ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்

அனுமனை விழுங்கிய முதலை சிற்பம்

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஒரு சிற்பக்கலை பொக்கிஷமாகவும் விளங்குகின்றது. இக்கோவிலில் இருக்கும் மண்டபத் தூண்கள், சிற்பங்கள், வேணுகோபாலன் சன்னதி சிற்பங்கள் நம் முன்னோர்கள் சிற்பக் கலையில் அடைந்திருந்த மகோன்னத நிலையையும், பெருமையையும் உணர்த்துகின்றது.

இக்கோவில் சேசராயர் மண்டபத்தில் பல அழகிய சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. அம்மண்டபத்து தூண் ஒன்றில், முதலை ஒன்று அனுமனை விழுங்கும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் சுவாரசியமான, ஒரு ராமாயண நிகழ்ச்சி உள்ளது

ராமாயணத்தில், ராவணன் மகனான இந்திரஜித்துக்கும், லட்சுமணனுக்கும் இடையே போர் நடந்தது இந்திரஜித் ஏவிய அஸ்திரத்தால் வட்சுமணன் மயங்கி விழுந்தார். இலங்கை அரச மருத்துவரான சுசேனர் இமயமலையில் விளையும் சஞ்சீவினி என்னும் மூலிகையை கொண்டு வந்தால் குணப்படுத்த முடியும் எனத் தெரிவித்தார். உடனடியாக இமயமலைக்கு விரைந்தார் அனுமன். இதையறிந்த ராவணன், தடைகளை ஏற்படுத்த அவற்றை அனுமன் முறியடித்தார். இமயமலைக்கு காலநேமி என்னும் அசுரனை அனுப்பினான் இந்திரஜித். காலநேமி மாரீசனின் மகன் ஆவார். சஞ்சீவினி மூலிகை உள்ள பகுதியை அனுமன் அடைந்த போது, அங்கு முனிவர் வடிவில் நின்றிருந்தான் காலநேமி. முனிவரைக் கண்ட அனுமன் வணங்க, அருகில் இருந்த குளத்தைக் காட்டி, இதில் நீராடி வந்து ஆசி பெற்றுக்கொள். உன் எண்ணம் ஈடேறும் என்றான். அனுமன் நீராடிய போது காலநேமியால் ஏவப்பட்ட மாய முதலை அவரை விழுங்கியது. அதன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு அனுமன் வெளியேறினார். அத்த முதலை ஒரு தேவனாக மாறியது. "என் பெயர் தான்யமாகி. சாபத்தால் முதலையாக குளத்தில் இருந்தேன். உங்களால் சாப விமோசனம் பெற்றேன். நீங்கள் முனிவர் என்று நினைத்துக் கொண்டிருப்பவர் ஒரு அசுரன். முனிவர் வேடத்தில் உங்களை கொல்ல திட்டம் தீட்டி இருக்கின்றான் என்று காலநேமியின் சதித் திட்டத்தை அனுமனுக்கு எடுத்துரைத்து, காலநேமியைக் கொன்று விடிவதற்குள் சஞ்சீவினிச் செடிகள் பறித்து லட்சுமணனைக் காக்குமாறு தேவன், அனுமனிடம் கூறினான். அனுமனும் காலநேமியைக் கொன்று சஞ்சீவினி மூலிகைச் செடிகள் வளரும் மலையை கொண்டு வந்து லட்சுமணனின் மூர்ச்சையை தெளிய வைத்தார். ராமாயணத்தின் மிக முக்கிய திருப்புமுனையாக விளங்கும் இந்த நிகழ்வுகள் அனைத்தும் சேசராயர் மண்டபத்தில் உள்ள தாணில் அழகிய சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளது.

Read More
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
பெருமாள் Alaya Thuligal பெருமாள் Alaya Thuligal

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்

கம்பரின் ராமாயணத்தை கேட்டு தலையாட்டி ரசித்த நரசிம்மர்

கம்பர் நரசிம்மரின் தீவிர பக்தர். அவர் தான் எழுதிய ஶ்ரீராமகாவியம் நூலை ஸ்ரீரங்கம் கோவிலில், நரசிம்மர் சன்னதி எதிரில் அரங்கேற்ற நினைத்தார். ஸ்ரீரங்கம் கோவிலின் வேத பண்டிதர்கள் மற்றுமுள்ள புலவர்களிடம் தன்னுடைய வேண்டுதலை முன்வைத்தார். அதற்கு அவர்கள் தில்லை சன்னதியில் இருக்கும் மூவாயிரம் தீட்சிதர்களிடம் அனுமதி பெற்று, சான்று ஓலையை வாங்கி வந்தால் இங்கு நீங்கள் அரங்கேற்ற அனுமதிக்கிறோம் என்றார்கள்.

தில்லை சென்ற கம்பர். அங்கிருந்த தீட்சிதர்களிடம் ஸ்ரீரங்கம் கோவிலைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட வேண்டுகோளைக் கூறி தாம் இயற்றிய ராமகாவியத்தைச் சரிபார்த்து சான்று தர வேண்டும் என்று கேட்டார். அவர்களோ, நாங்கள் மூவாயிரம் தீட்சிதர்களும் ஒன்றாகக் கூடுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. பலர் பல இடங்களில் இருப்பார்கள். ஒருவர் குறைந்தாலும் ஓலையில் முத்திரை பதிக்கப்படாது. ஆகவே வீண் முயற்சி செய்யாதீர்கள். உமது ஊருக்கே சென்றுவிடுங்கள் என்றனர்.

கம்பர் மீண்டும் ஸ்ரீரங்கம் திரும்பினார். தன்னுடைய ராமகாதையை அரங்கேற்ற முடியவில்லையே என்று வருத்தப்பட்டு பாடல்கள் சிலவற்றை, அந்தாதிகளாக எழுதினார். ஒருநாள் இரவு நித்திரையில் கம்பனின் கனவில் கடவுள் தோன்றி உடனே தில்லை செல்க என்றார். விழித்த கம்பர் உடனே தில்லை விரைந்து சென்றார். அங்கு மூவாயிரம் தீட்சிதர்களும் ஓர் இடத்தில் ஒன்று கூடி இருப்பதை கண்டார் கம்பர். ஆச்சரியத்துடன் அருகில் சென்ற போது ஒரு தீட்சிதரின் மகன் பாம்பு தீண்டி உடனே இறந்ததால் துக்கம் விசாரிக்க அனைவரும் ஒன்று சேர்ந்து இருக்கின்றனர் என்றும் தெரிந்து கொண்டார்.

கம்பராமாயணம் நாக படலம் பாடலைப் பாடி, பாம்பு தீண்டிய சிறுவனை உயிர்ப்பித்த கம்பர்

இறைவனின் அற்புதத் திருவிளையாடலை எண்ணி மகிழ்ந்து தாம் எழுதிய ஶ்ரீராமகாதையின் ஓலைக் கட்டிலிருந்து நாகபடலம் பாடல்களின் ஒரு ஓலைச் சுவடியை எடுத்து இறந்து கிடந்த அச்சிறுவனின் நெஞ்சில் வைத்து அப்படியே அப்பாடலை இறைவனை நினைத்துக் கொண்டு பாடினார். உடனே அச்சிறுவன் உயிர் பெற்று எழுந்தான். கூடியிருந்த தில்லை அந்தணர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இவர் பாடலின் ஆற்றலைக் கண்ட அனைவரும், ஒரே முகமாக ஒப்புக்கொண்டு அரங்கேற்றத்திற்கான ஒப்புதல் ஓலை அளித்தனர். அதை வாங்கிக் கொண்டு ஸ்ரீரங்கம் திரும்பிய கம்பர் ஸ்ரீரங்கம் கோவில் தாயார் சன்னிதிக்கு எதிரிலுள்ள மண்டபத்தில் வீற்றிருக்கும் தனது இஷ்ட தெய்வமான ஶ்ரீநரசிம்மர் பெருமாள் முன்பு தனது ராமகாவியத்தை அரங்கேற்ற முடிவு செய்தார்.

