பிட்டாபுரம் அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

பிட்டாபுரம் அம்மன் கோவில்

பிட்டு நைவேத்தியமாக ஏற்கும் பிட்டாபுரத்தி அம்மன்

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு வடமேற்கு முனையில் அமைந்துள்ளது பிட்டாபுரத்தி அம்மன் கோவில். இந்த அம்மனுக்கு 'புட்டாத்தி அம்மன்' என்ற பெயரும் உண்டு. இந்த அம்மன் திருநெல்வேலி மாநகரின் எல்லைக் காவல் தெய்வமாக விளங்குகின்றாள்.

கருவறையில் பிட்டாபுரத்தி அம்மன் சுமார் 6 அடி உயரத்தில், 5 அடி அகலத்தில் அழகிய பீடத்தில், வலது காலை பீடத்தின் மேலே ஊன்றி, இடது காலை தொங்க விட்டு வலது கைகளில் அரவு, வேதாளம், வாள், சூலம் ஆகியவற்றையும், இடது கைகளில் தீ, மணி, கேடயம், கபாலம் ஆகியவைகளை தாங்கியும், இருக்கையின் கீழ் வீழ்ந்து கிடக்கும் அரக்கனை வலக்கை சூலத்தால் அழுத்தியபடி காட்சியளிக்கிறாள்.

இந்த அம்மனுக்கு நடைபெறும் இரு நேர பூஜையிலும் பிட்டு படைக்கப்படுவது சிறப்பான ஒன்றாகும். பிட்டு படைப்பதால்தான் இந்த அம்மனுக்கு பிட்டாபுரத்தி அம்மன் என்ற பெயர் வந்துள்ளது. அம்மனுக்கு தீபாராதனை ஆன பின்னர் அலங்காரத்தில் ஏற்படும் குறைகளை சரி செய்ய மாட்டார்கள். அதேபோல் தீபாராதனை முடிந்த பின்னர் மாலைகளோ, பூக்களோ அம்மனுக்கு அணிவிக்கப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் 64 விதமான நோய்களை குணப்படுத்தும் அம்மன்

குழந்தைகளுக்கு ஏற்படும் நோயை குணப்படுத்துவது இந்த அம்மனின் சிறப்பு அம்சமாகும். இங்கு குழந்தைகளுக்கு ஏற்படும் அறுபத்து நான்கு விதமான நோய்கள், சீர் தட்டுதல் போன்றவற்றிற்கு கைகளில் வேர் கட்டி, நெற்றியில் மையிடப்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் சகல நோய்களும் குணமடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பிற மதத்தை சேர்ந்தவர்களும் தங்கள் குழந்தைகளின் நோய் தீர்க்க வழிபடும் அம்மன்

இந்துக்கள் மட்டுமல்லாது பிற மதத்தை சேர்ந்தவர்களும் இக்கோவிலுக்கு தங்கள் குழந்தைகளை கொண்டு வந்து அம்மனை வழிபட்டு வேர் கட்டி, மையிட்டு செல்வது இக் கோவிலின் சிறப்பம்சமாகும். பொதுவாக குழந்தைகள் பிறந்தால் தீட்டு என்றும் பதினாறு நாட்களுக்கு அந்த குடும்பத்தினர் கோவிலுக்கு செல்லக் கூடாது என்பது விதிமுறை. ஆனால் இங்கு பிறந்த குழந்தையை கூட அழைத்து வந்து வேர் கட்டி வழிபடலாம்.

பிரார்த்தனை

இவள் சன்னதியில் தினமும் காலை மற்றும் இரவு பூஜைகளின் போது மந்திரம் ஓதப்பட்ட புனித நீரானது சங்கில் வைத்து பக்தர்களின் மீது தெளிக்கப்படும். இதனால் சகல திருஷ்டிகளும், பீடைகளும், தீய சக்திகளும் நீங்குவதாக நம்பிக்கை. மேலும் மகப்பேறு விரும்பியும், பீடைகள் நீங்கவும், நோய்கள் தீரவும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திரளான பெண்கள் இக்கோவிலுக்கு வந்து அம்மனை வேண்டி செல்கிறார்கள். ராகுகால நேரத்தில் இந்த அம்மனை வழிபடுவது சிறப்பாகும்.

Read More
மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி  கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோவில்

ஆசியாவின் மிகப்பெரிய விநாயகர் கோவில்

திருநெல்வேலி சந்திப்பில் இருந்து 3 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோவில். விநாயகர் மூலவராக எழுந்தருளி இருக்கும் கோவில்களில், இக்கோவில் ஆசியாவிலேயே மிகப் பெரியது ஆகும். 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், ஐந்துநிலை ராஜகோபுரத்துடன் சுமார் 80 மீட்டர் நீளமும், 40 மீட்டர் அகலமும் உடையது.

