உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் கோவில்

ஆற்றில் மூங்கில் கூடையில் மிதந்து வந்த அம்பிகை

தேனியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள உத்தமபாளையம் என்ற ஊரில், சுருளியாற்றங்கரையில் அமைந்துள்ளது காளத்தீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் காளத்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை. ஆந்திர மாநிலத்தில் இருக்கும் காளஹஸ்திக்கு இணையான தலம் என்பதால் இக்கோவிலை. பக்தர்கள் தென்னகத்து காளகஸ்தி என்று அழைக்கின்றனர்.

இராணி மங்கம்மாள் ஆட்சிக் காலத்தில், பிச்சை என்ற சிவ பக்தர் உத்தமபாளையம் பகுதியில், ராணியின் படைப்பிரிவில் பணியாற்றி வந்தார். இவர் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி நாளில் ஆந்திர மாநிலத்திலிருக்கும் காளகஸ்திக்குச் சென்று, அங்கிருக்கும் காளாத்தீஸ்வரரை வணங்கி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வயதான காலத்தில் அவரால் அங்கு செல்ல இயலாமல் போனது. இதனால் மனம் வருந்திய அவர் இறைவனை நினைத்து உண்ணா நோன்பு இருக்கத் தொடங்கினார். அவரது கனவில் தோன்றிய இறைவன், செண்பக மரத்தின் கீழே லிங்க வடிவில் தான் இருப்பதாகவும், அங்கு இருந்து தன்னை எடுத்துச் சென்று விரும்பும் இடத்தில் கோவில் கட்டி வழிபடலாம் என்றும் தெரிவித்தார்.

மறுநாள் தான் கண்ட கனவினை ஊர்மக்களிடம் தெரிவித்த அவர், ஊர்மக்கள் துணையுடன் செண்பக மர வனம் சென்றார். அங்கு அவரது கனவில் இறைவன் சொன்னபடி செண்பக மரத்தின் கீழாக லிங்கம் ஒன்று இருந்தது. அவரும், ஊர்மக்களும் அந்த லிங்கத்தை வழிபட்டுத் தாங்கள் கொண்டு சென்றிருந்த வண்டியில் அந்த லிங்கத்தை எடுத்துக் கொண்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். ஊருக்கு அருகில் வந்த போது ஒரு இடத்தில், அந்த வண்டியின் அச்சு முறிந்து, வண்டி நின்று போனது. அதன் பின்பு எவ்வளவு முயன்றும் அந்த வண்டியை அங்கிருந்து நகர்த்த முடியவில்லை. அப்போது அந்த இடத்தில் ஆறுமுகத்துடனான முருகன் சிலை ஒன்று இருப்பதைக் கண்டனர். அதன் பிறகு, அவர்கள் அந்த இடத்திலேயே காளத்தீஸ்வரருக்கும், ஆறுமுகப்பெருமானுக்கும் தனித்தனியாகச் சன்னதிகள் அமைத்துக் கோவிலமைத்தனர்.

