மாரியம்மன், தரைக்கு மேல் இரண்டரை அடி உயரத்தில் லிங்க வடிவில் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். லிங்கத்தின் கீழ் ஆவுடையாரும் உள்ளது. இந்த மூலவரைப் பார்க்கும்போது, அம்மனுக்குரிய எந்தவித அம்சமும் தெரியாது. இருப்பினும் கூட இந்த லிங்கத்தை, அம்மனாக பாவித்து, புடவை அணிவித்து பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர். இந்த மாரியம்மன் உயரமான இடத்தில் கோட்டை போல இருந்து, இந்த ஊரை காப்பாற்றுவதால் கோட்டை மாரி என்றும் அழைக்கப்படுகிறாள்.

இக்கோவிலில் தரப்படும் தீர்த்தம், அம்மை நோய், கண் நோய் முதலிய நோய்களை தீர்க்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
திருமுருகநாதர் கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

திருமுருகநாதர் கோவில்

கூப்பிடு விநாயகர்

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் கோவில்.

ஒரு சமயம், தேவாரம் பாடிய மூவரில் ஒருவரான சுந்தரர், தனது நண்பரான சேர நாட்டை ஆண்ட சேரமான் பெருமான் நாயனாரின் அழைப்பை ஏற்று சேர நாட்டிற்கு சென்று சில நாட்கள் தங்கி அங்குள்ள கோயில்களை தரிசித்தார். பின்னர் அவர் திருவாரூருக்கு திரும்பும் போது. சேரமான் பெருமான் பல பரிசு பொருட்களைக் கொடுத்து சுந்தரரை சிறந்த முறையில் வழியனுப்பினான்.

தனக்கு வேண்டியதை இறைவனிடம் முறையிட்டு பெறுவது சுந்தரரின் வழக்கம். ஆனால் தற்போது தன்னிடம் வேண்டாமல் சேரமான் பெருமானிடம் பரிசுப் பொருட்களைப் பெற்று வருகிறானே என எண்ணிய சிவபெருமான், பரிசுப் பொருள்களுடன் சுந்தரர் திருமுருகன்பூண்டி அருகே வரும் போது, தனது பூதகணங்களை வழிப்பறி திருடர்கள் வேடத்தில் அனுப்பி, சுந்தரரின் பரிசுப் பொருள்களை கொள்ளையடித்து வரச் செய்தார்.

இதனால் செய்வதறியாது திகைத்து நின்ற சுந்தரரை, விநாயகப் பெருமான் கூப்பிட்டு சிவபெருமான் குடிகொண்டிருந்த கோவிலைச் சுட்டிக் காட்டி உதவினார். கூப்பிட்டு உதவியதால் அங்கிருந்த விநாயகர் கூப்பிடு விநாயகர் என்ற பெயர் பெற்றார். இன்றைக்கும் இழந்த பொருட்களை மீண்டும் பெறுவதற்கு இவரை வணங்கிப் பலன் பெறுகின்றனர்.

பொருள் இழந்த கவலையுடன் சுந்தரர் திருமுருகன்பூண்டி சென்று அங்குள்ள இறைவன் மேல் பதிகம் பாடி முறையிட்டார். வழிப்பறித் திருடர்கள் இருக்கும் இந்த ஊரில் அந்த பயத்திலிருந்து பக்தர்களைக் காப்பாற்றாமல் நீயும் அம்பிகையும் எதற்காக இங்கு இருக்கிறீர்கள் என்று சுந்தரர் சிவனைத் திட்டிப் பதிகம் பாட, அவரது பாடலில் மகிழ்ந்த சிவன் அவரது பொருட்களைத் திருப்பியளித்து ஆசி வழங்கியதாக தவரலாறு உள்ளது.

வழிமறித்து நிதிபறித்த இறைவன் இருக்குமிடத்தைக் கூப்பிட்டுச் சுந்தரருக்குக் காட்டிய(வேடுபறி நடந்த இடம்) கூப்பிடு விநாயகர் அவிநாசிக்குப் போகும் வழியில் 1.கி.மீ. தொலைவில் பாறைமேல் உள்ளார்.

Read More
வெற்றி வேலாயுதசாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

வெற்றி வேலாயுதசாமி கோவில்

முருகப்பெருமான் தன் வேலால் உருவாக்கிய தீர்த்தம்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டத்தில் புகழ் பெற்ற கதித்தமலை அமைந்துள்ளது.இது கைத்தமலை என்றும் கதிர்த்தமலை என்றும் அழைக்கப்படுகிறது. கதித்த என்னும் சொல்லுக்கு கோபித்த என்ற பொருளும் உண்டு. அம்மையப்பனாகிய பெற்றோரிடம் ஞானப்பழத்தை பெறாத முருகன் அவர்களிடம் கோபித்துக்கொண்டு இங்கு வந்ததால் (கோபித்தமலை) கதித்தமலை என்று ஆயிற்று. கதித்தமலை மயில் வடிவில் உள்ளதால், மயூரகிரி என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கு வெற்றி வேலாயுதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மலையின் மீது ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. ராஜகோபுரத்தின் உள்ளே நுழைந்தவுடன் ஒரு அழகிய மண்டபத்துடன் கூடிய சன்னதியில் முருகன் தனியாக காட்சிதருகிறார் . வள்ளி மற்றும் தெய்வானைக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன.

