சிதம்பரம் வெள்ளந்தாங்கி அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

சிதம்பரம் வெள்ளந்தாங்கி அம்மன் கோவில்

யானையின் துதிக்கையில் அரவணைத்து இருக்கும் வெள்ளந்தாங்கி அம்மன்

சிதம்பரம் நடராசர் கோயிலைச் சுற்றி நான்கு திசைகளிலும் அமைந்துள்ள நான்கு காவல் தெய்வங்கள் எழுந்தருளி இருக்கிறார்கள். அவர்களில் தெற்கு திசையில் அமைந்துள்ள காவல் தெய்வம் வெள்ளந்தாங்கி அம்மன் ஆவார். சிதம்பரம் சபாநாயகர் தெருவில் இக் கோவில் அமைந்துள்ளது. இது ஒரு சிறிய கோயிலாகும். கருவறையில் வெள்ளந்தாங்கி அம்மன் மேற்கு நோக்கி உள்ளார். யானையின் துதிக்கையில் அரவணைத்து இருப்பதுபோல் அம்மனின் உருவம் உள்ளது. கருறையில் அம்மனின் வலப்பக்கம் சிவலிங்கமும், இடப்பக்கம் சபரி சாஸ்தாவும் உள்ளனர்.

அம்மனுக்கு வெள்ளந்தாங்கி அம்மன் என்ற பெயர் வந்த கதை

சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெய்த ஒரு பெருமழையில் சிதம்பரம் நகரம் பெரும் வெள்ளக்காடாக ஆனது. அப்போது ஒரு பெண் வெள்ளத்தில் நீந்தி வந்தாள். அவளை நோக்கியபடி யானை ஒன்று பிளிறியபடி சென்றது. அது அப்பெண்ணை தன் துதிக்கையால் தூக்கிச் சென்று தில்லை நடராசர் கோயிலின் தெற்குப் பகுதியில் விட்டுச் சென்றது. ஊர் மக்கள் அங்கு சென்று பார்த்தபோது அப்பெண் அங்கு இல்லை. ஆனால் யானையின் துதிக்கையில் ஒரு பெண் இருப்பது போன்ற சிலை ஒன்று இருந்தது. வெள்ளம் வடிந்த பிறகு ஊர் மக்கள் தில்லை அந்தணர்களிடம் நடந்த விசயத்தைக் கூறினர். அவர்களின் ஆலோசனையின்படி அச் சிலையை அங்கேயே பிரதிட்டை செய்து வெள்ளந்தாங்கி அம்மன் என்ற பெயரைச் சூட்டி வழிபடத் தொடங்கினர்.

இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களைக் காத்த வெள்ளந்தாங்கி அம்மனை விவசாயம் செய்யும் அனைவருமே பயபக்தியோடு வந்து தாங்கள் விதைக்கப் போகும் விதையை இங்கு வைத்து பூஜை செய்துவிட்டு பிறகுதான் அதை விதைக்கிறார்கள். அப்படிச் செய்வதால் இயற்கைப் பேரிடர்களில் இருந்து விவசாயத்தையும், தங்களையும் அம்மன் அரவணைத்து காப்பாற்றுவாள் என்று நம்புகிறார்கள்.

Read More
ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில்

நம் முன்னோர்களின் சிற்பத் திறனுக்கும், பொறியியல் வல்லமைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் கோவில்

ஸ்ரீமுஷ்ணம், கடலூர் மாவட்டத்தில், விருத்தாசலத்தில் இருந்து 24 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. பெருமாள் திருநாமம் பூவராகப் பெருமாள். தாயார் திருநாமம் அம்புஜவல்லி. பெருமாள் தானாகவே, விக்கிரக வடிவில் தோன்றிய எட்டு ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்களில் ஒன்று இத்தலம்.

பல நூறு ஆண்டுகள் பழமையான கோவில் இது. இக்கோவிலில் சிறந்த சிற்ப வேலைகள் கொண்ட புருஷசூக்த மண்டபம் எனப்படும் பதினாறு கால் மண்டபம் உள்ளது. சிற்ப அழகு மிளிரும் நல்ல நுணுக்க வேலைப்பாடுகள் நிறைந்த தூண்கள் இம்மண்டபத்தைத் தாங்கி நிற்கின்றன. 72 பரதநாட்டிய நிலைகளுக்கான சிற்பங்கள் நுழைவு வாயில் மற்றும் கோவில் வளாகத்தின் பிற இடங்களில் கற்களில் செதுக்கப்பட்டுள்ளன. தூண்களில் காணப்படும் பெண்களின் நீளமாகப் பின்னலிட்ட ஜடையும், ராக்கொடி, ஜடை பில்லை, குஞ்சலம் போன்ற அலங்கார அணிகலன்களின் அழகும், நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகளும் நம்மை பிரம்மிக்க வைக்கும். நம் முன்னோர்களின் சிற்பத் திறனுக்கும், பொறியியல் வல்லமைக்கும் இக்கோவில் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.

Read More
சிவபுரி உச்சிநாதர் கோவில்

சிவபுரி உச்சிநாதர் கோவில்

குழந்தைகளுக்கு முதன் முறையாக சோறு ஊட்டப்படும் தேவாரத்தலம்

சிதம்பரத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் தேவாரத்தலம் சிவபுரி உச்சிநாதர் கோவில். இறைவியின் திருநாமம் கனகாம்பிகை என்ற உச்சிநாயகி. ஒரு காலத்தில் நெல் வயல்கள் சூழ்ந்து இருந்ததால் இத்தலத்திற்கு திருநெல்வேலியில் என்ற பெயரும் உண்டு. அகத்திய முனிவருக்கு திருமண கோலத்தில் காட்சி அளித்த தலம் என்பதால் கருவறையில் சிவனும் பார்வதியும் திருமண கோலத்தில் எழுந்தருளி இருக்கிறார்கள்.

இத்தல இறைவனுக்கு மத்யானேஸ்வரர் என்ற திருநாமமும் உண்டு. அதன் பின்னணியில் ஒரு சுவையான நிகழ்ச்சி உள்ளது. தேவாரம் பாடிய மூவரில் ஒருவரான ஞானக்குழந்தை திருஞானசம்பந்தருக்கு 12 வயதில் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. திருமணம் சீர்காழிக்கு அருகில் இருந்த ஆச்சாள்புரத்தில் நடைபெற இருந்தது. அப்போது திருமண ஏற்பாடுகளுக்காக, திருஞானசம்பந்தரும் அவரது உறவினர்களும் ஒரு குழுவாக ஆச்சள்புரம் நோக்கி புறப்பட்டு வந்தனர். அப்போது நல்ல மதிய வேளை. சம்பந்தரின் திருமணத்திற்கு வந்தவர்கள் பசியில் இருக்கிறார்கள் என்பதை அறிந்த சிவபெருமான், கோவில் பணியாளர் வடிவில் வந்து, வந்திருந்த அனைவருக்கும் உணவளித்தார்.

திருஞானசம்பந்தர் சிறு குழந்தையாக இருந்தபோது பார்வதிதேவி ஞானப்பால் ஊட்டினார். அவரது திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு சிவபெருமான் மதிய உணவு படைத்தார். வந்து உணவளித்தது இறைவன் தான் என்பதை அறிந்த சம்பந்தர், மதிய வேளையில் தோன்றியதால் உச்சிநாதர் என்று அழைத்து போற்றினார். அதனாலேயே இக்கோவில் மூலவருக்கு உச்சிநாதர், மத்தியானேஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது.

