நாவலூர் ஏகாம்பரேசுவரர் கோவில்

நாவலூர் ஏகாம்பரேசுவரர் கோவில்

மூலவரின் எதிரில் அமர்ந்திருக்கும் அபூர்வ இரட்டை நந்திகள்

படப்பையில் இருந்து ஒரகடம் போகும் வழியில் அமைந்துள்ள சரபணஞ்சேரி என்ற கிராமத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நாவலூர் ஏகாம்பரேசுவரர் கோவில். 900 ஆண்டுகள் பழமையானது. இறைவியின் திருநாமம் காமாட்சி அம்மன்.

பொதுவாக சிவாலயங்களில் மூலவரின் முன் ஒரு நந்தி அமர்ந்திருக்கும். ஆனால் இத்தலத்து மூலவரின் எதிரில் இரண்டு நந்திகள் ஒன்றின் அருகில் ஒன்றாக அமர்ந்திருக்கின்றன. இப்படி அருகருகே அமர்ந்திருக்கும் இரட்டை நந்திகளை, வேறு எந்த சிவாலயத்திலும் நாம் தரிசிக்க முடியாது. இவற்றில் ஒரு நந்தி இத்தலத்து மூலவரையும், இத்தலத்துக்கு நேர் கோட்டில் இருக்கும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் மூலவரையும் தரிசிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. மற்றொரு நந்தி, திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசிக்கும் வண்ணம் தன் தலையை திருப்பி அமர்ந்துள்ளது. இவ்விரு நந்திகளை தரிசித்தால், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் தலங்களை தரிசித்த பலன்கள் கிட்டும்.

Read More
குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி கோவில்

குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி கோவில்

காசி காலபைரவருக்கு இணையான குண்டடம் கொங்கு வடுகநாதர்

கோவை - மதுரை நெடுஞ்சாலையில், பல்லடத்துக்கும் தாராபுரத்துக்கும் நடுவில், பல்லடத்திலிருந்து 28 கி.மீ தூரத்திலும் தாராபுரத்திலிருந்து 16 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி கோவில். இறைவன் திருநாமம் விடங்கீசுவரர். இறைவியின் திருநாமம் விசாலாட்சி. இந்தக் கோவிலில் உள்ள காலபைரவ வடுகநாத சுவாமி மிகவும் சக்தி வாய்ந்தவர் என்றும்,காசி சென்று கால பைரவ சுவாமியை வணங்க முடியாதவர்கள் இவரை வணங்கினால் போதும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். 'காசு இருந்தால் காசிக்கு செல்லுங்கள்! காசு இல்லாவிட்டால் குண்டடத்தக்கு வாருங்கள்! ' என்று திருமுருக கிருபானந்த வாரியார் கூறி இருக்கிறார். அதாவது காசிக்குச் சென்று கால பைரவரை தரிசிக்க ஆயிரக்கணக்கில் செலவாகும். ஆனால் காசியில் இருக்கும் அதே கால பைரவரைதான், சிவபெருமானின் ஆணையால் தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் இருக்கும் குண்டடத்துக்கும் வந்து, அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். அதனால் ரொம்ப செலவில்லாமல் காசி கால பைரவரை இந்தக் குண்டடத்திலேயே கொங்கு வடுகநாதராக வழிபடலாம் வாருங்கள் என்று அழைத்தார் வாரியார்.

முன்னொரு காலத்தில், விடங்கர் என்ற முனிவர் இந்த காட்டில் தவம் இருக்கும்போது அரக்கர்களால் தவத்திற்கு இடையூறு ஏற்படாமல் இருக்க உதவ வேண்டும் என்று காசி விசுவநாதரை மனமுருக வேண்டினார். காசி விசுவநாதர் விடங்கரின் பிரார்த்தனைக்கு இணங்கி வடுக பைரவரை அனுப்பினார். பைவர் இடையூறு செய்த அரக்கர்களை அழித்தார், பின் இலந்தை மரத்தின் அடியில் இருந்த புற்றில் நிரந்தரமாய்க் குடிகொண்டார். அருகே ஒர் அரசமரத்தடியில் பாம்பாட்டீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். சேர நாட்டிலிருந்து மிளகு விற்க வரும் வியாபாரிகள் இந்த அரசமரத்தடியில் இளைப்பாறுவது வழக்கம். ஒரு நாள் காலபைரவர் வயதான அந்தணர் தோற்றத்தில், மிளகு வியாபாரியிடம் சென்று தனக்கு உடல்நிலை சரியில்லை, கஷாயம் வைக்க மிளகு கொஞ்சம் கேட்கிறார், ஆனால் கொடுக்க நினைக்காத வியாபாரி மாட்டு வண்டியில் உள்ள மூட்டையில் மிளகு இல்லை பயறு என்று பொய் சொல்லிவிடுகிறார்.

மதுரை சென்று சேர்ந்த வியாபாரிகள் பாண்டிய மன்னரிடம் விலை பேசி மிளகு மூட்டைகளை விற்று விட்டார்கள். மிளகு மூட்டையை பரிசோதித்துப் பார்க்க, அவை பச்சைப் பயறாக இருப்பதைப் பார்த்து ஏமாற்றி விட்டதாய் கோபப்படுகிறார் மன்னர். வியாபாரிகள் ஒரு பெரியவர் மிளகு கேட்டதாகவும் தாங்கள் மிளகு கொடுக்க மறுத்து மூட்டையில் உள்ளது பச்சைப் பயிறு என்று சொன்னதாகச் சொல்கிறார்கள். நம்ப மறுக்கிறார் மன்னர். அப்போது பைரவர் திருவிளையாடல் புரிகிறார், எந்த வியாபாரியிடம் மிளகு கேட்டாரோ அந்த விபாபாரி மேல் அருள் வந்து நான்தான் மிளகு மூட்டைகளைப் பயிறு மூட்டைகளாக மாற்றினேன் என்று சொல்கிறார் பைரவர். அப்போதும் மன்னருக்கு நம்பிக்கை வரவில்லை.என் மகன், மகள் இருவரும் உடல்நிலை சரியில்லாதவர்கள் அவர்களைச் சரி செய்தால் நம்புவதாகச் சொல்கிறார்.

பைரவர் மன்னரிடம் புற்றில் இருக்கும் என்னைக் கோவில் கட்டிக் குடியமர்த்து .அபிஷேகம் செய்து மிளகு சாற்றி வழிபடு. உன் குழந்தைகளைக் குணப்படுத்துகிறேன் என்கிறார். பாண்டிய மன்னரும் அவ்வாறு செய்ய, குழந்தைகள் எட்டு நாட்களில் நலம் பெற்றார்கள்.. பேசமுடியாது இருந்த பெண் குழந்தை பேசியது, நடக்க முடியாது இருந்த ஆண் குழந்தை பைரவர் அருளால் நடந்தது. காசியிலிருந்து கொங்கு நாட்டுக்கு வந்ததால், பைரவருக்கு கொங்கு வடுகநாதர் என்ற பெயர் எழுநதது. கொங்கு நாட்டுக் காசியாக, குண்டடம் விளங்குகின்றது.

பிரார்த்தனை

தேய்பிறை அஷ்டமியில் இவரை தரிசித்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். இவரை வணங்கினால் நவக்கிரக தோஷம் நீங்கிவிடும். பதினோரு மிளகு வைத்து நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி எட்டு தீபங்களை ஏற்றி வைத்தால் நாம் வேண்டும் பிரார்த்தனை நிறைவேறும்.

ஆஞ்சநேயருக்கு சாற்றுவது போல் இவருக்கு வடை மாலை சாற்றப்படுகிறது. வெண்பொங்கல் நைவேத்தியமும் இவருக்கு விசேஷம். தேங்காய் மூடியிலும், வெட்டப்பட்ட பூசணித் துண்டிலும் எண்ணெய் ஊற்றி சிலர் பரிகாரத்துக்காக விளக்கேற்றுகிறார்கள்.

Read More
நடுசத்திரம் காசிவிசுவநாதர் கோவில்

நடுசத்திரம் காசிவிசுவநாதர் கோவில்

இந்தியாவின் இரண்டாவது காசி என்று போற்றப்படும் தலம்

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் இருந்து சங்கரன்கோவிலுக்கு ஏழாயிரம்பண்ணை வழியாகச் செல்லும் சாலையில், சுமார் 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிற்றூர் நடுசத்திரம். இறைவன் திருநாமம் காசிவிசுவநாதர். இறைவியின் திருநாமம் அன்னபூரணி. இக்கோவில் சுமார் 1,200 ஆண்டுகள் பழமையானது. இந்தத் தலத்தின் சந்நிதியில் மட்டுமே காசிக்கு அடுத்தபடியாக அன்னபூரணி அம்பிகை தெற்கு நோக்கி காட்சி தருகிறார். காசிக்குச் செல்லும் மக்களுக்கு ஏதுவாக இந்த ஆலயத்தை, காசியில் உள்ளது போன்றே வடிவமைத்திருக்கின்றனர். அதனால், இத்தலம் இந்தியாவின் இரண்டாவது காசி என்று போற்றப்படுகின்றது.

