காஞ்சிபுரம் சித்திரகுப்தன் கோவில்

காஞ்சிபுரம் சித்திரகுப்தன் கோவில்

நம் பாபப் புண்ணிய கணக்கெடுக்கும் சித்ரகுப்தன்

அசுவினி,மகம்,மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நற்பலன் தரும் தலம்

ஒவ்வொரு வீட்்டிலும் வரவு செலவுக் கணக்கு எழுதுவது என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயம். ஆனால் நம் ஒவ்வொருடைய புண்ணியச் செயல்களையும் பாபக் காரியங்களையும் தனித் தனியே பட்டியலிட்டு அதை எமதர்மராஜனுக்குக் கொடுப்பவர் ஒருவர் இருக்கிறார். அவர்தான் சித்திரகுப்தன். எமதர்மராஜன், சித்திரகுப்தன் தரும் நம் பாவப் புண்ணியக் கணக்கை ஆராய்ந்து, அதில், நாம் செய்திருந்த புண்ணியங்கள் அதிகமானால் நமக்கு மோட்சப் பதவியும் பாவக் காரியங்கள் மிகுதியானால் மறுபிறவியும் நமக்கு அளித்திடுவார்.

சித்திரகுப்தனுக்கென்று தனி கோவில் காஞ்சிபுரம் நெல்லுக்காரத் தெருவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரகுப்தன் வலது காலைத் தொங்க விட்டும் இடது காலை மடித்தும் அமர்ந்த நிலையில் காட்சித் தருகின்றார். அவர் வலக் கையில் எழுத்தாணியும் இடக் கையில் ஏடும் இருக்கின்றது.

சித்திரகுப்தனின் கதை

எமதர்மராஜன் சிவபெருமானை ஒரு நாள் கைலாயத்தில் சந்தித்து தனக்கு பூலோகத்திலுள்ள ஆன்மாக்களின் பாவப் புண்ணியங்களைப் பரிசீலித்து அந்த ஆன்மாக்களின் அடுத்த நிலை என்ன என்பதுப் பற்றி முடிவு எடுக்க மிகுந்த சிரமமாக உள்ளது என்றும் அதனால் பாவப் புண்ணியக் கணக்குகளை நிர்வகிக்க தனக்கு ஒரு உதவியாளர் வேண்டுமென்றும் வேண்டுகோள் வைத்தார். சிவபெருமான் பிரம்மதேவனிடம் எமதர்மராஜனின் வேண்டுகோளை நிறைவேற்றித் தருமாறு உத்திரவிட்டார்.

பிரம்மதேவன் எமதர்மனுக்கு ஒரு சகோதரனைப் படைத்து அச்சகோதரனே எமதர்மராஜனுக்குப் பாவப் புண்ணியக் கணக்கு எழுத உதவியாக இருக்கட்டும் என்று தீர்மானித்தார்,

பிரம்மதேவன் வானவில்லின் ஏழு வர்ணங்களிலிருந்து நீளாதேவி என்னும் பெண்ணைப் படைத்தார்.பின்னர நீளாதேவிக்கும் எமதர்மராஜனின் தந்தையான சூரிய தேவனுக்கும் திருமணம் நடந்தது. இவர்கள் இருவருக்கும் பிறந்த குழந்தைதான் சித்திரகுப்தன். சித்திரை மாதம் சித்ரா பௌணர்மி தினத்தன்று பிறந்ததால் முதலில் சித்திரைப்புத்திரன் என்று பெயரிட்டார்கள். பின்னர் சித்திரகுப்தன் என்று அழைக்க ஆரம்பிததார்கள். சித்திரகுப்தன் குழந்தையாய் பிறந்தபோது, அவன்பிற்காலத்தில் நிர்வகிக்கப் போகும் கணக்குப் பணியைக் குறிக்கும் விதத்தில், இடது கை உள்ளங்கை ரேகைகளில் ஏடு போன்ற அமைப்பும் வலது கை உள்ளங்கை ரேகைகளில் எழுத்தாணிப் போன்ற அமைப்பும் இருந்ததாம்.

சித்திரகுப்தன் வளர்ந்தபின் மூன்று பெண்களைத் திருமணம் செய்து கொண்டான். அதன் பின்னர் தந்தை சூரியதேவனால் பாவப் புண்ணியக் கணக்கு எழுத, எமதர்மராஐனுக்கு உதவியாக இருப்பதற்காக, அனுப்பப் பட்டான்.

சித்திரகுப்தனை வணங்குவதால் கிடைக்கும் பலன்கள்

நவக்கிரகங்களில் கேது பகவான, ஒரு ஜாதகரின் மோட்சப் பதவியை தீர்மாணிப்பதால் அவருக்கு மோட்சகாரகன் என்ற பெயறும் உண்டு. நம் பாவப் புண்ணியக் கணக்கின் அடிப்படையில் நமக்கு மறுபிறவியா அல்லது மோட்சமா என்று தீர்மானிக்கும் சித்திரகுப்தன்தான் கேது பகவானின் அதிதேவதை ஆவார்.

எனவே சித்திரகுப்தனை வணங்கினால், கேது பகவானால் ஏற்படக்கூடிய தீயப் பலன்களெல்லாம் விலகி நற்பலன்கள் உண்டாகும். ஐந்து பௌணர்மிகளில் சித்திரகுப்தனைத் தொடர்ந்து தரிசித்து அர்ச்சனை செய்தால், திருமணம் கைக்கூடும். இத்தலம் கேது நிவர்த்தி தலம் என்பதால், கேது திசை ஆரம்பிக்கும் நிலையில் உள்ளவர்களும் மற்றும் அசுவினி,மகம்,மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் இந்த ஆலயத்தில் அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபடுவது மிகுந்த நற்பலன்களக் கொடுக்கும்.

Read More
தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் கோயில்

தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் கோயில்

தென்குடித்திட்டை - தமிழகத்தில் குரு பெயர்ச்சிக்கு சிறந்த தலம்

தஞ்சாவூருக்கு வடமேற்கே 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் தென்குடித்திட்டை. இறைவன் திருநாமம் வசிட்டேசுவரர். இறைவியின் திருநாமம் உலகநாயகியம்மை.

தமிழகத்தில் குரு பெயர்ச்சிக்கு சிறந்த தலம் என்றால் அது தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோவில்தான். குருபகவான் இக்கோவிலில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில், தெற்கு நோக்கி தனி சன்னதியில், ராஜ குருவாக நின்ற நிலையில் அபய ஹஸ்த முத்திரையுடன் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். சனி பகவானுக்கு பரிகாரம் செய்ய உகந்த கோவிலிலாகவும் இது விளங்குகின்றது.

நவக்கிரகங்களில் மகத்தான சுப பலம் கொண்டவர் குரு. தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பார்க்கும் இடங்களை தன் பார்வை பலத்தால் சுபமாக்கும் தன்மை படைத்தவர். மேலும் ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்ரன் போன்ற கிரகங்களினால் வரும் தோஷங்களை, தமது பார்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவர். எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி ஏற்பட்டது.

இவருக்கு இந்தத் தலத்தில் ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழாவும், அதனையொட்டி லட்சார்ச்சனையும் குருபரிகார ஹோமங்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இங்குள்ள குரு பகவானை வேண்டினால் கல்விச் செல்வம், பொருட்செல்வம், குழந்தைச் செல்வம் உள்பட அனைத்து செல்வங்களும் எளிதில் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

வியாழ பகவானுக்குரிய நாளாகிய வியாழக்கிழமையில் விரதம் இருந்து பரிகாரம் செய்யலாம். நீராடி மஞ்சள் நிற ஆடை அணிந்து, புஷ்பராக மோதிரம் அணிந்து வழிபட வேண்டும். குருபகவானுக்கும் மஞ்சள் நிற ஆடையும், சரக்கொன்றை, முல்லை மலர் களும் கொண்டு அலங்கரிக்க வேண்டும். கடலைப்பொடி சாதம், வேர்க்கடலைச் சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபட்ட பின்னர், மற்றவர்களுக்கு தானம் செய்தல் அவசியம். மஞ்சள் நிற ஆடையையும் தானம் செய்யலாம். கடலை, சர்க்கரை கலந்து குருவுக்கு நிவேதனம் செய்து குழந்தைகளுக்கு தானம் செய்வது சிறப்பு தரும். குரு பகவானின் அதி தேவதைகளான பிரம்மன், இந்திரன் ஆகியோரை வழிபட்டாலும் குரு மகிழ்ச்சி கொண்டு பலன்களை வழங்குவார். ஜாதகத்தில் குரு பலவீனமாகவோ, தோஷத்துடனோ இருந்தால், நவமி அன்று சண்டி ஹோமம் செய்வது சிறப்பான பலனை தரும்.

சந்தான பாக்கியம் அளிக்கும் தலமாக இத்திருத்தலம் விளங்குகிறது. மேலும் கடன் தொல்லை அகலவும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படவும் இங்கு வந்து வழிபடுகின்றனர்.

Read More
திருக்கோட்டூர் கொழுந்துநாதர் கோவில்

திருக்கோட்டூர் கொழுந்துநாதர் கோவில்

தனி சன்னதியில் மூலவராக எழுந்தருளி இருக்கும் பிரதோஷ மூர்த்தி

மன்னார்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் 16 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருக்கோட்டூர். இறைவன் திருநாமம் கொழுந்துநாதர். இறைவியின் திருநாமம் தேனாம்பிகை. இந்திரன் பூஜித்ததால் இத்தலத்திற்கு இந்திரபுரி என்ற பெயர் உண்டு. இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற யானையும் இத்தல இறைவனை வழிபட்டது. கோடு என்றால் யானை. அதனால் இத்தலம் கோட்டூர் எனப் பெயர் பெற்றது.

