மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில்

மயிலாப்பூர் கற்பகாம்பாள்

‘கற்பகம்’ என்றால் ‘வேண்டும் வரம் தருபவள்’ என்று பொருள். தேவலோகத்தில் கற்பக விருட்சம் எப்படித் தன்னிடம் கேட்பதையெல்லாம் தருகின்றதோ, அது போல தன் பக்தர்களின் கோரிக்கையை கற்பகத் தருவாக இருந்து நிறைவேற்றித் தருவதால் கற்பகாம்பாள் என்று பெயர். பார்வதி மயில் உருவில் இத்தலத்தில் இறைவனை பூஜை செய்ததால் இத்தலம் திருமயிலை என்று பெயர் பெற்றது.

ஒருசமயம் பார்வதிதேவி சிவபெருமானிடம், சிவாயநம என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் பொருளை உபதேசிக்கும்படி வேண்டினார்.. சிவபெருமான் அதை உபதேசித்து கொண்டிருக்கும்போது பார்வதிதேவி கவனம் சிதறி,அங்கே தோகை விரித்து நடனமாடிக் கொண்டிருந்த ஒரு மயில் மீது கவனத்தை செலுத்தினார். இதனால் கோபமுற்ற சிவபெருமான் பார்வதியை பூலோகத்தில் மயிலாக பிறக்க சாபம் கொடுத்தார். பார்வதிதேவி சாபவிமோசனம் வேண்டியபோது தொண்டை நாட்டில் மயில் வடிவில் பூஜை செய்தால் தன்னை மீண்டும் அடையலாம் என்று கூறினார். அம்பிகை இத்தலத்தில் புன்னை மரத்தின் அடியில், மயில் உருவில் சிவனை வேண்டி தவமிருந்தபோது, சுவாமி அவளுக்கு காட்சியளித்து சாபவிமோசனம் கொடுத்தார்

பொதுவாக சிவாலயங்களில், சிவனை தரிசித்த பிறகே அம்பிகையை தரிசிக்கும் படியான அமைப்பு இருக்கும். ஆனால் இக்கோவிலில், கற்பகாம்பாளை தரிசித்து விட்டே கபாலீசுவரரை தரிசிக்கும்படியான அமைப்பானது தனிச்சிறப்பாகும்.

இத்தலத்தில் நடைபெறும் பங்குனித் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது

Read More
திரிசூலம் திரிசூலநாதர் கோவில்

திரிசூலம் திரிசூலநாதர் கோவில்

அபூர்வ கோலத்தில் கோலத்தில்அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தி

சென்னை விமான நிலையம் எதிரில் அமைந்துள்ள திரிசூலம் ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திரிசூலநாதர் கோவில். கோவிலின் பிரதான அம்பிகையான திரிபுரசுந்தரி அம்மன் தனிச் சன்னதியிலும், மற்றொரு அம்பிகையான சொர்ணாம்பிகை மூலவர் திரிசூல நாதரின் கருவறையிலும் எழுந்தருளி இருக்கிறார்கள்.

இறைவன் கருவறையின் சுற்றுச்சுவரில், தட்சிணாமூர்த்தி வலது காலை முயலகன் மீது ஊன்றி, தனது இடது காலை குத்திட்டு வைத்திருக்கிறார். வழக்கமாக அவர் ஒரு காலை மடித்தும், மற்றொரு காலை தொங்கவிட்டும் இருக்கும் நிலையிலிருந்து மாறுபட்டு இப்படி இடது காலை குத்திட்டு அமர்ந்திருப்பது ஒரு அபூர்வ காட்சியாகும். இப்படி அமர்ந்திருக்கும் கோலத்தினால், அவர் வீராசன தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். மேலும் வலது செவியில் மகர குண்டலமும், இடது செவியில் பத்ர குண்டலமும் அணிந்து காட்சி தருவதால் தட்சிணாமூர்த்தி, இங்கே அர்த்தநாரீஸ்வர கோலத்தில் வீற்று இருக்கிறார். தட்சிணாமூர்த்திக்கு கீழேயுள்ள சீடர்கள், வழக்கமான அஞ்சலி முத்திரையுடன் இல்லாமல், சின்முத்திரை காட்டியபடி இருக்கின்றனர். இதுவும் ஒரு அபூர்வமான அமைப்பாகும்.

Read More
திரிசூலம் திரிசூலநாதர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திரிசூலம் திரிசூலநாதர் கோவில்

மன அமைதி தரும் திரிபுரசுந்தரி அம்மன்

சென்னை விமான நிலையம் எதிரில் அமைந்துள்ள திரிசூலம் ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திரிசூலநாதர் கோவில். பிரம்மன் வழிபட்ட தலம் இது. நான்கு வேதங்களே, நான்கு மலைகளாக இக்கோயிலைச் சுற்றி இருக்கின்றது. சுரம் என்றால் வளம் நிறைந்த மலை என்று பொருள். மலைகளுக்கிடையே வீற்றிருக்கும் இத்தல இறைவனுக்கு திருச்சுரமுடையார் என்றும் பெயர். இந்த திருச்சுரம் என்பது மருவி. பின்னர் திரிசூலமாகி விட்டது.

இறைவன் திரிசூலநாதர் லிங்க வடிவில் கிழக்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார். சுவாமி அருகில் சொர்ணாம்பிகை கருவறையில் இருக்க, மற்றொரு பிரதான அம்பாள் திரிபுரசுந்தரி தனி சந்நிதியில், தெற்கு நோக்கி எழில்கோலத்துடன் அருள்புரிகிறாள். அம்பிகையின் திருக்கரங்களில் அட்சத மாலையும், தாமரைப் பூவும் திகழ்கின்றன. இதன் மூலம் ஞானத்தையும் செல்வத்தையும் ஒருசேர அருள்பிரசாதமாகத் தருகிறாள் அன்னை திரிபுரசுந்தரி.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் திரிபுரசுந்தரி அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சி தருவாள். அன்று அவளை வழிபடுவர்களுக்கு மன அமைதி உண்டாகும் என்பது நம்பிக்கை. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரிபுரசுந்தரிக்கு வெள்ளிக்கிழமைகளில் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதுவும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் பூப்பாவாடையுடன் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.

