கோலியனூர் வாலீஸ்வரர் கோவில்

கோலியனூர் வாலீஸ்வரர் கோவில்

திருநள்ளாறு சனீஸ்வரருக்கு இணையாக போற்றப்படும் கூர்மாங்க சனீஸ்வரர்

விழுப்புரத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது கோலியனூர் வாலீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. கிஷ்கிந்தையின் அரசன் வாலி வழிபட்டதால், இத்தலத்து இறைவன் வாலீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

இத்தலத்தில் தனிச் சன்னதியில் எழுந்தருளி இருக்கும் கூர்மாங்க சனீஸ்வரர், திருநள்ளாறு சனீஸ்வரருக்கு இணையாக போற்றப்படுகிறார். கூர்மாங்கம் என்றால் உடனே அல்லது சடுதியில் சங்கடங்களை நீக்குபவர் என்று பொருள். இவர் தெற்கு திசை நோக்கி எழுந்தருளி இருப்பதன் பின்னணியில், ஒரு ராமாயண காலத்து வரலாறு உள்ளது.

கிஷ்கிந்தையின் அரசன் வாலி மிகப்பெரிய சிவபக்தன். சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் முடிவதற்குள் 1000 சிவாலயங்களில் பூஜை செய்யும் வழக்கம் உடையவன். அதைப் போலவே இங்கு அடர்ந்த வனப் பகுதியில் 100 சிவலிங்கங்களை அமைத்து மேற்கு நோக்கி தவம் செய்வது வழக்கம். இதைப்பற்றி கேள்விப்பட்ட இலங்கை மன்னன் இராவணன், தன்னைவிட சிறந்த சிவபக்தனான வாலி மீது கோபம் கொண்டு வாலியின் தவத்தைக் கலைக்க முடிவு செய்து, தவம் செய்த வாலியினை பின்பக்கம் இறுக்கிப் பிடித்துக் கொண்டு வாலியை எங்கேயும் செல்ல விடாமல் தடுக்க நினைத்தான். இதனை உணர்ந்த வாலி தனது வாலினால் இராவணனை உடல் முழுவதும் சுற்றி கட்டி வாலில் தொங்கவிட்டபடி தனது பூஜைகளை குறித்த நேரத்தில் முடித்துவிட்டான். பின் இராவணனை சிறையில் அடைத்து வைத்திருந்தான். தனது மகன் அங்கதன் விளையாடும் பொருட்டு அவனது தொட்டிலின் மேலே, இராவணனை தலைகீழாக தொங்கவிட்டு வேடிக்கை காட்டினான். இதனை கேள்விப்பட்டு இராவணன் மனைவி மண்டோதரி வாலியிடம் மடிப்பிச்சை கேட்டு, இராவணனை அழைத்துச் சென்றாள். பின்னாளில் தனது மக்களுக்கு இராவணன் மூலம் எந்தத் துன்பமும் வராமல் தடுக்க, வாலி தனது ஞான சக்தியால் தெற்கு திசை நோக்கி (இலங்கையை நோக்கி) சனீஸ்வரர் பார்வை பட்டுக் கொண்டே இருக்கும்படி, சனீஸ்வரரை தனி சன்னதியில் பிரதிஷ்டை செய்தார்.

பிரார்த்தனை

தெற்கு திசை எமனின் திசை. தனது சகோதரர் எமதர்மனால் ஏற்படும் ஆயுள் கண்ட பிரச்னைகள் இந்த சனீஸ்வர பகவானை வழிபடுவதால் நீங்கும். இந்த சனீஸ்வரரை வணங்குவதால் அனைத்து வித ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் ஜன்ம சனி, ஏழரை சனி, அர்த்தமசனி, அர்த்தாஷ்டமசனி, அஷ்டமசனி, மற்றும் சனி திசை ஆகிய அனைத்து விதமான தோஷங்களும் நீங்கி நன்மைகள் ஏற்படும். தீராத வியாதிகளுக்கு முன் ஜென்ம பாவங்களே காரணம். முன் ஜென்ம பாவங்களை தீர்க்கும் ஒரே கடவுள் சனீஸ்வரர்தான். ஆயுள் கண்டம் ஏற்படுத்தும் இதய நோய், வலிப்பு நோய், தலைசம்பந்தப்பட்ட நோய்கள், எலும்பு, நரம்பு வியாதிகளில் பாதிக்கப்பட்டவர்கள். சனீஸ்வரரை வழிபட நன்மை நடக்கும். ஆயுள் பலம் வேண்டுவோர் நீல வஸ்திரம் அணிவித்து நீல மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடலாம். தனது வயதின் எண்ணிக்கையில் தீபம் ஏற்றி வயது எண்ணிக்கையில் சனிதோறும் சுற்றிவந்து நீண்ட ஆயுள் பலம் பெறலாம். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஏழைகளுக்கு எள் மற்றும் பிற சாதங்களை அன்னதானம் செய்யலாம்.

இந்த சனி பகவானுக்கு மாதா மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் ஹோமமும், சனீஸ்வர நவகிரக சாந்தி ஹோமமும், சனிக் கிழமை தோறும் சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது.