பொதுவாக சிவாலயங்களில் பிரதோஷ காலங்களில், கோவில் பிராகாரத்தில் வலம் வருவதற்காக அமைந்துள்ள உற்சவமூர்த்தியே பிரதோஷ நாயகர் என்று அழைக்கப்படுகின்றார். உமாதேவியை தனது இடக்கரத்தால் அணைத்திருப்பதால் இவருக்கு அணைத்தெழுந்த நாதர் என்ற பெயரும் உண்டு. இவர் ஒன்றரை அடி உயரத்தில் சிறிய உருவத்துடன் காணப்படுவார். ஆனால் இந்த பிரதோஷ மூர்த்தி, இக்கோவிலில் பெரிய உருவத்துடன் தனி சன்னதியில் மூலவராக எழுந்தருளி இருக்கிறார். இப்படி மூலவராக காட்சி அளிக்கும் பிரதோஷ மூர்த்தியை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

Read More
திருவேட்டக்குடி சுந்தரேசுவரர் கோவில்

திருவேட்டக்குடி சுந்தரேசுவரர் கோவில்

சிவபெருமானும், முருகனும் வில்லேந்திய கோலத்தில் இருக்கும் அபூர்வ காட்சி

சிவபெருமான் வேடனாகவும், அம்பாள் தலையில் பானையை வைத்தபடி வேடன் மனைவி போலவும் காட்சி தரும் வித்தியாசமான உற்சவ மூர்த்திகள்

புதுச்சேரி மாநிலம் மாவட்டம் காரைக்காலில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் திருவேட்டக்குடி. இறைவன் திருநாமம் சுந்தரேசுவரர், திருமேனி அழகர். இறைவியின் திருநாமம் சௌந்தரநாயகி, சாந்தநாயகி.

கருவறையில் மூலவர் திருமேனி அழகர் என்கிற சுந்தரேசுவரர் லிங்க வடிவில் சதுர பீடத்துடன் ருத்ராட்ச பந்தலின் கீழ் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். உயரமான பாணத்துடன் தீபாராதனை ஒளி திருமேனியில் தெளிவாகத் தெரிகின்றபடி காட்சி அளிக்கிறார். அம்பாள் சாந்தமான கோலத்தில் இருப்பதால் இவளை சாந்தநாயகி என அழைக்கின்றனர்.

சிவபெருமான் மீனவர், வேடன் என இரண்டு வடிவங்களில் வந்து அருள் செய்த தலம் இது. இங்கு சிவபெருமானின் உற்சவர் வேட மூர்த்தியாக கையில் வில் மற்றும் சூலம் ஏந்தியும், அம்பாள் தலையில் பானையை வைத்தபடி வேடன் மனைவி போலவும் காட்சி தருவது வித்தியாசமான தரிசனம் ஆகும். சிவபெருமான் வேடராக வந்தபோது, அவருடன் முருகனையும் அழைத்து வந்தார். இதன் அடிப்படையில் இங்கு முருகனும் கையில் வில்லுடன் காட்சியளிக்கிறார். ஒரே தலத்தில் சிவபெருமான், முருகன் இருவரையும் வில்லுடன் தரிசனம் செய்வது அபூர்வம்.

இங்கு வேடன் வடிவில் சிவபெருமான் காட்சி தருவதின் பின்னணியில் மகாபாரதம் கதை ஒன்று உள்ளது. பாண்டவர்கள் வனவாசம் செய்த போது அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அவ்வாறு தீர்த்த யாத்திரை செய்த போது பல தலங்களில் சிவபெருமானை ஆராதித்தான். அப்படி வழிபட்ட தலங்களில் இத்தலமும் ஒன்று. வேதவியாசர் அர்ச்சுனனிடம், சிவனை வணங்கி பாசுபத அஸ்திரம் பெற்றால் எளிதில் துரியோதனரை வெற்றி கொள்ளலாம் என ஆலோசனை கூறினார். அதன்படி அர்ச்சுனன் இத்தலத்திற்கு வந்து சிவனை வேண்டி தவமிருந்தார். அவனது தவத்தை கலைப்பதற்காக, துரியோதனன் முகாசுரனை அனுப்பினார் .

பன்றி வடிவில் வந்த அசுரன் அர்ச்சுனனது தவத்தை கலைக்க முயன்றான். அர்ச்சுனன் அசுரனை அம்பால் வீழ்த்தினான். அப்போது ஒரு வேடன் தன் மனைவி, மகனுடன் அங்கு வந்து பன்றியை தான் வீழ்த்தியாக கூறி எடுத்துச் செல்ல முயன்றார். அர்ச்சுனன் அவரிடம் பன்றியை தர மறுத்தான். இதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிவபெருமான், தானே வேடன் வடிவில் வந்ததை உணர்த்தி, பாசுபத அஸ்திரம் கொடுக்கச் சென்றார். அருகிலிருந்த அம்பாள் சிவனிடம், 'ஆயுதங்களில் உயர்ந்ததான பாசுபதாஸ்திரம் பெறுவதற்கு அர்ச்சுனன் தகுதிபெற்றவன்தானா?' என்று சந்தேகம் எழுப்பினாள். சிவன் அவளிடம், 'அர்ஜுனன் மஸ்யரேகை (அதிர்ஷ்ட ரேகை) பெற்றவன். எனவே, அவனுக்கு அஸ்திரம் கொடுக்கலாம்' என்றார். அர்ச்சுனனும் அம்பாளிடம் பணிந்து நின்று தன் ரேகைகளை காட்டினான். அதன்பின் அம்பாள் சம்மதிக்கவே சிவன் பாசுபத அஸ்திரத்தை அர்ச்சுனனிடம் கொடுத்தார். அர்ச்சுனன் தனக்கு அருள் செய்ததைப் போல இங்கிருந்து அனைவருக்கும் அருளும்படி வேண்டவே சிவபெருமான் இத்தலத்தில் எழுந்தருளினார்.

இறைவனின் திருமேனி நாதர் என்ற பெயருக்கு ஏற்ப, இத்தலத்து இறைவனை வழிபட்டால், நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் அருளுவார்.

Read More
இலுப்பைபட்டு நீலகண்டேஸ்வரர் கோவில்

இலுப்பைபட்டு நீலகண்டேஸ்வரர் கோவில்

ஐந்து மூலவர்கள் இருக்கும் தேவார தலம்

பஞ்சபாண்டவர்கள் ஐந்து பேருக்கும் சிவபெருமான் தனித்தனியே காட்சி கொடுத்த தலம்

வைத்தீசுவரன்கோவில் – திருப்பனந்தாள் சாலையில் உள்ள மணல்மேடு என்ற ஊருக்கு வடக்கே ஒரு கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தேவாரத்தலம் இலுப்பைபட்டு. இத்தலத்தின் புராண பெயர் திருமண்ணிப் படிக்கரை. சிவபெருமான் ஆலகால விஷத்தை பருகியபோது பார்வதி தேவி, சிவபெருமானின் கழுத்தை தன் கரங்களால் அழுத்தி விஷத்தை தொண்டையிலேயே நிற்கச் செய்த கோவில் இது.

பொதுவாக சிவன் கோவில்களில் ஒரு மூலவர் மட்டும்தான் இருப்பார். அரிதாக சில சிவன் கோயில்களில் இரண்டு மூலவர்கள் இருப்பார்கள். ஆனால் இக்கோவிலில் ஐந்து மூலவர்கள் அருள் பாலிப்பது ஒரு தனி சிறப்பாகும். இதன் பின்னணியில் ஒரு புராண வரலாறு உள்ளது.

பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்தபோது, இத்தலத்தில் சில காலம் தங்கியிருந்தனர். சிவபூஜை செய்ய விரும்பிய அவர்கள், இங்கு தேடிப் பார்த்தும் சிவலிங்கம் எதுவும் கிடைக்க வில்லை. எனவே, அவர்கள் ஐந்து பேரும் ஒரு இலுப்பை மரத்தின் அடியில், இலுப்பைக்காயில் விளக்கேற்றி சிவனை மானசீகமாக வணங்கினர். சிவபெருமான் அவர்கள் ஐந்து பேருக்கும், தனித்தனி மூர்த்தியாக காட்சி தந்தார். அவர்கள் சிவபெருமானிடம், தங்களுக்கு அருளியதைப் போலவே இங்கிருந்து அனைவருக்கும் அருள் செய்ய வேண்டுமென வேண்டிக் கொண்டனர். சிவபெருமானும் ஐந்து மூர்த்திகளாக எழுந்தருளினார். தற்போதும் இக்கோவிலில் ஐந்து லிங்கங்கள் தனித்தனி சன்னதியில் இருக்கின்றது.

தர்மர் வழிபட்ட சிவன் நீலகண்டேஸ்வரர், அர்ஜுனன் வழிபட்ட சிவன் படிகரைநாதர், பீமனால் வழிபடப்பட்டவர் மகதீஸ்வரர், நகுலன் வழிபட்டவர் பரமேஸ்வரர், சகாதேவன் வழிபட்டவர் முத்துகிரீஸ்வரர் என்ற பெயர்களில் அருளுகின்றனர். இவர்களில் நீலகண்டேஸ்வரர், படிகரைநாதருக்கு அம்பிகை சன்னதி உண்டு. இவர்களில் நீலகண்டேஸ்வரர், படிகரைநாதருக்கு அம்பிகை சன்னதி உண்டு. படிகரைநாதர் சன்னதியிலேயே மங்களாம்பிகை தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். மற்றொரு அம்பிகையான அமிர்தகரவல்லி தனி சன்னதியில் எழுந்தருளி இருக்கிறாள். பீமன் வழிபட்ட சிவன், சோடச லிங்கமாக, 16 பட்டைகளுடன் இருக்கிறார். பதினாறு செல்வமும் பெற இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

Read More
அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில்

அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில்

கால சர்ப்பங்கள் சாளரத்தில் எழுந்தருளி இருக்கும் அபூர்வ காட்சி

சகல நாக தோஷங்களுக்கான நிவர்த்தி தலம்

கும்பகோணம் நன்னிலம் சாலையில், ஸ்ரீவாஞ்சியம் தலத்திற்கு மிக அருகே 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது அச்சுதமங்கலம். இறைவன் திருநாமம் சோமநாதர். இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி. திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாக வைத்துப் பாடப் பெற்ற தலம்.