இதனால், இந்த கோவிலில் குழந்தைகளுக்கு முதன் முறையாக சோறு ஊட்டும் வைபவம் நடைபெறுவது விஷேசமாக கருதப்படுகிறது. பல்வேறு இடங்களில் இருந்தும் இங்கு வந்து குழந்தைக்கு முதல் உணவு ஊட்டுகின்றனர். இக்கோவிலில், குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டினால், காலம் முழுமைக்கும் அந்தக் குழந்தையின் வாழ்வில் உணவுப் பிரச்னை வராது என்ற நம்பிக்கை இருக்கிறது.

திருமணம் விரைவில் கைகூட இங்கு வழிபடுகிறார்கள்.

Read More
காட்டுமன்னார்கோவில் அனந்தீஸ்வரர் கோவில்

காட்டுமன்னார்கோவில் அனந்தீஸ்வரர் கோவில்

காலசர்ப்ப தோஷம் நீங்க தரப்படும் தீர்த்தப் பிரசாதம்

சிதம்பரத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள காட்டுமன்னார்கோவிலில் அமைந்துள்ளது அனந்தீஸ்வரர் கோவில் . இறைவியின் திருநாமம் சவுந்தரநாயகி. இக்கோவிலில் உள்ள சோமாஸ்கந்தர் தன் கையில் பாம்பை பிடித்தபடி காட்சி அளிக்கிறார். இத்தலத்து இறைவனை அஷ்டநாகங்களும், அதன் தலைவனான அனந்தனின் தலைமையில் வழிபட்டு பேறு பெற்றுள்ளன. அதனால் தான் இத்தல இறைவனுக்கு அனந்தீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது. எனவே இத்தல இறைவனை வழிபட்டால், ராகு-கேது தோஷம், காலசர்ப்ப தோஷம், நாகதோஷம் ஆகியவை நீங்கும். காலசர்ப்ப தோஷம் நீங்க அனந்தீஸ்வரருக்கும். அம்பாள் சவந்தரநாயகிக்கும் அபிஷேகம் செய்து தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது. இது இயலாதவர்கள் வெள்ளியிலோ, பிற உலோகங்களாலே ஆன நாக வடிவிலான உருவங்களை காணிக்கை செலுத்தலாம்.

தீராத நோயால் அவதிப்படுபவர்களும், அறுவை சிகிச்சை செய்ய இருப்பவர்களும் சுவாமி, அம்பாளிடம் வேண்டிக் கொண்டால் குணம ஆவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவிலில் வரவாற்று சிறப்பு மிக்க கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ஆதித்த கரிகாலன் கொலையுண்ட வரலாறு உள்ளிட்ட தகவல்கள் இதில் உள்ளன.

Read More
நல்லாத்தூர் பொன்னம்பலநாதர் கோவில்

நல்லாத்தூர் பொன்னம்பலநாதர் கோவில்

சாளரத்தின் வழியாக மட்டுமே தரிசனம் தரும் சிவபெருமான்

கடலூர் மாவட்டம் நல்லாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது பொன்னம்பலநாதர் என்கிற சொர்ணபுரீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம். இக்கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சாளரக் கோவில் வகையைச் சேர்ந்தது. இத்தகைய கோவில்களில் கருவறைக்கு எதிரில் வாசல் கிடையாது. மூலவரை பலகணி என்னும் கருங்கல் ஜன்னல் (சாளரம்) வழியாகத்தான் தரிசிக்க முடியும். சாளர சக்கரத்திற்கு கீழ் 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், 9 கிரகங்கள் உள்ளடக்கிய சர்ப்ப யந்திரம் உள்ளது. துவாரபாலகர்களை எந்த ஒரு கோவிலிலும் வலம் வர முடியாது. ஆனால், இங்கே வலம் வரலாம். மகாமண்டபமான சொக்கட்டான் மண்டபத்தில் 24 இதழ்களுடன் கூடிய மூன்றடுக்கு தாமரை கவிழ்ந்த நிலையில் அமைந்திருப்பது சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றது.

பலகணி வழியாகப் பார்க்கின்ற சிவலிங்கங்கள், அக்னியின் சொரூபம் என்று சொல்லப்படுகிறது. இவரை நேரடியாக தரிசிப்பதற்கான உடல் வலிமை பக்தனுக்கு இருக்காது. எனவே பலகணி வழியாக வழிபாடு செய்தால், அவரவர் உடல் நிலைக்கு தகுந்தாற் போல் தீக்கதிர்கள் இறைவனிடமிருந்து வெளிப்பட்டு உடல் பலமும் மனபலமும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

ஆங்கிலேய கலெக்டர், தன் மகளுக்கு கண்பார்வை கிடைத்ததற்கு, காணிக்கையாக கொடுத்த ஆலயமணி

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், 120 ஆண்டுகளுக்கு முன்னர், கடலூர் (அப்போதை தென்னாற்காடு மாவட்டம்) கலெக்டராக பணிபுரிந்தவர் பகோடா என்பவர். அவரது மகள் கண்பார்வையற்று இருந்தார். இவ்வாலயத்தில் தரிசனம் செய்ததால் அந்த சிறுமிக்கு கண்பார்வை கிடைத்தது. இதனால் மகிழ்ந்த ஆங்கிலேய கலெக்டர் பகோடா நஞ்சை நிலங்களை ஆலயத்திற்கு வழங்கினார். பின்னர் இங்கிலாந்து நாட்டில் உருவாக்கப்பட்ட அற்புத ஓசையுடன் கூடிய ஆலயமணியை 1907ம் ஆண்டு இந்த கோவிலுக்கு வழங்கினார். இந்த மணியின் ஓசை குறைந்தது 3 கி.மீ தொலைக்கு கேட்கும் என்பது கூடுதல் சிறப்பு.

பிரார்த்தனை

இத்தலத்தில் 5 நிமிடம் வழிபாடு செய்தால் பல்லாண்டு வழிபட்ட பலன் கிடைக்கும். சுவாசம் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தட்சிணாயண (ஆடி), உத்ராயண (தை) புண்ய காலங்களில் சூரியனுக்குரிய ஆரஞ்சு நிற ஆடை, கோதுமை வகை உணவுகளை தானமாக கொடுத்து வழிபடுவது நல்ல பலன் தரும். பிதுர் தோஷத்திற்கான பரிகார தலம் இது.

Read More
சிதம்பரம் நடராஜர் கோவில்

சிதம்பரம் நடராஜர் கோவில்

ஆருத்ரா தரிசனத்தின் சிறப்புகள்

மார்கழி மாதம் பௌர்ணமியோடு, திருவாதிரை நட்சத்திரம் கூடி வரும் நாளன்று  'ஆருத்ரா தரிசனம்' திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மார்கழி  திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும். ஆருத்ரா தரிசனம் கண்டால், எல்லா பாவங்களும் நீங்கி, நீங்கா புண்ணியம் பெற்றிடலாம்.

 

ஆருத்ரா தரிசனம் பற்றி புராணத்தில் கூறப்பட்ட சிறப்புகள்

ஆருத்ரா தரிசனம் அன்றுதான் பார்வதி தேவியின் தவத்தில் மகிழ்ந்து அவரை மணக்க சிவபெருமான் சம்மதம் கூறிய நாளாகக் கருதி, இன்றும் கன்னிப்பெண்கள் தங்களுக்கும் நல்ல கணவன் கிடைக்க வேண்டி நோன்பை அனுஷ்டிக்கிறார்கள்.