முற்காலத்தில், நெல்லை டவுனில் அமைந்திருக்கும் நெல்லையப்பர் கோயிலில் வழிபாடு நடக்கும்போது அங்குள்ள பிரமாண்ட மணி ஒலிக்கும். அதைக் கேட்டு இந்தக் கோவிலில் மணியோசை எழுப்பி வழிபடும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. இதனால் மூர்த்தீஸ்வரம் என்று அழைக்கப்பட்டு வந்த இந்த ஊர், பின்னர் 'மணிமூர்த்தீஸ்வரம்' என்று வழங்கலாயிற்று.

இக்கோவில் மூலவருக்கு உச்சிஷ்ட கணபதி என்பது திருநாமம். விநாயகருக்குரிய முப்பத்திரண்டு வடிவங்களில் எட்டாவது திருவடிவம் உச்சிஷ்ட கணபதி. அவரது மனைவியான நீலவாணியைத் தன் இடது தொடையில் அமரவைத்தபடிக் காட்சி கொடுக்கிறார். மூலவர் உச்சிஷ்ட கணபதியைச் சுற்றிய பிரகாரத்தில் 16 வகை விநாயகர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் 1, 2 மற்றும் 3-ம் தேதிகளில், காலையில் சூரியபகவான் தன் ஒளிக்கிரணங்களால் விநாயகரைத் தழுவி வழிபாடு செய்யும் அற்புதத் திருக்கோல தரிசனம் நடைபெறும். அந்த நேரத்தில் தங்கம் போல் ஜொலிக்கும் கணபதியை தரிசித்து வழிபட சகல துன்பங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

பிரார்த்தனை

இத்தலம் கால சர்ப்ப தோஷம், களத்திர தோஷம் ஆகியவற்றிற்கான நிவர்த்தித் தலமாகும். விநாயகர் தன் தேவியுடன் இருந்து அருள்பாலிப்பதால், இங்கு வந்து வேண்டிக் கொண்டால் கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். திருமணத்தடைகள் நீங்கும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள் என்பது நம்பிக்கை. குழந்தை வரம் வேண்டுபவர்கள் இங்கு வந்து தேவியோடு விநாயகப்பெருமான் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தை தரிசனம் செய்தால் புத்திர சந்தானம் உண்டாகும்.

Read More
நத்தம்  அக்னி ஈசுவரர் கோவில்

நத்தம் அக்னி ஈசுவரர் கோவில்

ஆட்டின் முகமும், காளை உடலும் கொண்ட அபூர்வ நந்தி

திருநெல்வேலி மாநகராட்சியின் ஒரு பகுதியான மேலப்பாளையம் அருகே நத்தம் என்னும் ஊரின் அருகே தாமிரபரணி நதியின் கரையிலே அமைந்துள்ளது அக்னி ஈசுவரர் கோவில்.

இறைவியின் திருநாமம் கோமதி அம்பாள். மூலவர் அக்னி ஈசுவரர் சுயம்பு மூர்த்தி. அவரது திருமேனியில் ருத்ராட்சத்தில் உள்ளது போலவே பட்டைகள் காணப்படுவதால், ருத்ராட்சமே லிங்கமாக அமைந்தது போன்ற தோற்றமளிக்கிறார்.

இந்தக் கோவிலில் எழுந்தருளியிருக்கும் நந்தி அபூர்வமான தோற்றம் உடையதாக இருக்கின்றது. இந்த நந்தி ஆட்டின் முகத்தோடும் , காளை உடலோடும் அமைந்துள்ளது. இத்தகைய நந்தியை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. இந்த நந்திக்கு மேஷ நந்தி என்று பெயர். மேஷ ராசி அன்பர்களுக்கு சிறந்த வழிபாட்டுத் தலமாகும். குறிப்பாக பரணி நட்சத்திர அன்பர்களுக்கு உரிய தலமாகும். இது செவ்வாய் கிரக பரிகார தலமாகவும் உள்ளது.

Read More
திருநெல்வேலி  நெல்லையப்பர் கோவில்

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்

விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் இசை தூண்கள்

திருநெல்வேலி தேவாரப்பாடல் பெற்ற 14 பாண்டிய நாட்டு தலங்களில் ஒன்றாகும். இறைவன் திருநாமம் நெல்லையப்பர். இறைவியின் திருநாமம் காந்திமதி அம்மன்.

