ஆக்கூர் தான்தோன்றீசுவரர் கோவில்

ஆயிரம் அந்தணர்களில் ஒருவராக அன்னதானத்தில் கலந்து கொண்ட சிவபெருமான்

கையில் தண்டு ஊன்றிய நிலையில் காட்சியளிக்கும் சிவபெருமானின் அபூர்வ தோற்றம்

மயிலாடுதுறை – தரங்கம்பாடி சாலையில், மயிலாடுதுறையில் இருந்து கிழக்கே 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் ஆக்கூர் தான்தோன்றீசுவரர் கோவில். மாடம் என்னும் பெயர் கொண்ட தேவார திருத்தலங்கள் இரண்டு. ஒன்று நடுநாட்டுத் தலமான பெண்ணாகடத்தில் உள்ள தூங்கானை மாடம். மற்றொன்று காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றான ஆக்கூர் தான்தோன்றி மாடமாகும். யானை ஏறமுடியாத படிக்கட்டுகளை உடைய உயரமான தளத்தில் இறைவன் கருவறை அமையப்பெற்ற கோவில்கள் மாடக்கோயில் என்று பெயர் பெற்றன.

இக்கோவில் இறைவியின் திருநாமம் வாள்நெடுங்கன்னி. உற்சவர் திருநாமம் ஆயிரத்துள் ஒருவர். இவர் கையில் தண்டு ஊன்றிய நிலையில் நின்ற வண்ணமாக காட்சியளிக்கிறார். சிவபெருமானின் இத்தகைய உற்சவமூர்த்தி கோலத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. இதன் பின்னணியில் ஒரு சுவையான வரலாற்று நிகழ்ச்சி உள்ளது.

கோச்செங்கட்சோழன் யானை ஏற முடியாத 70 மாட கோவில்களை கட்டியவன். ஒரு முறை கோச்செங்கண்ணனுக்கு வயிற்றில் குன்ம நோய் ஏற்படுகிறது. இதனால் மன்னன் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறான். இந்த நோயை தீர்க்க வேண்டுமானால், மூன்று தல விருட்சங்கள் எங்கு இருக்கிறதோ அங்கு கோவில் கட்டினால் நோய் தீரும் என்று அசரீரி கூறுகிறது. மன்னனும் பல கோவில்கள் கட்டி வரும் போது, ஆக்கூர் என்ற இத்தலத்திற்கு வருகிறான். அப்போது அசரீரி வாக்கின் படி கொன்றை, பாக்கு, வில்வம் என்று மூன்று தலவிருட்சங்களை ஒரே இடத்தில் பார்க்கிறான்.

உடனே இந்த இடத்தில் ஒரு சிவாலயம் கட்டுகிறான். அப்படி கோவில் கட்டும்போது ஒருநாள் கட்டிய சுவர் மறுநாள் கீழே விழுந்து விடும். இது எதனால் கீழே விழுகிறது என சிவனிடம் மன்றாடி கேட்கிறான். அதற்கு இறைவன் ஆயிரம் அந்தணர்களுக்கு அன்னதானம் செய்தால் குறைபாடு நீங்கி, கோவிலை சிறப்பாக கட்டலாம் என்று கூறுகிறார். அதன்படி 48 நாள் அன்னதானம் நடக்கிறது. இதில் ஒவ்வொருநாளும் ஆயிரம் இலை போட்டால் 999 பேர் தான் சாப்பிடுவார்கள். ஒரு இலை மீதம் இருந்து கொண்டே இருக்கும். மன்னன் மிகுந்த வருத்தத்துடன் இறைவனிடம் சென்று, ஏன் இந்த சோதனை, 48 நாட்களும் ஆயிரம் பேர் அன்னதானம் சாப்பிட்டால் தானே கோவில் கட்டுவது சிறப்பாக அமையும். ஆனால் தினமும் ஒரு ஆள் குறைகிறார்களே. இதற்கு தாங்கள் தான் ஒரு வழி சொல்ல வேண்டும் என்று கெஞ்சுகிறான்.

மன்னனின் குரலுக்கு செவி சாய்த்து விட்டார் இறைவன். 48வது நாள் ஆயிரம் இலை போடப்பட்டது. ஆயிரம் இலையிலும் ஆட்கள் அமர்ந்து விட்டார்கள். ஆயிரமாவது இலையில் 'ஆயிரத்தில் ஒருவராக' அமர்ந்திருந்த வயதான அந்தணரிடம் சென்ற மன்னன், 'ஐயா, தங்களுக்கு எந்த ஊர்' என்று கேட்டான். அதற்கு வயதான அந்தணர் 'யாருக்கு ஊர்' என்று மறுகேள்வி கேட்கிறார். (இதனாலேயே இந்த ஊருக்கு யாருக்கு ஊர் என்பது மருவி ஆக்கூர் ஆனது). மன்னனை எதிர் கேள்வி கேட்ட அந்த வயதானவரை அடிப்பதற்காக சிப்பாய்கள் விரட்டுகின்றனர்.

ஓடி சென்ற வயதானவர் நெடுங்காலமாக அங்கிருந்த புற்றுக்குள் விழுந்து விட்டார். புற்றை கடப்பாறையால் விலக்கி பார்த்த போது உள்ளேயிருந்து சுயம்பு மூர்த்தியாக 'தான்தோன்றீசுவரர்' தோன்றுகிறார். கடப்பாறையால் புற்றை குத்தியபோது கடப்பாறை லிங்கத்தின் மீது பட்டு விடுகிறது. கடப்பாறை பட்டதில் அடையாளமாக இன்றும் கூட லிங்கத்தின் தலைப்பகுதியில் பிளவு இருப்பதைக் காணலாம்.

இந்தக் கோவிலின் கும்பாபிஷேக திருப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

தகவல், படங்கள் உதவி : திரு. பாஸ்கர் பிள்ளை, ஆக்கூர்

பிளவுபட்ட லிங்கத் திருமேனி

கையில் தண்டு ஊன்றிய நிலையில் உற்சவர் ஆயிரத்துள் ஒருவர்

உற்சவர் ஆயிரத்துள் ஒருவர்

 
Previous
Previous

அருப்புக்கோட்டை ஆயிரம் கண் மாரியம்மன் கோவில்

Next
Next

சீர்காழி சட்டைநாதசுவாமி கோவில்