தஞ்சாவூர் தஞ்சபுரீசுவரர் கோவில்

தஞ்சாவூர் தஞ்சபுரீசுவரர் கோவில்

குபேரன் இழந்த செல்வத்தை மீட்டெடுத்த தலம்

தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் கரந்தட்டாங்குடியை அடுத்துள்ள வெண்ணாற்றங்கரை பகுதியில் அமைந்துள்ளது தஞ்சபுரீசுவரர் கோவில். இறைவன் திருநாமம் தஞ்சபுரீசுவரர், இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி. தன்னைத் தஞ்சமென்று வரும் அடியார்களைக் காப்பதனால், இறைவன் தஞ்சபுரீசுவரர் எனவும் அவர்களுக்கு ஆனந்தத்தை அள்ளித் தருபதால் அம்பிகைக்கு ஆனந்தவல்லி அம்மன் எனவும் பெயர் வந்தது.

அம்பிகையின் சன்னிதிக்கு எதிரே உள்ள மண்டபம் அஷ்டலட்சுமி மண்டபம் என்றே அழைக்கப் படுகிறது. இதன் சுவர்களில் மூன்று பக்கங்களிலும் வண்ணக்கோலத்தில் எட்டு லட்சுமிகளும் காட்சி தருகின்றனர். அதன் தென்கிழக்கு மூலையில் சிவலிங்கத்தை லட்சுமிதேவியும், குபேரரும் பூஜை செய்யும் காட்சி அமைந்துள்ளது.

இந்தத் திருத்தலத்தில்தான் வட திசைக்கு அதிபதியான குபேரன் தவமிருந்து, தான் இராவணனிடம் இழந்த அரும் பெரும் செல்வத்தையும், புஷ்பக விமானத்தையும் மீண்டும் பெற்றான் என்பது ஐதீகம். ஐப்பசி மாதம் அமாவாசை நாளில்தான் குபேரனுக்குச் சிவ தரிசனம் கிடைத்து, சிவபெருமானிடமிருந்து வரமும் கிடைக்கப்பெற்றது. எனவே இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஐப்பசி அமாவாசை அன்றும் குபேர யாகம் நடைபெறுகிறது. இப்போது ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று குபேர யாகத்துடன் அஷ்டலட்சுமி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள குபேரனுக்கும் மஹாலட்சுமிக்கும் மஹா அபிஷேகம் நிகழ்கின்றது

பிரார்த்தனை

அஷ்டலட்சுமிகளும் வழிபட்டதாலும், செல்வத்துக்கு அதிபதியான குபேரன் பூஜித்ததாலும் இத்தலத்து இறைவன் தன்னை வழிபடுவோருக்கு சகல சம்பத்துகளையும் வாரி வழங்குவதாக ஐதீகம். பண கஷ்டம், மன கஷ்டம், பணம் தொல்லை, சனி தோஷம், கடன்கள் நீங்க இக்கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர். லட்சுமி குபேர யாகத்தில், பங்கேற்கும் பக்தர்களுக்குப் பொருளாதார பிரச்னைக்கு தீர்வு கிடைப்பதாக பக்தர்களிடம் நம்பிக்கை நிலவுகிறது.

Read More
தஞ்சைப் பெரிய கோவில்

தஞ்சைப் பெரிய கோவில்

மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா

தஞ்சைப் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன். உலக வரலாற்றில் அலெக்ஸ்சாண்டருக்கு இணையாகப் போற்றப்பட வேண்டியவர். மாபெரும் யானைப்படை, கப்பல் படையைக் கொண்டு தெற்காசியா முழுமையும் தனது பராக்கிரமத்தால் கட்டியாண்ட மாமன்னன் ராஜராஜன், 947-ம் ஆண்டு ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர். 985-ம் ஆண்டு சதய நட்சத்திரத்தில் ஆட்சிப் பொறுப்பேற்று 1014-ம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். சைவர்கள் போற்றும் திருமுறைகளை மீட்டுத் தந்தவர் மாமன்னன் ராஜராஜன். அவரை சிறப்பிக்கும் வகையில், அவர் பதவியேற்ற 985-ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 -வது சதய விழா, இன்று (25.10.2023) அரசு விழாவாக கொண்டாடப்படுகின்றது.

தஞ்சைப் பெரிய கோவிலின் சிறப்புகள்

ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் மாமன்னன் ராஜராஜ சோழனின் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருக்கும் தஞ்சை பெருவுடையார் கோவிலின் சில சிறப்புகளை இப்பதிவில் காணலாம்.

1003க்கும் 1010ஆம் ஆண்டிற்கும் இடையில் சோழ மன்னனான ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்தக் கோயில், திராவிடக் கோயில் கலையின் உன்னதமான சான்றாகக் கருதப்படுகிறது. தற்போதுள்ள தொழில்நுட்பத்தை வைத்து கட்டினால் கூட பல ஆண்டுகள் ஆகும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னம் என்ற அந்தஸ்தை பெற்ற இந்தக் கோவில், இந்தியத் தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது. இந்தக் கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழா கடந்த 2010ஆம் ஆண்டில் நடைபெற்றது.

தஞ்சாவூரில் காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோவில், ராஜராஜேச்சரம், பெருவுடையார் கோவில், பிரகதீசுவரர் கோவில் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. காஞ்சியில் இராசசிம்மனால் கட்டப்பட்ட கயிலாயநாதர் கோவில், மாமன்னன் ராஜராஜசோழனை மிகவும் கவர்ந்தது. அதே போல் ஒரு கோவிலைக் கட்ட எண்ணிய ராஜராஜசோழன் தஞ்சையில் பெரிய கோவிலைக் கட்டினார். பெரியகோவிலின் அமைப்பு, திருவாரூர் தியாகராசர் கோவிலில் உள்ள அசலேசுவரர் சந்நிதியின் மாதிரியைக் கொண்டு உருவானதாகவும் செய்தி உண்டு. இக்கோயிலின் தலைமைச் சிற்பி குஞ்சர மல்லன் இராசராசப்பெருந்தச்சன் எனக் கோவிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோவில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீ உயரமான இக்கற்கோவிலை ராஜராஜசோழன் எழுப்பினார். கோவிலின் கட்டுமானப் பணிக்காக 1,30,000 டன் கிரானைட் கற்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அருகே மலைகள் இல்லாத நிலையில், நவீன போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில் சுமார் 50 மைல்கள் தொலைவில் இருந்து கோவியிலுக்கான கற்கள் எடுத்து வரப்பட்டிருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. இக்கோவில், கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, வெண்கலச் சிலையுருவாக்கம் ஆகியவற்றில் சோழர்களின் திறமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.