கர்ஜனை செய்து, தலையையாட்டிய நரசிம்மர்

ஶ்ரீ ராமகாதையைக் கேட்ட ஸ்ரீரங்கத்துப் புலவர்கள் வால்மீகி எழுதிய நூலான ராமாயணத்தில் ஹிரண்ய வதைப் படலம் இல்லை. ஆனால் நீங்கள் எழுதி இருக்கின்றீர்கள். ஆகவே இது ராமாயணத்தோடு சேராது என்பதால் இங்கே அரங்கேற்றம் செய்ய முடியாது என்று சொல்லி விட்டார்கள். அதற்கு கம்பர் தமக்கு இறைவனே அடி எடுத்து கொடுத்து எழுத வைத்திருப்பதால், அதைத் தன்னால் மாற்ற இயலாது என்றும், உங்களுடைய சந்தேகத்திற்கு இறைவன் தான் பதில் சொல்லி அருள வேண்டும் என்றும் கூறினார். அதற்கு அவர்கள் அப்படி என்றால் ஹிரண்ய வதைப் படலத்தை மட்டும் முதலில் அரங்கேற்றுங்கள். இறைவன் அடியெடுத்துக் கொடுத்தது உண்மையாக இருந்தால் இறைவனே வந்து சாட்சி சொல்லட்டும். அதன்பிறகு நாங்கள் முழு ராமகாதையை ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறினார்கள். உடனே கம்பர் ஸ்ரீநரசிம்ம பெருமானை மனதில் வைத்து வேண்டிக் கொண்டு ஹிரண்ய வதைப் படலத்தை ஆரங்கேற்றம் செய்ய ஆரம்பித்தார்.

பாடலின் நடுவே அசுரன் ஹிரண்யன் "ஆரடா சிரித்தார்" என்ற கேட்பது போலக் காட்சி வரும் போது மண்டபத்தின் தூணில் இருந்த நரசிம்மர் கடகடவென பெரிய சிரிப்பொலியுடன் கர்ஜனை செய்து கம்பரின் கூற்று உண்மை என கூறி ஆமோதித்து தன்னுடைய தலையையாட்டினார். இந்த அதிசயத்தை, பயத்தோடு கண்ட புலவர்கள் யாவரும் கம்பரின் ராமகாதையை ஏற்றுக்கொண்டனர். அங்கு சிரித்த ஶ்ரீ நரசிம்மரை, மேட்டழகிய சிங்கர் என்பதாக கூறுவார்கள். இவர் தாயார் சன்னிதி அருகில் தனி சன்னிதியில் இப்போதும் இருக்கிறார். இவரது கையில் சங்கு மட்டும் இருக்கிறது சக்கரம் இல்லை. இன்றும் ராமாயணம் அரங்கேற்றப் பட்ட இடமான இம்மண்டப மேடையைக் காணலாம்.

கம்பராமாயணத்தின் சிறப்புகள்

கம்பராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் ஆறு காண்டங்களையும், 118 படலங்களையும் உடையது. இதில் 10589 பாடல்கள் உள்ளன. தமிழிலக்கியத்தில் காப்பிய வளர்ச்சி, கம்பரின் காலத்தில் உச்சநிலையினை அடைந்தது என்பர். வால்மீகி ராமாயணம் கம்பராமாயணத்தின் மூலமாக இருந்தாலும், கம்பர் அவற்றை வரிக்குவரி மொழி பெயர்ப்பு செய்யவில்லை. அந்நூலில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும் அப்படியே இருந்தாலும் முழுமையாக வால்மீகி ராமாயணம் போல் கம்ப ராமாயணம் இயற்றவில்லை. வால்மீகி ராமாயணத்தில் இல்லாத ராமரின் உணவு பழக்கமும், ராவணனின் திறமையும், ராவணன் சீதையைத் தொடாமல் இருந்த நெறியையும் கம்பராமாயணத்தில் காணலாம். கம்பர் தனக்கே உரித்தான பாணியில் வால்மீகி ராமாயணத்தின் கருப்பொருள் சிதையாமல் தமிழ் மொழியில் இயற்றி உள்ளார். வடமொழி கலவாத தூய தமிழ்ச் சொற்களைத் தனது நூலில் கையாண்ட காரணத்தால் கம்பர் தொல்காப்பிய நெறி நின்றவர் என்று அழியாத ஓர் புகழினைப் பெற்றார்.

கம்பர் தனது ராமகாதையை தொல்காப்பிய நெறிப்படி வல்லினம் மெல்லினம் இடையினம் என்று காட்சிக்கு ஏற்ப தனித்தனியாக பிரித்து சந்தத்தோடு பாடல்களில் தமிழை பயன்படுத்திய பெருமைக்கு உரியவர் ஆவார். உதாரணமாக அரக்கி ஒருத்தி நடந்து வரும் காட்சியில் வல்லின எழுத்துக்களில் ஆரம்பித்து சந்தத்தோடு எழுதியிருப்பார். அழகான பெண் நடந்து வரும் காட்சியில் மெல்லின எழுத்துக்களில் ஆரம்பித்து சந்தத்தோடு எழுதியிருப்பார். குதிரை வரும் காட்சிகளில் குதிரையின் காலடி சத்தம் வருவது போல வார்த்தைகள் வைத்து சந்தத்தோடு எழுதியிருப்பார். அதனை படிக்கும் போது குதிரை சத்தம், ரிதத்துடன் வருவது போலவே இருக்கும்.

கம்பரின் காவியத்தை படித்த 14 மொழிகளில் அறிஞரான மகாகவி பாரதியார் தான் கண்ட கவிஞர்களில் கம்பரைப் போல் வள்ளுவரைப்போல் இளங்கோவைப்போல் வேறு யாரையும் கண்டதில்லை என்று இந்த மூன்று தலைசிறந்த கவிஞர்களில், கம்பரை முதலாவதாகக் குறிப்பிட்டு கூறுகிறார். 'கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்' என்று வழங்கும் மொழிகள் அவரது சிறந்த கவித்திறனைப் பறை சாற்றும். பாரதியார் தம் பாடலில் 'புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு' என்று போற்றியுள்ளார்.

Read More
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்

ஸ்ரீரங்கத்து பெரிய கருடாழ்வார்

ஸ்ரீரங்கத்தில் எல்லாமே பெரியவைதான். ராமரால் தொழப்பட்ட ஸ்ரீரங்கநாதர் பெரிய பெருமாள். கோவில் பெரிதென்பதால் பெரிய கோவில் ஆயிற்று. கோபுரம் ஆசியாவிலேயே பெரிது. இங்கிருந்த ஜீயரும் பெரிய ஜீயர், திருமதில்கள் பெரிது. தாயாருக்கு பெரிய பிராட்டி என்பது பெயர். வாத்தியத்திற்கு பெரிய மேளம். பட்சணங்களுக்கு பெரிய திருப்பணியாரங்கள் என்று பெயர். ஆண்டாளை வளர்த்தெடுத்து அரங்கனுக்கு மணமுடித்துக் கொடுத்து மாமனார் ஸ்தானம் வகிக்கும் ஆழ்வாரோ பெரிய ஆழ்வார். ஆழ்வார்களின் மங்களாசாசனங்களோ பெரிய மங்களாசாசனங்கள். 108 திவ்யதேசங்களில் 11 ஆழ்வார்களால் 247 பாக்களால் பெரிய மங்களாசாசனம் பெற்றவர் இப்பெருமாள்.

இந்த வரிசையில், ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் சன்னதி எதிரில் அமைந்துள்ள கருடாழ்வார், பிரம்மாண்டமாக 25 அடி உயரத்தில் காட்சி தருகிறார். இவ்வளவு பெரிய திருமேனியுடைய கருடாழ்வாரை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. இவர் எட்டு விதமான நாகாபரணம் அணிந்துள்ளார். இந்த சிலை இறகுகளை விரித்து பறக்க தயாராக உள்ளது போன்ற நிலையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த கருடாழ்வாருக்கு, 30 மீட்டர் நீளத்தில் வேட்டி அணிவிக்கின்றனர். இவருக்கு அபிஷேகம் கிடையாது. வியாழக்கிழமைகளில் இவருக்கு கொழுக்கட்டை பிரதானமாக படைக்கப்படுகிறது. இவரது சன்னதி முன்பு சுக்ரீவன், அங்கதன் இருவரும் துவார பாலகர்களாக இருப்பதும், மார்கழி திருவாதிரையில் இவருக்கு திருநட்சத்திர விழா எடுப்பதும் சிறப்பு. பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளால் ஏற்படும் பாதிப்பை நீக்குபவர் இவர் என்பது ஐதீகம்.

