சீயாத்தமங்கை அயவந்தீசுவரர் கோவில்

சிவசொரூபமாக, சிரசில் கங்கை, ருத்ராட்சம், மற்றும் நெற்றிக்கண்ணுடன் காட்சி அளிக்கும் அம்பிகையின் அபூர்வ கோலம்

நாகப்பட்டினம்- கும்பகோணம் சாலையில், திருபுகலூரில் இருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் சீயாத்தமங்கை. இறைவன் திருநாமம் அயவந்தீசுவரர். இறைவியின் திருநாமம் இருமலர்கண்ணியம்மை. அம்பிகைக்கு, உபயபுஷ்ப விலோசினி என்றொரு திருநாமமும் உண்டு.

அம்பிகை இருமலர்கண்ணியம்மை சிவசொரூபமாக சிரசில் கங்கை, ருத்ராட்சம், மற்றும் நெற்றிக்கண்ணுடன் சிவபாகத்தைக் கொண்டவளாக காட்சி தருகிறாள். அம்பிகையின் இந்தக் கோலம் அபூர்வமானது. வேறு எந்த தலத்திலும் நாம் எளிதில் தரிசிக்க முடியாதது. அம்பிகை, அக்னி வடிவமாகத் திகழ்கிறாள். எனவே, அவளைக் குளிர்விக்கும் வகையில், பௌர்ணமி தினங்களில் அபிஷேகங்கள் செய்வித்துப் பிரார்த்தித்தால், உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் யாவும் நீங்கும் என்பது நம்பிக்கை. பிள்ளை பாக்கியம் இல்லாதவர்கள், பௌர்ணமியில், இங்கேயுள்ள சூரிய-சந்திர தீர்த்தத்தில் நீராடி, அம்பிகைக்கு அபிஷேகம் செய்து தரிசித்தால், குழந்தை பாக்கியம் உண்டாகும்.

வழி தெரியாமல் தவித்த பயணிகளுக்கு வழிகாட்டிய அம்பிகை

இந்தத் தலத்தில் ஆலயம் மிகப் பிரமாண்டமாக உருவாக காரணம், இங்கு அருள்பாலிக்கும் அம்பிகை தான். அதன் பின்னணியில் ஒரு வரலாறு உண்டு. செட்டிநாடு எனப்படும் காரைக்குடியில் இருந்து, தொழில் நிமித்தமாக நாகப்பட்டினம் நோக்கி ஒரு கூட்டத்தினர் நடந்து வந்துகொண்டிருந்தனர். அப்போது மெல்ல இருள் படர்வதும், வெயில் அடிப்பதும், மழை பெய்வதுமாக இருந்தது. இதனால் அந்தப் பயணிகள் வழி தெரியாமல் அவதிப்பட்டனர். அந்த வேளையில் அங்கு சிறுமி ஒருத்தி வந்தாள். பயணிகள் கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவரின் கையைப்பிடித்தாள். "என்னுடன் வாருங்கள். நீங்கள் செல்லும் இடத்துக்கு வழி காட்டுகிறேன்” என்று அழைத்துச் சென்றாள். அவளுடைய கண்களில் மின்னிய பிரகாசத்தைக் கண்டு சிலிர்த்தனர் பயணிகள். 'யார் இந்த சிறுமி. நம்மை எங்கே கூட்டிச்செல்கிறாள்' என்று நினைத்தாலும், அந்த சிறுமி நமக்கு உதவத்தான் வந்திருக்கிறாள் என்பதை உணர்ந்தனர். மொத்தக் கூட்டமும் அவளைப் பின் தொடர்ந்தது. சற்று தூரத்தில் அமைந்திருந்த ஆலயத்தை அந்த கூட்டத்தினர் நெருங்கினர். அதன் பின் பெரியவர் கையை விடுவித்துக் கொண்ட அந்தச் சிறுமி சட்டென மறைந்து போனாள். அனைவரும் அதிர்ந்தனர். சிறுமியாக வந்தது, அந்தக் கோவிலில் அருள்பாலிக்கும் அம்பாளான இருமலர்க்கண்ணி அம்மையே என்பதை அறிந்து வியந்தனர். இயல்பாகவே கோவில் திருப்பணிகளில் ஆர்வம் கொண்ட அந்த அன்பர்கள், அம்பிகை வழி காட்டிய கோவிலுக்கும் திருப்பணிகள் செய்து முடித்து பிரமாண்டமான ஆலயமாக எழுப்பினர்.

 
Previous
Previous

கோலியனூர் வாலீஸ்வரர் கோவில்

Next
Next

கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் கோவில்