ஈரோடு கோட்டை பெரிய மாரியம்மன் கோவில்

பிள்ளை வரம் தரும் மாரியம்மன்

ஈரோடு நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது, ஈரோட்டுக்கு காவல் தெய்வமாக விளங்கும் கோட்டை பெரிய மாரியம்மன் கோவில். இரண்டு ஓடைகளுக்கு நடுவே அமைந்ததால், இந்த ஊருக்கு ஈரோடை என்ற பெயர் இருந்தது. அதுவே, மருவி 'ஈரோடு' என்றாகியது. மாமன்னர்கள் கோட்டை கட்டி ஆண்டதால், கோவில் இருக்கும் பகுதிக்கு கோட்டை என்றே பெயர். அம்மனுக்கும் கோட்டை மாரியம்மன் என்று அடைமொழி ஆகிவிட்டது. இக்கோவில் 1200 ஆண்டுகள் பழமையானது. கருவறையில், கரங்களில் நாக பந்தத்துடன் உடுக்கை, பாசம், கபாலம், கத்தி ஆகியவற்றுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள் பெரிய மாரியம்மன்.

ஈரோட்டில் கோட்டை பெரிய மாரியம்மன், சின்னமாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன் திருக்கோவில் என மூன்று மாரியம்மன் திருக்கோவில்கள் உள்ளன. எல்லாவற்றுக்கும் தலைவியாக, கோட்டை பெரிய மாரியம்மன் அருள்பாலிக்கிறாள். கொங்கு மண்டலத்தின் 24 நாடுகளுக்கும் காவல் தெய்வமாக வீற்றிருக்கிறார் பெரிய மாரியம்மன்.

உலகம் எங்கும் உள்ள அனைத்து உயிரினங்கள், மரம் செடி கொடிகள் என்று எல்லாவற்றுக்கும் தண்ணீரை வாரி வழங்குவது மழை. வேறுபாடுகள், பேதங்கள் ஏதுமின்றி மழை தனது தண்ணீரை அளிப்பதுபோல, மக்களின் மனங்களில் வேறுபாடுகள் இருந்தாலும், அவற்றை எல்லாம் கருதாது, வரங்களை அள்ளித்தரும் தாயாக இருப்பவர் மாரியம்மன்.

பக்தர்கள் பெரிய மாரியம்மனை, பிள்ளை வரம் தரும் அம்மன் என்பர். மகப்பேறு வேண்டுவோர் வெள்ளிக்கிழமை கோவிலுக்கு வந்து வணங்கி, அர்ச்சனை செய்து, வழிபட்டு வந்தால், மகப்பேறு வாய்க்கும் என்பது இக்கோவிலின் சிறப்பம்சமாகும். அம்மை நோய் வராமல், பெரிய மாரியம்மன் அருள்பாலிக்கின்றார். நோய் வந்தோர்க்கு விரைவில் சுகம் அளிக்கிறார்.

ஆடி மாத செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வெளியூர் பக்தர்களும் இங்கு வந்து அம்மனை வழிபட்டு வருகின்றனர். நேர்த்திக் கடனாக கூழ் காய்ச்சி அம்மனை வேண்டி வருவோருக்கு வழங்குவது, மா விளக்கு போடுதல், பூக்கள் மற்றும் உப்பினை படைத்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

மஞ்சள் நகராம் ஈரோடு முழுமையும் மஞ்சள் நிறமாக மாறும் திருவிழா

நேர்ச்சைக் கடனாக வீசும் உப்பு, தார் சாலையையே வெள்ளை நிறமாக மாற்றும் திருவிழா

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் முதல் செவ்வாய்க் கிழமை விழா தொடங்கும். இரவு பூச்சாற்றுதல் நடை பெறும். தொடர்ந்து கம்பம் நடுதல், மாவிளக்கு, பொங்கல் வைத்தல், கரகம் எடுத்தல், தேரோட்டம் என்று மிக விமரிசையாகக் கொண்டாடப்படும். மூன்று மாரியம்மன் கோவில்களிலும் இணைந்து நடக்கும் இத்திருவிழாவில், பெண்கள் கூட்டம் அலைமோதும். இங்கு, கம்பம்-தேவியின் அம்சமாகக் கருதப்படுகிறது. கம்பம் நட்டதும், நாளும் பெண்கள் மஞ்சள் நீரை விடுவர். அது தேவியை அபிசேகம் செய்வது போலாகும். பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் பிடுங்கும் விழா, மஞ்சள் நீராட்டு விழா மிக சிறப்பு மிக்கது. மூன்று கோவில்களில் இருந்தும் கம்பத்தை பிடுங்கி ஊர்வலமாக நகரில் வீதி உலா நடைபெறும். அப்போது பக்தர்கள் நேர்ச்சைக் கடனாக வீசும் உப்பு, தார் சாலையையே வெள்ளை நிறமாக மாற்றும். இறுதியில் கம்பம், வாய்க்காலில் விடப்படும். அப்போது, பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீரை ஊற்றி மகிழ்வர். மஞ்சள் நகராம் ஈரோடு முழுமையும் மஞ்சள் நிறமாக மாறும் காட்சி அன்று நடைபெறும். . அது, வடநாட்டு 'ஹோலி' என்ற பண்டிகையை நினைவூட்டும்.

பெரிய மாரியம்மன் திருவிழா என்பது ஈரோடு நகரத்தின் மிகப் பெரிய திருவிழாவாகும். பொங்கல் துவங்கி மஞ்சள் நீராட்டு விழா வரை இளைஞர்களும், பெரியவர்களும், மகளிரும் மாறுவேடமணிந்து கோவிலுக்கு வந்து வழிபாடு செய்வது சிறப்பம்சமாகும்.

 
Previous
Previous

மரக்காணம் வரதராஜப் பெருமாள் கோவில்

Next
Next

ஆடி கிருத்திகை சிறப்புகள்