ஆடி கிருத்திகை சிறப்புகள்

ஆடி கிருத்திகை சிறப்புகள்

முருகப்பெருமான், சூரனை அழிக்க சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக அவதரித்த நாள்தான் கிருத்திகை. சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் பிறந்த ஆறு அக்னிப் பொறிகள், ஆறு குழந்தைகளாக சரவணப் பொய்கையில் சேர, அவற்றைத் வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள். அந்த கார்த்திகை பெண்களை கௌரவிக்கும் வகையில் அவர்கள் ஆறு பேரும் 'கார்த்திகை' நட்சத்திரமாக மாறி அன்றைய தினத்தில் முருகப்பெருமானை வழிபடும் வழக்கம் ஏற்பட்டது.

அனைத்து கிருத்திகை நாட்களுமே முருகனுக்கு உகந்தவை என்றாலும் தை கிருத்திகை, ஆடி கிருத்திகை, கார்த்திகை மாத கிருத்திகை என்ற மூன்று கிருத்திகைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.

ஆடி கிருத்திகையன்று, திருத்தணியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில், பழனியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில் மற்றும் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் போன்ற முக்கிய முருகன் கோவில்களில் மாபெரும் கொண்டாட்டங்கள் நடைபெறும். கோவில்கள் மலர்கள், விளக்குகள் மற்றும் வண்ணமயமான கோலங்களால் அலங்கரிக்கப்படுகின்றன.

'ஆடிக் கிருத்திகையில் ஆறுமுகனை வழிபடத் தேடிவரும் நன்மை' என்பது ஆன்றோர் வாக்கு. ஆடிக் கார்த்திகை நட்சத்திர நன்னாளில் ஆறுமுகனை வணங்கினால், கர்ம வினைகள் நீங்கும்; செவ்வாய் தோஷம் அகலும்; திருமணத் தடைகள் நீங்கும். சொந்த வீடு, வாகன வசதி, தொழில் அபிவிருத்தி போன்றவை சித்திக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஆடி கிருத்திகை அன்று, பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு, பால் குடம், காவடி எடுத்து முருகனை வழிபடுகின்றனர். முருகப் பெருமானின் வேல் வழிபடப்படுகிறது. மற்றும் பக்தர்கள், தங்களின் பக்தியின் அடையாளமாக வேல் ஏந்துகின்றனர்.

Previous
Previous

ஈரோடு கோட்டை பெரிய மாரியம்மன் கோவில்

Next
Next

உடுமலைப்பேட்டை மாரியம்மன் கோவில்