மகா சிவராத்திரி சிவாலய ஓட்டம்

மகா சிவராத்திரி சிவாலய ஓட்டம்

உலகில் வேறெங்கும் நடக்காத வித்தியாசமான சிவராத்திரி வழிபாட்டு முறை

அரியும் சிவனும் ஒன்றே எனும் தத்துவத்தை உணர்த்திய ஸ்ரீகிருஷ்ணர்

கன்னியாகுமரி மாவட்ட ஆலய விழாக்களில் குறிப்பிடத்தக்கது மகா சிவராத்திரி சிவாலய ஓட்டம். மகா சிவராத்திரி அன்று பன்னிரண்டு சிவாலயங்களை ஓட்டமாக ஓடிச் சென்றே தரிசிப்பதுதான் இந்த சிவாலய ஓட்ட வழிபாட்டின் தனிச் சிறப்பு. அதாவது 24 மணி நேரத்தில், சுமார் 110 கி.மீ. தொலைவுக்குட்பட்ட பன்னிரண்டு சிவாலயப் பெருமான்களை, சிவராத்திரி அன்று தரிசிப்பது தான், இந்த சிவாலய ஓட்டத்தின் நோக்கமாகும்.

இந்த சிவாலய ஓட்டத்தில் பங்கு பெறுபவர்கள் மாசி மாதம் ஏகாதசி அன்று மாலை அணிந்து விரதம் மேற்கொள்வர். சிவராத்திரிக்கு முதல் நாள் மாலை 4 மணி அளவில் காவி வேட்டியும் காவித்துண்டும் அணிந்து முதற்கோயிலான முஞ்சிறை என்ற திருமலையில், ஆற்றில் நீராடி, ஈசனை வணங்கி விட்டு ஓட ஆரம்பிப்பர். அதிலிருந்து பன்னிரண்டாவது கோயிலில் தரிசனம் முடிக்கும்வரை 'கோவிந்தா, கோபாலா' என்ற கோஷத்தை ஒலித்தபடியே இருப்பார்கள்.

சிவாலய ஓட்டத்தில் பக்தர்கள் செல்லும் கோவில்கள்

1. திருமலை சூலப்பாணிதேவர்

2. திக்குறிச்சி மஹாதேவர்

3. திற்பரப்பு வீரபத்திரேஷ்வரர்

4. திருநந்திக்கரை நந்தீஷ்வரர்

5. பொன்மனை தீம்பிலான்குடிஷ்வரர்

6. பந்நிப்பாகம் கிராதமூர்த்திஷ்வரர்

7. கல்குளம் நீலகண்டர்

8. மேலாங்கோடு காலகாலர்

9. திருவிடைக்கோடு சடையப்பர்

10. திருவிதாங்கோடு பரசுபாணிஷ்வரர்

11. திற்பன்றிகோடு பக்தவசலேஷ்வரர்

12. திருநட்டாலம் சங்கரநாராயணர்

சிவாலய ஓட்ட வரலாறு

அரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை விளக்கும் வகையிலேயே இந்த சிவாலய ஓட்டம் அமைந்துள்ளது. இந்த சிவாலய ஓட்டத்தின் பின்னணியில், மகாபாரதம் சம்பந்தப்பட்ட ஒரு கதை உள்ளது.

வியாக்கிரபாத முனிவர் சிறந்த சிவபக்தர். இடுப்புக்கு மேலே மனித வடிவமும், இடுப்புக்கு கீழே புலி வடிவமும் கொண்டவர். சிவபெருமானை வேண்டி புருஷாமிருகம் என்று அழைக்கப்படும் இந்த உருவத்தை அவர் பெற்றார். அவருக்கு மகாவிஷ்ணு என்றால் ஆகாது. தனது எல்லைக்குள் எவரேனும் திருமால் நாமத்தைக் கூறினால், அவரைத் தாக்கி விடுவார். தவ வலிமையைவிட புஜ பலமே சிறந்தது என்று நம்பியவர் பீமன். புருஷாமிருகத்துக்கும், பீமனுக்கும் அரியும், சிவனும் ஒன்று என்பதை உணர்த்த ஸ்ரீகிருஷ்ணர் நினைத்து அதற்கு ஒரு நாடகம் நடத்தினார்.

