ஆமூர் ரவீஸ்வரர் கோவில்

ஆமூர் ரவீஸ்வரர் கோவில்

புதுமண தம்பதிகள் வணங்க வேண்டிய திருவதன தட்சிணாமூர்த்தி

திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் 27 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஆமூர் ரவீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் ஆனந்தவள்ளி. இத்தலத்து இறைவனை வழிபட்டு சூரியபகவான் தன்னுடைய அதீத உஷ்ணத்தை குறைத்துக் கொண்டார். எனவே இத்தலம் சூரிய தோஷம், பித்ரு தோஷம், ஜாதக தோஷம் உள்ளவர்களுக்கு பரிகாரத்தலமாக விளங்குகின்றது.

இத்தல தட்சிணா மூர்த்தியை சித்தர்கள், திருவதன தட்சிணாமூர்த்தி என்று அழைக்கிறார்கள். காலவ மகரிஷி, இத்தல ஈசனின் திருவடிகளில் அமர்ந்து தொடர்ந்து தவமியற்றி, தினமும் தன்னுடைய தவ சக்திகளை லட்சுமி தேவியாக திருவிடந்தை பெருமாளுக்கு மண முடித்து வைத்தார். இவ்வாறு முதன் முதலில் திருவிடந்தை பெருமாள் திருமகளை திருமணம் புரிந்த போது, லட்சுமியின் தந்தையான காலவ மகரிஷியின் ஆசியைப் பெறவும், இறைவனுக்கு நன்றி தெரிவிக்கவும், பெருமாள் தம்பதி சமேதராக ஆமூர் திருத்தலத்திற்கு எழுந்தருளினார். அப்போது தட்சிணா மூர்த்தி திருமணத்திற்குப் பின் தம்பதிகள் ஒருவரையொருவர் எப்படி பார்த்து அன்புடன் புன்னகை புரிய வேண்டும் என்று தானே புன்னகை புரிந்து ஆசி வழங்கினாராம். அந்த தெய்வீக காட்சியைக் கண்ட தேவர்கள் எல்லாம் மணம் குளிர்ந்து தட்சிணா மூர்த்தி, காலவ மகரிஷி, பெருமாள் தம்பதிகள் மேல் மலர்கள் தூவி வணங்கினார்கள். அன்று முதல் ஆமூர் திருத்தல தட்சிணா மூர்த்தி, திருவதன தட்சிணா மூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். திருவதன தட்சிணா மூர்த்தியைப் போல பெருமாளும், லட்சுமி தேவியும் புன்னகை புரிய அப்போது தோன்றியதே பெருமாளின் அழகிய மணவாளன் தரிசனம். திருமணமானவர்கள் முதன் முதலில் தரிசனம் செய்ய வேண்டிய மூர்த்தியே திருவதன தட்சிணா மூர்த்தி ஆவார். இங்கு தரிசனம் பெறும் புதுமணத் தம்பதிகளுக்கு மற்றோர் ஈடு இணையற்ற பாக்கியமும் காத்திருக்கிறது. தம்பதிகள் ஸ்ரீதிருவதன தட்சிணாமூர்த்தியையும், காலவ மகரிஷியையும் வணங்கும்போது அது குபேர திசையான வடக்கு நோக்கி அமைவதால் காலவ மகரிஷியின் 360 திருமகள் தேவிகளின் ஒருமித்த லட்சுமி கடாட்ச சக்திகளுமே அவர்கள் மேல் குபேர நிதியாக பொழியும்.

Read More
சேத்திரபாலபுரம்   காலபைரவர் கோவில்

சேத்திரபாலபுரம் காலபைரவர் கோவில்

காசிக்கு மேலாக போற்றப்படும் சேத்திரபாலபுரம் காலபைரவர்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள சேத்திரபாலபுரம் கிராமத்தில் காசிக்கு மேலாக போற்றப்படும் பழமையான காலபைரவர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் 2000 ஆண்டுகள் பழமையானது. பல ஆலயங்களிலும் பைரவர் தனி சன்னிதியில் மட்டுமே காட்சி தருவார். காசியில் கூட பைரவருக்குத் தனி ஆலயம் கிடையாது. ஆனால் சேத்திரபாலபுரத்தில் காலபைரவர் மூலவராக எழுந்தருளி உள்ளார். சாதாரணமாக அனைத்து ஆலயங்களிலும் உள்ள பைரவர் சிலைகளில் அவருடன் நாயும் இருப்பதைக் காணலாம். அது மட்டுமின்றி அந்த பைரவர்கள் எல்லாம் சாந்தமான முகத்தைக் கொண்டு காட்சி தருவது இல்லை. ஆனால் சேத்திரபாலபுரத்தில் உள்ள பைரவர் தன்னுடைய வாகனமான நாய் இல்லாமல், தாமரை மலரில் சிரித்த முகத்தோடு வீற்றிருக்கிறார். இதனால் இவரை 'ஆனந்த கால பைரவர்' என்று அழைக்கிறார்கள். இங்கு உள்ள காலபைரவர் 12 ராசிகளுக்கும், 9 கிரகங்களுக்கும் அதிபதி ஆவார்.

காசிக்குச் சென்றுவிட்டு திரும்பிய கால பைரவரை, இந்த தலத்தில் வந்து பிரம்மா, இந்திரன், நவக்கிரகங்கள் போன்றவர்கள் பூஜித்து துதித்த கதை உள்ளது. நவக்கிரகங்களின் சக்தி வாய்ந்த ஆலயங்கள் இந்தத் திருத்தலத்தைச் சுற்றி (கும்பகோணம்) அமைந்திருப்பதற்கு அதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த ஆலயத்தைச் சுற்றி சூல தீர்த்தம், காவிரி தீர்த்தம், கணேச தீர்த்தம், சக்கர தீர்த்தம் மற்றும் கந்த தீர்த்தம் என்ற ஐந்து தீர்த்தங்கள் உள்ளன. ஆலயத்தின் வடக்குப் புறத்தில் உள்ள காவிரி தீர்த்தத்தை 'சங்கு முக தீர்த்தம்' என்று அழைக்கிறார்கள். அதற்குக் காரணம் அது சங்கு வடிவில் அமைந்து இருப்பதுதான். அதில் குளிப்பது காசியில் குளித்தப் புண்ணியத்தை தரும் என்று இந்த ஆலய தல வரலாறு சொல்கிறது.

பிரார்த்தனை

இத்தகைய சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இந்த கோயிலில் மிளகு தீபம், பூசணிக்காய் தீபம், பாகற்காய் தீபம், தேங்காய் தீபம் மற்றும் பஞ்சதீபம் எனப்படும் நெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய் சேர்த்து தீபமிட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம். கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமியை கால பைரவ அஷ்டமி என்று அழைக்கின்றோம். கால பைரவ அஷ்டமி, பாவங்களை எல்லாம் தீர்ந்து விடும். அஷ்டமி தினத்தில் காலபைரவரை வழிபடுவதன் மூலம் நமக்கு மிகச்சிறந்த நன்மைகள் கிடைக்கும். சனியினுடைய தோஷங்கள் விலகும். ஆயுள் தோஷங்களும் விலகும். ஆயுள் விருத்தி உண் டாகும். சுபகாரியத் தடைகள் விலகும். பில்லி, சூனியம், செய்வினை கோளாறுகளுக்கு பாகற்காயை வெட்டி அதில் வேப்ப எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். வாஸ்து தோஷம், கோ சாபம், பிதுர் சாபம், மாது சாபம், பண நஷ்டம், பெற்றோர் சாபம் போன்றவை நீங்க பூசணிக்காயில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமிட வேண்டும், உடல் நலக்குறைவு நீங்கி, அந்நிய தேசப்பயணம் சென்று பொருள் ஈட்ட கால பைரவருக்கு முந்திரி பருப்பு மாலை அணிவித்து வழிபட வேண்டும். அரசியலில் பெயர் புகழ் சேர பைரவருக்கு கிராம்பு மாலை அணிவிக்க வேண்டும். மாணவர்களின் கல்வி வளா்ச்சிக்கு பைரவருக்கு ஏலக்காய் மாலை அணிக்க வேண்டும். சித்த பிரம்மையால் பாதிக்கப்பட்டு சுயநினைவை இழந்தவர்கள் புத்திக்கூர்மை பெற்று தெளிந்த மனநிலை பெற செவ்வாழை பழத்தில் நெய் தீபமிட்டு வழிபட வேண்டும். இந்த கோவிலில் தேய்பிறை மற்றும் வளர்பிறை அஷ்டமி நாட்களில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து தீபம் ஏற்றி மாலை சூட்டி வழிபாடு செய்கிறார்கள்.

Read More
சேந்தமங்கலம் வானிலை கண்டீஸ்வரர் கோவில்

சேந்தமங்கலம் வானிலை கண்டீஸ்வரர் கோவில்

இசை ஒலி எழுப்பும் அபூர்வமான இசைக்குதிரைகள்

நம் தமிழ்நாட்டில் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், சுசீந்திரம் தாணுமாலாயன் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் முதலிய கோவில்களில் ஏழு ஸ்வரங்களை எழுப்பும் இசைத்தூண்கள் இருக்கின்றன. இந்த இசைத் தூண்கள் நம் முன்னோர்களின் சிற்பத் திறனையும், அறிவியல் திறனையும் உலகிற்கு வெளிப்படுத்துகின்றன. இந்த வரிசையில், இந்த இசைத் தூண் வேலைப்பாடுகளுக்கு எல்லாம் சிகரம் வைத்தாற்போல, விழுப்புரம் மாவட்டம் சேந்தமங்கலம் கிராமத்தில் உள்ள வானிலை கண்டீஸ்வரர் கோவிலில் இருக்கும் இசைக் குதிரைகள் விளங்குகின்றன.

உளுந்தூர்பேட்டையில் இருந்து விழுப்புரம் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 14 கிலோமீட்டரில் சேந்தமங்கலம் என்னும் கிராமம் உள்ளது. இன்றைக்கு சிறு கிராமமாக இருக்கும் இந்த இடம் கி.பி. 12-13 நூற்றாண்டில் காடவராயன் கோப்பெருஞ்சிங்கன் என்ற மன்னனின் தலை நகராக விளங்கியது. சோழ மன்னனையே கைது செய்து 6 ஆண்டு காலம் சிறையில் வைத்திருந்த இந்த குறு நில மன்னன், தன்னுடைய தலை நகரில் கோட்டை போன்ற அமைப்பில் பெரிய மதில் சுவர் சூழ "வானிலை கண்டீஸ்வரர்" என்ற பிரம்மாண்டமான கோயிலை அமைத்தான், கோட்டை சுவரின் நான்கு புறங்களிலும் காவலாளிகள் நிற்க பெரிய மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது, தற்போது இடிந்து தரைமட்டமாக கிடக்கும் இந்த கோயிலை மத்திய தொல்லியல் துறை பழைய முறைப்படி பல வருடங்களாக அழகாக புதுப்பித்து வருகின்றது.

