கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்

கன்னியாகுமரி அம்மன் தனக்கு கேட்டு வாங்கிய மூக்குத்தியும், புல்லாக்கும்

திருவிதாங்கூர் மகாராஜாவின் ஆட்சி காலத்தில், கன்னியாகுமரி பகுதியில் பனையேறி ஒருவன் இருந்தான். அவன் தனக்கு ஆண் வாரிசு வேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால் அவன் மனைவி ஒவ்வொரு முறை கருவுறும் போதும் அவனுக்கு பெண் குழந்தை மட்டுமே பிறந்து கொண்டு இருந்தது. ஒவ்வொரு முறையும் அவன் மனைவிக்கு பிரசவம் ஆனதும் அவன் முதல் மகள் தான் அவனிடம் வந்து குழந்தை பிறந்த செய்தியை சொல்லுவாள். இப்படியே அவனுக்கு 5 பெண் குழந்தைகள் பிறந்து விட்டன. இதனால் மனம் வருந்திய அவன் இனி நமக்கு பெண் குழந்தை பிறந்தது என்று நம் மகள் வந்து நம்மிடம் சொல்லும் போது நாம் பனையின் உச்சியில் இருந்தால் அப்படியே இரண்டு கைகளையும் மரத்தில் இருந்து விடுவித்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தான்.

இந்நிலையில் அவன் மனைவி 6வது முறையாக கருவுற்றாள். அப்போது வழக்கம் போல் அவனது முதல் பெண் ஓடி வந்து அப்பா அம்மாக்கு பிரசவம் ஆயிடுச்சு. தங்கை பிறந்துருக்கா என்று சொன்னாள். ஆனால் அந்த நேரம் இவன் பனையில் இருந்து கீழே இறங்கி இருந்தான். அதனால் அவனால் உடனே தற்கொலை செய்ய முடியவில்லை. 7வது முறையும் இவன் பனையில் இருந்து இறங்கிய பிறகே முதல் மகள் வந்து பெண் குழந்தை பிறந்திருக்கும் செய்தியை சொன்னாள். இந்நிலையில் அவன் மனைவி 8வது முறை கருவுற்றாள். இம்முறையும் அவன் பனையை விட்டு இறங்கிய பிறகே அவன் மூத்த மகள் வந்து 8வதாக பெண் பிறந்த செய்தியை சொல்ல, மனம் வெறுத்து போன அவன் இனி நாம் உயிர் வாழவே கூடாது என முடிவு செய்து அருகில் இருந்த பாம்பு புற்றில் தன் கையை விட்டான். பாம்பு கடித்து விடும், நாம் உயிரை விட்டு விடலாம் என்பது அவன் எண்ணம்.

ஆனால் அம்மனின் விருப்பம் வேறாக இருந்தது. அவன் புற்றின் உள்ளே கையை விட்டதும் கையில் ஏதோ சூடு பட்டது போல உணர்ந்தான். சூடு தாங்க முடியாமல் கையை வேகமாக வெளியே இழுத்து பார்க்கும் போது அவன் கையில் ஏதோ ஒன்று தக தகவென மின்னியது. புற்றில் இருந்த முதிர்ந்த நாகம் அவன் கையில் நாகரத்தினத்தை உமிழ்ந்து இருந்தது. அது என்னவென்று அறியாத அவன் அதனை உடனே அரண்மனைக்கு கொண்டு சென்றான். அதை மகாராஜாவிடம் கொடுத்தான். உடனே அதை பெற்று கொண்ட மகாராஜா அவரது குதிரையை அவிழ்த்து விட்டு, அது எவ்வளவு தூரம் ஓடுகிறதோ அவ்வளவு இடத்தையும் அவன் பெயரில் எழுதி வைக்க சொன்னார். அவனும் மகிழ்ச்சியோடு அதை பெற்று கொண்டு வீட்டுக்கு சென்றான்.