அதன் பின்னர் இக்கோவிலில் அம்மனுக்குத் தனிச் சன்னதி அமைத்திட முடிவு செய்த ஊர் மக்கள், அம்மன் உருவத்தைச் சிலையாக வடிவமைக்க பல சிற்பிகளைக் கொண்டு முயற்சித்தனர். ஆனால், அந்தச் சிற்பிகளால் அம்மன் உருவத்தைச் சிலையாக உருவாக்க முடியாமல் போனது. இதனால் மனம் வருந்திய பிச்சை, கோவிலில் அம்மன் சிலை அமைக்கத் தங்களுக்கு அருள்புரிய வேண்டுமென்று இறைவனிடம் தொடர்ந்து வேண்டிக் கொண்டிருந்தார். இந்நிலையில் மீண்டும் அவர் கனவில் தோன்றிய இறைவன், 'பக்தனே, இன்னும் சில நாட்களில் மழை பெய்து ஊருக்குக் கிழக்காக ஓடும் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அந்த ஆற்று வெள்ளத்தில் அம்மன் மூங்கில் கூடையில் அமர்ந்து வருவார். அந்த அம்மன் சிலையைக் கொண்டு வந்து, கோவிலில் அம்மன் சன்னதி அமைத்து வழிபடுங்கள்' என்று சொல்லி மறைந்தார். இறைவன் சொன்னபடி சில நாட்களில் பெரும் மழை பெய்தது. மழையினால் ஏற்பட்ட ஆற்று வெள்ளத்தில் இறைவன் சொன்னபடியே ஒரு மூங்கில் கூடை மிதந்து வந்தது. அக்கூடையில் அம்மன் சிலையும், விநாயகர் சிலையும் இருந்தன. அந்தச் சிலைகளை ஊர் மக்கள் காளத்தீஸ்வரர் கோயிலுக்கு எடுத்துச் சென்றனர். அம்மனுக்கான சன்னதியில் அம்மன் சிலையை வைத்து அம்மனுக்கு திருக்காளகஸ்தியிலிருக்கும் ஞானாம்பிகை என்ற பெயரையேச் சூட்டி வழிபட்டனர். கோயிலில் விநாயகர் சிலையை நிறுவிச் செல்வ விநாயகர் என்று பெயர் சூட்டினர்.

திருக்கல்யாணத்தின் போது அம்பிகைக்கு வரும் பிறந்த வீட்டு சீர்

இக்கோவிலில் இடம் பெற்றிருக்கும் ஞானாம்பிகை அம்மன் சிலை, இத்தலம் அமைந்திருக்கும் இடத்திலிருந்து சற்று தூரத்திலுள்ள கோகிலாபுரம் என்ற ஊரின் ஆற்றில்தான் கிடைக்கப் பெற்றது. எனவே, இந்த ஊரை அம்பிகையின் பிறந்த வீடாகக் கருதுகின்றனர். இக்கோவிலில் நடத்தப் பெறும் திருக்கல்யாண விழாவின் போது, இவ்வூரிலிருக்கும் பக்தர்கள், அம்மனுக்குப் பிறந்த வீட்டுச் சீரும், தங்களது மருமகனான சிவபெருமானுக்கு ஆடைகளும் கொண்டு வருகின்றனர். திருக்கல்யாணத்தின் போது, காளாத்தீஸ்வரர், ஞானாம்பிகை அம்மனுக்கு இந்த ஆடை அணிகலன்களை அணிவித்துத்தான் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

Read More
உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் கோவில்

உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் கோவில்

சனீஸ்வரருக்கு பச்சை ஆடை உடுத்தும் வித்தியாசமான நடைமுறை

தேனியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள உத்தமபாளையம் என்ற ஊரில், சுருளியாற்றங்கரையில் அமைந்துள்ளது காளத்தீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் காளத்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை. காளஹஸ்திக்குச் செல்ல முடியாதவர்கள், இக்கோவிலில் இருக்கும் காளத்தீஸ்வரரை வழிபட்டு, காளஹஸ்தி சென்று வந்த பலனைப் பெற முடியும். இதனால் தான் இக்கோவிலை. பக்தர்கள் தென்னகத்து காளகஸ்தி என்று அழைக்கின்றனர்.

நவகிரகங்களில், சனீஸ்வரருக்கு உரிய வஸ்திரம் கருப்பு நிறம் . எனவே, சனீஸ்வரருக்கு அனைத்து கோவில்களிலும் கருப்பு நிறத்திலான ஆடையை அணிவித்து வழிபடுவதுதான் வழக்கம். ஆனால் இக்கோவிலில் கல்வியில் சிறந்து விளங்க மாணவர்கள், இறைவன் காளத்தீஸ்வரர், இறைவி ஞானாம்பிகை ஆகியோரை வழிபட்டு, இங்குள்ள சனீஸ்வரருக்கும் பச்சை ஆடை அணிவித்து வழிபடும் வழக்கம் இருக்கிறது. கல்விக்கு உரியவரான புதனுக்கு உடுத்தும் பச்சை நிற ஆடையைப் போன்று, சனீஸ்வரருக்குப் பச்சை நிற ஆடையினை அணிவித்து வேண்டுவதன் மூலம், மாணவப் பருவத்தில் சனியின் பிடியிலிருந்து விடுபட்டு கல்வியில் சிறப்புகளைப் பெற முடியும் என்பது இத்தலத்து பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கின்றது.