அப்படிப்பட்ட அந்த கோயிலுக்கு எதிரில் பெரிய குளத்தை வெட்டிய காடவ மன்னர்கள், நான்கு புறங்களிலும் அழகிய படிகளை அமைத்து வட கரையில் நிழல் தருவதற்கென இரண்டு குதிரைகள் பூட்டிய தேர் போன்ற வடிவமைப்பில் எழில் மிக்க கருங்கல் மண்டபத்தையும் கட்டியுள்ளனர். ஒரு குதிரைக்கும் மறு குதிரைக்கும் இருக்கும் இடைவெளியை பார்த்தாலே அன்று இது எவ்வளவு பெரிய மண்டபமாக இருந்திருக்கும் என்று யூகிக்கமுடிகின்றது. இந்த மண்டபம் தற்போது முற்றிலும் அழிந்து இரண்டு குதிரைகள் மட்டும் எஞ்சியுள்ளன.

பெரிய சதுரவடிவ கருங்கல் பீடம், அதன் மீத தாமரை இதழ்களைக் கொண்ட மூன்றடுக்கு பீடம், அதன்மீது ஏறி அமர்ந்து தாவிச் செல்லும் கோலத்தில் குதிரை அமைந்துள்ளது. குதிரையின் கால்களில் அழகிய வேலைப்பாடுடைய அணிகலன்கள், முதுகில் பட்டாடை விரித்த கோலம்; அதிலும் வேலைப்பாடுகள் கொண்ட தோற்றத்தில் மிளிர்கின்றது. கழுத்தில் மாலை, அழகிய மணிகளைக்கோர்த்த மணிமாலைகள், தலைக்கு அணிவரிசை, வாயில் கடிவாளம் என மொத்த குதிரையின் வடிவமும், கலைநயம் கொண்டு விளங்குகின்றது. சீறிப்பாய்வது போல் நின்றுகொண்டிருக்கும் இக்குதிரையின் மீது சிறு கல்லை எடுத்து எங்கெல்லாம் தட்டுகிறோமோ அங்கெல்லாம் பல வித ஒலிகளை எழுப்புகின்றது. இப்படி இசை ஒலி எழுப்பும் சிற்பங்களை மற்ற தலங்களில், நாம் காண்பது அரிது.

Read More
கார்த்திகை சோமவார விரதம்

கார்த்திகை சோமவார விரதம்

கார்த்திகை சோமவார விரதத்தின் சிறப்புகள்

திங்கட்கிழமையை சோமவாரம் என்பார்கள். சிவபெருமானுக்கு ஸ்ரீசோமநாதர் என்னும் திருநாமமும் உண்டு. சிவபெருமானுக்குரிய எட்டு விரதங்களில் சோமவார விரதமும் ஒன்று.

பன்னிரண்டு மாதங்களில் கார்த்திகை மாத சோம வாரம் மிகச் சிறப்பானது. இந்த தினங்களில் சிவபெருமானை வழிபட்டு விரதம் இருந்தால் பெருமான் மிகவும் மகிழ்ந்து, திருப்தியடைந்து வேண்டும் வரம் எல்லாம் தந்திடுவார் என்பது முன்னோர் சொன்ன வழி. காரணம், இந்த சோம வார விரதச் சிறப்பை, சிவபெருமானே பார்வதி தேவிக்குச் சொல்லுவதாய் புராணங்களில் கூறப்பட்டுள்ளன. இந்த விரதத்தைப் போன்று வேறு எந்த விரதத்திலும் சிவபெருமான் திருப்தி அடைய மாட்டார் என்பது ஐதீகம்.

சிவனாரின் தலையில் சந்திரனையும் கங்கையையும் சூடியிருப்பார். சிவனின் ஜடாமுடியில் சந்திரன் அமர்ந்திருப்பதைக் கண்ட பார்வதிதேவிக்கு ஆச்சர்யம். தன் சுவாமியின் ஜடா முடியில் சந்திரன் அமரும் பேறு எப்படி வாய்த்தது என்று 'பெருமானே! சந்திரனைத் தாங்கள் தலைமேல் வைத்துக் கொண்டாடக் காரணம் என்ன? அதற்கு அவன் செய்த பாக்கியம் என்ன?' என்று பரமனிடமே கேட்டாள் பார்வதிதேவி. 'தேவி! சந்திரன் எனக்காக விரதம் இருந்து என்னை மகிழ்வித்தான். அதுவே காரணம் என்றார். அதற்கு பார்வதி தேவியும் மற்றும் அங்கிருந்தவர்களும், தங்களுக்கும் இந்த விரதம் குறித்துக் கூறி, தாங்களும் பெருமானின் கடாட்சத்தைப் பரிபூரணமாகப் பெற வழிசெய்யக் கோரினார்கள்.

குஷ்ட ரோகத்தால் பாதிக்கப்பட்டு சாபம் பெற்ற சந்திரன் கார்த்திகை சோமவார விரதத்தைக் கடைப்பிடித்து, விமோசனம் பெற்று சிறப்பு பெற்றான். சந்திரனுக்கு அருள்புரிந்த சிவன், தனது முடிமேல் சூடிக்கொண்டு சந்திரசேகரர் என்ற பெயரையும் ஏற்றார். சந்திரனின் நல்வாழ்வுக்காக அவனுடைய மனைவி ரோகிணி அவனுடன் சேர்ந்து இந்த விரதத்தைக் கடைப்பிடித்தாள். அன்று முதல், பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழவும், கணவனுக்கு மேன்மைகள் உண்டாகவும், கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படவும், நோய்நொடிகள் இல்லாமல் இருக்கவும், இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.

கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்

கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சிவ ஆலயங்களில் சங்காபிஷேகம் நடைபெறுகிறது. சில கோவில்களில் 108 சங்காபிஷேகமும், 1008 சங்காபிஷேகமும் விமரிசையாக நடைபெறும். திருவிடைமருதூர், திருக்கடவூர், திருநாகேஸ்வரம், திருவையாறு, தஞ்சாவூர், மயிலாடுதுறை. திருமயிலை, திருவொற்றியூர் என எல்லாத் கோவில்களிலும் சிறப்பான முறையில் சங்காபிஷேகம் நடத்தப்படுகின்றது. 108 அல்லது 1008 என சங்குகளில் வெட்டிவேர், விளாமிச்சை, பன்னீர், ரோஜா, ஏலம் என பல்வகைப்பட்ட வாசனாதி திரவியங்களில் நிறைந்த நன்னீரை நிரப்பி ஆகம முறைப்படி பூஜித்து, அந்த நீரைக் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வர். மாலை நேரத்தில் நிகழும் இந்த சங்காபிஷேகத்தை கண்டு தரிசிப்பதையும், அபிஷேக தீர்த்தத்தை தம் மேல் தெளித்துக் கொள்வதையும் அன்பர்கள் பெரும் பாக்கியமாகக் கருதி மகிழ்வர்.சங்காபிஷேகத்தில் சிவ தரிசனம் செய்தால் வாழ்வில் இழந்ததை பெறலாம். கார்த்திகை திங்கட்கிழமையில் சிவபெருமானுக்கு வில்வார்ச்சனை செய்து வணங்கினால், மனோபலத்தையும் தெளிவையும் பெறலாம்.

Read More
கஞ்சாநகரம் காத்ர சுந்தரேசுவரர்  கோவில்

கஞ்சாநகரம் காத்ர சுந்தரேசுவரர் கோவில்

முருகன் பிறக்கக் காரணமான தலம்

மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில், 8 கி.மீ தொலைவில் உள்ள கஞ்சாநகரம் என்ற ஊரில் அமைந்துள்ளது காத்ர சுந்தரேசுவரர் கோவில். இறைவன் திருநாமம் காத்ர சுந்தரேசுவரர். இறைவியின் திருநாமம் துங்கபாலஸ்தானம்பிகை. சிவனின் நெற்றிக்கண்ணில்,ஆறு குழந்தைகளாகத் தோன்றிய முருகப்பெருமானை வளர்த்த, கார்த்திகை பெண்கள். நிதர்த்தனி, அபரகேந்தி, மேகேந்தி, வர்தயேந்தி, அம்பா, துலா ஆகிய ஆறு பேரும் அவதரித்த தலம் இது.

பத்மாசுரன், சிங்கமுகன் முதலிய அசுரர்களால் பாதிக்கப்பட்ட முனிவர்களும், தேவர்களும் தங்களை காப்பாற்றும்படி பார்வதி தேவியிடம் முறையிட்டனர். இவர்களது குறை போக்க பார்வதி சிவனை வேண்டினாள். சிவபெருமான் காத்ரஜோதி (நெருப்பு வடிவம்) யோகம் பூண்டு தவம் செய்து கொண்டிருந்த காலம் அது. அம்மனின் வேண்டுதலால் தவம் கலைந்த சிவன். காத்ர சுந்தரேஸ்வரர் (கார்த்திகா சுந்தரேஸ்வரர்) என்னும் பெயர் கொண்டு தன் நெற்றிக் கண்ணைத் திறந்தார். காத்திகா சுந்தரேஸ்வரர் என்றால் ஆறுவித ஜோதிகளை உருவாக்கும் சக்தி படைத்தவர் என்பது பொருள். அதிலிருந்து ஆறு ஜோதிகள் புறப்பட்டன. அந்தப் பொறிகள் ஒன்றிணைந்து கார்த்திகேயன் ஆயின. முருகன் பிறக்க காரணமான, இத்தல இறைவனிடமிருந்து ஆறு தீப்பொறிகளின் காஞ்சனப்பிரகாசம் தோன்றியதால் இவ்வூர் காஞ்சன நகரம் என்று பெயர் பெற்றிருந்தது. காலப் போக்கில் கஞ்சாநகரம் (பொன் நகரம்) ஆனது. தான் தோன்ற காரணமாக இருந்த இத்தல இறைவனை, கார்த்திகேயன் தினமும் வழிபாடு செய்வதாக ஐதீகம். எனவே, இத்தலம் கார்த்திகை நட்சத்திரத்திற்குரிய தலமானது.

கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம்

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் அடிக்கடியோ, பிறந்த நட்சத்திரத்தன்றோ, பிரதோஷ நாட்களிலோ அவசியம் வழிபாடு செய்ய வேண்டிய தலமாக இது விளங்குகின்றது. இக்கோவிலில் அவர்கள் தீபம் ஏற்றி விசேஷ வழிபாடு செய்தால் வாழ்க்கை வளம் பெறும் என்பது நம்பிக்கை. அதிலும் குறிப்பாக கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் வெள்ளி கிழமை மற்றும் கார்த்திகை நட்சத்திர நாட்களில் வேதாமிர்த் கீரம் எனப்படும் அம்மனின் கையிலுள்ள கிளியை தரிசனம் செய்தால் சிறந்த மண வாழ்க்கை அமையும். திருமணத்தில் தடை உள்ள கார்த்திகை நட்சத்திரப்பெண்கள் துங்கபத்திரா நதியின் தீர்த்தத்தால், இத்தல அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், சுமங்கலி பூஜை செய்தும் வழிபட்டால் விரைவில் திருமண் நடக்கும் என்பது ஐதீகம்.

Read More
திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோவில்

திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோவில்

கார்த்திகை பௌர்ணமியில் விஸ்வரூப தரிசனம் தரும் திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர்

தொண்டை நாட்டின் 32 தேவாரத் தலங்களுள் ஒன்று சென்னை திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோவில். இக்கோவிலின் மூலவர் ஆதிபுரீசுவரர். இறைவியின் திருநாமம் வடிவுடை அம்மன். மூலவரான சுயம்பு ஆதிபுரீசுவரர் புற்று வடிவில் எழுந்தருளி, கிழக்கு நோக்கியபடி காட்சி தருகிறார். ஆவுடையாரின் மீது வழக்கமான லிங்கத் திருமேனிக்கு பதிலாக, படம் எடுத்த நாக வடிவில் இறைவன் காட்சி தருவது அபூர்வக் கோலமாகும். தன்னை வழிபட்ட வாசுகி பாம்பை, தன்னுள் ஐக்கியப் படுத்தியதால், இத்தல இறைவன் இப்படி காட்சியளிப்பதாக கூறப்படுகிறது.

இவர் கவசம் சார்த்தப்பட்டு நாக வடிவில், சதுர வடிவ ஆவுடையாரில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

வாசுகி என்னும் பாம்பு நாகலோகத்தில் அரசராக இருந்து வந்தது. தன் மகனுக்கு பட்டம் சூட்டியபின், உபமன்னியு முனிவரை சந்தித்து மோக்ஷம் பெற வழி என்ன என்று கேட்டது. அவர் திருவொற்றியூர் சென்று பிரம்ம தீர்த்தத்தில் நீராடி அங்கே எழுந்தருளிய சிவனை துதிக்க சொன்னார். வாசுகியும் அவ்வாறே செய்ய, மனமகிழ்ந்த ஈசன் புற்று வடிவில் தோன்றி, அந்த வாசுகிப் பாம்பைத் தன் திருக்கரம் கொண்டு பற்றியிழுத்து தம்முடைய திருவடியில் பொருந்தும்படிச் செய்தார். அதுவும் சிவபெருமானிடத்தில் ஐயக்கியமானது. பாம்புக்கு படம் என்றும் ஒரு பெயர் உண்டு. பாம்பு சிவன் அருகில் ஒதுங்கியதால் படம் பக்க நாதர் என்று ஈசன் அழைக்கப்பட்டார். அந்த புற்றில் இருந்து சுயம்புவாக ஒரு லிங்கமும் தோன்றியது. அதனால் புற்றீஸ்வரன் என்றும் அழைக்கப்படுகிறார்.

புற்று மண்ணால் சுயம்பு லிங்கமாக உருவானதால், லிங்கத்திருமேனி ஆண்டு முழுவதும் லிங்கத் திருமேனியில் புனுகுத் தைலம் சாத்தி, கவசத்தால் மூடப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் நிகழும் பௌர்ணமி தினத்தில் மட்டுமே கவசம் அகற்றப்பட்டு, பௌர்ணமியன்று மாலையில். ஆதிபுரீசுவரருக்கு, புனுகு மற்றும் சாம்பிராணி தைலத்தால் அபிஷேகம் நடத்தப்படும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஆதிபுரீசுவரருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். மூன்றாம் நாள் இரவில் மீண்டும் சுவாமிக்கு கவசம் சாற்றப்படும். சிவபெருமானை வழிபட பிரம்மன், விஷ்ணு, வாசுகி மூவரும் கடுந்தவம் இருந்து வரம் பெற்றனர். அதன் பயனால் ஆண்டுதோறும், மூவரும் கார்த்திகை பௌர்ணமி தொடங்கி மூன்று நாட்கள் இத்தல இறைவனை பூஜிப்பதாக ஐதீகம்.

Read More
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில்

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில்

திருவண்ணாமலை கோவிலின் சிறப்புகள்

திருவண்ணாமலைக் கோவில், மிகவும் பழமையான கோவில்களில் ஒன்று. இறைவன் திருநாமம் அருணாசலேசுவரர். இறைவியின் திருநாமம் உண்ணாமுலையாள். இத்தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். மலையே சிவலிங்கமாக உள்ளது எனபது நம்பிக்கை.'அருணம்' என்றால் 'சிவப்பு நிறத்தில் இருக்கும் நெருப்பு'. 'அசலம்' என்றால் 'மலை'. சிவபெருமான் சிவப்பு நிறத்தில் எரியும் நெருப்பின் தன்மை கொண்ட மலையாக இருப்பதால் இந்த மலைக்கு 'அருணாச்சலம்' என்று பெயர் ஏற்பட்டது. பஞ்ச பூத தலங்களில் திருவண்ணாமலை அக்னித் தலமாகும். இக்கோவில் பல சிறப்புகளைக் கொண்டது. அவற்றில் சிலவற்றை இப்பதிவில் நாம் காணலாம்.

பார்வதிக்கு சிவபெருமான் தன் இடப்பாகம் அளித்த தலம்

சிவனை நோக்கி தவமிருந்த பார்வதிக்கு தன் இடப்பாகம் கொடுத்து அர்த்தநாரீஸ்வரராய், கருவறையின் பின் புறம் அமர்ந்தார்.

நினைத்தாலே முக்தி தரும் தலம்

திருவாரூரில் பிறந்தால் முக்தி, காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி. முதலில் குறிப்பிட்ட நான்கு தலங்களின் மூலம் முக்தி அடைவது என்பது எல்லோருக்கும் சாத்தியமில்லை. ஆனால் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பதால், அது எல்லோருக்கும் சாத்தியப்படும் ஒன்றாகும்.

திருவெம்பாவை, திருப்புகழ் போன்ற பக்தி நூல்கள் இயற்றப்பட்ட தலம்

இத்தலத்தில்தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன.

பழமையான மலை

திருவண்ணாமலையில் இருக்கும் மலை 260 கோடி ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்பது விஞ்ஞானிகளின் கருத்து. இந்த மலையானது கிருதா யுகத்தில் நெருப்பு மலையாக இருந்தது, திரேதா யுகத்தில் மாணிக்க மலையாக இருந்தது, துவாபர யுகத்தில் தங்க மலையாக இருந்தது. தற்போது கலி யுகத்தில் கல் மலையாக இருக்கின்றது என்பது சைவர்களின் நம்பிக்கை. மெசேஜ் பிரம் அருணாச்சலா எனும் நூலில், பால் பிரண்டன் எனும் பிரிட்டனைச் சேர்ந்த தத்துவஞானி மற்றும் ஆய்வாளார் 'லெமூரியா கண்டத்தின் எஞ்சிய பகுதி திருவண்ணாமலை' எனக் குறிப்பிட்டுள்ளார்.

திருவண்ணாமலையின் அமைப்பு

திருவண்ணாமலையை கீழ்த்திசையிலிருந்து பார்த்தால் ஏக மலையாகத் (ஒன்றாக) தெரியும். மலை சுற்றும் வழியில் நின்று பார்த்தால் இரண்டாகத் தெரியும். இது அர்த்த நாரீஸ்வர தத்துவத்தைக் குறிக்கும். மலையின் பின்னால் மேற்கு திசையில் இருந்து பார்த்தால் மூன்றாகத் தெரியும். இது சிவன், பிரம்மா, திருமால் மூவரையும் குறிக்கும்.

கோவில் அமைப்பு

அண்ணாமலையார் ஆலயம் 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. ஆலயத்தில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. இவ்வாலயத்தின் ஆறு பிராகாரங்கள் உள்ளன. 142 சந்நிதிகள், 22 பிள்ளையார்கள், 1000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் ஆகியவை உள்ளன. திருவண்ணாமலை ராஜகோபுரம் தமிழகத்தின் 2வது பெரிய கோபுரமாகும். 11 நிலைகளுடன் 217 அடி உயரம் கொண்டது.

பௌர்ணமி கிரிவலம்

சித்தர்களில் ஆதிசித்தனாகிய சிவபெருமானையும், அன்னை பார்வதியையும் ஒவ்வொரு மாத பௌர்ணமி தினத்தன்றும் சித்தர்கள் அருவமாக வந்து வழிபடுவதாக ஐதீகம். எனவே ஒவ்வொரு பௌர்ணமி இரவன்றும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் 14.7 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட மலையை கிரிவலம் வந்து, சிவபெருமானையும் அம்பாளையும் தரிசித்து அவர்களின் அருளையும் சித்தர்களின் ஆசிகளையும் பெறுகின்றனர். 800 ஆண்டுகளுக்கு முன்னரே அதாவது கிபி 1240ல் இங்கு கிரிவலம் செல்ல ஜடாவர்ம விக்ரம பாண்டியன் பாதை அமைத்து பணி செய்தார். சித்ரா பௌர்ணமி தினத்தன்று திருவண்ணாமலை கிரிவலம் வந்து, அண்ணாமலையரையும், உண்ணாமுலையம்மனையும் தரிசித்து வணங்குபவர்களுக்கு குல சாபங்கள் நீங்கும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

உண்ணாமுலையம்மன் சந்நிதிமுன் தீமிதி விழா

ஆடிப்பூரத்தன்று மாலை. ஆலயத்தின் உள்ளேயே உண்ணாமுலையம்மன் சந்நிதிமுன் தீமிதி விழா நடத்தும் ஆலயமும் இது ஒன்றுதான். காமதகனம் நடக்கும் சிவாலயம் இது ஒன்றுதான்.