திரிசூலநாதர் கருவறையில் சொர்ணாம்பிகை எழுந்தருளி இருப்பதற்கு, ஒரு பின்னணி வரலாறு உண்டு. அந்நியர் படையெடுப்பின்போது கோவிலில் இருந்த சொர்ணாம்பிகை தாயாரின் கையில் கட்டைவிரல் சேதமடைந்துவிடுகிறது. அதனால் பின்னப்பட்ட சிலையை வழிபடக்கூடாது என்று கூறி, தனியே வைத்துவிடுகிறார்கள்.அப்போது அர்ச்சகரின் கனவில் வந்து தனது பின்னத்தை சரிசெய்து, மீண்டும் திரிசூலநாதரின் அருகே வைக்குமாறு தாய் அருள் கூற, அதன்படி சிலையின் பின்னப்பட்ட விரலுக்கு பதிலாக தங்கத்தில் விரல் செய்து பின்னர் திரிசூலநாதரின் அருகிலேயே சொர்ணாம்பிகையை இருக்கச் செய்திருக்கிறார்கள்.

Read More
கோயம்பேடு வைகுண்டவாசப் பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

கோயம்பேடு வைகுண்டவாசப் பெருமாள் கோவில்

வைகுந்த வாசப் பெருமாள் அமர்ந்திருக்கும் அபூர்வத் தோற்றம்

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வெகு அருகில் உள்ளது வைகுண்ட வாசப் பெருமாள் கோவில். தாயார் திருநாமம் கனகவல்லி .

‘கோ’ எனப்படும் அரசனாகிய ராமனின் குதிரைகளை, ‘அயம்’ என்னும் இரும்பு சங்கிலியால் கட்டி வைத்த இடம் என்பதால் ‘கோயம்பேடு’ என பெயர் பெற்றது. பேடு என்றால் ‘வேலி’ என்று பொருள். இக்கோவில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது.

வைகுண்ட பெருமாள் பெரும்பாலும் அமர்ந்த நிலையில்தான் காட்சி தருவார். ஆனால் இக்கோவிலில், அவர் ஸ்ரீதேவி , பூதேவி தாயாருடன் நின்ற கோலத்தில் காட்சி தருவது ஒரு தனிச்சிறப்பாகும்.

சீதாதேவி கர்ப்பிணி கோலத்தில் இருக்கும் அரிய தோற்றம்

இத்தலத்தில் ராமர், சீதை ஆகிய இருவர் மட்டுமே, லட்சுமணன் அனுமன் உடன் இல்லாமல் காட்சி தருவது ஒரு அபூர்வமான அமைப்பாகும். இக்கோவிலில் ராமர் அரச கோலத்தில் இல்லாமல் மரவுரி தரித்து இருப்பதும் ஒரு அபூர்வ கோலமாகும். மேலும் இந்தக் கோவிலில், தனிச் சன்னதியில் சீதாதேவி கர்ப்பிணி கோலத்தில், மேடிட்ட வயிற்றுடன் எழுந்தருளி இருப்பது ஒரு அபூர்வ தோற்றமாகும். இத்தலத்தில் சீதா தேவிக்கு நடத்தப்படும் வளைகாப்பு உற்சவம் மிகவும் சிறப்பானது. குழந்தை பாக்கியம் வேண்டுவோர் சீதா தேவிக்கு வளையல் அணிவித்து வேண்டிக்கொண்டால், விரைவில் அந்த பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கோவில் முன் மண்டபத்தில் ராமனின் மைந்தர்கள் லவன், குசன் வால்மீகி முனிவரை வணங்கிய கோலத்தில் காட்சி தருகிறார்கள்.

பிரார்த்தனை

கோவில் வளாகத்தில் இரண்டு வில்வ மரங்கள், ஒரு வேம்பு மரம் பிணைந்து காணப்படுகிறது. இம்மரங்கள், சிவன், விஷ்ணு மற்றும் அம்பிகை அம்சமாக கருதப்படுகின்றன. இம்மரத்திற்கு 'பார்வதி சுயம்வர விருட்சம்' என்று பெயர். ஒவ்வொரு செவ்வாய் கிழமையும், இவ்விருட்சங்களுக்கு கல்யாண தோஷம் நிவர்த்தி வேண்டி, பக்தர்கள் பூஜை செய்கின்றனர்.

Read More
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி தேர் திருவிழா

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவின் ஏழாம் நாள் காலை தேரோட்டம் நடைபெறும். முதலாவதாக சிறிய தேரில் விநாயகர் உலா வர, அதை தொடர்ந்து பெரிய தேரில் கபாலீஸ்வரர் பவனி வருவார். அவரைப் பின்தொடர்ந்து கற்பகாம்பாள், வள்ளி தெய்வயானை சமேத முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேரில் வருவார்கள்.

கபாலீஸ்வரர், கைகளில் வில்லும் அம்பும் ஏந்தி பார் வேட்டைக்குச் செல்லும் கோலத்தில், மேளதாளம், நாதஸ்வரம் முழங்க, பக்தர்கள் கூட்டத்தின் நடுவே நான்கு மாட வீதிகளிலும் தேரில் பவனி வருவார். கபாலீஸ்வரரின் தேரோட்டத்தை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, பல வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

சகட தோஷத்தை நீக்கும் தேரோட்டம்

ஒருவருடைய ஜனன ஜாதகத்தில், குருவுக்கு 6, 8, 12 மிடங்களில் சந்திரன் நின்றால் அது சகட யோகமாகும். இந்த யோகம் இருப்பவர்கள் சில நேரங்களில் உச்சத்திலும் சில நேரங்களில் துன்பப்பட்டுக்கொண்டும் இருப்பார்கள். தேர் அசைந்து சென்று ஓரிடத்தில் நிலைத்தன்மை பெற்றுவிடும். அதுபோல, திருக்கோவில்களின் தேரோட்டத்தை தரிசிப்பது, ஒருவரின் சகட தோஷத்தை போக்கி, ஏற்ற இறக்கங்களை நீக்கி, நிலையான வாழ்வை தந்துவிடும் என்பது நம்பிக்கை. கபாலீஸ்வரர் கோவில் தேரோட்டம் பார்ப்பவர் அனைவரும், சகடதோஷம் நீங்கி நிலையான வாழ்வு பெறுவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனித் திருவிழா - வெள்ளி ரிஷப வாகன காட்சி

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவின் ஐந்தாம் நாள் இரவு, இறைவன் வெள்ளி ரிஷப வாகனத்தில் மயிலாப்பூர் மாடவீதிகளில் பவனி வருவார். அவருடன் கற்பகாம்பாள் தங்க ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் தங்க மயில் வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும் வலம் வருவார்கள். பஞ்சமூர்த்திகளும் மறு நாள் காலையில்தான் கோவிலுக்குத் திரும்புவார்கள்.