இக்கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள சாளரத்தில்,இரண்டு கால சர்ப்பங்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்தபடி காட்சி தருகின்றன. பொதுவாக சன்னதிகளில் அல்லது கோவில் மண்டபங்களில் காட்சி தரும் சர்ப்பங்கள், இங்கு சாளரத்தில் எழுந்தருளி இருப்பது ஒரு தனி சிறப்பாகும். இந்த சாளரத்தில் ஆதிசேஷன், வாசுகி, தட்சகன், கார்க்கோடகன், அனந்தன், குளிகன், சங்கபாலன், பத்மன் ஆகிய எட்டு நாகங்களும் சூட்சும ரூபத்தில் இருக்கின்றன. இந்த சாளரத்து நாகங்களை வழிபட்டால் சகல நாக தோஷங்களும் விலகும். இதன் பின்னணியில் ஒரு புராண வரலாறு உள்ளது.

ஒரு சமயம் சிவபெருமானின் திருமேனியில் ஆபரணங்களாக உள்ள நாகங்களுக்கு, சிவபெருமானை வழிபடும் போது தங்களைத்தான் வழிபடுகிறார்கள் என்ற கர்வம் ஏற்பட்டது. இதனால் சிவபெருமானின் சாபத்தை பெற்றார்கள். நாகங்கள் சிவபெருமானிடம் சாப விமோசனம் வேண்டி நின்றபோது, சிவபெருமான் அவர்களை சிவராத்திரி அன்று, ஆலமர விழுதை நாராக எடுத்து, அகத்தி பூவை வைத்து மாலையாக தொடுத்து இத்தலத்தில் தன்னை வழிபட்டால் சாப விமோசனம் கிடைக்கும் என்றார். இந்த வழிபாட்டை அன்று தவறவிட்டால் சாப விமோசனம் கிடையாது என்றும் நிபந்தனை விதித்தார். அதனால் தான் இன்றும் இத்தலத்தில் ஆலமர விழுதுகள் தரையை தொடுவதில்லை, அகத்தி மரத்தில் பூக்கள் பூப்பதில்லை.

இக்கோவில் சாளரத்தில் சூட்சும ரூபத்தில் இருக்கும் அஷ்ட நாகங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் இரண்டு தீபம் ஏற்றி , சுவாமி அம்பாளுக்கு அர்ச்சனை செய்து, அம்பாள் சன்னதியில் உளுந்து, கொள்ளு தானம் செய்து ஒன்பது வாரங்கள் வழிபட்டால் ராகு கேது தோஷம், கால சர்ப்ப தோஷம், அனைத்து நாக தோஷங்களும் விலகும்.

Read More
திருநின்றியூர் மகாலட்சுமீஸ்வரர் கோவில்

திருநின்றியூர் மகாலட்சுமீஸ்வரர் கோவில்

சூரியனும் சந்திரனும் ஒருவரை ஒருவர் நேர் முகமாக பார்த்தபடி இருக்கும் அரிய காட்சி

மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் சாலையில் சுமார் 7 கி.மீ. தூரத்தில் உள்ள தேவாரத்தலம் திருநின்றியூர். இறைவன் திருநாமம் மகாலட்சுமிபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் உலகநாயகி, லோகநாயகி. மகாலட்சுமி இத்தலத்தில் சிவனை வழிபட்டு அருள் பெற்றாள். எனவே, இத்தலத்து இறைவன் மகாலட்சுமீஸ்வரர் என்று அழைக்கப்படுகின்றார். மகாலட்சுமி (திருமகள்) வழிபட்டதால் இவ்வூர் திருநின்றியூர் என்று பெயர் பெற்றது. இத்தலம் மூவர் தேவாரப் பாடலும் பெற்ற சிறப்புடையதாகும்.

பொதுவாக, அனைத்து சிவாலயங்களிலும், ஈசானிய(வடகிழக்கு) மூலையில் நவக்கிரகங்கள் மேற்கு திசை முகமாக அமைக்கப்பட்டிருக்கும். நவகிரகங்களின் நடுவில் சூரிய பகவான் கிழக்கு முகமாகவும்,, சூரியனுக்கு கிழக்கில் சுக்கிரன் கிழக்கு முகமாகவும், மேற்கில் சனி மேற்கு முகமாகவும், வடக்கில் குரு வடக்கு முகமாகவும், தெற்கில் செவ்வாய் தெற்கு முகமாகவும், வடகிழக்கில் புதன் வடக்கு முகமாகவும், தென் கிழக்கில் சந்திரன் மேற்கு முகமாகவும், வட மேற்கில் கேது தெற்கு முகமாகவும் தென் மேற்கில் ராகு தெற்கு முகமாகவும் இடம் பெற்றிருப்பார்கள். ஆனால் இக்கோவிலில் சூரியனும் சந்திரனும் ஒருவரை ஒருவர் நேர் முகமாக பார்த்தபடி எழுந்தருளி இருப்பது வேறு எந்த கோவிலிலும் நாம் காண முடியாத அரிய காட்சியாகும்.

Read More
பிரம்மதேசம்  கைலாசநாதர் கோவில்

பிரம்மதேசம் கைலாசநாதர் கோவில்

பித்ரு தோஷம் நீக்கும் கங்காள நாதர்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் என்ற ஊரிலிருந்து, 4 கி.மீ. தூரத்தில் உள்ள தலம் பிரம்மதேசம். இறைவன் திருநாமம் கைலாசநாதர். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. இந்த கோவிலின் புராண பெயர் 'அயனீச்சுவரம்'. ராஜ ராஜ சோழனால் இக்கோவில் கட்டப்பட்டு, பின்னர் விஜயநகர பேரரசர்களால் விரிவாகப்பட்டது. பிரம்மதேசம் கைலாசநாதர் கோவிலுக்கு சென்று வந்தால் காசிக்கு சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். நவ கைலாய தலங்களில், சூரியனுக்குரிய தலம் இது.

இக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் கங்காள நாதர் பார்ப்பவரை பரவசமடையச் செய்யும், கலையம்சம் மிக்க மூர்த்தியாக விளங்குகின்றார். கங்காள நாதர், என்பது அறுபத்து மூன்று சிவ திருமேனிகளுள் ஒன்றாகும். இக்கோவிலில் கங்காள நாதர் ஏழடி உயரத் திருமேனியுடன், நீண்ட கைகளும் கால்களும் உடையவராய், பீடம் ஏதுமின்றி தேர்ந்த வேடுவனைப் போல் நிற்கிறார். இடது கையில் கங்காளம் எனப்படும் உடுக்கை போன்றதொரு வாத்தியம், வலது கையில் எலும்பைப் போன்றதொரு தண்டம். இடது கால் பூமியில் அழுந்தப் பதிந்திருக்க வலக்கால் சற்றே வளைந்து நடந்து செல்வதைப் போன்ற தோற்றம். மலரும் பிறையும், சர்ப்பமும் சூடிய ஜடா மகுடமும். பெருக்கிய காதுகளில் ஒரு காதில் மிகப்பெரிய குண்டலமும் அணிந்து இருக்கிறார். புன்னகையும், கருணையும், அருளும் ததும்பும் கண்களை உடைய திருமுகத்துடன் காட்சி அளிக்கிறார். நான்கு கரங்களில் பின்னிரு கரங்களில் ஒரு கையில் பாணமும், மறுகையில் முத்திரையும் தாங்கி இருக்கின்றார். அவரைச் சுற்றி இசைக்கருவிகளோடு அவரது முழங்கால் உயரத்திற்கு 5 பூத கணங்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். உச்சிக்கு மேலே சுவற்றில் புடைப்புச் சிற்பமாக இந்திராதி தேவர்கள், விஷ்ணு, ரிஷி புங்கவர்கள், கின்னரர், கிம்புருடர், குதிரை, யானை, அப்சரஸ்கள் காட்சி அளிக்கிறார்கள். இதில் சில அப்சரஸ்களின் உருவங்கள் சுதை சிற்பமாக செய்யப்பட்டு வஸ்திரமும் வர்ண கலாபமும் கொண்டு அழகு செய்யப்பட்டிருக்கின்றன.

இந்த கங்காளநாதரை அமாவசையன்று காலை தரிசனம் செய்தால் பித்ரு தோஷம் முதல் அனைத்து வகை தோஷங்களும் நீங்கும்.

Read More
விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோவில்

விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோவில்

அட்சய திருதியைக்கு உரிய தனிச்சிறப்புத் தலம்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் விளங்குளம் . இறைவன் திருநாமம் அட்சயபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் அபிவிருத்தி நாயகி.

கருவறையில் அட்சயபுரீஸ்வரர் லிங்கத் திருமேனியராக கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இவர், சனி பகவானுக்கு அருளிய தினம் ஓர் அட்சய திருதியை நாள். எனவே இறைவன், அட்சயபுரீஸ்வரர் என்றே அழைக்கப்படுகிறார். அட்சயம் என்றால் வளர்வது என்று அர்த்தம். இத்தலத்திற்கு ஒருமுறை வந்து போனாலே பக்தர்களின் இல்லத்தில் செல்வம் உள்ளிட்ட பதினாறு பேறுகளும் தழைத்து வளரும் என்பது ஐதீகம்.

செல்வங்கள் அனைத்துக்கும் அதிபதியான குபேரன், ஈசனை வழிபட்டே சங்கநிதி, பதுமநிதிகளைப் பெற்றான் என்கிறது புராணம். அப்படி குபேரன் செல்வங்களைப் பெற்று அளகாபுரிக்கு அரசனானதும், அட்சயபுரீஸ்வரரின் அருளால்தான் என்பதால் இத்தலம் அட்சய திருதியைக்கு உரிய தனிச்சிறப்புத் தலமாகக் கூறப்படுகிறது.