மாமன்னன் ராஜராஜசோழனின் தமிழ் பற்றை இக்கோவிலின் வடிவமைப்பில் இருந்து நாம் புரிந்து கொள்ளலாம். கோவிலில் உள்ள சிவ லிங்கத்தின் உயரம் 12 அடி. தமிழின் உயிர் எழுத்துக்கள் 12, சிவ லிங்கத்தின் பீடத்தின் உயரம் 18 அடி. தமிழின் மெய் எழுத்துக்கள் 18, கோவிலின் கோபுரத்தின் உயரம் 216 அடி. தமிழின் உயிர் மெய் எழுத்துக்கள் 216, சிவ லிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி. தமிழ் மொழியின் மொத்த எழுத்துக்கள் 247 ஆகும். கருவறையில் உள்ள சிவலிங்கம் மிகவும் பெரியது. 6 அடி உயரம், 54 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார், 23 அடி உயரம் கொண்ட லிங்கம் ஆகியன தனித்தனியாக கருங்கற்களால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ள நந்தி 20 டன் எடையும், இரண்டு மீட்டர் உயரம், ஆறு மீட்டர் நீளம், இரண்டரை மீட்டர் அகலமும் கொண்டதாகவும், இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நந்தியுமாகவும் உள்ளது, கோபுரத்தின் மேல் உள்ள வைக்கப்பட்டுள்ள கலச வடிவிலான மேற்கூரை கல் சுமார் 80 டன் எடை கொண்ட ஒற்றை கல்லால் செய்யப்பட்டது என்பது பெரிய அதிசயம். அதைவிட பெரிய அதிசயம், அப்பெரிய கல்லை எப்படி அவ்வளவு மேலே எடுத்துச் சென்றனர் என்பதுதான்.

அழகி என்னும் இடையர் குல மூதாட்டி, பெரிய கோவில் கட்டி முடிக்கும் வரை கோவில் கட்டும் சிற்பிகளின் தாகத்தை போக்கும் பொருட்டு தினமும் அவர்களுக்கு தயிர், மோர் வழங்கி வந்தார். இதனை அறிந்த மன்னர் ராஜராஜசோழன் இடையர் குல மூதாட்டியின் சிவத்தொண்டை அனைவரும் அறியும் வண்ணம், இராசகோபுரத்தின் உச்சியில் உள்ள 80டன் எடை கொண்ட கல்லில், அழகி என்று மூதாட்டியின் பெயர் பொறித்தார். அந்த கல் இடைச்சிக் கல் என்று அழைக்கப்படுகிறது. இப்படி, கோவிலில் உள்ள கல்வெட்டில், கோவிலை கட்ட யார் யார் பணியாற்றினார்களோ, கட்டடக்கலை நிபுணர்களிலிருந்து அவர்களின் துணிகளை சலவை செய்தவர்கள், முடி திருத்தியவர்கள் என கோவில் பணி செய்ய உதவியவர்களுக்கு தொண்டு செய்தவர்களின் பெயர் கூட கல்வெட்டில் பதிவு செய்திருப்பது ராஜ ராஜ சோழனின் பெருந்தன்மையும், மக்கள் மீது அவர் வைத்திருந்த அன்பும், ராஜ ராஜ சோழன் மீது மக்கள் கொண்டிருந்த அன்பும் புலப்படுகிறது.

Read More
தஞ்சாவூர் பங்காரு காமாட்சியம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

தஞ்சாவூர் பங்காரு காமாட்சியம்மன் கோவில்

முகத்தில் புனுகு காப்புடன் காட்சி அளிக்கும் பங்காரு காமாட்சி அம்மன்

தஞ்சாவூர் மேல வீதியில் அமைந்துள்ளது பங்காரு காமாட்சியம்மன் கோவில். பதினெட்டாம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னனான பிரதாப சிம்மன் இக்கோவிலை கட்டினார். கோவிலின் மூலவராக பங்காரு காமாட்சியம்ன் உள்ளார். தெலுங்கு மொழியில் பங்காரு என்றால், தங்கம் என்று பொருள்.

கருவறையில் பங்காரு காமாட்சியம்மன், தங்கத்தாலான திருமேனி உடையவளாய், வலது கரம் கிளியை ஏந்தியும், இடது கரம் நளினமாக வளைந்து கீழே தொங்க விடப்பட்டும், மூன்று வளைவுகளோடு வில்போன்ற ஒயிலோடு நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அம்மனின் திருமுகத்தில், எப்போதும் புனுகு காப்பு சாத்தப்பட்டு இருப்பதால், கருமை நிறத்துடன் காட்சி அளிப்பாள். பங்காரு காமாட்சி அம்மன் முதலில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில்தான் எழுந்தருளி இருந்தாள். பதினெட்டாம் நூற்றாண்டில் அடிக்கடி நிகழ்ந்த அந்நியர் படையெடுப்பினால் அச்சம் கொண்ட அப்போதைய காஞ்சி மடாதிபதி, காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து இந்த பங்காரு காமாட்சி அம்மன் விக்ரகத்தை எடுத்துக் கொண்டு பல ஊர்களில் தங்கி இருந்து பின்னர் தஞ்சை வந்தடைந்தார். விக்ரகத்தின் பாதுகாப்பு கருதி அதன் திருமேனியை துணியால் சுற்றி முகத்திற்கு மட்டும் கருமையான புனுகு காப்பு சாத்தி எடுத்து வந்தார்கள். அதன் அடிப்படையில்தான் இப்பொழுதும் அம்மனின் திருமுகத்தில் புனுகு காப்பு சாத்தப்பட்டு வருகிறது.

கருவறையின் வெளிப்புறத்தில் இடப்புறத்தில் உற்சவர் காமகோடியம்மன் சன்னதி உள்ளது. மூலவர் பங்காரு காமாட்சி அம்மனுக்கு வருடத்தில் நவராத்திரியின் ஒன்பது நாட்கள், காமாட்சியின் ஜென்ம நட்சத்திரமான ஐப்பசி பூரம், பங்குனி உத்திரம் ஆகிய 11 நாட்கள் மட்டும் தான், அபிஷேகம் நடைபெறுகிறது. மற்ற நாட்களில் உற்சவருக்குத்தான் அபிஷேகம் நடைபெறுகிறது. உற்சவ மூர்த்தி காமகோடி அம்மனுக்கு கனுப் பொங்கல் அன்று முழுத் தேங்காயை உடைக்காமல் நிவேதனம் செய்யும் சம்பிரதாயம் இங்கு மட்டும்தான் உண்டு. அதுபோல கிருஷ்ண ஜெயந்திக்கும் முறுக்கு-சீடை நிவேதனம் செய்கிறார்கள். வைணவ ஆலயங்களைப் போலவே பக்தர்களுக்கு சடாரி சார்த்தும் வழக்கம் இருந்து, இப்போது மறைந்து விட்டிருக்கிறது.