ஆருத்ரா தரிசனம் அன்றுதான் சிவபெருமான் தேவலோகப் பசுவான காமதேனுவுக்கு  தரிசனம் தந்து அருள்புரிந்ததாக ஐதீகம்.

பதஞ்சலி முனிவரும் வியாகரபாதரும் சிதம்பரம் திருத்தலத்தில் திருவாதிரை நாளில் திருநடனத்தைக் கண்டனர்.

ஆருத்ரா தரிசனம் அன்றுதான் மாணிக்கவாசகரின் திருவெம்பாவை நிறைவுற்று அவர் ஈசனை தரிசித்தார்.

திருவாதிரைக்களியின் பின்னணி வரலாறு

திருவாதிரை அன்று நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும். இந்த திருநாளில்  சிதம்பரத்திற்குச் சென்று நடராஜப் பெருமானை  தரிசிப்பது விசேஷமாகும்.  திருவாதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப்படுகிறது. இதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது.

காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்து வந்த பட்டினத்தாரிடம் கணக்கு பிள்ளை, சேந்தனார் என்பவர். பட்டினத்தார் துறவறம்ஏற்றதும், அவரிடம் இருந்த சொத்துக்களை சேந்தனார் சூறைவிட்டார். இதை அறிந்த சோழ மன்னர், சேந்தனாரை சிறையிலடைத்தார். அதைக் கேள்விப்பட்ட பட்டினத்தார் சேந்தனாரை சிறையிலிருந்து விடுவிக்க சிவபெருமானிடம் வேண்டினார். உடனே சிறைக்கதவுகள் திறந்து சேந்தனார் விடுதலை பெற்றார்.

சிறையிலிருந்து விடுபட்ட சேந்தனார், சிதம்பரத்திற்கு வந்து அங்கு விறகு வெட்டி விற்று வாழ்க்கை நடத்தி வந்தார். அந்த வருவாயில் தினமும் ஒரு சிவனடியாருக்காவது ஒரு வேளை உணவளித்த பின்பே, தான் உண்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இப்படி இருக்கையில், சேந்தனாரின் பக்தியை சோதிக்க எண்ணினார் சிவபெருமான். ஒரு நாள் அளவுக்கதிகமாக மழை பெய்து விறகுகளை அனைத்தும் ஈரமாகியது. விறகுகள் ஈரமானதால், அதை வாங்குவதற்கும் யாரும் முன்வரவில்லை. இதனால் அன்றைய உணவுக்கு அரிசி வாங்குவதற்கு கூட கையில் பொருள் இல்லை.  இதனால், வீட்டிலிருந்த கேழ்வரகில் களி செய்து சிவனடியாருக்காக காத்திருந்தார். நேரம் சென்றதே தவிர, சிவனடியார் யாரும் வருவதாக தெரியவில்லை.

சேந்தனாரின் பக்தியை உலகுக்கு வெளிப்படுத்த விரும்பிய சிவபெருமான், ஒரு சிவனடியார் வேடத்தில் நள்ளிரவு வேளையில் சேந்தானரின் வீட்டுக் கதவை தட்டினார்.   வந்திருப்பது சிவனடியார் என்பதை அறிந்து அகமகிழ்ந்து சேந்தனார், அவருக்கு கேழ்வரகு களியை விருந்தாக படைத்தார். சிவனடியாரும் அந்த களியை மிக்க மகிழ்ச்சியோடு உண்டதோடு, எஞ்சியிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவுக்கு தருமாறு கேட்டு வாங்கிச் சென்றார்.

இந்நிலையில், சோழ மன்னர் கண்டராதித்தர், தினசரி இரவு செய்யும் சிவபூஜையில் சிவபெருமானின் திருப்பாதச் சலங்கை ஒலி கேட்பது வழக்கம். ஆனால், அன்றிரவு, சேந்தனாரின் வீட்டுக்கு களி உண்ணச் சென்றதால் கண்டராதித்த சோழரின் சிவபூஜையில் நடராஜரின் திருப்பாதச் சலங்கை ஒலி கேட்கவில்லை. இதனால் மனம் நொந்த மன்னர், தன்னுடைய சிவ வழிபாட்டில் ஏதேனும் குறை இருக்குமோ என்று கலங்கியவாரு தூங்கச் சென்றார். கண்டராதித்த சோழ மன்னரின் கனவில் வந்த நடராஜ பெருமான், மன்னா! வருந்த வேண்டாம், இன்றிரவு யாம் சேந்தனாரது இல்லத்திற்கு களி உண்ணச் சென்றொம், அதனால் தான் உன்னுடைய சிவபூஜையில் சிலம்பு ஒலிக்கவில்லை. நாளைய தேர்த் திருவிழாவில் அந்த சேந்தனாரை நீ காண்பாயாக, என்று சொல்லிவிட்டு சென்றார்.

மறுநாள் காலையில் வழக்கம்போல், தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் நடராஜர் கோவில் கருவறையைத் திறந்தனர். அங்கு நடராஜப் பெருமானை சுற்றிலும் களிச் சிதறல்கள் இருந்தன. இந்த செய்தியை உடனடியாக அரசருக்கு தெரியப்படுத்தினர். அரசரும் முதல் நாளிரவு தான் கண்ட கனவை எண்ணி மகிழ்ந்தார். கனவில் நடராஜப் பெருமான் தான் சேந்தனாரின் வீட்டுக்கு களி உண்ண சென்றிருந்தை தெரிவித்திருந்தார். அதன்படியே, அரசரும் சேந்தனாரை கண்டுபிடிக்குமாரு அமைச்சருக்கு கட்டளையிட்டார். ஆனால், சேந்தனாரோ தில்லையில் நடைபெற்ற நடராஜப் பெருமானின் தேர்த் திருவிழாவிற்கு சென்றுவிட்டார். எம்பெருமான் நடராஜப் பெருமானை தேரில் அமர்த்திய உடன் அரசர் உள்பட அனைவரும் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆனால், மழையின் காரணமாக சேற்றில் தேர் சக்கரம் அழுந்தியதால், தேர் நகரவில்லை.

அந்த சமயத்தில், சேந்தனாரின் பாடச்சொல்லி அசரீரியாக ஒரு குரல் ஒலித்தது. உடனே சேந்தனாரோ, ஒன்றும் அறியாத யான் எப்படிப் பாடுவேன் என்று நடராஜரை துதித்தார். எம்பெருமானும் அதற்கு அருள் புரிய சேந்தானர் இறைவன் அருளால், ‘மன்னுகதில்லை வளர்க் நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல‘ என்று தொடங்கி பல்லாண்டு கூறுதுமே என்று முடித்து 13  திருப்பல்லாண்டு பாடல்களை  பாடினார். உடனே, தேர் அசைந்தோடி  சுற்றி வந்து நிலை பெற்று நின்றது.

இதைப் பார்த்த அரசரும், தில்லை வாழ் அந்தணர்களும் சேந்தனாரின் கால்களில் விழுந்து வணங்கினர். அரசரும் தன்னுடைய கனவில் இறைவன் வந்ததை சேந்தனாருக்கு தெரிவித்தார். சேந்தனார் வீட்டுக்கு நடராஜப் பெருமான் களி உண்ணச் சென்ற அந்த நாள் சிவபெருமானின் நட்சத்திரமான மார்கழி திருவாதிரை நாள் என்றும், இன்றைக்கும் திருவாதிரை நாளில் நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப்படுவதால் திருவாதிரைக்களி  என்றும் சொல்லப்படுகிறது. அதனால் தான் ஆருத்ரா தரிசன நாளன்று சிவபெருமானுக்கு களி அமுது படைத்து உண்கிறோம்.