நம் தமிழகத்தில் ஆச்சரியங்களையும், அதிசயங்களையும் கொண்ட பல கோவில்கள் உள்ளன. அவற்றுள் விஞ்ஞானிகளாலும் இன்று வரை கண்டுபிடிக்க முடியாத அதிசயமான இசைத் தூண்களைக் கொண்டது திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில். தமிழகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில், ஆழ்வார் திருநகரி, திருவானைக்காவல், தாடிக்கொம்பு, தாராசுரம் உள்ளிட்ட பல ஊர்களில் உள்ள கோவில்களில் இசைத் தூண்கள் உள்ளன. இருந்தாலும் நெல்லையப்பர் கோவிலில் உள்ள இசைத்தூண்கள் தனித்துவமானவை. நெல்லையப்பர் கோவிலில் உள்ள இசைத் தூண்கள், உலகில் வேறு எங்கும் காண முடியாத அதிசயங்களில் ஒன்றாகும். இந்த தூண்களில் இருந்து வெளிப்படும் சப்த ஸ்வரங்கள் எப்படி ஒலிக்கிறது என்பது இன்றும் வரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இக்கோவில் இரண்டாம் பிரகாரத்தில் ஏழிசை ஸ்வரங்களை எழுப்பும் இசை தூண்கள் உள்ளன. ஒரு பெரிய தூணை சுற்றிலும் 48 சிறிய தூண்களை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளன. வெளித்தூண்கள் வேறுபட்ட வடிவங்களையும், உயரங்களையும் கொண்டவையாக உள்ளன. இந்த தூண்களை வெறும் கைகளால் தட்டினாலே ச,ரி,க,ம,ப,த,நி என்ற ஏழு ஸ்வரங்களும் ஒலிக்கும். ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு இசையை எழுப்பக் கூடியவையாகும்.

பெரிய தூணில் கர்நாடக சங்கீதமும், அதை சுற்றி உள்ள சிறிய தூண்களில் மிருதங்கம், கடம், சலங்கை, வீணை, மணி போன்ற இசைக்கருவிகளின் இசையை ஒலிக்கின்றன. ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்தில் இழைத்திருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். அந்த காலத்தில் திருவிழாக்களின் போது இசைக்கலைஞர்கள் இந்த தூண்களை பயன்படுத்தியே இசைத்ததாக சொல்லப்படுகிறது.

​எந்த தொழில்நுட்ப வசதியும் இல்லாத காலத்தில் ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு விதமான அலைக்கற்றையை உருவாக்கும் விதத்தில் எப்படி உருவாக்கினார்கள் என்பது இன்று வரை வியப்பை மட்டுமே தருகிறது. இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி கழகத்தின் இயற்பியல் பிரிவு விஞ்ஞானிகள் இந்த தூண்களின் வடிவமைப்பு, இதிலிருந்து வெளிப்படும் இசை போன்றவற்றை ஆய்வு செய்தனர். தன்மைக்கு ஏற்ப மாறுபட்டு இசைந்து கொடுக்கும் அலைக்கற்றையினால் சப்தம் உருவாவதாக மட்டுமே ஆய்வின் முடிவில் தெரிவித்தனர். ஆனால் இந்த தூண்களை எப்படி வடிவமைத்திருப்பார்கள் என்பது தற்போதும் விடை தெரியாத புதிராக மட்டுமே உள்ளன.

இசை என்பது காற்றை உள்வாங்கி ஒலியாய் வழிபடுத்தும் ஒரு முறை ஆகும். ஆனால் கற்களால் செதுக்கப்பட்ட இந்த தூண்களுக்குள் காற்று உள்ளே செல்வதற்கு துவாரம் ஏதும் கிடையாது. அப்படி இருக்கையில் எப்படி ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு விதமான இசையை எழுப்ப முடியும் என்பது விஞ்ஞானிகளை இன்று வரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

Read More
நெல்லையப்பர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

நெல்லையப்பர் கோவில்

திருநெல்வேலி காந்திமதி அம்மன்

நெல்லையப்பர் கோவிலில் அருள் பாலிக்கும் காந்திமதி அம்மன், வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார் என்றும் அழைக்கப்படுகிறார். அம்பிகையின் சக்தி பீடங்களுள் இது காந்தி பீடமாகத் திகழ்கிறது. காந்தசக்தி மிகுந்து, பிரகாசமாக அம்பிகை விளங்குவதாலும் இது காந்தி பீடமாயிற்று. இத்தலத்தில் அம்பிகைக்கும், ஈசனுக்கும் தனித்தனி ஆலயங்கள் உள்ளன.