சியாமா சாஸ்திரிகளுக்கு அருள் புரிந்த பங்காரு காமாட்சியம்மன்

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரிகள் இக்கோவிலில் நித்ய பூஜைகள் செய்யும் பணியில் இருந்து,பின்னர் கீர்த்தனைகள் பாடும் புலமை பெற்றார். இவரது பெரும்பாலான பாடல்கள் காமாட்சி அம்மன் பேரில் பாடப்பட்டிருக்கும். வெள்ளிக்கிழமைகளிலும் மற்றும் விசேட தினங்களிலும் சியாமா சாஸ்திரிகள் பங்காரு காமாட்சியின் சந்நிதியில் உட்கார்ந்து கொண்டு தியானம் செய்வார். அவ்வேளைகளில் அநேக கீர்த்தனைகள் அவர் வாக்கினின்றும் உதித்தன. இக்காரணம் பற்றியே இவரது கீர்த்தனைகளுக்கு தனியான சுவை ஏற்பட்டது என்பர்.

Read More
தஞ்சை பெரிய கோவில்

தஞ்சை பெரிய கோவில்

ராஜராஜ சோழனுக்கு தஞ்சை பெரிய கோவில் கட்ட இடம் காட்டிய வராகி அம்மன்

சப்தகன்னியரில் ஒருவரான வராகி அம்மன், திருமாலின் வராக அம்சமாக கருதப்படுகிறார். இவர் வராகமெனும் பன்றி முகத்தையும், எட்டு கரங்களையும் உடையவர்.

மாமன்னர் ராஜராஜ சோழனின் குலதெய்வம் வராகி அம்மன். தஞ்சை பெரிய கோவின் தெற்கு பிரகாரத்தில் வராகி அம்மனுக்கு தனிக் கோவில் இருக்கிறது. வராகி அம்மன்,வலது கையில் உலக்கையுடனும், இடது கையில் கலப்பையுடனும் காட்சி தருகிறார்.

ராஜராஜ சோழன் போருக்கு செல்லும் முன்பு வராகி அம்மனை வணங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். அவர் இந்த அன்னையின் அருள் பெற்றுதான் எந்த செயலையும் தொடங்குவார். ராஜராஜசோழன் தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கு பல இடங்களை தேர்வு செய்தார். ஆயினும் இறைவனிடமிருந்து உத்தரவு கிடைக்க தாமதமானது. அப்போது ஒரு நாள் வேட்டைக்குச் சென்றபோது, ஒரு இடத்தில் மன்னருக்கு முன்பு ஒரு பன்றி எதிர்த்து நின்றது. அதனை துரத்திச் சென்றபோது போக்கு காட்டி பல இடங்களுக்கு சென்று ஒரு பெரிய திடலில் சுற்றி சுற்றி வந்து படுத்துக்கொண்டது . இது ராஜராஜ சோழனுக்கு வியப்பை அளித்தது. வராகமாக இருப்பதனால் அதனை கொல்லாமல் துரத்தினார். ஆனால் அது எழுந்து நின்று தன் காலால் தரையை உதைத்து பூமியை தோண்டியது. அரண்மனை திரும்பிய ராஜராஜ சோழன் ஜோதிடரை அழைத்து விவரம் கேட்டார். கோவில் கட்ட அந்த இடத்தினை வராகி தேவி தேர்ந்தெடுத்து கொடுத்து இருப்பதை தெரிவித்தார் ஜோதிடர் .அந்த இடத்தில் பெரிய கோவில் கட்டும் முன்பு வெற்றி தேவதை வராகிக்கு சிறிய தனித்த ஒரு சன்னதியை அக்னி மூலைக்கு அருகில் அமைத்து வழிபட்டு பின்னர் பணியை தொடங்கினார். அந்த வராஹி தேவியின் அருளால் உலகம் போற்றும் ஆலயமாக பெரிய கோவில் மாறி நிற்கிறது. ராஜ ராஜ சோழன் கடைபிடித்த முறையிலேயே தற்போதும் எந்த ஒரு நிகழ்ச்சியை தொடங்குவதானாலும் முதலில் வராகி அம்மனுக்கு பூஜை செய்த பின்னரே தொடங்கும் வழக்கம் பெரிய கோவிலில் உள்ளது.

பிரார்த்தனை

பஞ்சமி திதியில் வராகி அம்மனை வழிபட்டால் வறுமை, பிணி, பில்லி, செய்வினைகள் அகலும். எதிரிகள் விலகுவர் என்பது ஐதீகம். வழக்குகளிலிருந்து விடுபட வராகியின் அருள் கட்டாயம் தேவை. வராகி உபாசனை செய்பவருடன் வாதாடாதே என வழக்கு மொழியே உள்ளது.

Read More
அம்மன்குடி கைலாசநாதர் சுவாமி கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

அம்மன்குடி கைலாசநாதர் சுவாமி கோவில்

நூறு கண்கள் கொண்ட துர்க்காதேவி

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு 15 கி.மீ. தொலைவில் உள்ள அம்மன்குடி கிராமத்தில் அமைந்துள்ளது பார்வதிதேவி உடனுறை கைலாசநாதர் சுவாமி கோவில். இத்தலம், முதலாம் ராஜராஜ சோழனின் படைத்தலைவரான கிருஷ்ணன் ராமன் பிரம்மராயன் வாழ்ந்த ஊர். பிரம்மராயன் கி.பி. 944-ல் இக்கோவிலை கட்டி ராஜராஜேஸ்வரம் என்று பெயர் சூட்டியதாக வரலாறு கூறுகிறது.

இத்தலத்தின் மகிமையை ஸ்கந்த புராணத்தில் சொல்லப்பட்டு உள்ளது. மகிஷாசுரனை வதம் செய்தபோது அவனுடைய ரத்தத்தால் பூசப்பட்ட தன்னுடைய திரிசூலத்தை துர்க்கா பரமேஸ்வரி அம்மன் இங்குள்ள புஷ்கரணியில் சுத்தம் செய்ததால், இத்தலத்து புஷ்கரணி பாப விமோசன தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. தன் பாவம் தீர்ந்த பூமியில் குடியிருக்க துர்க்காதேவி விரும்பினாள். அங்கேயே குடியிருந்ததால் இவ்வூருக்கு அம்மன்குடி என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் சிவலிங்கம், விநாயகர் ஆகியோரை பிரதிஷ்டை செய்து அம்பாள் வழிபட்டாள்.

