கோபாலகிருஷ்ணன் கோயில்
தேவலோக பாரிஜாத பூச்செடி நடப்பட்ட திவ்ய தேசம்
சீர்காழிக்கு அருகில் உள்ள திருநாங்கூரின் 11 திவ்யதேசங்களில் ஒன்று திருக்காவளம்பாடி காவளம் என்றால் பூஞ்சோலை என்று அர்த்தம். மூலவர்:கோபாலகிருஷ்ணன் (ராஜகோபாலன்) பாமா, ருக்மணியுடன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். பாமாவுக்கு பிடித்தமான தேவலோக மலரான பாரிஜாத பூச்செடி, கிருஷ்ணனால் பூலோகத்தில் நடப்பட்ட இடம் தான் திருக்காவளம்பாடி
லோகநாதப் பெருமாள் கோவில்
பெருமாள் திருநீறு அணிந்து காட்சி தரும் திவ்ய தேசம்
பொதுவாக பெருமாள் கோவிலில் தீர்த்தமும், துளசியும்தான் பிரசாதமாகத் தருவார்கள, விபூதி பிரசாதம் தரமாட்டார்கள, திருக்கண்ணங்குடி லோகநாதப் பெருமாள் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் 'திருநீரணி விழா’ என்பது சிறப்பான விழாவாகும். சித்திரை பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் நடைபெறும் இந்த விழாவின் போது, பெருமாள் விபூதி அணிந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சி மூன்றே முக்கால் நாழிகை(90 நிமிடம்) நேரம்தான் நடைபெறும். இதற்கு வைணவர்கள் உட்பட அனைவரும் விபூதி அணிந்தே வருவார்கள். பெருமாள் கோவிலில் விபூதி பூசுவது இங்கு மட்டும்தான.சைவ வைணவ ஒற்றுமைக்கு இந்த விழா எடுத்துக்காட்டாகும். உபரிசரவசு என்ற மன்னனுக்காக இந்த விழா எடுக்கப்படுகின்றது, உபரிசரவசு சிறந்த சிவபக்தன. தினமும் விடியற்காலை வேளையில் சிவபூஜை செய்வது அவன வழக்கம். அவன் சித்திரை மாதம் ஒரு நாள் வான்வெளியில் பறந்து வந்து கொண்டிருந்த போது விடியற்காலை நேரம் நெருங்கிவிட்டது. சிவபூஜை செய்வதற்காக அவன் சிவாலயத்தை தேடிக் கொண்டிருந்தபோது, திருக்கண்ணங்குடி பெருமாள் கோவில் அவன் கண்ணில் பட்டது. அதை சிவன் கோவில் என்று தவறாக புரிந்து கொண்டு கோவிலினுள் நுழைந்தான். மன்னனின் சிவபூஜை தவறி விடக் கூடாது என்பதற்காக,பெருமாள் அவனுக்கு மூன்றே முக்கால் நாழிகை நேரம் சிவபெருமானாக காட்சி தந்து, சிவபூஜை செய்ய அருளினார. பெருமாள், உபரிசரவசுக்கு திருநீறு அணிந்து சிவலிங்கமாக காட்சி கொடுத்ததைத்தான் இத்தளத்தில், திருநீரணி விழாவாகக் கொண்டாடுகிறார்கள். இத்தலத்தில் கருடன் இரண்டு கரங்களையும் கட்டிக்கொண்டு காட்சியளிக்கிறார். இத்தகைய காட்சி வேறு எந்த தலத்திலும் காண முடியாது.
சௌரிராஜ பெருமாள் கோயில்
மும்மூர்த்தியாக தரிசனம் தரும் பெருமாள்
திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் ஆலயத்தில் நடைபெறும் வைகாசி பிரும்மோற்சவத்தின் ஏழாம் நாளன்று, பெருமாள் மும்மூர்த்தியாக தரிசனம் தருகின்றார். முதலில் பெருமாளாகவும, அன்றிரவு பிரம்மாகவும், விடியற்காலையில் சிவனாகவும் காட்சி தருகிறார். வேறு எந்த திவ்யதேசத்திலும் இப்படியொரு திருவிழா நடைபெறுவதில்லை.
