கோலியனூர் வாலீஸ்வரர் கோவில்

திருநள்ளாறு சனீஸ்வரருக்கு இணையாக போற்றப்படும் கூர்மாங்க சனீஸ்வரர்

விழுப்புரத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது கோலியனூர் வாலீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. கிஷ்கிந்தையின் அரசன் வாலி வழிபட்டதால், இத்தலத்து இறைவன் வாலீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

இத்தலத்தில் தனிச் சன்னதியில் எழுந்தருளி இருக்கும் கூர்மாங்க சனீஸ்வரர், திருநள்ளாறு சனீஸ்வரருக்கு இணையாக போற்றப்படுகிறார். கூர்மாங்கம் என்றால் உடனே அல்லது சடுதியில் சங்கடங்களை நீக்குபவர் என்று பொருள். இவர் தெற்கு திசை நோக்கி எழுந்தருளி இருப்பதன் பின்னணியில், ஒரு ராமாயண காலத்து வரலாறு உள்ளது.

கிஷ்கிந்தையின் அரசன் வாலி மிகப்பெரிய சிவபக்தன். சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் முடிவதற்குள் 1000 சிவாலயங்களில் பூஜை செய்யும் வழக்கம் உடையவன். அதைப் போலவே இங்கு அடர்ந்த வனப் பகுதியில் 100 சிவலிங்கங்களை அமைத்து மேற்கு நோக்கி தவம் செய்வது வழக்கம். இதைப்பற்றி கேள்விப்பட்ட இலங்கை மன்னன் இராவணன், தன்னைவிட சிறந்த சிவபக்தனான வாலி மீது கோபம் கொண்டு வாலியின் தவத்தைக் கலைக்க முடிவு செய்து, தவம் செய்த வாலியினை பின்பக்கம் இறுக்கிப் பிடித்துக் கொண்டு வாலியை எங்கேயும் செல்ல விடாமல் தடுக்க நினைத்தான். இதனை உணர்ந்த வாலி தனது வாலினால் இராவணனை உடல் முழுவதும் சுற்றி கட்டி வாலில் தொங்கவிட்டபடி தனது பூஜைகளை குறித்த நேரத்தில் முடித்துவிட்டான். பின் இராவணனை சிறையில் அடைத்து வைத்திருந்தான். தனது மகன் அங்கதன் விளையாடும் பொருட்டு அவனது தொட்டிலின் மேலே, இராவணனை தலைகீழாக தொங்கவிட்டு வேடிக்கை காட்டினான். இதனை கேள்விப்பட்டு இராவணன் மனைவி மண்டோதரி வாலியிடம் மடிப்பிச்சை கேட்டு, இராவணனை அழைத்துச் சென்றாள். பின்னாளில் தனது மக்களுக்கு இராவணன் மூலம் எந்தத் துன்பமும் வராமல் தடுக்க, வாலி தனது ஞான சக்தியால் தெற்கு திசை நோக்கி (இலங்கையை நோக்கி) சனீஸ்வரர் பார்வை பட்டுக் கொண்டே இருக்கும்படி, சனீஸ்வரரை தனி சன்னதியில் பிரதிஷ்டை செய்தார்.

பிரார்த்தனை

தெற்கு திசை எமனின் திசை. தனது சகோதரர் எமதர்மனால் ஏற்படும் ஆயுள் கண்ட பிரச்னைகள் இந்த சனீஸ்வர பகவானை வழிபடுவதால் நீங்கும். இந்த சனீஸ்வரரை வணங்குவதால் அனைத்து வித ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் ஜன்ம சனி, ஏழரை சனி, அர்த்தமசனி, அர்த்தாஷ்டமசனி, அஷ்டமசனி, மற்றும் சனி திசை ஆகிய அனைத்து விதமான தோஷங்களும் நீங்கி நன்மைகள் ஏற்படும். தீராத வியாதிகளுக்கு முன் ஜென்ம பாவங்களே காரணம். முன் ஜென்ம பாவங்களை தீர்க்கும் ஒரே கடவுள் சனீஸ்வரர்தான். ஆயுள் கண்டம் ஏற்படுத்தும் இதய நோய், வலிப்பு நோய், தலைசம்பந்தப்பட்ட நோய்கள், எலும்பு, நரம்பு வியாதிகளில் பாதிக்கப்பட்டவர்கள். சனீஸ்வரரை வழிபட நன்மை நடக்கும். ஆயுள் பலம் வேண்டுவோர் நீல வஸ்திரம் அணிவித்து நீல மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடலாம். தனது வயதின் எண்ணிக்கையில் தீபம் ஏற்றி வயது எண்ணிக்கையில் சனிதோறும் சுற்றிவந்து நீண்ட ஆயுள் பலம் பெறலாம். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஏழைகளுக்கு எள் மற்றும் பிற சாதங்களை அன்னதானம் செய்யலாம்.

இந்த சனி பகவானுக்கு மாதா மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் ஹோமமும், சனீஸ்வர நவகிரக சாந்தி ஹோமமும், சனிக் கிழமை தோறும் சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்

 1. சப்த கன்னியருக்கு உபதேசம் செய்த  'கன்னியர் குரு' தட்சிணாமூர்த்தி (15.02.2024)

 https://www.alayathuligal.com/blog/f74fpx96e4kbek73m4rwwnnsx9jhcc?rq

 2. கோலியனூர் சிவபெருமானுக்கு துளசியால் அர்ச்சனை (25.07.2021)

 https://www.alayathuligal.com/blog/adn89p53mgw7ah6lhtwcwa3mwxztn4?rq

படங்கள் உதவி : திரு. சிவகுமார் குருக்கள், ஆலய அர்ச்சகர்

 
Previous
Previous

நெற்குன்றம் கரி வரதராஜப் பெருமாள் கோவில்

Next
Next

சீயாத்தமங்கை அயவந்தீசுவரர் கோவில்