அம்பிகை அபிவிருத்தி நாயகி, மேல் இரு கரங்களில் தண்டத்தையும், தாமரையையும் தாங்கி, கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரைகளுடன் நின்ற கோலத்தில் புன்னகை தவழ தென்திசை நோக்கி அருள்பாலிக்கின்றாள். அம்பிகையின் திருநாமமும், அபிவிருத்தி நாயகி என அமைந்திருப்பது, இத்தலத்தில் வழிபட்டால், மேலும் மேலும் செல்வங்கள் வளரும் என்பதையே உறுதிப்படுத்துகிறது. கணவருக்கு நிகராக, இவளும் நமக்கெல்லாம் அபிவிருத்தியைத் தந்தருளும் கருணைக் கடல் என்று பக்தர்கள் போற்றுகின்றனர்.

அட்சய திருதியை நாளில், மூலவர் சிவனாருக்கு சந்தனக் காப்பில் மாதுளை முத்துக்கள் பதித்து, சிறப்பு பூஜைகள் நடைபெறும். பிறகு, சனீஸ்வரருக்கு புனுகு கலந்த சந்தனக் காப்பு செய்வித்து, எள், அரிசி, கோதுமை, பாதாம்பருப்பு, குங்குமப்பூ மற்றும் நவதானியங்களைப் பதித்து அலங்கரிப்பார்கள்.

அட்சய திருதியை நாளிலும் வெள்ளி, ஞாயிறு, திங்கட்கிழமை முதலான நாட்களிலும் விளங்குளம் வந்து, சிவபார்வதியைத் தரிசித்தால், சகல செல்வங்களும் பெற்று இனிதே வாழலாம் என்பது ஐதீகம்.

புராணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் அட்சயதிருதியை நாளில் நடந்த சில நிகழ்வுகள்

- வேத வியாசர், மகாபாரதத்தை விநாயகர் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்ட நாள் அட்சய திருதியை.

- திருமாலின் பத்து அவதாரங்களில் ஒருவரான பரசுராமர் அவதரித்த நாள்

- நான்கு யுகங்களில் முதல் யுகமான கிருத யுகத்தில், பிரம்மன் உலகத்தைப் படைத்தது அட்சய திருதியை நாளில்தான்

- இரண்டாவது யுகமான கிரேதா யுகம் தோன்றிய நாளும் ஒரு அட்சய திருதியை அன்றுதான்

-காசியில் அன்னபூரணியிடம் அன்னம் பிச்சை பெற்று, சிவனின் தோஷம் நீங்கிய நாளும் அட்சய திருதியைதான்

- பகீரதனின் தவத்தால் கங்கை பூமிக்கு வந்ததும் ஒரு அட்சய திருதியை அன்றுதான்

- கிருஷ்ணன் தன் நண்பன் குசேலனிடமிருந்து அவல் மூட்டையை பெற்றுக் கொண்டு அவருடைய வறுமையை நீக்கிய நாள் அட்சய திருதியை.

- கிருஷ்ணன், துரியோதனன் சபையில் திரௌபதியின் மானத்தை காப்பாற்றியதும் ஒரு அட்சய திருதியை அன்றுதான்

Read More
திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் கோவில்

திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் கோவில்

தீபாராதனை செய்யும்போது சிவலிங்கத்தில் தெரியும் பிரகாசமான தீப ஒளி

சகலவிதமான நோய்களை தீர்க்கும் அபிஷேகத்தேன்

செங்கல்பட்டில் இருந்து சுமார் 9 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத்தலம் திருவடிசூலம். இறைவன் திருநாமம் ஞானபுரீஸ்வரர். இறைவி இமயமடக்கொடி. இத்தலத்து இறைவன் திருஞானசம்பந்தருக்கு இடையன் வடிவில் காட்சி தந்தார். இதனால் இவருக்கு இடைச்சுரநாதர் என்ற திருநாமும் உண்டு.

இத்தலத்து மூலவர் சதுரபீட ஆவுடையாரின் மேல் சுயம்பு லிங்கத் திருமேனியாக எழுந்தருளி உள்ளார் . இந்த சிவலிங்கத் திருமேனியானது மரகத கல்லால் ஆனது. சிவலிங்கத் திருமேனியில் தீபாராதனை செய்யும்போது தீப ஒளி பிரகாசமாக லிங்க பாணத்தில் தெரிகின்றது. சிவலிங்கத்தில் தெரியும் ஜோதியானது பார்ப்பவரை பரவசமடையச் செய்யும். இத்தலத்தில் இறைவனுக்கு தேன் அபிஷேகம் செய்வது ஒரு சிறப்பம்சம். தேன் அபிஷேகம் செய்து அந்த தேனை பிரசாதமாக வாங்கி தினமும் உட்கொண்டு வந்தால், சகலவிதமான நோய்களும் நீங்கும் என்பது ஐதீகம். இத்தலத்துக்கு வரும் பக்தர்களில் பலர் தேன் அபிஷேக பிரசாதம் வாங்கிச் செல்கின்றனர். திருஞானசம்பந்தரும் தனது பதிகத்தின் கடைசிப் பாடலில், இத்தல பதிகத்தைப் பாராயணம் செய்து இறைவனை வழிபடுவர்கள் பிணிகள் இன்றி வாழ்வர் என்று குறிப்பிடுகிறார்.

Read More
காஞ்சிபுரம் செவிலிமேடு கைலாசநாதர் கோவில்

காஞ்சிபுரம் செவிலிமேடு கைலாசநாதர் கோவில்

சிவபெருமான், ராகு – கேது ஆகிய இருவருக்கும் நவக்கிரக பதவி அளித்த தலம்

ராகு கேது தோஷ பரிகார தலம்

காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி செல்லும் வழியில் ஐந்து கிமீ தொலைவில் அமைந்துள்ளது செவிலிமேடு கைலாசநாதர் கோவில். மூலவர் கைலாசநாதர் 16 பட்டை கொண்ட லிங்கத் திருமேனியுடன், சோடச லிங்கமாக மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார்.

இத்தலத்து இறைவனை வழிபட்டுத்தான், ராகு கேது நவக்கிரக பதவியை அடைந்தார்கள். தல புராணங்களின் படி பாற்கடலை கடைந்து அமுதத்தை அரக்கர்கள் கையில் கிடைக்காமல் மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களை மயக்கி, அமிர்தத்தை தேவர்கள் சாப்பிடும்படி செய்தார். தேவர்களுக்கு அமுதத்தை சமமாக பிரித்து படைக்கும் சமயம் சுவர்ணபானு என்கிற அசுரன் அமிர்தம் சாப்பிடும் ஆசையில் தனது உருவத்தை தேவர் போல மாற்றிக்கொண்டு, தேவர்கள் அமர்ந்திருக்கும் கூட்டத்தில் சூரிய, சந்திரனுக்கு இடையில் அமர்ந்து அமுதத்தை வாங்கி பருகி விட்டான். இவன் அசுரன் என்பதை அறிந்த சூரிய சந்திரர் விஷ்ணுவிடம் முறையிட, விஷ்ணு சுவர்ணபானுவின் தலையை வெட்டினார். அமிர்தத்தை அவன் சாப்பிட்டதால் அவன் இறக்கவில்லை, மாறாக வெட்டுப்பட்ட தலைக்கு கீழ் பாம்பின் உடலும், தலையில்லா உடலின் கழுத்தில் ஐந்து தலை பாம்பு முகமும் தோன்றியது.

இந்த இரண்டும் ராகு – கேது எனப்பட்டனர். இந்த ராகு – கேது ஆகிய இருவரும் காஞ்சிபுரம் வந்தடைந்தனர். இத்தலத்தில் ஒரு தீர்த்தத்தை உருவாக்கி, சிவனை வழிபட்டு தங்களின் செயலுக்கு மனமுருகி மன்னிப்பு கேட்டனர். சிவனும் அவர்களை மன்னித்தருளி ராகு – கேது ஆகிய இருவருக்கும் நவகிரக பதவி தந்தருளினார்.

ராகு – கேது இருவராலும் வழிபடப்பட்ட சுயம்பு லிங்கம் இது என்பதால்,இக்கோவில் ராகு கேது தோஷ பரிகார தலமாக விளங்குகின்றது.ராகு – கேது தோஷம், பிதுர் சாபங்கள், களத்திர தோஷம் போன்றவை நீங்க இங்கு சுவாமிக்கு அபிஷேகம் செய்து, அர்ச்சனை மற்றும் பரிகார பூஜைகள் செய்து வழிபட்டால் தோஷம் விலகி நற்பலன்கள் உண்டாகும்.

Read More
நரசிங்கன்பேட்டை சுயம்பு நாதர் கோவில்

நரசிங்கன்பேட்டை சுயம்பு நாதர் கோவில்

மனித முக அமைப்புடன் இருக்கும் ராகு கேதுவின் அபூர்வ தோற்றம்

ராகு மற்றும் கேது ஆகிய இரண்டு கிரகங்களுக்குமான தோஷ நிவர்த்தி தலம்

கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில், கும்பகோணத்தில் இருந்து 16 கி.மீ .தொலைவில் அமைந்துள்ள அமைந்துள்ள தலம் நரசிங்கன்பேட்டை. இறைவன் திருநாமம் சுயம்பு நாதர். இறைவியின் திருநாமம் லோகநாயகி. ஆயிரம் ஆண்டுகள் பழைமையான ஆலயமாகும். நரசிம்ம பெருமாள், இரணியாசுரனை வதம் செய்ததால் ஏற்பட்ட ஹத்தி தோஷத்தை நீக்குவதற்காக சிவபூஜை செய்த தலம் இது. அதனால் இத்தலத்திற்கு 'நரசிங்கபுரம்' என்ற பெயர் ஏற்பட்டது. பின்னாளில், 'நரசிங்கமங்கலம்' என்று வழங்கப்பட்ட இவ்வூர், தற்போது நரசிங்கன்பேட்டை என்றானது.