ரங்கநாதர் கோவில்
ஸ்ரீரங்கநாதரின் துலுக்க நாச்சியார்
கி.பி. 1331-ல் மாலிக்காபூர் படையெடுப்பின்போது, ஸ்ரீரங்கநாதரின் விக்கிரகம் பக்தர்களால் வெளியே எடுத்துச் செல்லப் பட்டது, ஸ்ரீரங்கநாதரின் அந்த விக்கிரகமானது, இரண்டு வருடங்கள் டெல்லியில் இருந்ததாக வரலாறு. அப்போது ஸ்ரீரங்கநாதரின் அழகில் மயங்கி, அவருக்காகத் தன் உயிரையே கொடுத்த தில்லி சுல்தானின் மகளுக்காக, ஆலயத்தில் ஓர் இடம் அளித்துள்ளார்கள். துலுக்க நாச்சியார் என்ற பெயரால் அழைக்கப்படும், அவளுக்காக ஸ்ரீ ரங்கநாதர், ரொட்டி, வெண்ணெய், பருப்பு, கிச்சடி ஆகிய வட இந்திய உணவு வகைகளை நைவேத்தியமாக ஏற்கிறார்.
பார்த்தசாரதி கோவில்
குடும்பத்துடன் கிருஷ்ணர் காட்சி தரும் திவ்ய தேசம்
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோவிலில்,மனிதர்கள் குடும்பத்தினருடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக பெருமாள் அருள்கிறார். மூலஸ்தானத்தில் வேங்கடகிருஷ்ணர் அருகில் ருக்மணி தாயார், மார்பில் மகாலட்சுமி ஆகியோர் உள்ளனர்.இந்தப் பெருமாள் ,அர்ஜுனனுக்கு உதவியாக வந்த கிருஷ்ணாவதாரம் என்பதால்,அருகில் ருக்மிணி தாயார் இருக்கிறாள்.வலப்புறத்தில் அண்ணன் பலராமர்,இடதுபுறத்தில் தம்பி சாத்யகி,மகன் பிரத்யும்னன் மற்றும் பேரன் அநிருத்தன் ஆகியோரும் இருக்கின்றனர்.
மகாபாரதப்போரில் பீஷ்மர் எய்த அம்புகளை பார்த்தனுக்குத் தேரோட்டியாக நின்று தாமே தாங்கியதால் ஏற்பட்ட வடுக்களை உற்சவர் திருமுகத்தில் இன்றும் தரிசிக்கலாம்.இந்த ஐதீகத்தின் அடிப்படையில் பெருமாள் ஸ்ரீ பார்த்தசாரதி என்றழைக்கப்படுகிறார்.ஆலயமும் அப்பெயரில் அழைக்கப்படுகிறது.
காயங்களுடன் இருப்பதால் இவருக்கான நைவேத்யத்தில்,நெய் அதிகம் சேர்க்கப்படுகிறது.மிளகாய் போன்ற காரமான பொருட்கள் சேர்ப்பதில்லை.
விஜயராகவப் பெருமாள் கோயில்
ஸ்ரீதேவி பூதேவி இடம்மாறி எழுந்தருளி இருக்கும் திவ்ய தேசம்
பொதுவாக பெருமாளுக்கு வலது பக்கம் ஸ்ரீதேவியும் இடது பக்கம் ஶ்ரீபூமிதேவியும் காட்சி கொடுப்பது வழக்கம்.ஆனால் காஞ்சிபுரம் அருகிலுள்ள திருப்புட்குழி திவ்யதேசத்தில்,பெருமாளுக்கு வலது பக்கம் இருக்க வேண்டிய ஶ்ரீதேவி இடது புறத்திலும், இடது புறம் இருக்க வேண்டிய ஶ்ரீபூமி தேவி வலது புறத்திலும் எழுந்தருளியுள்ளனா்.
சத்திய மூர்த்தி பெருமாள் கோவில்
ஸ்ரீரங்கம் ரங்கநாதரை விட பெரிய மூலவர்
புதுக்கோட்டை அருகில் உள்ள திவ்ய தேசமான திருமயம் ஆலயத்தின் மூலவர் திருமெய்யர் பெருமாள்,ஸ்ரீரங்கம் ரங்கநாதரை விட மிகப் பெரிய உருவம் உடையவர்.திருமயம் பாண்டிய நாட்டிலுள்ள 18 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்
காமாட்சியம்மன் கோவில்
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் அமைந்துள்ள திவ்ய தேசம்
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கள்வனூர் பெருமாள் கோவில், காஞ்சி காமாட்சியம்மன் கோயிலின் உட்பிராகாரத்தில் சந்நிதியாக உள்ளது.108 வைணவ திவ்ய தேசங்களில் 14 திவ்ய தேசங்கள் காஞ்சிபுரத்திலேயே உள்ளன.