அன்றிரவு மன்னரின் கனவில் ஒரு சின்னஞ்சிறு பெண் வந்து மன்னா ! இன்று காலை அரண்மனை தர்பாரில் உன்னிடம் ஒருவன் நாகரத்தினம் கொண்டு வந்து தந்தானே! அந்த நாகரத்தினத்தில் எனக்கு ஒரு மூக்குத்தியும், புல்லாக்கும் செய்து தர கூடாதா? என்று கேட்டு விட்டு மறைந்து விட்டாள். திருவிதாங்கூர் மன்னர் மறுநாள் காலையில் நம்பூதிரிகளை வரவழைத்து தான் இரவு கண்ட கனவை கூறி அந்த சிறு பெண் யார் என பிரசன்னம் வைத்து கண்டு பிடிக்கும் படி கூறினார். நம்பூதிரிகள் பிரசன்னம் வைத்து பார்க்கும் போது அது வேறு யாரும் அல்ல கன்னியாகுமரி பகவதி அம்மன் தான் என்பது தெரிய வந்தது.

நம்பூதிரிகள் கூறியதை கேட்ட மன்னர் உடனடியாக தேவி கன்னியாகுமரி பகவதிக்கு நாகரத்தினத்தில் மூக்குத்தியும், புல்லாக்கும் செய்து கொடுத்தார். அது தான் இன்றும் அன்னை அணிந்து கொண்டு இருக்கிறாள். நாகரத்தினம் என்பதால் அது தக தகவென ஜொலிக்கும். கப்பலோட்டிகள் அம்பாளின் மூக்குத்தி வெளிச்சத்தை கலங்கரை விளக்க ஒளி என்று எண்ணியதால், கப்பல் திசை மாறி வந்த காரணத்தால் கோவிலின் கிழக்கு வாசல் அடைக்கப்பட்டு தெற்கு வாசல் வழியாக சென்று தான் தேவியை தரிசனம் செய்ய முடியும்.

Read More
கன்னியாகுமரி  பகவதி  அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்

கன்னியாகுமரி பகவதி அம்மன்

இந்தியாவின் தென்கோடி முனையில், முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில். அம்மனின் 51 சக்தி பீடங்களில், இது சேது சக்தி (குமரி சக்தி) பீடம் ஆகும்.. இந்த அம்மனுக்கு துர்க்கை, பகவதி என்னும் பெயர்களும் உண்டு. பரசுராமர் பிரதிஷ்டை செய்த ஆலயங்களில், கன்னியாகுமரியும் ஒன்று என்பது ஐதிகம். பாணாசுரன் எனும் அசுரனை அழித்த தேவி இங்கே குமரியாக நிலை கொண்டாள். அம்பிகையின் தோழிகளான தியாகசுந்தரி, பாலசுந்தரி இருவரும் ஆலயத்தில் தனிச் சந்நதி கொண்டருள்கின்றனர். தேவியின் மூக்கில் ஜாஜ்வல்யமாக ஜொலிக்கும் மூக்குத்தி, நாகரத்தினத்தால் ஆனது.

தாணுமாலயனுக்கும் தேவிக்கும் நடக்க இருந்த திருமணம் நாரதரின் கலகத்தால் நின்றது. திருமணத்திற்குத் தயாரிக்கப்பட்ட உணவுகள் யாவும் வகை வகையான மணலாக மாறின. அதன் சான்றாகவே, இன்றும், குமரி கடற்கரையில் அரிசி போன்ற வெண் சிறுமணலையும், பலவண்ண மணல்களையும் காணலாம்.

இந்தத் தலத்துக்குத்தான் ராமர் முதலில் வந்து வணங்கி,சீதையை மீட்க இங்கிருந்து இலங்கைக்கு பாலம் அமைக்க முயன்றார். அதன்பின் தேவியின் உத்தரவின்பேரில் வானரசேனையோடு ராமேசுவரம் சென்று அங்கு பாலம் அமைத்தார் என்கிறது தலவரலாறு.

இத்தலத்தில் கன்னிகா பூஜை, சுயம்வர பூஜை ஆகியவை செய்தால் திருமணம் விரைவில் கைகூடும். இந்த ஆலயத்துக்கு வந்து கன்னிப்பெண்கள் வேண்டிக்கொண்டால் விரும்பியபடி கணவன் அமைவான் என்பது நம்பிக்கை. காசிக்குச் சென்று புண்ணிய தீர்த்தத்தில் நீராடுவதற்கு முன்பு கன்னியாகுமரியில் இருக்கும் முக்கூடல் சங்கமிக்கும் இந்த தீர்த்தத்தில் நீராடுவதால் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம்.