ஒருமுறை தர்மர் நடத்தும் ராஜசூய யாகத்துக்கு புருஷாமிருகத்தின் பால் கொண்டு வருமாறு பீமனை அனுப்பினார். வைணவத்தை வெறுக்கும் புருஷாமிருகத்திடம் சென்று பால் பெற்று வருவது எப்படி? எனத் தயங்கினார் பீமன். ஆனால் கிருஷ்ணரோ, பயப்படாதே. உன்னிடம் பன்னிரெண்டு ருத்திராட்சக் கொட்டைகள் தருகிறேன். புருஷாமிருகம் உன்னைத் தாக்க வரும்போது, ருத்திராட்சக் கொட்டைகளில் ஒன்றைக் கீழே போடு. அது சிவலிங்கமாக மாறும். லிங்கத்தைப் பார்த்ததும், புருஷாமிருகம் பூஜையில் இறங்கிவிடும். அப்போது தப்பித்து விடலாம்! என்றார்.

திருமலையில் ஒரு பாறை மீது அமர்ந்து, சிவதவம் புரிந்து கொண்டிருந்தது புருஷாமிருகம். அப்போது அங்கு வந்த பீமன், கோவிந்தா, கோபாலா! என்று கூவினான். இந்த சத்தத்தில் புருஷா மிருகத்தின் தவம் கலைந்தது. கோபத்துடன் பீமனைத் துரத்தியது. உடனே பீமன், ஒரு ருத்திராட்சத்தைக் கீழே போட்டார். அந்த விநாடியே ருத்ராட்சம் சிவலிங்கமாக மாறியது. இதைக் கண்டதும் புருஷாமிருகம் சிவபூஜையை ஆரம்பித்தது. பீமன், கோவிந்தா, கோபாலா என்று மீண்டும் குரல் எழுப்பினார். புருஷாமிருகம் மீண்டும் பீமனைத் துரத்த, பீமன் மீண்டும் ருத்திராட்சத்தைக் கீழே போட்டார். அங்கும் அது ஒரு சிவலிங்கமாக மாறியது. அந்த இடமே திக்குறிச்சி. ஓடி ஓடி பதினோரு இடங்களைக் கடந்து பன்னிரெண்டாவது இடமான திருநட்டாலம் என்ற இடத்தில் ருத்திராட்சத்தைப் போடும்போது, புருஷாமிருகம் பீமனைப் பிடித்தது. பீமனுடைய ஒரு கால் புருஷாமிருகத்தின் எல்லைக்குள்ளும், மற்றொரு கால் வெளியேயும் இருந்தன. உடனே பீமன் உன் எல்லையைக் கடந்து விட்டேன். என்னை விட்டுவிடு! என்றார். அப்போது, அங்கே வந்த தர்மரிடம் நியாயம் கேட்டார்கள். தம்பி சிக்கலில் இருப்பது தெரிந்தும், பாரபட்சம் பாராமல், ஒரு கால் பகுதி புருஷாமிருகத்தின் எல்லையில் இருப்பதால், பாதி உடல் புருஷா மிருகத்துக்கே! என்றார். அப்போது அங்கே தோன்றிய ஸ்ரீகிருஷ்ணர், பீமனுக்கும் புருஷாமிருகத்துக்கும், அரியும் சிவனும் ஒன்றே எனும் தத்துவத்தை உணர்த்தினார். இருவரும் ஸ்ரீகிருஷ்ணரை வணங்கினர். தர்மரின் ராஜ சூய யாகம் நடக்க புருஷாமிருகம் உதவியது.

பீமன் ஓடியதன் விளைவாகவே, சிவராத்திரி அன்று பக்தர்கள் அனைவரும் 12 சிவாலயங்களுக்கும் ஓடியே வழிபடுகிறார்கள்.

இந்த 12 சிவாலயங்கள், 12 ராசிகளுக்கான கோவிலாக அமைந்துள்ளது. அது போன்று 12 நீர் நிலைகளும் இந்த கோவில் அருகே காணபடுகிறது. 12 சிவாலயங்களுக்கு 110 கி.மீ. தூரம் நடந்து வந்து சிவ பெருமானை தரிசித்து செல்லும் வழிபாடானது, உலகில் வேறெங்கும் நடக்காத நிகழ்வாக உள்ளது. தமிழகம் உட்பட கேரளாவை சேர்ந்த ஐந்து லட்சம் பக்தர்கள் மேல் இந்த புனித யாத்திரையில் பங்கேற்கிறார்கள்.