திட்டிவாசல் வழியே வெளிவரும் உற்சவமூர்த்திகள்

திருவிழா நாட்களில் திட்டிவாசல் வழியே உற்சவமூர்த்திகள் வெளிவரும் நடைமுறை இவ்வாலயத்தில் மட்டும்தான் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. அருணகிரிக்கு விழா எடுக்கும் ஆலயமும் இதுதான்.

திருவண்ணாமலை மகா தீபம்

திருவண்ணாமலையில் பத்துநாட்கள் கார்த்திகை தீபவிழா நடக்கும். சிவனுக்குரிய மகா தீப விழாவை உமாதேவியே தொடங்கி வைத்ததாக புராணங்கள் கூறுகின்றன. பத்தாம் நாள் திருவண்ணாமலை மீது ஏற்றும் தீபம், மகா தீபமாகும். திருவண்ணாமலை கார்த்திகை தீப நாள் அன்று அதிகாலை 4 மணி அளவில் மலை அடிவாரத்தில் பரணி தீபம் ஏற்றப்படும் மாலை 6 மணிக்கு மலை மீது மகா தீபம் ஏற்றும் விழா நடைபெறும். மகா தீபம் ஏற்ற 3000 கிலோ பசு நெய், 7 அடி உயரம் கொண்ட செப்புக் கொப்பரை, திரியாக பயன்படுத்த சுமார் 1000 மீட்டர் காடாத்துணி மற்றும் 2 கிலோ கற்பூரம் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள் தொடர்ந்து 11 நாட்கள் இந்த மகா தீபம் மலை மீது ஒளிரும். இந்த தீபத்தின் ஒளியை 30 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் வாழும் மக்களும் கண்டு தரிசிக்கும் வகையில் வெளிச்சத்துடன் எரிகிறது. இறைவன் ஜோதி வடிவானவன், அவனுடன் நாம் இரண்டற கலப்பதால் நமது பாவங்கள், கர்மவினைகள், பிறப்பு இறப்பு சுழற்சிகள் அனைத்தும் நீங்குவதை இந்த கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதின் தத்துவம் ஆகும். இந்த கார்த்திகை தீப தரிசனத்தை காண்பவர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கி, அவர்கள் எண்ணிய காரியங்கள் அனைத்தும், அண்ணாமலையார் மற்றும் இங்கு அருவமாக வாழும் சித்தர்களின் ஆசிகளால் நிறைவேறும்.

அண்ணாமலை மகா தீப தரிசன பலன்

திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபத்தை தரிசனம் செய்தால் 21 தலைமுறைகளுக்கு முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. வேறு எந்த விழாவை தரிசித்தாலும், தரிசிப்பவருக்கு மட்டுமே முக்தி கிடைக்கும் அண்ணாமலைக்கு மட்டுமே இந்த தனிச் சிறப்பு உள்ளது.

மகா தீபத்தை தரிசிக்கும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்

கீடா: பதங்கா: மச காச்ச வ்ருக்ஷா ஜலே ஸ்தலே யே விசரந்தி ஜீவா த்ருஷ்ட் வா ப்ரதீபம் நச ஜன்ம பாகின. பவந்தி நித்யம் ச்வ பசா ஹி விப்ரா

இந்த மகாதீப ஒளிக்காட்சியைக் காணும் மக்கள் தங்கள் வாழ்வில் நலமும் வளமும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

Read More
திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோவில்

திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோவில்

கபால பூணூலும், சர்ப்ப அரைஞாணும் அணிந்த காசிக்கு ஈடான பைரவர்

சிதம்பரத்திற்கு தென்கிழக்கே 5 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் திருக்கழிப்பாலை. இறைவன் திருநாமம் பால்வண்ணநாதர். இறைவியின் திருநாமம் வேதநாயகி. இத்தலத்தின் சிவலிங்கப் பெருமான் வெண்ணிறமுடையவராக விளங்கிறார், அதனாலேயே இறைவன் பால்வண்ணநாதர் என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் அருட்காட்சி தருகிறார்.

இங்குள்ள பைரவர் காசியில் உள்ளது போல நாய் வாகனம் இல்லாமல், 27 மண்டை ஓட்டுடன் பூணூல் அணிந்து, சர்ப்பத்தை அரைஞாண் அணிந்து, ஜடாமுடி, சிங்கப்பல்லுடன் தனிக்கோயிலில் அருளுகிறார். காசி பைரவரை செதுக்கிய அதே சிற்பியால் இவரும் செய்யப்பட்டதாக நம்பப் பெறுகிறது .இத்தல பைரவரை வணங்கினால் காசி பைரவரை வணங்கிய பலன் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன. இத்தலத்தின் மூலவர் பால்வண்ண நாதர் என்றாலும், இக்கோவிலில் கால பைரவர் மிகவும் பிரசித்தி பெற்றவர் என்பதால் இப்பகுதி மக்கள் இத்தலத்தை பைரவர் கோயில் என்றே அழைக்கின்றனர். தேய்பிறை அஷ்டமி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ராகு கால பூஜைகள் விமர்சையாக நடைபெறுகிறது. அஷ்டமி நாட்களிலும், பௌர்ணமி இரவிலும்) இவரை வழிபடுவது விசேஷமாகக் கருதப் பெறுகிறது.

Read More
நாவலூர் ஏகாம்பரேசுவரர் கோவில்

நாவலூர் ஏகாம்பரேசுவரர் கோவில்

மூலவரின் எதிரில் அமர்ந்திருக்கும் அபூர்வ இரட்டை நந்திகள்

படப்பையில் இருந்து ஒரகடம் போகும் வழியில் அமைந்துள்ள சரபணஞ்சேரி என்ற கிராமத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நாவலூர் ஏகாம்பரேசுவரர் கோவில். 900 ஆண்டுகள் பழமையானது. இறைவியின் திருநாமம் காமாட்சி அம்மன்.

பொதுவாக சிவாலயங்களில் மூலவரின் முன் ஒரு நந்தி அமர்ந்திருக்கும். ஆனால் இத்தலத்து மூலவரின் எதிரில் இரண்டு நந்திகள் ஒன்றின் அருகில் ஒன்றாக அமர்ந்திருக்கின்றன. இப்படி அருகருகே அமர்ந்திருக்கும் இரட்டை நந்திகளை, வேறு எந்த சிவாலயத்திலும் நாம் தரிசிக்க முடியாது. இவற்றில் ஒரு நந்தி இத்தலத்து மூலவரையும், இத்தலத்துக்கு நேர் கோட்டில் இருக்கும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் மூலவரையும் தரிசிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. மற்றொரு நந்தி, திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசிக்கும் வண்ணம் தன் தலையை திருப்பி அமர்ந்துள்ளது. இவ்விரு நந்திகளை தரிசித்தால், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் தலங்களை தரிசித்த பலன்கள் கிட்டும்.

Read More
குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி கோவில்

குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி கோவில்

காசி காலபைரவருக்கு இணையான குண்டடம் கொங்கு வடுகநாதர்

கோவை - மதுரை நெடுஞ்சாலையில், பல்லடத்துக்கும் தாராபுரத்துக்கும் நடுவில், பல்லடத்திலிருந்து 28 கி.மீ தூரத்திலும் தாராபுரத்திலிருந்து 16 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி கோவில். இறைவன் திருநாமம் விடங்கீசுவரர். இறைவியின் திருநாமம் விசாலாட்சி. இந்தக் கோவிலில் உள்ள காலபைரவ வடுகநாத சுவாமி மிகவும் சக்தி வாய்ந்தவர் என்றும்,காசி சென்று கால பைரவ சுவாமியை வணங்க முடியாதவர்கள் இவரை வணங்கினால் போதும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். 'காசு இருந்தால் காசிக்கு செல்லுங்கள்! காசு இல்லாவிட்டால் குண்டடத்தக்கு வாருங்கள்! ' என்று திருமுருக கிருபானந்த வாரியார் கூறி இருக்கிறார். அதாவது காசிக்குச் சென்று கால பைரவரை தரிசிக்க ஆயிரக்கணக்கில் செலவாகும். ஆனால் காசியில் இருக்கும் அதே கால பைரவரைதான், சிவபெருமானின் ஆணையால் தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் இருக்கும் குண்டடத்துக்கும் வந்து, அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். அதனால் ரொம்ப செலவில்லாமல் காசி கால பைரவரை இந்தக் குண்டடத்திலேயே கொங்கு வடுகநாதராக வழிபடலாம் வாருங்கள் என்று அழைத்தார் வாரியார்.

முன்னொரு காலத்தில், விடங்கர் என்ற முனிவர் இந்த காட்டில் தவம் இருக்கும்போது அரக்கர்களால் தவத்திற்கு இடையூறு ஏற்படாமல் இருக்க உதவ வேண்டும் என்று காசி விசுவநாதரை மனமுருக வேண்டினார். காசி விசுவநாதர் விடங்கரின் பிரார்த்தனைக்கு இணங்கி வடுக பைரவரை அனுப்பினார். பைவர் இடையூறு செய்த அரக்கர்களை அழித்தார், பின் இலந்தை மரத்தின் அடியில் இருந்த புற்றில் நிரந்தரமாய்க் குடிகொண்டார். அருகே ஒர் அரசமரத்தடியில் பாம்பாட்டீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். சேர நாட்டிலிருந்து மிளகு விற்க வரும் வியாபாரிகள் இந்த அரசமரத்தடியில் இளைப்பாறுவது வழக்கம். ஒரு நாள் காலபைரவர் வயதான அந்தணர் தோற்றத்தில், மிளகு வியாபாரியிடம் சென்று தனக்கு உடல்நிலை சரியில்லை, கஷாயம் வைக்க மிளகு கொஞ்சம் கேட்கிறார், ஆனால் கொடுக்க நினைக்காத வியாபாரி மாட்டு வண்டியில் உள்ள மூட்டையில் மிளகு இல்லை பயறு என்று பொய் சொல்லிவிடுகிறார்.