எனவே 'திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி' என்ற சொலவடையே ஏற்பட்டது.

Read More
திருவதிகை சரநாராயண பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருவதிகை சரநாராயண பெருமாள் கோவில்

கைகளை கட்டிக்கொண்டு சேவகம் செய்யும் நிலையில் இருக்கும் கருடாழ்வாரின் அபூர்வ தோற்றம்

பண்ரூட்டியின் அருகில் சுமார் மூன்று கி.மீ. தொலைவில் உள்ள திருவதிகையில், 2000 வருட பழமையான சரநாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நரசிம்மர் சயன (படுத்திருக்கும் ) கோலத்தில் தாயாருடன் காட்சி தருகிறார். பெருமாள் கோவில்களில், நரசிம்மர் சயன கோலத்தில் காட்சி தரும் ஒரே தலம் இதுதான் என்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.

பொதுவாக எல்லா பெருமாள் கோவில்களிலும் கருடாழ்வார், கைகளைக் கூப்பி வணங்கிய நிலையில் அஞ்சலி முத்திரையுடன் காட்சி அளிப்பார். ஆனால் இக்கோவிலில் கருடாழ்வார் இரு கைகளையும் கட்டிக்கொண்டு சேவகம் செய்யும் நிலையில் காட்சி தருவது ஒரு அபூர்வமான தோற்றமாகும். பெருமாள் இந்த கருடாழ்வாருக்கு, சங்கு சக்கரத்தை திரிபுர சம்ஹாரத்தின் போது கொடுத்தார் என்று புராணம் கூறுகின்றது.

Read More
 மேலக்கடம்பூர் அமிர்தகடேசுவரர் கோவில்

மேலக்கடம்பூர் அமிர்தகடேசுவரர் கோவில்

சிவபெருமான் ரிஷபத்தின் மேல் தாண்டவமாடும் அபூர்வ கோலம்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில், எய்யலூர் சாலையில் அமைந்துள்ள தேவாரத் தலம் மேலக்கடம்பூர். இக்கோவில் சுமார் 1000-2000 ஆண்டுகள் பழமையானது. இறைவன் திருநாமம் அமிர்தகடேசுவரர். இறைவியின் திருநாமம் வித்யூஜோதிநாயகி.

பிரதோஷத்தின் போது மட்டுமே தரிசனம் தரும் தசபுஜ ரிஷப தாண்டவமூர்த்தி

இத்தலத்தில் சிவபெருமான் ரிஷப தாண்டவமூர்த்தி என்னும் பெயரோடு, நந்தி மீது நடமாடும் அபூர்வ கோலத்தில், 10 கைகளுடன் உற்சவராக இருக்கிறார். செவ்வக பீடத்தில் மையமாக உள்ள தாமரை பீடத்தில் மேல்நோக்கி நிற்கும் காளையின் மேல் சதுர தாண்டவ கோலத்தில், வீசிய பத்து கரங்களில் வீரவெண்டயம், பிரம்மகபாலம், கேடயம், சூலம், அரவம், கட்டங்கம், தண்டம், குத்தீட்டி, ஏந்திட, வலக்கை கஜஹஸ்த அமைப்பிலும், இடக்கை பிரபஞ்சம் தாங்கியும், சிவபெருமான் நின்றாடுகிறார். அவர்காலடியில் திருமால் மத்தளமிசைக்க வீரபத்திரர் சூலமாட, பைரவர், கணங்கள், விநாயகர், பார்வதி, பிருங்கி, காரைக்கால் அம்மையார், மகாகாளர், நந்தி, நாட்டிய பெண்கள் சேர்ந்தாட முருகன் மயில் மேல் பறக்க, கந்தர்வர்கள் மலரிட, அனைத்தும் சேர்ந்திட்ட அற்புத கலைப்படைப்பு. திருவாசியில் அக்கினிக்குப் பதிலாக, இங்கே போதி இலைகள் காணப்படுகின்றன. தலைக்குப் பின்புறத்தில் ஒளிவட்டமும் மணிமுடியும் வங்க தேச பாணியில் உள்ளது. இவருக்கு பிரதோஷத்தின் போது சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அன்று ஒருநாள் மட்டுமே இவரை தரிசிக்க முடியும்.

Read More
திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோவில்

திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோவில்

கபால பூணூலும், சர்ப்ப அரைஞாணும் அணிந்த காசிக்கு ஈடான பைரவர்

சிதம்பரத்திற்கு தென்கிழக்கே 5 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் திருக்கழிப்பாலை. இறைவன் திருநாமம் பால்வண்ணநாதர். இறைவியின் திருநாமம் வேதநாயகி. இத்தலத்தின் சிவலிங்கப் பெருமான் வெண்ணிறமுடையவராக விளங்கிறார், அதனாலேயே இறைவன் பால்வண்ணநாதர் என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் அருட்காட்சி தருகிறார்.

இங்குள்ள பைரவர் காசியில் உள்ளது போல நாய் வாகனம் இல்லாமல், 27 மண்டை ஓட்டுடன் பூணூல் அணிந்து, சர்ப்பத்தை அரைஞாண் அணிந்து, ஜடாமுடி, சிங்கப்பல்லுடன் தனிக்கோயிலில் அருளுகிறார். காசி பைரவரை செதுக்கிய அதே சிற்பியால் இவரும் செய்யப்பட்டதாக நம்பப் பெறுகிறது .இத்தல பைரவரை வணங்கினால் காசி பைரவரை வணங்கிய பலன் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன. இத்தலத்தின் மூலவர் பால்வண்ண நாதர் என்றாலும், இக்கோவிலில் கால பைரவர் மிகவும் பிரசித்தி பெற்றவர் என்பதால் இப்பகுதி மக்கள் இத்தலத்தை பைரவர் கோயில் என்றே அழைக்கின்றனர். தேய்பிறை அஷ்டமி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ராகு கால பூஜைகள் விமர்சையாக நடைபெறுகிறது. அஷ்டமி நாட்களிலும், பௌர்ணமி இரவிலும்) இவரை வழிபடுவது விசேஷமாகக் கருதப் பெறுகிறது.

Read More
திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோவில்

திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோவில்

நடராஜப் பெருமான் தன் சடாமுடியை அள்ளி முடிந்த கோலத்தில் இருக்கும் அரிய காட்சி

சிதம்பரத்திற்கு தென்கிழக்கே 5 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் திருக்கழிப்பாலை. இறைவன் திருநாமம் பால்வண்ணநாதர். இறைவியின் திருநாமம் வேதநாயகி. இத்தலத்தின் சிவலிங்கப் பெருமான் வெண்ணிறமுடையவராக காட்சி தருவது, வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாத அரிய காட்சியாகும்.

பொதுவாக சிவாலயங்களில், நடராஜப் பெருமான் தன் சடா முடியை விரித்த நிலையில், ஆனந்த தாண்டவ கோலத்தில் நமக்கு காட்சி அளிப்பார். ஆனால் இக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் நடராஜ பெருமான் , வேறு எங்கும் இல்லாத வகையில், தன் சடாமுடியை அள்ளி முடிந்த கோலத்தில் இருப்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பு அம்சமாகும். நடராஜரின் இத்தகைய கோலம் நாம் காண முடியாத அரிய காட்சியாகும். இவர் அருகே சிவகாமி அம்பாள் அவர்தம் தோழிகளான விஜயா, சரஸ்வதியோடு காட்சி தருவதும் ஒரு சிறப்பான அம்சமாகும்.