Read More
ஸ்ரீரங்கம்  ரங்கநாதர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்

ஸ்ரீரங்கநாதருக்கு, மாமனார் தீபாவளி சீர் அளிக்கும் சாளி உற்சவம்

தீபாவளி என்றால், மாமனார் மாப்பிள்ளைக்குச் சீர் செய்வது வழக்கம். அந்த வழக்கப்படி, தன் மகள் ஆண்டாளை ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு மணமுடித்து தந்த பெரியாழ்வார், தன் மாப்பிள்ளைக்கு தீபாவளி சீர் செய்யும் வைபவமானது ஸ்ரீரங்கம் கோவிலில் தீபாவளியன்று 'சாளி உற்சவம்' என்று கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீரங்கத்தில், ரங்கநாதர் ஒவ்வொரு வருடமும் தீபாவளிப் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார். தீபாவளிக்கு முந்தைய நாள் மாலை, மேள தாளங்கள் முழங்க, மூலவரான பெரிய பெருமாள் எண்ணெய் அலங்காரம் செய்து கொள்வார். கோவிலில் கைங்கரியம் செய்வோர்களுக்கும் அன்று பெருமாளின் சார்பாக எண்ணெய், சீகைக்காய் உள்ளிட்டவை வழங்கப்படும். அன்று இரவு, உற்சவரான நம்பெருமாளுக்கும் எண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்படும். அதன்பின், கோவிலில் எழுந்தருளியிருக்கும் ரங்கநாயகித் தாயார், ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் ஆகியோரின் சந்நதிகளுக்கெல்லாம் எண்ணெய், சீகைக்காய், மஞ்சள் உள்ளிட்டவற்றைப் பெருமாள், அர்ச்சகர் மூலம் அனுப்பி வைப்பார். தீபாவளித் திருநாளன்று அதிகாலையில் ரங்கநாயகித் தாயாருக்கும், ஆழ்வார் ஆச்சாரியார்களுக்கும் எண்ணெய் அலங்காரம் செய்யப்படும். அனைவரும் புத்தாடையும் மலர் மாலைகளும் அணிந்து கொள்வார்கள்.

காலை பத்து மணியளவில் நம்பெருமாள், சந்தனு மண்டபத்தில் எழுந்தருளித் திருமஞ்சனம் கண்டருள்வார். பின்னர் பெரியாழ்வார் தன் மாப்பிள்ளைக்கு தீபாவளி சீர் சமர்ப்பிப்பார். ஒவ்வொருவரும் தன் குருவுக்குச் செலுத்தப்படும் அதே மரியாதையை, தன் மாமனாருக்கும் செலுத்த வேண்டும் என்பது மரபு. அந்த வகையில், நம்பெருமாள் பெரியாழ்வாருக்கு மரியாதை செய்து, அவரிடமிருந்து தீபாவளிச் சீரைப் பெற்றுக் கொள்கிறார். பெரியாழ்வாரின் சார்பில், அரையர்கள் நம்பெருமாளின் திருவடிகளைச் சுற்றி நாணய மூட்டைகளைச் சீராக வைப்பார்கள். நாணய மூட்டைகளுக்குச் சாளி என்று பெயர். இதை ஜாலி (சாளி) அலங்காரம் என்பர். ஜாலி அலங்காரம் என்பது, ஆயிரம் ஒரு ரூபாய் நாணயங்களை இரண்டு புது கைலிகளில் மூட்டையாகக் கட்டி, பெருமாள் திருவடிகளில் சமர்ப்பிப்பது. நாணய மூட்டைகளை தீபாவளிச் சீராகப் பெரியாழ்வார் சமர்ப்பிப்பதால், 'சாளி உற்சவம்' என்று அழைக்கப்பட்ட இந்த உற்சவம், நாளடைவில் 'ஜாலி உற்சவம்' என்றாகிவிட்டது. வேத பாராயணமும் மங்கல வாத்தியங்களும் முழங்க இந்த வைபவம் நடைபெறும். தனது மாமனாரான பெரியாழ்வார் தனக்கு அளித்த இந்த தீபாவளிச் சீரை அனைவருக்கும் காட்டி, மாமனாரின் பெருமையைப் பறைசாற்றுவதற்காக அந்த நாணய மூட்டைகளோடு இரண்டாம் பிராகாரத்தில் நம்பெருமாள் வலம் வருவார். மாலையில் கிளி மண்டபத்துக்கு எழுந்தருளும் நம்பெருமாள் அங்கே காலைமுதல் காத்திருக்கும் ஆழ்வார் ஆச்சாரியார்களை ஒவ்வொருவராக அழைத்து, அவர்களுக்குப் புத்தாடை, சந்தனம், வெற்றிலைப் பாக்கு, புஷ்பங்கள், பழங்கள் உள்ளிட்டவற்றைத் தீபாவளிப் பரிசாகத் தந்து கௌரவிப்பார். இந்தத் திருக்காட்சியை தீபாவளித் திருநாளில் தரிசித்தால் ஆடை களுக்கும், பணவரவுக்கும் தட்டுப்பாடு உண்டாகாது என்பது நம்பிக்கை.

Read More
காவேரி அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

காவேரி அம்மன் கோவில்

காவேரி அன்னைக்கு நன்றி செலுத்தும் ஆடிப்பெருக்கு விழா

ஆடி மாதம் 18ம் தேதியை ஆடிப் பதினெட்டாம் பெருக்கு என்று தமிழக மக்கள் விமரிசையாக கொண்டாடுகிறார்கள்.பதினெட்டு என்ற எண் வெற்றியைக் குறிக்கும். மகாபாரதத்தில் 18 பர்வங்கள், பகவத்கீதையில் 18 அத்தியாயங்கள், சபரிமலையில் 18 படிகள் முதலானவை எல்லாம் இந்த அடிப்படையிலேயே அமைந்தன.

தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டு வரும் விழாக்களில், காவிரிக்கென பிரத்யேகமான விழாவாக ஆடிப்பெருக்கு விழா உள்ளது. பயிர் செழிக்க வளம் அருளும் காவேரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில்தான் இந்த ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை ஆற்றங்கரை மற்றும் நீர்நிலைகளின் கரைகளில் மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

ஆடிப்பெருக்கன்று காவேரிக்கரையில் இளம் பெண்களும், புதுமண தம்பதிகள் மற்றும் திருமணமான பெண்கள் புத்தாடை உடுத்திக் கொண்டு பழங்கள், அவல், ஊறவைத்த இனிப்பு கலந்த அரிசி, புதிய மாங்கல்ய மற்றும் மஞ்சள் கயிறு, காதோலை கருகமணி ஆகியவற்றை வைத்து மஞ்சள் மற்றும் மணலால் உருவாக்கப்பட்ட பிள்ளையார் முன் படையல் செய்து வழிபடுவார்கள். தாலி பாக்கியம் நிலைக்க சுமங்கலி பெண்கள் ஆடிப்பெருக்கு அன்று புது தாலி மாற்றிக் கொள்வர். இந்த நன்னாளில் புதுமண பெண்ணிற்கு தாலி பிரித்து கோர்ப்பர் . எந்த ஒரு புது மற்றும் நல்ல காரியங்களை ஆடிப்பெருக்கு அன்று ஆரம்பித்தால் , அந்த காரியம் மேலும் மேலும் பெருகும் என்பது ஐதீகம்.

காவேரித் தாயாருக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் அளிக்கும் சீர்வரிசைகள்

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் அமைந்துள்ளது காவேரி அம்மன் கோவில். இங்குதான் கீழ் இரு கரங்களில் புனித கலசம் தாங்கி, மேலிரு கரங்களில் அக்கமாலையும் மலர்ச் செண்டும் தாங்கி நின்ற கோலத்தில் அருளுகிறாள் காவேரி அன்னை.

காவேரி அன்னை, ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் தங்கையாக கருதப்படுகிறாள். ஆடியில் காவேரித்தாய் கருவுற்றிருப்பதாக ஐதீகம். எனவேதான் தனது தங்கையான காவேரி யை காண ஸ்ரீரங்கம் ரங்கநாதர், சீர்வரிசையுடன் ஆடிப்பெருக்கு அன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உள்ள படித்துறைக்கு எழுந்தருள்வார். அன்று ஸ்ரீரங்கம் கோவிலிலிருந்து காவேரித் தாயாருக்கு சீர்வரிசைகளை யானைமீது கொண்டு வருவார்கள். அந்தச் சீர்வரிசைகளில் விதவிதமான மங்கலப் பொருட் கள், மாலைகள், புதிய ஆடைகள் ஆகியவற்றுடன் தாலிப்பொட்டு ஒன்றும் இருக்கும். இதனை அங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாள் முன்னிலையில் அங்குள்ள காவேரித் தாயாருக்குப் படைத்து, காவேரி நதியில் சமர்ப்பிப்பார்கள்.