அன்னம் பரிமாறும் அம்பிகை

இக்கோயிலில் காந்திமதி அம்பாள், கணவர் நெல்லையப்பருக்கு உச்சிக் காலத்தில் அன்னம் பரிமாறி உபசரிப்பதாக ஐதீகம். ஒரு மனைவி கணவனையும் விருந்தினர்களையும் உபசரித்துப் போற்றும் விதிமுறையை இத்தல உச்சிக்கால பூஜை நிகழ்ச்சியில் நிலைநாட்டப்படுகிறது. மற்ற தலங்களில் சுத்த அன்னம் நைவேத்தியம் செய்வது வழக்கம். ஆனால், இங்கு சுவாமிக்கு சுத்த அன்னத்துடன் ஒரு கூட்டு, ஒரு பொரியல், ஒரு குழம்பு என அறுசுவையுடன் கூடிய உணவையே பிரசாதமாக நைவேத்தியம் செய்வது தனிச்சிறப்பு. கணவன் மனைவி எப்படி ஒருவருக்கொருவர் அந்நியோன்யமாக வாழவேண்டும் என்னும் வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்தும் விதமாக இந்தச் சடங்கு அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அப்போது காந்திமதி அன்னை நைவேத்திய தட்டுடன் ஈசனை நோக்கிப் புறப்படுவாள்.இதன் அடிப்படையில் அம்பாள் சன்னதி அர்ச்சகர்கள் மேளதாளத்துடன் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை, பருப்பு, சாம்பார் சாதம், ஊறுகாய் என வகைவகையான நைவேத்யங்களை சிவன் சன்னதிக்கு கொண்டு செல்கின்றனர். அங்குள்ள அர்ச்சகர்கள் அவற்றை சிவனுக்கு படைக்கின்றனர். பின் ஆலயத்திலுள்ள அனைத்துப் பரிவார தேவதைகளுக்கும் நைவேத்தியம் செய்கிறாள். பின்னரே காந்திமதிக்கு நைவேத்தியம் படைக்கப்படுகிறது. கணவர் உணவு எடுத்துக்கொண்ட பின்னர் மனைவி உணவு புசிக்கும் பாரம்பரியத்தை இக்கோயிலில் அன்னை காந்திமதி தினந்தோறும் நிகழ்த்திக் காட்டுகிறாள்

அர்த்தஜாம பூஜையின்போது வெண்ணிற ஆடை அணியும் அம்மன்

உலகம் அனைத்தும் இறுதிக் காலத்தில் அம்பிகையிடம் ஐக்கியமாவதை உணர்த்தும் விதமாக காந்திமதி அம்மனுக்கு தினமும் அர்த்தஜாம பூஜையின்போது வெண்ணிற ஆடை அணிவிக்கப்படுகிறது. மறுநாள் காலை விளாபூஜை வரை அம்பிகை வெண்ணிற ஆடையிலேயே அருள்பாலிக்கிறார்.

காந்திமதி சீர்

இத்தலத்தில் நடக்கும் ஐப்பசி திருக்கல்யாணத்தின் 3ம் நாள் முதல் 7ம் நாள்வரை காந்திமதி அம்மன் கம்பை நதிக்கு நீராடச் செல்லுவது வழக்கம். அப்போது அங்கே வரும் பெண்களை எல்லாம் அம்பிகையின் தோழியராக பாவித்து அவர்கள் நீராட, ஆலயத்தின் சார்பில் நல்லெண்ணெயும் பாலும் வழங்கப்படுகின்றன. இரண்டையும் சிரசில் வைத்து நீராட அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

மேலும்,பெண்கள் திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு சீர் கொண்டு செல்வதுபோல, காந்திமதி அம்பிகையும் தனது ஐப்பசி திருக்கல்யாணத்தின் போது, சீர் கொண்டு செல்கிறாள். 14ஆம் நாள் இரவில் சுவாமியும், அம்பாளும் சிவன் சன்னதிக்கு மறுவீடு செல்கின்றனர். அப்போது அம்பிகை அப்பம், முறுக்கு, லட்டு என சீர் பலகாரங்கள் கொண்டு செல்கிறாள். இதனை காந்திமதி சீர் என்று அழைப்பார்கள். இந்த சீர் வரிசை பலகாரங்களை காணவே கண் கோடி வேண்டும்.