Read More
பெரியகுளம்  பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

சிவபெருமான், அம்பிகை, முருகர் ஆகிய மூவருக்கும் தனித்தனி கொடிமரங்கள் அமைந்த தலம்

தேனிமாவட்டம் பெரியகுளத்தில் 'வராகநதி''தென்கரையில், அமைந்துள்ளது ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாலசுப்பிரமணிய சுவாமி கோவில். சோழ மன்னன் ராஜேந்திர சோழன் கட்டியதால் இக்கோவில், அப்பகுதியில் பேச்சு வழக்கில் பெரியகோயில் என்றும் அழைக்கப்படுகிற்து. இக்கோவில் சிவாலயமாக திகழ்ந்தாலும், இத்தலத்து முருகன் மிகவும் பிரசித்தம். அதனால் தான் இக்கோவில் முருகன் பெயராலேயே பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் என்று அழைக்கப்படுகிற்து.

இவ்வாலயத்தில், பாலசுப்பிரமணியர் ஆறு முகங்கள் கொண்டு வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். அருகில் லிங்கவடிவில் இராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி ஆகியோர் தனிக் கொடி மரங்களுடன் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். இப்படி மூன்று தெய்வங்களுக்கும் தனிக் கொடி மரங்கள் அமைந்திருப்பது மிகச் சிறப்புடையதாகும். முருகனுக்கு நேர் எதிரே அமைந்துள்ள மயில் மண்டபத்தின் மேல் பகுதியில் 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள் அமைக்கப்பட்டுள்ளது.

தல வரலாறு

ஒரு முறை சோழ நாட்டின் மன்னன் ராஜேந்திர சோழன், அகமலைக் காட்டுப்பகுதிக்குள் வேட்டையாடச் சென்றிருந்தான். அவன் எய்த அம்பு ஒன்று, குட்டிகளை ஈன்றிருந்த பன்றியின் மீது பட்டு அது இறந்து போனது. தாயை இழந்த பன்றிக் குட்டிகள், பசிக்குப் பால் கிடைக்காமல் சத்தமிட்டன. அதனைக் கண்ட மன்னன், ‘தாய்ப் பன்றியைக் கொன்று, அதன் குட்டிகளுக்குப் பால் கிடைக்காமல் செய்து விட்டோமே’ என்று மனம் வருந்தினான். அப்போது அந்தப் பன்றிக் குட்டிகளின் மேல் இரக்கம் கொண்ட முருகப்பெருமான் அவ்விடத்தில் தோன்றி, அவைகளின் பசியைப் போக்கினார். குட்டிகளின் மேல் பரிவு கொண்ட முருகப்பெருமானின் கருணையைக் கண்ட மன்னன், தாய்ப் பன்றியைக் கொன்ற தனது பாவத்தைப் போக்கவும், பன்றிகளுக்கு அருளிய முருகப்பெருமானின் பெருமையை மக்களுக்கு உணர்த்தவும், அகமலையின் கீழேத் தரைப்பகுதியில் இக்கோவிலைக் கட்டினான்.

