குணசீலம் தார்மீகநாதர் கோவில்

குணசீலம் தார்மீகநாதர் கோவில்

இரண்டு கால்களையும் மடித்தபடி காட்சியளிக்கும் அபூர்வ நந்தி

திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில், 22 கி.மீ. தொலைவில் உள்ள குணசீலத்தில் அமைந்துள்ளது தார்மீகநாதர் கோவில். இறைவியின் திருநாமம் ஹேமவர்ணேஸ்வரி.

பொதுவாக சிவாலயங்களில் நந்தியெம்பெருமான் ஒரு காலை சற்றே மடக்கியும், மற்றொரு காலை மடித்தபடியும் காட்சித் தருவார். ஆனால், இக்கோவிலில் தனது இரண்டு கால்களையும் மடித்தபடி காட்சியளிக்கிறார். நந்தியம்பெருமானின் இந்த கோலத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. பொதுவாக சித்தர்கள் நடமாடிய கோவிலிலோ, அவர்கள் கோவில் அமைவதற்கு உதவியிருந்தாலோ, நந்தியெம்பெருமானின் அமைப்பு மாற்றத்துடன் காணப்படுமாம். அந்த வகையில் நந்தியெம்பெருமான் தனது இரண்டு கால்களையும் மடித்தபடி காட்சியளிப்பதால், இக்கோவிலில் சித்தர்கள் நடமாட்டமும் இருப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

Read More
திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில்

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில்

உடலில் காயங்களுடன் காட்சியளிக்கும் நந்திதேவர்

சீர்காழியில் இருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருவெண்காடு. இறைவன் திருநாமம் சுவேதாரண்யேசுவரர், திருவெண்காடர். இறைவியின் திருநாமம் பிரம்ம வித்யாம்பிகை. நவகிரக தலங்களில் இது புதனுக்குரிய தலமாகும்.

இத்தலத்தில் சுவேதாரண்யேசுவரர் சுவாமி சன்னதி முன் உள்ள நந்தி, உடலில் காயங்களுடன் காட்சி அளிக்கிறார். அவர் உடலில் ஏற்பட்ட காயங்கள், மருத்துவாசுரன் என்னும் அரக்கனால் ஏற்பட்டது.

மருத்துவாசுரன் என்னும் அசுரன் பிரம்ம தேவரிடம் பெற்ற வரத்தால், தேவர்களுக்கு பல துன்பம் விளைவித்தான். சிவபெருமான் அருளியபடி தேவர்கள் திருவெண்காட்டில் வேற்றுருவில் வாழ்ந்து வந்தனர். மருத்துவாசுரன், திருவெண்காட்டிற்கும் வந்து போர் செய்ய, வெண்காட்டீசர் முதலில் நந்தியை ஏவினார். அசுரன் நந்தியிடம் தோற்றுப் பின், சிவபெருமானை நோக்கித் தவமிருந்து, சூலாயுதத்தை வேண்டிப் பெற்று மீண்டும் போருக்கு வந்து நந்தியை சூலத்தால் தாக்கி காயங்களை ஏற்படுத்தினான். நந்தியை அந்த அசுரன் ஒன்பது இடங்களில் ஈட்டியால் குத்தியதாக வரலாறு உள்ளது. இது பற்றி நந்தி, திருவெண்காடரிடம் முறையிட, அவர் கோபம் கொண்டார். அப்போது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றிலிருந்து அகோரமூர்த்தி தோன்றினார். அகோர உருவைக் கண்ட மாத்திரத்திலேயே மருத்துவாசுரன் சரணாகதி அடைந்தான். சரணடைந்த மருத்துவாசுரனை அகோரமூர்த்தியின் காலடியில் காணலாம். காயம் பட்ட நந்திதேவரை சுவேதாரண்யேசுவரர் ஆட்கொண்டார்.

நந்திதேவர் உடம்பில் ஒன்பது இடங்களில், ஈட்டியால் குத்துப்பட்ட துளைகளை நாம் இன்றும் நந்திக்கு அபிஷேகம் நடைபெறும் போது பார்க்க முடியும்.

Read More
நந்திதேவரின் சிறப்புகள்

நந்திதேவரின் சிறப்புகள்

நந்தியம் பெருமானின் சிறப்புகள்

சைவ சமயத்தில் முதல் குருவாகவும், சிவனின் வாகனமாகவும் கருதப்படுபவர் திருநந்தி தேவர் ஆவார். நந்தி தேவருக்கு சிவபெருமானைப் போலவே நெற்றிக் கண்ணும் நான்கு புஜங்களும், கையில் பிரம்பும், உடைவாளும் இரு புஜங்களிலும் மானும், மழுவும் உண்டு. நந்தி என்ற சொல்லுக்கு 'ஆனந்தமாக இருப்பவன்' என்று பொருள். பிறரை ஆனந்தப்படுத்துபவன் என்றும் கொள்ளலாம்.