இந்த ஆண்டு வெள்ளி ரிஷப வாகன காட்சி, 1.4.2023, சனிக்கிழமை இரவு 9.00 மணிக்கு தொடங்க உள்ளது.

வெள்ளி ரிஷப வாகன காட்சியை தரிசித்தால், திருஞானசம்மந்தருக்கு ஞானப்பால் ஊட்டியதுபோல் ஞானம் வேண்டி நிற்பவருக்கெல்லாம் ஞானப்பால் கிட்டிவிடும் என்பது நிச்சயம்.

Read More
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனித் திருவிழா - அதிகார நந்தி சேவை

'மயிலையே கயிலை' என்னும் பெருமையுடையது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில். இக்கோவிலில் நடைபெறும் பங்குனி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றத. பத்து நாட்கள் நடைபெறும் இந்த பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளன்று நடைபெறும் அதிகார நந்தி சேவை, ஐந்தாம் நாள் அன்று இரவு நடைபெறும் வெள்ளி ரிஷப வாகன காட்சி, ஏழாம் நாள் திருத்தேர், எட்டாம் நாள் நடைபெறும் அறுபத்து மூவர் திருவிழா, பத்தாம் நாள் இரவு நடைபெறும் திருக்கல்யாணம் ஆகியவை மிகவும் சிறப்பு வாய்ந்தவை.

சென்னைக்கு பெருமை மயிலை என்றால், மயிலை கபாலீஸ்வரருக்குப் பெருமை அதிகார நந்தி சேவை. இந்த ஆண்டு அதிகார நந்தி சேவை 30.3.2023, வியாழனன்று காலை 5.45 மணிக்கு தொடங்க உள்ளது.

ரிஷபத்தின் முகமும் (காளையின் முகம்) சிவனின் உருவமும் கொண்ட அதிகார நந்தி, ஞானத்தின் தலைவனாகக் கருதப்படுகிறார். சிவபெருமானின் வாகனமான நந்தி பகவான். வேதங்களின் முதல்வனாகப் போற்றப்படுகின்றார். 'நந்தி' என்ற சொல்லுக்கு 'மகிழ்ச்சி' என்று பொருள். நான்கு மறைகளையும் ஈசன், நந்தி தேவருக்குத்தான் முதலில் கூறியதாக புராணங்கள் கூறுகின்றன. அதிகார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவ்வகை நந்திகளில் மூன்றாவதாக இருப்பதாகும். கைலாயத்தில் வாயிற்காவலாக நின்றிருக்கும் நந்திக்கு, சிவபெருமானை தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவராக இருப்பதால், அதிகார நந்தி என்ற பெயர் வந்தது.

வெள்ளியாலான அதிகார நந்தி வாகனம்

இக்கோவில் அதிகார நந்தி வாகனம் 106 ஆண்டுகள் பழமையானது. அதற்கு முன்னால் மரத்தாலான அதிகார நந்தி வாகனம்தான். பயன்பாட்டில் இருந்தது. இப்போதைய நந்தி வாகனத்தை வழங்கியவர், வந்தவாசி அருகே இருக்கும் தண்டரை கிராமத்தைச் சேர்ந்த த.செ .குமாரசாமி என்பவர். இவரின் குடும்பம், ஆயுர்வேத சித்த மருத்துவத்தை பாரம்பரியமாக, பல தலைமுறைகளாக செய்து வந்தனர். வெள்ளியாலான இந்த அதிகார நந்தி வாகனம் உருவாக்கும் பணி, 1912ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1917 ல் நிறைவு பெற்றது. அப்போதைய மதிப்பில் 48 ஆயிரம் ரூபாய் செலவில் உருவான இந்த அதிகார நந்தி வாகனத்தின் தற்போதைய மதிப்பு, மூன்று கோடி ரூபாய் ஆகும்.

Read More
திருவொற்றியூர் தட்சிணாமூர்த்தி கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

திருவொற்றியூர் தட்சிணாமூர்த்தி கோவில்

சிங்க வாகனத்தில் அமர்ந்து அருள்புரியும் பஞ்சமுக விநாயகர்

சென்னை மாநகரத்தின் திருவொற்றியூர் பகுதியில், தட்சிணாமூர்த்தி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தட்சிணாமூர்த்தி மூலவராக,வடக்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார். இத்தலத்தில் பஞ்சமுக விநாயகர், ஆறடி உயரத்தில் தனிச் சன்னதியில் சிம்ம வாகனத்தில் அமர்ந்து காட்சியளிக்கிறார்.

ஐந்து முக விநாயகருக்கு ஹேரம்ப விநாயகர் என்று பெயர். ஹேரம்ப விநாயகர் என்பது விநாயகரின் 32 வடிவங்களில் 11 வது திருவுருவம் ஆகும். ஹேரம்ப என்றால் சிங்கம் என்றும் எளியவர்க்கு அருள் புரிபவர் என்றும் பொருள் கொள்ளலாம். நம் பிரார்த்தனைகள் விரைவாக நிறைவேறிட சிங்கத்தின் மீது அமர்ந்த விநாயகரை வழிபட வேண்டும் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.

இத்தலத்து ஹேரம்ப விநாயகரது ஐந்து முகங்களும் ஒரே திசையை நோக்கி வரிசையாக அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். இவர் பஞ்சபூதங்களையும் கட்டுப்படுத்தி, எட்டு திசைகளையும் பரிபாலிக்கிறார். இவர் கரங்களில் உள்ள பாசம், தந்தம், அட்சமாலை, மாவெட்டி, உலக்கை, கோடாரி, மோதகம், கனி ஆகிய எட்டும் எட்டு திசைகளை பரிபாலிப்பதாக ஐதீகம்.

இவருக்கு சங்கடஹர சதுர்த்தி நாட்களில் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.

Read More
மயிலாப்பூர் கோலவிழி அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மயிலாப்பூர் கோலவிழி அம்மன் கோவில்

மயிலாப்பூர் தலத்தின் எல்லை காளி

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வடகிழக்கே வெகு அருகாமையில் அமைந்துள்ளது, மயிலாப்பூரின் எல்லை காவல் தெய்வமாக விளங்கும் கோலவிழி அம்மன் கோவில். இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.மயிலாப்பூர் தலத்தில், பார்வதிதேவி மயில் உருவம் எடுத்து தவம் இருந்தபோது அவளை அசுரர்களிடம் இருந்து பாதுகாப்பதற்காக சிவபெருமானால் அனுப்பி வைக்கப்பட்ட பத்ரகாளி இவள் என்பது குறிப்பிடத்தக்கது. 'பத்ர' என்பதற்கு மங்களம் என்றொரு பொருள் உண்டு. தன்னை நாடி வருவோருக்கு மங்களங்களை அள்ளித் தருபவளாகத் திகழ்வதால், இத்தல அம்மன் பத்ரகாளியாகவும் விளங்குகின்றாள்.

