தாமல் தாமோதரப் பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

தாமல் தாமோதரப் பெருமாள் கோவில்

வயிற்றில் கயிற்றால் கட்டிய வடுவுடன் காட்சி அளிக்கும் பெருமாள்

சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் நுழைவு வாயிலில் இருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது தாமல். இத்தலத்தில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தாமோதரப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. தாயார் திருநாமம் திருமாலழகி.

கேசவன், நாராயணன், மாதவன் கோவிந்தன் விஷ்ணு மதுசூதனன், திருவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ரிஷிகேசன், பத்மநாபன், தாமோதரன் என 12 திருநாமங்கள் பெருமாளுக்கு விசஷேமானவை. இதில் இத்தலம் தாமோதரப் பெருமாளுக்கு உரியதாக திகழ்கிறது. மூலவர் தாமோதரப் பெருமாள் சங்கு சக்கரம் ஏந்தியபடி நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார்.

ஆயர்பாடியில், நந்தகோபர் யசோதை தம்பதியின் மகனாக, திருமால் கண்ணன் என்னும் பெயரில் வளர்ந்தார். சிறுவனான கண்ணன் ஆயர்பாடியில் பலவித குறும்பு விளையாட்டுகளை நடத்தினார். அதில் வெண்ணெய் திருடுதலும் ஒன்று. இதனால் கோபம் கொண்ட கோபியர்கள், கண்ணனைக் கண்டிக்கும்படி, யசோதையிடம் முறையிட்டனர். கண்ணன் வீட்டை விட்டு வெளியே செல்வதை தடுக்க, யசோதை அவனைக் கயிற்றால் பிணைத்து ஒரு உரலுடன் சேர்த்துக் கட்டி வைத்தாள். அப்போது கண்ணனின் வயிற்றில் கயிறு பதிந்து, அது வடுவாக மாறியது.. அதனால் தாமோதரன் எனப் பெயர் பெற்றான். 'தாம' என்றால் 'கயிறு' அல்லது தாம்பு என்று பொருள். உதரன் என்றால் 'வயிறு'. அதாவது கயிற்றால் கட்டப்பட்ட வயிற்றை உடையவன் என்பது பொருள். இந்த தாமோதரப் பெருமாளின் தரிசனம் பெற விரும்பிய மகரிஷிகள் பலர், இங்கிருந்த காட்டில் தவமிருந்தனர். அதன் பயனாக காட்சியளித்த பெருமாள் இத்தலத்தில் கோயில் கொண்டிருக்கிறார்.

குழந்தை கண்ணன் வயிற்றில் கட்டிய கயிற்றின் வடுவானது இன்றும் அபிஷேகத்தின் போது மூலவர் விக்கிரகத்தில் காணலாம். மாதம் தோறும் ரோகிணி நட்சத்திரத்தன்று தாமோதர பெருமாளுக்கு ராஜ அலங்கார சேவை நடக்கும்.

நின்ற கோலத்தில் அருள்புரியும் தாமல் ஸ்ரீ தாமோதர பெருமாள், கிடந்த கோலத்தில் காட்சி அருளும் திருப்பாற்கடல் மற்றும் அமர்ந்த கோலத்தில் இருக்கும் திருப்புட்குழி ஆகிய மூன்று வைணவ தலங்களும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன. இந்த மூன்று தலங்களையும் ஒரே நாளில் தரிசிப்பது விசேஷமாக கருதப்படுகிறது.

பெருமாளுக்கு வெள்ளிக் கொலுசு காணிக்கை

இத்தலத்தில் பெருமாளிடம் குழந்தை பாக்கியம் வேண்டுவோர், தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன், தாமோதரப் பெருமாளுக்கு தங்கள் காணிக்கையாக வெள்ளிக் கொலுசை அணிவிக்கின்றனர்.

Read More
திருமால்பூர் மணிகண்டீசுவரர் கோவில்

திருமால்பூர் மணிகண்டீசுவரர் கோவில்

மூலவர் சிவபெருமானை திருமால் வணங்கி நிற்கும் அபூர்வ காட்சி

காஞ்சீபுரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருமால்பூர். இறைவன் திருநாமம் மணிகண்டீசுவரர். இறைவியின் திருநாமம் அஞ்சனாட்சி. திருமால் வழிபட்டு பேறு பெற்ற தலம் என்பதால், இத்தலம் 'திருமாற்பேறு' என்றானது. அதுவே மருவி நாளடைவில் திருமால்பூர் என்றானது.

திருமால், சிவபெருமானிடமிருந்து சக்கராயுதம் பெறுவதற்காக இத்தலத்திற்கு வந்து, சக்கர தீர்த்தம் ஏற்படுத்தி, பாசுபத விரதம் பூண்டு, திருநீற்றை உடல் முழுவதும் பூசி ருத்ராட்சம் அணிந்து, அம்பிகை பூஜித்த ஈசனை முறைப்படி பூஜை செய்து வந்தார். தினமும் ஆயிரம் தாமரை மலர்கள் கொண்டு, ஆயிரம் நாமங்கள் சொல்லி ஈசனை அர்ச்சித்து வந்தார். ஒருநாள் பூஜையின்போது, ஈசனின் திருவிளையாடலால் ஒரு மலர் குறைந்தது..வழிபாட்டில் குறையேற்படலாகாது என்றெண்ணி, தன் கண்ணைப் பறித்து, கண் மலரால் ஈசனை வழிபாடு செய்தார். திருமாலின் ஆழ்ந்த பக்திக்கு ஈசன் உளம் மகிழ்ந்து காட்சி கொடுத்தார். தனக்கு காட்சி தந்த சிவபெருமானை மும்முறை வலம்வந்து வணங்கினார் திருமால். பின்னர் ஈசன் திருமாலைப் பார்த்து, 'நாராயணரே! தாமரை மலருக்காக உம் கண்ணை எடுத்து அர்ச்சித்தமையால், உள்ளம் மகிழ்ந்து உமக்கு தேன் மருவிய தாமரை மலர்க்கண்ணை அளித்தோம். இனி நீ தாமரைக்கண்ணன், பதுமாஷன் என்று பெயர்பெற்று விளங்குவாய். நீ பேறு பெற்றதால், இத்தலம் உன் திருப்பெயரால் 'திருமாற்பேறு' என விளங்கப் பெறும். இச்சக்கரத்தால் வெல்லற்கரிய பகைவரையும் வெல்க' என்று கூறி சுதர்சன சக்கரம் வழங்கி ஆசீர்வதித்தார்.

பெருமாளின் கருட சேவை நடைபெறும் ஒரே சிவத்தலம்

மூவருக்கு தீபாராதனை காட்டியபின், எதிரில் இருக்கும் திருமாலுக்கும் தீபாராதனை காட்டப்படுவது சிறப்பாகும். திருமால் பூஜித்த காரணத்தால் இக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கி, சடாரி சாற்றப்படுகிறது. இது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். சிவன் கோவில் என்றாலும், பெருமாள் அருள் பெற்ற தலம் என்பதால் பிரம்மோற்சவ காலத்தில் கருடசேவை இங்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பெருமாளின் கருட சேவை நடைபெறும் ஒரே சிவத்தலம் என்பது வியப்புக்குரியதாகும்.

Read More
திருமால்பூர் மணிகண்டீசுவரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருமால்பூர் மணிகண்டீசுவரர் கோவில்

வித்தியாசமான பஞ்சாம்ச பீடத்தின் மீது எழுந்தருளி இருக்கும் அம்பிகை

காஞ்சீபுரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருமால்பூர். இறைவன் திருநாமம் மணிகண்டீசுவரர். இறைவியின் திருநாமம் அஞ்சனாட்சி.