இத்தலத்து மூலவர் காசி விசுவநாதருக்கு எதிரே உள்ள நந்தீஸ்வரரின் ஒரு கண் சிவனைப் பார்த்தவாறும், மற்றொரு கண் அன்னபூரணியைப் பார்த்தவாறும் தலை சாய்த்து அமைந்திருக்கிறது. மேலும், சண்டிகேஸ்வரர் தெற்கு பார்த்து, காளை வாகனத்தில் அமர்ந்திருப்பது, வேறு சிவாலயங்களில் காண்பதற்கரிய சிறப்பம்சம் ஆகும்.

தலையை சாய்த்து அருள் பாலிக்கும் குபேர சனீஸ்வரர்

இத்தலத்தில் சனீஸ்வர பகவான் குபேர சனீஸ்வரர் என்ற திருநாமத்துடன் தனித்து அருள்பாலிக்கிறார். நந்திதேவரைப் போன்று இவரும், தன் தலையைச் சற்றே சாய்த்தவாறு அருட்கோலம் கொண்டிருக்கிறார். இத்தலத்தில் அன்னபூரணி அம்பிகை, காலபைரவர், சண்டிகேஸ்வரர், நடராஜர் மற்றும் குபேர சனீஸ்வர பகவான் அனைவரும் தென் திசை நோக்கி அமைந்திருப்பது மற்றொரு தனிச் சிறப்பாகும்.

பிரார்த்தனை

தொழில் விருத்தி, திருமண வரம், குழந்தை பாக்கியம் வேண்டி மக்கள் இங்கே பிரார்த்தனை செய்கிறார்கள்.

Read More
திருக்கண்டியூர் பிரம்மசிரகண்டீசுவரர் கோவில்

திருக்கண்டியூர் பிரம்மசிரகண்டீசுவரர் கோவில்

அமர்ந்த கோலத்தில் இருக்கும் அபூர்வ அர்த்தநாரீசுவரர்

திருவையாற்றில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலை வழியில் சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் திருக்கண்டியூர். திருவையாறு மற்றும் அதைச் சுற்றியுள்ள சப்த ஸ்தான கோவில்களில் இத்தலமும் ஒன்று. சிவபெருமானின் அட்டவீரட்டானத் தலங்களில் முதலாவது தலம் இது. இறைவன் திருநாமம் பிரம்மசிரகண்டீசுவரர். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை.

இக்கோவிலில் எழுந்தருளியுள்ள அர்த்தநாரீசுவரரின் திருமேனி அற்புதமான கலையம்சம் கொண்டது. அர்த்தநாரீசுவரர் என்ற பெயரின் அர்த்தம் 'அரை பெண்ணாக இருக்கும் இறைவன்' என்பதாகும். அர்த்தம் என்பது பாதி; நாரி என்பது பெண். சிவனின் ஆண் உருவம் பாதியும், பார்வதியின் பெண்ணுருவம் பாதியும் கொண்டு அமைந்த கோலம் தான் அர்த்தநாரீசுவரர். சிவனின்றி சக்தி இல்லை, சக்தி இன்றி சிவனில்லை என்பதனை விளக்குகின்ற உருவமாகும்.

இக்கோவிலில் உள்ள அர்த்தநாரீசுவரர், மற்ற சிவாலயங்களில் உள்ளதுபோன்று நின்ற கோலத்தில் அல்லாமல் ரிஷபத்தின் மீது ஒரு கையை ஊன்றி அமர்ந்த கோலத்தில் காட்சியளிப்பது விசேஷமானது. ஆண் பாதியில் காலைத் தொங்கவிட்டுக் கொண்டு ஒரு கரத்தில் மழு எந்தியிருக்க, பெண் பாதியில் சேலை அணிந்த காலைக் குத்திட்டு உட்கார்ந்து அதன் மீது மலர் ஏந்தும் கரத்தை ஊன்றித் தலையைச் சுற்றி சாய்ந்து காட்சிக் கொடுக்கும் தோற்றமானது, அற்புதமான ஒன்றாகும். அர்த்தநாரீசுவரரின் இந்தத் தோற்றத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

Read More
விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீசுவரர் கோவில்

விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீசுவரர் கோவில்

அதிசயமான நேரம் காட்டும் கல்

வேலூர் நகரத்திலிருந்து 12 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீசுவரர் கோவில். இறைவன் திருநாமம் மார்க்கபந்தீசுவரர் ஆவார். இறைவியின் திருநாமம் மரகதாம்பிகை.இக்கோவில் 1300 வருடங்கள் பழமையானதாகும்.

இக்கோவிலில் உள்ள அதிசயம், மணி காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கல். கோவிலின் உள்ளே தென்புறத்தில் 'நேரம் காட்டும் கல்' உள்ளது. இதை மணிகாட்டிக் கல் என அழைப்பதும் உண்டு. அர்த்த சந்திரவடிவில் உள்ள காலம் காட்டும் கல்லின் ஒருபுறம், இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பகுதியில் ஒன்று முதல் ஆறு வரை எண்கள் எழுதப்பட்டிருக்கின்றன. மற்றொரு புறமும் ஆறு முதல் 12 என்ற வரிசையில் எண்கள் எழுதப்பட்டுள்ளன. ஒரு பாகம் முற்பகலையும், மற்றொரு பாகம் பிற்பகலையும் காட்டும். மணிகாட்டும் கல்லின் மேற்பகுதியில் சிறிய பள்ளமான பகுதி ஒன்று இருக்கும். அதன் மேல் சிறு குச்சியை வைத்தால், சூரிய ஒளியின் திசைக்கு ஏற்றவாறு, குச்சியின் நிழல் மணிக்காக குறிக்கப்பட்டுள்ள கோட்டின் மீது விழும். அதைப் பார்த்து மணியைத் தெரிந்துகொள்ளலாம்.

ஆதிகாலத்தில் மேலை நாட்டினர், 'கிளாசிக்கல் க்ளாக்' எனும் மணல் கடிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். அறிவியல் அதிகமாக வளராத ஆதிக்காலத்திலையே, சூரியனை எப்படிப் பயன்படுத்தலாம் என்று யோசித்தவர்கள், தமிழர்கள். மேலை நாட்டினர் மண்ணைப் பார்த்து சிந்தித்தபோது, விண்ணைப் பார்த்து சிந்தித்தவன் தமிழன். தமிழர்கள் சூரியனைப் பயன்படுத்தி கடிகாரம் கண்டுபிடித்து, பயன்படுத்திக்கொண்டிருந்தனர். அதற்கு முன்னர், சூரியனையும், கோயில் கோபுரத்தையும் வைத்து நேரம் அறிந்துகொண்டிருந்தனர், தமிழர்கள். அதன் பின்னர் சிறிய கருங்கல்லை வைத்து தன்னுடைய தொழில்நுட்பத்தை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தினார்கள். சிறியதாக ஒரு கருங்கல்லை வைத்து பன்னிரண்டு மணிநேரத்தை பார்க்கும்படி வடிவமைத்துள்ளார்கள்.வானியல் மாற்றங்களைத் தெரிந்துகொள்ள தொழில்நுட்பங்கள் இல்லை. பருவநிலையையும் மற்றும் பருவகால மாற்றங்களையும் அறிந்துகொள்ள மணிகாட்டும் கல்லைத் தவிர இன்னும் பல கற்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள், நம் முன்னோர்கள்.

Read More
ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம்

ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம்

ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகத்தின் சிறப்புகள்

சிவபெருமான், சதா அபிஷேகப் பிரியர். அதனால் அவருக்குப் பதினொரு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்வது வழக்கம். அவை தூய நீர், பசும்பால், இளநீர், கருப்பஞ்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள், அன்னம் ஆகியன. இவற்றுள் மிகச் சிறப்பானது அன்னாபிஷேகம்.

ஐப்பசி மாதப்பௌர்ணமி தினத்துக்கு மட்டும் தனிச்சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் தோன்றுகிறான். ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தின்போது சந்திரன் பூமிக்கு நெருக்கமாக வந்து அதிகப் பொலிவுடன் தோன்றுவான். நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி என்பதால், அன்று சிறப்பு வழிபாடாக ஈசனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்து, உணவை சாப்பிட்டால் அன்னதோஷசம், அன்ன துவேஷம் நீங்கும். ஐப்பசி பௌர்ணமி நாளில் சிவனை தரிசித்தால், சொர்க்கத்திற்கு போகும் வரை சோறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அன்னம் பர பிரம்மம் என்று கூறி, உணவை இறைவனாகப் பாவிப்பது நம் இந்து தர்மம். உடலை வளர்ப்பது மட்டுமல்லாமல் உள்ளத்தையும் வளர்ப்பது அன்னம்தான். கல்லினுள் வாழும் தேரை முதல் கர்ப்பப்பையில் வளரும் உயிர் வரை, அனைத்து உயிர்களுக்கும் உணவு அளிப்பவன் ஈசன். அதனால் அன்னத்தைப் பற்றி ‘அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ’ என்று சாமவேதத்தில் குறிப்பிடப்படுகிறது. எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருக்கிறான் என்பதே இதன் பொருள். அன்னம்தான் உலகில் வாழும் உயிர்களுக்கு அடிப்படை. சோறுதான் சொக்கநாதர், 'சோறுகண்ட இடம் சொர்க்கம்' என்று இன்றும் மக்கள் சொல்வதுண்டு. உயிர்களைப் படைத்ததோடு மட்டுமல்லாமல், அவை உண்பதற்கான உணவையும் படைத்தருளிய இறைவனுக்கு நன்றி கூறும் விதமாக ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் செய்கிறோம்.