அம்பாளுக்கு முக்கியத்துவம் தரும் இடமாக இருந்தாலும் இக்கோவிலில் கைலாசநாதரே மூலவராக இருக்கிறார். கைலாசநாதரின் வலதுபாகத்தில் துர்க்கை காட்சி தருகிறாள். அம்பாள் துர்க்கா பரமேஸ்வரி என்ற பெயரில் எட்டு கைகளுடன் எட்டுவித ஆயுதங்கள் தாங்க சிம்ம வாகனம், மகிஷன் தலை ஆகியவற்றுடன் சாந்த முகத்துடன் காட்சி தருகிறாள். மகிஷாசுரமர்த்தினி என்றும் இவளை கூறுகிறார்கள். ஒரு சிவன் கோவிலில் துர்க்காதேவிக்கு கிழக்கு நோக்கிய சன்னதி அமைந்துள்ளது இத்தலத்தின் தனி சிறப்பாகும். நவக்கிரகங்களுக்கு அதிபதியாக துர்க்கை விளங்குவதால் இங்கு நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி கிடையாது.

இங்குள்ள துர்க்கைக்கு நூறு கண்கள் இருப்பதாக ஐதீகம். மழை இல்லாத காலங்களில் இந்த அம்பிகைக்கு பூஜை செய்தால் மழை பெய்யும் என்பது நம்பிக்கை.

நினைத்த காரியம் நிறைவேற, சகல சௌபாக்கியங்களும் கிட்ட துர்க்கைக்கு திரிசதி அர்ச்சனை

அம்மன்குடி துர்க்கா பரமேஸ்வரியை செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் சிவப்பு புஷ்பத்தால் திரிசதி அர்ச்சனை செய்து வழிபட்டால் நினைத்த காரியமும், சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்பது உறுதி.

பிரார்த்தனை

துர்க்கையை கீழ்க்கண்ட தினங்களில் பூஜித்தால் சிறப்பாகும். செவ்வாய், அமாவாசை, அஷ்டமி, பவுர்ணமி, நவராத்திரி தினங்களில் கோயிலை வலம் வந்து வழிபடுபவர்களுக்கு திருமணத்தடை, ராகுகேது தோஷங்கள் நிவர்த்தியாகும். செல்வஅபிவிருத்திக்கு வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரை, குழந்தை பாக்கியம் கிடைக்க திங்கள்கிழமை, பிணி அகல, வழக்குகளில் வெற்றி பெற, பகை நீங்க, வேலைவாய்ப்பு கிடைக்க செவ்வாய்க்கிழமை ராகுகாலம், ஆயுள் பலம் பெற சனிக்கிழமைகளில் துர்கா பரமேஸ்வரியை வணங்கி வரலாம். திருமணமாகாத பெண்கள் இத்தலத்தில் வீற்றிருக்கும் அம்பாளை வணங்கினால் விரைவில் திருமண பாக்கியம் கிட்டும். சகல தோஷங்களும் நீங்கி மக்கட்பேறு உண்டாகும். சுவாச(காச) நோய்கள் நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

Read More
கும்பகோணம் சாரங்கபாணி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

கும்பகோணம் சாரங்கபாணி கோவில்

அட்சய திருதியை - கும்பகோணம் பன்னிரெண்டு கருடசேவை உற்சவம்

ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு பிறகு வரும் 3-வது திதியான அட்சய திருதியை தினத்தில் கும்பகோணத்தில் உள்ள பன்னிரெண்டு வைணவ கோவில்களிலிருந்து, பன்னிரெண்டு கருட வாகனங்களில் உற்சவர் பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு ஒரே இடத்தில் அருள்பாலிப்பது வழக்கம்.

இந்த ஆண்டு ஏப்.23-ம் தேதி கும்பகோணம் டிஎஸ்ஆர் பெரிய தெருவில், கருட வாகனங்களில் உற்சவ பெருமாள் சுவாமிகள், அங்கு அமைக்கப்பட்டுள்ள அலங்கார பந்தலில் ஒரே இடத்தில் எழுந்தருளி பொதுமக்களுக்கு காட்சி தரவுள்ளனர்.

இதில், ஸ்ரீசாரங்கபாணி, ஸ்ரீசக்கரபாணி, ஸ்ரீராமசுவாமி, ஸ்ரீஆதிவராகபெருமாள், ஸ்ரீராஜகோபாலசுவாமி, ஸ்ரீபட்டாபி ராமர், பட்டாச்சாரியார் தெரு ஸ்ரீகிருஷ்ணன், ஸ்ரீசந்தான கோபாலகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன், ஸ்ரீவேணு கோபால சுவாமி, ஸ்ரீவரதராஜபெருமாள் உள்ளிட்ட 12 கோயில்களின் உற்சவ பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருளுவர். அப்போது, எதிரில் ஆஞ்சநேயர் எழுந்தருளியவுடன், அந்த பெருமாளுக்கு முன்பு திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார் ஆகியோர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கும்.

பெருமாளை கருட வாகனத்தில் சேவை சாதிக்கக் காண்போருக்கு மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம். மேலும் நாக தோஷம், கால சர்ப்ப தோஷம் இருந்தாலும் நீங்கும் என்பது நம்பிக்கை.

Read More
விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோவில்

விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோவில்

அட்சய திருதியைக்கு உரிய தனிச்சிறப்புத் தலம்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் விளங்குளம் . இறைவன் திருநாமம் அட்சயபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் அபிவிருத்தி நாயகி.

கருவறையில் அட்சயபுரீஸ்வரர் லிங்கத் திருமேனியராக கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இவர், சனி பகவானுக்கு அருளிய தினம் ஓர் அட்சய திருதியை நாள். எனவே இறைவன், அட்சயபுரீஸ்வரர் என்றே அழைக்கப்படுகிறார். அட்சயம் என்றால் வளர்வது என்று அர்த்தம். இத்தலத்திற்கு ஒருமுறை வந்து போனாலே பக்தர்களின் இல்லத்தில் செல்வம் உள்ளிட்ட பதினாறு பேறுகளும் தழைத்து வளரும் என்பது ஐதீகம்.