கருவறையில் வடக்கு திசை நோக்கி, கோலவிழி அம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.இந்த அம்மனின் தனிச்சிறப்பே அவளின் கோலவிழிகள்தான். அவளின் கண்களைப் பார்த்தாலே நம்முள் பரவசம் ஏற்படும். இடது காலடியில் அசுரனின் தலையை அழுத்தி, வலது காலை மடக்கிய கோலத்தில் காட்சி தருகிறாள். வலது கரங்களில், சூலம், வாள், உடுக்கை, வேதாளம் ஏந்தியும், இடது கரங்களில் கேடயம், அங்குசம், மணி, கபாலம் ஏந்தியும் கோலவிழி அம்மன் காட்சி தருகின்றாள். சிரசில் உள்ள தீ ஜூவாலைகளில் பதினைந்து இதழ்கள், அதன் நடுவே சீறும் நாகம், திருமுடியின் இடதுபுறம் சந்திரன், கங்கை, வலது புறம் நாகம், காதணி அணிந்து, சிவசக்தி சொரூபமாக அம்மன் காட்சி தருகின்றாள். இவளது இயற்பெயர் பத்ரகாளி என்பதாகும். எனவே இந்த கோவிலை, பத்ரகாளி அம்மன் கோவில் என்றும் சொல்வார்கள்.

மயிலையின் காவல் தெய்வம்

கோல விழியம்மன் மயிலாப்பூர் தலத்தின் எல்லை காளியாக இருப்பவள். எனவே மயிலாப்பூரில் உள்ள எந்த ஆலயத்தில் விழா நடந்தாலும் கோல விழியம்மனுக்குத்தான் முதல் மரியாதை கொடுக்கப்படும். கபாலீஸ்வரர் ஆலயத்தில் எந்த ஒரு விழாவானாலும் இங்கு வந்து அன்னையிடம் உத்தரவு பெற்றே நடத்துகின்றனர். மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்தி மூவர் நாயன்மார் விழா நடக்கும்போது அனைவருக்கும் முன்னதாக முதலில் செல்வது கிராம தேவதையான கோல விழியம்மன்தான்.

முக்கிய திருவிழாக்கள்

மாசியில் மூன்றாம் ஞாயிறன்று பால் குடப்பெருவிழா, சித்திராப் பவுர்ணமியில் பூச்சொரிதல் விழா, ஆடிப்பூர விழா, தீச்சட்டி ஏந்தும் விழா, புரட்டாசியில் நவராத்திரி விழா மற்றும் பத்தாம் நாள் சூரனை வதம் செய்யும் விழா, ஆகியவை இந்த ஆலயத்தில் நடைபெறும் குறிப்பிடத்தக்க விழாக்கள் ஆகும்.

பிரார்த்தனைகள்

27 நட்சத்திரக்காரர்களும் இங்கு பிரதட்சணம் செய்து வழிபட்டால் உரிய பலன் கிடைக்கும். . 9 வாரம் பிரதட்சணம் செய்தால் எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். இதனால் இத்தலத்துக்கு இந்துக்கள் மட்டுமின்றி முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களும் வந்து வழிபட்டு செல்கிறார்கள். சந்திராஷ்டமம் நேரத்தில் ஏதாவது சொன்னாலோ, பேசினாலோ இடையூறு, பிரச்சினை ஏற்படும் என்று சொல்வார்கள். எனவே சந்திராஷ்டமம் உள்ள நாட்களில் உரியவர்கள் இந்த தலத்துக்கு வந்து வழிபட்டு சென்றால் சந்திராஷ்டமம் தாக்குதலால் எந்த பிரச்சினையும் வராது என்கிறார்கள்.

இந்த அன்னை குழந்தைகளுக்கு ஏற்படும் பாலாரிஷ்ட தோஷம் நீக்கும் அற்புத அன்னையாக விளங்குகிறாள். நாக தோசத்தால் பாதிக்கப் பட்டவர்கள், ராகு தசை நடப்பவர்களுக்கு இது பரிகாரத்தலமாக உள்ளது. இந்த அம்மனுக்கு பச்சரிசி மாவில் விதவிதமான நிறங்களைக் கலந்து மாவுக்காப்பு சாற்றினால் தீராக்கடன்கள் தீர்ந்து விடுவதாக ஐதீகம். இதைத்தவிர மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக் காப்பு, முத்தங்கி என விதம்விதமான அலங்காரங்களும் செய்கிறார்கள்.

Read More
மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோயில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோயில்

குடிசையில் வீற்றிருந்து சகல வளங்களையும் அள்ளித்தரும் அம்மன்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வடக்கே, அரை கிலோ மீட்டர் தொலைவில், மிகவும் தொன்மை வாய்ந்த முண்டகக்கண்ணி அம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு நாளும் ஏராளமான பக்தர்கள் வழிபடும் மகிமை வாய்ந்த புண்ணிய திருத்தலம் இதுவாகும். அனைத்து செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கோயில், திருவிழாக் கோலம் பூண்டு விடும்.

சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது முண்டகக்கண்ணி அம்மன் ஆலயம் இருக்கும் இடத்தில் ஒரு குளம் இருந்துள்ளது. அந்த குளக்கரையில் பல நூறு ஆண்டு வயதுடைய மிகப் பெரிய ஆலமரம் இருந்தது. ஒரு நாள் அந்த ஆலமரத்தடியில் அப்பகுதி மக்கள் அமர்ந்து இருந்தபோது, அம்மன் தன்னை சுயம்புவாக வெளிப்படுத்தி காட்சி தந்தாள் என்கிறது இத்தலத்தின் வரலாறு. மேலும் தாமரை மொட்டு வடிவத்திலேயே, தன்னை அம்மன் சுயம்புவாக வெளிப்படுத்திக் கொண்டதாக இக்கோவில் புராணம் கூறுகிறது. முண்டகம் என்றால் தாமரை என்றும் பொருள் உண்டு. அம்மன் விரிந்த பெரிய விழிகளைக் கொண்டவள் என்ற பொருளில் 'முண்டகக் கண்ணியம்மன்' என்கின்றனர். அம்பிகை, தாமரை போன்ற கண்ணுடையாள் என்றும் கொண்டாடுகின்றனர்.