இத்தலத்து அம்பிகை யோகமுடி தரித்து, நின்ற கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன், புன்னகை தவழும் முகத்துடன் காட்சி தருகிறார். இந்த அம்பிகை எழுந்தருளி இருக்கும் பீடமானது சற்று வித்தியாசமாக, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத அமைப்பாக இருக்கின்றது.

இந்தப் பீடமானது எட்டு லட்சுமிகள், எட்டு யானைகள், எட்டு நாகங்கள், எட்டு சிங்கங்கள் புடைசூழ நடுவில் மகாமேரு அமைந்துள்ளது. இப்படியான பஞ்சாம்ச பீடத்தின் மீது நின்று அபயம் அளிக்கும் கோலத்தில் அம்மன் எழுந்தருளி இருப்பது, இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.

Read More
திருமால்பூர் மணிகண்டீசுவரர் கோவில்

திருமால்பூர் மணிகண்டீசுவரர் கோவில்

குரங்கு முகத்துடனும், நின்ற கோலத்திலும் இருக்கும் அதிகார நந்தி

காஞ்சீபுரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருமால்பூர். இறைவன் திருநாமம் மணிகண்டீசுவரர். இறைவியின் திருநாமம் அஞ்சனாட்சி. இக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் அதிகார நந்தி குரங்கு முகத்துடனும், நின்ற கோலத்திலும் இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இவரை தரிசித்த பிறகே, மூலவரை வழிபடச் செல்ல வேண்டும் என்ற வழிபாட்டு நியதியும் இங்கே உள்ளது.

இவரின் முகம் குரங்காக மாறியதற்கு ராவணன் கொடுத்த சாபம் தான் காரணம். இத்தலத்து இறைவனை தரிசிக்க ராவணன் வரும்போது நந்தியை கவனிக்காமல் சென்றார். இராவணனிடம் நந்தி இறைவன் தியானத்தில் உள்ளார். இப்போது போகாதே என தடுத்துள்ளார். சினம் கொண்ட இராவணன் நந்தியை சபித்ததால் நந்தியின் முகம் குரங்கு முகமாக மாறியது. ராவணன் அப்படி கேட்டதும், நந்தியின் முகம் குரங்காக மாறியது. இதைக் கண்ட நந்தி ராவணா என்னை குரங்கு என்று நீ இகழ்ந்து பேசியதால், நீயும் உன் இலங்கை நகரமும் ஒரு குரங்கால் அழிந்து போகும் என்று சபித்தார். நந்தி கொடுத்த சாபம் ராவணனைத் தொடர்ந்தது. அதனால்தான் ஆஞ்சநேயரால், இலங்கை நகரம் தீக்கிரையாக்கப்பட்டது.

Read More
அமிர்தபுரி நவக்கிரக விநாயகர் கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

அமிர்தபுரி நவக்கிரக விநாயகர் கோவில்

விநாயகர் திருமேனியில் நவக்கிரகங்கள்

சென்னை திண்டிவனம் நெடுஞ்சாலையில் படாளம் கூட்டுச்சாலையில் ( திருமலைவையாவூர்,வேடந்தாங்கல் செல்லும் வழி) 4 கி.மீ. தொலைவில், அமிர்தபுரி என்ற ஊரில் நவக்கிரக விநாயகர் கோவில் அமைந்துள்ளது.

இக்கோயிலில் சுமார் 8 அடி உயரமுள்ள பிரமாண்ட நவக்கிரக விநாயகர் உள்ளார். . இந்த விநாயகப் பெருமானின் உடலமைப்பில் நவகிரகங்களும் இடம் பெற்றுள்ளது, இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். விநாயகப் பெருமானின் நெற்றிப் பகுதியில் சூரிய பகவான், தலைப்பகுதியில் குரு பகவான், வயிற்றுப்பகுதியில் சந்திர பகவான், வலதுமேல் கரத்தில் சனி பகவான், கீழ் கரத்தில் புத பகவான், இடது மேல் கரத்தில் ராகு பகவான், கீழ் கரத்தில் சுக்கிர பகவான், வலது காலில் செவ்வாய் பகவான், இடது காலில் கேது பகவான் ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலித்து வருகின்றனர்.

நவக்கிரகங்களைப் பூஜித்த பலன் விநாயகரை வேண்டினால் கிடைத்துவிடும் என்பது ஐதீகம். இவரை வழிபட்டால் அனைத்து கிரக தோஷங்களும் விலகும், நவக்கிரகத் தலங்களையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

நவகிரக விநாயகருக்குப் பின்புறம் ஸ்ரீயோக நரசிம்மர் திருவுருவம் அமைக்கப்பட்டுள்ளது. இது மாதிரியான சந்நிதிகள் தமிழகத்தில் வேறு எங்கும் இல்லை எனலாம்.

Read More
ஒரக்காட்டுப்பேட்டை குணம் தந்த நாதா் கோவில்

ஒரக்காட்டுப்பேட்டை குணம் தந்த நாதா் கோவில்

உன்னத குணநலன்களை அருளும் இறைவன்

செங்கல்பட்டிலிருந்து சுமார் 8 கி.மீ.தூரத்தில் உள்ளது ஒரக்காட்டுப் பேட்டை குணம் தந்த நாதா் கோவில். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி. இத்தலத்து இறைவனின் திருநாமம் தனிச் சிறப்புக்குரியது. இந்தத் திருநாமம், இறைவனுக்கு வேறு எந்த தலத்திலும் கிடையாது. இத்தலத்தின் முந்தைய பெயர்உறைகாடு. உறைகாடு என்றால் உறைவதற்கு அல்லது வாழ்வதற்கு வளமான பூமி என்பது பொருளாகும். இதுவே பின்னர் உறைக்காட்டுப்பேட்டை என்றாகி பின்னர் மருவி, ஒரக்காட்டுப்பேட்டை என்றானது.

இத்தலத்து இறைவன் தன் மீது உண்மை யான பக்தி கொண்டு வழிபடும் அன்பா்களுக்கு எட்டு வகையான குணநலன்களை அளித்து அவா்களை இறைநிலையான பேரின்ப நிலைக்கு உயர்த்துகிறார். இவரை வழிபட்டால், மனமது செம்மையாகும். சிந்தை தெளிவுறும். நல் வழியைத் தேர்ந்தெடுப்பதில் தடுமாற்றம் இருக்காது. மது, புகை முதலான தவறான பழக்கங்களுக்கு ஆட்பட்டு, அதன் காரணமாக பாதிப்புக்கு ஆளானோர், தொடர்ந்து 11 பிரதோஷ தினங்கள் இந்தத் தலத்துக்குச் சென்று, நெய் தீபம் ஏற்றி வேண்டிக்கொண்டு, ஈசனின் சந்நிதியில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டால், விரைவில் கொடுமையான தீய பழக்கங்களிலிருந்து விடுபடுவார்கள். தீய பழக்கங்களிலிருந்து விடுபடக்கூடிய மன உறுதியை அவா்களுக்கு அளிப்பார் குணம் தந்த நாதா் என்பது நம்பிக்கை. கருவுற்றிருக்கும் பெண்கள், தன் கணவருடன் சென்று ஒரக்காட்டுப்பேட்டைத் தலத்தில் அருளும் குணம்தந்த நாதரை தரிசித்து வழிபட்டால், நல்ல குணநலன்கள் கொண்ட மகவினை ஈன்றெடுப்பா் என்பது ஆன்றோர் வாக்காகும்.