மதுரை சென்று சேர்ந்த வியாபாரிகள் பாண்டிய மன்னரிடம் விலை பேசி மிளகு மூட்டைகளை விற்று விட்டார்கள். மிளகு மூட்டையை பரிசோதித்துப் பார்க்க, அவை பச்சைப் பயறாக இருப்பதைப் பார்த்து ஏமாற்றி விட்டதாய் கோபப்படுகிறார் மன்னர். வியாபாரிகள் ஒரு பெரியவர் மிளகு கேட்டதாகவும் தாங்கள் மிளகு கொடுக்க மறுத்து மூட்டையில் உள்ளது பச்சைப் பயிறு என்று சொன்னதாகச் சொல்கிறார்கள். நம்ப மறுக்கிறார் மன்னர். அப்போது பைரவர் திருவிளையாடல் புரிகிறார், எந்த வியாபாரியிடம் மிளகு கேட்டாரோ அந்த விபாபாரி மேல் அருள் வந்து நான்தான் மிளகு மூட்டைகளைப் பயிறு மூட்டைகளாக மாற்றினேன் என்று சொல்கிறார் பைரவர். அப்போதும் மன்னருக்கு நம்பிக்கை வரவில்லை.என் மகன், மகள் இருவரும் உடல்நிலை சரியில்லாதவர்கள் அவர்களைச் சரி செய்தால் நம்புவதாகச் சொல்கிறார்.

பைரவர் மன்னரிடம் புற்றில் இருக்கும் என்னைக் கோவில் கட்டிக் குடியமர்த்து .அபிஷேகம் செய்து மிளகு சாற்றி வழிபடு. உன் குழந்தைகளைக் குணப்படுத்துகிறேன் என்கிறார். பாண்டிய மன்னரும் அவ்வாறு செய்ய, குழந்தைகள் எட்டு நாட்களில் நலம் பெற்றார்கள்.. பேசமுடியாது இருந்த பெண் குழந்தை பேசியது, நடக்க முடியாது இருந்த ஆண் குழந்தை பைரவர் அருளால் நடந்தது. காசியிலிருந்து கொங்கு நாட்டுக்கு வந்ததால், பைரவருக்கு கொங்கு வடுகநாதர் என்ற பெயர் எழுநதது. கொங்கு நாட்டுக் காசியாக, குண்டடம் விளங்குகின்றது.

பிரார்த்தனை

தேய்பிறை அஷ்டமியில் இவரை தரிசித்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். இவரை வணங்கினால் நவக்கிரக தோஷம் நீங்கிவிடும். பதினோரு மிளகு வைத்து நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி எட்டு தீபங்களை ஏற்றி வைத்தால் நாம் வேண்டும் பிரார்த்தனை நிறைவேறும்.

ஆஞ்சநேயருக்கு சாற்றுவது போல் இவருக்கு வடை மாலை சாற்றப்படுகிறது. வெண்பொங்கல் நைவேத்தியமும் இவருக்கு விசேஷம். தேங்காய் மூடியிலும், வெட்டப்பட்ட பூசணித் துண்டிலும் எண்ணெய் ஊற்றி சிலர் பரிகாரத்துக்காக விளக்கேற்றுகிறார்கள்.

Read More
நடுசத்திரம் காசிவிசுவநாதர் கோவில்

நடுசத்திரம் காசிவிசுவநாதர் கோவில்

இந்தியாவின் இரண்டாவது காசி என்று போற்றப்படும் தலம்

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் இருந்து சங்கரன்கோவிலுக்கு ஏழாயிரம்பண்ணை வழியாகச் செல்லும் சாலையில், சுமார் 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிற்றூர் நடுசத்திரம். இறைவன் திருநாமம் காசிவிசுவநாதர். இறைவியின் திருநாமம் அன்னபூரணி. இக்கோவில் சுமார் 1,200 ஆண்டுகள் பழமையானது. இந்தத் தலத்தின் சந்நிதியில் மட்டுமே காசிக்கு அடுத்தபடியாக அன்னபூரணி அம்பிகை தெற்கு நோக்கி காட்சி தருகிறார். காசிக்குச் செல்லும் மக்களுக்கு ஏதுவாக இந்த ஆலயத்தை, காசியில் உள்ளது போன்றே வடிவமைத்திருக்கின்றனர். அதனால், இத்தலம் இந்தியாவின் இரண்டாவது காசி என்று போற்றப்படுகின்றது.

இத்தலத்து மூலவர் காசி விசுவநாதருக்கு எதிரே உள்ள நந்தீஸ்வரரின் ஒரு கண் சிவனைப் பார்த்தவாறும், மற்றொரு கண் அன்னபூரணியைப் பார்த்தவாறும் தலை சாய்த்து அமைந்திருக்கிறது. மேலும், சண்டிகேஸ்வரர் தெற்கு பார்த்து, காளை வாகனத்தில் அமர்ந்திருப்பது, வேறு சிவாலயங்களில் காண்பதற்கரிய சிறப்பம்சம் ஆகும்.

தலையை சாய்த்து அருள் பாலிக்கும் குபேர சனீஸ்வரர்

இத்தலத்தில் சனீஸ்வர பகவான் குபேர சனீஸ்வரர் என்ற திருநாமத்துடன் தனித்து அருள்பாலிக்கிறார். நந்திதேவரைப் போன்று இவரும், தன் தலையைச் சற்றே சாய்த்தவாறு அருட்கோலம் கொண்டிருக்கிறார். இத்தலத்தில் அன்னபூரணி அம்பிகை, காலபைரவர், சண்டிகேஸ்வரர், நடராஜர் மற்றும் குபேர சனீஸ்வர பகவான் அனைவரும் தென் திசை நோக்கி அமைந்திருப்பது மற்றொரு தனிச் சிறப்பாகும்.

பிரார்த்தனை

தொழில் விருத்தி, திருமண வரம், குழந்தை பாக்கியம் வேண்டி மக்கள் இங்கே பிரார்த்தனை செய்கிறார்கள்.

Read More
திருக்கண்டியூர் பிரம்மசிரகண்டீசுவரர் கோவில்

திருக்கண்டியூர் பிரம்மசிரகண்டீசுவரர் கோவில்

அமர்ந்த கோலத்தில் இருக்கும் அபூர்வ அர்த்தநாரீசுவரர்

திருவையாற்றில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலை வழியில் சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் திருக்கண்டியூர். திருவையாறு மற்றும் அதைச் சுற்றியுள்ள சப்த ஸ்தான கோவில்களில் இத்தலமும் ஒன்று. சிவபெருமானின் அட்டவீரட்டானத் தலங்களில் முதலாவது தலம் இது. இறைவன் திருநாமம் பிரம்மசிரகண்டீசுவரர். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை.

இக்கோவிலில் எழுந்தருளியுள்ள அர்த்தநாரீசுவரரின் திருமேனி அற்புதமான கலையம்சம் கொண்டது. அர்த்தநாரீசுவரர் என்ற பெயரின் அர்த்தம் 'அரை பெண்ணாக இருக்கும் இறைவன்' என்பதாகும். அர்த்தம் என்பது பாதி; நாரி என்பது பெண். சிவனின் ஆண் உருவம் பாதியும், பார்வதியின் பெண்ணுருவம் பாதியும் கொண்டு அமைந்த கோலம் தான் அர்த்தநாரீசுவரர். சிவனின்றி சக்தி இல்லை, சக்தி இன்றி சிவனில்லை என்பதனை விளக்குகின்ற உருவமாகும்.

இக்கோவிலில் உள்ள அர்த்தநாரீசுவரர், மற்ற சிவாலயங்களில் உள்ளதுபோன்று நின்ற கோலத்தில் அல்லாமல் ரிஷபத்தின் மீது ஒரு கையை ஊன்றி அமர்ந்த கோலத்தில் காட்சியளிப்பது விசேஷமானது. ஆண் பாதியில் காலைத் தொங்கவிட்டுக் கொண்டு ஒரு கரத்தில் மழு எந்தியிருக்க, பெண் பாதியில் சேலை அணிந்த காலைக் குத்திட்டு உட்கார்ந்து அதன் மீது மலர் ஏந்தும் கரத்தை ஊன்றித் தலையைச் சுற்றி சாய்ந்து காட்சிக் கொடுக்கும் தோற்றமானது, அற்புதமான ஒன்றாகும். அர்த்தநாரீசுவரரின் இந்தத் தோற்றத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

Read More
விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீசுவரர் கோவில்

விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீசுவரர் கோவில்

அதிசயமான நேரம் காட்டும் கல்

வேலூர் நகரத்திலிருந்து 12 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீசுவரர் கோவில். இறைவன் திருநாமம் மார்க்கபந்தீசுவரர் ஆவார். இறைவியின் திருநாமம் மரகதாம்பிகை.இக்கோவில் 1300 வருடங்கள் பழமையானதாகும்.

இக்கோவிலில் உள்ள அதிசயம், மணி காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கல். கோவிலின் உள்ளே தென்புறத்தில் 'நேரம் காட்டும் கல்' உள்ளது. இதை மணிகாட்டிக் கல் என அழைப்பதும் உண்டு. அர்த்த சந்திரவடிவில் உள்ள காலம் காட்டும் கல்லின் ஒருபுறம், இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பகுதியில் ஒன்று முதல் ஆறு வரை எண்கள் எழுதப்பட்டிருக்கின்றன. மற்றொரு புறமும் ஆறு முதல் 12 என்ற வரிசையில் எண்கள் எழுதப்பட்டுள்ளன. ஒரு பாகம் முற்பகலையும், மற்றொரு பாகம் பிற்பகலையும் காட்டும். மணிகாட்டும் கல்லின் மேற்பகுதியில் சிறிய பள்ளமான பகுதி ஒன்று இருக்கும். அதன் மேல் சிறு குச்சியை வைத்தால், சூரிய ஒளியின் திசைக்கு ஏற்றவாறு, குச்சியின் நிழல் மணிக்காக குறிக்கப்பட்டுள்ள கோட்டின் மீது விழும். அதைப் பார்த்து மணியைத் தெரிந்துகொள்ளலாம்.