செல்வங்கள் அனைத்துக்கும் அதிபதியான குபேரன், ஈசனை வழிபட்டே சங்கநிதி, பதுமநிதிகளைப் பெற்றான் என்கிறது புராணம். அப்படி குபேரன் செல்வங்களைப் பெற்று அளகாபுரிக்கு அரசனானதும், அட்சயபுரீஸ்வரரின் அருளால்தான் என்பதால் இத்தலம் அட்சய திருதியைக்கு உரிய தனிச்சிறப்புத் தலமாகக் கூறப்படுகிறது.

அம்பிகை அபிவிருத்தி நாயகி, மேல் இரு கரங்களில் தண்டத்தையும், தாமரையையும் தாங்கி, கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரைகளுடன் நின்ற கோலத்தில் புன்னகை தவழ தென்திசை நோக்கி அருள்பாலிக்கின்றாள். அம்பிகையின் திருநாமமும், அபிவிருத்தி நாயகி என அமைந்திருப்பது, இத்தலத்தில் வழிபட்டால், மேலும் மேலும் செல்வங்கள் வளரும் என்பதையே உறுதிப்படுத்துகிறது. கணவருக்கு நிகராக, இவளும் நமக்கெல்லாம் அபிவிருத்தியைத் தந்தருளும் கருணைக் கடல் என்று பக்தர்கள் போற்றுகின்றனர்.

அட்சய திருதியை நாளில், மூலவர் சிவனாருக்கு சந்தனக் காப்பில் மாதுளை முத்துக்கள் பதித்து, சிறப்பு பூஜைகள் நடைபெறும். பிறகு, சனீஸ்வரருக்கு புனுகு கலந்த சந்தனக் காப்பு செய்வித்து, எள், அரிசி, கோதுமை, பாதாம்பருப்பு, குங்குமப்பூ மற்றும் நவதானியங்களைப் பதித்து அலங்கரிப்பார்கள்.

அட்சய திருதியை நாளிலும் வெள்ளி, ஞாயிறு, திங்கட்கிழமை முதலான நாட்களிலும் விளங்குளம் வந்து, சிவபார்வதியைத் தரிசித்தால், சகல செல்வங்களும் பெற்று இனிதே வாழலாம் என்பது ஐதீகம்.

புராணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் அட்சயதிருதியை நாளில் நடந்த சில நிகழ்வுகள்

- வேத வியாசர், மகாபாரதத்தை விநாயகர் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்ட நாள் அட்சய திருதியை.

- திருமாலின் பத்து அவதாரங்களில் ஒருவரான பரசுராமர் அவதரித்த நாள்

- நான்கு யுகங்களில் முதல் யுகமான கிருத யுகத்தில், பிரம்மன் உலகத்தைப் படைத்தது அட்சய திருதியை நாளில்தான்

- இரண்டாவது யுகமான கிரேதா யுகம் தோன்றிய நாளும் ஒரு அட்சய திருதியை அன்றுதான்

-காசியில் அன்னபூரணியிடம் அன்னம் பிச்சை பெற்று, சிவனின் தோஷம் நீங்கிய நாளும் அட்சய திருதியைதான்

- பகீரதனின் தவத்தால் கங்கை பூமிக்கு வந்ததும் ஒரு அட்சய திருதியை அன்றுதான்

- கிருஷ்ணன் தன் நண்பன் குசேலனிடமிருந்து அவல் மூட்டையை பெற்றுக் கொண்டு அவருடைய வறுமையை நீக்கிய நாள் அட்சய திருதியை.

- கிருஷ்ணன், துரியோதனன் சபையில் திரௌபதியின் மானத்தை காப்பாற்றியதும் ஒரு அட்சய திருதியை அன்றுதான்

Read More
விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோவில்

விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோவில்

குடும்ப சமேதராக அருள் பாலிக்கும் அனுக்கிரக சனி பகவான்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் விளங்குளம் . இறைவன் திருநாமம் அட்சயபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் அபிவிருத்தி நாயகி.

இத்தலத்தில் நவக்கிரக சன்னிதி கிடையாது. அதற்குப் பதில் சூரியனும் அவரது புத்திரர் சனிபகவானும் தனித் தனி சன்னதிகளில் அருளுகின்றனர். இத்தலத்தில் சனீஸ்வர பகவான் தெற்கு நோக்கி குடும்ப சமேதராக தனது மனைவியர் மந்தா, ஜேஷ்டா ஆகியோருடன் எழுந்தருளியிருக்கிறார். இத்தலத்தில் சனிபகவான் சிவபெருமானை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றதால் இங்கு அவர் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

இவரை ஆதி பிருஹத் சனீஸ்வரர் எனப் போற்றுகிறார்கள். சனி பகவான் குடும்பத்துடன் இருப்பதால், 12 ராசிக்காரர்களும் இங்கு வந்து வழிபட்டால், சனியின் கோபத்தில் இருந்து தப்பிக்கலாம், அவரின் அருளைப் பெறலாம் என்கிறது தல புராணம்.

பூச நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டிய சனிபகவான்

இவரை நினைத்து மாதந்தோறும் அமாவாசை தினங்களில் காகத்துக்கு அல்லது இயலாதவர்களுக்கு உணவு வழங்கினால், பித்ரு தோஷம் நீங்கும். கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும். வீட்டில் தரித்திரம் விலகி ஐஸ்வரியம் பெருகும் என்கிறார்கள்.

குறிப்பாக, பூச நட்சத்திரக்காரர்கள் வணங்கிய வேண்டிய திருத்தலம் என்றும் பூச மருங்கர் எனும் சித்தர் வழிபட்ட தலம் இது என்றும் சொல்கிறது தல புராண மகிமை. எனவே, மாதந்தோறும் பூச நட்சத்திர் நாளில், தைப் பூச நாளில் வந்து வேண்டிக்கொள்ளலாம்.

Read More
தேப்பெருமாநல்லூர் விசுவநாத சுவாமி கோவில்

தேப்பெருமாநல்லூர் விசுவநாத சுவாமி கோவில்

பழைய சோற்றை நிவேதனமாக ஏற்றுக் கொள்ளும் அன்னதான தட்சிணாமூர்த்தி

கும்பகோணத்திற்கு அருகே, சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலம் தேப்பெருமாநல்லூர். இறைவன் திருநாமம் விசுவநாத சுவாமி. இறைவியின் திருநாமம் வேதாந்த நாயகி. யாருக்கு மறுபிறவி இல்லையோ அவர்கள்தான் இக்கோவிலுக்கு வரமுடியும்; சுவாமியைத் தரிசிக்க முடியும் என்பது நம்பிக்கை.