காவேரிக்கு பெருமாள் சீர்வரிசை அளிக்கும் காட்சியைக் கண்டால் `கோடி புண்ணியம்' கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்பின், பெருமாள் பல்லக்கில் ஏறி கோவிலை நோக்கிச் செல்வது வழக்கம். அன்று அம்மா மண்டபம் காவேரிப் படித்துறை விழாக்கோலம் காணும். பெருமாள் கோவிலில் நுழையும்போது, வெளியில் உள்ள ஆண்டாள் சந்நிதிக்கு முன் எழுந்தருள்வார். அங்கே ஸ்ரீஆண்டாளும் பெருமாளும் மாலை மாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த அற்புதமான காட்சியை ஆடிப் பதினெட்டு அன்று ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும்பொழுது, தம்பதியர் தரிசித்தால் வாழ்வில் வசந்தம் வீசும். கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

ராமபிரான் அசுரர்களை வதம் செய்த பாவம் நீங்க, காவேரியில் நீராடிய நாள் ‘ஆடிப்பெருக்கு' என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

பவானி கூடுதுறையில் ஆடிப்பெருக்கு விழா

தென்னிந்தியாவில் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது, பவானி கூடுதுறை. இங்குள்ள சங்கமேஸ்வரர் கோவில் ஆடிப்பெருக்கு அன்று அதிகாலையில் திறக்கப்படும். கூடுதுறையில் நீராடிவிட்டு பக்தர்கள், இறைவனை வழிபடுவார்கள். அம்மனுக்கு தேங்காய், பழம், பூ, காதோலை கருகமணி படைத்து ஆராதனை செய்வார்கள். பூஜையில் வைத்த மஞ்சள் சரடினை பெண்கள் கழுத்திலும், ஆண்கள் வலது கை மணிக்கட்டிலும் அணிந்து கொள்வர். இதனால் வீட்டில் மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை.

அட்சய திரிதியை தினத்தை விட, ஆடிப்பெருக்கு சிறப்பான நன்னாளாகும். இந்நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம். ஒருவர் செய்யும் நற்செயல்களால், எவ்வாறு புண்ணியம் பெருகுகிறதோ, அதுபோல் இந்த நாளில் தொடங்கும் எந்தக் காரியமும் நன்மை அளிக்கும் வகையிலேயே நிறைவு பெறும் என்பது நம்பிக்கை.

Read More
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்

ஸ்ரீரங்கம் கோவிலில் 'ஏழு' என்ற எண்ணிக்கையில் அமைந்த சிறப்பு அம்சங்கள்

108 வைணத் திருத்தலங்களுள் முதல் திருத்தலமாக திகழும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் 'ஏழு' என்ற எண்ணிக்கையில் அமைந்த பல சிறப்பு அம்சங்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.

01. ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் 'ஏழு பிரகாரங்களுடன்., ஏழு மதில்களை' கொண்டுள்ளது ஸ்ரீரங்கம் கோவில்.

02. ஏழு 'பெரிய' பெருமை உடைய

1) பெரிய கோவில்

2) பெரிய பெருமாள்

3) பெரிய பிராட்டியார்

4) பெரிய கருடன்

5) பெரியவசரம்.

6) பெரிய திருமதில்

7) பெரிய கோபுரம்

இப்படி அனைத்தும் 'பெரிய' என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில்.

03. ஸ்ரீரங்கம் அரங்கனாதருக்கு ஏழு நாச்சியார்கள்

1) ஸ்ரீதேவி

2) பூதேவி.

3) துலுக்க நாச்சியார்

4) சேரகுலவல்லி நாச்சியார்

5) கமலவல்லி நாச்சியார்

6) கோதை நாச்சியார்

7) ரெங்க நாச்சியார் ஆகியோர்

04. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் தங்க குதிரை வாஹனத்தில் எழுந்தருளுவார்

1) விருப்பன் திருநாள்

2) வசந்த உற்சவம்

3) விஜயதசமி

4) வேடுபரி

5) பூபதி திருநாள்

6) பாரிவேட்டை

7) ஆதி பிரம்மோத்சவம் ஆகியவை

05.ஸ்ரீரங்கம் கோவிலில் வருஷத்திற்கு ஏழு முறை (மாதங்கள்) நம்பெருமாள் திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார்

1) சித்திரை

2) வைகாசி

3) ஆடி

4) புரட்டாசி

5) தை

6) மாசி

7) பங்குனி

06. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் உற்சவத்தில் ஏழாம் திருநாளன்று வருஷத்திற்கு ஏழு முறை (மாதங்கள்) நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுவார்

1) சித்திரை

2) வைகாசி

3) ஆவணி

4) ஐப்பசி

5) தை.

6) மாசி

7) பங்குனி

07. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் நவராத்திரி உற்சவத்தில் ஏழாம் திருநாளன்று ஸ்ரீரங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும்.

08. தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும் (30 நாட்களும்) தங்க குடத்தில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும்.

09. ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். 'ராமாவதாரம் ஏழாவது' அவதாரமாகும்.

10. இராப்பத்து ஏழாம் திருநாளன்று நம்பெருமாள் திருகைத்தல சேவை நடைபெறும்.

11. ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும்.

1) கோடை உற்சவம்

2) வசந்த உற்சவம்

3) ஜேஷ்டாபிஷேகம்., திருப்பாவாடை

4) நவராத்திரி

5) ஊஞ்சல் உற்சவம்

6) அத்யயநோத்சவம்

7) பங்குனி உத்திரம்

12. பன்னிரண்டு ஆழ்வார்களும் ஏழு சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள்.

1) பொய்கையாழ்வா, பூதத்தாழ்வார், பேயாழ்வார்

2) நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், மதுரகவியாழ்வார்

3) குலசேகராழ்வார்

4) திருப்பாணாழ்வார்

5) தொண்டரடிப் பொடியாழ்வார்

6) திருமழிசையாழ்வார்

7) பெரியாழ்வார்., ஸ்ரீஆண்டாள்

13. இராப்பத்து 'ஏழாம் திருநாள்' நம்மாழ்வார் பராங்குச நாயகி அலங்காரத்தில் வருவதால் அன்று மட்டும் ஸ்ரீஸ்தவம் மற்றும் ஸ்ரீகுணரத்ன கோசம் சேவிக்கப்படும்

14. பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள இடமான தென் திசையில் 'ஏழு கோபுரங்கள்' உள்ளன.

1) நாழிகேட்டான் கோபுரம்

2) ஆர்யபடால் கோபுரம்

3) கார்த்திகை கோபுரம்,

4) ரங்கா ரங்கா கோபுரம்

5) தெற்கு கட்டை கோபுரம் – I

6) தெற்கு கட்டை கோபுரம் – II

7) ராஜகோபுரம்

15. ஏழு உற்சவத்தில் குறிப்பிட்ட மண்டபங்களை தவிர மற்ற மண்டபங்களுக்கு பெருமாள் எழுந்தருள மாட்டார்.

1) வசந்த உற்சவம் ~ நீராழி மண்டபம்

2) சங்கராந்தி ~ சங்கராந்தி மண்டபம்

3) பாரிவேட்டை ~ கனு மண்டபம்

4) அத்யயநோற்சவம் ~

5) பவித்ர உற்சவம் ~ பவித்ர உற்சவ மண்டபம்.

6) ஊஞ்சல் உற்சவம் ~ ஊஞ்சல் உற்சவ மண்டபம்.

7) கோடை உற்சவம் ~ நாலுகால் மண்டபம்

16. ஏழு சேவைகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கண்டுகளிக்கும் சேவைகளாகும்.

1) பூச்சாண்டி சேவை.

2) கற்பூர படியேற்ற சேவை.

3) மோகினி அலங்காரம்., ரத்னங்கி சேவை.

4) வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாஹனம்.

5) உறையூர்., ஸ்ரீரங்கம் மற்றும் ராமநவமி சேர்த்தி சேவை.