பௌர்ணமியன்று கோவில் பிரகார வலம் - திருவண்ணாமலை கிரிவலம் செய்த புண்ணிய தரும்

திருவண்ணாமலை தலத்தில் மலையைச் சுற்றி அஷ்டலிங்கங்கள் அருள்பாலிப்பது போல், இத்தலத்திலும் எட்டு திசைகளிலும் திசைக்கு ஒன்றாக அஷ்ட லிங்கங்கள் அருள் பாலிப்பது சிறப்பான ஒன்றாகும். உடல்நிலை, வயோதிகம் மற்றும் இதரச் சூழல்களின் காரணமாக திருவண்ணாமலைக்குச் சென்று கிரிவலம் செல்ல இயலாத நிலையில் இருப்பவர்கள், 21 பெளர்ணமி தினங்கள் இந்தத் தலத்துக்குச் சென்று வலம் வந்து, குணம் தந்த நாதரையும், அம்பிகை திரிபுரசுந்தரியையும் வழிபட்டால், கிரிவலம் செய்த புண்ணியம் கிட்டும். பிறவியிலேயே பேச முடியாத நிலையிலிருந்த அன்பர் ஒருவர், 21 பெளர்ணமி தினங்கள் தொடர்ந்து வந்து குணம் தந்த நாதரை வழிபடுவது என்று தீர்மானித்து வழிபாட்டைத் தொடங்கினார். 7 பெளர்ணமி தினங்கள் வழிபாடு செய்த நிலையிலேயே அவருக்குப் பேச்சுத் திறன் வந்தது என்பது சமீப காலத்தில், இத்தலத்தில் நிகழ்ந்த அற்புதமாகும்.

Read More
திருமுக்கூடல் அப்பன் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருமுக்கூடல் அப்பன் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில்

சிவபெருமானைப் போல் தலையில் ஜடாமுடியுடனும், நெற்றிக்கண்ணுடனும் காட்சியளிக்கும் பெருமாள்

மும்மூர்த்திகளாக தரிசனம் தரும் பெருமாள்

செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பழைய சீவரம். பாலாறு, செய்யாறு மற்றும் வேகவதி ஆகிய மூன்று புண்ணிய நதிகள் இந்த இடத்தில் சங்கமிப்பதால் இந்தத் தலத்துக்கு 'திருமுக்கூடல்' என்ற பெயரும் உண்டு. இத்தலத்து பெருமாள் திருநாமம் அப்பன் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள். தாயார் திருநாமம் அலர்மேல் மங்கை. பெருமாளின் திருமார்பில் அலமேலு மங்கை ஒரு புறமும், பத்மாவதி தாயார் மறு புறமும் உள்ளனர். இக்கோவில் பெருமாள், கையில் பத்மம் , சங்கு, சக்கரம் கையில் வைத்திருப்பதால் விஷ்ணு ரூபமாகவும், தலையில் ஜடாமுடியும், நெற்றிக்கண்ணும் இருப்பதால் சிவரூபமாகவும், கையிலும், பத்மத்தின் மீது நின்று தரிசனம் தருவதால் பிரம்மரூபமாகவும் காட்சி தருகிறார். கார்த்திகை மாதத்தில் பெருமாளின் ஜடாமுடியை கழற்றி மூலிகை/எண்ணெய் காப்பு செய்யும்போது மட்டும்தான், அவரது ஜடாமுடி தரிசனம் பார்க்க இயலும்.

அப்பன் வெங்கடேச பெருமாள் என்ற பெயர் ஏற்பட்ட வரலாறு

தொண்டைமான் சக்ரவர்த்தி, திருப்பதி சீனிவாச பெருமாள் மீது அளவுகடந்த பக்தி கொண்டு, நாட்டை மகனிடம் ஒப்படைத்து விட்டு திருப்பதி செல்கிறார். அப்போது பெருமாள் அசரீரி குரலில் நாட்டுக்கு திரும்பிச் செல்லுமாறு மன்னனுக்கு கூறுகிறார். அதனை பொருட்படுத்தாமல் சீனிவாச பெருமாள் வசம் சரணாகதி அடைந்தார் மன்னன். அப்போது சீனிவாச பெருமாள் தன் கையிலிருந்த சங்கு, சக்கரத்தை அனுப்பி தொண்டமானின் நாட்டை காப்பாற்றினார். அதன் பின் திருப்பதி செல்லும் போது பெருமாளின் சங்கு, சக்கரம் திருமுக்கூடல் ஆலயத்திலேயே தங்கி விட்டது. அதனால் தான் இன்றும் அந்த கோயில் சங்கு, சக்கரம் மட்டும் தனியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

பிறகு பெருமாளின் கட்டளைக்கு இணங்க தொண்டமான் சக்கரவர்த்தி திருமுக்கூடலுக்கு திரும்பி அப்பன் சீனிவாச பெருமாளை வணங்க வந்தார். அப்போது சயன கோலத்தில் இருந்த பெருமாள் நின்ற கோலத்தில் எழுந்து பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளின் வடிவமாக ஒன்று கலந்து ஓருருவில் காட்சி கொடுத்தார். அதை பார்த்த தொண்டமான் சக்கரவர்த்தி, அப்பன் வெங்கடேசா என்று பெருமாளை கட்டித்தழுவி கசிந்துருகி வேண்டினர். அதனால் தான் இங்குள்ள பெருமாளுக்கு ஸ்ரீ அப்பன் வெங்கடேச பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது. இங்கு பிருகு முனிவரின் தவத்திற்கு பெருமாள் காட்சி அளித்ததாகவும் புராண வரலாறு கூறுகிறது.

ஒப்பிலியப்பன் போல் பெருமாளின் திருவடியில் பூமாதேவியும், மார்க்கண்டேயனும் இங்கு தவம் செய்கிறார்கள். திருப்பதி சீனிவாச பெருமாளின் கையில் உள்ள சங்கு சக்கரமும் இங்கு உள்ளது. இங்கு உறையும் பெருமாள் மார்க்கண்டேயனுக்கு நாதனாகவும், பூமாதேவிக்கு கண்ணனாகவும், காஞ்சியை ஆண்ட தொண்டைமானுக்கு திருப்பதி சீனிவாச பெருமாளாகவும் காட்சி கொடுத்தார் என்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

Read More
ஆப்பூர் நித்திய கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ஆப்பூர் நித்திய கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்

பெருமாளுக்கு புடவை மட்டுமே வஸ்திரமாக சாற்றப்படும் தலம்

சிங்கப் பெருமாள் கோவிலிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் ஆப்பூர் அமைந்துள்ளது. இந்த ஊரில் அமைந்திருக்கும் ஔஷதகிரி (மூலிகை மலை) என்ற மலை மீது நித்திய கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. மலைமீது உள்ள பெருமாள் கோவிலுக்கு செல்ல 480 படிக்கட்டுகள் உள்ளன. இக்கோவிலில் வெங்கடேச பெருமாள் மட்டுமே பிரதான தெய்வம். தாயார் உட்பட வேறு எந்த தெய்வங்களுக்கும் சந்நிதிகள் கிடையாது. இத்தலத்தில், பெருமாளும் தாயாரும் இனைந்து ஒரே வடிவில் இருப்பதால் எப்போதும் கல்யாண கோலத்தில் இருப்பதாக நம்பிக்கை. அதனால் தான் பெருமாளுக்கு 'நித்திய கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள்' என்ற பெயர் ஏற்பட்டது. பெருமாளும் தாயாரும் இங்கு ஐக்கியமாகி இருப்பதால், அதாவது பெருமாள் லட்சுமி சொருபமாக இருப்பதனால் புடவைதான் வஸ்திரமாக சாற்றப்படுகிறது. அதைத் தவிர வேறு வஸ்திரங்கள் பெருமாளுக்குசாற்றபடுவதில்லை.