Read More
திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோவில்

திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோவில்

வெள்ளை நிறத்துடன் காணப்படும் அரிய சிவலிங்கம்

சிதம்பரத்திற்கு தென்கிழக்கே 5 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் திருக்கழிப்பாலை. இறைவன் திருநாமம் பால்வண்ணநாதர். இறைவியின் திருநாமம் வேதநாயகி. இத்தலத்தின் சிவலிங்கப் பெருமான் வெண்ணிறமுடையவராக விளங்கிறார், அதனாலேயே இறைவன் பால்வண்ணநாதர் என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் அருட்காட்சி தருகிறார்.

இத்தலம் முன்பு கொள்ளிட ஆற்றின் வடகரையில் கரைமேடு என்னுமிடத்தில் இருந்ததால், இத்தலத்திற்கு கழிப்பாலை என்ற பெயர் இருந்தது. கொள்ளிட ஆற்றின் வெள்ளப்பெருக்கால் கோயில் முழுவதும் சிதலமடைந்து விட்டது. எனவே தற்போது உள்ள இடத்தில் கோயில் கட்டி, அதில் கழிப்பாலை இறைவனையும், இறைவியையும் பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.

மூலவர் பால்வண்ணநாதர் ,வெண்ணிறமாக சுயம்பு மூர்த்தியாக மிகச் சிறிய பாணத்துடன் காட்சியளிக்கிறார். பாணத்தின் மேற்புறம் சதுரமாக, வழித்தெடுத்தாற்போல் நடுவில் பள்ளத்துடன் அதிசயமான அமைப்புடன் காட்சி தருகின்றது. அபிஷேகத்தின்போது பால் மட்டும்தான் இப்பள்ளத்தில் தேங்கும். மற்ற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்குத்தான் நடைபெறுகிறது. மூலவருக்கு பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் உள்ளனர்.

கபிலமுனிவர் ஒவ்வொரு சிவத்தலங்களாக தரிசித்து வரும்போது, வில்வ வனமாக இருந்த இப்பகுதியில் தங்கி, சிவபூஜை செய்ய நினைத்தார். இப்பகுதியில் பசுக்கள் தானாக பால்சுரந்து வந்த காரணத்தினால் மணல் முழுவதும் வெண்ணிறமாக காட்சியளித்தது. முனிவர் இந்த வெண்ணிற மணலை எடுத்து இலிங்கம் அமைத்து வழிபாடு செய்தார். ஒருமுறை அந்த வழியாக வந்த மன்னனது குதிரையின் கால் குளம்பு, மணல் லிங்கத்தின்மீது பட்டு சிவலிங்கம் பிளந்து விடுகிறது. வருந்திய முனிவர் பிளவுபட்ட சிவலிங்கத்தை எடுத்துவிட்டு வேறு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ய நினைத்தபோது, இறைவன் பார்வதி சமேதராக காட்சி தந்து,'முனிவரே. பசுவின் பால் கலந்த வெண்ணிற மணலில் செய்த சிவலிங்கம் பிளவு பட்டிருந்தாலும், அதை அப்படியே பிரதிஷ்டை செய்து விடுங்கள். காமதேனுவே பசுவடிவில் இங்கு வந்து பால்சொறிந்துள்ளது. எனவே இந்த சிவலிங்கத்தை வழிபடுபவர்கள் சகல செல்வங்களும் அடைவார்கள்' என்றார். இன்றும் பிளவு பட்ட வெண்ணிற சிவலிங்கம் தான் காட்சி தருகிறது.

பிரார்த்தனை

சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்த பாலை அருந்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில்

பீடத்தின் வடிவில் காட்சி தரும் அபூர்வ முருகன்

விருத்தாச்சலம் – சேலம் சாலையில், விருத்தாசலம் நகருக்கு மேற்கே 2 கி.மீ தொலைவில் உள்ள மணவாளநல்லூரில் அமைந்துள்ளது கொளஞ்சியப்பர் கோவில். இதன் மூலவர் சுயம்பு வடிவிலான முருகன் ஆவார். குளஞ்சி மரங்கள் சூழ்ந்த காட்டின் நடுவே முருகன் தோன்றியதால் இவர் 'குளஞ்சியப்பர்' எனப் பெயர் பெற்றார். காலப்போக்கில் 'கொளஞ்சியப்பர்' என திரிந்தது.

கருவறையில் எழுந்தருளி இருக்கும் முருகன், உருவத்திருமேனி கொண்டவர் அல்லர். கண்ணுக்குப் புலப்படாத அருவத்திருமேனியினரும் அல்லர். உருவமும் – அருவமும் கலந்த அருவுருவத் திருமேனி கொண்டவர். ஒரு பீடத்தின் வடிவில் இங்கே காட்சி தருபவர். பலிபீட சொரூபமாக இருந்து முருகன் அருள்பாலிக்கிறார். 3 அடி உயரம் கொண்ட சுயம்பு பலிபீடப் பிரதிஷ்டையே மூலஸ்தானம். கருங்கற்பீடத்தின் கீழே முருகனது சடாட்சரம் பொறிக்கப்பெற்ற ஸ்ரீ சக்கரம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. அபிசேக ஆராதனைகள் யாவும் பீட வடிவில் திகழும் முருகப்பெருமானுக்கே நிகழ்த்தப் பெறுகின்றன.

பிறந்த 90 நாட்கள் கழித்து குழந்தைக்குப் பெயரிடுதல், சட்டை நகை போடுதல் இங்கு ரொம்பவும் விசேடம். குழந்தை பிறந்ததிலிருந்து இந்தக் கோவிலுக்கு வரும்வரைக்கும் குழந்தைக்கு சட்டை போட மாட்டார்கள்; பொட்டு கூட வைக்க மாட்டார்கள். இந்த சந்நிதிக்கு வந்த பின்னரே குழந்தைக்கு சட்டை போட்டு, பொட்டு வைக்கிறார்கள்.

மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் மருந்தாகும் முருகனின் விபூதி பிரசாதம்

ப்பெண்ணெயை பக்தர்கள் வாங்கிக் கொண்டு போய் கொளஞ்சியப்பர் சந்நிதியில் வழங்க, அர்ச்சகர் அதனை இறைவன் பாதத்தில் வைத்து வழிபட்டு, முருகனின் பிரசாதமான விபூதியைச் சிறிது அந்த எண்ணெயில் இட்டு வழங்குகிறார். தீட்டுத் தடங்கல் இல்லாது நீராடித் தூய்மையாக இருந்து இவ்வெண்ணெயை பெற்றுத் தடவினால் தீராத பல புறநோய்கள் எல்லாம் குணமாகி விடுகின்றன. ஆறாத புண்கள், கட்டிகள், முதுகுப்பக்க பிளவைகள் முதலிய நோய்களுக்கும், மாடுகளின் கழுத்தில் வரும் காமாலைக் கட்டிகளுக்கும் கொளஞ்சியப்பர் அருள் கலந்த இவ்வெண்ணெய் கைகண்ட மருந்தாக விளங்கி வருகிறது. இவ்வெண்ணெய் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கெல்லாம் கொண்டு செல்லப்படுகிறது.