முண்டகக்கண்ணி அம்மன். வேறு எந்த தலத்திலும் இல்லாதபடி,எளிமைக்கு இலக்கணமாக ஓலைக் குடிசையில் எழுந்தருளியிருக்கிறாள். இக்கோவிலுக்கு ராஜகோபுரம் இருந்தாலும், அன்னை வீற்றிருக்கும் கருவறையை அலங்கரிப்பதோ எளிமையான தென்னங்கீற்றால் வேயப்பட்ட கொட்டகைதான். தங்களுக்கு கேட்ட வரம் கொடுத்து அருள் பாலிக்கும் அன்னைக்கு, கருவறை கட்டிடம் கட்ட அவளின் பக்தர்கள் முயன்றபோது, அதில் பல்வேறு தடைகள் ஏற்பட்டதாகவும், தனக்கு தென்னங்கீற்றால் அமைந்த கூரை மட்டுமே விருப்பம் என பக்தர்களின் கனவில் அம்பாள் சொன்னதாகவும் கூறப்படுகிறது. மேலும் தல வரலாறும் தனது மக்களை வெம்மையில் இருந்து காக்கவே, அன்னை இவ்வாறு குடிகொண்டிருப்பதாக தெரிவிக்கிறது. சுயம்புவாக அம்மன் தலையில் நாக கிரீடம் அணிந்து கொண்டு நடுவில் சூல வடிவம் கொண்டு இரண்டு கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றாள். இடதுபுறமாக உற்சவர் சிம்ம வாகனத்தில் கம்பீரமாக காட்சி தருகின்றாள். முண்டகக்கண்ணி அம்மனை கருவறை என்பதும் குளிர்ச்சியாகவே வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில் அடிக்கடி நீர் ஊற்றி ஈரமாகவே வைத்துள்ளனர். வெள்ளி கவசம் சாத்திய பெரிய சந்திரபிரபை கீழ் சுயம்பு அம்மன் ஆனந்தமாய் விற்றிருக்கிறாள்.

கருவறையின் பின்புறம் தல மரமான, ஆலம் விழுதுகள் இல்லாத, அபூர்வ மரமான கல்லால மரமும், புற்றுடன் மூன்றடி உயர கல் நாகமும் அமைந்துள்ளன. பின்புறம் உள்ள புற்றில் வாழும் நாகம், நாள்தோறும் இரவில் அன்னையை வணங்கி வழிபட்டு செல்கிறாள் என்பது ஐதீகம். இதனால் இத்தலத்தை ராகு கேது பரிகார தலம் என்று சொல்வார்கள் .

பிரார்த்தனைகள்

இக்கோவிலில் அம்பாளுக்கு பூஜித்த வேப்பிலை, மஞ்சள், எலுமிச்சை மற்றும் தீர்த்தமே பிரதான பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது. அம்மை நோய், தீராப்பிணி, திருமணத்தடை, கல்வி, மகப்பேறு, வீடு வாகன வசதிகள் என வேண்டுவோர் வேண்டியதை வேண்டியவாறுக் கொடுக்கும் கற்பகத்தரு முண்டகக்கண்ணி அம்மன். ராகு – கேது தோஷம் உள்ளவர்கள் இந்த அம்மனை வழிபட, அவற்றிலிருந்து முழுமையாக விடுபடலாம். நாகதோஷம் இருப்பவர்கள், முண்டகக்கண்ணி அம்மனை வழிபட்டு, நாககன்னி சிலையை பிரதிஷ்டை செய்வதாக வேண்டிக்கொள்கிறார்கள். அதன்பிறகு, 48 நாள்களுக்கு நீரிலேயே நாககன்னியை வைத்திருந்து, பின் அதனை ஆலயத்தின் முகப்பில் இருக்கும் மரத்தடியில் பிரதிஷ்டை செய்து, அதற்கு அபிஷேகமும் செய்து வழிபடுகிறார்கள். கண் தொடர்பான நோய்கள் தீர முண்டகக்கண்ணியை வழிபட விரைவில் தீரும்.

Read More
சென்னை கந்தசாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

சென்னை கந்தசாமி கோவில்

வேத மந்திரங்களால் முருகன் விக்கிரகத்தை சீர் செய்த அற்புதம்

சென்னை பாரிமுனைப் பகுதியிலுள்ள ராசப்ப தெருவில் அமைந்ததுள்ளது, சுமார் 450 ஆண்டுகள் பழமையான கந்தசாமி கோவில். மூலவர் கந்தசாமி. உற்சவர் முத்துக் குமாரசுவாமி. சிதம்பர சுவாமி , பாம்பன் குமரகுரு பரதாச சுவாமிகள், இராமலிங்க அடிகளார் ஆகியோர் பாடிய தலம்.

தல வரலாறு

வேளூர் மாரிச்செட்டியார்,பஞ்சாளம் கந்தப்ப ஆசாரி என்கிற முருக பக்தரகள், ஒவ்வொரு கிருத்திகையன்றும, சென்னையிலிருந்து திருப்போரூக்கு நடைப் பயணமாகச் சென்று திருப்போரூர் கந்தசாமியை வழிபடும் வழக்கம் உடையவர்கள். அப்படி ஒரு சமயம், 1673ம் ஆண்டு மார்கழி மாதம் கிருத்திகையன்று, திருப்போரூர் கந்தசாமியை வணங்கி விட்டு சென்னை திரும்பும் வழியில், செங்கண்மால் ஈசுவரன் கோவில் என்ற இடத்தில் அசதியில் படுத்து உறங்கி விட்டார்கள். அப்போது அவர்கள் இருவர் கனவிலும் தோன்றிய முருகன் நீங்கள் ஏன் இவ்வளவு தூரம் உடலை வருத்திக் கொண்டு வருகிறீர்கள், இதோ இந்தப் புற்றிலிருக்கும் என்னை எடுத்துச் சென்று நீங்கள் வசிக்கும் சென்னப் பட்டணத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள் என்றார். உடனே இருவரும் கண் விழித்து தனக்கு வந்த கனவைப் பற்றி பேசினார்கள். இருவருக்கும் ஒரு போலவே கனவு வந்தபடியால்,வந்து சொன்னது முருகனே என்று மகிழ்ந்தார்கள். சுற்றிலும் தேடிப் பார்த்தார்கள் அருகில் முருகன் உருவம் தென்படவே அவரை எடுத்து வந்தார்கள். வரும்வழியில் பாரிமுனையில் முருகனின் பாரம் தாங்காமல் கீழே வைத்தார்கள். அதன் பின் முருகரை அங்கிருந்து அசைக்க முடியவில்லை. முருகர் இங்கேயே கோவில் கொள்ள விரும்புகிறார் என்று எண்ணிய இருவரும் தற்போது கோவில் இருக்கும் இடத்திலேயே முருகருக்கு கோவில் கட்டினார்கள்.