தல வரலாறு

ராம, ராவண யுத்தத்தின்போது இந்திரஜித்தின் பிரம்மாஸ்திரத்தால் தாக்கபட்டு ராம சேனையும், இலக்குவணும் மூர்சையாகி விழுந்து விடுகின்றனர், அந்த அஸ்திர தாக்குதலில் அகப்படாமல் தப்பித்த ஒரு சிலரில் முக்கியமானவர் ஆஞ்சனேயர். அவர் ஜாம்பவானின் அறிவுரைப்படி இலங்கையில் இருந்து கடலை தாண்டி இமயமலையை அடுத்த ரிஷபம் மற்றும் கைலாய மலைகளில் இடையில் உள்ள மூலிகை மலையில் இருந்து, மயங்கிய மற்றும் இறந்தவர்களை உயிர்பிக்க தேவையான நான்கு வகை மூலிகைகளை எடுக்க செல்கிறார் . இறந்தவர்களை உயிர்பிக்கும் மிருத சஞ்ஜீவனி, உடல் காயத்தை ஆற்றும் விசல்யகரணி, காயத்தால் உண்டான வடுவை போக்கும் சாவர்ணய கரணி, அறுபட்டஉடலை ஒட்ட வைக்கும் சந்தான கரணி என்பவை அந்த நான்கு மூலிகைகள். மூலிகைகளை தேடிக்கொண்டிருந்தால் நேரம் வீணாகும் என்ற காரனத்தால், அனுமான் அந்த மலையையே தன் வாலால் பெயர்த்து கையில் ஏந்தி கொண்டு இலங்கையை நோக்கி பறக்கிறான். அவ்வாறு இலங்கை செல்லும் வழியில் ஒரு கையில் இருந்து மறுகைக்கு மூலிகை மலையை மாற்றும் போது, அந்த மலையில் இருந்து விழுந்த ஒரு சிறு பகுதிதான் இங்கு மூலிகை மலையாக இருக்கின்றது. அந்த மலையில் இருந்து விழுந்த மண் திருகச்சூர்(ஆப்பூரில் இருந்து சிறிது தொலைவில் உள்ளது) பகுதியில் விழுந்ததாம்.

பிரார்த்தனை

பெருமாள் மிகுந்த வரப்பிரசாதி என பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். திருமணமாகாதவர்கள் பிரார்த்தனை செய்து கொண்டால் உடனே திருமணம் நடந்து விடுகிறது. பௌர்ணமியன்று பல சித்தர்கள் சூட்சுமமாக இந்தப் பெருமாளை வழிபடுவதாக கூறுகின்றனர். திருமணம் நிறைவேறாமல் இருப்பது, வேலையின்மை, கடன் சுமை போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து, பெருமாளுக்கு திருமஞ்சனம் சார்த்தி, புடவை அணிவித்து, ஐந்து முறை பிரதட்சணம் செய்து வழிபட்டால் குறைகள் போய் விடும்.

Read More
நாவலூர் ஏகாம்பரேசுவரர் கோவில்

நாவலூர் ஏகாம்பரேசுவரர் கோவில்

மூலவரின் எதிரில் அமர்ந்திருக்கும் அபூர்வ இரட்டை நந்திகள்

படப்பையில் இருந்து ஒரகடம் போகும் வழியில் அமைந்துள்ள சரபணஞ்சேரி என்ற கிராமத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நாவலூர் ஏகாம்பரேசுவரர் கோவில். 900 ஆண்டுகள் பழமையானது. இறைவியின் திருநாமம் காமாட்சி அம்மன்.

பொதுவாக சிவாலயங்களில் மூலவரின் முன் ஒரு நந்தி அமர்ந்திருக்கும். ஆனால் இத்தலத்து மூலவரின் எதிரில் இரண்டு நந்திகள் ஒன்றின் அருகில் ஒன்றாக அமர்ந்திருக்கின்றன. இப்படி அருகருகே அமர்ந்திருக்கும் இரட்டை நந்திகளை, வேறு எந்த சிவாலயத்திலும் நாம் தரிசிக்க முடியாது. இவற்றில் ஒரு நந்தி இத்தலத்து மூலவரையும், இத்தலத்துக்கு நேர் கோட்டில் இருக்கும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் மூலவரையும் தரிசிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. மற்றொரு நந்தி, திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசிக்கும் வண்ணம் தன் தலையை திருப்பி அமர்ந்துள்ளது. இவ்விரு நந்திகளை தரிசித்தால், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் தலங்களை தரிசித்த பலன்கள் கிட்டும்.

Read More
செய்யூர் கந்தசாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

செய்யூர் கந்தசாமி கோவில்

27 நட்சத்திர வேதாளங்கள் புடைசூழ எழுந்தருளி இருக்கும் அபூர்வ முருகன்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தகத்தில் இருந்து 26 கி மீ தொலைவில் அமைந்துள்ள திருப்புகழ் தலம், செய்யூர் கந்தசுவாமி கோவில். கர்ப்ப கிரகத்தில் கந்தசாமி, வள்ளி தெய்வானையுடன் காட்சியளிக்கிறார். வெளிப் பிரகாரத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒன்றாக மொத்தம் 27 பூத கண வேதாளங்கள், தனிச் சன்னதியில் கோவிலைச் சுற்றி எழுந்தருளி இருக்கிறார்கள்.

வழக்கமாக சிவதலங்களில் விநாயகர், தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர் அல்லது விஷ்ணு, பிரம்மா, சண்டிகேஸ்வரர், துர்க்கை ஆகியோர் கருவறை சுற்றுச்சுவரில் கோஷ்ட தெய்வங்களாக எழுந்தருளி இருப்பார்கள். ஆனால், இக்கோவிலில் விநாயகருக்கு பதிலாக நிருத்த ஸ்கந்தரும், தட்சிணாமூர்த்தி கோஷ்டத்தில் பிரம்ம சாஸ்தாவும், விஷ்ணு மாடத்தில் பாலஸ்கந்தரும், பிரம்மாவின் இடத்தில் சிவகுருநாதனும், துர்க்கை இருக்கும் இடத்தில் புலிந்தரும் (வேடர் உருவில் இருக்கும் முருகன்) காட்சியளிக்கின்றனர். . இங்கிருக்கும் சூரியனும் முருகனின் அம்சமாகவே கருதப்பட்டு குகசூரியன் என்று அழைக்கப்படுகிறார். இப்படி கோஷ்ட தெய்வங்கள் அனைத்தும் சுப்பிரமணிய ரூபங்களாய் இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்

இக்கோவிலில் உள்ள ஒரு சிறப்பு அம்சம் வேறு எந்த ஊரிலும் உள்ள கோவில்களில் இல்லாத ஒன்றாகும். அது வெளிப்பிரகாரத்தை சுற்றி அமைந்துள்ள, நட்சத்திர வேதாளங்களாகும். ஆனால், இங்குள்ள வேதாளங்கள் முருகன் சூரபத்மனையும், பிற அரக்கர்களையும் வதைக்கும்போது அவருக்கு துணை புரிந்த சிவகணங்களாகும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒன்றாக, அஸ்வினி முதல் ரேவதி நட்சத்திரம் வரை, மொத்தம் 27 பூத கண வேதாளங்கள் இக்கோவிலைச் சுற்றி அமைந்திருப்பது ஒரு தனிச்சிறப்பாகும்.