6) தாயார் திருவடி சேவை.

7) ஜாலி சாலி அலங்காரம்

17. திருக்கோயில் வளாகத்தில் உள்ள ஏழு மண்டபங்களில் நம்பெருமாள் ஒரு நாள் மட்டுமே எழுந்தருள்வார்

1) நவராத்ரி மண்டபம்.

2) கருத்துரை மண்டபம்

3) சங்கராந்தி மண்டபம்,

4) பாரிவேட்டை மண்டபம்

5) சேஷராயர் மண்டபம்

6) சேர்த்தி மண்டபம்.

7) பண்டாரம் ஆஸ்தான மண்டபம்

18. திருக்கோவிலில் உள்ள ஏழு பிரகாரங்களிலும் பெருமாளின் ஏழு திருவடிகள் உள்ளன.

19. ஏழு பிரகாரங்களிலும் ஏழு திருமதில்கள் அமையப் பெற்றுள்ளன.

20. திருக்கோயில் வளாகத்தில் ஏழு ஆச்சார்யர்களுக்கும் தனி சன்னதி உள்ளது

1) ராமானுஜர்

2) பிள்ளை லோகாச்சாரியார்

3) திருக்கச்சி நம்பி

4) கூரத்தாழ்வான்

5) வேதாந்த தேசிகர்

6) நாதமுனி

7) பெரியவாச்சான் பிள்ளை

21. சந்திர புஷ்கரிணியில் ஆறு முறையும், கொள்ளிடத்தில் ஒருமுறையும் இப்படியாக ‘ஏழு முறை’ சின்ன பெருமாள் தீர்த்தவாரி கண்டருள்வார்

1) விருப்பன் திருநாள் ~ சித்திரை மாதம்

2) வசந்த உற்சவம் ~ வைகாசி மாதம்.

(3) பவித்ரோத்சவம் ~ ஆவணி மாதம்

4) ஊஞ்சல் உற்சவம் ~ ஐப்பசி மாதம்

5) அத்யயன உற்சவம் ~ மார்கழி மாதம்

6) பூபதி திருநாள் ~ தை மாதம்

7) பிரம்மோத்சவம் ~ பங்குனி மாதம்

22. நம்பெருமாள் மூன்று முறை எழுந்தருளும் ஏழு வாஹனங்கள்

1) யானை வாஹனம் ~ சித்திரை, தை, மாசி

2) தங்க கருடன் வாஹனம் ~ சித்திரை, தை, பங்குனி

3) ஆளும் பல்லக்கு ~ சித்திரை, தை, பங்குனி

4) இரட்டை பிரபை ~ சித்திரை, மாசி, பங்குனி

5) சேஷ வாஹனம் – சித்திரை, தை, பங்குனி

6) ஹனுமந்த வாஹனம் – சித்திரை, தை, மாசி

7) ஹம்ச வாஹனம் ~ சித்திரை, தை, மாசி

23. மாசி மாதம் நடைபெறும் திருப்பள்ளியோடம் திருவிழாவில் நம்பெருமாள் ஏழு வாஹனங்களில் மட்டும் உலா வருவார்.

24. கற்பக விருட்சம்.,

ஹனுமந்த வாஹனம்.,

சேஷ வாஹனம்.,

சிம்ம வாஹனம், ஒற்றை பிரபை ஆகிய இந்த ஐந்து வாஹனங்கள் தங்கத்திலும், யாளி வாஹனம், இரட்டை பிரபை ஆகிய இந்த இரண்டு வாகனங்கள் வெள்ளியிலும் ~ ஆகிய ஏழு வாஹனங்களை தவிர மற்ற அனைத்து வாகனங்கள் வெள்ளியிலோ அல்லது தங்கத்திலோ ஆனது இல்லை.

25. மற்ற கோவில்களில் காண முடியாதவை

1) தச மூர்த்தி

2) நெய் கிணறு

3) மூன்று தாயார்கள் ஒரே சன்னதியில்

4) 21 கோபுரங்கள்

5) நெற்களஞ்சியம்

6) தன்வந்தரி

7) நான்கு திசைகளிலும் ராமர் சன்னதி

Read More
ஸ்ரீரங்கம் தசாவதார கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ஸ்ரீரங்கம் தசாவதார கோவில்

மூலஸ்தானத்தில் தசாவதார கோலத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமாள்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வடமேற்கே சுமார் 1 கி.மீ. தூரத்தில், கொள்ளிடம் ஆற்றங்கரையில் உள்ளது தசாவதார கோவில்.

ஸ்ரீரங்கம் கோயில் ராஜகோபுரம், திருமதில்சுவர் உட்பட கோயில் கட்டுமானப்பணிகளை திருமங்கையாழ்வார் முன்னின்று நடத்தினார். அவருடைய பணியை பாராட்டி, ரெங்கநாதர் திருமங்கையாழ்வாரின் கோரிக்கையை எறறு, பத்து அவதாரத்தில் (தசாவதாரம்) திருமங்கையாழ்வாருக்கு காட்சியளித்த இடம்தான் கொள்ளிடம் ஆற்றங்கரையிலுள்ள தசாவதாரம் கோவிலாகும்.இக்கோவில் மூலஸ்தானத்தில் பெருமாள் தசாவதார கோலத்தில் எழுந்தருளியிருக்கிறார். இந்தத் தோற்றத்தில் மச்ச, கூர்ம, வராக, நரசிம்மர் ஆகிய அவதாரங்கள் ஆயுதங்கள் இல்லாமல் சங்கு சக்கரத்துடனும், வாமன அவதாரம் கையில் குடையுடனும், பரசுராம அவதாரம் கையில் கோடாரியுடனும், ராம அவதாரம் வில் அம்புடனும், பலராமன் அவதாரம் கலப்பையுடனும், ஸ்ரீகிருஷ்ண அவதாரம் நர்த்தன கிருஷ்ணணாக ஒரு கையில் வெண்ணையுடனும், நாட்டிய பாவனையிலும் கல்கி அவதாரம்,குதிரைவாகனத்தில், கேடயம் கத்தியுடனும் காட்சியளிக்கிறார்கள். மச்ச (மீன்) கூர்ம (ஆமை) அவதாரங்கள் அவதார நிலையிலேயே மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ளன. இங்குள்ள உற்சவ மூரத்தி லெட்சுமி நாராயணர். இவர் ஆழ்வார்களாலேயே பூஜை செய்யப்பட்டவர்.

பொதுவாக கோவில்களில் ஒரு மூலவருக்கு பல உற்சவர் இருப்பதை காணலாம். ஆனால் இங்கு பத்து மூலவருககு ஒரே ஒரு உற்சவர் மட்டுமே இருப்பது தனிசிறப்பாகும். பத்து அவதாரங்களுக்கும் ஒரு கலசம் வீதம், விமானத்தில் பத்து கலசங்கள் காணப்படுகின்றன. கருவறை விமானம் செவ்வக வடிவில் இருப்பதும் ஒரு தனிச் சிறப்பாகும்.

கிரக தோஷ நிவர்த்தி தலம்

இங்குள்ள ஒவ்வொரு அவதாரமும், ஒவ்வொரு கிரகத்தின் தலைவராகக் கருதப்படுகிறது. குறிப்பாக மச்ச-கேது, கூர்ம-சனீஸ்வரர், வராக-ராகு, நரசிம்மா-செவ்வாய், வாமன-குரு, பரகராம-சுக்கிரன், ராம-சூரியன், கிருஷ்ணன்-சந்திரன், பலராமன்-மாந்தி, கல்கி-புதன் ஆகிய கிரக தோஷங்களை நிவர்த்தி செய்கின்றனர். அதனால், கிரக தோஷமுடையவர்கள் தங்கள் நட்சத்திர தினத்தில் இக்கோவிலை வழிபட்டு பலன் பெறலாம்.