சுவாமி இவ்விடத்தில் தானாக விரும்பி நின்றவர் என்பதால் பீடம் இல்லாமல் தனித்து, தரையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அளவில் மிகவும் சிறிய மூர்த்தியாக உள்ள இவருக்கு இருபுறமும் வள்ளி, தெய்வானை ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர்.

உற்சவர் முத்துக் குமாரசுவாமி

ஒரு சமயம் , முருகனடியார்கள் எல்லாம் ஒன்று கூடி கோயிலுக்கு உற்சவ விக்கிரகம் உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர் . சிற்ப சாஸ்திரத்தில் மிக நுட்பறிவு கொண்ட ஒருவரைத் தேர்வு செய்தனர் . சிற்பியிடம், உற்சவ முருகனாகப் பஞ்சலோகத்தில் விக்கிரகம் ஒன்றை வார்த்துக் தரும்படி ஒப்படைத்தனர் . சிற்பியும் புடம் போட்டு எடுத்தபின், வார்ப்படத்தைப் பிரித்தபோது விக்கிரகம் 'மினு மினு' வென மின்னியது . அதன் ஒளிச் சிதறல்கள் கண்களை கூசச் செய்தது . ஆனால் வார்ப்படத்திலிருந்த பிரித்தெடுத்த பகுதிகள் பூராவும் முட்கள் போல சிறு பிசிறுகளாய் இருந்தன. கோயில் பொறுப்பாளர்கள் அனைவருமாகச் சேர்ந்து சிற்பியிடம், சிற்பம் நல்லா வந்திருக்கிறது ஆனால் வெளித்துருத்தியிருக்கும் முட்கள் போலான பிசிறுகளை நீக்கினீர்களென்றால் சிற்பம் இன்னும் அழகாக இருக்கும் என்றனர்.

சிற்பியும், சரி! துருத்திய பிசிறுகளை எல்லாம் சுத்தப்படுத்தி தருகிறேன் என்று சொல்லி அதற்குண்டான கருவியுடன் விக்கிரகத்தைத் தொட்டார் . அவ்வளவுதான் சிற்பத்தை தொட்ட மாத்திரத்தில் மின்சாரம் தாங்கியவர் போல் தூரப்போய் விழுந்தார். பக்கத்திலிருந்தவர்கள் ஓடி வந்து சிற்பியை தூக்கி வைத்து ஆசுவாசப்படுத்தி, என்ன ஆயிற்று ஐயா என்றனர். சிற்பியோ, என் தேகமெல்லாம் மின்சாரம் பாய்ந்தது போலிருக்கிறது. ஒரே பதட்டமாக இருக்கிறது என வாய் குழறி குழறிக் கூறினார் . இந்த விக்கிரகம் நீறு பூத்த அனலாக இருக்கிறது. இதைச் சுத்தம் செய்யும் தகுதியோ, சக்தியோ எனக்கில்லை என்றார். என்னால் முடியாது என்று சொல்லிவிட்டு போய் விட்டார்.அந்த விக்கிரகத்தை தீண்டப்பயந்து வழிப்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளாமல் பாதுகாப்பாக வைத்துப் பூட்டி விட்டனர் . இரண்டு வருடங்கள் ஓடி விட்டன.

ஒருநாள் காசியிலிருந்து சாம்பையர் எனும் துறவி கந்தக்கோட்டம் வந்தார். அவர் மூலவரை தரிசித்து முடித்தவுடன் உற்சவர் எங்கே என்று விசாரித்தார். அவருக்கு உற்சவர் இருந்த பெட்டியை காண்பித்தனர். கொஞ்ச நேரம் அந்த விக்கிரகத்தையே பார்த்துக் கொண்டிருந்த சாம்பையர், மயக்கம் போட்டு விழுந்தார். பிறகு எழுந்தவர் சந்தோஷத்தில், மூலவருக்கு எவ்வளவு சான்னித்தியம் உள்ளதோ, அதே சாந்நித்தியம் இந்த உற்சவர் சிலைக்கும் உள்ளது என்று சொன்னார். இப்படி அமைவது மிக மிக அபூர்வம் என்றார். ஆத்ம சக்தியினால் மட்டுமே இந்த உற்சவரை சுத்தம் செய்யமுடியும். எந்த கருவிகளாலும் சுத்தம் செய்ய முடியாது என்றார். அவரே சிலையின் முன் அமர்ந்து வேத மந்திரங்களை சொல்லி அந்த சிலையை சுத்தம் செய்தார். அவர் உற்சவர் திருமேனியில் இருந்த பிசிறுகளையெல்லாம் நீக்கினார். ஆனால் முகத்தில் இருந்த பிசிறுகளை நீக்க முடியவல்லை. இன்று நாம் உற்சவராக தரிசிப்பது இந்த பொன்னிற முருகனைத்தான். ஆனால் முகத்தில் மட்டும் பிசிறுகள் இருக்கும்.

Read More
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில்

சிங்காரவேலர் மயில் வாகனத்திலும், வள்ளி-தெய்வயானை யானை மேலும் எழுந்தருளியிருக்கும் அபூர்வக் கோலம்

சென்னையில், மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீசுவரர் கோவில், தேவாரப் பாடல் பெற்ற 32 தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானின் திருநாமம் சிங்காரவேலர். இவரை அருணகிரிநாதர் தம் திருப்புகழில் போற்றிப் பாடியுள்ளார்.

பொதுவாக கோவில்களில், முருகப்பெருமான் தனியாகவோ அல்லது வள்ளி தெய்வயானை சமேதராகவோ, மயில் மேல் எழுந்தருளியிருப்பார். ஆனால் இக்கோவிலில் சிங்காரவேலர்,தனியே மயில் வாகனத்திலும், வள்ளி தெய்வயானை தனித்தனியே யானை மேலும் எழுந்தருளியிருப்பது தனிச சிறப்பாகும்.

