மகாலிங்க சுவாமி கோவில்

பக்தனின் பசியாற்ற பிரசாதத்துடன் வந்த பரமன்

கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் 8 கி.மீ. தொலைவில் உள்ளது திருவிடைமருதூர். அங்கிருந்து வடமேற்கில் 3 கி.மீ. தூரத்தில் திருவிசநல்லூர் திருத்தலம் இருக்கிறது.

திருவிசநல்லூர் பகுதியில் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் மகான் ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதர் என்பவர், சிறந்த சிவ பக்தரான இவர்,திருவிசநல்லூர் கோவிலில் தினமும் காலையில் வழிபாடு செய்து வந்தார். மாலை வேளையில் அருகில் உள்ள திருவிடைமருதூருக்குச் சென்று, மகாலிங்க சுவாமியையும் வணங்கி வருவார். அதன் பின்பே தினமும் இரவு உணவை உண்பார்.

திருவிடைமருதூருக்கு செல்லும் வழியில் வீரசோழன் என்ற ஆற்றைக் கடந்து சென்றுதான் தினமும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியை தரிசித்து வருவார். ஒரு நாள் மாலை பெரு மழை பெய்ய தொடங்கியது. வீரசோழன் ஆற்றில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதரால், ஆற்றினைக் கடக்க முடியவில்லை. இதனால் வீடு திரும்பிய அவர், மகாலிங்க சுவாமியை தரிசிக்காததால், உணவருந்தாமலேயே படுக்கைக்குச் சென்றார். திடீரென வீட்டு வாசல் கதவு தட்டும் ஓசை கேட்டது. கதவைத் திறந்து பார்த்தால், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலய அர்ச்சகர் பிரசாத தட்டுடன் நின்று கொண்டிருந்தார்.

'அய்யா! பெருமழை காரணமாக இன்று ஆற்றில் கடுமையான வெள்ளம் ஓடுகிறது. அதனால் மகாலிங்க சுவாமியை காண உங்களால் வரமுடியாது என்று நினைத்தேன். சுவாமியை தரிசிக்காமல், இரவு உணவு உண்ண மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆகவே தான் கோவில் பிரசாதத்துடன் வந்து விட்டேன்' என்றார் அர்ச்சகர். பிரசாதத்தைப் பெற்றுக்கொண்ட மகான், மகாலிங்க சுவாமியின் கருணையை எண்ணி வியந்தார். அந்த பிரசாதத்தை உண்டு பசியாறினார். மழை பெய்து கொண்டிருந்ததால் அர்ச்சகரை இரவு வீட்டிலேயே தங்கி செல்ல வேண்டினார். அர்ச்சகரும் சம்மதித்தார்.

உறக்கத்தில் கடும் குளிரால் அர்ச்சகர் அவதியுறுவதைக் கண்ட மகான், கம்பளியை எடுத்து வந்து அர்ச்சகருக்கு போர்த்தி விட்டார். பொழுது விடிந்தது. மழையும் நின்றது. உறக்கத்தில் இருந்து எழுந்த மகான், அர்ச்சகரைக் காணாமல் திகைத்தார். தன்னிடம் சொல்லாமலே சென்று விட்டாரே என்று எண்ணி விட்டு, விடிந்ததும் விடியாததுமாக, அந்த அதிகாலையிலேயே திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியை தரிசிக்க புறப்பட்டார்.

அங்கு மகாலிங்க சுவாமி சன்னிதியில் முதல் நாள் இரவு தன் வீட்டிற்கு வந்த அர்ச்சகர் நின்று கொண்டிருப்பதை கண்டார். அப்போது தான் அவரும் கோவிலுக்கு வந்திருந்தார். இன்னும் கோவில் நடை திறக்கப்படாமல் இருந்தது. அர்ச்சகரிடம் சென்ற ஸ்ரீதர வெங்கடேசர் நேற்று நடந்ததை நினைவுபடுத்தி, 'சுவாமி! என்னிடம் சொல்லாமலேயே வந்து விட்டீர்களே; என்று வருத்தப்பட்டார். அர்ச்சகர் திகைத்தவாறே, 'நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?. நான் எப்போது உங்கள் வீட்டிற்கு வந்தேன்? கடுமையான மழை காரணமாக, நான் நேற்று மாலையிலேயே கோவிலை சாத்திவிட்டு என் வீட்டிற்குச் சென்று விட்டேனே' என்றார். பின்னர் கோவிலைத் திறந்து கருவறை கதவை திறந்த போது, ஸ்ரீதர வெங்கடேசர், நேற்று இரவு அர்ச்சகருக்கு போர்த்தி விட்ட கம்பளி, ஈசனின் திருமேனியை தழுவிக்கொண்டிருந்தது.

அப்போதுதான் அவர்களுக்கு 'நேற்று நள்ளிரவில் கொட்டும் மழையில் ஸ்ரீதர வெங்கடேசர் வீட்டுக்கு சென்று பிரசாதம் உண்ணக் கொடுத்து, அவர் வீட்டில் தூங்கி வந்தது திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியே'' என்பது தெரிந்தது. ஈசனின் கருணையை எண்ணி இருவரும் உள்ளம் நெகிழ்ந்தனர்.

பின்னர் ஈசன் அருளால் அற்புதங்கள் பல புரிந்த ஸ்ரீதர வெங்கடேசர் தீட்சிதர் திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்க சுவாமியிடம் ஜோதி வடிவில் ஐக்கியமானார். கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமிக்கு, ஸ்ரீதர வெங்கடேசர் மடத்திலிருந்து வழங்கப் பெறும் வஸ்திரம் சாத்தப்படுகிறது. அதுபோல அன்று உச்சிகாலப் பூஜையின் நைவேத்தியம், திருநீறு முதலிய பிரசாதங்கள் திருக்கோவில் சிவாச்சாரியார் மூலம் மகானின் மடத்துக்கு தந்தருளும் ஐதீக நிகழ்வும் இன்றளவும் நடக்கிறது.

மகான் ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதர்பற்றிய முந்தைய பதிவு

கார்த்திகை மாத அமாவாசையன்று கிணற்றில் கங்கை பொங்கும் அதிசயம்

https://www.alayathuligal.com/blog/7fjgm5bdrbeybjlpp22ndrhh67can4

 
Previous
Previous

கபாலீஸ்வரர் கோவில்

Next
Next

வைத்தீஸ்வரன் கோவில்