ஐப்பசி மாதம் பெளர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து அதில் உள்ள ஒவ்வொரு சாதத்திலும், அரிசியிலும் ஒரு சிவத்தின் ரூபத்தை காணலாம். ஒரு சிவத்தை வழிபட்ட பலன் அந்த நாளில் கிடைக்கும் என சிவ பெருமானே நமக்கு வரமளித்துள்ளார். அந்த வரத்தின் படி அன்னாபிஷேகத்தை கண்டால் அதில் உள்ள கோடான கோடி சோறும், கோடான கோடி சிவ லிங்கங்களை சென்று தரிசனம் செய்த பலனை நமக்கு தரும்.

ஐப்பசி மாத பௌர்ணமியன்று, வடித்து சற்றே ஆற வைக்கப்பட்ட அன்னத்தைக் கொண்டு சிவலிங்கத் திருமேனி முழுவதையும் மறைத்து, அதன் மேலாக காய்,கனி வகைகளைக் கொண்டு அலங்கரிப்பார்கள். இந்த வேளையில் யஜூர் வேதம், ருத்ரம், சமகம் போன்ற மந்திரங்களின் பாராயணம் நடைபெறும். லிங்கத்தின் ஆவுடையிலும், பாணத்தின் மீதும் சாத்தப்பட்ட அன்னத்தை எடுத்துச் சென்று கோயில் குளத்திலோ இல்லை ஆற்றிலோ கரைப்பார்கள். நல்ல அதிர்வுகளும் உடலுக்குத் தேவையான கதிர் வீச்சுகளும் நிறைந்திருக்கும் சிவலிங்கத்தின் மேல்பாகத்தில் சாத்தப்பட்ட அன்னம், மனிதர்களுக்குப் பிரசாதமாக அளிக்கப்படுகிறது. இந்தப் பிரசாதத்தை உண்டால் நோய் நொடிகள் வராது, குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.

கலியுகத்தில் முக்தி பெறும் வழிகளில் முதன்மையானது பக்தியும், அன்னமிடுதலும் ஆகும். அன்னம் ஒடுங்கினால், சகலமும் ஒடுங்கி விடும். பசியால் வாடுபவர்களுக்கு உணவு தராமல் விரட்டினால், அன்னதோஷம் ஏற்படும். அன்னதோஷம் பீடித்தால், வீட்டில் எவ்வளவு உழைத்தாலும் செல்வம் தங்காது. தரித்திரம் ஆட்டிப்படைக்கும். அன்னதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அன்ன துவேஷம் எனும் உணவைக் கண்டாலே வெறுப்பு உண்டாகும் நோய் ஏற்படும். அன்னதோஷத்தாலும், அன்ன துவேஷத்தாலும் பீடிக்கப்பட்டவர்களும். ஈசனுக்கு பக்தியுடன் அன்னாபிஷகம் செய்வதன் மூலம் முக்தியைப் பெற முடியும். ஈசனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படும் உணவை அப்படியே உண்ணக்கூடாது. தயிரோ அல்லது வெண்ணெயோ கலந்துதான் சாப்பிட வேண்டும்.

Read More
தஞ்சைப் பெரிய கோவில்

தஞ்சைப் பெரிய கோவில்

மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா

தஞ்சைப் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன். உலக வரலாற்றில் அலெக்ஸ்சாண்டருக்கு இணையாகப் போற்றப்பட வேண்டியவர். மாபெரும் யானைப்படை, கப்பல் படையைக் கொண்டு தெற்காசியா முழுமையும் தனது பராக்கிரமத்தால் கட்டியாண்ட மாமன்னன் ராஜராஜன், 947-ம் ஆண்டு ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர். 985-ம் ஆண்டு சதய நட்சத்திரத்தில் ஆட்சிப் பொறுப்பேற்று 1014-ம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். சைவர்கள் போற்றும் திருமுறைகளை மீட்டுத் தந்தவர் மாமன்னன் ராஜராஜன். அவரை சிறப்பிக்கும் வகையில், அவர் பதவியேற்ற 985-ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 -வது சதய விழா, இன்று (25.10.2023) அரசு விழாவாக கொண்டாடப்படுகின்றது.

தஞ்சைப் பெரிய கோவிலின் சிறப்புகள்

ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் மாமன்னன் ராஜராஜ சோழனின் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருக்கும் தஞ்சை பெருவுடையார் கோவிலின் சில சிறப்புகளை இப்பதிவில் காணலாம்.

1003க்கும் 1010ஆம் ஆண்டிற்கும் இடையில் சோழ மன்னனான ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்தக் கோயில், திராவிடக் கோயில் கலையின் உன்னதமான சான்றாகக் கருதப்படுகிறது. தற்போதுள்ள தொழில்நுட்பத்தை வைத்து கட்டினால் கூட பல ஆண்டுகள் ஆகும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னம் என்ற அந்தஸ்தை பெற்ற இந்தக் கோவில், இந்தியத் தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது. இந்தக் கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழா கடந்த 2010ஆம் ஆண்டில் நடைபெற்றது.

தஞ்சாவூரில் காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோவில், ராஜராஜேச்சரம், பெருவுடையார் கோவில், பிரகதீசுவரர் கோவில் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. காஞ்சியில் இராசசிம்மனால் கட்டப்பட்ட கயிலாயநாதர் கோவில், மாமன்னன் ராஜராஜசோழனை மிகவும் கவர்ந்தது. அதே போல் ஒரு கோவிலைக் கட்ட எண்ணிய ராஜராஜசோழன் தஞ்சையில் பெரிய கோவிலைக் கட்டினார். பெரியகோவிலின் அமைப்பு, திருவாரூர் தியாகராசர் கோவிலில் உள்ள அசலேசுவரர் சந்நிதியின் மாதிரியைக் கொண்டு உருவானதாகவும் செய்தி உண்டு. இக்கோயிலின் தலைமைச் சிற்பி குஞ்சர மல்லன் இராசராசப்பெருந்தச்சன் எனக் கோவிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோவில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீ உயரமான இக்கற்கோவிலை ராஜராஜசோழன் எழுப்பினார். கோவிலின் கட்டுமானப் பணிக்காக 1,30,000 டன் கிரானைட் கற்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அருகே மலைகள் இல்லாத நிலையில், நவீன போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில் சுமார் 50 மைல்கள் தொலைவில் இருந்து கோவியிலுக்கான கற்கள் எடுத்து வரப்பட்டிருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. இக்கோவில், கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, வெண்கலச் சிலையுருவாக்கம் ஆகியவற்றில் சோழர்களின் திறமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.

மாமன்னன் ராஜராஜசோழனின் தமிழ் பற்றை இக்கோவிலின் வடிவமைப்பில் இருந்து நாம் புரிந்து கொள்ளலாம். கோவிலில் உள்ள சிவ லிங்கத்தின் உயரம் 12 அடி. தமிழின் உயிர் எழுத்துக்கள் 12, சிவ லிங்கத்தின் பீடத்தின் உயரம் 18 அடி. தமிழின் மெய் எழுத்துக்கள் 18, கோவிலின் கோபுரத்தின் உயரம் 216 அடி. தமிழின் உயிர் மெய் எழுத்துக்கள் 216, சிவ லிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி. தமிழ் மொழியின் மொத்த எழுத்துக்கள் 247 ஆகும். கருவறையில் உள்ள சிவலிங்கம் மிகவும் பெரியது. 6 அடி உயரம், 54 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார், 23 அடி உயரம் கொண்ட லிங்கம் ஆகியன தனித்தனியாக கருங்கற்களால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ள நந்தி 20 டன் எடையும், இரண்டு மீட்டர் உயரம், ஆறு மீட்டர் நீளம், இரண்டரை மீட்டர் அகலமும் கொண்டதாகவும், இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நந்தியுமாகவும் உள்ளது, கோபுரத்தின் மேல் உள்ள வைக்கப்பட்டுள்ள கலச வடிவிலான மேற்கூரை கல் சுமார் 80 டன் எடை கொண்ட ஒற்றை கல்லால் செய்யப்பட்டது என்பது பெரிய அதிசயம். அதைவிட பெரிய அதிசயம், அப்பெரிய கல்லை எப்படி அவ்வளவு மேலே எடுத்துச் சென்றனர் என்பதுதான்.

அழகி என்னும் இடையர் குல மூதாட்டி, பெரிய கோவில் கட்டி முடிக்கும் வரை கோவில் கட்டும் சிற்பிகளின் தாகத்தை போக்கும் பொருட்டு தினமும் அவர்களுக்கு தயிர், மோர் வழங்கி வந்தார். இதனை அறிந்த மன்னர் ராஜராஜசோழன் இடையர் குல மூதாட்டியின் சிவத்தொண்டை அனைவரும் அறியும் வண்ணம், இராசகோபுரத்தின் உச்சியில் உள்ள 80டன் எடை கொண்ட கல்லில், அழகி என்று மூதாட்டியின் பெயர் பொறித்தார். அந்த கல் இடைச்சிக் கல் என்று அழைக்கப்படுகிறது. இப்படி, கோவிலில் உள்ள கல்வெட்டில், கோவிலை கட்ட யார் யார் பணியாற்றினார்களோ, கட்டடக்கலை நிபுணர்களிலிருந்து அவர்களின் துணிகளை சலவை செய்தவர்கள், முடி திருத்தியவர்கள் என கோவில் பணி செய்ய உதவியவர்களுக்கு தொண்டு செய்தவர்களின் பெயர் கூட கல்வெட்டில் பதிவு செய்திருப்பது ராஜ ராஜ சோழனின் பெருந்தன்மையும், மக்கள் மீது அவர் வைத்திருந்த அன்பும், ராஜ ராஜ சோழன் மீது மக்கள் கொண்டிருந்த அன்பும் புலப்படுகிறது.