இக்கோவிலின் தெற்குப் பகுதியில் உள்ள சந்நிதியில் தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். இவர் காலடியில் முனிவர்கள் இல்லை. அதற்கு பதில் நாகம் ஒன்று படம் எடுத்திருக்கும் காட்சியை தரிசிக்கலாம். இவரை அன்னதான தட்சிணாமூர்த்தி என்பர். இவரை தரிசித்தால் சாபங்கள் நீங்கும்; கல்வி ஞானத்தில் சிறந்து விளங்க லாம். இவருக்கு பழைய சோறு (அதாவது முதல் நாள் சமைத்து இரவு தண்ணீர் ஊற்றிய அன்னம்) நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. இவரை மனதார வழிபட்டால் பசித்த நேரத்தில் உணவு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்

1. நந்தியெம்பெருமான் வலதுக்காது மடங்கி இருக்கும் அபூர்வத் தோற்றம்

https://www.alayathuligal.com/blog/8b87el97d7m4g5rnrjpx7l82wtsxy2

2. சிவபெருமானுக்கு ருத்ராட்ச மணி கவசம் சாத்தப்படும் தலம்

https://www.alayathuligal.com/blog/lc5e8xag9et35fe4jwj8llpwtt9f85

Read More
தேப்பெருமாநல்லூர் விசுவநாத சுவாமி கோவில்

தேப்பெருமாநல்லூர் விசுவநாத சுவாமி கோவில்

நந்தியெம்பெருமான் வலதுக்காது மடங்கி இருக்கும் அபூர்வத் தோற்றம்

கும்பகோணத்திற்கு அருகே, சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலம் தேப்பெருமாநல்லூர். இறைவன் திருநாமம் விசுவநாத சுவாமி. இறைவியின் திருநாமம் வேதாந்த நாயகி.

இக்கோவிலின் மகா மண்டபத்திலிருந்து கிழக்கு வாசல் வழியாக வெளியே வந்தால் நந்தியெம்பெருமான் காட்சி தருகிறார். இங்குள்ள நந்தி பெருமானுக்கு ஒரு பக்க காது சிறியதாகக் காட்சியளிக்கின்றது. பிரளய காலத்தில் உலகமே மூழ்கியபோது இத்தலம் மட்டும் தண்ணீரில் மூழ்காமல் வெளியே தெரிந்தது. அப்போது பிரம்மா இத்தலத்தில் இறங்கிப் பார்த்தார். அங்கே விசுவநாத சுவாமி எழுந்தருளியிருப்பதைக் கண்டு வழிபட்டார். ஈசன் அப்போது ஜோதிர்லிங்கமாய் காட்சி கொடுத்தார்.

இந்த நிலையில் பிரளயத்தில் சிக்கிக் கொண்ட நந்தி இறைவனைத் தேடி இத்தலத்திற்கு வேகமாக வந்தது. அப்போது அது கால் சறுக்கி ஒரு பக்கமாக விழுந்துவிடவே, அதன் வலதுக்காது மடங்கி உள்நோக்கிச் சென்று விட்டது. இதனால் வருந்திய நந்தி இறைவனை நோக்க, நந்தியின் உள்ளப் போக்கை அறிந்த இறைவன், 'நந்தியே! வருந்தாதே. யார் ஒருவர் தங்கள் குறைகளை உன் வலக் காது இருந்த பக்கம் சொல்கிறார்களோ, அதனை நான் உடனே நிவர்த்தி செய்வேன்' என்று ஆறுதல் கூறினார். அதன்படி, இந்த நந்தியின் வலக்காதுப் பக்கம் தங்கள் குறைகளைக் கூறினால் அது நிவர்த்தி ஆகி விடுகிறது என்கிறார்கள்.

ருத்திராட்சம் பிரசாதமாகத் தரப்படும் தலம்

இக்கோவிலில் மாதம்தோறும் நடைபெறும் பிரதோஷ வழிபாடு பிரசித்தி பெற்றதாகும். நந்தியம் பெருமானுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், இளநீர் கொண்டு அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. பிரதோஷ காலங்களில் சிவபெருமான் ருத்ராட்சக் கவசம் சாற்றப்பட்டு காட்சி அளிப்பது பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாக அமைகின்றது எனப் பக்தர்கள் கூறுகின்றனர். மேலும் பிரதோஷ தினங்களிலும், மகா சிவராத்திரி போன்ற விசேஷ தினங்களிலும் ருத்திராட்சம் பிரசாதமாகத் தரப்படுவது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

சிவபெருமானுக்கு ருத்ராட்ச மணி கவசம் சாத்தப்படும் தலம்

https://www.alayathuligal.com/blog/lc5e8xag9et35fe4jwj8llpwtt9f85

Read More
கோனேரிராஜபுரம் பூமீஸ்வரர் கோவில்

கோனேரிராஜபுரம் பூமீஸ்வரர் கோவில்

வெள்ளை ஆடை அணிந்த சனிபகவான்

திருவிடைமருதூரில் இருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத்தலம் கோனேரிராஜபுரம். இறைவன் திருநாமம் உமா மஹேஸ்வரர், பூமீஸ்வரர். இறைவியின் திருநாமம் தேகசௌந்தரி.

இக்கோவிலில் சனிபகவான் மேற்கு பார்த்த நிலையில் உள்ளார். நளனும் அவனது மனைவி தமயந்தியும் திருநள்ளாறு செல்லும் முன் இத்தலத்தில் வழிபாடு செய்து அனுக்கிரகம் பெற்றுள்ளனர். எனவே மற்ற தலங்களில் கருப்பு ஆடை அணிந்திருக்கும் சனி, இங்கு மட்டும் வெள்ளை ஆடை அணிந்து அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவருக்கு வெள்ளை எள்ளால் ஆன எண்ணையில் தீபம் போட வேண்டும். சனி தோஷத்தில் பாதிக்கபட்டவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

மனிதரைப் போல ரோமம், மச்சம், ரேகை, நகம் ஆகிய அம்சங்கள் உடைய நடராஜர்

https://www.alayathuligal.com/blog/y4hp9sx9mja22exzhw7rmkdrdc4wk3

Read More
புஷ்பவனநாதர் கோவில்

புஷ்பவனநாதர் கோவில்

ஆடி அமாவாசையன்று பதிமூன்று கங்கைகள் பொங்கும் கிணறு

தஞ்சாவூரில் இருந்து திருக்கண்டியூர் வழியாக 13 கி.மீ. தூரத்திலுள்ள தேவாரத் தலம் திருப்பூந்துருத்தி. இறைவன் திருநாமம் புஷ்பவனநாதர். இறைவி சௌந்தர்யநாயகி. இரண்டு ஆறுகளுக்கு நடுவே அமைந்துள்ள ஊர் ஆனது துருத்தி என அழைக்கப்படுகிறது. இத்தலமானது காவிரிக்கும், குருமுருட்டிக்கும் இடையில் அமைந்துள்ளதால் திருப்பூந்துருத்தி எனப்பெயர் பெற்றது.