Read More
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்

கன்னியாகுமரி அம்மன் தனக்கு கேட்டு வாங்கிய மூக்குத்தியும், புல்லாக்கும்

திருவிதாங்கூர் மகாராஜாவின் ஆட்சி காலத்தில், கன்னியாகுமரி பகுதியில் பனையேறி ஒருவன் இருந்தான். அவன் தனக்கு ஆண் வாரிசு வேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால் அவன் மனைவி ஒவ்வொரு முறை கருவுறும் போதும் அவனுக்கு பெண் குழந்தை மட்டுமே பிறந்து கொண்டு இருந்தது. ஒவ்வொரு முறையும் அவன் மனைவிக்கு பிரசவம் ஆனதும் அவன் முதல் மகள் தான் அவனிடம் வந்து குழந்தை பிறந்த செய்தியை சொல்லுவாள். இப்படியே அவனுக்கு 5 பெண் குழந்தைகள் பிறந்து விட்டன. இதனால் மனம் வருந்திய அவன் இனி நமக்கு பெண் குழந்தை பிறந்தது என்று நம் மகள் வந்து நம்மிடம் சொல்லும் போது நாம் பனையின் உச்சியில் இருந்தால் அப்படியே இரண்டு கைகளையும் மரத்தில் இருந்து விடுவித்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தான்.

இந்நிலையில் அவன் மனைவி 6வது முறையாக கருவுற்றாள். அப்போது வழக்கம் போல் அவனது முதல் பெண் ஓடி வந்து அப்பா அம்மாக்கு பிரசவம் ஆயிடுச்சு. தங்கை பிறந்துருக்கா என்று சொன்னாள். ஆனால் அந்த நேரம் இவன் பனையில் இருந்து கீழே இறங்கி இருந்தான். அதனால் அவனால் உடனே தற்கொலை செய்ய முடியவில்லை. 7வது முறையும் இவன் பனையில் இருந்து இறங்கிய பிறகே முதல் மகள் வந்து பெண் குழந்தை பிறந்திருக்கும் செய்தியை சொன்னாள். இந்நிலையில் அவன் மனைவி 8வது முறை கருவுற்றாள். இம்முறையும் அவன் பனையை விட்டு இறங்கிய பிறகே அவன் மூத்த மகள் வந்து 8வதாக பெண் பிறந்த செய்தியை சொல்ல, மனம் வெறுத்து போன அவன் இனி நாம் உயிர் வாழவே கூடாது என முடிவு செய்து அருகில் இருந்த பாம்பு புற்றில் தன் கையை விட்டான். பாம்பு கடித்து விடும், நாம் உயிரை விட்டு விடலாம் என்பது அவன் எண்ணம்.

ஆனால் அம்மனின் விருப்பம் வேறாக இருந்தது. அவன் புற்றின் உள்ளே கையை விட்டதும் கையில் ஏதோ சூடு பட்டது போல உணர்ந்தான். சூடு தாங்க முடியாமல் கையை வேகமாக வெளியே இழுத்து பார்க்கும் போது அவன் கையில் ஏதோ ஒன்று தக தகவென மின்னியது. புற்றில் இருந்த முதிர்ந்த நாகம் அவன் கையில் நாகரத்தினத்தை உமிழ்ந்து இருந்தது. அது என்னவென்று அறியாத அவன் அதனை உடனே அரண்மனைக்கு கொண்டு சென்றான். அதை மகாராஜாவிடம் கொடுத்தான். உடனே அதை பெற்று கொண்ட மகாராஜா அவரது குதிரையை அவிழ்த்து விட்டு, அது எவ்வளவு தூரம் ஓடுகிறதோ அவ்வளவு இடத்தையும் அவன் பெயரில் எழுதி வைக்க சொன்னார். அவனும் மகிழ்ச்சியோடு அதை பெற்று கொண்டு வீட்டுக்கு சென்றான்.