அகத்தியர் முனிவர், முருகப் பெருமானை வழிபடஇத்தலத்திற்கு வந்தார். ஆனால் அவர் பூஜை செய்வதற்கான நீர் கிடைக்காததால் வருத்தமுற்றார். அவர் மனம் உருகி முருகப்பெருமானை வேண்ட, முருகப்பெருமான், தன வேலால் இவ்விடத்தில குத்த நீர் வந்தது. அதைக்கொண்டு அகத்தியர் பூஜை செய்தார். அவ்வாறு முருகப்பெருமான் குத்திய இடத்தில இருந்து நீர் இன்றும் வற்றாமல் வந்து கொண்டே இருக்கிறது . குழியில் இருந்து ஊற்று தோன்றியதால் 'ஊத்துக்குளி' என்று இவ்விடத்திற்கு பெயர் ஏற்பட்டது .

அருணகிரிநாதர் இத்தல முருகனை பற்றி தன் திருப்புகழில் பாடியுள்ளார் .

Read More
பிரசன்ன விநாயகர் கோவில்
விநாயகர், vinayakar Alaya Thuligal விநாயகர், vinayakar Alaya Thuligal

பிரசன்ன விநாயகர் கோவில்

திப்பு சுல்தானிடம் காணிக்கை கேட்ட விநாயகர்

முற்காலத்தில் உடுமலைப்பேட்டை ஊரைச்சுற்றி சக்கர வடிவில் அரணாக மலை அமைந்திருந்ததால் சக்கரகிரி என்றும், அம்மலையில் உடும்புகள் நிறைந்து காணப்பட்டதால் உடும்புமலை என்றும் அழைக்கப்பட்டது. இவ்வூர், பின் உடுமலைப்பேட்டை என்றானது. திப்பு சுல்தான் வனமாக இருந்த இப்பகுதியை ஆட்சி செய்தார். அரை வட்ட மலையினால் இப்பகுதி பாதுகாப்புடன் அமைந்திருந்தது. இதனால், எதிரிகள் யாரும் எளிதில் நெருங்க முடியாததால், திப்புசுல்தான் தனி ராச்சியம் கொண்டு ஆட்சி செய்து வந்தார். ஒர் நாள், அவரது கனவில் விநாயகர் தோன்றி, 'உன் நாட்டை நான் பாது காத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் எனக்கு காணிக்கை கூட செலுத்தாமல் இருக்கிறாய்' என்றாராம். அதைக் கேட்ட திப்புசுல்தான், காணிக்கை கேட்ட விநாயகருக்காக, ஊரின் மேற்கு பகுதியில் குளக்கரையில் பிரசன்ன விநாயகர் கோவில் அமைத்தார். இத்தல விநாயகர் ஆறடி உயரத்தில், ராஜ கம்பீர கோலத்தில், ஏகதள விமானத்தின் கீழ் அமர்ந்துள்ளார். மூஷிக வாகனம் பெரிய அளவில் இருப்பதும், முன் மண்டபத்தின் மேற்கூரையில் 12 ராசிகளைக் குறிக்கும்படியான சிற்பம் பொறிக்கப் பட்டிருப்பதும் சிற்பக்கலையின் சிறப்பை உணர்த்துகிறது. . ஒவ்வொரு கிருத்திகை யன்றும் விநாயகர் வெள்ளித் தேரில் பவனி வருகிறார்இத்தலத்தில் காசி விசுவநாதர், அவருக்கு இடப்புறம் காசி விசாலாட்சி, அருகில் தம்பதி சமேதராக முருகன், முகப்பில் வன்னி மரத்தின் அடியில் பிரம்மன், வடமேற்கில் கண்ணபுரநாயகி உடனாய சுவுரிராசப் பெருமாள், அருள்பாலிக்கிறார்கள். இதனால், இத்தலம் சிறந்த சைவ வைணவ இணைப்பு பாலமாகவும், மும்மூர்த்திகள் அமைந்த தலமாகவும் திகழ்கிறது.கல்வியில் சிறக்கவும்,அனைத்து தோஷங்கள் மற்றும் குடும்ப பிரச்னைகள் விலகவும், இத்தல விநாயகரை வேண்டிக் கொள்கின்றனர்.

Read More