Read More
மஹாளய அமாவாசை

மஹாளய அமாவாசை

மஹாளய அமாவாசையின் தனி பெரும் சிறப்பு

அமாவாசை முதலான முக்கிய நாட்களில் நமது முன்னோர்கள், பூமிக்கு வந்து தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசீர்வதிப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த நாட்களில் சிரத்தையோடு அவர்களை வழிபட்டால், தீர்க்க ஆயுள், புகழ், செல்வம், உடல் ஆரோக்கியம், இன்பம் போன்ற அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மஹாளய என்றால் 'கூட்டாக வருதல்' என்பது பொருள். மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளய பட்சம் என்று கருதப்படுகிறது. பட்சம் என்றால், 15 நாட்கள் என்பது பொருள். அதாவது மறைந்த நமது முன்னோர்கள், 15 நாட்கள் நம்மோடு தங்கக்கூடிய காலங்களை மஹாளய பட்சம் என்று கூறுகிறோம்.

மஹாளய பட்சம் புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கிறது. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையே, மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. மஹாளய பட்சத்தில் அனைத்து நாட்களுமே தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷம். இயலாதவர்கள் மஹாளய அமாவாசை அன்றாவது பக்தியுடனும், நம்பிக்கையுடன் தர்ப்பணம் செய்வது நல்ல பலனைத் தரும். மஹாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் பல்வேறு பலன்கள் நம்மைச் சேர்கின்றன. 1ம் நாள் - பிரதமை - செல்வம் சேரும் 2ம் நாள் - துவிதியை - பெயர் சொல்லும் குழந்தைகளைப் பெறலாம். 3ம் நாள் - திரிதியை - நினைத்த காரியங்கள் நிறைவேறும் 4ம் நாள் - சதுர்த்தி - பகையிலிருந்து எளிதில் விடுபடலாம். 5ம் நாள் - பஞ்சமி - அசையா சொத்துக்கள் மற்றும் செல்வம் பெருகும். 6ம் நாள் - சஷ்டி - பேரும், புகழும் தேடி வரும். 7ம்நாள் - சப்தமி - தகுதியான மற்றும் சிறந்த பதவிகள் கிடைக்கும். 8ம் நாள் - அஷ்டமி -அறிவு கூர்மை பெறும். 9ம் நாள் நவமி - நல்ல வாழ்க்கைத்துணை மற்றும் நல்ல குடும்ப சூழல் அமையும். 10ம் நாள் - தசமி - நீண்ட நாள் ஆசை உடனடியாக நிறைவேறும். 11ம் நாள் - ஏகாதசி - கல்வி, விளையாட்டு, கலைகளில் அசுர வளர்ச்சி கிடைக்கும். 12ம் நாள் - துவாதசி - ஆபரணங்கள் சேரும். 13ம் நாள் - திரயோதசி - விவசாயம் மற்றும் தொழில் செழிக்கும். தீர்க்காயுள் கிடைக்கும். 14ம் நாள் - சதுர்த்தசி - பாவம் கழியும். வாரிசுகளுக்கும் நன்மையே நடக்கும். 15ம் நாள் - மஹாளய அமாவாசை - அத்தனை பலன்களும் நமக்குக் கிடைக்க, நமது முன்னோர்களின் பரிபூரண ஆசி கிடைக்கும்.

தர்ப்பணம் கொடுக்கும் போது குளக்கரை, நதிக்கரை அல்லது கடற்கரை என ஏதாவது ஒரு நீர்நிலைக்கு அருகில் வைத்தே தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்பது நியதி. காசி, ராமேஸ்வரம், கயா, திருச்சி அம்மா மண்டபம், கன்னியாகுமரி , விளமல், தீர்த்ததாண்டதானம், திருச்செந்தூர், திலதர்ப்பணபுரி, திருப்புல்லாணி, திருவள்ளூர் முதலான தலங்கள் தர்ப்பணம் கொடுக்க சிறந்த தலங்கள் ஆகும்.

சாதாரண அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால், மஹாளயபட்ச அமாவாசை தினத்தில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் ஏனைய அனைவருக்கும் இன்றைய தினத்தில் தர்ப்பணம் கொடுப்பதே மஹாளய அமாவாசையின் தனி பெரும் சிறப்பாக திகழ்கிறது. மற்ற அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்துவிட்டாலோ அல்லது அதற்கான வாய்ப்பு இல்லாமல் தவற விட்டவர்கள், இந்த மகாளய அமாவாசையன்று திதி கொடுத்தால், அது அதற்கான முழுப் பயனையும் அளிக்க வல்லதாகும். மகாளய அமாவாசை அன்று முன்னோர்கள் எல்லோரும் பூமிக்கு வந்து செல்வதாக ஐதீகம். நாம் அவர்களுக்கு அளிக்கும் திதி, அவர்கள் செய்த பாவங்களில் இருந்தெல்லாம் விடுவித்து, அவர்களை சொர்க்க வாழ்விற்கு கொண்டு செல்லும் என்பது நம்பிக்கை.

இவ்வாறான சிறப்புக்களால்தான், தை அமாவாசை, ஆடி அமாவாசையைக் காட்டிலும் மஹாளய அமாவாசை அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

Read More
திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோவில்

திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோவில்

நடராஜப் பெருமான் தன் சடாமுடியை அள்ளி முடிந்த கோலத்தில் இருக்கும் அரிய காட்சி

சிதம்பரத்திற்கு தென்கிழக்கே 5 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் திருக்கழிப்பாலை. இறைவன் திருநாமம் பால்வண்ணநாதர். இறைவியின் திருநாமம் வேதநாயகி. இத்தலத்தின் சிவலிங்கப் பெருமான் வெண்ணிறமுடையவராக காட்சி தருவது, வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாத அரிய காட்சியாகும்.

பொதுவாக சிவாலயங்களில், நடராஜப் பெருமான் தன் சடா முடியை விரித்த நிலையில், ஆனந்த தாண்டவ கோலத்தில் நமக்கு காட்சி அளிப்பார். ஆனால் இக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் நடராஜ பெருமான் , வேறு எங்கும் இல்லாத வகையில், தன் சடாமுடியை அள்ளி முடிந்த கோலத்தில் இருப்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பு அம்சமாகும். நடராஜரின் இத்தகைய கோலம் நாம் காண முடியாத அரிய காட்சியாகும். இவர் அருகே சிவகாமி அம்பாள் அவர்தம் தோழிகளான விஜயா, சரஸ்வதியோடு காட்சி தருவதும் ஒரு சிறப்பான அம்சமாகும்.

Read More
காமரசவல்லி சௌந்தரேஸ்வரர்(எ) கார்கோடேஸ்வரர் கோவில்

காமரசவல்லி சௌந்தரேஸ்வரர்(எ) கார்கோடேஸ்வரர் கோவில்

சிவபெருமான், நாக ராஜா கார்கோடகனை தன் கழுத்தில் அணிந்த தலம்

தஞ்சாவூர்-பழுவூர் சாலையில் 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் காமரசவல்லி. இறைவன் திருநாமம் சௌந்தரேஸ்வரர், கார்கோடேஸ்வரர். இறைவியின் திருநாமம் பாலாம்பிகா.

அர்ஜுனனின் பேரனும், அபிமன்யுவின் மகனுமான பாண்டவ வம்சத்து பரீட்சித்து மகாராஜா சாபம் ஒன்றினால் பாம்பு கடித்து இறக்க, அவர் மகன் ஜனமேஜயன் பூமியில் உள்ள அனைத்து பாம்புகளும் இறக்க யாகம் வளர்த்தான். நாகங்களுக்கெல்லாம் ராஜாவான கார்கோடகன் என்னும் நாகம் ,இத்தலத்து இறைவனை வழிபட்டு யாகத்திலிருந்து தப்பியது. கார்கோடகனின் பக்தியை மெச்சிய சிவபெருமான் அவனிடம், இத்தலத்துக்கு வந்து தொழுவோருக்குப் பாம்பு கடித்து மரணம் ஏற்படக் கூடாது என்று வாக்குறுதி வாங்கினார். சர்ப்ப தோஷம் அவர்களைத் தீண்டாதிருக்க வேண்டும் என்றும் எச்சரித்து, கார்கோடகனைத் தன் கழுத்தில் அணிந்துகொண்டார். அத்தினமே கடக ராசி, கடக லக்னத்தில் அமைந்த அற்புதமான தினமாகும். செளந்தரேஸ்வரர் என வழங்கப்பட்ட இறைவன், அத்தினம் முதல் கார்கோடேஸ்வரர் என்று அழைக்கப்பட்டார்.