Read More
ரங்கநாதர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ரங்கநாதர் கோவில்

பங்குனி உத்திரத் திருவிழா

ரங்கநாதர்- ரங்கநாயகி சேர்த்தி சேவை

இல்லற வாழ்க்கையில் கணவன் மனைவிக்கு இடையே ஊடல் ஏற்படுவதும் பின்பு சமாதானம் அடைவதும் இயல்பான ஒன்று. இந்த நிலை தெய்வீக தம்பதியருக்கும் பொருந்தும் என்பதை ஒருமுறை, ரங்கநாதருக்கும், ரங்கநாயகிக்கும் இடையே ஏற்பட்ட ஊடல் சம்பவம் உணர்த்துகிறது. பெருமாளுக்கும் தாயாருக்கும் இடையே நடைபெற்ற ஊடல் முடிவுக்கு வந்து இருவரும் இணைந்தது பங்குனி உத்திர நாளில்தான். இந்த வைபவம் 'சேர்த்தி சேவை' உற்சவம் என்று ஒவ்வொரு வருடமும் ஸ்ரீரங்கம் பங்குனி உத்திரப் பெருவிழாவின் ஒன்பதாம் நாள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் நாளை வெள்ளிக்கிழமையன்று சேர்த்தி சேவை நடைபெற உள்ளது.

ரங்கநாதக்கும் ரங்கநாயகிக்கும் இடையேயான ஊடல்

உறையூர் சோழ மன்னன் ஒருவனுக்குக் குழந்தைப் பாக்கியம் இல்லாதிருந்தது. அவனது குறையைப் போக்க மகாலட்சுமியே மகவாக அவதரித்தாள். சோழ மன்னன் அவளுக்குக் கமலவல்லி என்று பெயரிட்டு வளர்த்துவந்தான். ஒருமுறை வேட்டையாடச் சென்ற ரங்கநாதர் கமலவல்லியைக் கண்டு காதல் கொள்கிறார். ரங்கநாயகி ஸ்ரீரங்கத்தில் இருக்கும்போது, உறையூர் கமலவல்லியைத் தனது மார்பிலிருக்கும் மகாலட்சுமியின் அனுமதியுடன், ரங்கநாதன் திருமணமும் செய்துகொள்கிறார் ..

உறையூர் கமலவல்லி அவதரித்த நட்சத்திரம் பங்குனி ஆயில்யம். ஒவ்வொரு வருடமும் ரங்கநாதர் பங்குனி ஆயில்யத்தின்போது புது மாப்பிள்ளையைப் போன்று புத்தாடை, சந்தனம், திலகம், மாலை ஆகியவற்றை அணிந்துகொண்டு கமலவல்லி நாச்சியாரைத் தாயாருக்குத் தெரியாமல் சந்திக்கச் செல்வார். பெருமாள் தான் அணிந்திருக்கும் நகைகள் மற்றும் மாலைகள் அனைத்தையும் கமலவல்லிக்கு அணிவித்தும் கமலவல்லி நாச்சியார் அணிந்திருக்கும் மாலைகளைத் தான் வாங்கி அணிந்தும் கொள்வார்.

அப்படியொருமுறை, கமலவல்லி நாச்சியாரைச் சந்தித்துவிட்டு மகிழ்வுடன் ஸ்ரீரங்கத்தை நோக்கித் திரும்பும்போதுதான் தனது கையில் கமலவல்லியின் புது மோதிரம் பளபளப்பதைக் கவனிக்கிறார். பழைய மோதிரத்தைக் கமலவல்லியின் கரங்களில் அணிவித்தது அவரது நினைவுக்கு வந்தது. புது மோதிரத்துடன் சென்றால் `அணிந்திருந்த பழைய மோதிரம் என்ன ஆனது என்று ரங்கநாயகி கேட்பாள். அவளுக்கு என்ன பதில் சொல்வது? என்று சிந்தித்த ரங்கநாதர் தனது மோதிரம் தொலைந்துபோனதாக நாடகம் ஆடுகிறார். அனைவரும் காவிரியாற்றில் மோதிரத்தைத் தேடுகிறார்கள். பிறகு `மோதிரம் தொலைந்துவிட்டது என்று கூறியபடியே, ரங்கநாதர் கோயிலுக்குள் நுழைகிறார். வழக்கமாக ரங்கநாதர் கோயிலுக்குள் நுழைந்தால் வாத்திய கோஷங்கள் அதிரும். ஆனால், கமலவல்லியைச் சந்தித்துவிட்டு வரும் ரங்கனோ சத்தமில்லாமல் வருகிறார்.

இதையறிந்த ரங்கநாயகி, ரங்கநாதர் மீது கோபம் கொள்கிறாள். இருவருக்கும் இடையிலான ஊடல் மலர்கிறது. 'உள்ளே வராதீரும்' என்று கூறி வாயில் கதவைச் சாத்தி விடுகிறார். ரங்கநாயகியைச் சமாதானப்படுத்த, பெருமாள் முயற்சி செய்கிறார். தாயாரோ, 'நீங்கள் உறையூருக்கே சென்று விடுங்கள். இனி இங்கு வரத் தேவையில்லை' என்று உறுதியுடன் தெரிவித்துவிடுகிறார்.

ரங்கநாதர் தாயாரிடம் கெஞ்சிப் பார்க்கிறார். தாயார் சமாதானம் அடையாததால், வருத்தமும் சோர்வும் கொண்டு திரும்புவதுபோல பாவனை செய்கிறார். அப்போது, தாயார் கதவைத் திறந்து மெள்ள எட்டிப் பார்க்கிறார். அதைக் கண்ட ரங்கநாதனுக்கு நம்பிக்கை பிறக்கிறது. மீண்டும் கதவருகே ஓடிவந்து தாயாரிடம் கெஞ்சத் தொடங்குகிறார். இப்படியே ஊடலும் கெஞ்சலும் மாறிமாறி மூன்று முறை தாயார் கதவைத் திறந்து சாத்துகிறாள்.

உற்சவத்தின்போது தாயார் சார்பாக 'தலத்தார்' எனும் ஊழியர்களும், பெருமாள் சார்பாக 'தொண்டுக் குலத்தார்' எனும் ஊழியர்களும் சமாதானம் பேசுவார்கள். தலத்தார் எல்லோரும் பெருமாளிடம் நியாயம் கேட்க, குலத்தார் அனைவரும் தாயாரிடம் கெஞ்சுவர். வடக்குச் சித்திர வீதி மக்கள் அனைவரும் அன்னைக்கு ஆதரவாக வெண்ணெய் மற்றும் பூக்களைப் பல்லக்கின் மீது வீசி எறிவார்கள். தெற்கு சித்திர வீதி மக்கள் ரங்கநாதருக்கு ஆதரவாக இருப்பார்கள்.

மட்டையடி உற்சவம்

கடைசியில் திருவரங்கன் செய்த தவறுக்காக மட்டையடி விழும். உலகாளும் இறைவனுக்கே வாழை மட்டையால் அடிவிழும் என்பது மிகவும் ஆச்சரியமானது. இதை 'மட்டையடி உற்சவம்' என்று கூறுகிறார்கள். கடைசியாக நம்மாழ்வார் இருவரையும் சமாதானம் செய்து சேர்த்துவைப்பார். அதன் பிறகு, இருவரும் ஒன்று சேர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குவர். படிதாண்டா பத்தினி என்று பெயர் பெற்ற ரங்கநாயகி,

வருடத்தில் ஒரு நாள் மட்டும் அதாவது பங்குனி உத்திரத்தன்று மதிய வேளையில் ரங்கநாதருடன் சேர்த்தி சேவையில் கலந்து கொள்கிறார். சேர்த்தி சேவையை முன்னிட்டு அன்றைய தினம் உற்சவரை மட்டுமே தரிசிக்க முடியும். மூலவர் நடை சாத்தப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சேர்த்தி சேவை தரிசனம்

வருடத்தில் ஒரு நாள் மட்டுமே நடைபெறும் சேர்த்தி சேவையன்று. தாயாருடன் சேர்ந்திருக்கும் ரங்கநாதர் மிகவும் மனம் மகிழ்ந்து காணப்படுவார். அப்போது அவரிடம் வேண்டிக்கொண்டால், நமது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்

களத்திர தோஷம் பெற்று திருமணம் நடைபெறாமல் தடைபட்டு தவிப்பவர்களும் இந்த சுக்கிர ஸ்தலமான ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் சேர்த்தி சேவையை தரிசித்தால் களத்திர தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். திருமணம் ஆனவர்களும் களத்திர தோஷத்தால் பிரிந்து இருப்பவர்களும், வீட்டில் கணவன் மனைவி இடையே சண்டை போட்டுக்கொண்டிருப்பவர்களும் இந்த சேர்த்தி சேவையை தரிசித்தால் சண்டை நீங்கி மகிழ்ச்சியான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.