ஆதிகாலத்தில் மேலை நாட்டினர், 'கிளாசிக்கல் க்ளாக்' எனும் மணல் கடிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். அறிவியல் அதிகமாக வளராத ஆதிக்காலத்திலையே, சூரியனை எப்படிப் பயன்படுத்தலாம் என்று யோசித்தவர்கள், தமிழர்கள். மேலை நாட்டினர் மண்ணைப் பார்த்து சிந்தித்தபோது, விண்ணைப் பார்த்து சிந்தித்தவன் தமிழன். தமிழர்கள் சூரியனைப் பயன்படுத்தி கடிகாரம் கண்டுபிடித்து, பயன்படுத்திக்கொண்டிருந்தனர். அதற்கு முன்னர், சூரியனையும், கோயில் கோபுரத்தையும் வைத்து நேரம் அறிந்துகொண்டிருந்தனர், தமிழர்கள். அதன் பின்னர் சிறிய கருங்கல்லை வைத்து தன்னுடைய தொழில்நுட்பத்தை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தினார்கள். சிறியதாக ஒரு கருங்கல்லை வைத்து பன்னிரண்டு மணிநேரத்தை பார்க்கும்படி வடிவமைத்துள்ளார்கள்.வானியல் மாற்றங்களைத் தெரிந்துகொள்ள தொழில்நுட்பங்கள் இல்லை. பருவநிலையையும் மற்றும் பருவகால மாற்றங்களையும் அறிந்துகொள்ள மணிகாட்டும் கல்லைத் தவிர இன்னும் பல கற்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள், நம் முன்னோர்கள்.

Read More
ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம்

ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம்

ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகத்தின் சிறப்புகள்

சிவபெருமான், சதா அபிஷேகப் பிரியர். அதனால் அவருக்குப் பதினொரு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்வது வழக்கம். அவை தூய நீர், பசும்பால், இளநீர், கருப்பஞ்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள், அன்னம் ஆகியன. இவற்றுள் மிகச் சிறப்பானது அன்னாபிஷேகம்.

ஐப்பசி மாதப்பௌர்ணமி தினத்துக்கு மட்டும் தனிச்சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் தோன்றுகிறான். ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தின்போது சந்திரன் பூமிக்கு நெருக்கமாக வந்து அதிகப் பொலிவுடன் தோன்றுவான். நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி என்பதால், அன்று சிறப்பு வழிபாடாக ஈசனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்து, உணவை சாப்பிட்டால் அன்னதோஷசம், அன்ன துவேஷம் நீங்கும். ஐப்பசி பௌர்ணமி நாளில் சிவனை தரிசித்தால், சொர்க்கத்திற்கு போகும் வரை சோறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அன்னம் பர பிரம்மம் என்று கூறி, உணவை இறைவனாகப் பாவிப்பது நம் இந்து தர்மம். உடலை வளர்ப்பது மட்டுமல்லாமல் உள்ளத்தையும் வளர்ப்பது அன்னம்தான். கல்லினுள் வாழும் தேரை முதல் கர்ப்பப்பையில் வளரும் உயிர் வரை, அனைத்து உயிர்களுக்கும் உணவு அளிப்பவன் ஈசன். அதனால் அன்னத்தைப் பற்றி ‘அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ’ என்று சாமவேதத்தில் குறிப்பிடப்படுகிறது. எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருக்கிறான் என்பதே இதன் பொருள். அன்னம்தான் உலகில் வாழும் உயிர்களுக்கு அடிப்படை. சோறுதான் சொக்கநாதர், 'சோறுகண்ட இடம் சொர்க்கம்' என்று இன்றும் மக்கள் சொல்வதுண்டு. உயிர்களைப் படைத்ததோடு மட்டுமல்லாமல், அவை உண்பதற்கான உணவையும் படைத்தருளிய இறைவனுக்கு நன்றி கூறும் விதமாக ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் செய்கிறோம்.

ஐப்பசி மாதம் பெளர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து அதில் உள்ள ஒவ்வொரு சாதத்திலும், அரிசியிலும் ஒரு சிவத்தின் ரூபத்தை காணலாம். ஒரு சிவத்தை வழிபட்ட பலன் அந்த நாளில் கிடைக்கும் என சிவ பெருமானே நமக்கு வரமளித்துள்ளார். அந்த வரத்தின் படி அன்னாபிஷேகத்தை கண்டால் அதில் உள்ள கோடான கோடி சோறும், கோடான கோடி சிவ லிங்கங்களை சென்று தரிசனம் செய்த பலனை நமக்கு தரும்.

ஐப்பசி மாத பௌர்ணமியன்று, வடித்து சற்றே ஆற வைக்கப்பட்ட அன்னத்தைக் கொண்டு சிவலிங்கத் திருமேனி முழுவதையும் மறைத்து, அதன் மேலாக காய்,கனி வகைகளைக் கொண்டு அலங்கரிப்பார்கள். இந்த வேளையில் யஜூர் வேதம், ருத்ரம், சமகம் போன்ற மந்திரங்களின் பாராயணம் நடைபெறும். லிங்கத்தின் ஆவுடையிலும், பாணத்தின் மீதும் சாத்தப்பட்ட அன்னத்தை எடுத்துச் சென்று கோயில் குளத்திலோ இல்லை ஆற்றிலோ கரைப்பார்கள். நல்ல அதிர்வுகளும் உடலுக்குத் தேவையான கதிர் வீச்சுகளும் நிறைந்திருக்கும் சிவலிங்கத்தின் மேல்பாகத்தில் சாத்தப்பட்ட அன்னம், மனிதர்களுக்குப் பிரசாதமாக அளிக்கப்படுகிறது. இந்தப் பிரசாதத்தை உண்டால் நோய் நொடிகள் வராது, குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.

கலியுகத்தில் முக்தி பெறும் வழிகளில் முதன்மையானது பக்தியும், அன்னமிடுதலும் ஆகும். அன்னம் ஒடுங்கினால், சகலமும் ஒடுங்கி விடும். பசியால் வாடுபவர்களுக்கு உணவு தராமல் விரட்டினால், அன்னதோஷம் ஏற்படும். அன்னதோஷம் பீடித்தால், வீட்டில் எவ்வளவு உழைத்தாலும் செல்வம் தங்காது. தரித்திரம் ஆட்டிப்படைக்கும். அன்னதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அன்ன துவேஷம் எனும் உணவைக் கண்டாலே வெறுப்பு உண்டாகும் நோய் ஏற்படும். அன்னதோஷத்தாலும், அன்ன துவேஷத்தாலும் பீடிக்கப்பட்டவர்களும். ஈசனுக்கு பக்தியுடன் அன்னாபிஷகம் செய்வதன் மூலம் முக்தியைப் பெற முடியும். ஈசனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படும் உணவை அப்படியே உண்ணக்கூடாது. தயிரோ அல்லது வெண்ணெயோ கலந்துதான் சாப்பிட வேண்டும்.

Read More
தஞ்சைப் பெரிய கோவில்

தஞ்சைப் பெரிய கோவில்

மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா

தஞ்சைப் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன். உலக வரலாற்றில் அலெக்ஸ்சாண்டருக்கு இணையாகப் போற்றப்பட வேண்டியவர். மாபெரும் யானைப்படை, கப்பல் படையைக் கொண்டு தெற்காசியா முழுமையும் தனது பராக்கிரமத்தால் கட்டியாண்ட மாமன்னன் ராஜராஜன், 947-ம் ஆண்டு ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர். 985-ம் ஆண்டு சதய நட்சத்திரத்தில் ஆட்சிப் பொறுப்பேற்று 1014-ம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். சைவர்கள் போற்றும் திருமுறைகளை மீட்டுத் தந்தவர் மாமன்னன் ராஜராஜன். அவரை சிறப்பிக்கும் வகையில், அவர் பதவியேற்ற 985-ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 -வது சதய விழா, இன்று (25.10.2023) அரசு விழாவாக கொண்டாடப்படுகின்றது.

தஞ்சைப் பெரிய கோவிலின் சிறப்புகள்

ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் மாமன்னன் ராஜராஜ சோழனின் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருக்கும் தஞ்சை பெருவுடையார் கோவிலின் சில சிறப்புகளை இப்பதிவில் காணலாம்.

1003க்கும் 1010ஆம் ஆண்டிற்கும் இடையில் சோழ மன்னனான ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்தக் கோயில், திராவிடக் கோயில் கலையின் உன்னதமான சான்றாகக் கருதப்படுகிறது. தற்போதுள்ள தொழில்நுட்பத்தை வைத்து கட்டினால் கூட பல ஆண்டுகள் ஆகும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னம் என்ற அந்தஸ்தை பெற்ற இந்தக் கோவில், இந்தியத் தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது. இந்தக் கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழா கடந்த 2010ஆம் ஆண்டில் நடைபெற்றது.

தஞ்சாவூரில் காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோவில், ராஜராஜேச்சரம், பெருவுடையார் கோவில், பிரகதீசுவரர் கோவில் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. காஞ்சியில் இராசசிம்மனால் கட்டப்பட்ட கயிலாயநாதர் கோவில், மாமன்னன் ராஜராஜசோழனை மிகவும் கவர்ந்தது. அதே போல் ஒரு கோவிலைக் கட்ட எண்ணிய ராஜராஜசோழன் தஞ்சையில் பெரிய கோவிலைக் கட்டினார். பெரியகோவிலின் அமைப்பு, திருவாரூர் தியாகராசர் கோவிலில் உள்ள அசலேசுவரர் சந்நிதியின் மாதிரியைக் கொண்டு உருவானதாகவும் செய்தி உண்டு. இக்கோயிலின் தலைமைச் சிற்பி குஞ்சர மல்லன் இராசராசப்பெருந்தச்சன் எனக் கோவிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோவில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீ உயரமான இக்கற்கோவிலை ராஜராஜசோழன் எழுப்பினார். கோவிலின் கட்டுமானப் பணிக்காக 1,30,000 டன் கிரானைட் கற்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அருகே மலைகள் இல்லாத நிலையில், நவீன போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில் சுமார் 50 மைல்கள் தொலைவில் இருந்து கோவியிலுக்கான கற்கள் எடுத்து வரப்பட்டிருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. இக்கோவில், கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, வெண்கலச் சிலையுருவாக்கம் ஆகியவற்றில் சோழர்களின் திறமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.

மாமன்னன் ராஜராஜசோழனின் தமிழ் பற்றை இக்கோவிலின் வடிவமைப்பில் இருந்து நாம் புரிந்து கொள்ளலாம். கோவிலில் உள்ள சிவ லிங்கத்தின் உயரம் 12 அடி. தமிழின் உயிர் எழுத்துக்கள் 12, சிவ லிங்கத்தின் பீடத்தின் உயரம் 18 அடி. தமிழின் மெய் எழுத்துக்கள் 18, கோவிலின் கோபுரத்தின் உயரம் 216 அடி. தமிழின் உயிர் மெய் எழுத்துக்கள் 216, சிவ லிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி. தமிழ் மொழியின் மொத்த எழுத்துக்கள் 247 ஆகும். கருவறையில் உள்ள சிவலிங்கம் மிகவும் பெரியது. 6 அடி உயரம், 54 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார், 23 அடி உயரம் கொண்ட லிங்கம் ஆகியன தனித்தனியாக கருங்கற்களால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ள நந்தி 20 டன் எடையும், இரண்டு மீட்டர் உயரம், ஆறு மீட்டர் நீளம், இரண்டரை மீட்டர் அகலமும் கொண்டதாகவும், இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நந்தியுமாகவும் உள்ளது, கோபுரத்தின் மேல் உள்ள வைக்கப்பட்டுள்ள கலச வடிவிலான மேற்கூரை கல் சுமார் 80 டன் எடை கொண்ட ஒற்றை கல்லால் செய்யப்பட்டது என்பது பெரிய அதிசயம். அதைவிட பெரிய அதிசயம், அப்பெரிய கல்லை எப்படி அவ்வளவு மேலே எடுத்துச் சென்றனர் என்பதுதான்.