ஸ்ரீவைகுண்டநாதன் கோயில்
யாளி வாயில் அனுமன்
108 திவ்விய தேசங்களில்,தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நவத்திருப்பதிகளும் அடங்கும்.அவற்றில் ஒன்றான ஸ்ரீவைகுண்டம் தலத்து ஆலயத்தில் திருவேங்கடமுடையான மண்டபம் என்றழைக்கப்படும் மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தின் இரண்டு புறங்களிலும் ஒன்பது தூண்களில் யாளிகள் தாணப்படுகின்றன.அவற்றில் ஒரு தூணிலுள்ள யாளியின் வாயில் அனுமன் காட்சியளிக்கின்றார்.
லட்சுமி நரசிம்மர் கோவில்
அரிய தோற்றமுள்ள நரசிம்மர்
திண்டிவனம் லட்சுமி நரசிம்மர் ஆலயத்திலுள்ள மூலவர் தோற்றம் மிகவும் அரியதான ஒன்றாகும். மூலவர் நரசிம்மரின் இடது தொடையில் அமர்ந்துள்ள லட்சுமி தாயார்அவரை இரு கைகளும் கூப்பி வணங்கிய நிலையிலுள்ளார்.இந்த ஆலயத்தில் அனுமன் சங்கு சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களோடு இருப்பதும் ஒர் அரிய காட்சியாகும்.இந்த ஆலயம் 1300 ஆண்டுகளுக்கும் மேலாக முற்பட்டது்.
உலகளந்த பெருமாள் கோயில்
பெருமாள் சங்கு சக்கரத்தை வி்த்தியாசமாக ஏந்தியிருக்கும் தலம்
எல்லா வைணவத் தலங்களிலும் பெருமாள் சக்கரத்தை வலது கையிலும் சங்கை இடது கையிலும் ஏந்தியிருப்பார்.ஆனால் 108 திவ்ய தேசங்களளில் ஒன்றான திருக்கோவிலூரில்,திரிவிக்கிரமன் என்ற பெயரோடு, காலை உயர்த்தி உலகளந்த கோலத்தில் காட்சித் தரும் பெருமாள், வித்தியாசமாக சக்கரத்தை தனது இடது கையிலும் சங்கை வலது கையிலும் தரித்திருக்கிறார்.
ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில்
பெருமாள் பாதணிகள்
ஸ்ரீவில்லிப்புக்தூரிலிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்திலுள்ள திருவண்ணாமலை என்னும் ஊரில் ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆலயம் உள்ளது.இவர் ஆண்டாளை திருமணம் செய்வதற்காக திருப்பதியிலிருந்து வந்து இங்கு எழுந்தருளியிருக்கிறார்.இவர் திருப்பதி பெருமாள் போலவே தோற்றமளிக்கிறார்.
இப்பெருமாளுக்கு நேர்த்திக் கடனாக மிகப் பெரிய தோல் பாதணிகள் செய்து வந்து கோவில் பிரகாரத்தில் வைக்கிறார்கள்.சில நாட்களில் இப்பாதணிகள் பயன்படுத்தப்பட்டதைப் போல தேய்ந்த நிலையில் காணப்படுகின்றன.பெருமாளே இப்பாதணிகளைப் பயன்படுத்தியுள்ளார் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.அதனால் இவற்றைத் தங்கள் தலையிலும் உடம்பிலும் ஒற்றிக் கொள்கிறார்கள்.
அனந்தபத்மநாபன் கோவில்
திருவனந்தபுரம் அனுமன் வெண்ணெய் காப்பு
திருவனந்தபுரம் அனந்தபத்மநாபன் ஆலயத்தில் மூலவர் எதிரில் ஆஞ்சநேயர் காட்சியளிக்கிறார். இவருக்கு பக்தர்கள் வெண்ணெய் சாற்றி வழிபடுகிறார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இவர் மீது சாற்றப்படும் வெண்ணெய் எவ்வளவு நாட்களானாலும் உருகுவதுமில்லை.வெய்யில் காலங்தளில் கெட்டுப் போவதுமில்லை.
ரங்கநாதர் கோவில்
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திவ்யதேசம்
வைணவர்களுக்கு கோவில் என்றால் அது ஸ்ரீரங்கத்தைத்தான் குறிக்கும்.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் , ‘பூலோக வைகுண்டம்’ என்ற பெருமை பெற்றது. வைணவர்களின் 108 திவ்ய தேசங்களில்,ஸ்ரீரங்கம் முதன்மைத் தலமாகப் போற்றப்படுகின்றது.பன்னிரு ஆழ்வார்களில் 11 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஒரே திவ்ய தேசம் என்ற தனிச் சிறப்பைக் கொண்டது ஸ்ரீரங்கம்.