காசிக்கு ஈடான தலம்

கோயில் அருகே ஓடும் 'வராகநதி நதிக்கு வலப்புறமும், இடப்புறமும் அமைந்துள்ள ஆண், பெண் மருது மரங்கள் மிக சிறப்பு வாய்ந்தவை. காசிக்கு அடுத்தபடியாக பெரியகுளத்தில் தான் இரண்டு மரங்களுக்கும் நடுவில் வராக நதி செல்கிறது. இங்கு குளித்து சென்றால் திருமணத்தடை, குழந்தையின்மை, நோய் தொற்று பிணி நீங்குவதாக ஐதீகம் உள்ளது. வராக நதிக்கரையில் அமைந்திருக்கும் இக்கோவிலில், மூலவராக இறைவன் சிவபெருமான் வீற்றிருக்கிறார். எனவே, காசிக்குச் சென்று வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் அனைத்தும், இந்த ஆலயத்திற்கு சென்று வழிபட்டாலும் கிடைக்கும்.

அருணகிரிநாதர் 'திருப்புகழ்' பாடலில் இக்கோவிலைப் பற்றிப் பாடியிருக்கிறார்.

Read More
தேனி மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில்

தேனி மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில்

நவக்கிரகங்கள் தங்களின் தேவியருடனும், வாகனத்துடனும்அருள்பாலிக்கும் அரிய காட்சி

தேனி மாவட்டம் அல்லிநகரம் பங்களா மேடு பகுதியில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் அமைந்துள்ளது. இறைவனின் திருநாமம் சுந்தரேசுவரர்.இறைவியின் திருநாமம் மீனாட்சி.

பொதுவாக சிவாலயங்களில் நவக்கிரகங்கள் ஒரே பீடத்தில் தனியாக எழுந்தருளி அருள் பாலிப்பார்கள். ஆனால் இக்கோவிலில் நவக்கிரகங்கள் தங்கள் மனைவியரோடும், வாகனங்களோடும் எழுந்தருளியிருப்பது ஒரு அரிய காட்சியாகும். நவக்கிரகங்களின் இத்தகைய தோற்றத்தை, நாம் ஒரு சில இடங்களில் மட்டுமே தரிசிக்க முடியும்.

Read More
வேதபுரி தட்சிணாமூர்த்தி கோவில்

வேதபுரி தட்சிணாமூர்த்தி கோவில்

9 அடி உயர திருமேனியுடன் மூலவராக வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி

தேனி - மதுரை வழியில் 1 கி.மீ. தொலைவிலிருக்கும் அரண்மனைப்புதூரில் இறங்கி, அங்கிருந்து வயல்பட்டி செல்லும் கிளைப்பாதையில் 2 கி.மீ. பயணித்தால் வேதபுரியை அடையலாம். முற்காலங்களில் வேதியர்கள் அதிகம் வாழ்ந்து வந்த போது எப்போதும் வேத பாராயணங்கள் நடைபெற்றதால் இந்த ஊருக்கு வேதபுரி என்ற பெயர் ஏற்பட்டது.

இக்கோயிலின் பிரதான மூலவர் நவகிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் அம்சம் கொண்ட தட்சிணாமூர்த்தி ஆவார். இவர் இங்கு பிராக்ஞா தட்சிணாமூர்த்தி என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார். சுமார் 500 ஆண்டுகள் பழமையான இந்த வேதபுரி தட்சிணாமூர்த்தி கோயில் பாண்டிய மன்னர்களுக்கு பிறகு இப்பகுதியை ஆட்சி புரிந்த அரசர்களால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு பிரக்ஞா தட்சிணாமூர்த்தி, 9 அடி உயரத்தில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பக்தர்களால் எழுதப்பட்ட கோடிக்கணக்கான மூலமந்திரங்களை பீடத்தில் அமைத்து முறைப்படி எழுப்பப்பட்ட ஆலயம் இது.

