பவளமலை முத்துகுமார சுவாமி கோவில்

முருகன் பிரம்மச்சாரியாகவும், வள்ளி தெய்வானை தவக்கோலத்திலும் இருக்கும் தலம்

ஈரோட்டில் இருந்து 35 கி மீ தொலைவில் உள்ள கோபிசெட்டிபாளையத்தில் இருந்து 3 கி மீ. தூரத்தில் அமைந்துள்ளது பவளமலை முத்துகுமார சுவாமி கோவில். மலைமீது உள்ள கோவிலுக்கு செல்ல 60 படிக்கட்டுகள் உள்ளன. இந்த கோவிலும் பச்சைமலையில் முருகக்கடவுளை வைத்து வழிபாடு செய்த துர்வாச முனிவரால் உருவாக்கப்பட்டது.

மூலவர் முத்துக்குமார சுவாமி பிரம்மசாரியாக எழுந்தருளியுள்ளார். வாயு மூலையில் வள்ளி தெய்வானைமுருகனைத் திருமணம் செய்து கொள்வதற்காக தவம் இருக்கின்றனர். அதாவது, திருமணத்துக்கு முந்தைய வள்ளி, தெய்வானையை இங்கு தரிசிக்கலாம்

இக்கோவிலில் முருகப்பெருமானுக்கு நடைபெறும் திரிசத அர்ச்சனை சிறப்பு மிக்கதாகும். திரி என்றால் மூன்று, சதம் என்றால் நூறு. திரிசதம் என்பது முந்நூறு. முருகப் பெருமான் சூரனை சம்ஹாரம் செய்த பின், இந்திரன் முதலான தேவர்கள் கூடி, அவருக்கு செய்த அர்ச்சனையே திரிசதார்ச்சனை. வெற்றியைப் புகழ்ந்து செய்ததால் இதற்கு சத்ரு சம்ஹார திரிசதார்ச்சனை என்று பெயர் வந்தது. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்து தொழிலும் சிவனைப் போன்று முருகனுக்கும் இருக்கிறது என்று போற்றப்படும் அர்ச்சனையாக விளங்குகிறது. சூரசம்ஹாரம், வள்ளிதேவசேனா கல்யாணம், தந்தைக்கு உபதேசம், தேவர் குலம் காக்க, பிரம்ம சாஸ்திரம், பக்தர்களுக்கு அனுக்கிரஹம் ஆகிய ஆறு காரணங்களுக்காக முருகனுக்கு ஆறுமுகம் ஏற்பட்டது. அதிலிருந்து சரவணபவ என்ற ஆறெழுத்து மந்திரம் (சடாச்சரம்) உருவானது. கேடு மற்றும் இடையூறு நீங்க. ஒரு முகத்திற்கு 50 அர்ச்சனை வீதம் ஆறுமுகத்துக்கு 300 மந்திரங்கள் சொல்லப்படுகின்றன. இதனால் திருமணத்தடை நீங்குவதுடன், குழந்தைப்பேறும் கிடைக்கிறது. அரசியல் வெற்றி, தொழிலில் அபார வளர்ச்சி, எதிரிகளை முறியடித்தல் ஆகியவற்றுக்காகவும் இந்த அர்ச்சனையைச் செய்கின்றனர்.

பவளத்தின் நிறம் சிவப்பு, சிவப்பின் அதிபதி செவ்வாய். செவ்வாயின் அதிதேவதை சுப்பிரமணியர், பவளமலையில் திரிசதார்ச்சனை செய்வதன் மூலம் செவ்வாய் தோஷம் நீங்குகிறது. செவ்வாய் மாலை ஐந்து மணிக்கு பருப்பு பாயாசம், உளுந்தவடை நைவேத்தியமாக படைக்கப்பட்டு திரிசதார்ச்சனை நடக்கும். இதில் பங்கேற்றால், நினைத்தது நடக்குமென்பது ஐதீகம்.

 
Previous
Previous

மாங்காடு வெள்ளீஸ்வரர் கோவில்

Next
Next

திருவண்ணாமலை பூதநாராயணப் பெருமாள் கோவில்