அழகி என்னும் இடையர் குல மூதாட்டி, பெரிய கோவில் கட்டி முடிக்கும் வரை கோவில் கட்டும் சிற்பிகளின் தாகத்தை போக்கும் பொருட்டு தினமும் அவர்களுக்கு தயிர், மோர் வழங்கி வந்தார். இதனை அறிந்த மன்னர் ராஜராஜசோழன் இடையர் குல மூதாட்டியின் சிவத்தொண்டை அனைவரும் அறியும் வண்ணம், இராசகோபுரத்தின் உச்சியில் உள்ள 80டன் எடை கொண்ட கல்லில், அழகி என்று மூதாட்டியின் பெயர் பொறித்தார். அந்த கல் இடைச்சிக் கல் என்று அழைக்கப்படுகிறது. இப்படி, கோவிலில் உள்ள கல்வெட்டில், கோவிலை கட்ட யார் யார் பணியாற்றினார்களோ, கட்டடக்கலை நிபுணர்களிலிருந்து அவர்களின் துணிகளை சலவை செய்தவர்கள், முடி திருத்தியவர்கள் என கோவில் பணி செய்ய உதவியவர்களுக்கு தொண்டு செய்தவர்களின் பெயர் கூட கல்வெட்டில் பதிவு செய்திருப்பது ராஜ ராஜ சோழனின் பெருந்தன்மையும், மக்கள் மீது அவர் வைத்திருந்த அன்பும், ராஜ ராஜ சோழன் மீது மக்கள் கொண்டிருந்த அன்பும் புலப்படுகிறது.

Read More
மஹாளய அமாவாசை

மஹாளய அமாவாசை

மஹாளய அமாவாசையின் தனி பெரும் சிறப்பு

அமாவாசை முதலான முக்கிய நாட்களில் நமது முன்னோர்கள், பூமிக்கு வந்து தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசீர்வதிப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த நாட்களில் சிரத்தையோடு அவர்களை வழிபட்டால், தீர்க்க ஆயுள், புகழ், செல்வம், உடல் ஆரோக்கியம், இன்பம் போன்ற அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மஹாளய என்றால் 'கூட்டாக வருதல்' என்பது பொருள். மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளய பட்சம் என்று கருதப்படுகிறது. பட்சம் என்றால், 15 நாட்கள் என்பது பொருள். அதாவது மறைந்த நமது முன்னோர்கள், 15 நாட்கள் நம்மோடு தங்கக்கூடிய காலங்களை மஹாளய பட்சம் என்று கூறுகிறோம்.

மஹாளய பட்சம் புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கிறது. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையே, மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. மஹாளய பட்சத்தில் அனைத்து நாட்களுமே தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷம். இயலாதவர்கள் மஹாளய அமாவாசை அன்றாவது பக்தியுடனும், நம்பிக்கையுடன் தர்ப்பணம் செய்வது நல்ல பலனைத் தரும். மஹாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் பல்வேறு பலன்கள் நம்மைச் சேர்கின்றன. 1ம் நாள் - பிரதமை - செல்வம் சேரும் 2ம் நாள் - துவிதியை - பெயர் சொல்லும் குழந்தைகளைப் பெறலாம். 3ம் நாள் - திரிதியை - நினைத்த காரியங்கள் நிறைவேறும் 4ம் நாள் - சதுர்த்தி - பகையிலிருந்து எளிதில் விடுபடலாம். 5ம் நாள் - பஞ்சமி - அசையா சொத்துக்கள் மற்றும் செல்வம் பெருகும். 6ம் நாள் - சஷ்டி - பேரும், புகழும் தேடி வரும். 7ம்நாள் - சப்தமி - தகுதியான மற்றும் சிறந்த பதவிகள் கிடைக்கும். 8ம் நாள் - அஷ்டமி -அறிவு கூர்மை பெறும். 9ம் நாள் நவமி - நல்ல வாழ்க்கைத்துணை மற்றும் நல்ல குடும்ப சூழல் அமையும். 10ம் நாள் - தசமி - நீண்ட நாள் ஆசை உடனடியாக நிறைவேறும். 11ம் நாள் - ஏகாதசி - கல்வி, விளையாட்டு, கலைகளில் அசுர வளர்ச்சி கிடைக்கும். 12ம் நாள் - துவாதசி - ஆபரணங்கள் சேரும். 13ம் நாள் - திரயோதசி - விவசாயம் மற்றும் தொழில் செழிக்கும். தீர்க்காயுள் கிடைக்கும். 14ம் நாள் - சதுர்த்தசி - பாவம் கழியும். வாரிசுகளுக்கும் நன்மையே நடக்கும். 15ம் நாள் - மஹாளய அமாவாசை - அத்தனை பலன்களும் நமக்குக் கிடைக்க, நமது முன்னோர்களின் பரிபூரண ஆசி கிடைக்கும்.

தர்ப்பணம் கொடுக்கும் போது குளக்கரை, நதிக்கரை அல்லது கடற்கரை என ஏதாவது ஒரு நீர்நிலைக்கு அருகில் வைத்தே தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்பது நியதி. காசி, ராமேஸ்வரம், கயா, திருச்சி அம்மா மண்டபம், கன்னியாகுமரி , விளமல், தீர்த்ததாண்டதானம், திருச்செந்தூர், திலதர்ப்பணபுரி, திருப்புல்லாணி, திருவள்ளூர் முதலான தலங்கள் தர்ப்பணம் கொடுக்க சிறந்த தலங்கள் ஆகும்.

சாதாரண அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால், மஹாளயபட்ச அமாவாசை தினத்தில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் ஏனைய அனைவருக்கும் இன்றைய தினத்தில் தர்ப்பணம் கொடுப்பதே மஹாளய அமாவாசையின் தனி பெரும் சிறப்பாக திகழ்கிறது. மற்ற அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்துவிட்டாலோ அல்லது அதற்கான வாய்ப்பு இல்லாமல் தவற விட்டவர்கள், இந்த மகாளய அமாவாசையன்று திதி கொடுத்தால், அது அதற்கான முழுப் பயனையும் அளிக்க வல்லதாகும். மகாளய அமாவாசை அன்று முன்னோர்கள் எல்லோரும் பூமிக்கு வந்து செல்வதாக ஐதீகம். நாம் அவர்களுக்கு அளிக்கும் திதி, அவர்கள் செய்த பாவங்களில் இருந்தெல்லாம் விடுவித்து, அவர்களை சொர்க்க வாழ்விற்கு கொண்டு செல்லும் என்பது நம்பிக்கை.

இவ்வாறான சிறப்புக்களால்தான், தை அமாவாசை, ஆடி அமாவாசையைக் காட்டிலும் மஹாளய அமாவாசை அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

Read More
திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோவில்

திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோவில்

நடராஜப் பெருமான் தன் சடாமுடியை அள்ளி முடிந்த கோலத்தில் இருக்கும் அரிய காட்சி

சிதம்பரத்திற்கு தென்கிழக்கே 5 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் திருக்கழிப்பாலை. இறைவன் திருநாமம் பால்வண்ணநாதர். இறைவியின் திருநாமம் வேதநாயகி. இத்தலத்தின் சிவலிங்கப் பெருமான் வெண்ணிறமுடையவராக காட்சி தருவது, வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாத அரிய காட்சியாகும்.

பொதுவாக சிவாலயங்களில், நடராஜப் பெருமான் தன் சடா முடியை விரித்த நிலையில், ஆனந்த தாண்டவ கோலத்தில் நமக்கு காட்சி அளிப்பார். ஆனால் இக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் நடராஜ பெருமான் , வேறு எங்கும் இல்லாத வகையில், தன் சடாமுடியை அள்ளி முடிந்த கோலத்தில் இருப்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பு அம்சமாகும். நடராஜரின் இத்தகைய கோலம் நாம் காண முடியாத அரிய காட்சியாகும். இவர் அருகே சிவகாமி அம்பாள் அவர்தம் தோழிகளான விஜயா, சரஸ்வதியோடு காட்சி தருவதும் ஒரு சிறப்பான அம்சமாகும்.

Read More
காமரசவல்லி சௌந்தரேஸ்வரர்(எ) கார்கோடேஸ்வரர் கோவில்

காமரசவல்லி சௌந்தரேஸ்வரர்(எ) கார்கோடேஸ்வரர் கோவில்

சிவபெருமான், நாக ராஜா கார்கோடகனை தன் கழுத்தில் அணிந்த தலம்

தஞ்சாவூர்-பழுவூர் சாலையில் 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் காமரசவல்லி. இறைவன் திருநாமம் சௌந்தரேஸ்வரர், கார்கோடேஸ்வரர். இறைவியின் திருநாமம் பாலாம்பிகா.

அர்ஜுனனின் பேரனும், அபிமன்யுவின் மகனுமான பாண்டவ வம்சத்து பரீட்சித்து மகாராஜா சாபம் ஒன்றினால் பாம்பு கடித்து இறக்க, அவர் மகன் ஜனமேஜயன் பூமியில் உள்ள அனைத்து பாம்புகளும் இறக்க யாகம் வளர்த்தான். நாகங்களுக்கெல்லாம் ராஜாவான கார்கோடகன் என்னும் நாகம் ,இத்தலத்து இறைவனை வழிபட்டு யாகத்திலிருந்து தப்பியது. கார்கோடகனின் பக்தியை மெச்சிய சிவபெருமான் அவனிடம், இத்தலத்துக்கு வந்து தொழுவோருக்குப் பாம்பு கடித்து மரணம் ஏற்படக் கூடாது என்று வாக்குறுதி வாங்கினார். சர்ப்ப தோஷம் அவர்களைத் தீண்டாதிருக்க வேண்டும் என்றும் எச்சரித்து, கார்கோடகனைத் தன் கழுத்தில் அணிந்துகொண்டார். அத்தினமே கடக ராசி, கடக லக்னத்தில் அமைந்த அற்புதமான தினமாகும். செளந்தரேஸ்வரர் என வழங்கப்பட்ட இறைவன், அத்தினம் முதல் கார்கோடேஸ்வரர் என்று அழைக்கப்பட்டார்.