இத்தலத்தில் ஒரு தனி சன்னதியில் இராகுவும் கேதுவும் அருகருகே மனிதனை போன்ற முக அமைப்புடன் காட்சி தருவது ஒரு அபூர்வமான தோற்றமாகும். பொதுவாக ராகுவும் கேதுவும் ஒருசேர காண்பது அரிதாகும். இங்கு திங்கட்கிழமை, செவ்வாய் கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை இராகு காலத்தில் இராகு, கேதுவிற்கு ஒன்பது தீபமேற்றி பாலாபிஷேகம் மற்றும் வஸ்திரங்கள் சாற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால் ஜாதகத்தில் உள்ள ராகு கேது தோஷங்கள் யாவும் நீங்கி விரைவில் மணப்பேறு, மகப்பேறு கிட்டும் என்பது ஐதீகம். திருமணம் ஆகாத இருபாலரும் இத்தலத்தில் 9 தீபமேற்றி 9 முறை வலம் வந்து வழிபட்டால், நினைத்தபடி மணவாழ்க்கை அமையும். மகப்பேறு வேண்டுவோர் அவசியம் தரிசிக்க மகப்பேறு கிட்டும் என்பது ஐதீகம். ராகுக்கு தனியாகவும் கேதுவுக்கு தனியாகவும் அர்ச்சனை செய்து வழிபடலாம்.

ராகு பரிகாரம் செய்ய திருநாகேஸ்வரம் செல்பவர்களும், கேது பரிகாரம் செய்ய கீழ்பெரும்பள்ளம் செல்பவர்களும் திருபாம்புரம், காளஹஸ்தி செல்பவர்களும் அவசியம் இத்தலத்தில் உள்ள ராகு, கேது பகவானுக்கு தீபமேற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால் ராகு, கேது தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். தாங்கள் முழுமையாக நற்பலன்களை பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

Read More
மானந்தகுடி ஏகாம்பரேசுவரர் கோவில்

மானந்தகுடி ஏகாம்பரேசுவரர் கோவில்

ஆஞ்சநேயர் மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடிய தலம்

வாழ்வில் மங்களம் அருளும் மங்கள ஆஞ்சநேயர்

திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊரில் இருந்து, 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மானந்தகுடி. இறைவன் திருநாமம் ஏகாம்பரேசுவரர். இறைவியின் திருநாமம் காமாட்சி அம்மன். முற்காலத்தில் இத்தலம் அனுமன் ஆனந்த குடி என்று அழைக்கப்பட்டது. அதுவே பின்னர் மானந்த குடி என்றானது. இதன் பின்னணியில் ஒரு புராண வரலாறு உள்ளது.

கார்த்தவீரியன் என்பவன் சிறந்த சிவபக்தன். ஒருசமயம் அவன் சிவபூஜை செய்து கொண்டிருந்தபோது, ஆஞ்சநேயர் அவனது பூஜைக்கு தொந்தரவு செய்தார். இதனால் கோபமடைந்த கார்த்தவீரியன், ஆஞ்சநேயரை சபித்துத் விட்டான். தவறை உணர்ந்த ஆஞ்சநேயர், விமோசனம் வேண்டி இத்தலத்திற்கு வந்தார். சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். சிவன் அவருக்கு அம்பிகையுடன் காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தருளினார். அந்த மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடினார் ஆஞ்சநேயர். எனவே இத்தலம் 'அனுமன் ஆனந்த குடி' என்றழைக்கப்பட்டு, பிற்காலத்தில் 'மானந்தகுடி' என்று மருவியது.

இக்கோவிலில் ஆஞ்சநேயருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இவரிடம் வேண்டிக்கொண்டால் வாழ்வில் மங்களம் உண்டாகும் என்பது நம்பிக்கை . எனவே இவரை, 'மங்கள ஆஞ்சநேயர்' என்றே அழைக்கிறார்கள். இக்கோவிலில் ஆஞ்சநேயருக்கு, அமாவாசை மற்றும் மூல நட்சத்திரத்தன்று சிறப்பு பூஜைகள் நடக்கிறது. தெரியாமல் தவறு செய்து வருந்துபவர்கள், மன அமைதி கிடைக்க இங்கு வேண்டிக் கொள்கிறார்கள்.

Read More
ஆக்கூர் தான்தோன்றீசுவரர் கோவில்

ஆக்கூர் தான்தோன்றீசுவரர் கோவில்

ஆயிரம் அந்தணர்களில் ஒருவராக அன்னதானத்தில் கலந்து கொண்ட சிவபெருமான்

கையில் தண்டு ஊன்றிய நிலையில் காட்சியளிக்கும் சிவபெருமானின் அபூர்வ தோற்றம்

மயிலாடுதுறை – தரங்கம்பாடி சாலையில், மயிலாடுதுறையில் இருந்து கிழக்கே 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் ஆக்கூர் தான்தோன்றீசுவரர் கோவில். மாடம் என்னும் பெயர் கொண்ட தேவார திருத்தலங்கள் இரண்டு. ஒன்று நடுநாட்டுத் தலமான பெண்ணாகடத்தில் உள்ள தூங்கானை மாடம். மற்றொன்று காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றான ஆக்கூர் தான்தோன்றி மாடமாகும். யானை ஏறமுடியாத படிக்கட்டுகளை உடைய உயரமான தளத்தில் இறைவன் கருவறை அமையப்பெற்ற கோவில்கள் மாடக்கோயில் என்று பெயர் பெற்றன.

இக்கோவில் இறைவியின் திருநாமம் வாள்நெடுங்கன்னி. உற்சவர் திருநாமம் ஆயிரத்துள் ஒருவர். இவர் கையில் தண்டு ஊன்றிய நிலையில் நின்ற வண்ணமாக காட்சியளிக்கிறார். சிவபெருமானின் இத்தகைய உற்சவமூர்த்தி கோலத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. இதன் பின்னணியில் ஒரு சுவையான வரலாற்று நிகழ்ச்சி உள்ளது.

கோச்செங்கட்சோழன் யானை ஏற முடியாத 70 மாட கோவில்களை கட்டியவன். ஒரு முறை கோச்செங்கண்ணனுக்கு வயிற்றில் குன்ம நோய் ஏற்படுகிறது. இதனால் மன்னன் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறான். இந்த நோயை தீர்க்க வேண்டுமானால், மூன்று தல விருட்சங்கள் எங்கு இருக்கிறதோ அங்கு கோவில் கட்டினால் நோய் தீரும் என்று அசரீரி கூறுகிறது. மன்னனும் பல கோவில்கள் கட்டி வரும் போது, ஆக்கூர் என்ற இத்தலத்திற்கு வருகிறான். அப்போது அசரீரி வாக்கின் படி கொன்றை, பாக்கு, வில்வம் என்று மூன்று தலவிருட்சங்களை ஒரே இடத்தில் பார்க்கிறான்.

உடனே இந்த இடத்தில் ஒரு சிவாலயம் கட்டுகிறான். அப்படி கோவில் கட்டும்போது ஒருநாள் கட்டிய சுவர் மறுநாள் கீழே விழுந்து விடும். இது எதனால் கீழே விழுகிறது என சிவனிடம் மன்றாடி கேட்கிறான். அதற்கு இறைவன் ஆயிரம் அந்தணர்களுக்கு அன்னதானம் செய்தால் குறைபாடு நீங்கி, கோவிலை சிறப்பாக கட்டலாம் என்று கூறுகிறார். அதன்படி 48 நாள் அன்னதானம் நடக்கிறது. இதில் ஒவ்வொருநாளும் ஆயிரம் இலை போட்டால் 999 பேர் தான் சாப்பிடுவார்கள். ஒரு இலை மீதம் இருந்து கொண்டே இருக்கும். மன்னன் மிகுந்த வருத்தத்துடன் இறைவனிடம் சென்று, ஏன் இந்த சோதனை, 48 நாட்களும் ஆயிரம் பேர் அன்னதானம் சாப்பிட்டால் தானே கோவில் கட்டுவது சிறப்பாக அமையும். ஆனால் தினமும் ஒரு ஆள் குறைகிறார்களே. இதற்கு தாங்கள் தான் ஒரு வழி சொல்ல வேண்டும் என்று கெஞ்சுகிறான்.

மன்னனின் குரலுக்கு செவி சாய்த்து விட்டார் இறைவன். 48வது நாள் ஆயிரம் இலை போடப்பட்டது. ஆயிரம் இலையிலும் ஆட்கள் அமர்ந்து விட்டார்கள். ஆயிரமாவது இலையில் 'ஆயிரத்தில் ஒருவராக' அமர்ந்திருந்த வயதான அந்தணரிடம் சென்ற மன்னன், 'ஐயா, தங்களுக்கு எந்த ஊர்' என்று கேட்டான். அதற்கு வயதான அந்தணர் 'யாருக்கு ஊர்' என்று மறுகேள்வி கேட்கிறார். (இதனாலேயே இந்த ஊருக்கு யாருக்கு ஊர் என்பது மருவி ஆக்கூர் ஆனது). மன்னனை எதிர் கேள்வி கேட்ட அந்த வயதானவரை அடிப்பதற்காக சிப்பாய்கள் விரட்டுகின்றனர்.

ஓடி சென்ற வயதானவர் நெடுங்காலமாக அங்கிருந்த புற்றுக்குள் விழுந்து விட்டார். புற்றை கடப்பாறையால் விலக்கி பார்த்த போது உள்ளேயிருந்து சுயம்பு மூர்த்தியாக 'தான்தோன்றீசுவரர்' தோன்றுகிறார். கடப்பாறையால் புற்றை குத்தியபோது கடப்பாறை லிங்கத்தின் மீது பட்டு விடுகிறது. கடப்பாறை பட்டதில் அடையாளமாக இன்றும் கூட லிங்கத்தின் தலைப்பகுதியில் பிளவு இருப்பதைக் காணலாம்.

இந்தக் கோவிலின் கும்பாபிஷேக திருப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

Read More
சீர்காழி சட்டைநாதசுவாமி கோவில்

சீர்காழி சட்டைநாதசுவாமி கோவில்

காசிக்கு இணையான அஷ்ட பைரவர் தலம்

காசியில் பாதி காழி

சிதம்பரம் மயிலாடுதுறை நெடுஞ்சாலையில், சிதம்பரத்திற்கு தெற்கு 19 கி.மீ. தொலைவிலும் மயிலாடுதுறைக்கு வடக்கே 20 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள தேவார தலம் சீர்காழி சட்டைநாதசுவாமி கோவில். இறைவியின் திருநாமம் திருநிலை நாயகி.