இவ்வேதாளங்கள் பைரவரின் ஆணைக்குக் கட்டுப்பட்டவை. எனவேதான், இக்கோவிலில் வேதாளங்கள் மட்டுமின்றி பைரவரும் காணப்படுகின்றார். ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியிலும் அவரவர் நட்சத்திற்குரிய வேதாளங்களை வழிபட்டு தம் கோரிக்கைகளை அவர்கள் முன் வைத்தால், அக்கோரிக்கைகளை வேதாளங்கள், பைரவர் மூலமாக முருகனிடம் கொண்டு போய் சேர்த்து, அவை நிறைவேற்றப்படுவதாக ஐதீகம். இப்பூஜை மூலம் பயனடைந்தோர் ஏராளம். ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியிலும் பல மக்கள் இக்கோவிலை நாடி வருவதே இதற்கு ஒரு நல்ல சான்றாகும்.

தேய்பிறை அஷ்டமி அன்று மாலை 'வேதாள பூஜை' விநாயக சங்கல்பத்துடன் தொடங்குகிறது. பிறகு 5 மணிக்கு ஒவ்வொரு நட்சத்திர வேதாளத்திற்கும் செவ்வரளி பூக்களால் பூஜையும், மாலை 7 மணிக்கு மூலவர் அபிஷேகமும், இரவு 8 மணிக்கு பைரவருக்கு அஷ்ட புஷ்பார்ச்சனையும் நடைபெறுகின்றது.

Read More
காஞ்சிபுரம் அரசு காத்த அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

காஞ்சிபுரம் அரசு காத்த அம்மன் கோவில்

காஞ்சி காமாட்சி அம்மனுக்கு காவல் தெய்வமாக விளங்கிய அரசு காத்த அம்மன்

காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோவிலின் தெற்கு கோபுரத்திற்கு அருகில், சன்னதி தெருவில் அமைந்துள்ளது அரசு காத்த அம்மன் கோவில். காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலிலிருந்து வடமேற்கு திசையில் சுமார் அரை கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கருவறையில் அரசு காத்த அம்மன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்ட நிலையில் வடக்கு நோக்கி வீற்றிருகிறாள். அம்மன் வலது காதில் குண்டலம், இடது காதில் தோடு அணிந்து காட்சி தருகிறாள். இரு கோரைப் பற்களும், நான்கு கரங்களில் வலது மேற்கரத்தில் உடுக்கையும், கீழ் கரத்தில் சூலமும், இடது மேல்கரத்தில் பாசம், கீழ் கரத்தில் கபாலமும் உள்ளன. ஜ்வாலா கிரீடம் அணிந்திருக்கிறாள். ஆறடி உயரத்தில் இருக்கும் இந்த அம்பிகை இடது காலால் அசுரனை வதம் செய்த கோலத்தில் காட்சி தருகிறாள்.

தல வரலாறு

பார்வதி தேவி, சிவபெருமான் கொடுத்த சாபத்திலிருந்து விமோசனம் பெறுவதற்காக காஞ்சியில் தவம் செய்தார் . பார்வதி தேவியின் அந்த தவத்திற்கு எந்த இடையூறும் இல்லாமல் இருப்பதற்காக, அரசு காத்த அம்மன், பச்சை அம்மன், சந்தை வெளி அம்மன், கருக்கினில் அமர்ந்த அம்மன் ஆகிய எட்டு பெண் தெய்வங்கள் பார்வதி தேவிக்கு காவல் புரிந்தனர். இவர்களுக்கு தலைமை பொறுப்பேற்றவள் அரசு காத்த அம்மன். சோழ மன்னர்களின் அரசாங்கத்திற்கு பாதுகாப்பாக இருந்ததால் 'அரசு காத்த அம்மன்' என்று பெயர் வந்தது .

செல்வம் பெருக்கும் அம்மன்

அரசு காத்த அம்மனுக்கு சம்பத்கரீஸ்வரி என்ற பெயரும் உண்டு. 'சம்பத்' என்றால் செல்வம். 'கரி' என்றால் யானை. யானை மீது பவனி வந்து செல்வங்களை வாரி வழங்குவதால் இப்பெயர் வந்தது. இதற்கு அடையாளமாக அம்மனின் எதிரில் சிம்ம வாகனத்திற்கு பதிலாக யானை வாகனம் இடம் பெற்றுள்ளது. இந்த அமைப்பு இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.

பிரார்த்தனை

வாதம், தோல் நோய், வாய் பேச இயலாதவர்கள் தங்கள் பிரச்சனை தீர இந்த அம்மனிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

Read More
காஞ்சிபுரம்  ஜுரஹரேஸ்வரர் கோவில்

காஞ்சிபுரம் ஜுரஹரேஸ்வரர் கோவில்

உடல் உஷ்ணத்தினால் ஏற்படும் நோய்களை தீர்க்கும் தலம்

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது ஜுரஹரேஸ்வரர் கோவில். இக்கோவிலின் இறைவனான சிவபெருமான் ஜுரஹரேஸ்வரர் என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார்.

ஒரு சமயம் தேவர்கள் அனைவரையும் வெப்ப நோய் தாக்கியது. வெப்பம் தாக்கியதில் அவர்கள் அனைவருக்கும் காய்ச்சல் ஜுரம் ஏற்பட்டது போல் உடல் வெப்பம் மிகுந்து துடித்தனர். பின்பு சிவனை தேவர்கள் சரணடைந்த போது, சுரன் என்கிற அசுரனை அழித்து பின்பு காஞ்சி நகரில் ஜுரஹரேஸ்வரர் என்கிற பெயரில் லிங்க வடிவில் தான் கோவில் கொண்டுள்ளதாகவும், அந்த லிங்கத்தை வழிபட்டால் ஜுரம், காய்ச்சல் தீர்ந்து உடல் வெப்பம் தணியும் எனக் கூறி அருளினார் சிவபெருமான்.

சிவபெருமான் பைரவர், வீரபத்திரர், சோமாஸ் கந்தர், தட்சிணாமூர்த்தி என்பது போன்ற 64 வடிவங்களில் அருள்பாலிக்கிறார். அவற்றில் ஒரு திருமேனி வடிவம்தான் ஜுரஹரேஸ்வரர். இந்த வடிவில் சிவபெருமான் இரண்டு தலைகள், ஏழு கைகள், நான்கு கொம்புகள், மூன்று கால்கள் கொண்ட தோற்றத்தில் காட்சி தருகிறார்.

ஸ்ரீரங்கம் கோவில் கோபுரம் போன்று இக்கோவிலிலும் பிரணவாகார விமானம் கோபுரம் இருக்கிறது. இந்த கோபுரத்தில் நான்கு புறமும் ஜன்னல்கள் உள்ளன. காய்ச்சல், ஜுரம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடும் போது இந்த கோபுர ஜன்னல் வழியே வருகிற காற்று, வெளிச்சம் போன்றவை பக்தர்களின் காய்ச்சல் போன்ற பல நோய்களை போக்குவதாகக் கூறப்படுகிறது. கோயிலின் கருவறையில் கருங்கல்லாலான ஜன்னல் இருக்கிறது.

சிற்பக்கலை பொக்கிஷம்

மிகப் பழமையான கோவில் என்பதாலும் மிக அழகிய நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் கொண்டதாலும், இக்கோவில் தொல்லியல் துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இக்கோவிலில் உள்ள சிரிக்கும் தோற்றத்தில் உள்ள நந்தி, கோவில் விமானம் மற்றும் கருவறையின் அமைப்பு, கோவில் விமானத்தின் அடிச் சுற்றில் உள்ள சிற்பங்கள், படிக்கட்டுகள், கோவில் விமானம் மற்றும் கருவறையில் உள்ள கருங்கல் ஜன்னல்கள் ஆகியவற்றின் அழகும், கலை நுணுக்கமும் நம்மை பரவசத்தில் ஆழ்த்தும். காஞ்சிபுரத்தில் நாம் தரிசிக்க வேண்டிய கோவில்களில் இதுவும் ஒன்றாக விளங்குகின்றது. இக்கோவில் ஒரு சிற்பக்கலை பொக்கிஷம் என்றால் அது மிகையாகாது.