புதுமையான 'பிராது கட்டுதல்' என்ற பிரார்த்தனை நடைமுறையும், பின்னர் நேர்த்திக்கடன் நிறைவேற்ற ராஜினாமா கட்டணம் செலுத்தும் முறையும்

இத்தலத்தில் பக்தர்கள் தம்குறை தீர்க்க வேண்டி செய்யும் பிராது கட்டுதல் என்ற நேர்த்திக்கடன் இங்கே மிகவும் புதுமையாக உள்ளது. இந்த பிராது கட்டுதல், நாம் நமது மேலதிகாரிகளுக்கு எழுதும் ஒரு முறையீட்டு மனுவின் நடைமுறை போல அமைந்துள்ளது. பிராது கட்டுவதற்காக கோயிலின் பிரகாரத்தில் முனீஸ்வரன் சந்நிதி அருகே இடமும் உள்ளது.பிராது கட்டுவது என்ன என்றால் கோயில் அலுவலகத்தில் மனு எழுதி, அங்கு கொடுக்கப்படும் காகிதத்தில் மணவாளநல்லூர் அருள் மிகு கொளஞ்சியப்பர் அவர்களுக்கு.... நான் இந்த ஊரிலிருந்து வருகிறேன். இன்னாருடைய மகன். என் பெயர் இது.. என்பன போன்ற விவரங்களை எழுதி தனது குறை, கோரிக்கை என்ன என்பதையும் குறிப்பிட்டு கொளஞ்சியப்பர் சந்நிதியில் உள்ள சிவாச்சாரியாரிடம் தர வேண்டும். அதை அவர் கொளஞ்சியப்பரின் பாதத்தில் சமர்ப்பித்து, அர்ச்சனை செய்து, மனுவை விபூதி சேர்த்து, பொட்டலமாக்கி ஒரு நூலால் கட்டித் தருவார். அதை முனியப்பர் சந்நிதியில் நிறுத்தப்பட்டுள்ள வேலில் கட்ட வேண்டும். நியாயமான கோரிக்கைகள், 3 நாட்கள் அல்லது 3 வாரங்கள் அல்லது 3 மாதங்களில், முருகக் கடவுள் நிறைவேற்றி வைப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இவ்வாறு பிராது கட்டி வழிபடுவதற்கு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. எந்த ஊரிலிருந்து வருகிறோமோ, அங்கிருந்து கிலோ மீட்டருக்கு 25 காசு வீதம் படிப்பணம் கட்டி வழிபட வேண்டும்.

கோரிக்கை நிறைவேறினால், இந்த தேதியில் நான் வந்து வைத்த பிராது கட்டுதல் நிறைவேறியதால், அதை நான் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என ராஜினாமா கட்டணம் செலுத்தி நேர்த்திக்கடனை செலுத்தலாம்.

குழந்தை வரம், கடன் தொல்லை, திருடு போன பொருள், ஏமாற்றப்பட்ட பணம், வேலை மாறுதல், குடும்ப கஷ்டம், பிரிந்திருக்கும் கணவன் மனைவி ஒன்று சேர, தீராத வியாதிகள் போன்றவற்றுக்காக இங்கு பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.

Read More
சிதம்பரம் நடராஜர் கோவில்

சிதம்பரம் நடராஜர் கோவில்

நமது தேசிய கொடி கோபுரத்தில் ஏற்றப்படும் ஒரே தலம்

ஒவ்வொரு வருடமும் இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட்15 அன்று கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒரு விசேஷம் உண்டு. இந்தியாவிலேயே, தில்லை சிதம்பரத்தில் மட்டும் தான் சுதந்திர தினத்தில் நமது தேசிய கொடி கோவிலின் கோபுரத்தின் மீது ராஜ கம்பீரத்துடன் ஏற்றப்படுகிறது.

இந்திய சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ஆம் தேதி காலையில், சிதம்பரம் நடராசர் கோவிலில் நம் தேசியக் கொடியை ஒரு வெள்ளித் தட்டில் வைத்து, அதை நடராசர் முன் வைத்து பூஜை செய்வார்கள். பின் அக்கொடியை அர்ச்சகர் எடுத்து வர மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று 138 அடி உயரம் உள்ள கோவில் கிழக்கு கோபுரத்தில், ஆலய தீட்சிதர் அக்கொடியை ஏற்றுவார். அப்போது கோவிலுக்கு வருவோர் அனைவரும் தேசியக் கொடிக்கு மரியாதை செய்வார்கள். இது வேறெந்த வழிபாட்டுத் தலத்திலும் இல்லாத சிறப்பாகும். பின்னர் கோவிலுக்கு வரும் பொதுமக்களுக்கு லட்டு உள்ளிட்ட இனிப்புகள் வழங்கப்படும்.

Read More
சிதம்பரம் நடராஜர் கோவில்

சிதம்பரம் நடராஜர் கோவில்

சிதம்பரம் நடராஜர் ஆனித் திருமஞ்சனம்

அபிஷேகப் பிரியரான நடராஜருக்கு மார்கழி திருவாதிரை, ஆனி உத்திரம், சித்திரை திருவோணம், ஆவணி வளர்பிறை சதுர்த்தசி, புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி, மாசி வளர்பிறை சதுர்த்தசி ஆகிய நாட்கள் என‌ வருடத்திற்கு ஆறு முறை அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறுகின்றன. இந்த ஆறு நாட்களில் மார்கழி திருவாதிரையும், ஆனி உத்திரமும் சிறப்பு வாய்ந்தவை.

இந்த ஆறு அபிஷேகங்களில், மூன்று அபிஷேகங்கள் திதி அடிப்படையிலும், ஏனைய மூன்று அபிஷேகங்கள் நட்சத்திரங்களின் அடிப்படையிலும் நடைபெறும். மானுடர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் என்பது கணக்கு. இதன் வகையில், ஒருநாளைக்கு பெருமானுக்கு ஆறு கால பூஜைகள் செய்து தேவர்கள் மகிழ்கின்றனர் என்ற அடிப்படையில், நடராஜருக்கு வருடத்திற்கு ஆறு அபிஷேகங்கள் செய்யப் பெறுகின்றன.

பொதுவாக சந்தியா காலங்களில் செய்யப்பெறும் வழிபாடுகளுக்கு சிறப்பான பலன்கள் உண்டு. இதில் ஆனி மாதம் என்பது தேவர்களுக்கு மாலைப் பொழுதாகும். எனவே, இந்த மாதத்தில் செய்யப்பெறும் அபிஷேகம் தேவர்களின் மாலைநேரத்திய வழிபாட்டினை ஒட்டியதாக அமைவதால், `ஆனித் திருமஞ்சனம்' மிகவும் சிறப்பித்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

விரதம் இருந்து ஆனித் திருமஞ்சன தரிசனத்தைக் காண்பதால், பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பார்கள். தம்பதிகளுக்கு சுகமான வாழ்வு கிடைக்கும். கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும். நாடெல்லாம் நல்ல மழை பெய்து விவசாயம் சிறக்கவும் இந்த விழா நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு ஆனித் திருமஞ்சனம் 26.06.2023 திங்கட்கிழமையன்று நடைபெறுகின்றது.