அன்றிரவு மன்னரின் கனவில் ஒரு சின்னஞ்சிறு பெண் வந்து மன்னா ! இன்று காலை அரண்மனை தர்பாரில் உன்னிடம் ஒருவன் நாகரத்தினம் கொண்டு வந்து தந்தானே! அந்த நாகரத்தினத்தில் எனக்கு ஒரு மூக்குத்தியும், புல்லாக்கும் செய்து தர கூடாதா? என்று கேட்டு விட்டு மறைந்து விட்டாள். திருவிதாங்கூர் மன்னர் மறுநாள் காலையில் நம்பூதிரிகளை வரவழைத்து தான் இரவு கண்ட கனவை கூறி அந்த சிறு பெண் யார் என பிரசன்னம் வைத்து கண்டு பிடிக்கும் படி கூறினார். நம்பூதிரிகள் பிரசன்னம் வைத்து பார்க்கும் போது அது வேறு யாரும் அல்ல கன்னியாகுமரி பகவதி அம்மன் தான் என்பது தெரிய வந்தது.

நம்பூதிரிகள் கூறியதை கேட்ட மன்னர் உடனடியாக தேவி கன்னியாகுமரி பகவதிக்கு நாகரத்தினத்தில் மூக்குத்தியும், புல்லாக்கும் செய்து கொடுத்தார். அது தான் இன்றும் அன்னை அணிந்து கொண்டு இருக்கிறாள். நாகரத்தினம் என்பதால் அது தக தகவென ஜொலிக்கும். கப்பலோட்டிகள் அம்பாளின் மூக்குத்தி வெளிச்சத்தை கலங்கரை விளக்க ஒளி என்று எண்ணியதால், கப்பல் திசை மாறி வந்த காரணத்தால் கோவிலின் கிழக்கு வாசல் அடைக்கப்பட்டு தெற்கு வாசல் வழியாக சென்று தான் தேவியை தரிசனம் செய்ய முடியும்.

Read More
பகவதி அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

பகவதி அம்மன் கோவில்

தேவி கன்னியாகுமரி

இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா ஆகிய முக்கடல் சங்கமிக்கும் இடத்தில், இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது பகவதியம்மன் கோவில். இக்கோவில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பரசுராமரால் கட்டப்பட்டதாகும். தேவியின் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக, தேவியின் முதுகுப் பகுதி விழுந்த இடமாக கருதப்படுகிறது. அம்மனின் சக்தி பீடங்களில் இது குமரி சக்தி பீடம் ஆகும். இத்தலத்தில் குமரி அம்மன் கன்னிப்பெண் வடிவத்தில் அருள்பாலிக்கிறார்.

தல வரலாறு

முன்னொரு காலத்தில் அசுரர் தலைவனான பாணாசுரன் என்பவன் தேவர்களுக்கும் ,முனிவர்களுக்கும் தொல்லை கொடுத்து வந்தான். அப்போது தேவர்கள், பாணாசுரனுக்கு முடிவுகட்ட வேண்டும் என்று திருமாலிடம் விண்ணப்பித்தனர். திருமாலும் பாணாசுரன் பெற்ற வரத்தின்படி, அவனை கன்னிப்பெண் ஒருவரால் மட்டுமே அழிக்க முடியும். என்றார். அதனால் பார்வதி தேவியிடம் உங்கள் வேண்டுதலை சமர்ப்பியுங்கள் என்று அறிவுறுத்தினார். அதன்படி தேவர்கள், பாணாசுரனை அழிப்பதற்காக பார்வதி தேவியை வணங்கி ஒரு பெரிய வேள்வி செய்தனர். வேள்வியால் மகிழ்ந்த பார்வதி தேவி, தேவர்கள் முன்பாக தோன்றி, பாணாசுரனை அழிப்பதாக உறுதி அளிக்கிறார்.

அதற்காக கன்னியாகுமரி வந்தடைந்த பார்வதி தேவி, அங்கு கடும்தவம் புரிந்தார். சிறிய பெண்ணாக இருந்த கன்னிதேவி, மணப்பருவம் அடைந்ததும், சுசீந்திரத்தில் கோயில் கொண்ட சிவபெருமான் (தாணுமாலவர்), அவரை மணமுடிக்க எண்ணினார். சிவபெருமான் தனது விருப்பத்தை தேவர்களிடம் கூறினார்.