Read More
கன்னியாகுமரி  குகநாதீசுவரர் கோவில்

கன்னியாகுமரி குகநாதீசுவரர் கோவில்

முருகன் தோஷம் நீங்க சிவனை வழிபட்ட தலம்

கன்னியாகுமரி ரயில் நிலயத்திற்கு அருகில், பகவதி அம்மன் கோவிலில் இருந்து சுமார் ஒரு கி.மீ.தொலைவில் இருக்கிறது குகநாதீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் பார்வதி. இவர் கோனாண்டேசுவரன் என்றும், குகனாண்டேசுவரன் என்றும் அழைக்கப்படுகிறார். ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது குகநாதீசுவரர் கோவில். தஞ்சை பெரிய கோவிலைக் கட்டுவதற்கு முன்பாகவே, சோழப் பேரரசன் ராஜராஜ சோழன் இந்தக் கோவிலைக் கட்டியுள்ளார்.

முருகப் பெருமான் தன் அன்னை பார்வதியின் வழிகாட்டல்படி, தனது தோஷம் நீங்குவதற்காக இங்கே சிவலிங்கத்தை உருவாக்கி வழிபட்டார் என்று தல வரலாறு கூறுகின்றது.இங்கு, குகன் என்ற முருகக்கடவுள், ஈசுவரன் என்ற சிவனை வழிபட்டதால், இந்தக் கோவிலுக்கு குகநாதீசுவரர் கோயில் என்று பெயர்க் காரணம் கூறுகின்றனர். இந்த கோவிலில் மூலவர் குகநாதீசுவரர் 5 அடி உயரத்துடன் கிழக்கு நோக்கி லிங்க வடிவில் அருள் பாலிக்கிறார். இந்த சிவலிங்கம், குமரி மாவட்டத்திலேயே மிகப் பெரிய சிலையாகும்.

பிரார்த்தனை

இந்த கோவிலில் 11 திங்கட்கிழமை தொடர்ந்து வந்து, முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நீராடி, கோவிலின் கருவறை தீபத்திற்கு பசுநெய் வழங்கி வழிபட்டால் குரு சாபம், மாத்ரு சாபம், பித்ரு சாபம், சுமங்கலி சாபம் மற்றும் முதியவர்களை மதிக்காததால் வரும் தோஷம் ஆகியவை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
பகவதி அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

பகவதி அம்மன் கோவில்

தேவி கன்னியாகுமரி

இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா ஆகிய முக்கடல் சங்கமிக்கும் இடத்தில், இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது பகவதியம்மன் கோவில். இக்கோவில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பரசுராமரால் கட்டப்பட்டதாகும். தேவியின் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக, தேவியின் முதுகுப் பகுதி விழுந்த இடமாக கருதப்படுகிறது. அம்மனின் சக்தி பீடங்களில் இது குமரி சக்தி பீடம் ஆகும். இத்தலத்தில் குமரி அம்மன் கன்னிப்பெண் வடிவத்தில் அருள்பாலிக்கிறார்.

தல வரலாறு

முன்னொரு காலத்தில் அசுரர் தலைவனான பாணாசுரன் என்பவன் தேவர்களுக்கும் ,முனிவர்களுக்கும் தொல்லை கொடுத்து வந்தான். அப்போது தேவர்கள், பாணாசுரனுக்கு முடிவுகட்ட வேண்டும் என்று திருமாலிடம் விண்ணப்பித்தனர். திருமாலும் பாணாசுரன் பெற்ற வரத்தின்படி, அவனை கன்னிப்பெண் ஒருவரால் மட்டுமே அழிக்க முடியும். என்றார். அதனால் பார்வதி தேவியிடம் உங்கள் வேண்டுதலை சமர்ப்பியுங்கள் என்று அறிவுறுத்தினார். அதன்படி தேவர்கள், பாணாசுரனை அழிப்பதற்காக பார்வதி தேவியை வணங்கி ஒரு பெரிய வேள்வி செய்தனர். வேள்வியால் மகிழ்ந்த பார்வதி தேவி, தேவர்கள் முன்பாக தோன்றி, பாணாசுரனை அழிப்பதாக உறுதி அளிக்கிறார்.