இக்கோவிலில் காசிக்கு அடுத்தபடியாக அஷ்டபைரவர்கள் இத்தலத்தில் அருள் பாலிக்கிறார்கள். எனவேதான் காசியில் பாதி காழி என்பர். சட்டைநாதர் சன்னதிக்கு கீழே தென்திசையில் அமைந்துள்ள வலம்புரி மண்டபத்தில் சண்டபைரவர், சம்ஹாரபைரவர், ருதுபைரவர், குரோதனபைரவர், அசிதாங்கபைரவர், உன்மத்தபைரவர், கபாலபைரவர், வீபிஷ்ணபைரவர் ஆகிய அஷ்ட பைரவர்கள் யோக நிலையில் காட்சியளிக்கிறார்கள்.

இங்கு வெள்ளிக்கிழமை மாலையிலும், தேய்பிறை அட்டமியிலும் சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த அஷ்ட பைரவர் கோவிலில் உள்ள ஊஞ்சல்,முட்குறடுகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்தக் கோவிலில் ஆண்கள் சட்டை அணியாமலும், பெண்கள் மலர்களை அணியாமலும் செல்ல வேண்டும். இங்கு நெய்தீப ஆராதனை மட்டும் நடைபெற்று வருகிறது.

அஷ்ட பைரவர் பூஜையில் தொடர்ந்து எட்டு வாரம் பங்கேற்றால் கண் திருஷ்டி, வியாபாரத்தில் அல்லது தொழிலில் நஷ்டம் போன்றவை நீங்கும் என்பது நம்பிக்கை. பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும்.

பைரவரை செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து, தேன், அவல் பாயசம், தயிர்சாதம், செவ்வாழை ஆகியவற்றை நைவேத்தியம் செய்து வழிபட, மனதில் ஏற்படும் பயம், கடன் தொல்லை நீங்கும், திருமணம், வீடு கட்டுதல், வேலை வாய்ப்பு, வியாபார முன்னேற்றமும் ஏற்படும். எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். பைரவருக்கு உகந்தது வெள்ளை வஸ்திரம். தயிர் அன்னம், தேங்காய் போன்ற வெண்ணிற உணவுகள். எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுபட பைரவர் வழிபாடு சிறந்தது.

Read More
நாகப்பட்டினம் காயாரோகணேசுவரர் கோவில்

நாகப்பட்டினம் காயாரோகணேசுவரர் கோவில்

சனி பகவானின் வீரியத்தை குறைக்கும் மகாலட்சுமி பார்வை

சனி பகவானுக்கு எள்ளு பாயாசம் நைவேத்தியமாக படைக்கப்படும் வித்தியாசமான நடைமுறை

நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள தேவார தலம் காயாரோகணேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் நீலாயதாக்ஷி அம்மன்.

பொதுவாக சிவன் கோவில்களில் சனி பகவான் கிழக்கு அல்லது மேற்கு முகமாகத்தான் எழுந்தருளி இருப்பார். ஆனால் இக்கோவிலில், இறைவன் காயாரோகணேசுவரர் சன்னதியின் ஈசானிய மூலையில், சனி பகவான் தெற்கு நோக்கி எழுந்தருளி இருப்பது ஒரு தனி சிறப்பாகும். இதன் பின்னணியில் ஒரு புராண வரலாறு இருக்கின்றது.

அயோத்தி மகாராஜா தசரத சக்கரவர்த்தி சூரிய குல வம்சத்தை சேர்ந்தவர். பொதுவாக சனி பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் மற்ற சமயங்களை விட அதிவேகமாக சஞ்சரிப்பார். இதற்கு ரோகிணி சகட பேதம் என்று பெயர். அப்படி அவர் ரோகினி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் போது, நாட்டில் பல சேதங்கள் விளையும். இதனை ஜோதிட வல்லுநர்கள் மூலம் அறிந்த தசரத சக்கரவர்த்தி, சனிபகவானை தடுக்க போருக்கு ஆயத்தம் ஆனார். போருக்கு கிளம்பும் முன் குலதெய்வமான சூரிய பகவானை வழிபட சென்றார். சூரிய பகவான், தசரத சக்கரவர்த்தியிடம் சனி பகவான் தன் கடமையை செய்கிறார். கடமையைச் செய்பவரை தடுக்கக் கூடாது. அதனால் நீ நாகப்பட்டினம் காயாரோகணேசுவரர் கோவில் சென்று இதற்கான பரிகார பூஜையை செய் என்றார்.

தசரத சக்கரவர்த்தி, நாகப்பட்டினம் காயாரோகணேசுவரர் கோவிலுக்கு வந்து வழிபட்டார். இறைவன் அவரிடம் தனது சன்னதியின் ஈசானிய மூலையில் சனி பகவானை தெற்கு நோக்கி பிரதிஷ்டை செய்து பரிகார பூஜையை நடத்து என்றார். இத்தலத்தில் நவகிரக மண்டபத்தில், நவக்கிரகங்கள் அனைத்தும் மேற்கு நோக்கி, ( தசரத சக்கரவர்த்தி பிரதிஷ்டை செய்த சனி பகவானை நோக்கி), எழுந்தருளி உள்ளனர். சனி பகவானை நீ வணங்கும் போது, இக்கோவிலில் வாயு மூலையில் உள்ள மகாலட்சுமி பார்வை உன் மேல் பட்டு சனி தோஷம் உன்னை அண்டாத வாறு பாதுகாக்கும் என்றும் கூறினார். மேலும் இறைவனே பரிகார பூஜையை எப்படி செய்ய வேண்டும் என்று தசரத சக்கரவர்த்திக்கு உபதேசித்தார். முதல் சனிக்கிழமையிலிருந்து அடுத்த சனிக்கிழமை வரை உபவாசம் இருந்து, சனி பகவானுக்கு அபிஷேகம் செய்து எள்ளு பாயாசம் நைவேத்தியமாக படைத்து வழிபட்டால், சனியினால் ஏற்படும் பாதிப்புகள் விலகும் என்றார். தசரத சக்கரவர்த்தியும் அவ்வாறு பரிகார பூஜை செய்து சனி பகவானை வழிபட்டார்.

தசரதரின் பூஜையால் மகிழ்ச்சி அடைந்த சனி பகவான், அவரது ராஜ்யத்திற்கு எந்த பாதிப்பும் வராமல் தனது பாதையை மாற்றி செல்வதாக கூறினார். தசரத சக்கரவர்த்தி சனி பகவானிடம், இங்கு வந்து வழிபடுபவர்கள் எல்லாருக்கும் எந்த பாதிப்பும் தரக்கூடாது என்று வேண்டினார். அதற்கு சனி பகவானும், இங்கு வந்து தனக்கு பரிகார பூஜை செய்பவர்களுக்கு ஏழரை சனி, கண்டக சனி, பாத சனி, அஷ்டம சனி, ஜென்ம சனி முதலியவைகளால் ஏற்படும் பாதிப்பு குறையும் என்று உத்தரவாதம் அளித்தார்.

இத்தலத்தில் சனி பகவானை வழிபடும் போது மகாலட்சுமி பார்வை நம் மீது விழுவது ஒரு தனிச்சிறப்பு ஆகும். மேலும் வழக்கமாக எள்ளு சாதம் படைத்து வழிபடும் சனி பகவானுக்கு எள்ளு பாயாசம் நைவேத்தியமாக படைப்பது வேறு எந்த கோவிலிலும் இல்லாத நடைமுறை ஆகும்.

Read More
வெள்ளூர் திருக்காமேஸ்வரர் கோவில்

வெள்ளூர் திருக்காமேஸ்வரர் கோவில்

ஆலயத்துளிகள் வாசகர்களுக்கு,

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

மகாலட்சுமி சிவபெருமானிடம் ஐஸ்வர்ய மகுடம் பெற்ற தலம்

திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில், குணசீலம் கோவிலை அடுத்து, ஆனால் முசிறிக்கு 6 கி.மீ. முன்னால் உள்ள தலம் வெள்ளூர். இத்தலத்து இறைவன் திருநாமம் திருக்காமேஸ்வரர். இறைவியின் திருநாமம் சிவகாமசுந்தரி. திருக்காமேஸ்வரர் பெருமானை வணங்கினால் வெற்றி நிச்சயம் என்பதை உணர்த்தும் வகையிலேயே இந்த ஊருக்கு வெள்ளூர் என்ற பெயர் ஏற்பட்டது.

வேறு எந்த சிவாலயத்திலும் இல்லாத வகையில், இங்கே மகாலட்சுமி கோவில் கொண்டிருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். கோவிலின் குபேர பாகத்தில் மகாலட்சுமி தவம் செய்யும் கோலத்தில், ஐஸ்வர்ய மகாலட்சுமி என்ற திருநாமத்தோடு சிவலிங்கத்துடன் கூடிய ஸ்ரீவத்ஸ முத்திரை பதித்த ஐஸ்வர்ய மகுடத்தை தலையில் சூட்டியவாறு, அமர்ந்த திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்

தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்தனர். அந்த அமிர்தம் தேவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டுமென எண்ணிய மகாவிஷ்ணு, மோகினி அவதாரமெடுத்தார். அசுரர்களை மயக்கி லவண சமுத்திரம் எனும் உப்பு நிறைந்த கடலில் அசுரர்களை மூர்ச்சையாகும்படி செய்துவிட்டு திரும்பும்போது சிவபெருமானின் பார்வையில் மோகினி தென்பட்டாள். மோகினியின் அழகைக்கண்டு சிவபெருமான் மோகிக்க ஹரிஹரபுத்திரர் எனும் ஐயப்பன் அவதரித்தார். இதைக் கேள்விப்பட்ட மகாவிஷ்ணுவின் மனைவியான மகாலட்சுமி கோபம் கொண்டாள். உடனே வைகுண்டத்தை விட்டு வெளியேறி பூலோகம் வந்தாள். இங்கு வில்வாரண்ய க்ஷேத்திரம் எனும் வெள்ளூரில்,மகாலட்சுமி சிவபெருமானை பிரதிஷ்டை செய்து தவம் செய்யலானாள். பல யுகங்களாக தவம் செய்தும் சிவபெருமான் காட்சி தரவில்லை. உடனே மகாலட்சுமி தன்னை வில்வமரமாக மாற்றிக்கொண்டு சிவலிங்கத் திருமேனியில் வில்வமழையாகப் பொழிந்து சிவபூஜை செய்தாள். பூஜையில் மகிழ்ந்த சிவபெருமான் மகா லட்சுமியின் முன் தோன்றி, ஹரிஹரபுத்திர அவதாரத்தின் நோக்கத்தை விளக்கிக்கூறி மகாலட்சுமியை சாந்தப்படுத்தினார். பின் மகாலட்சுமியை ஸ்ரீவத்ஸ முத்திரையுடன் கூடிய சாளக்ராமமாக மாற்றி, மகாவிஷ்ணுவின் இதயத்தில் அமரச் செய்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் நிரந்தரமாக இடம் பெற செய்தார்.