சிவபெருமானுக்கும் கன்னிதேவிக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், ஒரு கன்னிப்பெண்ணால்தான் பாணாசுரனுக்கு அழிவு ஏற்படும் என்பதால், நாரத முனிவர் சற்று யோசித்தார். தேவர்களும், பாணாசுரனை வீழ்த்த வேண்டும் என்றால், அன்னையின் தவம் கெடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நாரதரிடம் கூறினர். அதன்படி நாரதர், சிவபெருமான் – பார்வதி தேவியின் திருமணத்தை தடுத்து நிறுத்த எண்ணினார். அதேநேரத்தில், சிவபெருமானின் எண்ணத்தை மறுத்துரைக்காதபடி செயல்பட வேண்டும் என்பதையும் நினைவில் கொண்டார்.

அதனால், நள்ளிரவில் திருமணம் நடைபெற வேண்டும் என்று சிவபெருமானிடமும் பார்வதி தேவியிடமும் கூறினார் நாரதர். மேலும் கண்ணில்லா தேங்காய், காம்பில்லா மாங்காய், நரம்பில்லா வெற்றிலை, கணு இல்லா கரும்பு, இதழ் இல்லா மலர் ஆகியவற்றை திருமண சீராக வைக்க வேண்டும் என்று கூறினார்.

நாரதர் கூறிய நிபந்தனைகளை சிவபெருமான் ஏற்றுக் கொள்கிறார். அதன்படி ஒரு குறிப்பிட்ட நாளில், சீதனப் பொருட்களுடன் சுசீந்திரத்தில் இருந்து கன்னியாகுமரி புறப்பட்டார் சிவபெருமான். போகும்வழியில் 'வழுக்கம் பாறை' என்ற இடத்தை அடைந்தபோது, நாரதர் சேவல் உருவம் கொண்டு உரக்கக் கூவினார். பொழுது புலர்ந்துவிட்டது, நள்ளிரவு நேரம் கடந்துவிட்டது என்று நினைத்த சிவபெருமான், கன்னியாகுமரி செல்லாமல், சுசீந்திரம் திரும்பினார். பார்வதி தேவியும் கன்னியாகவே தவத்தைத் தொடர்ந்தார்.

திருமணத்துக்கு ஏற்பாடான உணவுகளும் சீதனப் பொருட்களும் மணலாக மாறின. அரிசி போன்ற வெண்மணலும், வெவ்வேறு வண்ண மணலும் குமரிக்கடல் துறையில் மிகுந்து கிடப்பதை இன்றும் காணலாம்.

இதனிடையே, கன்னிதேவியைப் பற்றி கேள்விப்பட்ட பாணாசுரன், தேவியை மணம்புரிய விரும்பினான். தேவி அதற்கு உடன்படாததால், தேவியை கவர்ந்து செல்ல முயன்றான். இதுதான் சமயம் என்று பார்வதி தேவி, தன் சக்கராயுதத்தால் பாணாசுரனை வீழ்த்தினார். மீண்டும் தன் தவத்தை தேவி தொடர்ந்தார்.

அன்னையின் தவக்கோலம்

கன்னியாகுமரி அம்மன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார் . இலுப்பைப் பூமாலையை ஒரு கரத்தில் தரித்து, மற்றொரு கரத்தை தன் தொடை மீது வைத்து தவக்கோல நாயகியாக காட்சி தருகிறர். அன்னையின் திருமுடி மீதுள்ள கீரிடத்தில் பிறைமதி அமைந்துள்ளது.

அன்னையின் மூக்குத்தி

பாணாசுரனை அழித்த பின்பு பகவதி அம்மன் மிகவும் உக்கிரமாக இருந்தார். சிவபெருமான் தன்னை மணக்காதது, பாணாசுரன் மீது இருந்த வெறுப்பு ஆகியவை சேர்ந்து மிகவும் கோபம் கொண்டு காணப்பட்டார் பகவதி அம்மன். தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அம்மன் தன் கோபத்தை ஒரு மூக்குத்தியில் இறக்கி, சாந்தமானார். அன்னையின் மூக்குத்தி யோகசக்தியாக கருதப்படுகிறது.

கன்னித் தீர்த்தம்

மகாபாரதம், மணிமேகலை, புறநானூறு, நாராயண உபநிடதம், கிருஷ்ண யஜூர் வேதம், சம்ஹித வைஷ்ணவ வேதம் முதலானவற்றில் அம்மன் வழிபாடு பற்றி கூறப்பட்டுள்ளது.