அதற்காக கன்னியாகுமரி வந்தடைந்த பார்வதி தேவி, அங்கு கடும்தவம் புரிந்தார். சிறிய பெண்ணாக இருந்த கன்னிதேவி, மணப்பருவம் அடைந்ததும், சுசீந்திரத்தில் கோயில் கொண்ட சிவபெருமான் (தாணுமாலவர்), அவரை மணமுடிக்க எண்ணினார். சிவபெருமான் தனது விருப்பத்தை தேவர்களிடம் கூறினார்.

சிவபெருமானுக்கும் கன்னிதேவிக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், ஒரு கன்னிப்பெண்ணால்தான் பாணாசுரனுக்கு அழிவு ஏற்படும் என்பதால், நாரத முனிவர் சற்று யோசித்தார். தேவர்களும், பாணாசுரனை வீழ்த்த வேண்டும் என்றால், அன்னையின் தவம் கெடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நாரதரிடம் கூறினர். அதன்படி நாரதர், சிவபெருமான் – பார்வதி தேவியின் திருமணத்தை தடுத்து நிறுத்த எண்ணினார். அதேநேரத்தில், சிவபெருமானின் எண்ணத்தை மறுத்துரைக்காதபடி செயல்பட வேண்டும் என்பதையும் நினைவில் கொண்டார்.

அதனால், நள்ளிரவில் திருமணம் நடைபெற வேண்டும் என்று சிவபெருமானிடமும் பார்வதி தேவியிடமும் கூறினார் நாரதர். மேலும் கண்ணில்லா தேங்காய், காம்பில்லா மாங்காய், நரம்பில்லா வெற்றிலை, கணு இல்லா கரும்பு, இதழ் இல்லா மலர் ஆகியவற்றை திருமண சீராக வைக்க வேண்டும் என்று கூறினார்.

நாரதர் கூறிய நிபந்தனைகளை சிவபெருமான் ஏற்றுக் கொள்கிறார். அதன்படி ஒரு குறிப்பிட்ட நாளில், சீதனப் பொருட்களுடன் சுசீந்திரத்தில் இருந்து கன்னியாகுமரி புறப்பட்டார் சிவபெருமான். போகும்வழியில் 'வழுக்கம் பாறை' என்ற இடத்தை அடைந்தபோது, நாரதர் சேவல் உருவம் கொண்டு உரக்கக் கூவினார். பொழுது புலர்ந்துவிட்டது, நள்ளிரவு நேரம் கடந்துவிட்டது என்று நினைத்த சிவபெருமான், கன்னியாகுமரி செல்லாமல், சுசீந்திரம் திரும்பினார். பார்வதி தேவியும் கன்னியாகவே தவத்தைத் தொடர்ந்தார்.

திருமணத்துக்கு ஏற்பாடான உணவுகளும் சீதனப் பொருட்களும் மணலாக மாறின. அரிசி போன்ற வெண்மணலும், வெவ்வேறு வண்ண மணலும் குமரிக்கடல் துறையில் மிகுந்து கிடப்பதை இன்றும் காணலாம்.

இதனிடையே, கன்னிதேவியைப் பற்றி கேள்விப்பட்ட பாணாசுரன், தேவியை மணம்புரிய விரும்பினான். தேவி அதற்கு உடன்படாததால், தேவியை கவர்ந்து செல்ல முயன்றான். இதுதான் சமயம் என்று பார்வதி தேவி, தன் சக்கராயுதத்தால் பாணாசுரனை வீழ்த்தினார். மீண்டும் தன் தவத்தை தேவி தொடர்ந்தார்.

அன்னையின் தவக்கோலம்

கன்னியாகுமரி அம்மன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார் . இலுப்பைப் பூமாலையை ஒரு கரத்தில் தரித்து, மற்றொரு கரத்தை தன் தொடை மீது வைத்து தவக்கோல நாயகியாக காட்சி தருகிறர். அன்னையின் திருமுடி மீதுள்ள கீரிடத்தில் பிறைமதி அமைந்துள்ளது.