Read More
வேலுடையான்பட்டு சிவசுப்ரமணிய சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

வேலுடையான்பட்டு சிவசுப்ரமணிய சுவாமி கோவில்

வேடுவக் கோலத்தில் கையில் வில்லும் அம்பும் ஏந்தி காட்சி தரும் முருகன்

கடலூர் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப் எல்லைக்குள் உள்ள வேலுடையான்பட்டு என்ற கிராமத்தில் அமைந்துள்ளது சிவசுப்ரமணிய சுவாமி கோவில். அருணகிரிநாதரின் திருப்புகழலில் இத்தலம் அத்திப்பட்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரும்பாலும் முருகப் பெருமான் வேலுடனும் அல்லது தண்டத்துடனும்தான் காட்சி தருவார். ஆனால், இத்தலத்தில் மூலவர் சிவசுப்ரமணியசாமி, வேடுவக் கோலத்தில் சடா முடியுடனும், திருக்கரங்களில் வில்லும் அம்பும் ஏந்தி, இடுப்பில் சல்லடத்துடன், காலில் இறகு அணிந்து வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். மூவரின் திருவுருவங்களும் ஒரே கல்லில் அமைந்திருப்பது அதன் சிறப்பம்சம் ஆகும். கொடிமரத்தின் அருகேபெரிய அளவில் ஏழு வேல்கள் முருகனின் உத்தரவிற்காகக் காத்து நிற்கும் சேவகர்களைப் போல் இருப்பது வேறு எந்த முருகன் தலத்திலும் காணமுடியாத அமைப்பாகும்.

பிரார்த்தனை

கந்த சஷ்டியின்போது குழந்தைப் பேறு இல்லாதவர்கள், இந்தக் கோயிலுக்கு வந்து வேண்டிக் கொண்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கடன், நோய் போன்ற பல பிரச்னைகளையும் தீர்க்கும் பிரார்த்தனைக் கடவுளாக இத்தல முருகனை பக்தர்கள் போற்றுகிறார்கள்.

Read More
ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில்

குரு, இராகு, கேது தோஷங்களை நிவர்த்தி செய்யும் ஸ்வயம் வியக்த க்ஷேத்திரம்

பெருமாள் தானாகவே, விக்கிரக வடிவில் ஓர் இடத்தில் தோன்றினால், அதை ஸ்வயம் வியக்த க்ஷேத்திரம் என்று சொல்வார்கள். வியக்தம் என்றால் வெளிப்படுதல் என்று பொருள். ஸ்வயம் வியக்தம் என்றால் இறைவன் சுயமாகவே வெளிப்பட்ட திருத்தலம் என்று பொருள். நாங்குநேரி, திருவரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிநாத், முக்திநாத் ஆகிய எட்டுத் திருத்தலங்களும் ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்களாகும். ஸ்ரீமுஷ்ணம், கடலூர் மாவட்டத்தில், விருத்தாசலத்தில் இருந்து 24 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. ‘முஷணம்’ என்றால் நமக்குத் தெரியாமல் அபகரித்துச் செல்லுதல் என்று பொருள். இந்தத் திருத்தலத்துக்கு வரும் அடியார்களின் பாபங்களை எல்லாம் அவர்களுக்கே தெரியாமல் இவ்வூர் அபகரித்து விடுவதால் (முஷணம் செய்வதால்) இவ்வூர் ‘ஸ்ரீமுஷ்ணம்’ என்று பெயர் பெற்றது.

மகாவிஷ்ணு, வராக (காட்டுப்பன்றி) அவதாரம் எடுத்து, இரண்யாட்சன் என்ற அசுரனிடமிருந்து பூமியை மீட்டார். கடலுக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த பூமியை, தன்னுடைய இரண்டு கோரைப் பற்களில் தாங்கியபடி மேல் எழுந்து வந்து, மீண்டும் வான்வெளியில் நிலைபெறச் செய்தார் என்பது புராண வரலாறு. தனது ஒரு விழிப் பார்வையால் அரச மரத்தையும், மறு விழிப் பார்வையால் துளசிச் செடியையும் உருவாக்கினார். அவர் உருவாக்கிய அரசமரம், இந்த ஆலயத்தின் பின்புறம் உள்ள நித்ய புஷ்கரணி திருக்குளத்தின் தென்கரையில் உள்ளது. இதுவே தலவிருட்சமாகவும் விளங்குகிறது.

கருவறையில், மேற்கு நோக்கியபடி பூவராக சுவாமியின், திருமேனி இருந்தாலும், அவரது முகம் தெற்கு பார்த்து இருக்கிறது. வழக்கமாகச் சங்கு, சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் காட்சி தரும் மகாவிஷ்ணு, இங்கு வராக மூர்த்தியாக இரண்டு கரங்களுடன், அதுவும் இடுப்பில் கையை வைத்தபடி எழிலான தோற்றத்துடன் காணப்படுகிறார். அவருடன் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் இருப்பது மேலும் சிறப்பானதாகும். இங்குள்ள மூலவரின் திருமேனி, முழுவதும் சாளக் கிராமத்தினால் ஆனது. பன்றிக்கு மிகவும் விருப்பமானதான கோரைக் கிழங்கு இப்பெருமாளுக்குச் சிறப்பு பிரசாதமாக நிவேதனம் செய்யப்படுகிறது. இப்பிரசாதத்திற்கு, முஸ்தாபி சூரணம் என்று பெயர்.

பூவராக பெருமாளை வணங்குவோர் சிறந்த வாக்கு வன்மை, பெரிய பதவி, நிலைத்த செல்வம், மக்கட்பேறு, நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள் ஆகியவற்றை பெற்று வையத்தில் வாழ்வாங்கு வாழலாம் என்று புராணங்களும் மந்திர சாஸ்திரங்களும் சொல்கின்றன. குரு, இராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு வணங்கினால் அத்தகைய தோஷம் நிவர்த்தி ஆகும். தவிர புதிய வாகனங்கள் வாங்குவோர் இத்தலத்துக்கு கொண்டு வந்து அர்ச்சனை செய்வது வழக்கமாக உள்ளது. இதற்கு வாகனம் படைத்தல் என்று கூறுகிறார்கள். தவிர விபத்துக்குள்ளான வாகனங்களை ரிப்பேர் செய்த பின்பு இங்கு ஓட்டி வந்து பூவராக பெருமாளிடம் வழிபட்ட பின்னர் ஓட்டுகின்றனர்.

Read More
அமிர்தகடேசுவரர் கோவில்

அமிர்தகடேசுவரர் கோவில்

சிவபெருமான் ஒவ்வொருநாளும் நவக்கிரகங்களுக்குரிய வஸ்திரம் அணியும் தேவாரத் தலம்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தாலுகாவில், வடவாற்றின் கரையில் உள்ள தேவாரத் தலம் மேலக்கடம்பூர். இத்தலம் செட்டிதாங்கல் வழியாக எய்யலூர், ஆயங்குடி, முட்டம் செல்லும் சாலையில் ஆறாவது கி.மீட்டரில் உள்ளது. இறைவன் திருநாமம் அமிர்தகடேசுவரர். இறைவி வித்யூஜோதிநாயகி.

அம்பாள் சன்னதிக்கு எதிரே நவக்கிரக சன்னதி இருக்கிறது. நவக்கிரகங்கள் ஒவ்வொருநாளும், தங்களுக்கான நாளில் இங்கு சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம். இதன் அடிப்படையில் சிவபெருமான் ஒவ்வொருநாளும், அந்தந்த கிரகங்களுக்கு உகந்த நிறங்களில் வஸ்திரம் அணிந்து தரிசனம் தருகிறார். அதனால் இந்த ஈசனுக்கு ஞாயிறு-சிவப்பு, திங்கள்-வெள்ளை, செவ்வாய்-சிவப்பு, புதன்-பச்சை, வியாழன்-மஞ்சள், வெள்ளி-வெள்ளை, சனி-நீலம் என ஒவ்வொரு நாளும் அந்தந்த கிரகத்துக்குரிய வண்ண ஆடை அணிவிக்கப்படுகிறது.