கருவறையின் விமானத்தில் பஞ்சாட்சர மந்திரத்தை குறிக்கும் வகையில் 5 கலசங்கள் நிறுவப்பட்டுள்ளன.இக்கோயிலில் பூஜை நேரங்களில் மட்டுமே தேங்காய் உடைக்கும் விதி பின்பற்றப்படுகிறது. மேலும் தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலைக்கு பதிலாக, அதை பொட்டலமாக சமர்ப்பிக்கும் படி பக்தர்கள் கோயில் நிர்வாகத்தவர்களால் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இக்கோவிலில் வியாழக்கிழமையன்று திருமண வரம், பிள்ளை வரம் ஆகியவற்றை வேண்டுபவர்களுக்கு அவை நிச்சயம் கிடைக்கும் என்றும், குழந்தைகள் கல்வி கலைகளில் சிறக்க, விரும்பிய காரியங்கள் நடக்க இங்கு வழிபட்டால் அது உறுதியாக கிடைக்கப்பெறுவர்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில்

குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில்

ஏழரை சனியின் தாக்கத்தைக் குறைக்கும் தலம்

தேனியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள தலம் குச்சனூர். இத்தலத்தில் சனிபகவான், தனிக் கோவிலில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இத்தலத்து மூலவரான சனீஸ்வர பகவான், பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மூவரும் தன்னுள் ஐக்கியம் என்பதை குறிப்பிடும் வகையில் மூன்று ஜோடி கண்களுடனும், சக்தி ஆயுதம், வில் ஆயுதம்,, அபய ஹஸ்தம், சிம்ம கர்ணம் என நான்கு கரங்களுடனும், இரண்டு பாதங்களுடனும் காட்சியளிக்கிறார். ஏழரை சனியின் தாக்கத்தால் கஷ்டப்படுபவர்கள் இந்த கோவிலுக்குச் சென்று வந்தால் சனி பகவானின் தாக்கமானது குறைந்து நன்மை ஏற்படும் என்பது ஐதீகம்.

பல நூற்றாண்டிற்கு முன்பு தினகரன் என்ற மன்னன் வாழ்ந்து வந்தான். அந்த மன்னனுக்கு வெகுநாட்களாக குழந்தை பிறக்காமல் இருந்தது. குழந்தை வரம் வேண்டி இறைவனை தினம்தோறும் பூஜித்து வந்தான். அப்போது ஒரு அசரீரி குரல் ஒலித்தது. 'உன் வீட்டிற்கு பிராமணச் சிறுவன் ஒருவன் வருவான். அவனை நீ பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தால் உனக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்று கூறியது'. மன்னனும் அவன் வீட்டிற்கு வந்த பிராமண சிறுவனினை வளர்த்து வந்தான். வளர்ப்பு மகனின் பெயர் சந்திரவதனன். பின்னர் மன்னனுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு சதாகன் என்ற பெயரிட்டு வளர்த்து வந்தான். ஆனால் மன்னனுக்கு பிறந்த குழந்தையை விட, வளர்ப்பு மகனான சந்திரவதனனுக்கு அதிகமான அறிவாற்றலும், திறமையும் இருந்தது. இதனால் மன்னனின் முதல் வாரிசான சந்திரவதனனுக்கே முடிச்சூட்டப்பட்டது.

அந்த சமயம் மன்னன் தினகரனுக்கு ஏழரைச்சனி பிடித்தது. 'வளர்ப்பு மகனாக இருந்தாலும் எனக்கு முடிசூட்டிய என் தந்தைக்கு சனி பகவானின் தாக்கம் இருக்கக்கூடாது' என்ற எண்ணம் சந்திரவதனனுக்கு தோன்றியது. இதனால் சந்திரவதனன் சுரபி நதிக்கரைக்குச் சென்று இரும்பால், சனியின் உருவத்தைப் வடிவமைத்து வழிபட்டான். 'தன் தந்தைக்கு எந்தவிதமான துன்பமும் ஏற்படக் கூடாது என்றும், தன் தந்தைக்கு ஏற்பட இருக்கும் துன்பங்கள் அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்கின்றேன் என்றும், அந்த சனி பகவானிடம் வேண்டிக் கொண்டான் சந்திரவதனன். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சனி பகவான் ஏழரை நாழிகை மட்டும் சந்திரவதனனை பிடித்துக் கொண்டார். வேண்டுதலை நிறைவேற்றி அதன்பின்பு, சந்திரவதனனின் முன்தோன்றிய சனி பகவான் 'உன்னை போன்ற நியாயமாக நடந்து கொள்பவர்களை நான் பிடிக்க மாட்டேன் என்றும், இப்போது உன்னை பிடித்ததற்கு காரணம் உன் முன் ஜென்ம வினை தான்' என்றும் கூறி மறைந்தார்.