வில்வமரமாகத் தோன்றி, வில்வமழை பொழிந்து சிவபூஜை செய்ததின் பலனாக இத்தலத்தில் மகாலட்சுமிக்கு ஸ்ரீவத்ஸ முத்திரை பதித்த சிவலிங்கத்துடன் கூடிய ஐஸ்வர்ய மகுடத்தை அளித்து மகாலட்சுமியை சகல செல்வத்துக்கும் அதிபதி ஆக்கினார். அதனால் இத்தலத்தில் மகாலட்சுமி, ஐஸ்வர்ய மகாலட்சுமி என்ற திருநாமத்துடன், தல விருட்சமான வில்வ மரத்தடியில் தவக்கோலத்தில் இருந்து அருள்பாலிக்கின்றாள். திருவருட்பாலிக்கிறாள். இத்தலத்திலேயே தங்கி இங்கு வரும் பக்தர்களுக்கு அவரவர் பாவ புண்ணியத்திற்கேற்ப செல்வத்தை அருளும்படி கூறினார். இவள் அபய, வரத திருக்கரங்களோடு, மேலிரு கரங்களில் தாமரை மலருடன் காட்சி தருகிறாள். ஐஸ்வர்ய மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்யும் முன் வில்வமரத்துக்கே முதலில் பூஜை செய்கிறார்கள். மகாலட்சுமிக்கு ஐஸ்வர்ய மகுடத்தை அருளியதால் இத்தல இறைவனுக்கு ஐஸ்வர்யேஸ்வரர், லட்சுமிபுரீஸ்வரர் என்ற பெயர்களும் உண்டு.

இத்தலத்தின் பிற சிறப்புகள்

சுக்கிரன், ஈசனை வழிபட்டு யோகத்திற்கு அதிபதி ஆனதும், குபேரன் தனாதிபதி ஆனதும் இத்தலத்தில்தான் என தலபுராணம் கூறுகிறது. முப்பத்து முக்கோடி தேவர்களும் தினமும் ஆகாய மார்க்கமாக இங்கு வந்து ஈசனை வழிபடுவதாக ஓலைச்சுவடிகளில் காணப்படுகிறது. ராவணன் சிவவழிபாடு செய்து ஈஸ்வரப் பட்டம் பெற்றதும் இத்தலத்தில்தான். ஈசன் காமனை நெற்றிக் கண்ணால் சுட்டெரித்தாலும் அவன் எய்த மன்மத பாணம் அம்பிகை மீதுபட, தேவி சிவகாம சுந்தரியானாள் அவளே இங்கு சிவனுடன் உறையும் நாயகியாய் வீற்றிருக்கிறாள். மகேசன், மன்மதனை மன்னித்து அரூப அழகுடலை அளித்ததால், சிவபிரான் திருக்காமேஸ்வரர் என்றும், மன்மதனுக்கு வைத்தியம் அருளியதால் வைத்தியநாதராகவும் பெயர் பெற்றார்.

சுக்கிர தோஷ பரிகார தலம்

தங்கம், வெள்ளி நகை செய்பவர்கள் தங்கள் தொழில் அபிவிருத்திக்காக இங்கு வருகிறார்கள். சுக்கிர தோஷம் உடையவர்கள்,வெள்ளிக்கிழமைகளில் 16 வகையான அபிஷேகம் செய்து 16 நெய்தீபம் ஏற்றி, 16 செந்தாமரை மலர்கள் சாத்தி, 16 முறை வலம் வந்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும். கடன் தொல்லைகள் அனைத்தும் நிவர்த்தியாகும். சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் பெறலாம் . தாமரை மலர் சாற்றி அட்சய திரிதியை அன்று மஹாலட்சுமியை வழிபட்டால் சகல செல்வங்களும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோவில்

திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோவில்

சிவபெருமான் பார்வதி திருமணம் நடந்த தலம்

மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் திருமணஞ்சேரி. இறைவன் திருநாமம் உத்வாக நாதர். இறைவியின் திருநாமம் கோகிலாம்பாள். இத்தலத்து இறைவி கோகிலாம்பாள், கருவறையில் மணக்கோலத்தில், மணப்பெண்ணுக்குரிய நாணத்துடன் அமர்ந்து உள்ளார். திருமணஞ்சேரி என்றால் திருமணம் நடந்த இடம் என்று அர்த்தம். பூலோகத்தில் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நிகழ்ந்த இடம்தான் இந்த திருமணஞ்சேரி. சிவபெருமானுக்கு பார்வதி தேவியை கன்னிகாதானம் செய்து திருமணத்தை நடத்தி வைத்தவர் மகாவிஷ்ணு. திருமணத்திற்கு புரோகிதராக இருந்தவர் பிரம்மா.

சிவ பார்வதி திருமண நிகழ்ச்சிகள் நடந்த தலங்கள்

ஒரு சமயம் பார்வதி தேவி சிவபெருமானிடம், நாதா! தங்களை பூலோக முறைப்படி திருமணம் செய்ய என் மனம் விரும்புகிறது . அவ்விருப்பத்தை நிறைவேற்றி வைக்குமாறு வேண்ட சிவனும் சிறிது காலம் பொறுத்திருக்கும்படி கூறினார் .

தம் எண்ணம் நிறைவேற வெகுகாலம் ஆகுமென்ற எண்ணத்தில் பார்வதி சிவனிடம் அலட்சியமாக நடந்து கொள்ள, அதை கவனித்த சிவபெருமான்,நான் உன் விருப்பத்திற்கு சம்மதித்த போதும் காலம் கடக்கிறதென அலட்சியமாக நடப்பதால் எம்மைப் பிரிந்து நீ பூலோகத்தில் பசுவாக பிறப்பாய் என கட்டளையிட்டார் .

அம்பிகைக்கு பசு சாபம் கொடுக்கப்பட்ட தலம் தேரழந்தூர். திருமால் பசு மேய்ப்போனாக உருவெடுத்து, பசுக்களை பராமரித்து வந்த தலம் கோமல். ஈசனின் சாபத்தால் அம்பிகை பசுவாகி சிவனின் மீது பக்தி கொண்டு உலவி வந்தார் .அப்படி உலவி வந்தபோது, ஒரு இடத்தில் இருந்த லிங்கத்தின் மீது தினம் பாலைப் பொழிந்து அபிஷேகித்து வந்தார் . பசு உருவில் இருந்த அம்பிகையின் பாதக்குளம்புகள் பட்டு ஈசனின் உடல் மீது தழும்புகள் உண்டான ஊர் 'திருக்குளம்பம்'. பின் திருவாடுதுறையில் சிவனால் பசுவுக்கு முக்தி அளிக்கப்பட்டது.

திருந்துருத்தி எனப்படும் குத்தாலத்தில் பரத மகரிஷி பிரமாண்ட யாகவேள்வி நடத்த அந்த யாக வேள்வியில் சிவபெருமானின் அருளால் அம்பிகை தோன்றினார். தெய்வீகப் பெண் ஒருவர் வேள்வியில் வர ஆச்சர்யப்பட்டு பரத மகரிஷி நிற்க, சிவபெருமான் தோன்றி,மகரிஷியே வேள்வியில் வந்தவர் உமாதேவியே! அவரை உமது பெண்ணாக ஏற்று எமக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்யுங்கள். நான் எதிர் கொண்டு வருவேன் எனக்கூறி மறைந்தார் . இறை உத்திரவுப்படி திருமண யாகங்கள் புரிந்து மங்கள ஸ்நானமும் கங்கணதாரமும் செய்த இடம், திருவேள்விக்குடி.பின் பாலிகை ஸ்தாபனம் குருமுலைப்பாலையில் செய்யப்பட்டது.

அதன் பின்னர் மணமகளான உமாதேவியை அழைத்துக்கொண்டு சிவனை தேடி பரத மகரிஷி வர, இறைவன் மாப்பிள்ளை கோலத்தில் எதிர் கொண்டு காட்சி கொடுத்த இடமே 'திரு எதிர்கொள்பாடி' என அழைக்கபடுகிறது.

பின் மணமகனான சிவனையும் உமாதேவியையும் அழைத்துக்கொண்டு, பூலோக முறைப்படி கல்யாண வைபவம் நடந்த இடம் திருமணஞ்சேரி. திருமணத்தைகாண விண்ணவர்கள், தேவர்கள், நவகிரகங்கள் வந்தனர் . சிவபெருமானும், பார்வதி தேவியும் கைகோர்த்தபடி திருமணக் கோலத்தில் காட்சி தருவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

திருமண தடை நீக்கும் பரிகாரத் தலம்

திருமணஞ்சேரி நித்திய கல்யாண ஷேத்திரம் ஆகும். இங்கு சிவன் ஸ்ரீகல்யாண சுந்தரராக, ஸ்ரீ உத்வாக நாதராக எழுந்தருளி தன்னை நாடி வந்தோர் திருமணத்தை நடத்தி வைக்கிறார். அம்பிகை எப்படி தாம் விரும்பியவாறு சிவனை மணம் புரிந்து கொண்டாரோ, அதுபோல இங்கே வணங்குவோர்க்கு அவரவர் விருப்பம் போல திருமணம் நடைபெறுகிறது. திருமணஞ்சேரி கோவிலை தரிசித்தால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். நல்ல வரன் கிடைத்து, சிறப்பான இல்வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம்.