அதிகார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவ்வகை நந்திகளில் மூன்றாவதாக இருப்பதாகும். கைலாயத்தில் வாயிற்காவலாக நின்றிருக்கும் நந்திக்கு, சிவபெருமானை தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவராக உள்ளமையினால் அதிகார நந்தி என்ற பெயர் வந்தது. நந்தி தேவர் சிவலோகத்தின் தலைமைக் காவலனாக விளங்குவதால், சிவன் ஆலகால விடத்தினை அருந்தி விட்டு உமையாளின் மடியில் மயங்கியிருக்கும் வேளையில், அதிகார நந்தி மற்றோரை உள்ளே விடாமல் தடுத்தார்.

நந்தியைத் தொழாமல் சிவபெருமானைத் தொழ முடியாது. ஆலயத்தில் நந்தியை மட்டுமே தொழுதுவிட்டு திரும்பிவிட்டால் கூட சிவபெருமானை வணங்கியதன் முழுபலனும் கிட்டும். பிரதோஷ கால நேரங்களில், சிவபெருமான், நந்தியின் தலை மத்தியில் நடனம் ஆடுகிறார். எனவே நந்திக்கு விசேட பூசைகளும் திருமுழுக்கு வழிபாடுகள் நடைபெறும். சிவ பெருமான் திருநடனம் புரிகையில் நந்திதேவரே மத்தளம் வாசித்ததாக சிவபுராணம் கூறுகிறது. நந்திதேவருக்கு அருகம்புல் மாலையும், சிவப்பு அரிசி நிவேதனமும் நெய்விளக்கும் வைத்து வழிபட வேண்டும். நந்தியின் அருள் இருந்தால்தான் மனிதர்களுக்கு மட்டுமின்றி தேவர்களுக்கும் முக்தி கிடைக்கும். அதனாலேயே தேவர்களும் நந்திதேவரைப் போற்றித் துதிக்கின்றனர்.

சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமார், பதஞ்சலி, சிவயோக மாமுனி, வியாக்கிரமர், திருமூலர் ஆகிய 8 பேரும் நந்தி பெருமானின் மாணவர்களாவர்.

நந்திதேவரின் சிறப்புத் தோற்றங்கள்

சிதம்பரம் நடராஜப் பெருமானின் கோவிலில் நான்கு கோபுரங்களிலும் அதிகார நந்தியின் உருவத்தைக் காணலாம். இக்கோவில் வடக்கு கோபுர வாசலில் அதிகார நந்திதேவர், மனித முகத்துடன் தனது துணைவியாருடன் எழுந்தருளி உள்ளார்.

திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் அர்த்த மண்டபத்தில் அதிகார நந்தி கூப்பிய கரத்துடன் உடைவாளுடன் உள்ளார்.

நந்தி தேவர் சிவபெருமானுக்கு பூஜை செய்யும் அற்புத காட்சி, நாகை மாவட்டம் ஆத்தூர் மந்தாரவனேசுவரர் கோவிலில் உள்ளது.

திருமழபாடியில் உள்ள நந்திதேவர் மனித முகம் கொண்டவர்.

செய்யாறு வேதபுரீசுவரர் ஆலயத்தில் நந்தி, நேர் திசையில் ஈசுவரனை நோக்காமல் எதிர் திசையில் பிரதான வாயில் கோபுரத்தை நோக்கியபடி அமைக்கப்பட்டுள்ளது.

திருவையாறிலும், திருமழபாடியிலும் நந்திகேசுவரரின் செப்புத் திருவுருவங்கள் உள்ளன.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உற்சவ நந்திகேசவர், இரு கரங்கள் கூப்பியும், இரு கரங்களில் மான், மழுவுடனும் காட்சி தருகிறார். இரு கரங்களில் உள்ள மானையும், மழுவையும் மறைத்துப் பார்த்தால்அனுமன் போன்ற தோற்றத்தை அளிக்கிறார்.

கும்பகோணத்திற்கு அருகில் கொருக்கை என்ற ஊரிலுள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் சிவசக்தி சந்நதியின் முன் இரண்டு நந்திகள் உள்ளன. பிரதோஷ நாளில் இரு நந்திகளுக்கும் சேர்ந்தாற்போல நிலக்கடலை, முந்திரிப் பருப்பு மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

சுசீந்திரம் தாணுமாலையன் கோவிலில் உள்ள நந்தி மிகப் பெரியது. வெள்ளைக் கல்லாலான இவரை மாகாளை என்று அழைக்கின்றனர்.

நந்தி இல்லாத சிவ ஆலயம் திருப்பெருந்துறையில் (ஆவுடையார் கோயில்) உள்ளது.