ரதிதேவிக்கு மாங்கல்ய பிச்சை கிடைத்த தலம்

தன் கணவன் சிவபெருமானின் நெற்றிக் கண்ணால் எரிக்கப்பட்டதால், ரதிதேவி தனக்கு மாங்கல்ய பிச்சை வேண்டி தவமிருந்த தலம். அதனால் ரதிவரம் என்றழைக்கப்பட்டது. இந்தக் கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ரதியின் செப்புத் திருமேனி இத்தலத்தில் உள்ளது. இரண்டு கைகளை ஏந்தி, இறைவனிடத்தில் தன் கணவனை உயிர்ப்பித்துத் தருமாறு வேண்டிட, இறைவன் மாங்கல்யப் பிச்சை அளித்தபோது அதைப் பெற்ற கோலத்தில் கையில் பூவுடன் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஊரி்ல் ஒவ்வொருஆண்டும் மாசி மாதம் பெளர்ணமி தினத்தில் காமன் பண்டிகை நடத்தப்படுகிறது. இதில் இரண்டாக வெட்டிய ஆமணக்குச் செடியை நட்டு வைப்பார்கள். இது சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு எட்டு நாட்களுக்குள் உயிர்ப்பித்து மீண்டும் தழைத்துவருவதாக நம்பிக்கை நிலவுகிறது. இன்றளவும் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

கடக ராசிக்காரர்கள், நாகதோஷம் உடையவர்கள் வழிபடவேண்டிய கோவில்

செளந்தரேஸ்வரர் வாக்குப்படி 'இந்த காமரசவல்லி பகுதியில் பாம்பு தீண்டி யாரும் இறந்ததில்லை' என்கின்றனர் ஊர்மக்கள். இந்த வரத்தை சிவபெருமான் தந்த நாள் கடகராசி, கடக லக்னம் அமைந்த தினம் என்பதால் கடகராசிக்காரர்கள், கடக லக்னக்காரர்கள் இந்தத் தலத்துக்கு வந்து செளந்தரேஸ்வரரை தரிசனம் செய்வது சிறப்பு. அவர்களது கஷ்டங்கள், நாகதோஷம், கால சர்ப்ப தோஷம் போன்றவை விலகும் என்பது ஐதீகம்.

திருமணத் தடை நீங்கி, நல்ல வரன் அமையவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்த தம்பதி ஒன்று சேரவும் இங்கு வந்து வேண்டிக்கொண்டால், அவர்கள் வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோவில்

திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோவில்

வெள்ளை நிறத்துடன் காணப்படும் அரிய சிவலிங்கம்

சிதம்பரத்திற்கு தென்கிழக்கே 5 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் திருக்கழிப்பாலை. இறைவன் திருநாமம் பால்வண்ணநாதர். இறைவியின் திருநாமம் வேதநாயகி. இத்தலத்தின் சிவலிங்கப் பெருமான் வெண்ணிறமுடையவராக விளங்கிறார், அதனாலேயே இறைவன் பால்வண்ணநாதர் என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் அருட்காட்சி தருகிறார்.

இத்தலம் முன்பு கொள்ளிட ஆற்றின் வடகரையில் கரைமேடு என்னுமிடத்தில் இருந்ததால், இத்தலத்திற்கு கழிப்பாலை என்ற பெயர் இருந்தது. கொள்ளிட ஆற்றின் வெள்ளப்பெருக்கால் கோயில் முழுவதும் சிதலமடைந்து விட்டது. எனவே தற்போது உள்ள இடத்தில் கோயில் கட்டி, அதில் கழிப்பாலை இறைவனையும், இறைவியையும் பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.

மூலவர் பால்வண்ணநாதர் ,வெண்ணிறமாக சுயம்பு மூர்த்தியாக மிகச் சிறிய பாணத்துடன் காட்சியளிக்கிறார். பாணத்தின் மேற்புறம் சதுரமாக, வழித்தெடுத்தாற்போல் நடுவில் பள்ளத்துடன் அதிசயமான அமைப்புடன் காட்சி தருகின்றது. அபிஷேகத்தின்போது பால் மட்டும்தான் இப்பள்ளத்தில் தேங்கும். மற்ற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்குத்தான் நடைபெறுகிறது. மூலவருக்கு பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் உள்ளனர்.

கபிலமுனிவர் ஒவ்வொரு சிவத்தலங்களாக தரிசித்து வரும்போது, வில்வ வனமாக இருந்த இப்பகுதியில் தங்கி, சிவபூஜை செய்ய நினைத்தார். இப்பகுதியில் பசுக்கள் தானாக பால்சுரந்து வந்த காரணத்தினால் மணல் முழுவதும் வெண்ணிறமாக காட்சியளித்தது. முனிவர் இந்த வெண்ணிற மணலை எடுத்து இலிங்கம் அமைத்து வழிபாடு செய்தார். ஒருமுறை அந்த வழியாக வந்த மன்னனது குதிரையின் கால் குளம்பு, மணல் லிங்கத்தின்மீது பட்டு சிவலிங்கம் பிளந்து விடுகிறது. வருந்திய முனிவர் பிளவுபட்ட சிவலிங்கத்தை எடுத்துவிட்டு வேறு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ய நினைத்தபோது, இறைவன் பார்வதி சமேதராக காட்சி தந்து,'முனிவரே. பசுவின் பால் கலந்த வெண்ணிற மணலில் செய்த சிவலிங்கம் பிளவு பட்டிருந்தாலும், அதை அப்படியே பிரதிஷ்டை செய்து விடுங்கள். காமதேனுவே பசுவடிவில் இங்கு வந்து பால்சொறிந்துள்ளது. எனவே இந்த சிவலிங்கத்தை வழிபடுபவர்கள் சகல செல்வங்களும் அடைவார்கள்' என்றார். இன்றும் பிளவு பட்ட வெண்ணிற சிவலிங்கம் தான் காட்சி தருகிறது.

பிரார்த்தனை

சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்த பாலை அருந்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
கருங்குளம் மார்த்தாண்டேஸ்வரர் கோவில்

கருங்குளம் மார்த்தாண்டேஸ்வரர் கோவில்

கல்யாண நவக்கிரக தலம் - நவக்கிரகங்கள் தங்கள் மனைவியர் சகிதமாக எழுந்தருளி இருக்கும் அரிய காட்சி

திருநெல்வேலியில் திருச்செந்தூர் சாலையில், 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது கருங்குளம் மார்த்தாண்டேஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் குலசேகர நாயகி.

ஒரு காலத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில், கேரளா அரசர் மார்த்தாண்டவர்மன் என்னும் மன்னன் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து மலையைச் சுற்றி அருமையான ஊர் ஒன்றை அமைத்தார். ஊருக்காகக் குளங்களை வெட்டினார். மரங்களின் நிழல்கள் பட்ட காரணத்தினால் எப்போதுமே குளங்கள் கருமையான நிறத்தில் காணப்பட்டது. எனவே இந்த ஊரை கருங்குளம் என அழைத்தனர். மார்த்தாண்ட மன்னன் இந்த ஊரை அமைத்த காரணத்தினால் மார்த்தாண்டேஸ்வர கருங்குளம் என இந்த ஊர் அழைக்கப்பட்டது. இதற்கிடையில் குலசேகரன்பட்டினத்தைத் ஆண்டு வந்த குலசேகர மன்னன், தாமிரபரணி ஆற்றில் நீராடி விட்டுச் செல்லும்போது, அம்பிகை இல்லாத மார்த்தாண்டேஸ்வர சிவனைக் கண்டு வணங்கி அங்கு ஒரு அம்பிகையைப் பிரதிஷ்டை செய்தார். குலசேகர நாதர் பிரதிஷ்டை செய்த அன்னைக்குக் குலசேகர நாயகி என்று பெயர். இதற்கிடையில் இந்த பகுதியில் முனிவர் பெருமக்களும், ரிஷிகளும் வந்திருந்து மார்த்தாண்டேஸ்வரரையும், இக்கோவிலுக்கு அருகில் உள்ள வகுளகிரி என்ற மலைமீது எழுந்தருளி இருக்கும் வெங்கடாசலபதியையும் வணங்கி நின்றனர். அப்பொழுது நவக்கிரகங்கள் அங்கே தம்பதி சகிதமாக காட்சியளித்தனர். அதைக் கண்டு முனிவர்களும், ரிஷிகளும் தங்களுக்குக் காட்சி தந்ததைப் போல மக்களுக்கும் தம்பதி சகிதமாக காட்சி தர வேண்டும் என்று வேண்டி நின்றனர். அதன்பின் இங்கு நவக்கிரகங்கள் தம்பதி சகிதமாக காட்சி தருகின்றனர். அதனால் இத்தலம், கல்யாண நவக்கிரக தலம் என்று அழைக்கப்படுகிறது.

இக்கோயிலில் நவக்கிரகங்கள் தங்கள் மனைவியர் சகிதமாக எழுந்தருளி இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இதுபோன்ற அமைப்பு தமிழகத்தில் ஒரு சில இடங்களிலேயே அமைய பெற்றுள்ளது.

இக்கோயிலில் நவகிரகங்கள் தங்கள் மனைவியர் சகிதமாக எழுந்தருளி இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இதுபோன்ற அமைப்பு தமிழகத்தில் ஒரு சில இடங்களிலேயே அமைய பெற்றுள்ளது.