இதன்பிறகு சந்திரவதனன் சனிபகவானை வணங்குவதற்காக குச்சுப்புல்களை சேகரித்து, ஒரு கூரை அமைத்து, சனிபகவானுக்கு ஒரு கோவில் எழுப்பி வழிபட்டு வந்தார். குச்சினால் அமைக்கப்பட்ட கோவில் உருவாக்கப்பட்டதால் இந்த ஊருக்கு குச்சனூர் என்ற பெயர் வந்தது. அந்த நாளிலிருந்து சனியினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் விமோசனம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

பிரம்மஹத்தி தோஷம், செவ்வாய் தோஷம், குழந்தையின்மை, திருமணத்தடை உள்ளிட்ட தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் தோஷம் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இத்தலத்தில், வேறு எந்த சனீஸ்வரன் எழுந்தருளியுள்ள தலத்திலும் இல்லாதவாறு, பக்தர்கள் மண் காக பொம்மையை தங்கள் தலையை ஒருமுறை சுற்றி காக பீடத்தில் வைத்து விட்டு, பின்னர் சனிபகவானை வழிபடும் முறை இருக்கிறது.

Read More
அங்காள பரமேஸ்வரி கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

அங்காள பரமேஸ்வரி கோவில்

ஆங்கிலேய அதிகாரியை அடிபணிய வைத்த அங்காள பரமேஸ்வரி

தேனி-போடி சாலையில் கோடாங்கிப்பட்டி கிராமத்திலிருந்து 1.5 கிமீ தொலைவில் உள்ளது அங்காள பரமேஸ்வரி கோவில்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் தேனிக்கு அருகிலுள்ள குச்சனூரில் புற்றுக் கோயில் இருந்தது. இந்த கோவிலுக்கு ஊர் மக்கள் ஓர் அங்காள பரமேஸ்வரியின் சிலையைச் செய்ய விரும்பினார்கள். அதன்படி சுப்புத் தேவர் என்பவர், போடிக்கு அருகே உள்ள ஊருக்குச் சென்று அங்காள பரமேஸ்வரியின் சிலையை உருவாக்கினார்.

அந்த சிலையை தங்கள் வசித்த வந்த குச்சனூருக்குக் கொண்டு செல்ல ஊர் மக்கள் சுமந்து வந்தனர். அப்போது போடிக்கு அருகே கோடாங்கிப்பட்டி எனும் ஊரை வந்து அடைந்தபோது களைப்பு உண்டானதால் அங்கு சிலையை இறக்கி வைத்துவிட்டு சற்று ஓய்வு எடுத்தனர். அன்னையின் திருவுளம் அங்கேயே தங்கிவிட எண்ணியது போலும். அதனால் கீழே இறக்கி வைக்கப்பட்ட திருவுருவச்சிலை மீண்டும் எடுக்கவே முடியாதபடி நிலைத்து நின்றுவிட்டது. இதனால் வியப்பும் அதிர்ச்சியும் அடைந்த ஊர் மக்கள் கண்ணீர்விட்டுப் புலம்பி, 'எங்கள் தாய் இருக்கும் இடமே எங்களுக்கான இடம்' என்று உறுதி கொண்டு அங்கேயே தங்கிவிட்டனர்.