இக்கோவிலில் அமைந்துள்ள கன்னித் தீர்த்தம் மிகவும் சிறப்புடையது. 'குரங்கு செய்கடல் குமரியம் பெருந்துறை' என்று மணிமேகலை காப்பியம் உரைக்கிறது. சீதையை மீட்க ராமபிரான் கிளம்பியபோது, இலங்கைக்குச் செல்ல சேதுபாலம் அமைக்கும் பணிகள் தொடங்கின. இந்த சேதுபாலம் கன்னித் தீர்த்தத்தில் இருந்து தொடங்குவதாக கூறப்படுகிறது. அதனால் கன்னித் தீர்த்தம் ஆதிசேதுவாகவும் கருதப்படுகிறது. பாணாசுரனை அழிக்க கன்னிதேவி புறப்பட்ட இதே இடத்தில் இருந்து, ராவணனை அழிக்க ராமபிரான் புறப்பட்டுள்ளது சிறப்பு.

இத்தலத்தில் கன்னிகா பூஜை, சுயம்வர பூஜை செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். தீர்த்தக் கரையில் நீராடினால் பாவம் தொலைந்து புண்ணியம் கிடைக்கும். காசி போகிறவர்களுக்கு நற்கதி கிடைக்க கன்னியாகுமரிக்கு வர வேண்டும் என்று கூறப்படுவதுண்டு.

புரட்டாசி நவராத்திரி விழா 10 நாட்கள், வைகாசி விசாகத் திருவிழா 10 நாட்கள் இங்கு சிறப்பாக நடைபெறும்.

ஆலயத்துளிகள் இணைய தளத்தில், சென்ற ஆண்டு விஜயதசமியன்று

வெளியான பதிவு

திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மன்

https://www.alayathuligal.com/blog/z2lt7re82mmwkk8243hldf6pjnk396

Read More
சுப்பிரமணியர் கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

சுப்பிரமணியர் கோவில்

மும்மூர்த்திகளின் சொரூபமாக காட்சி தரும் முருகப்பெருமான்

கன்னியாகுமரியிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் ,சுசீந்திரத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள தலம் மருங்கூர் . இந்த முருகன் சிலையானது மயிலோடு சேர்த்து ஒரே கல்லினால் ஆனது என்பது சிறப்பாகும்.

இத்தலத்தில் முருகன் சுப்பிரமணியர் என்ற திருநாமத்தோடு மும்மூர்த்திகளின் அம்சமாய் வீற்றிருந்து அருள்புரிகிறார். ஐப்பசி மாதத்தில் சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் காலையில் முருகன் சிவப்பு வஸ்திரம் அணிந்து நடராஜராகவும், மதியம் வெள்ளை வஸ்திரம் அணிந்து பிரம்மாவாகவும், மாலையில் பச்சை வஸ்திரம் அணிந்து விஷ்ணு சொரூபமாகவும் காட்சி தருவது இத்தலத்தின் சிறப்பாகும்.

சாப விமோசனம் அருளும் தலம்

ஒரு சமயம் சாப விமோசனம் பெற இந்திரன் இத்தலத்திற்கு அருகில் உள்ள சுசீந்திரம் வந்து சிவனை வேண்டினான். சிவனும் அவனுக்கு காட்சி தந்து சாப விமோசனம் அளித்தார். அப்போது இந்திரனைச் சுமந்ததால், தனக்கும் பாவம் ஒட்டிக்கொண்டதாகக் கருதிய அவனது வாகனமான குதிரையும் சிவனிடம் விமோசனம் கேட்டது. சிவனோ குதிரையை மருங்கூர் தலத்திற்கு வந்து முருகனை வேண்டி சாப விமோசனம் அடையுமாறு பணித்தார். அதன்படி இங்கு வந்த குதிரையும் இங்கிருந்த குன்றின் மீது முருகனை வேண்டி தவமிருந்தது. முருகப்பெருமான் அதற்கு காட்சி தந்து விமோசனம் கொடுத்தருளினார். குதிரை வழிபட்ட தலம் என்பதால், இத்தல முருகன் விழாக்காலங்களில் மயிலுக்குப் பதிலாக குதிரையில் பவனி வருகிறார்.

இத்தலத்து முருகனை வழிபட்டால் அணைத்து பாவம் மற்றும் சாபங்களிலிருந்து விமோசனம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Read More