ஆடிப் பூரம் வளைகாப்பு

திருநெல்வேலி அருள்மிகு காந்திமதி அம்மன் ஆலயத்தில், ஆடிப் பூரம் விழாவின் 4-ம் நாளன்று, அம்பாளுக்கு வளைகாப்பு நடைபெறும். இந்த வைபவத்தின்போது, ஊறவைத்த பயறு வகைகளை, அம்பாளின் மடியில் கட்டிவைத்து அலங்காரம் செய்வர். பார்ப்பதற்குக் கர்ப்பிணி போலவே காட்சி தருவாள் காந்திமதி அம்மன். விழாவுக்கு வந்தவர்களுக்கு வளையல் பிரசாதம் தரப்படும். இந்த வளையலை அணியும் புதுமணப் பெண்ணுக்கு அடுத்த பூரத்துக்குள் வளைகாப்பு வைபவம் நடக்கும் என்பது நம்பிக்கை. அதேபோல், இந்த வைபவத்தைக் காணும் கன்னிகளுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

அம்பிகைக்கு பிரதோஷம்

பிரதோஷத்தின்போது, சிவன் சன்னதி எதிரேயிருக்கும் நந்திக்கு மட்டுமே பூஜை நடக்கும். ஆனால், இங்கு அம்பாள் சன்னதியிலுள்ள நந்திக்கும் பிரதோஷ பூஜை நடக்கிறது. அப்போது அம்பிகை ரிஷப வாகனத்தில் எழுந்தருளுகிறாள். சிவனும், அம்பிகையும் ஒன்று என்பதன் அடிப்படையில் இவ்வாறு செய்கின்றனர். சிவராத்திரியன்று நள்ளிரவில் நெல்லையப்பருக்கு மட்டுமின்றி, அம்பிகைக்கும் நான்கு ஜாம அபிஷேகம், பூஜைகள் நடக்கிறது.

இந்த ஆலயத்தில் அம்மனுக்கென ஆடிப்பூர விழா, புரட்டாசி நவராத்திரி திருவிழா, ஐப்பசி திருக்கல்யாண திருவிழா, ஆனி மாதப் பெருவிழா போன்றவை விசேஷமானது.

தம்பதியர் அன்யோன்யத்திற்கு அருளும் அம்பிகை

சாந்த சொரூபமாக வீற்றிருக்கும் காந்திமதி அம்பாளை திருமணமாகாத பெண்கள் தரிசித்தால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். கணவனும், மனைவியும் அன்யோன்யமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் இந்த தலத்தில், தம்பதியர் வழிபட்டால், அவர்கள் உறவில் எந்த பிரச்னையும் வராது என்பது திண்ணம்.

ஆலயத்துளிகள் இணைய தளத்தில், சென்ற ஆண்டு நவராத்தரி ஐந்தாம் நாளன்று வெளியான பதிவு

திருவாரூர் கமலாம்பிகை

https://www.alayathuligal.com/blog/zk6z5ghrez6ekcnc9gg5r373rxmf5a

Read More
துர்கையம்மன் கோயில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

துர்கையம்மன் கோயில்

கிடந்த கோலத்தில் அருள்பாலிக்கும் துர்க்கை அம்மன்

பெரும்பாலும் துர்க்கையம்மனை ஆலயங்களில் கோஷ்ட தெய்வமாக சந்நிதி கொண்ட நிலையில், சிவதுர்கையாகவோ அல்லது விஷ்ணு துர்கையாகவோ தரிசிக்கலாம். அபூர்வமாக சில இடங்களில், தனிக்கோயிலிலும், அமர்ந்த கோலத்திலும் காணப்படுவது உண்டு. ஆனால் அந்த அம்மன் சயன கோலத்தில் அருள்பாலிக்கும் திருத்தலம் ஒன்று செழியநல்லூரில் உள்ளது. திருநெல்வேலிக்கு தெற்கே 25 கி.மீ. தொலைவில் (கங்கைகொண்டான் வழி) பராஞ்சேரி அருகில் உள்ளது செழியநல்லூர். மேலும் துர்க்கையம்மன், நாகராஜ பரிவார தேவதைகளுடன், தல விருட்சமாகிய வேப்பமரத்தின் அடியில், சயனக் கோலத்தில் வெட்ட வெளியில் மேலே வானத்தை பார்த்த நிலையில் பக்தர்களுக்கு காட்சி தருகிறாள். இந்த வேப்பமரத்தின் இலைகள் கசப்பதில்லை என்பது மற்றொரு சிறப்பு. இவற்றை உண்பவருக்கு நோய்கள் தீரும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

Read More