Read More
பங்குனி உத்திரத் திருவிழா

பங்குனி உத்திரத் திருவிழா

பங்குனி உத்திரத்தின் முக்கிய சிறப்புகள்

தமிழ் பஞ்சாங்கத்தின் 12-வது மாதமான பங்குனியும், 12-வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புனித நாள் பங்குனி உத்திரம். ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நம் கோவில்களில் விழாக்கள் நடத்துவது வழக்கம். அதில் பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு அதிக மகத்துவம் உண்டு. தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என்கின்றன புராணங்கள். இந்த நாளுக்குரிய முக்கிய சிறப்புகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பங்குனி உத்திர விரதத்தை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவார்கள். மகாலட்சுமியின் அவதார நாளும் பங்குனி உத்திர நாள்தான். மகாலட்சுமி பங்குனி உத்திர விரதத்தை அனுசரித்துதான் ஸ்ரீமகா விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்றாள்.

பர்வத ராஜன் தவத்தால் பத்மத்தில் அவதரித்த பார்வதியை சிவபெருமான் கரம் பிடித்த நாளும் பங்குனி உத்திரம்தான்.

சிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாள் இதுதான். அன்னை மீனாட்சியைத் திருமணம் செய்து மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்ததும் இந்நாளில்தான்.

ஸ்ரீரங்க மன்னார்- ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடந்த நாளும் இதுதான். இந்நாளில் வைணவ ஆலயங்களில் மணக்கோலத்தில் தாயாரும் திருமாலும் காட்சி தருவார்கள்.

முருகப் பெருமான், சிவபெருமானுக்கு பிரணவப் பொருளை உபதேசித்த நாள் பங்குனி உத்திரம். அன்று அடியார்கள் காவடி எடுத்து முருகனை வழிபடுகிறார்கள். முருகன் தெய்வானையை இந்த நாளில் தான் திருமணம் புரிந்து கொண்டார். அத்துடன் வள்ளியின் அவதார தினமும் இதுதான்.

தசரத மைந்தர்கள் ஸ்ரீராமன்- சீதை, லட்சுமணன்- ஊர்மிளா, பரதன்-மாண்டவி, சத்ருக்னன்- ஸ்ருதகீர்த்தி திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் ஒரே மேடையில் மிதிலையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

சந்திரன் 27 நட்சத்திரங்களை மனைவிகளாக ஏற்றுக் கொண்ட தினமும் இதுதான்.

தனது தவத்தைக் கலைத்ததால் மன்மதனை எரித்து சாம்பலாக்கினார் சிவபெருமான். இதனால் வருந்திய ரதிதேவி, மன்மதனை உயிர்ப்பித்துத் தருமாறு சிவபெருமானிடம் வேண்டினாள். அதனால் மனம் இரங்கிய ஈசன், அவள் கண்களுக்கு மட்டும் தெரியும்படி மன்மதனை உயிர்ப் பித்தார். இது நிகழ்ந்ததும் பங்குனி உத்திரத் திருநாளில்தான்.

பங்குனி உத்திர விரதம் மேற் கொண்டு அருகே உள்ள கோவில்களுக்கு சென்று வழிபட்டால் சகல பாவங்களும் தொலையும். 48 ஆண்டுகள் பங்குனி உத்திர விரதம் இருந்தவர்களின் மறு பிறவி தெய்வத் பிறவியாக அமையும். இந்த விரதத்தை கடை பிடித்துதான் தேவர்களின் தலைவனான இந்திரன் தனது மனைவியான இந்திராணியையும், படைத்தல் கடவுளான பிரம்மன் தனது மனைவியான சரஸ்வதியையும் பெற்றார்.

பங்குனி உத்திரத்தன்று கன்னிப் பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து அருகே உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கு திருமணம் கைகூடும். காஞ்சியில் காமாட்சி - ஏகாம்பரேஸ்வரர் திருமண விழா நடைபெறும் போது, அதே மண்டபத்தில் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்வார்கள். பங்குனி மாதம் திருமழப்பாடியில் நடைபெறும் நந்தி கல்யாணத்தை தரிசித்தால் மணமாகா தவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என் பது ஐதீகம்.

பங்குனி உத்திரத்தன்று சில கோவில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும். அப்போது அந்த தலங்களில் உள்ள கடல், ஏரி, ஆறு, குளம், கிணறு போன்றவற்றில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும். அன்று தண்ணீர்ப்பந்தல் வைத்து நீர்மோர் தானம் தருவது மிகவும் புண்ணியம்.

Read More
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்

பங்குனி உத்திரத் திருவிழா

அறுபத்து மூவர் திருவிழா

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி உத்திரத் திருவிழாவின் மிகச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி அறுபத்து மூவர் திருவிழாவாகும்.

சேக்கிழாரின் பெரிய புராணம் 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது. இவர்கள். சிவபெருமானினமீது தீராத பக்தியும், சிவனுக்கும், சிவனடியார்களுக்கும் தொண்டு புரிவதே தங்கள் உயிர் மூச்சாக வாழ்ந்தவர்கள். இவர்களின் பெருமைகளை உலகம் உணர, சிவபெருமான் பல திருவிளையாடல்களை இவர்கள் வாழ்க்கையில் நிகழ்த்தினார். பல சோதனைகள் வந்தாலும் இவர்கள் சிவபக்தியில் இருந்தும், சிவத்தொண்டிலிருந்தும் வழுவாது இருந்து பேரும், புகழும், சிவன் அருளும் பெற்றார்கள்.

சிவபெருமானை வழிபடுவதால் கிடைக்கும் பலன், சிவப்பணி ஆற்றிய சிவனடியார்களை வழிபட்டாலும் கிடைக்கும்' என்று திருத்தொண்டர் தொகை இயற்றிய சுந்தரமூர்த்து சுவாமிகளும், பெரியபுராணம் இயற்றிய சேக்கிழாரும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அத்தகைய அடியார்களைக் கொண்டாடி வணங்கும் திருவிழாவாகவே மயிலாப்பூர் கபாலீஸ்வர் கோவிலில் நடைபெறும் 'அறுபத்துமூவர் விழா' விளங்குகிறது.

மயிலாப்பூர் அறுபத்து மூவர் திருவிழாவின் தனிச் சிறப்பு

மயிலாப்பூர் அறுபத்துமூவர் விழா நடைபெறும் நாளில், சிவனடியாரின் மகத்துவம் உணர்த்தும் மற்றுமொரு வைபவமும் நடைபெறுகிறது. அதுதான் திருஞானசம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பித்தெழச் செய்த நிகழ்ச்சியாகும்.

சிவநேசர் என்னும் சிவபக்தர், தனது மகள் பூம்பாவையை திருஞானசம்பந்தருக்குத் திருமணம் செய்துவைக்க விரும்பினார். ஆனால். விதிவசமாக பூம்பாவை பாம்பு தீண்டி இறந்துவிட்டாள். அவளுடைய அஸ்தியை ஒரு குடத்தில் வைத்து, திருஞானசம்பந்தரின் வரவுக்காகக் காத்துக்கொண்டிருந்தார் சிவநேசர். திருஞானசம்பந்தர் மயிலைக்கு வந்திருப்பதைக் கேள்விப்பட்ட சிவநேசர், அஸ்தி குடத்தை எடுத்துக்கொண்டு வந்து திருஞானசம்பந்தரைப் பணிந்து வணங்கி, நடந்த சம்பவத்தைக் கூறினார்.

திருஞானசம்பந்தர் சிவபெருமானை வணங்கி,

மட்டிட்ட புன்னையங்கானல் மடமயிலைக்

கட்டிட்டங்கொண்டான் கபாலீச்சரமமர்ந்தான்

ஒட்டிட்டபண்பினுருத்திர பல்கணத்தார்க்கு

அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்...’

என்ற பதிக்கத்தைப் பாடி இறந்துபோன பூம்பாவையை உயிர்த்தெழச் செய்கிறார்.

தன்னுடைய பக்தராக இருந்தாலும், சிவநேசரின் மகளைத் தாமே உயிர்ப்பிக்காமல், தம்மையே பாடிப் போற்றும் திருஞானசம்பந்தரின் அருளால் உயிர்த்தெழச் செய்து, சிவபெருமானும் தம் அடியார்களின் பெருமையை திருஞானசம்பந்தர் மூலம் இந்தத் தலத்தில் உலகத்தவர்க்கு உணர்த்தியருளினார் என்பதால்தான் மயிலையில் நடைபெறும் அறுபத்து மூவர் விழா தனிச் சிறப்பு கொண்டதாகப் போற்றப்படுகிறது.

அறுபத்தி மூவர் திருவிழா

பங்குனி பிரம்மோற்சவத்தின் 8ஆம் நாள், அறுபத்தி மூவர் திருவிழா நடைபெறுகிறது. வெள்ளி விமானத்தில் கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், பிள்ளையார், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் இவர்களோடும் அறுபத்து மூன்று நாயன்மார்களோடும் காட்சியளித்து வீதி உலா வருவார். மயிலாப்பூர் காவல் தெய்வமான கோலவிழி அம்மன், முண்டகக்கன்னியம்மன், அங்காளபரமேஸ்வரி, வீரபத்திரர் ஆகியோரும் தனித்தனி பல்லக்குகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பல ஊர்களிலிருந்து இவ்விழாவிற்கு வருகை தருவார்கள்.

இவ்வீதிஉலாவின் போது பெண்கள் பலர் மாடவீதிகளில் பொங்கல் வைத்து இறைவனுக்கு படைப்பார்கள். நாள்பட்ட வியாதிகளும், தீராத நோய்களும் இதனால் குணமாகும் என்பது பக்தர்களின் ஐதீகம்.

Read More