முருகப்பெருமான் சண்முகநாதராக அருள்பாலிக்கும் தலங்களில் எல்லாம் கிழக்கு நோக்கித்தான் காட்சி அளிப்பார்.ஆனால் மயிலாப்பூர் தலத்தில், சிங்காரவேலர் மேற்கு நோக்கி இருப்பது மேலும் ஓரு சிறப்பாகும்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்

1.இரண்டு கொடிமரங்கள் அமைந்த தேவாரத்தலம்

https://www.alayathuligal.com/blog/8anclgmaxr8w2a5pf5edegy49bbare

2. மயிலாப்பூர் கற்பகாம்பாள்

https://www.alayathuligal.com/blog/m8l7sr9dl79d9zh4zr7m6lpapkg6ln

Read More
திருவேட்டீசுவரர் கோவில்

திருவேட்டீசுவரர் கோவில்

சிவபெருமான் தன் திருமேனியுடன் பள்ளியறைக்கு எழுந்தருளும் தனிச்சிறப்பு

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் அமைந்துள்ளது திருவேட்டீசுவரர் கோவில். இறைவன் திருநாமம் திருவேட்டீசுவரர். அம்மனின் திருநாமம் செண்பகவல்லி.

பொதுவாக சிவாலயங்களில் அர்த்தஜாம பூஜை முடிந்தபின், பள்ளியறைக்கு சிவபெருமானின் பாதங்களை கொண்டு செல்வது வழக்கம். ஆனால் இத்தலத்தில், சிவபெருமான் தன் திருமேனியுடன் பள்ளியறைக்கு எழுந்தருளுகிறார். இது வேறு எந்த தலத்திலும் நடைமுறையில் இல்லாத தனிச்சிறப்பாகும்.

இத்கோவில் சிவபெருமான், அம்பிகை, முருகன் ஆகிய மூவருக்கும் தனித்தனியே மூன்று கொடிமரங்கள் உள்ளன. இது வேறு எந்த தலத்திற்கும் இல்லாத மற்றுமொரு தனிச்சிறப்பாகும்.

ராகு கேது பரிகாரத் தலம்

இத்கோவில் ராகு கேது பரிகாரத் தலமாகும். எனவே ராகு கேது தோஷம் உள்ளவர்கள் அந்த கிரகங்களுக்குரியய தானியங்களான உளூந்து, கொள்ளு, மந்தாரை மற்றும் செவ்வரளி மலர் கொண்டு திருவேட்டீசுவரரை வழிபட்டால் நற்பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Read More
திருவேட்டீசுவரர் கோவில்

திருவேட்டீசுவரர் கோவில்

வேடுவனாக வந்த சிவபெருமான்

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் ஜாம் பஜார் மார்கெட் அருகில் அமைந்துள்ளது திருவேட்டீசுவரர் கோவில். இறைவன் திருநாமம் திருவேட்டீசுவரர். அம்மனின் திருநாமம் செண்பகவல்லி. திருநாவுக்கரசரால் தேவார வைப்புத் தலமாக காப்புத் திருத் தாண்டகத்தில் பாடப்பட்டுள்ளது.

செண்பக வனத்தில் தவம் செய்த செண்பகவல்லியை மணந்த சிவபெருமான் திருவேடீஸ்சுவரர் என்று அழைக்கப்படுகிறார் . இவர் இங்கு சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். இவர் தலையில் வெட்டு தழும்புடன் காட்சி தருகிறார் . இந்த தழும்பு அர்ச்சுனனால் உண்டாக்கப்பட்டது . அர்ச்சுனன் பாசுபத அஸ்திரம் பெற வழிபட்டபோது வேடுவனாக வந்த சிவனை உணராமல் , அவரின் தலையில் அடிக்க , தலையில் வெட்டுண்டு தழும்பு உருவானது . வேடுவனாக இறைவன் காட்சி தந்ததால் வேட்டீசுவரன் என பெயர் பெற்றார் .

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு வேட்டகம் (மாமியார் வீடு) ஆன தலம்

இலக்குமி தாயார் திருமாலை அடைய இங்கு இருந்து தவம் செய்தாள் .திருமால் பார்த்தசாரதியாக வந்து இங்கு இருந்த இலக்குமி தாயாரை கைபிடித்ததால், பார்த்தசாரதிக்கு இத்தலம் வேட்டகம் (மாமியார் வீடு) ஆனது, அதனால் திருவேட்டக ஈஸ்வரன் பேட்டை என அழைக்கப்படுகிறது.

மொகலாயர், ஆங்கிலேயர்களால் மான்யங்கள் வழங்கப்பட்ட கோவில்

இக்கோவிலானது 7 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகும் . மொகலாய பேரரசர் காலத்தில் மான்யங்கள் இத்கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியர் ஆட்சிக்காலத்தில் 1.11.1734ல் இக்கோவில் நிலங்களுக்கு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

அமீர் மஹாலிலிருந்து வரும் அர்த்தசாம பூஜைப் பொருட்கள்

ஆற்காடு நவாப் காலத்தில் மான்யங்கள் தரப்பட்டு இத்தலம் விருத்தி அடைந்ததாக வரலாற்றுச் செய்திகள் சொல்கின்றன. இன்றும் அர்த்தசாம பூஜைக்கு, ஆற்காடு நவாப் பரம்பரையினர் மூலமாக, அவரகள் தற்போது வசித்து வரும் அமீர் மஹாலிலிருந்து, பால், புஷ்பம் இத்தலத்து இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.

Read More
கபாலீஸ்வரர் கோவில்

கபாலீஸ்வரர் கோவில்

பங்குனி உத்திரத் திருவிழா

அறுபத்து மூவர் திருவிழா

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி உத்திரத் திருவிழாவின் மிகச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி அறுபத்து மூவர் திருவிழாவாகும்.

சேக்கிழாரின் பெரிய புராணம் 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது. இவர்கள். சிவபெருமானின் மீது தீராத பக்தியும், சிவனுக்கும், சிவனடியார்களுக்கும் தொண்டு புரிவதே தங்கள் உயிர் மூச்சாக வாழ்ந்தவர்கள். இவர்களின் பெருமைகளை உலகம் உணர, சிவபெருமான் பல திருவிளையாடல்களை இவர்கள் வாழ்க்கையில் நிகழ்த்தினார். பல சோதனைகள் வந்தாலும் இவர்கள் சிவபக்தியில் இருந்தும், சிவத்தொண்டிலிருந்தும் வழுவாது இருந்து பேரும், புகழும், சிவன் அருளும் பெற்றார்கள்.