நந்தி தேவரை வழிபட்டால் கிடைக்கும் நற்பலன்கள்

நந்தி தேவர் இசை அறிஞராய்ப் போற்றப்படுபவர். அதனால் நாட்டியம் பயில்வோரும், இசை பயில்வோரும் நந்தியை வழிபட்டால் அவர்களின் கலைகள் தடையின்றி சிறந்து வளரும். நந்தி தேவனை வழிபடுபவர்க்கு சிறந்த பக்தியும், நற்குணங்களுடைய குழந்தைச் செல்வங்களும், சகல காரிய சித்தியும், உயர்ந்த பதவியும், நல்ல எண்ணங்களும், நல்லொழுக்கமும் கிடைக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக முக்தியெனும் வீடு பேற்றையும் அவர்கள் அடைவர்.

Read More
திருநாங்கூர் மதங்கீசுவரர் கோவில்

திருநாங்கூர் மதங்கீசுவரர் கோவில்

சிவபெருமான் பார்வதி திருமணத்திற்கு சீர் வரிசை கொண்டு வந்த நந்தியம்பெருமான்

சீர்காழியில் இருந்து 10 கி.மீ.தொலைவில் உள்ளது திருநாங்கூர் மதங்கீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் ஸ்ரீராஜமாதங்கீசுவரி, மாதங்கி. இக்கோவிலில் வேறு எந்த தலத்திலும் காண முடியாத வகையில், அரிய நிலையில் இரண்டு நந்திகள் எழுந்தருளிய உள்ளன. இவைகள் முன்னும் பின்னும் திரும்பிய நிலையில் காட்சியளிக்கின்றன. இவற்றில் மதங்க நந்தி இறைவனை பார்த்தபடியும், மற்றொரு நந்தியான சுவேத நந்தி கோவில் வாசலை பார்த்தபடி திரும்பியும் இருக்கின்றது. இதனை நந்தி, சிவ பார்வதி திருமணத்திற்கு சீர் பொருட்களை கொண்டு வந்த கோலம் என்கிறார்கள். இதன் பின்னணியில் சுவையான நிகழ்வு ஒன்று இருக்கின்றது.

மதங்க முனிவரின் மகளாக அவதரித்த பார்வதிதேவி மாதங்கி என்ற திருநாமத்துடன் வளர்ந்து வந்தாள். தக்க வயது வந்ததும், மதங்க முனிவர் தம் மகளை சிவபெருமானுக்கு முடிக்க எண்ணினார். சிவபெருமான், மாதங்கியின் திருமணம் திருநாங்கூருக்கு அருகில் உள்ள திருவெண்காட்டில் நடந்தது. சிவபெருமான் திருமணத்திற்காக மதங்கரிடம் சீர் எதுவும் வாங்கவில்லை. திருமணத்திற்கு வந்திருந்த முக்கோடி தேவர்கள் உட்பட அனைவரும் மதங்கர் சீர் தராத்தை சுட்டிக்காட்டி இழிவுபடுத்தி பேசினர். அவர்களது எண்ணத்தை அறிந்த சிவபெருமான், தட்சணை வாங்குவது தவறு என்று அவர்களிடம் எடுத்துக் கூறினார். ஆனாலும் அவர்கள் கேட்பதாக இல்லை. எனவே சிவபெருமான் அவர்களிடம் "மாதங்கியை மணப்பதால் அவள் வேறு, நான் வேறு இல்லை. எங்கள் இருவர் பொருளும் ஒன்றுதான்" என்று சொல்லி, சிவலோகத்திலுள்ள தன் செல்வத்தின் பெரும் பகுதியை நந்தியை அனுப்பி எடுத்து வரும்படி கூறினார். அதை பார்வதிக்கு கொடுத்தார். இதனை உணர்த்தும் விதமாக இக்கோவிலில் முன்னும், பின்னுமாக திரும்பியபடி இரண்டு நந்திகள் இருக்கின்றன. பிரதோஷ வேளையில் இவ்விரு நந்திகளுக்கும் அபிஷேகம் நடக்கின்றது. அந்நேரத்தில் இரு நந்திகளையும் தரிசனம் செய்வது சிறப்பான பலன்களைத்தரும்.