Read More
கோலியனூர் வாலீஸ்வரர் கோவில்

கோலியனூர் வாலீஸ்வரர் கோவில்

சப்த கன்னியருக்கு உபதேசம் செய்த 'கன்னியர் குரு' தட்சிணாமூர்த்தி

விழுப்புரத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது கோலியனூர் வாலீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. கிஷ்கிந்தையின் அரசன் வாலி வழிபட்ட சிறப்பினை உடையது. அதனால் இறைவன் வாலீஸ்வரர் என்றே அழைக்கப்படுகிறார்.

பொதுவாக தட்சிணாமூர்த்தி இறைவன் சன்னதி சுற்றுச்சுவரில், தனது நான்கு சீடர்களுடன் அருள் பாலிப்பார். ஆனால் இத்தலத்தில், தட்சிணாமூர்த்தி சப்த கன்னியருடன் எழுந்தருளி இருப்பது தனிச்சிறப்பாகும். தட்சிணாமூர்த்தி சப்த கன்னியருடன் எழுந்தருளி இருப்பதற்கும் அம்பிகை மகிஷாசுரனை வதம் செய்ததற்கும் தொடர்புண்டு.

மகிஷாசுரன், கருவில் உருவாகாத பெண்ணால் மட்டுமே அழிவு உண்டாக வேண்டுமென்ற வரம் பெற்றிருந்தான். தான் பெற்ற வரத்தால், தேவர்களை துன்புறுத்தினான். தங்களைக் காக்கும்படி தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சிவன், அம்பிகையிடம், மகிஷாசுரனை வதம் செய்யும்படி கூறினார். அதன்படி அம்பிகை, தன்னிலிருந்து பிராஹ்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டி என ஏழு சக்திகளைக் தோற்றுவித்தாள். "சப்தகன்னியர்' எனப்பட்ட இவர்கள் மகிஷாசுரனை அழித்தனர். இதனால் அவர்களுக்கு தோஷம் உண்டானது.

இந்த தோஷம் நீங்க, கயிலாயம் சென்று சிவனை வேண்டினர். .இவர்களது வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் கோலியனூர் எனும் தலத்தில் தன்னை வழிபட்டு வரும்படியும், குறிப்பிட்ட காலத்தில் தோஷ நிவர்த்தி செய்வதாகவும்கூறினார். சப்த கன்னியர்களை பாதுகாக்க தன்னுடைய அம்சமான வீரபத்திரனை உடன் அனுப்பி வைத்தார். இத்தலத்தில் சப்த கன்னியருக்கு தட்சிணாமூர்த்தியாக அமர்ந்து உபதேசம் செய்து கொலைப்பாவத்தினை நீக்கினார். அவர்களுக்கு விமோசனம் தந்து, சிவாலயங்களில் அம்பிகையின் காவலர்களாகவும் இருக்க அருள்பாலித்தார். இதன் அடிப்படையில் இத்தலத்தில், சப்தகன்னியர் தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெறும் கோலத்தில் காட்சி தருகின்றனர். இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம். சப்தகன்னியருக்கு அருளியவர் என்பதால் இவரை, "கன்னியர் குரு' என்று அழைக்கிறார்கள். வீரபத்திரர் சப்த கன்னியரின் பாதுகாப்பிற்காக இங்கு வந்தபோது, அவர் ரிஷபத்தில் வந்தார். இந்த நந்தி கோயிலுக்கு வெளியில் இருக்கிறது. நந்தி அருகில் கொடிமரம் உள்ளது.

பொதுவாக தட்சிணாமூர்த்தியை, வியாழக்கிழமைகளில் வழிபாடு செய்வார்கள். ஆனால், பக்தர்கள் இங்கு தினமும் பூஜை செய்து வழிபடுகிறார்கள். பிராமிக்கு உரிய அதிதேவதை பிரம்மா. எனவே, தலைவிதி சரியில்லை என வருந்துபவர்கள் மன அமைதி கிடைக்கவும், கல்வியில் சிறப்பிடம் பெறவும் ஞாயிற்றுக் கிழமைகளில் இவளை வழிபடுகிறார்கள். மகேசுவரிக்குரிய அதிதேவதை சிவன் என்பதால், முக்தி கிடைக்க சிவனுக்குரிய திங்கட்கிழமைகளில் இவளிடம் வேண்டிக்கொள்கிறார்கள். கவுமாரிக்குரிய அதிதேவதை முருகன் என்பதால், இவளிடம் செவ்வாய் தோஷ நிவர்த்திக்காக வேண்டுகிறார்கள். குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக சனிக்கிழமைகளில் வைணவியையும், தீராத நோய்கள் விரைவில் குணமாக புதன்கிழமையில் வாராகியையும், தோஷ நிவர்த்தி பெற வியாழக்கிழமைகளில்

இந்திராணியையும், திருமணத்தடை நீங்க வெள்ளிக்கிழமைகளில் சாமுண்டியையும் வழிபடுகிறார்கள். இவ்வாறு ஒவ்வொரு கன்னியரையும் வணங்கும் போது அவர்களுடன், தட்சிணாமூர்த்திக்கும் நைவேத்யம் படைக்கிறார்கள். இதனால், தங்களின் குருவின் கட்டளைப்படி பக்தர்களுக்கு சப்தகன்னியர் அருளுவதாகச் சொல்கிறார்கள். பஞ்சமி திதியன்று, சப்தகன்னியருடன் உள்ள வீரபத்திரருக்கு விசேஷ பூஜை நடக்கும்.

Read More