தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோவில்

சாந்த சொரூபமாக நின்ற கோலத்தில் இருக்கும் அபூர்வ லட்சுமி நரசிம்மர்

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இருந்து 17 கி.மீ. தொலைவிலுள்ள தாளக்கரை என்னும் ஊரில், 800 ஆண்டுகள் பழமையான லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு முன்புறம் ஓடை உள்ளது. முற்காலத்தில் எப்போதும் வற்றாத ஜீவ நதியாக இந்த ஓடை திகழ்ந்துள்ளது. தாளம் என்றால் ஓடை என்ற பொருள் உண்டு. எனவே இத்தலம் தாளக்கரை என்று அழைக்கப்படுகிறது.

கருவறையில் மூலவர் நரசிம்மர் கோரை பற்களுடன், நாக்கு தொங்கிய கோலத்திலும் கையில் சங்கு சக்கரம் ஏந்தி, ஸ்ரீ சக்கரம் அமைந்த பீடத்தில் நின்ற கோலத்தில் சாந்த சொரூபமாக எழுந்தருளி உள்ளார். பொதுவாக நரசிம்ம பெருமாள் மடியில் லட்சுமி தாயார் அமர்ந்த கோலத்தில் தான் இருப்பார். ஆனால் தாளக்கரையில், நரசிம்மரும் லட்சுமியும் தனித் தனியே நின்ற வண்ணம் காணப்படுகிறார்கள். இப்படி சாந்த சொரூப கோலத்தில் லட்சுமியுடன் நின்ற வண்ணம் நரசிம்மர் காட்சி அளிப்பது இந்த தலத்தின் தனிச் சிறப்பாகும். இத்தலத்தை போல், நரசிம்மரும் லட்சுமியும் தனித்தனியே நின்ற வண்ணம் காட்சி தரும் மற்றொரு தலம், ஐதராபாத் யாதகிரி குட்டா மலையில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலாகும்.

நரசிம்மர் அருளால் திருமணத்தடை, புத்திர பாக்கியம், தொழில், கடன் நிவர்த்தி, மன நிலை பாதிப்பு, பில்லி சூனியம், ஏவல் உள்ளிட்ட பிரச்சினைகளிலிருந்து விடுபட, பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபடுகிறார்கள்.

ஐதராபாத் யாதகிரி குட்டா மலையில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் கோவில் பற்றிய முந்தைய பதிவு

https://www.alayathuligal.com/blog/fn2rhlcc2wgjdnby93grjmcwjbsk59-w77g5

 
Previous
Previous

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில்

Next
Next

அம்மன்குடி கைலாசநாதர் சுவாமி கோவில்