Read More
தஞ்சைப் பெரிய கோவில்

தஞ்சைப் பெரிய கோவில்

தஞ்சை பெரிய கோவில் நந்திக்கு மாட்டுப் பொங்கலன்று நடைபெறும் சிறப்பு பூஜை

உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள பெரிய நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீட்டர், நீளம் 7 மீட்டர், அகலம் 3 மீட்டர் ஆகும். இதன் எடை 20 டன் ஆகும். இந்த நந்தியம் பெருமான், ஆந்திர மாநிலத்தில் உள்ள லேபாக்ஷி கோவில் நந்திக்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே 2வது பெரிய நந்தி ஆவார். ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப்பொங்கல் தினத்தில், நந்தியம் பெருமானுக்கு பூஜைகள் மிகவும் சிறப்பாக நடக்கும். அப்போது 108 பசுக்களுக்கு 'கோ' பூஜை செய்யப்படும். பெருந்திரளான பக்தர்கள் இந்த பூஜையில் கலந்து கொள்கிறார்கள். மிகவும் விஷேசமான இந்த பூஜையையொட்டி, நந்திககு ஒரு டன் எடையில் காய்கறிகள், பழங்கள், பலவகை இனிப்புகள், பலகாரங்கள் உள்ளிட்டவைகளால் அலங்கரித்து பெருவுடையாருக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடத்தப்படும். இந்த பூஜையில் கலந்துகொண்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
ஸ்ரீசைலம் மல்லிகார்ச்சுனேசுவரர் கோவில்

ஸ்ரீசைலம் மல்லிகார்ச்சுனேசுவரர் கோவில்

நந்தி தேவர் அவதரித்த தலம்

ஆந்திர மாநிலத்தின் கர்நூல் மாவட்டத்தில் அமைந்துள்ள நல்லமலைக் குன்றில் அமைந்துள்ளது, ஸ்ரீசைலம் மல்லிகார்ச்சுனேசுவரர் கோயில். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் வட நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இறைவன் திருநாமம் ஸ்ரீசைலநாதர். இறைவியின் திருநாமம் பிரமராம்பாள். ஸ்ரீசைலம், சிவனின் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று. அம்மனின் 51 சக்திபீடங்களில் இது மூன்றாம் இடத்தில் இருக்கிறது. குருக்ஷேத்ரத்தில் லட்சக்கணக்காக தானம் செய்வதாலும், கங்கையில் 2000 முறை குளிப்பதாலும், நர்மதா நதிக்கரையில் பல வருடங்கள் தவம் செய்வதாலும், காசியில் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அவ்வளவு புண்ணியம் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனரை ஒரு முறை தரிசிப்பதால் கிடைக்கிறது என கந்த புராணம் கூறுகிறது. நந்தியே இங்கு மலையாக அமைந்திருந்து அதன் மீது சிவபெருமான் ஆட்சிபுரிகிறார்.

சிலாதர் என்ற மகரிஷி குழந்தை வரம் வேண்டி சிவனைக் குறித்து தவம் இருந்தார். சிவனின் அருளால் நந்தி, பர்வதன் என்ற இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகளைப் பார்க்க சனகாதி முனிவர்கள் வந்தனர். அவர்கள், நந்திதேவர் சில காலம் தான் பூமியில் வாழ்வார் என சிலாதரிடம் தெரிவித்தனர். சிலாதர் மிகவும் வருந்தினார். தந்தையின் வருத்தத்தை அறிந்த நந்தி,"தந்தையே! கலங்காதீர்கள். நான் சிவனைக்குறித்து கடும் தவம் இருந்து சாகா வரம் பெறுவேன்," என்றார். தவத்தில் மகிழ்ந்த சிவன், நந்தியை தன் வாகனமாக்கியதுடன், அவரது அனுமதியின்றி யாரும் தன்னை காண வர முடியாது என்று உத்தரவும் பிறப்பித்தார். நந்தி தவம் செய்த 'நந்தியால்' என்ற இடம் மலையின் கீழே உள்ளது. அத்துடன் அவனது தம்பியாகிய பர்வதனும் தவமிருந்து பர்வத மலையாக மாறும் வரம் பெற்றான். சிவபெருமான் நந்தியை தன் வாகனமாக்கியதும் இத்தலத்தில் தான். மேலும், அவரது அனுமதியின்றி யாரும் தன்னை காண முடியாது என்ற உத்தரவையும் பிறப்பித்தார்.

முக்கிய சிவத்தலங்களில், இமயமலையிலுள்ள கைலாயம் முதலிடமும், நந்தி அவதரித்த ஸ்ரீசைலம் இரண்டாம் இடமும் வகிக்கிறது. பிரதோஷத்தன்று நமது ஊர் நந்தீஸ்வரரை வணங்கி வந்தாலே கோடி புண்ணியம் கிடைக்கும் போது, நந்திதேவர் அவதரித்த தலத்திற்கே சென்று அவரை வணங்கி வந்தால், முக்தியே அடைந்து விடலாம் என்பது ஐதீகம்.பிரதோஷத்தன்று நமது ஊர் நந்தீஸ்வரரை வணங்கி வந்தாலே கோடி புண்ணியம் கிடைக்கும் போது, நந்திதேவர் அவதரித்த தலத்திற்கே சென்று அவரை வணங்கி வந்தால், முக்தியே அடைந்து விடலாம் என்பது ஐதீகம்.

Read More