அன்னை குடிகொண்ட இடத்தில் ஒரு கோயிலை எழுப்ப விரும்பி போடி ஜமீன்தாரைச் சந்தித்து விண்ணப்பம் செய்தனர், அவரோ இப்போது சிலை இருக்கும் இடம் கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருப்பதையும், ஆங்கிலேயர் ஒருவரே அந்த இடத்துக்கு உரிமையாளர் என்றும் கூறினார். நீங்கள் அவரிடம் அனுமதி பெற்று ஆலயம் கட்டிக்கொள்ளுங்கள் என்று வழி காட்டினார். அவர்களும் அவ்விதமே அந்த ஆங்கிலேயரை அணுகி அங்காள அம்மனுக்குக் கோயில் கட்ட அனுமதி கேட்டனர். அந்த ஆங்கில அதிகாரியோ கோபமடைந்து, அவர்களை விரட்டியடிக்க தனது காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனால் பயந்துபோன ஊர்மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு வெளியே வந்தார்கள்.

அன்றிரவு ஆங்கில அதிகாரியின் மாளிகை எங்கும் தீ பரவியது. அது ஊரெங்கும் பற்றியது. ஆங்கிலேயரும் அவரது காவலர்களும் மாளிகையை விட்டு ஓடினர். தெய்வ அருள் வந்த மூதாட்டி ஒருத்தி, 'அங்காளம்மனுக்கு சொந்தமான இடத்தைக் கொடுத்துவிடுங்கள்! உங்களைப் பாவத்தில் இருந்து மீண்டு கொள்ளுங்கள்' என்று அறிவித்தாள். ஆங்கிலேய அதிகாரிகள் மிரண்டனர்.காவலர்கள் இப்போது ஆங்கிலேய அதிகாரியை சந்திக்க வரும்பும்படி ஊர்மக்களைக் கெஞ்சுகிறார்கள். அதிகாரிகள் ஊர்மக்களை வணங்கித் தங்கள் பிழை பொறுக்குமாறு வேண்டினர். அம்மன் நிலை கொண்ட கோடாங்கிப்பட்டி ஏரிக்கு அருகில் உள்ள நிலத்தின் உரிமையை உடனடியாக மாற்ற உத்தரவிட்டனர், மேலும், 'ஸ்ரீஅங்காள ஈஸ்வரி கோயிலுக்குச் சொந்தமான இடம் அது' என்று செப்பு சாசனத்தையும் வழங்கினர்.

மதுரை சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்களுக்கு எல்லாம் கண்கண்ட தெய்வமாக கோடாங்கிப்பட்டி அங்காள பரமேஸ்வரி விளங்கி வருகிறாள். இங்கு இவளுக்கு வெள்ளி மற்றும் பௌர்ணமி பூஜைகள், மாசி அமாவாசை மற்றும் ஆடி மாத விழாக்கள் விசேஷமானவை. ஒருமுறை இவளை தரிசித்தால் போதும், அச்சங்கள் இல்லாத சிறப்பான வாழ்வை அடையலாம் என்கிறார்கள் பக்தர்கள்.

Read More
மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில்

கருவறை கதவிற்கு பூஜை நடக்கும் அம்மன் கோவில்

தேனி மாவட்டம் பெரிய குளத்திற்கருகில் தேவதானபட்டி என்ற கிராமம் உள்ளது. அங்குள்ள மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில் வித்தியாசமானது. அந்தக் கோவிலின் கருவறையில் அம்மன் சிலை இல்லை. கருவறை மூடப்பட்டு கதவிற்குத்தான் பூஜை நடைபெறுகிறது. கதவிற்கு முன் நாகபீடத்தில் சூலம் வைத்து வழிபடுகின்றனர். கருவறைக்குப் பின்னால் ஒரு கூரை வீட்டில் மூங்கில் பெட்டிக்குள் காமாட்சி அம்மன் இருப்பதாக ஐதீகம். இந்தக்கோவிலில் உடைக்காத தேங்காயும் உரிக்காத வாழைப்பழமும் நிவேதனமாகப் படைக்கப்படுகிறது.

Read More