ஒரு முறை முனிவர்கள் பலர் ஒன்று கூடி பேசிக் கொண்டிருந்தனர். 'ஆடி அமாவாசை தினத்தில் வேதாரண்யம், தனுஷ்கோடி, சங்கமுகம், திரிவேணி சங்கமம், கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, காவிரி, சிந்து, பிரம்மபுத்ரா, தாமிரபரணி, ராமேஸ்வரம் ஆகிய பதிமூன்று தீர்த்தங்களிலும் நீராடினால் பெரும் புண்ணியம் கிடைக்கும். பித்ரு சாபங்கள் விலகும். எனவே இந்த 13 புனித தீர்த்தங்களிலும் ஆடி அமாவாசை தினத்தில் நீராடி ஈசனை வழிபட வேண்டும் என்கின்றன புராணங்கள். ஆனால் யாரால் இது சாத்தியமாகும்?' என ஏக்கத்தில் பரிதவித்தபடி பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கிருந்த காசிப முனிவர், 'ஏன் முடியாது? நான் ஆடி அமாவாசை அன்று இந்த பதிமூன்று தீர்த்தங்களிலும் நீராடி, பிதுர் தர்ப்பணம் முடித்துக் காட்டுகிறேன்' என்றார். பின்னர் அவர், ஈசனை வேண்டி தவம் இயற்றி பல சிவத்தலங் களுக்கு சென்று வழிபட்டு வந்தார். அதன் ஒரு பகுதியாக திருப்பூந்துருத்தி வந்தடைந்தார். அங்கும் சிவபெருமானை வேண்டி தவம் இருந்தார். அவரது தவத்தை மெச்சிய இறைவன், ஆடி அமாவாசை அன்று காசிபருக்கு காட்சி கொடுத்தார். மேலும் 13 புனித தீர்த்தங்களையும், ஒரே இடத்தில் (திருப்பூந்துருத்தியில்) பாயும்படிச் செய்தார். அந்தத் தீர்த்தம் தற்போது, காசிப தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது. காசிபர் அந்த புனித நீரில் நீராடி, சிவபெருமானையும், அம்பாளையும் அபிஷேகம் செய்து வழிபட்டார். அதன்காரணமாக அவருக்கு சிவபெருமானுடன் ஐக்கியமாகும் முக்திநிலை கிடைத்ததாக தலபுராணம் கூறுகிறது.

இத்தலத்தில் சோமாஸ்கந்த மண்டபத்தை அடுத்துள்ள பகுதியில், தென்கிழக்கு மூலையில் கிணறு வடிவில் உள்ளது காசிப தீர்த்தம்.

ஆடி அமாவாசை நாளில் வழிபடுவதால் ஏற்படும் நற்பலன்கள்

ஆடி அமாவாசை நாளில் இத்தலத்தை கிரிவலம் வந்தால், பித்ரு சாபங்கள் நீங்கும். செல்வ வளம் பெருகும்.தடைகள் அகலும். தீவினைகளும் விலகும் என்பது ஐதீகம். ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று, இவ்வாலயத்தில் திருவிழா நடத்தப்படுகிறது. அன்றைய தினம் இத்தல காசிப தீர்த்தத்தில் நீராடினால் 13 புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய முழுப் பலனும் கிடைக்கும். மேலும் இத்தலத்தை ஆடி அமாவாசை அன்று 18 முறை கிரிவலமாக வந்து ஈசனையும், அம்பிகையையும் வழிபட்டால், பித்ரு சாபங்கள் தீர்வதுடன், குல தெய்வத்தின் அருளும் பரிபூரணமாய் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

பித்ரு தோஷம் ஒருவரது ஜாதகத்தில் இருக்குமேயானால் ,அவர்களுக்கு நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமலும்,நீண்ட நாள் திருமணம் ஆகாமல் இருப்பதற்கும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அவ்வாறு உள்ளவர்கள், இத்தலத்திற்கு வந்து அமாவாசை நாட்களில்,இறைவன் புஷ் வனநாதரையும், அம்பாள் சௌந்தர்யநாயகியையும் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் தடைகள் நீங்கி நன்மையே நடக்கும் என்பது ஐதீகம்.

இத்தலத்து முருகனை புகழ்ந்து அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார்.

Read More
ஆலந்துறைநாதர் கோயில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

ஆலந்துறைநாதர் கோயில்

அழகும், கம்பீரமும் மிகுந்த துர்க்கையம்மன்

கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூருக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் ஐயம்பேட்டையைத் தாண்டி, கண்டியூர் செல்லும் பேருந்துச் சாலையில் சென்றால் தேவாரத் தலமான பசுபதி கோயிலை அடையலாம். இத்தலத்தின் புராணப்பெயர் புள்ளமங்கை. இறைவன் திருநாமம் ஆலந்துறைநாதர். இறைவி அல்லியங்கோதை. இத்தலம் சப்தமாதர்களும், சப்த ரிஷிகளும் வழிபட்ட சப்தஸ்தான தலங்களுள் ஒன்றாகும்.

இக்கோவிலின் வடக்குப் பிரகாரத்திலுள்ள துர்க்கையம்மனின் மகிஷாசுரமர்த்தினி உருவம் தனிச் சிறப்புடையதாகத் திகழ்கின்றது. இந்த துர்க்கையம்மனின் அழகும், கம்பீரமும் பார்ப்பவரை பிரமிக்க வைக்கும். கருங்கல் குடை நிழலில், எட்டுக் கைகளுடன்,எருமைத் தலைமீது நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். தன் கைகளில் சங்கு சக்கரம், வாள், வில், கதை, சூலம், கேடயம், அங்குசம் முதலிய ஆயுதங்களை ஏந்தியிருக்கிறாள். துர்க்கையம்மனின் வாகனங்களான சிம்மம் வலதுபுறமும், கலைமான் இடதுபுறமும் இருக்கின்றன. துர்க்கையம்மனின் வாகனங்ககளின் கீழே இரு வீரர்கள் கத்தியால் தலையை அரிந்து தருவதுபோலவும், தொடையைக் கிழித்து இரத்த பலி தருவது போலவும் காட்சித் தருகிறார்கள். துர்க்கையம்மன் திரிபங்கியாய் ஒரு கையில் வில்லேந்தி, மற்றது அபயகரமாக மோதிர விரல் மடக்கிய முத்திரையுடன் இருக்க, பின்புறம் அம்பறாத்தூணி, அம்புகளும் விளங்க துர்கையம்மன் நின்றிருக்கும் கோலம், நேரிலேயே அவளைப் பார்க்கும் சிலிர்ப்பைத் தரும்.

