மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோவில்

ஆசியாவின் மிகப்பெரிய விநாயகர் கோவில்

திருநெல்வேலி சந்திப்பில் இருந்து 3 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோவில். விநாயகர் மூலவராக எழுந்தருளி இருக்கும் கோவில்களில், இக்கோவில் ஆசியாவிலேயே மிகப் பெரியது ஆகும். 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், ஐந்துநிலை ராஜகோபுரத்துடன் சுமார் 80 மீட்டர் நீளமும், 40 மீட்டர் அகலமும் உடையது.

முற்காலத்தில், நெல்லை டவுனில் அமைந்திருக்கும் நெல்லையப்பர் கோயிலில் வழிபாடு நடக்கும்போது அங்குள்ள பிரமாண்ட மணி ஒலிக்கும். அதைக் கேட்டு இந்தக் கோவிலில் மணியோசை எழுப்பி வழிபடும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. இதனால் மூர்த்தீஸ்வரம் என்று அழைக்கப்பட்டு வந்த இந்த ஊர், பின்னர் 'மணிமூர்த்தீஸ்வரம்' என்று வழங்கலாயிற்று.

இக்கோவில் மூலவருக்கு உச்சிஷ்ட கணபதி என்பது திருநாமம். விநாயகருக்குரிய முப்பத்திரண்டு வடிவங்களில் எட்டாவது திருவடிவம் உச்சிஷ்ட கணபதி. அவரது மனைவியான நீலவாணியைத் தன் இடது தொடையில் அமரவைத்தபடிக் காட்சி கொடுக்கிறார். மூலவர் உச்சிஷ்ட கணபதியைச் சுற்றிய பிரகாரத்தில் 16 வகை விநாயகர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் 1, 2 மற்றும் 3-ம் தேதிகளில், காலையில் சூரியபகவான் தன் ஒளிக்கிரணங்களால் விநாயகரைத் தழுவி வழிபாடு செய்யும் அற்புதத் திருக்கோல தரிசனம் நடைபெறும். அந்த நேரத்தில் தங்கம் போல் ஜொலிக்கும் கணபதியை தரிசித்து வழிபட சகல துன்பங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

பிரார்த்தனை

இத்தலம் கால சர்ப்ப தோஷம், களத்திர தோஷம் ஆகியவற்றிற்கான நிவர்த்தித் தலமாகும். விநாயகர் தன் தேவியுடன் இருந்து அருள்பாலிப்பதால், இங்கு வந்து வேண்டிக் கொண்டால் கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். திருமணத்தடைகள் நீங்கும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள் என்பது நம்பிக்கை. குழந்தை வரம் வேண்டுபவர்கள் இங்கு வந்து தேவியோடு விநாயகப்பெருமான் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தை தரிசனம் செய்தால் புத்திர சந்தானம் உண்டாகும்.

 
Previous
Previous

திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில்

Next
Next

ஆத்தூர் வீர ஆஞ்சநேயர் கோவில்