எனவே, இத்தலம் கிரகதோஷ பரிகார தலமாகவும் இருக்கிறது. மேலும் இத்தலத்தில் அங்காரகன் வழிபட்டதால், இத்தலம் செவ்வாய் தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகின்றது.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்

சனி பகவான் கழுகு வாகனத்துடன் இருக்கும் அபூர்வக் காட்சி

https://www.alayathuligal.com/blog/8jbwz76aeb7drsnd59bggnn7emjd59

இந்திரனின் ஆணவத்தை போக்கிய விநாயகர்

https://www.alayathuligal.com/blog/xjneb5f8s4fffahndmmwkzp2ex4lxe

தினம் முப்பெருந்தேவியாக அருள் பாலிக்கும் அம்பிகை

https://www.alayathuligal.com/blog/dmgrwag3jxzb57ged3gwfc4l5et5wk

Read More
அமிர்தகடேசுவரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

அமிர்தகடேசுவரர் கோவில்

தினம் முப்பெருந்தேவியாக அருள் பாலிக்கும் அம்பிகை

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில், எய்யலூர் சாலையில் அமைந்துள்ள தேவாரத் தலம் மேலக்கடம்பூர். இக்கோவில் சுமார் 1000-2000 ஆண்டுகள் பழமையானது. இறைவன் திருநாமம் அமிர்தகடேசுவரர். இறைவி வித்யூஜோதிநாயகி.

அம்பாள் காலையில் வீணை ஏந்தி சரஸ்வதியாகவும் (வித்யா) மதியம் யானையுடன் லக்ஷ்மியாகவும் (ஜோதி) இரவில் சூலத்துடன் துர்க்கையாகவும் (நாயகி) அருள் தருவதால் வித்யஜோதிநாயகி என்று அழைக்கிறார்கள். சோதிமின்னம்மை என்ற பெயரும் இவருக்கு உண்டு. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் தோஷம் விலக அவசியம் வணங்க வேண்டிய ஸ்தலம்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்

சனி பகவான் கழுகு வாகனத்துடன் இருக்கும் அபூர்வக் காட்சி

https://www.alayathuligal.com/blog/8jbwz76aeb7drsnd59bggnn7emjd59

இந்திரனின் ஆணவத்தை போக்கிய விநாயகர்

https://www.alayathuligal.com/blog/xjneb5f8s4fffahndmmwkzp2ex4lxe

Read More
அமிர்தகடேசுவரர் கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

அமிர்தகடேசுவரர் கோவில்

இந்திரனின் ஆணவத்தை போக்கிய விநாயகர்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில், எய்யலூர் சாலையில் அமைந்துள்ள தேவாரத் தலம் மேலக்கடம்பூர். இறைவன் திருநாமம் அமிர்தகடேசுவரர். இறைவி வித்யூஜோதிநாயகி.

தேவர்கள், பாற்கடலில் கிடைத்த அமுதத்தை விநாயகரை வணங்காமல் பருக சென்றதால், விநாயகர் தேவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணி, அமுதகலசத்தை எடுத்து செல்லும்போது ஒரு துளி அமுதம் கடம்பவனமாக இருந்த இந்த ஊரில் விழுந்தது. அந்த இடத்தில் சிவன் சுயம்பு லிங்கமாக உள்ளார். இந்திரனும் தேவர்களும் தங்கள் தவறை உணர்ந்து விநாயகரிடம் மன்னிப்பு கேட்டு அமுதகலசத்தை திரும்பி கேட்டனர். விநாயகர் சிவனிடம் வேண்டும்படி கூறினார். சிவன் இந்திரனுக்கு அமுதகலசத்தை கொடுத்து அமிர்தகடேஸ்வரர் என்ற திருநாமத்துடன் எழுந்தருளி உள்ளார்.

தேவர்களின் தாயான அதிதி, அமுதம் அளித்த சிவனை தினமும் வணங்கி வந்தார். இவர் தினமும் இங்கு வருவதை விரும்பாத இந்திரன் இந்த சிவனை கோயிலோடு இந்திரலோகம் எடுத்து செல்ல விரும்பி கோயிலை தேர் வடிவில் மாற்றி இழுத்து செல்ல முயன்றான். விநாயகர் தன காலால் தேர் சக்கரத்தை மிதித்து கொள்ள, இந்திரனால் ஒரு அடிகூட நகர்த்த முடியவில்லை. இந்திரன் விநாயகரிடம் வழி விடும்படி வேண்ட விநாயகர் இந்திரனிடம் கோடி லிங்ககளை பிரதிஷ்டை செய்தால் தேரை கொண்டு செல்லலாம் என்று கூறினார். இந்திரன் ஆணவத்துடன் லிங்கங்கள் செய்ய அனைத்தும் பின்னப்பட்டன, தவறை உணர்ந்த இந்திரன் அமிர்தகடேஸ்வரரை வேண்ட அவர் ஆயிரம் முறை தன் பெயரை சொல்லி ஒரு லிங்கம் செய்யும்படி பணித்தார். அதன்படி இந்திரன் ருத்ரகோடிஸ்வர லிங்கத்தை உருவாக்கினான். சிவன் அவனுக்கு காட்சி தந்து தான் இங்கேயே இருக்க விரும்புவதால் அதிதிக்கு பதில் இந்திரனே தினமும் வழி படலாம் என கூறினார். இந்திரனும் மன்னிப்பு கேட்டான் . தினமும் இந்திரன் பூஜை செய்வதாக ஐதிகம்.

இந்திரனின் ஆணவத்தை போக்கிய விநாயகர் தனிச் சன்னதியில் அருள் பாலிக்கிறார். இவருக்கு ஆரவார விநாயகர் என்று பெயர். அமிர்த கலசத்தை தூக்கிச் சென்றும், தேர் சக்கரத்தை மிதித்தும் ஆரவாரம் செய்ததால் இவருக்கு இந்த பெயர் வந்தது. இவர் தலையை இடது புறமாக சாய்த்தபடி கோப முகத்துடன் காட்சி தருகிறார். தேர் சக்கரத்தை மிதத்ததின் அடையாளமாக, தேர் போல் அமைந்த இக்கோவிலின் இடது பக்க சக்கரம் பூமியில் பதிந்து காணப்படுகிறது.

Read More
அமிர்தகடேசுவரர் கோவில்

அமிர்தகடேசுவரர் கோவில்

சனி பகவான் கழுகு வாகனத்துடன் இருக்கும் அபூர்வக் காட்சி

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில், எய்யலூர் சாலையில் அமைந்துள்ள தேவாரத் தலம் மேலக்கடம்பூர். இறைவன் திருநாமம் அமிர்தகடேசுவரர். இறைவி வித்யூஜோதிநாயகி.

பொதுவாக சனி பகவான் காக வாகனத்துடன்தான் காட்சி தருவார். ஆனால் இத்தலத்தில் கருட வாகனத்துடன் அவர் இருப்பது ஒரு அரிய காட்சியாகும்.

சனி பகவானுக்கு ஆரம்ப காலத்தில் கழுகுதான் வாகனமாக இருந்தது. ராமரின் தந்தையான தசரதர், அவருக்கு கழுகுக்கு பதிலாக காகத்தை கொடுத்தார். இங்குள்ள சனி பகவான் கழுகு வாகனத்துடன் காட்சி தருகிறார். எனவே, இவர் ராமாயண காலத்திற்கும் முற்பட்டவர் என்கிறார்கள்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது.

Read More