சிவபெருமானை வழிபடுவதால் கிடைக்கும் பலன், சிவப்பணி ஆற்றிய சிவனடியார்களை வழிபட்டாலும் கிடைக்கும்' என்று திருத்தொண்டர்தொகை இயற்றிய சுந்தரமூர்த்து சுவாமிகளும், பெரியபுராணம் இயற்றிய சேக்கிழாரும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அத்தகைய அடியார்களைக் கொண்டாடி வணங்கும் திருவிழாவாகவே மயிலாப்பூர் கபாலீஸ்வர் கோயிலில் நடைபெறும் 'அறுபத்துமூவர் விழா' விளங்குகிறது.

மயிலாப்பூர் அறுபத்து மூவர் விழாவின் தனிச் சிறப்பு

மயிலாப்பூர் அறுபத்துமூவர் விழா நடைபெறும் நாளில், சிவனடியாரின் மகத்துவம் உணர்த்தும் மற்றுமொரு வைபவமும் நடைபெறுகிறது. அதுதான் திருஞானசம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பித்தெழச் செய்த நிகழ்ச்சியாகும்.

சிவநேசர் என்னும் சிவபக்தர், தனது மகள் பூம்பாவையை திருஞானசம்பந்தருக்குத் திருமணம் செய்துவைக்க விரும்பினார். ஆனால். விதிவசமாக பூம்பாவை பாம்பு தீண்டி இறந்துவிட்டாள். அவளுடைய அஸ்தியை ஒரு குடத்தில் வைத்து, திருஞானசம்பந்தரின் வரவுக்காகக் காத்துக்கொண்டிருந்தார் சிவநேசர். திருஞானசம்பந்தர் மயிலைக்கு வந்திருப்பதைக் கேள்விப்பட்ட சிவநேசர், அஸ்தி குடத்தை எடுத்துக்கொண்டு வந்து திருஞானசம்பந்தரைப் பணிந்து வணங்கி, நடந்த சம்பவத்தைக் கூறினார்.

திருஞானசம்பந்தர் சிவபெருமானை வணங்கி,

`மட்டிட்ட புன்னையங்கானல் மடமயிலைக்

கட்டிட்டங்கொண்டான் கபாலீச்சரமமர்ந்தான்

ஒட்டிட்டபண்பினுருத்திர பல்கணத்தார்க்கு

அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்..

என்ற பதிக்கத்தைப் பாடி இறந்துபோன பூம்பாவையை உயிர்த்தெழச் செய்கிறார்.

தன்னுடைய பக்தராக இருந்தாலும், சிவநேசரின் மகளைத் தாமே உயிர்ப்பிக்காமல், தம்மையே பாடிப் போற்றும் திருஞானசம்பந்தரின் அருளால் உயிர்த்தெழச் செய்து, சிவபெருமானும் தம் அடியார்களின் பெருமையை திருஞானசம்பந்தர் மூலம் இந்தத் தலத்தில் உலகத்தவர்க்கு உணர்த்தியருளினார் என்பதால்தான் மயிலையில் நடைபெறும் அறுபத்து மூவர் விழா தனிச் சிறப்பு கொண்டதாகப் போற்றப்படுகிறது.

அறுபத்தி மூவர் திருவிழா

பங்குனி பிரம்மோற்ஸவத்தின் 8ஆம் நாள், அறுபத்தி மூவர் திருவிழா நடைபெறுகிறது. வெள்ளி விமானத்தில் கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், பிள்ளையார், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் இவர்களோடும் அறுபத்து மூன்று நாயன்மார்களோடும் காட்சியளித்து வீதிஉலா வருவார். மயிலாப்பூர் காவல் தெய்வமான கோலவிழி அம்மன், முண்டகக்கன்னியம்மன், அங்காளபரமேஸ்வரி, வீரபத்திரர் ஆகியோரும் தனித்தனி பல்லக்குகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பல ஊர்களிலிருந்து இவ்விழாவிற்கு வருகை தருவார்கள்

இவ்வீதிஉலாவின் போது பெண்கள் பலர் மாடவீதிகளில் பொங்கல் வைத்து இறைவனுக்கு படைப்பார்கள். நாள்பட்ட வியாதிகளும், தீராத நோய்களும் இதனால் குணமாகும் என்பது பக்தர்களின் ஐதீகம்.

Read More
கரிவரதராஜ பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

கரிவரதராஜ பெருமாள் கோவில்

"தேன் உண்ட பெருமாள்

சென்னை பாரிமுனையில் இருந்து 17 கி.மீ., தொலைவில் மாதவரம் உள்ளது.இங்குள்ளது கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில்.நாம் உணவு உண்ணும்போது ஜனார்த்தனன் என்னும் திருநாமத்தையும், உறங்கச் செல்லும்போது பத்மநாபன் என்னும் திருநாமத்தையும், காட்டு வழியில் செல்ல நேரிட்டால் நரசிம்மன் திருநாமத்தையும், மலையேறும்போது ரகுநந்தன் என்னும் திருநாமத்தையும் உச்சரித்துச் சொல்வது விசேஷம். ஆனால் மாதவன் என்கிற திருநாமத்தை எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் சொல்லலாம் என புராணங்களில் கூறப்பட்டுள்ளன. அந்த உயர்ந்த திருநாமத்தையே பெயராகக் கொண்டுள்ளது மாதவபுரம் என்னும் சிற்றூர். வியாசர் உள்ளிட்ட மாமுனிவர்கள் இங்கு தவம் செய்து வரம் பெற்ற தலம் என்பதால், ‘மகாதவபுரம்’ என்று பெயர் பெற்று, அதுவே நாளடைவில் மருவி ‘மாதவரம்’ என்றாயிற்று.மூலவர் வேங்கட வரதராஜன் என்னும் திருநாமத்துடன் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன், நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார். திருமலையில் எழுந்தருளி வரும் திருவேங்கடமுடையான் போல், இடக்கரம் கடிக ஹஸ்தம் கொண்ட கோலத்தில் இருப்பதால், ‘வேங்கடவரதன்’ எனவும் வழங்கப்படுகிறார்.ஒரு சமயம் இந்த இறைவனுக்கு தேனாபிஷேகம் செய்யும்போது, அர்ச்சகர் சிறிது தேனை உத்தரணி (சிறு கரண்டி)யில் எடுத்து பெருமாளின் வாயருகே கொண்டு செல்ல, அதனை பெருமாள் ஏற்றுக் கொண்டாராம். இதனால் இவருக்கு தேன் உண்ட பெருமாள் என்ற பெயரும் உண்டு.

Read More