பிரார்த்தனை

கணவன் மனைவியோடு இங்கு வருபவர்களுக்குக் கேட்ட வரங்கள் கிடைக்கின்றன. தாமிரபரணி நதிக்கரையில் நீராடி விட்டு இந்த சிவனை வணங்கி அதன்பின் வகுளகிரி வெங்கடாசலபதியை வணங்கினால் தடைப்பட்ட திருமணம் நடைபெறும், குழந்தை பேறு கிடைக்கும், நீண்ட ஆயுள் கிடைப்பதுடன், அடைபடாத கடன்கள் அடைபடும். தீராத வழக்குகள் நமக்குச் சாதகமாகும்.

Read More
 வெள்ளூர் திருக்காமேஸ்வரர் கோவில்

வெள்ளூர் திருக்காமேஸ்வரர் கோவில்

மகாலட்சுமி சிவபெருமானிடம் ஐஸ்வர்ய மகுடம் பெற்ற தலம்

திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில், குணசீலம் கோவிலை அடுத்து, ஆனால் முசிறிக்கு 6 கி.மீ. முன்னால் உள்ள தலம் வெள்ளூர். இத்தலத்து இறைவன் திருநாமம் திருக்காமேஸ்வரர். இறைவியின் திருநாமம் சிவகாமசுந்தரி. திருக்காமேஸ்வரர் பெருமானை வணங்கினால் வெற்றி நிச்சயம் என்பதை உணர்த்தும் வகையிலேயே இந்த ஊருக்கு வெள்ளூர் என்ற பெயர் ஏற்பட்டது.

வேறு எந்த சிவாலயத்திலும் இல்லாத வகையில், இங்கே மகாலட்சுமி கோவில் கொண்டிருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். கோவிலின் குபேர பாகத்தில் மகாலட்சுமி தவம் செய்யும் கோலத்தில், ஐஸ்வர்ய மகாலட்சுமி என்ற திருநாமத்தோடு சிவலிங்கத்துடன் கூடிய ஸ்ரீவத்ஸ முத்திரை பதித்த ஐஸ்வர்ய மகுடத்தை தலையில் சூட்டியவாறு, அமர்ந்த திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்

தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்தனர். அந்த அமிர்தம் தேவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டுமென எண்ணிய மகாவிஷ்ணு, மோகினி அவதாரமெடுத்தார். அசுரர்களை மயக்கி லவண சமுத்திரம் எனும் உப்பு நிறைந்த கடலில் அசுரர்களை மூர்ச்சையாகும்படி செய்துவிட்டு திரும்பும்போது சிவபெருமானின் பார்வையில் மோகினி தென்பட்டாள். மோகினியின் அழகைக்கண்டு சிவபெருமான் மோகிக்க ஹரிஹரபுத்திரர் எனும் ஐயப்பன் அவதரித்தார். இதைக் கேள்விப்பட்ட மகாவிஷ்ணுவின் மனைவியான மகாலட்சுமி கோபம் கொண்டாள். உடனே வைகுண்டத்தை விட்டு வெளியேறி பூலோகம் வந்தாள். இங்கு வில்வாரண்ய க்ஷேத்திரம் எனும் வெள்ளூரில், மகாலட்சுமி சிவபெருமானை பிரதிஷ்டை செய்து தவம் செய்யலானாள். பல யுகங்களாக தவம் செய்தும் சிவபெருமான் காட்சி தரவில்லை. உடனே மகாலட்சுமி தன்னை வில்வமரமாக மாற்றிக்கொண்டு சிவலிங்கத் திருமேனியில் வில்வமழையாகப் பொழிந்து சிவபூஜை செய்தாள். பூஜையில் மகிழ்ந்த சிவபெருமான் மகா லட்சுமியின் முன் தோன்றி, ஹரிஹரபுத்திர அவதாரத்தின் நோக்கத்தை விளக்கிக்கூறி மகாலட்சுமியை சாந்தப்படுத்தினார். பின் மகாலட்சுமியை ஸ்ரீவத்ஸ முத்திரையுடன் கூடிய சாளக்ராமமாக மாற்றி, மகாவிஷ்ணுவின் இதயத்தில் அமரச் செய்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் நிரந்தரமாக இடம் பெற செய்தார்.

வில்வமரமாகத் தோன்றி, வில்வமழை பொழிந்து சிவபூஜை செய்ததின் பலனாக இத்தலத்தில் மகாலட்சுமிக்கு ஸ்ரீவத்ஸ முத்திரை பதித்த சிவலிங்கத்துடன் கூடிய ஐஸ்வர்ய மகுடத்தை அளித்து மகாலட்சுமியை சகல செல்வத்துக்கும் அதிபதி ஆக்கினார். அதனால் இத்தலத்தில் மகாலட்சுமி, ஐஸ்வர்ய மகாலட்சுமி என்ற திருநாமத்துடன், அதனால் இத்தலத்தில் மகாலட்சுமி, ஐஸ்வர்ய மகாலட்சுமி என்ற திருநாமத்துடன், தல விருட்சமான வில்வ மரத்தடியில் தவக்கோலத்தில் இருந்து திருவருட்பாலிக்கிறாள். இத்தலத்திலேயே தங்கி இங்கு வரும் பக்தர்களுக்கு அவரவர் பாவ புண்ணியத்திற்கேற்ப செல்வத்தை அருளும்படி கூறினார். இவள் அபய, வரத திருக்கரங்களோடு, மேலிரு கரங்களில் தாமரை மலருடன் காட்சி தருகிறாள். ஐஸ்வர்ய மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்யும் முன் வில்வமரத்துக்கே முதலில் பூஜை செய்கிறார்கள். மகாலட்சுமிக்கு ஐஸ்வர்ய மகுடத்தை அருளியதால் இத்தல இறைவனுக்கு ஐஸ்வர்யேஸ்வரர், லட்சுமிபுரீஸ்வரர் என்ற பெயர்களும் உண்டு.

இத்தலத்தின் பிற சிறப்புகள்

சுக்கிரன், ஈசனை வழிபட்டு யோகத்திற்கு அதிபதி ஆனதும், குபேரன் தனாதிபதி ஆனதும் இத்தலத்தில்தான் என தலபுராணம் கூறுகிறது. முப்பத்து முக்கோடி தேவர்களும் தினமும் ஆகாய மார்க்கமாக இங்கு வந்து ஈசனை வழிபடுவதாக ஓலைச்சுவடிகளில் காணப்படுகிறது. ராவணன் சிவவழிபாடு செய்து ஈஸ்வரப் பட்டம் பெற்றதும் இத்தலத்தில்தான். ஈசன் காமனை நெற்றிக் கண்ணால் சுட்டெரித்தாலும் அவன் எய்த மன்மத பாணம் அம்பிகை மீதுபட, தேவி சிவகாம சுந்தரியானாள் அவளே இங்கு சிவனுடன் உறையும் நாயகியாய் வீற்றிருக்கிறாள். மகேசன், மன்மதனை மன்னித்து அரூப அழகுடலை அளித்ததால், சிவபிரான் திருக்காமேஸ்வரர் என்றும், மன்மதனுக்கு வைத்தியம் அருளியதால் வைத்தியநாதராகவும் பெயர் பெற்றார்.

பிரார்த்தனை

தங்கம், வெள்ளி நகை செய்பவர்கள் தங்கள் தொழில் அபிவிருத்திக்காக இங்கு வருகிறார்கள். சுக்கிர தோஷம் உடையவர்கள்,வெள்ளிக்கிழமைகளில் 16 வகையான அபிஷேகம் செய்து 16 நெய்தீபம் ஏற்றி, 16 செந்தாமரை மலர்கள் சாத்தி, 16 முறை வலம் வந்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும். கடன் தொல்லைகள் அனைத்தும் நிவர்த்தியாகும். சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் பெறலாம் . தாமரை மலர் சாற்றி அட்சய திரிதியை அன்று மஹாலட்சுமியை வழிபட்டால் சகல செல்வங்களும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
அபிசேகபுரம் ஐராவதீசுவரர் கோவில்

அபிசேகபுரம் ஐராவதீசுவரர் கோவில்

சிவபெருமானையும், அம்பாளையும் ஒருசேர தரிசிக்கும் நிலையில் அமர்ந்திருக்கும் அபூர்வ நந்தி

திருப்பூரிலிருந்து நம்பியூர் செல்லும் வழியில் உள்ள அபிசேகபுரத்தில் அமைந்துள்ளது, 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்த, ஐராவதீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் அபிஷேகவல்லி. இந்திரனின் வாகனமான வெள்ளை யானை வதத்திற்கு இறைவன் சாப விமோசனம் கொடுத்ததால் அவருக்கு ஐராவதீசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது. இக்கோவிலில் சிவபெருமானின் திருமண நிகழ்ச்சியை குறிப்பிடும் வகையில், ஐராவதீசுவரர், அபிஷேகவல்லி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகுராஜா பெருமாள் சன்னதிகள் இருக்கின்றன. ஒரே வளாகத்தில், ஈசுவரன் மற்றும் மற்றும் பெருமாள் கோவில்கள் அமைந்துள்ளதும், திருக்கல்யாண கோலத்தில் இருப்பதும் சிறப்பு.