Read More
ரங்கநாதர் கோவில்
பெருமாள், Perumak Alaya Thuligal பெருமாள், Perumak Alaya Thuligal

ரங்கநாதர் கோவில்

ஸ்ரீரங்.கம் பங்குனி உத்திரம் திருவிழா

நம்பெருமாளுக்கு முகச்சவரம் செய்யும் வித்தியாசமான நிகழ்ச்சி

பெருமாளுக்கு பழைய சோறும், மாவடுவும் நைவேத்தியமாக படைக்கப்படுவதின் பின்னணிக் கதை

ஒரு வருடத்தின் 365 நாள்களில் 322 நாள்கள் உற்சவம் காணும் பெருமாள், ஸ்ரீரங்கத்துப் பெருமாள்தான். வருடம் முழுவதும் திருவிழாக் கொண்டாட்டங்கள் நிறைந்திருந்தாலும், அவற்றுள் முக்கியமான திருவிழா, பங்குனி உத்திரம். பிரம்மதேவன் கொண்டாடிய முதல் உற்சவம் `பங்குனி உத்திரம்’ என்கிறது ஸ்ரீரங்கத் தலபுராணம்.

ஸ்ரீரங்.கம் ரங்கநாதர் கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழாவின் மூன்றாம் நாள் உற்சவம் சற்று வித்தியாசமானது. இந்த உற்சவம் பழைய சோறும் மாவடுவும் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த உற்சவத்தில் கலந்து கொள்ள பெருமாள் ஸ்ரீரங்கத்திலிருந்து புறப்பட்டு, ஜீயர்புரம் என்ற ஊருக்கு செல்கிறார். அங்கு முடிதிருத்தும் தொழிலாளர்களால் நடத்தப்படும் மண்டகப்படியில் கலந்து கொள்கிறார். சிகை அலங்காரம் செய்யும் தொழிலாளி ஒருவர் பெருமாளுக்கு நிலைக்கண்ணாடியை காண்பித்து, நிலைக் கண்ணாடியில் தெரியும் அவருடைய பிம்பத்திற்கு முகம் திருத்தம் பாவனை செய்கிறார். அதன்பிறகு முகம் திருத்தும் தொழிலாளிக்கு மரியாதை செய்யப்படுகிறது. வித்தியாசமான இந்த உற்சவத்தில் கலந்து கொண்ட பெருமாளுக்கு பழைய சோறும், மாவடுவும் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.

இந்த பழைய சோறு.. மாவடுவுக்குப் பின்னால், நெஞ்சை நெகிழ வைக்கும் ஒரு கதை உள்ளது. ஒரு சமயம் ஜீயர்புரம் என்னும் காவிரிக்கரை அருகே உள்ள கிராமத்தில், வயதான பாட்டி மற்றும் அவளது பேரன் ரங்கனும் வசித்து வந்தனர். பாட்டி ஸ்ரீரங்கம் அரங்கன் மேல் மிகுந்த பக்தி உடையவள், ஒரு நாள் பேரன் ரங்கன், சவரம் செய்து கொண்டு திரும்பி வந்து விடுகிறேன் என்று பாட்டியிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினான். சவரம் செய்து கொண்டு காவிரியில் குளிக்க இறங்கியவன், காவிரி வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டான். அரங்கனது அருளினால், அவன் மீது மாறாத பக்தி கொண்ட பேரன் உயிர் பிழைத்து, ஸ்ரீரங்கத்தில் அம்மா மண்டபத்தின் அருகே கரை சேர்த்தான். உயிர் பிழைத்த ரங்கன், ஸ்ரீரங்கத்து அரங்கனை தரிசித்து காப்பாற்றியதற்கு நன்றி சொன்னான். தன்னை எண்ணி இந்நேரம் பாட்டி அழுவாளே என்று பதறி ரங்கநாதரிடம் முறையிட்டான். தான் வீடு செல்லும் வரை பாட்டியைப் பார்த்துக் கொள்ளும்படி வேண்டினான். பின் அங்கிருந்து வீடு நோக்கி புறப்பட்டான்.

அதே சமயம் வெகு நேரமாகியும் திரும்பி வராத பேரனை நினைத்து அந்தப் பாட்டி கவலைப்பட்டாள். ரங்கநாத பெருமாளை தொழுதபடியும்... பேரனை நினைத்து அழுதபடியும் காவிரிக்கரைக்குச் சென்றாள். காவிரியின் வெள்ளம் கண்டு அழுது புலம்பிக்கொண்டிருந்த பாட்டியை ஆறுதல் படுத்த அரங்கன். முகத்திருத்தம் செய்த முகத்தோடு, குளித்து எழுந்த நிலையில் பாட்டியின் பேரன் ரங்கனாக அங்கு வந்தார். பேரனை கண்ட பாட்டி மகிழ்ச்சி அடைந்து, அவனை வீட்டுக்கு கூட்டிச் சென்று, பசித்திருந்த பேரனுக்கு பழைய சோறும் மாவடுவும் அளித்து சாப்பிடச் சொன்னாள்.

பேரனின் உருவத்தில் பரந்தாமன் சாப்பிட்டுக் கொண்டிருந்த அதே வேளையில், உண்மையான பேரன் ரங்கன் வீட்டிற்கு வந்து விட்டான். பாட்டி திகைத்தாள். அடியவருக்கு அடைக்கலம் தரும் அரங்கன் சிரித்தபடியே அங்கிருந்து மறைந்தார். பாட்டியும் பேரனும் ரங்கநாத பெருமாளின் அருளை எண்ணி தொழுதார்கள். அவரின் திருவுளம் எண்ணி அழுதார்கள். அன்று பக்தையை ஆறுதல் படுத்த வந்து, பழைய சோறும்.. மாவடுவும் உண்ட ரங்கநாத பெருமாள், இன்றும் அதை நினைவூட்ட ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழாவில் இதை நடத்தி வருகிறார்.

Read More
ரங்கநாதர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ரங்கநாதர் கோவில்

ஸ்ரீரங்கம் உற்சவருக்கு நம்பெருமாள் என்ற பெயர் ஏற்படக் காரணமான சுவையான சம்பவம்

பூலோக வைகுண்டம் என பெருமை பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உற்சவப் பெருமாள் பெயர் 'அழகிய மணவாளன்'. இவரை 'நம்பெருமாள்' என்றும் அழைப்பதுண்டு. அழகிய மணவாளன் என்ற பெயர் கொண்டிருந்த உற்சவ மூர்த்திக்கு நம்பெருமாள் என்ற பெயர் ஏற்பட்டதன் பின்னணியில் ஒரு சுவையான சம்பவம் உள்ளது.பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு, டெல்லி சுல்தான் தென்னகத்தின் மீது படையெடுத்து பல கோயில் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றான். ஸ்ரீரங்கம் கோவிலை சூறையாடி, உற்சவர் அழகிய மணவாளன் பெருமாளை டில்லிக்கு எடுத்துச் சென்றான். ஸ்ரீரங்கத்தில் உள்ளவர்களின் கடுமையான முயற்சியால், அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த உற்சவர் சிலை டில்லியிலிருந்து மீட்டுக் கொண்டு வரப்பட்டது.ஆனாலும் பலருக்கும் மீட்டுக் கொண்டு வரப்பட்டது பழைய அழகிய மணவாளன் உற்சவமூர்த்திதானா அல்லது அதை போன்றதொரு சிலையை கொடுத்தனுப்பி விட்டார்களா என்ற சந்தேகம் எழுந்தது. சந்தேகத்தை நிவர்த்தி செய்ய, அழகிய மணவாளனின் ஆடைகளை முன்னர் துவைத்துக் கொண்டிருந்த சலவைத் தொழிலாளியை தேடி கண்டுபிடித்தனர். அறுபது ஆண்டுகள் கழிந்து விட்டநிலையில், அவர் கண் பார்வை குறைந்து, தள்ளாடும் முதியவராக மாறியிருந்தார்.அவரை அழைத்து வந்த பின்னர், மீட்டுக் கொண்டுவந்த பெருமாளுக்கு திருமஞ்சனம் (நீராட்டு) செய்தனர். திருமஞ்சன ஆடையை சலவை செய்யும் முதியவரிடம் கொடுத்தனர். சிறிது திருமஞ்சன நீரை பருகியும், திருமஞ்சன ஆடையை முகர்ந்து அதன் தெய்வீக மணத்தையும் கண்டறிந்த, அந்த முதியவரின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. அவர் அந்த தள்ளாத நிலையிலும் , 'இது நம் பெருமாள்தான்' என்று உரத்தக் குரலில் கூவியபடி துள்ளிக் குதித்தார். அதுமுதல், அழகிய மணவாளன் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்த உற்சவர் பெருமாள், 'நம்பெருமாள்' என்ற திருநாமத்திலும் அழைக்கப்படலானார்.