பிரார்த்தனை

ஜுரம், காய்ச்சல் போன்ற பல நோய்கள் தீர இங்கு வந்து இறைவனை வேண்டிக் கொள்கின்றனர்.

Read More
இளையனார்வேலூர்  பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

இளையனார்வேலூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

வேலுக்கென்று தனிச் சன்னதி உடைய முருகன் தலம்

காஞ்சிபுரம் – செங்கல்பட்டு சாலையில், வாலாஜாபாத்தில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் உள்ள இளையனார்வேலூர் என்ற ஊரில் அமைந்துள்ளது பாலசுப்பிரமணிய சுவாமி கோவில். இளையனார் என்றால் முருகன், வேலூர் என்றால் முருகனின் வேல் விழுந்த இடம் என்பது பொருள். இக்கோவிலில் முருகப் பெருமான் தனிச் சந்நிதி கொண்டு, தேவியர்கள் இன்றி தனி முருகப்பெருமானாக (பிரம்ம சாஸ்தா கோலத்தில்) சுமார் ஆறடி உயரத்தில் நின்றகோலத்தில் காட்சி தருகிறார். இக்கோவிலில் கருங்கல்லிலான வேலானது, தனிச் சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வேறு எந்த முருகன் கோவிலிலும் வேலுக்கென்று தனிச் சன்னதி கிடையாது. இந்த வேல் சன்னதிக்கும் இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன. பாதி வள்ளியும், பாதி தெய்வானையும் ஒருங்கே அமைந்த கஜவள்ளியாக இங்கே எழுந்தருளி இருக்கிறார்கள். வள்ளி, தெய்வயானை இணைந்த கஜவள்ளி தோற்றத்தை நாம் ஒரு சில தலங்களில்தான் தரிசிக்க முடியும்.

தல வரலாறு

காசிப முனிவர், சேயாற்றங்கரையில் தங்கி உலக நலன் கருதி வேள்வி செய்யத் தொடங்கினார். அவ்வேள்வியை மலையன், மாகறன் என்ற இரு அசுரர்கள் தடுத்து இடையூறு விளைவித்தனர். இவ்விரு அசுரர்களும் மாகறல் ஈஸ்வரனிடம் அழியாத வரம் பெற்றவர்களாவர்.

காசிப முனிவர் கடம்பரநாதரையும், அம்பிகை ஆவுடை நாயகியையும் வணங்கி, வேள்விக்கு மலையன், மாகறன் என்ற இரு அசுரர்கள் தொல்லை கொடுப்பதைச் சொல்லி முறையிட்டார். இறைவனும் இறைவியும் காட்சியளித்து முருகக் கடவுளை அழைத்து வேலாயுதம் தந்து வேள்விக்கு ஏற்பட்டுள்ள இடையூறை நீக்கிடக் கட்டளையிட்டனர். முருகப்பெருமானும் அந்த மலையன், மாகறனை வதம் செய்து வேள்வியை நல்ல முறையில் நடத்த உதவினார். அந்த வேலை முருகப்பெருமான் இளையனார் வேலூரில் நாட்டினார். இந்த வேல் எவ்வளவு ஆழத்தில் பதிந்துள்ளது என்பது இன்றுவரை அறியப்படாத தகவலாகச் சொல்லப்படுகிறது.

அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை, தமது திருப்புகழ் பாடலில் போற்றிப் பாடியுள்ளார்

Read More
செட்டிபுண்ணியம்  ஸ்ரீ யோக ஹயக்ரீவர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

செட்டிபுண்ணியம் ஸ்ரீ யோக ஹயக்ரீவர் கோவில்

ஹயக்ரீவர் யோகநிலையில் இருக்கும் அபூர்வ தோற்றம்

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டுக்கு அருகே உள்ள சிங்கப்பெருமாள் கோவிலிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து 50 கி.மீ. தொலைவிலும் உள்ளது செட்டிபுண்ணியம். பழமையான இந்தக் கோவிலில் மூலவர் வரதராஜப் பெருமாள். தாயார் ஹேமாம்புஜவல்லி. உற்சவர். தேவநாதப் பெருமான் மற்றும் யோக ஹயக்ரீவர். இந்தக் கோவிலில் உள்ள யோக ஹயக்ரீவர் மிகவும் பிரசித்தம். அதனால் இக்கோவிலை செட்டிபுண்ணியம் ஹயக்ரீவர் கோவில் என்றே மக்கள் கூறுகின்றனர். 'ஹயம்' என்றால் 'குதிரை' மற்றும் 'க்ரீவம்' என்றால் 'கழுத்து'. உடம்பில் கழுத்து வரை குதிரை உருவம் கொண்ட தெய்வம் என்று ஹயக்கிரீவர் குறிப்பிடப்படுகிறார்.

அந்நிய படையெடுப்பில் இருந்து காப்பாற்ற வேண்டி, 1848 ஆம் ஆண்டு திவ்ய தேசமான திருவஹீந்திரபுரம் கோவிலிலிருந்து இக்கோவிலுக்கு தேவநாத பெருமாள், ஹயக்ரீவர் விக்கிரகங்களும், பின்னர் தஞ்சாவூரிலிருந்து ராமர், சீதை, லட்சுமணன், அனுமார் விக்கிரகங்களும் கொண்டுவரப்பட்டன. அன்றிலிருந்து இந்த தெய்வங்கள் இக்கோவிலில் அருள்பாளித்து வருகின்றனர்.

இங்குள்ள குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவ மூர்த்தி நான்கு கைகளுடன் சங்கு, சக்கரதாரியாக யோக நிலையில் பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார். அனைத்து ஆலயங்களிலும் ஹயக்ரீவர் மடியில் லஷ்மி தேவி அமர்ந்துள்ள காட்சியே இருக்கும். ஆனால் அதற்கு மாறாக இங்கு ஹயக்ரீவர் யோக நிலையில் அபய முத்திரைக் காட்டியபடி ஸ்ரீதேவநாதன் எனும் பெயரில் தனி சன்னதியில் காணப்படுவது விசேடக் காட்சி ஆகும்.

கல்வியில் முன்னேற்றம் கிடைக்க ஏலக்காய் மாலை

இந்த ஆலயத்தில் உள்ள யோகஹயக்ரீவரை திருவோண நட்சத்திரத்தன்றும், புதன்கிழமையிலும் ஏலக்காய் மாலை சாத்தி வழிபடுவது பலன் தரும் என்பது நம்பிக்கை ஆகும். யோக ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சார்த்தி வணங்கினால் கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும், ஞாபக சக்தி கூடும் . ஹயக்ரீவரின் பாதத்தில் தாம் எடுத்துச் செல்லும் பேனா மற்றும் பென்சிலை வைத்து வணங்கிய பின் அதை எடுத்து செல்கின்றனர். கல்விக்காக வேண்டுபவர்கள் மட்டும் இன்றி இசை, நடனம் போன்ற கலைகளிலும் சிறந்து விளங்குவதற்கும் , தமது தொழிலில் தடைகள் அகலவும் இங்குள்ள ஹயக்ரீவரை வந்து வழிபடுகிறார்கள். பேச முடியாதவர்கள் தேன் நிவேதனம் செய்து தினமும் சாப்பிட்டு வர பேசும் சக்தியை ஹயக்ரீவர் அருள்வார் என்பதும் நம்பிக்கை. இந்தக் கோவில் திருமணத் தடை, தொழிலில் தடை போன்றவற்றிற்கும் பரிகார ஸ்தலமாய் விளங்குகிறது. தல விருட்சம் அழிஞ்சல் மரம். இந்த மரத்தில் நூல், வேண்டுதல்கள் எழுதிய காகிதங்கள் முதலியவற்றைக் கட்டி, படிப்பிற்கும். குழந்தைப் பேற்றுக்கும் வேண்டிக் கொள்கிறார்கள்.