திருநாகேஸ்வரம், பட்டீச்சுரம், திருப்புள்ளமங்கை ஆகிய இம்மூன்று தலங்களிலும் உள்ள துர்க்கையம்மன்கள் ஒரே சிற்பியால் செய்யப்பட்டவை என்றும், இம்மூன்றுமே மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும் சொல்லப்படுகிறது.

Read More
மகாலிங்கேசுவரர் கோவில்

மகாலிங்கேசுவரர் கோவில்

ராஜ அலங்காரத்தில் தன் மனைவியுடன் தட்சிணாமூர்த்தி இருக்கும் அபூர்வக் காட்சி

பொதுவாக சிவாலயங்களில் சிவபெருமானின் அம்சமான தட்சிணாமூர்த்தி, சுவாமி சன்னதியின் சுற்றுச் சுவரில் தென்திசையை நோக்கியபடி புன்னகை பூக்கும் முகத்துடன் வலது காலைத் தொங்கவிட்டு அதன்மீது இடது காலை மடக்கி வைத்து, வலது பாதம் முயலகனை மிதித்தவாறு அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். அவருடைய காலடியில் சனகாதி முனிவர்கள் நால்வரும் ஞானோபதேசம் கேட்டபடி அமர்ந்திருப்பார்கள்.

கும்பகோணத்தில் இருந்து 9 கி..மீ.தொலைவில், மயிலாடுதுறை செல்லும் சாலை வழியில் தேவாரத்தலமான திருவிடைமருதூரில் அம்பிகையுடன் ராஜ அலங்காரத்தில் தட்சிணாமூர்த்தி, ராஜ சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார்.

இவருக்கு 'சாம்ப தட்சிணாமூர்த்தி' என்று பெயர். மகாலிங்கசுவாமி சன்னதியின் முன் மண்டபத்தில் இவர் சுதை சிற்பமாக விளங்குகிறார். இத்தகைய ராஜ அலங்கார கோலத்தில் துணைவியுடன் காட்சி தரும் தட்சிணாமூர்த்தியை நாம் வேறு எந்தத் தலத்திலும் நாம் தரிசிக்க முடியாது.

Read More
மகாலிங்கேசுவரர் கோவில்

மகாலிங்கேசுவரர் கோவில்

திருவிடைமருதூர் மூகாம்பிகை அம்மன்

கும்பகோணத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவில் மயிலாடுதுறை செல்லும் சாலை வழியில் தேவாரத்தலமான திருவிடைமருதூர் இருக்கிறது. இறைவன் திருநாமம் மகாலிங்கேசுவரர். இக்கோவிலில் அம்பாள் சன்னதிக்குத் தெற்குப் பக்கம் மூகாம்பிகை அம்மன் சன்னதி உள்ளது. இந்தியாவில் இரண்டு இடங்களில்தான் மூகாம்பிகைக்கு சிறப்பு வாய்ந்த சன்னிதி உள்ளது. ஒன்று கர்நாடக மாநிலம் கொல்லூர், மற்றொன்று திருவிடைமருதூர்.

மகாலிங்கேசுவரரை கரம் பிடித்த மூகாம்பிகை அம்மன்

கொல்லூர் மூகாம்பிகை அம்மன் மூகாசுரனை வதம் செய்ததால் ஏற்பட்ட உக்கிரம் தணியவும், பிரம்மஹத்தி தோஷம் விலகவும், அவள் திருவிடைமருதூர் தலத்திற்கு வந்து மகாலிங்கேசுவரரை நோக்கித் தவம் இயற்றத் தொடங்கினாள். மேலும் அவள் மகாலிங்கேசுவரர் மேல் கொண்ட மோகத்தினால், அவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதும் அவளது தவத்தின் நோக்கமாக இருந்தது. அவளது தவத்தை மெச்சிய மகாலிங்கேசுவரர், மூகாம்பிகை அம்மனின் தோஷத்தை நிவர்த்தி செய்து, அவளை பிரகத் சுந்தரகுஜாம்பிகை என்ற திருநாமத்தடன் திருமணம் செய்து கொண்டார். இதனால்தான் இத்தலத்து அம்பாள் பிரகத் சுந்தரகுஜாம்பிகை நமக்கு திருமணக் கோலத்தில் தரிசனம் தருகிறாள்.

இத்தலத்து மூகாம்பிகை அமமனின் சன்னதி வட இந்திய கோயிற் கோபுர அமைப்பில் அமைந்து விளங்குகிறது. கருவறையில் மூகாம்பிகை அம்மன் கோரைப் பற்களுடன், கபாலம்,அங்குசம்,பாசம் முதலியவற்றைக் கரங்களிலேந்தி பத்மாசனத்தில் அமர்ந்து சாந்த சொரூபியாய் தவக் கோலத்தில் நமக்குக் காட்சி தருகின்றாள்.

அம்மனின் முன் மிகவும் சக்தி வாய்ந்த மகா மேரு ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பாஸ்கரராயர் எனும் அம்பாள் உபாசகர், தான் ஸ்ரீலலிதா ஸகஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் எழுதிய 'சௌபாக்கிய பாஸ்கரம்' என்னும் நூலை இந்த மூகாம்பிகை அம்மனின் முன்தான் அரங்கேற்றினார்.

மழலை வரம் அருளும் அம்மன்

கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் கோயிலில் உள்ள மூகாம்பிகையைப் போலவே இத்தலத்தில் வீற்றிருக்கும் திருவிடைமரூதூர் மூகாம்பிகையும் சிறப்பும் கீர்த்தியும் வாய்ந்தவள். அவளை வேண்டினால் தங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் என்பதால், பக்தர்கள் பெருமளவில் இங்கு வந்து வழிபடுகின்றனர். இந்த அம்மனை மனமுருக பிரார்த்தனை செய்யும் திருமணம் ஆன பெண்கள், தங்களுக்கு பிரச்சினை ஏதும் இல்லாத வகையில் கர்ப்பம் தரிக்க வேண்டுகின்றனர். அதற்காக அவர்கள் இத்தலத்தில் தொட்டில் கட்டி தங்களுக்கு மழலை வரம் வேண்டுகிறார்கள். அதுபோல் திருமண வரம் வேண்டியும், சுகப் பிரசவம் அடைவதற்காக கர்ப்பிணி பெண்களும் ஏராளமானோர் பிரார்த்திக்கிறார்கள்.

Read More