இக்கோவில் மூலவரான ஆவுடையார், தரைமட்டத்தில் இருந்து பனை மரம் உயரம் இருந்ததாகவும், சுயம்புவாக இருந்ததாகவும் வரலாறு உள்ளது. ஆஜானுபாகுவான ஐராவதம், 48 நாட்கள் அருகிலிருந்த குளத்தில் நீராடி, தாமரை மலர் பறித்து வந்து பூஜித்துள்ளது. அளவிட முடியாத உயரம் இருந்த ஐராவதமே, தும்பிக்கையால் தொட முடியாத அளவுக்கு பிரமாண்டமாக இருந்த ஆவுடையாரை, சுற்றிலும் மண் நிரப்பி, பக்தர்கள் தரிசித்துள்ளனர். பிற்காலத்தில், கோவிலாக அமைக்கப்பட்டுள்ளது.

இறைவன் ஐராவதீசுவரர் முன் அமர்ந்துள்ள பிரதோஷ நந்தி அற்புதமான அழகுடன், மிகப்பெரியதாக காணப்படுகிறது. மற்ற கோவில்களில் உள்ளது போல், நேராக இல்லாமல், வித்தியாசமாக தலையை இடதுபுறமாக திருப்பி, வலது கண்ணால் சிவனை தரிசிப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளது, இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். சிவபெருமானையும், அம்மனையும் ஒருங்கே தரிசிக்கும் வகையில் நந்தி அமைந்துள்ளதாலும், பக்தர்களின் வேண்டுதலை கேட்கும் நிலையில் இருப்பதாலும் , இக்கோவில் பிரதோஷ கால பூஜை சிறப்பானதாகும். இங்கு வந்து 12 பிரதோஷ காலம் வழிபட்டு வந்தால், அனைத்து விதமான சாபங்கள், கஷ்டங்கள் நீங்கும் என்ற நம்பிக்கை பக்தர்கள் இடையே உள்ளது. அதேபோல், தொழில் தடை, திருமண தடை, புத்திர பாக்கிய தடை நீங்குவதாகவும் பக்தர்களிடையே நம்பிக்கை உள்ளது.

ஐராவதீசுவரர், அழகுராஜா பெருமாள் ஆகிய இரண்டு கோவில்களிலும் தனித்தனி தீபஸ்தம்பங்கள் உயரமாக அமைந்துள்ளன. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது; பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதாசி கொண்டாடப்படுகிறது.

Read More
திருவல்லம் வில்வநாதேசுவரர் கோவில்

திருவல்லம் வில்வநாதேசுவரர் கோவில்

கோவில் விமானத்தில் 27 நட்சத்திரங்கள் எழுந்தருளி இருக்கும் அபூர்வ காட்சி

வேலூர் - ராணிப்பேட்டை சாலையில் 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருவல்லம். இறைவன் திருநாமம் வில்வநாதேசுவரர். இறைவியின் திருநாமம் வல்லாம்பிகை. இக்கோவில் மூலத்தான விமானத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனியே திருவுருவங்கள் அமைந்துள்ளன. இத்தகைய அமைப்பு வேறு எங்கும் காண முடியாது என்பது இத்தலத்தின் ஒரு சிறப்பம்சம். எனவே தாங்கள் பிறந்த நட்சத்திர தினத்தன்று இக்கோவிலில் வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பெருமானின் பெயர் வில்வ நாதேஸ்வரர் என்பதால் இங்கு வில்வம் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. இதை உட்கொண்டால் மந்த புத்தி நீங்கும் . அத்துடன் ஞானமும் கிடைக்கும்.

Read More
திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் கோவில்

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் கோவில்

வியக்க வைக்கும் அதிசயத் தூண் - கோவில் தூணுக்குள் வெளியே எடுக்க முடியாதபடி உருளும் கல் பந்து

திருச்சியிலிருந்து முசிறி செல்லும் சாலையில் 15 கி.மீ தூரத்தில் உள்ள தேவாரத்தலம் திருவாசி. இறைவன் திருநாமம் மாற்றுரைவரதீஸ்வரர். இறைவியின் திருநாமம் பாலாம்பிகை.

நமது முன்னோர்கள் கோவில்களில் வடித்து வைத்துள்ள சிற்பங்களும், கலை நயம் மிக்க சிற்ப வேலைப்பாடுகளும் நம்மை பிரமிக்க வைக்கும். அப்படிப்பட்ட ஓர் அற்புதமான வேலைப்பாட்டை, இந்த கோவிலில் நுழைந்தவுடன் வலதுபுறம் இருக்கும் ஒரு தூணில் நாம் காணலாம்.

இந்த தூணின் மூன்று பக்கங்களில் சுமார் ஒரு அடி நீளத்திற்கு நீள் செவ்வக துவாரம் அமைந்திருக்கின்றது. தூணுக்குள் கல்லாலான ஒரு பந்து இருக்கின்றது. இந்தப் பந்தை நாம், தூணுக்குள் ஒரு அடி தூரத்திற்கு மேலும் கீழும் நகர்த்த முடியும். ஆனால் அந்தக் கல் பந்தை நாம் தூணை விட்டு வெளியே எடுக்க முடியாது. இப்படி ஒரே கல்லிலான தூணில் மூன்று பக்கம் துவாரம் ஏற்படுத்தி, அதன் உள்ளிருக்கும் கல்லை பந்து போல் வடிவமைத்து ஆடவிட்டு இருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது.

Read More
ஆரணி  புத்திரகாமேட்டீசுவரர் கோவில்

ஆரணி புத்திரகாமேட்டீசுவரர் கோவில்

விநாயகரும் ஆஞ்சநேயரும் எதிர் எதிரே தனிச் சன்னதியில் எழுந்தருளி இருக்கும் அபூர்வ காட்சி

காஞ்சிபுரத்திற்கு 63 கி.மீ. தென்மேற்கில், திருவண்ணாமலைக்கு 60 கி.மீ. வடக்கில் அமைந்துள்ளது ஆரணி புத்திரகாமேட்டீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் பெரிய நாயகி.

ஆர்(அத்தி) மரங்கள் அணி, அணியாய் சேர்ந்து காடாகி இருந்த இடமாக இருந்ததால, இந்த ஊருக்கு ஆரணி என்ற பெயர் ஏற்பட்டது. இக்கோவில் கமண்டல நாகநதிக்கரையில் அமைந்துள்ளது. ஆற்றுப்பாலத்துக்கு இடப்பக்கத்திலிருக்கும் இக்கோவிலுக்கு சில படிகள் ஏறிச் செல்ல வேண்டும். இடப்புறத்தில் படித்துறை விநாயகர் சன்னிதி அமைந்திருக்கின்றது. அவருக்கு எதிர்புறம், கோவிலின் வலப்புறத்தில் ஆஞ்சநேயர் தனிச் சன்னதியில் அருள்பாலிக்கின்றார். இவ்வாறு, எதிரெதிரே விநாயகர், ஆஞ்சநேயரைக் காண்பது அரிது. இங்கிருக்கும் ஆஞ்சனேயர் கையில் சங்கு, சக்கரம் இருப்பதும் ஒரு தனிச்சிறப்பாகும்.

எந்த ஒரு செயலையும் விநாயகரை வணங்கி துவங்குவதும், அச்செயல் சிறப்பாக முடிந்ததும் ஆஞ்சநேயருக்கு நன்றி சொல்வதும் நமது வழிப்பாட்டு முறையாகும். இந்த நடைமுறையை சுட்டிக்காட்டும் விதமாக, கோவிலை வலம் வர ஆரம்பிக்கும்போது விநாயகரில் ஆரம்பித்து, இறைவனை தரிசித்து கடைசியில் ஆஞ்சநேயரை வணங்கி நமது கோவில் தரிசனத்தை முடிக்கும் விதமாக இக்கோவில் அமைப்பு அமைந்திருக்கின்றது.

பிரார்த்தனை

ஜாதகரீதியாக ஐந்தாம் இடத்தில் கேது இருப்பதால் உண்டாகும் புத்திர தோஷமும், நாகதோஷமும் நீங்க, இக்கோவிலில் நாக பிரதிஷ்டை செய்தும், புத்திரகாமேஷ்டி யாகத்தினை செய்தும் தோஷ நிவர்த்தி பெறுகிறார்கள். பரிகார தலம் என்பதால் திருமணம் செய்ய உகந்த இடமாக விளங்குகின்றது. மேலும் சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற சுப நிகழ்ச்சிகளும் இங்கு நடைபெறுகின்றது.

Read More
ஆலங்குடி நாமபுரீசுவரர் கோவில்

ஆலங்குடி நாமபுரீசுவரர் கோவில்

நெற்றியில் நாமத்துடன் இருக்கும் நந்தி

புதுக்கோட்டை- ராமேசுவரம் சாலையில் 20 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது ஆலங்குடி நாமபுரீசுவரர் கோவில். இறைவன் திருநாமம் நாமபுரீசுவரர். இறைவியின் திருநாமம் அறம்வளர்த்த நாயகி.

மூலவர் எதிரில் அமர்ந்திருக்கும் அதிகார நந்தியின் நெற்றியில், திருநீறுக்குப் பதில் நாமம் அணிந்திருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இதன் காரணமாகவும் மூலவருக்கு நாமபுரீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டதாகச் சொல்கின்றனர். மஹாவிஷ்ணு நந்தி ரூபத்தில் சிவனை வழிபடுவதாக ஐதீகம். இதை மால்விடை என்பார்கள். மால் என்றால் மகாவிஷ்ணு; விடை என்றால் எருது. திரிபுராந்தகர் என்ற மூன்று அசுரர்களை அழிக்க சிவன் செல்லும்போது, மகாவிஷ்ணு நந்தியாகி அவரை சுமந்து சென்றார்.