Read More
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில்

வரதராஜப் பெருமாள் கருட சேவை

108 வைணவத் திவ்ய தேசங்களில், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் முக்கியனமான தலமாகும். இங்கு, வருடத்துக்கு மூன்று கருட சேவை நடைபெறும் என்றாலும், வைகாசி மாதம் வரும் கருடசேவை உலகப் பிரசித்தமானது. இவ்விழா வைகாசி விசாக நாளில் கொண்டாடப்படுகின்றது. இந்த கருட சேவையை கண்டு மகிழ்ந்து ஆழ்வார்கள் தனி மங்களாசாசனமே செய்துள்ளார்கள்.

ஒரு விநாடி தரிசனம் - கருட சேவையை திருக்குடைகளால் மறைப்பதற்கான பின்னணி

கருட சேவையின் பொழுது அலங்காரம் முடிந்து பெருமாள் புறப்படும் நேரத்தில் கருட சேவையை ஒரு விநாடி பொழுது திருக்குடைகளால் மறைப்பார்கள். இது இங்கு மட்டுமே நடைபெறும் வழக்கமாகும். இதற்கு ஒரு விநாடி தரிசனம் என்று பெயர். இதற்கு காரணம் முற்காலத்தில் சோளிங்கர் நகரில் வாழ்ந்த தொட்டாச்சாரியார் என்னும் விஷ்ணு பக்தர். அவர் காஞ்சியில் நடைபெறும் அனைத்து சேவைகளையும் தவறாது தரிசிப்பதை வழக்கமாகக்கொண்டிருந்தார். அவரால் ஒரு முறை காஞ்சிபுரம் கருட சேவைக்கு செல்ல முடியவில்லை. அதனால் மனம் வேதனையுற்ற, அவர் சோளிங்கரில் இருந்தபடியே பெருமாளை பிரார்த்தித்துக் கொண்டிருந்தார். தன் பக்தனுக்கு பெருமாள் மனமிரங்கி சோளிங்கரில் அவருக்கு கருட தரிசனம் தந்தார். இதனைக் கருத்தில் கொண்டே இன்றும் கருட சேவை நடைபெறும் பொழுது சேவையை திருக்குடைகளால் ஒரு விநாடி பொழுது மறைக்கிறார்கள்.

ராபர்ட் கிளைவ் காணிக்கையாக தந்த மகர கண்டி ஆபரணம்

ஆங்கிலேயர் ஆட்சியை இந்தியாவில் நிறுவக் காரணமாய் இருந்த ராபர்ட் கிளைவ், மகர கண்டி என்னும் ஆபரணத்தை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்குக் காணிக்கையாக கொடுத்தார். ஒவ்வொரு கருட சேவையின் போதும், ராபர்ட் கிளைவ் மகர கண்டி ஆபரணத்தை இன்றும் பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.

இந்த ஆண்டு வைகாசி விசாக கருடசேவை 2.6.2023 வெள்ளிக்கிழமையன்று நடைபெறுகின்றது

Read More
காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில்

ஐந்து தலை நாகம் குடை பிடிக்கும் அபூர்வ முருகன்

காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோவிலுக்கும்,காமாட்சியம்மன் கோயிலுக்கும் நடுவில் அமைந்துள்ளது குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்தக் கோவிலில்தான் கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. கருவறையில் முருகப்பெருமான் நான்கு கரங்களுடன் ஜபமாலை, கமண்டலம் ஏந்தி தவக்கோல மூர்த்தியாகக் காட்சிதருகிறார். முருகன் தவக்கோலத்தில் இருப்பதால், இங்கு வள்ளி, தெய்வயானை சந்நிதிகள் தனியே உள்ளன. இந்த முருகனை தரிசித்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்பதால் இவரை 'ஒருவரில் மூவர்' என்று விசேஷ பெயரிட்டு அழைக்கின்றனர்.

நாகதோஷம் போக்கும் முருகன்

பொதுவாக பெருமாளுக்குத்தான் நாகம் குடை பிடிப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால் இக்கோவிலில், கல்யாண சுந்தரர் என்று அழைக்கப்படும் முருகப்பெருமானின் உற்சவத் திருமேனிக்கு ஐந்து தலை நாகம் ஒன்று குடை பிடித்தபடி இருக்கிறது. இங்குள்ள `அனந்த சுப்ரமண்யர்’ என்ற உலா மூர்த்தி வடிவம் மிகச் சிறப்பானது. இவருக்கு ஐந்து தலை நாகம் ஒன்று குடை பிடித்தபடி இருக்கிறது. இந்த மூர்த்தியை தரிசித்து வழிபட்டால் நாக தோஷங்கள் விலகும் என்கிறார்கள். அதுபோலவே வள்ளி, தெய்வயானை உலா மூர்த்தத் திருமேனிகளிலும் மூன்று தலை நாகம் குடை பிடித்தபடி உள்ளன. வள்ளி தெய்வயானைக்கு மூன்று தலை நாகம் குடை பிடிக்கிறது. இப்படி நாகம் குடை பிடித்தபடி காட்சி தரும் முருகனை தமிழ்நாட்டில் நாம் வேறு எங்கும் காணமுடியாது. இந்த முருகனை நாகம் வழிபடுவதால் இவருக்கு நாக சுப்பிரமணியர் என்ற பெயரும் உண்டு. இந்த நாக சுப்பிரமணியர் வழிபட்டால் நாக தோஷங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
திருக்காலிமேடு சத்தியநாதர்  கோவில்

திருக்காலிமேடு சத்தியநாதர் கோவில்

ஏழு சீடர்களுடன் காட்சி தரும் அபூர்வ தட்சிணாமூர்த்தி

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருநெறிகாரைக்காடு. இத்தலம் திருக்காலிமேடு என்று தற்போது அழைக்கப்படுகின்றது. இறைவன் திருநாமம் சத்தியநாதர். இத் தலம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கும் முற்பட்டது.

காஞ்சீபுரத்தின் ஆதி கோவிலான இத்தலத்தில், இறைவன் திருமேனி மணலால் ஆனது. காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் கோவிலே எல்லா சிவன் கோவில்களுக்கும் பொதுவான அம்பிகை சன்னதியாக விளங்குகின்றது. அதனால் தனிப்பட்ட அம்பிகை சன்னதி எந்த சிவன் கோவிலிலும் கிடையாது. ஆனால் இக்கோவிலில் பிரமராம்பிகை என்ற திருநாமத்துடன், அம்பிகை உற்சவ திருமேனியாக எழுந்தருளி இருக்கிறாள். அம்பிகையின் உலோகத் திருமேனியின் வலது கரத்தில் மச்ச ரேகையும், தான்ய ரேகையும், மீனின் வடிவம் மற்றும் நெற்கதிர் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது ஒரு தனிச்சிறப்பாகும்.

பொதுவாக தட்சிணாமூர்த்தி, இறைவனின் கருவறை சுற்றுச்சுவரில் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நான்கு சீடர்களுடன் எழுந்தருளி இருப்பார். ஆனால் இந்தத் தலத்தில் தட்சிணாமூர்த்திப் பெருமான் ஏழு சீடர்களுக்கு ஞானம் தருவதாக அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு வித்தியாசமான அமைப்பாகும். இவரிடம் வேண்டிக்கொண்டால் தெளிந்த ஞானம் பிறக்கும்.