அன்னையின் மூக்குத்தி

பாணாசுரனை அழித்த பின்பு பகவதி அம்மன் மிகவும் உக்கிரமாக இருந்தார். சிவபெருமான் தன்னை மணக்காதது, பாணாசுரன் மீது இருந்த வெறுப்பு ஆகியவை சேர்ந்து மிகவும் கோபம் கொண்டு காணப்பட்டார் பகவதி அம்மன். தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அம்மன் தன் கோபத்தை ஒரு மூக்குத்தியில் இறக்கி, சாந்தமானார். அன்னையின் மூக்குத்தி யோகசக்தியாக கருதப்படுகிறது.

கன்னித் தீர்த்தம்

மகாபாரதம், மணிமேகலை, புறநானூறு, நாராயண உபநிடதம், கிருஷ்ண யஜூர் வேதம், சம்ஹித வைஷ்ணவ வேதம் முதலானவற்றில் அம்மன் வழிபாடு பற்றி கூறப்பட்டுள்ளது.

இக்கோவிலில் அமைந்துள்ள கன்னித் தீர்த்தம் மிகவும் சிறப்புடையது. 'குரங்கு செய்கடல் குமரியம் பெருந்துறை' என்று மணிமேகலை காப்பியம் உரைக்கிறது. சீதையை மீட்க ராமபிரான் கிளம்பியபோது, இலங்கைக்குச் செல்ல சேதுபாலம் அமைக்கும் பணிகள் தொடங்கின. இந்த சேதுபாலம் கன்னித் தீர்த்தத்தில் இருந்து தொடங்குவதாக கூறப்படுகிறது. அதனால் கன்னித் தீர்த்தம் ஆதிசேதுவாகவும் கருதப்படுகிறது. பாணாசுரனை அழிக்க கன்னிதேவி புறப்பட்ட இதே இடத்தில் இருந்து, ராவணனை அழிக்க ராமபிரான் புறப்பட்டுள்ளது சிறப்பு.

இத்தலத்தில் கன்னிகா பூஜை, சுயம்வர பூஜை செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். தீர்த்தக் கரையில் நீராடினால் பாவம் தொலைந்து புண்ணியம் கிடைக்கும். காசி போகிறவர்களுக்கு நற்கதி கிடைக்க கன்னியாகுமரிக்கு வர வேண்டும் என்று கூறப்படுவதுண்டு.

புரட்டாசி நவராத்திரி விழா 10 நாட்கள், வைகாசி விசாகத் திருவிழா 10 நாட்கள் இங்கு சிறப்பாக நடைபெறும்.

ஆலயத்துளிகள் இணைய தளத்தில், சென்ற ஆண்டு விஜயதசமியன்று

வெளியான பதிவு

திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மன்

https://www.alayathuligal.com/blog/z2lt7re82mmwkk8243hldf6pjnk396

Read More
மகாதேவர் கோயில்
விநாயகர், vinayakar Alaya Thuligal விநாயகர், vinayakar Alaya Thuligal

மகாதேவர் கோயில்

நிறம் மாறும் அதிசய விநாயகர்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகிலுள்ள கேரளபுரத்தில், சிவபெருமானுக்கு கோவில் உள்ளது. இங்கு அரச மரத்தடியில் நிறம் மாறும் அதிசய விநாயகர் இருக்கிறார, ஆவணி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் வெள்ளை நிறமாகவும், மாசி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் கறுப்பாகவும் மாறி விடுகிறார். சந்திர காந்தக் கல்லால் உருவாக்கப்பட்ட இந்தச் சிலைக்கு இப்படி ஒரு சக்தி இருக்கிறது. இவர் நிறம் மாறுவதற்கேற்ப அங்குள்ள அரச மரமும் கிணற்று நீரும் நிறம் மாறும் அதிசயம் நிகழ்கிறது. இந்த விநாயகர் வெள்ளை நிறத்தில் உள்ள போது, இங்குள்ள கிணற்று நீர் கருப்பு நிறமாக மாறுகிறது. விநாயகர் கருப்பு நிறமாக மாறும் போது, கிணற்று நீர் நுரை நுரையாக பொங்கி வெண்மையாக மாறி விடுகிறது. இந்த காலகட்டத்தில் இந்த கிணற்றில் தரையை தெளிவாக பார்க்க முடியும்.

Read More