புதன் பிரதோஷம்

சிவன் கோயில்களில் சனி பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது. ஆனால் இங்கு புதன் பிரதோஷம் சிறப்பாக கருதப்படுகிறது. புதனுக்கும், சனீஸ்வரருக்கும் அதிதேவதை மகாவிஷ்ணு. கருவறை சுவரின் பின்புறம் லிங்கோத்பவர் இருக்குமிடத்தில் மகாவிஷ்ணு உள்ளார். இதனால் இங்கு சனி பிரதோஷத்தை விட புதன் பிரதோஷம் சிறப்பாகிறது. புதன் கல்வி அறிவை வழங்குபவர் என்பதால், பெற்றோர் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக இந்நாட்களில் இங்கு வந்து வழிபடலாம்.

இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி ரிஷபத்தோடும் , வழக்கமாக உடன் இருக்கும் நான்கு ரிஷிகளுக்கு பதிலாக, இரண்டு ரிஷிகளுடனும் அருள்பாலிக்கிறார். காலடியில், முயலகன் இருக்கிறான். இவரை மேதா தட்சிணாமூர்த்தி என்கின்றனர். ஏற்கனவே, திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில், நவக்கிரக குரு தலம் உள்ளதால், இத்தலத்தை இரண்டாம் குரு தலம் என்று சிறப்பிக்கின்றனர்.

பிரார்த்தனை

குழந்தைகளுக்கு தோஷம் இருந்தால் நீங்கவும், அவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.

Read More
காஞ்சிபுரம்  ஜுரஹரேஸ்வரர் கோவில்

காஞ்சிபுரம் ஜுரஹரேஸ்வரர் கோவில்

உடல் உஷ்ணத்தினால் ஏற்படும் நோய்களை தீர்க்கும் தலம்

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது ஜுரஹரேஸ்வரர் கோவில். இக்கோவிலின் இறைவனான சிவபெருமான் ஜுரஹரேஸ்வரர் என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார்.

ஒரு சமயம் தேவர்கள் அனைவரையும் வெப்ப நோய் தாக்கியது. வெப்பம் தாக்கியதில் அவர்கள் அனைவருக்கும் காய்ச்சல் ஜுரம் ஏற்பட்டது போல் உடல் வெப்பம் மிகுந்து துடித்தனர். பின்பு சிவனை தேவர்கள் சரணடைந்த போது, சுரன் என்கிற அசுரனை அழித்து பின்பு காஞ்சி நகரில் ஜுரஹரேஸ்வரர் என்கிற பெயரில் லிங்க வடிவில் தான் கோவில் கொண்டுள்ளதாகவும், அந்த லிங்கத்தை வழிபட்டால் ஜுரம், காய்ச்சல் தீர்ந்து உடல் வெப்பம் தணியும் எனக் கூறி அருளினார் சிவபெருமான்.

சிவபெருமான் பைரவர், வீரபத்திரர், சோமாஸ் கந்தர், தட்சிணாமூர்த்தி என்பது போன்ற 64 வடிவங்களில் அருள்பாலிக்கிறார். அவற்றில் ஒரு திருமேனி வடிவம்தான் ஜுரஹரேஸ்வரர். இந்த வடிவில் சிவபெருமான் இரண்டு தலைகள், ஏழு கைகள், நான்கு கொம்புகள், மூன்று கால்கள் கொண்ட தோற்றத்தில் காட்சி தருகிறார்.

ஸ்ரீரங்கம் கோவில் கோபுரம் போன்று இக்கோவிலிலும் பிரணவாகார விமானம் கோபுரம் இருக்கிறது. இந்த கோபுரத்தில் நான்கு புறமும் ஜன்னல்கள் உள்ளன. காய்ச்சல், ஜுரம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடும் போது இந்த கோபுர ஜன்னல் வழியே வருகிற காற்று, வெளிச்சம் போன்றவை பக்தர்களின் காய்ச்சல் போன்ற பல நோய்களை போக்குவதாகக் கூறப்படுகிறது. கோயிலின் கருவறையில் கருங்கல்லாலான ஜன்னல் இருக்கிறது.

சிற்பக்கலை பொக்கிஷம்

மிகப் பழமையான கோவில் என்பதாலும் மிக அழகிய நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் கொண்டதாலும், இக்கோவில் தொல்லியல் துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இக்கோவிலில் உள்ள சிரிக்கும் தோற்றத்தில் உள்ள நந்தி, கோவில் விமானம் மற்றும் கருவறையின் அமைப்பு, கோவில் விமானத்தின் அடிச் சுற்றில் உள்ள சிற்பங்கள், படிக்கட்டுகள், கோவில் விமானம் மற்றும் கருவறையில் உள்ள கருங்கல் ஜன்னல்கள் ஆகியவற்றின் அழகும், கலை நுணுக்கமும் நம்மை பரவசத்தில் ஆழ்த்தும். காஞ்சிபுரத்தில் நாம் தரிசிக்க வேண்டிய கோவில்களில் இதுவும் ஒன்றாக விளங்குகின்றது. இக்கோவில் ஒரு சிற்பக்கலை பொக்கிஷம் என்றால் அது மிகையாகாது.

பிரார்த்தனை

ஜுரம், காய்ச்சல் போன்ற பல நோய்கள் தீர இங்கு வந்து இறைவனை வேண்டிக் கொள்கின்றனர்.

Read More
ஆரணி  புத்திரகாமேட்டீசுவரர் கோவில்

ஆரணி புத்திரகாமேட்டீசுவரர் கோவில்

நீண்ட நாட்களாக குழந்தை வரம் வேண்டுவோருக்கு பலன் தரும் தலம்

காஞ்சிபுரத்திற்கு 63 கி.மீ. தென்மேற்கிலும், திருவண்ணாமலைக்கு 60 கி.மீ. வடக்கிலும் அமைந்துள்ளது ஆரணி புத்திரகாமேட்டீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் பெரிய நாயகி. குழந்தையற்ற தம்பதியருக்கு குழந்தை பாக்கியத்தை தரும் பிரதான வழிபாட்டுத் தலமாக இக்கோவில் விளங்குகிறது. கருவறையில் மூலவர் புத்திரகாமேட்டீசுவரர் ஒன்பது தலை நாகத்தின் கீழ் எழுந்தருளி இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

தல வரலாறு

அயோத்தியை ஆண்ட தசரத சக்கரவர்த்தி நீண்ட நாட்களாக தனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று கவலை கொண்டிருந்தார். குலகுரு வசிஷ்டர் ஆலோசனைப்படி புத்திரகாமேஷ்டி யாகம் செய்து, இத்தலத்தில் சிவனை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அதன்பின்னர், அவருக்கு ராமர், பரதன், லட்சுமணன். சத்ருக்கனன் என நான்கு பிள்ளைகள் பிறந்தனர். இங்கு சிவனுக்கு கோயில் எழுப்பிய தசரதர், அவருக்கு யாகத்தின் பெயரால் புத்திரகாமேட்டீசுவரர் என்றே பெயர் சூட்டினார். கோவிலுக்கு நேரே, வெளியில் தசரதருக்கும் சன்னதி உள்ளது. இவர் சக்கரவர்த்தியாக இல்லாமல், யாகம் நடத்தியபோது இருந்த அமைப்பில், முனிவர் போல கைகளில் ருத்ராட்ச மாலை. கமண்டலம் வைத்து காட்சியளிக்கிறார். தசரதர் தனிச் சன்னதி கொண்டு எழுந்தருளி இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான பிரார்த்தனை

திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு, இல்லாதவர்கள் புத்திரகாமேட்டீசுவரரை வழிபட விரைவில் அந்த பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குழந்தை வேண்டி, புத்திரகாமேட்டீசுவரரை வணங்குவோர், ஏழு திங்கட் கிழமை விரதமிருக்க வேண்டும். விரதம் துவங்கும் நாளன்று மதியம், ஒரு குழந்தைக்கு, நெய் சோறு தானமாக கொடுத்து, அதன் பின், சாப்பிட வேண்டும். இரண்டாம் வாரத்தில் 2 குழந்தைகள் மூன்றாம் வாரத்தில் 3 என்ற அடிப்படையில் ஆறாவது திங்களன்று ஆறு குழந்தைக்கு அள்னதானம் பரிமாறி விரதமிருக்க வேண்டும். ஏழாவது திங்கள்கிழமையன்று இங்கு புத்திரகாமேட்டீசுவரருக்கு செவ்வலரிப்பூ மற்றும் கோயிலில் உள்ள பவன் மல்லி மாலை அணிவித்து, மிளகு சேர்ந்த வெண்பொங்கல் நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும். ஆனி பவுர்ணமியன்று சிவனுக்கு சிவாச்சாரியார்கள், புத்திரகாமேஷ்டி யாகம் நடத்துவர். இதிலும் கலந்து கொள்ளலாம். ஜாதகரீதியாக ஐந்தாம் இடத்தில் கேது இருந்தால் உண்டாகும் புத்திர தோஷம் நாக தோஷம் நீங்க கோயில் வளாகத்திலுள்ள வேம்பு ஆலமரத்தடியில் தங்கள் நட்சத்திர நாளில் நாக பிரதிஷ்டை செய்தும் புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தியும் வேண்டிக்கொள்கிறார்கள்.

Read More