ரதிதேவிக்கு மாங்கல்ய பிச்சை கிடைத்த தலம்

தன் கணவன் சிவபெருமானின் நெற்றிக் கண்ணால் எரிக்கப்பட்டதால், ரதிதேவி தனக்கு மாங்கல்ய பிச்சை வேண்டி தவமிருந்த தலம். அதனால் ரதிவரம் என்றழைக்கப்பட்டது. இந்தக் கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ரதியின் செப்புத் திருமேனி இத்தலத்தில் உள்ளது. இரண்டு கைகளை ஏந்தி, இறைவனிடத்தில் தன் கணவனை உயிர்ப்பித்துத் தருமாறு வேண்டிட, இறைவன் மாங்கல்யப் பிச்சை அளித்தபோது அதைப் பெற்ற கோலத்தில் கையில் பூவுடன் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஊரி்ல் ஒவ்வொருஆண்டும் மாசி மாதம் பெளர்ணமி தினத்தில் காமன் பண்டிகை நடத்தப்படுகிறது. இதில் இரண்டாக வெட்டிய ஆமணக்குச் செடியை நட்டு வைப்பார்கள். இது சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு எட்டு நாட்களுக்குள் உயிர்ப்பித்து மீண்டும் தழைத்துவருவதாக நம்பிக்கை நிலவுகிறது. இன்றளவும் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

கடக ராசிக்காரர்கள், நாகதோஷம் உடையவர்கள் வழிபடவேண்டிய கோவில்

செளந்தரேஸ்வரர் வாக்குப்படி 'இந்த காமரசவல்லி பகுதியில் பாம்பு தீண்டி யாரும் இறந்ததில்லை' என்கின்றனர் ஊர்மக்கள். இந்த வரத்தை சிவபெருமான் தந்த நாள் கடகராசி, கடக லக்னம் அமைந்த தினம் என்பதால் கடகராசிக்காரர்கள், கடக லக்னக்காரர்கள் இந்தத் தலத்துக்கு வந்து செளந்தரேஸ்வரரை தரிசனம் செய்வது சிறப்பு. அவர்களது கஷ்டங்கள், நாகதோஷம், கால சர்ப்ப தோஷம் போன்றவை விலகும் என்பது ஐதீகம்.

திருமணத் தடை நீங்கி, நல்ல வரன் அமையவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்த தம்பதி ஒன்று சேரவும் இங்கு வந்து வேண்டிக்கொண்டால், அவர்கள் வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோவில்

திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோவில்

வெள்ளை நிறத்துடன் காணப்படும் அரிய சிவலிங்கம்

சிதம்பரத்திற்கு தென்கிழக்கே 5 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் திருக்கழிப்பாலை. இறைவன் திருநாமம் பால்வண்ணநாதர். இறைவியின் திருநாமம் வேதநாயகி. இத்தலத்தின் சிவலிங்கப் பெருமான் வெண்ணிறமுடையவராக விளங்கிறார், அதனாலேயே இறைவன் பால்வண்ணநாதர் என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் அருட்காட்சி தருகிறார்.

இத்தலம் முன்பு கொள்ளிட ஆற்றின் வடகரையில் கரைமேடு என்னுமிடத்தில் இருந்ததால், இத்தலத்திற்கு கழிப்பாலை என்ற பெயர் இருந்தது. கொள்ளிட ஆற்றின் வெள்ளப்பெருக்கால் கோயில் முழுவதும் சிதலமடைந்து விட்டது. எனவே தற்போது உள்ள இடத்தில் கோயில் கட்டி, அதில் கழிப்பாலை இறைவனையும், இறைவியையும் பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.

மூலவர் பால்வண்ணநாதர் ,வெண்ணிறமாக சுயம்பு மூர்த்தியாக மிகச் சிறிய பாணத்துடன் காட்சியளிக்கிறார். பாணத்தின் மேற்புறம் சதுரமாக, வழித்தெடுத்தாற்போல் நடுவில் பள்ளத்துடன் அதிசயமான அமைப்புடன் காட்சி தருகின்றது. அபிஷேகத்தின்போது பால் மட்டும்தான் இப்பள்ளத்தில் தேங்கும். மற்ற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்குத்தான் நடைபெறுகிறது. மூலவருக்கு பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் உள்ளனர்.

கபிலமுனிவர் ஒவ்வொரு சிவத்தலங்களாக தரிசித்து வரும்போது, வில்வ வனமாக இருந்த இப்பகுதியில் தங்கி, சிவபூஜை செய்ய நினைத்தார். இப்பகுதியில் பசுக்கள் தானாக பால்சுரந்து வந்த காரணத்தினால் மணல் முழுவதும் வெண்ணிறமாக காட்சியளித்தது. முனிவர் இந்த வெண்ணிற மணலை எடுத்து இலிங்கம் அமைத்து வழிபாடு செய்தார். ஒருமுறை அந்த வழியாக வந்த மன்னனது குதிரையின் கால் குளம்பு, மணல் லிங்கத்தின்மீது பட்டு சிவலிங்கம் பிளந்து விடுகிறது. வருந்திய முனிவர் பிளவுபட்ட சிவலிங்கத்தை எடுத்துவிட்டு வேறு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ய நினைத்தபோது, இறைவன் பார்வதி சமேதராக காட்சி தந்து,'முனிவரே. பசுவின் பால் கலந்த வெண்ணிற மணலில் செய்த சிவலிங்கம் பிளவு பட்டிருந்தாலும், அதை அப்படியே பிரதிஷ்டை செய்து விடுங்கள். காமதேனுவே பசுவடிவில் இங்கு வந்து பால்சொறிந்துள்ளது. எனவே இந்த சிவலிங்கத்தை வழிபடுபவர்கள் சகல செல்வங்களும் அடைவார்கள்' என்றார். இன்றும் பிளவு பட்ட வெண்ணிற சிவலிங்கம் தான் காட்சி தருகிறது.

பிரார்த்தனை

சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்த பாலை அருந்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
கருங்குளம் மார்த்தாண்டேஸ்வரர் கோவில்

கருங்குளம் மார்த்தாண்டேஸ்வரர் கோவில்

கல்யாண நவக்கிரக தலம் - நவக்கிரகங்கள் தங்கள் மனைவியர் சகிதமாக எழுந்தருளி இருக்கும் அரிய காட்சி

திருநெல்வேலியில் திருச்செந்தூர் சாலையில், 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது கருங்குளம் மார்த்தாண்டேஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் குலசேகர நாயகி.

ஒரு காலத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில், கேரளா அரசர் மார்த்தாண்டவர்மன் என்னும் மன்னன் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து மலையைச் சுற்றி அருமையான ஊர் ஒன்றை அமைத்தார். ஊருக்காகக் குளங்களை வெட்டினார். மரங்களின் நிழல்கள் பட்ட காரணத்தினால் எப்போதுமே குளங்கள் கருமையான நிறத்தில் காணப்பட்டது. எனவே இந்த ஊரை கருங்குளம் என அழைத்தனர். மார்த்தாண்ட மன்னன் இந்த ஊரை அமைத்த காரணத்தினால் மார்த்தாண்டேஸ்வர கருங்குளம் என இந்த ஊர் அழைக்கப்பட்டது. இதற்கிடையில் குலசேகரன்பட்டினத்தைத் ஆண்டு வந்த குலசேகர மன்னன், தாமிரபரணி ஆற்றில் நீராடி விட்டுச் செல்லும்போது, அம்பிகை இல்லாத மார்த்தாண்டேஸ்வர சிவனைக் கண்டு வணங்கி அங்கு ஒரு அம்பிகையைப் பிரதிஷ்டை செய்தார். குலசேகர நாதர் பிரதிஷ்டை செய்த அன்னைக்குக் குலசேகர நாயகி என்று பெயர். இதற்கிடையில் இந்த பகுதியில் முனிவர் பெருமக்களும், ரிஷிகளும் வந்திருந்து மார்த்தாண்டேஸ்வரரையும், இக்கோவிலுக்கு அருகில் உள்ள வகுளகிரி என்ற மலைமீது எழுந்தருளி இருக்கும் வெங்கடாசலபதியையும் வணங்கி நின்றனர். அப்பொழுது நவக்கிரகங்கள் அங்கே தம்பதி சகிதமாக காட்சியளித்தனர். அதைக் கண்டு முனிவர்களும், ரிஷிகளும் தங்களுக்குக் காட்சி தந்ததைப் போல மக்களுக்கும் தம்பதி சகிதமாக காட்சி தர வேண்டும் என்று வேண்டி நின்றனர். அதன்பின் இங்கு நவக்கிரகங்கள் தம்பதி சகிதமாக காட்சி தருகின்றனர். அதனால் இத்தலம், கல்யாண நவக்கிரக தலம் என்று அழைக்கப்படுகிறது.

இக்கோயிலில் நவக்கிரகங்கள் தங்கள் மனைவியர் சகிதமாக எழுந்தருளி இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இதுபோன்ற அமைப்பு தமிழகத்தில் ஒரு சில இடங்களிலேயே அமைய பெற்றுள்ளது.

இக்கோயிலில் நவகிரகங்கள் தங்கள் மனைவியர் சகிதமாக எழுந்தருளி இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இதுபோன்ற அமைப்பு தமிழகத்தில் ஒரு சில இடங்களிலேயே அமைய பெற்றுள்ளது.

பிரார்த்தனை

கணவன் மனைவியோடு இங்கு வருபவர்களுக்குக் கேட்ட வரங்கள் கிடைக்கின்றன. தாமிரபரணி நதிக்கரையில் நீராடி விட்டு இந்த சிவனை வணங்கி அதன்பின் வகுளகிரி வெங்கடாசலபதியை வணங்கினால் தடைப்பட்ட திருமணம் நடைபெறும், குழந்தை பேறு கிடைக்கும், நீண்ட ஆயுள் கிடைப்பதுடன், அடைபடாத கடன்கள் அடைபடும். தீராத வழக்குகள் நமக்குச் சாதகமாகும்.

Read More