Read More
ரங்கநாதர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ரங்கநாதர் கோவில்

தேங்காய்க்கு பதிலாக தேங்காய் துருவல் படைக்கப்படும் திவ்யதேசம்

ஸ்ரீரங்கத்து கோவிலில், ஸ்ரீரங்கநாதப்பெருமாள் பாம்பணையில் துயில் கொண்டிருப்பதால் தேங்காய் உடைக்கும் வழக்கம் இல்லை. தேங்காய் உடைக்கும் சப்தம் கேட்டு பெருமாளின் அறிதுயில் கலைந்து விடக்கூடாது என்பதால் தேங்காயைத் துருவலாகவே படைக்கப்படுகிறது.

Read More
ரங்கநாதர் கோவில்
Perumal, பெருமாள் Alaya Thuligal Perumal, பெருமாள் Alaya Thuligal

ரங்கநாதர் கோவில்

ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு 365 வஸ்திரங்கள் போர்த்தும் வைபவம்

கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி, கைசிக ஏகாதசி எனப்படும். அன்று இரவு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், உற்சவ மூர்த்தியான நம்பெருமாளுக்கு 365 வஸ்திரங்கள் ஒவ்வொன்றாய் போர்த்தும் வைபவம் விடிய விடிய நடைபெறும். பெருமாளுக்கு தினமும் அணிவிக்கும் வஸ்திரங்களில் ஏதேனும் குறை இருந்தால் அதை நிவர்த்தி செய்யும் பரிகாரமாக இந்த வைபவம் நடைபெறுகிறது. மேலும் கார்த்திகை மார்கழி குளிர் மாதங்கள் என்பதால் பெருமாளின் மீதுள்ள அன்பின் காரணமாக இந்த வஸ்திரங்கள் போர்த்தப்படுகின்றன. அத்துடன், ஒவ்வொரு வஸ்திரம் சாற்றியவுடனும் வேளையம் என்று அழைக்கப்படும் வெற்றிலை, பாக்கு, கற்பூர ஆரத்தி ஆகியவையும் நம்பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.

கி.பி 1320 முதல் 1370 வரையிலான ஆண்டுகளில் முஸ்லிம் படையெடுப்பின் போது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சூறையாடப்பட்ட நிலையில், உற்சவ மூர்த்தியான நம்பெருமாள் திருப்பதி திருமலையில் சுமார் 50 ஆண்டு காலம் எழுந்தருளியிருந்தார். இதனை நினைவுகூறும் வகையில், ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து ஆண்டுதோறும் கைசிக ஏகாதசியன்று ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு வஸ்திர மரியாதை செய்யும் வைபவம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு கைசிக ஏகாதசியான நவம்பர் 15 அன்று நம்பெருமாளுக்கு 365 வஸ்திரங்கள் போர்த்தும் வைபவம் நடைபெற்றது.

வைகுண்ட ஏகாதசி விழா

மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி 'வைகுண்ட ஏகாதசி' என்று அழைக்கப்படுகிறது. இதனை 'மோட்ச ஏகாதசி' என்றும் அழைப்பார்கள். வைகுண்ட ஏகாதசியில் விரதம் மேற்கொள்வது, மூன்று கோடி ஏகாதசிகளில் விரதம் இருந்த பலனைத் தரக்கூடியது என்பதால், வைகுண்ட ஏகாதசி முக்கோடி ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. ஏகாதசி அன்று தன்னை வழிபடுவோர்க்கு வைகுண்டப்பதவி அளிப்பதாக கூறி பெருமாள் அருளியதாக புராணங்கள் கூறுகின்றன.

வைகுண்ட ஏகாதசி அன்று, அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் பரமபத வாசல் என்ற சொர்க்கவாசல் திறப்பு விழா நடத்தப்படும். ஆனால், இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில், இன்று(14.12.2021) வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது. மார்கழி மாதத்தில் போகிப்பண்டிகை நாளில் ஏகாதசி வருவதால் இந்த ஆண்டு கார்த்திகையிலேயே பரமபதவாசல் திறக்கப்படுகிறது. இப்படி கார்த்திகை மாதம் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடப்பது, சுமார் 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை அமையும்.

Read More
ரங்கநாதர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ரங்கநாதர் கோவில்

ஸ்ரீரங்கநாதரின் பாதணிகள்

ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கு, ஆறு மாதத்திற்கு ஒருமுறை பாதணிகள் மாற்றப்படுகின்றன. இந்த பாதணிகள் ஒவ்வொன்றும் சுமார் இரண்டிலிருந்து மூன்று அடி நீளம் உள்ளது. இவை சுமார் 30-40 அடி உயரம் கொண்ட ஒரு மனிதருக்கானதைப் போன்று இருக்கும். இந்த பாதணிகள் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிரத்யேகமாகச் செய்யப்படுகின்றன. வலது பாதணி ஒருவரிடமும், இடது பாதணி மற்றொருவரிடம், செய்யக் கொடுப்பார்கள். இருவரும், ஒரே ஊரில் இல்லாமல், வெவ்வேறு ஊர்களில் இருப்பவர்கள். 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு பாதணிகளைச் செய்வார்கள்.

ஆறு மாதத்திற்கு ஒருமுறை பழைய பாதணிகளை ஸ்ரீரங்கநாதரின் திருவடிகளை விட்டு கழட்டிவிட்டு, புதிய பாதணிகளை மாற்றிவிடுவார்கள். அதிசயமான விஷயம் என்னவென்றால், திருவடிகளை விட்டு, எடுத்துள்ள, பழைய பாதணிகள் இரண்டிலும், பாத பகுதிகளில், தேய்மானம் இருக்கும். இவ்வாறு, மாற்றியுள்ள, தேய்மானம் அடைந்த, ஸ்ரீ ரங்கநாதர் பாதணிகள் ஸ்ரீரங்கம் திருக்கொட்டாரத்தில் தூணில் மாட்டி வைக்கப்படும்.ஸ்ரீரங்கம் கோவில் சென்றால்,,இந்த அரங்கன் அணிந்து, தேய்மானம் கண்டுள்ள, பழைய பாதணிகளை, கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம்.

Read More
ரங்கநாதர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ரங்கநாதர் கோவில்

ஸ்ரீரங்கநாதரின் துலுக்க நாச்சியார்

கி.பி. 1331-ல் மாலிக்காபூர் படையெடுப்பின்போது, ஸ்ரீரங்கநாதரின் விக்கிரகம் பக்தர்களால் வெளியே எடுத்துச் செல்லப் பட்டது, ஸ்ரீரங்கநாதரின் அந்த விக்கிரகமானது, இரண்டு வருடங்கள் டெல்லியில் இருந்ததாக வரலாறு. அப்போது ஸ்ரீரங்கநாதரின் அழகில் மயங்கி, அவருக்காகத் தன் உயிரையே கொடுத்த தில்லி சுல்தானின் மகளுக்காக, ஆலயத்தில் ஓர் இடம் அளித்துள்ளார்கள். துலுக்க நாச்சியார் என்ற பெயரால் அழைக்கப்படும், அவளுக்காக ஸ்ரீ ரங்கநாதர், ரொட்டி, வெண்ணெய், பருப்பு, கிச்சடி ஆகிய வட இந்திய உணவு வகைகளை நைவேத்தியமாக ஏற்கிறார்.

Read More
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ரங்கநாதர் கோவில்

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திவ்யதேசம்

வைணவர்களுக்கு கோவில் என்றால் அது ஸ்ரீரங்கத்தைத்தான் குறிக்கும்.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் , ‘பூலோக வைகுண்டம்’ என்ற பெருமை பெற்றது. வைணவர்களின் 108 திவ்ய தேசங்களில்,ஸ்ரீரங்கம் முதன்மைத் தலமாகப் போற்றப்படுகின்றது.பன்னிரு ஆழ்வார்களில் 11 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஒரே திவ்ய தேசம் என்ற தனிச் சிறப்பைக் கொண்டது ஸ்ரீரங்கம்.

Read More