Read More
திருக்கழுக்குன்றம் ருத்திர கோடீஸ்வரர் கோவில்

திருக்கழுக்குன்றம் ருத்திர கோடீஸ்வரர் கோவில்

நந்தி பகவான் தனது மனைவியுடன் காட்சிதரும் தேவார வைப்புத் தலம்

செங்கல்பட்டு - மகாபலிபுரம் சாலை வழியில், 14 கி மீ தொலைவில் அமைந்துள்ள தேவார வைப்புத் தலம் திருக்கழுக்குன்றம் ருத்திர கோடீஸ்வரர் கோவில். இறைவனின் திருநாமம் ருத்திர கோடீஸ்வரர். இறைவியின் திருநாமம் பெண்ணின் நல்லாள் என்கிற அபிராம நாயகி.

இக்கோவிலின் நுழைவு வாசல் அருகில் உள்ள சுவற்றில், நந்தி பகவான் தனது மனைவி சுயம்பிரபாதேவி என்கின்ற சுயசாம்பிகையுடன் புடைப்புச் சிற்பமாக காட்சி தருவது, எந்த தலத்திலும் காணமுடியாத ஒரு அரிய காட்சியாகும். இத்தலத்து நந்தி பகவான், கருட பகவானின் ஆணவத்தை அழிப்பதற்காக, தன் மூச்சுக் காற்றினால் அவரை பூமிக்குள் அழுத்தி புதைத்தார். அதனால், மற்ற தலங்களில் தலையை சாய்த்து அமர்ந்திருப்பது போல் இல்லாமல், இத்தலத்து நந்தி பகவான் தலையை நேராக நிமிர்த்தி,நாசி புடைக்க உக்கிர கோலத்துடன் காட்சி தருகிறார்.

தீராத நோய்களைத் தீர்க்கும் பிரதோஷ வழிபாடு

இக்கோவிலில் 16 பிரதோஷங்கள் தொடர்ந்து வழிபட்டால், இருதய நோய், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்,கிரக சஞ்சார பாதிப்புகள் முதலியவை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோவில்

வெறும் தரையில் சயனித்த கோலத்தில் காட்சி தரும் திவ்ய தேச பெருமாள்

சென்னையில் இருந்து 56 கி.மீ. தொலைவில் உள்ள, மாமல்லபுரத்தில் அமைந்துள்ள திவ்யதேசம் தலசயனப் பெருமாள் கோவில். மூலவர் தலசயனப் பெருமாள். தாயார் திருநாமம் நிலமங்கை.

பொதுவாக சயனித்த கோலத்தில் காட்சி தரும் பெருமாள் பாம்பணை மீது படுத்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஆனால் இந்தக் கோவிலில் மூலஸ்தானத்தில் நான்கு திருக்கரங்களுடன் பூதேவி, ஸ்ரீதேவி இல்லாமல், படுத்த நிலையில் வேறு எங்கும் இல்லாத எளிமையான திருக்கோலத்தில் தல சயனப் பெருமாள் காட்சியளிக்கிறார். ஆனால் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் உள்ள அரிய காட்சி வேறு எங்கும் காண முடியாத அதிசய காட்சியாகும். இந்த பெருமாள் தன் வலது கரத்தை தன் மார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்துள்ளார். இதனால் தலத்தில் உள்ள பெருமாளைத் தரிசித்தால் திருப்பாற்கடல் வைகுண்ட நாதனைத் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

பூரம், அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம்

மானிடராக பிறந்தவர்கள் இந்தப் பெருமாளை ஒரு முறையாவது தரிசித்தால் முக்திப்பேறு கிட்டும். நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும். சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. முன்னோர் சாபம், முனிவர் சாபம், விலங்குகள் சாபம் மற்றும் கடன் தொல்லைகள் நீங்கும்.

இத்தல தலசயனப் பெருமாளையும், நிலமங்கைத் தாயாரையும் அர்ச்சித்து வழிபட்டால் வீடு, நிலம் வாங்கும் யோகம் அமையும். பூரம் மற்றும் அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் இங்கு வழிபட நற்பலன்கள் கிட்டும்.

Read More
திருக்கழுக்குன்றம் ருத்திர கோடீஸ்வரர் கோவில்

திருக்கழுக்குன்றம் ருத்திர கோடீஸ்வரர் கோவில்

சிவராத்திரி அன்று வழிபட வேண்டிய சிறப்பு தலம்

ஒருமுறை வழிபட்டாலே கோடிமுறை வழிபட்ட பலனைத் தரும் தலம்

சிவராத்திரி அன்று வழிபட வேண்டிய சிறப்பு தலங்கள் திருவைகாவூர், காளஹஸ்தி, திருவண்ணாமலை, திருக்கழுக்குன்றம், ஓமாம்புலியூர் கோகர்ணம், ஸ்ரீசைலம் ஆகியவை ஆகும். காசி, சிதம்பரம், திருவாரூர், திருவண்ணாமலை, மதுரை, காளஹஸ்தி, காஞ்சி போன்ற தலங்களில் உள்ள கோவில்கள் சிவபெருமானின் உடலாகவும், திருக்கழுக்குன்றம் ருத்திர கோடீஸ்வரர் கோவில் அவரின் இருதயம் ஆகவும் விளங்குகின்றது. இக்கோவில் 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலுக்கும் முந்தையது. இறைவனின் திருநாமம் ருத்திர கோடீஸ்வரர். இறைவியின் திருநாமம் பெண்ணின் நல்லாள் என்கிற அபிராம நாயகி.

ஒரு சமயம் தேவர்களை துன்புறுத்திய அசுரர்களை அழிப்பதற்காக சிவபெருமான் தன் திருமேனியில் இருந்து ஒரு கோடி ருத்திரர்களை தோற்றுவித்தார். அவர்கள் அசுரர்களுடன் போரிட்டு, அவர்களை அழித்தனர். அசுரர்களைக் கொன்ற பாவம் தீர்க்க சிவபெருமானை வேண்டி நின்றனர். சிவபெருமான், அவர்கள் திருக்கழுக்குன்றம் தலத்தில் தனித்தனியே சிவபூஜை செய்தால் பாவம் விலகும் என்று அருளினார். ஒரு கோடி ருத்திரர்களும் திருக்கழுக்குன்றம் தலத்தில் தனித்தனியே சிவலிங்கம் அமைத்து, அபிஷேக ஆராதனை செய்தனர். பூஜையின் முடிவில் ஒரு கோடி லிங்க உருவத்தையும் தன்னுள் அடக்கி சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக இத்தலத்தில் எழுந்தருளினார்.கோடிருத்திரர்களின் வேண்டுகோளுக்கிணங்க, இறைவனின் திருநாமம் ருத்ரகோடீஸ்வரர் எனவும், தலம் ருத்ர கோடி தலம் எனவும் ஆயிற்று.

நாம் இத்தலத்தில் ஒரு முறை தானம் செய்தாலும், ஜெபம் செய்தாலும் அது கோடி முறை செய்ததற்கு ஈடான பலனைத் தரும். கோடி ருத்திரர்கள் சிவராத்திரி வழிபாடு செய்த தலம் என்பதால், சிவராத்திரியன்று இங்கு வழிபடுவது சிறந்த பலன்களை கொடுக்கும்.

செங்கல்பட்டு - மகாபலிபுரம் சாலை வழியில், 14 கி மீ தொலைவில் அமைந்துள்ளது திருக்கழுக்குன்றம்.

Read More