சிருங்கேரி சாரதாம்பிகை கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

சிருங்கேரி சாரதாம்பிகை கோவில்

சிருங்கேரி சாரதாம்பிகை

கர்நாடகா மாநிலத்தில், சிக்மகளூர் மாவட்டத்தில், துங்கபத்திரை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது சிருங்கேரி சாரதாம்பிகை கோவில். ஆயகலைகள் அறுபத்து நான்கினிற்கும் தெய்வமாக திகழும் சரஸ்வதி தேவிக்கு, நாற்பதுக்கும் அதிகமான திருநாமங்கள் உள்ளன. அவற்றில் சில கலைமகள், சகலகலாவல்லி, நாமகள், சாவித்ரி, சாரதா ஆகியவை ஆகும். சாரதா என்றால் சரஸ்வதி அல்லது வாக்கிற்கு அதி தேவதை என்று பொருள். லலிதாம்பிகையின் ஆயிரம் திருநாமங்களில் 123 வது திருநாமமாக அமைவது சாரதாராத்யா என்னும் திருநாமம். சாரதாராத்யா என்றால் விஷ்ணு, பிரம்மா ஆகியோரால் ஆராதிக்கப்பட்டவள் என்று பொருள். 'சாரத' என்ற சொல்லுக்குப் பண்டிதர்களால் பூஜிக்கப்படுபவர் என்ற அர்த்தமும் உண்டு.

கருவறையில் சாரதா தேவியானவள் 'பிரம்ம வித்யா' சொரூபமாக அதாவது பிரம்ம, விஷ்ணு, சிவன் மற்றும் சக்தி சொரூபங்களாகிய சரஸ்வதி, லட்சுமி, பார்வதி அனைவரையும் உள்ளடக்கிய ஒரே சொரூபமாக ஸ்ரீசக்ர பீடத்தில், கையில் ஜெப மாலையுடன் சிம்மாசனத்தில் மேல் அமர்ந்திருக்கிறார். அவரது நான்கு கைகளில் மேல் வலது கையில் கிளி இருக்கிறது. கீழிருக்கும் வலது கை சின்முத்திரை காண்பிக்கிறது. மேல் இடது கை அமிர்த கலசத்தை ஏந்தியுள்ளது. கீழ் இடது கை புத்தகத்தை வைத்துள்ளது. அமிர்த கலசம் சாகாமையையும், புத்தகம் மேலான அறிவையும் குறிக்கின்றன. ஜெப மாலையோ, பிரபஞ்சம் தோன்றும் விதையாக உள்ளது. பிரம்மனுடன் அடையாளப்படுத்திக்கொள்ளும் உயிரின் விழிப்புணர்வை சின்முத்திரை பிரதிபலிக்கிறது.

சரத் காலத்தில் ஆராதிக்கப்பட்டவள் சாரதாம்பிகை. சரத்காலம் என்பது இலையுதிர் காலம். இது ஐப்பசி, கார்த்திகை மாதங்களைக் கொண்டது. இந்தக் காலத்தில் வரும் நவராத்திரி, சாரதா நவராத்திரி எனப்படும். வசந்த காலத்தில் வரும் நவராத்திரி, வசந்த நவராத்திரி எனப்படும். இந்த இரு நவராத்திரி காலங்களும் அம்பிக்கைக்கு மிகவும் உகந்த பூஜை காலமாகும். ஆகவே இந்தக் காலத்தில் சிறப்பு பூஜைகள் இங்கு நடத்தப்படுகின்றன. கோலாகலமாக நடைபெறும் நவராத்திரி விழாவில், ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இங்கு திரண்டு வந்து, சாரதாம்பிகையை வழிபடுகின்றனர்.

நுண்ணறிவை அதிகம் கொண்டு மேதையாக ஆக சாரதா வழிபாடு மிகவும் அவசியம். சிருங்கேரி சாரதாம்பிகையை தரிசிப்பதன் மூலம் பிரம்மா, விஷ்ணு, சிவன், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய அனைத்து தெய்வங்களின் அருளையும் பெறலாம் என்பது ஐதீகம். சாரதாம்பிகையே சரஸ்வதி என்பதால் கல்வியை ஆரம்பிக்கும் இளம் சிறார்கள் இங்கு வந்து அதைத் தொடங்குகின்றனர்.

Read More
மைசூர் சாமுண்டீஸ்வரி கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மைசூர் சாமுண்டீஸ்வரி கோவில்

மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன்

மைசூரில் இருந்து சுமார் 13 கி.மீ தொலைவில் உள்ளது சாமுண்டி மலை . ஏறத்தாழ 3500 அடி உயரத்தில் உள்ள இந்த மலை மேல் தான் சாமுண்டீஸ்வரி கோவில் உள்ளது . துர்கை அம்மனின் ரௌத்திர கோலம்தான் சாமுண்டீஸ்வரி அம்மன். 51 சக்தி பீடங்களில், இத்தலம் சம்பப்பிரத பீடம் ஆகும். சாமுண்டீஸ்வரி அம்மன் இங்கே ஆதி சக்தியாக வணங்கப்படுகிறார். மேலும் இவள் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்களும் ஒன்றான மகா பிரம்மம் என்றும், மகா சக்தி என்றும் பக்தர்களால் வழிபடப்படுகிறார்.

முன்னொரு காலத்தில் மைசூர் நகரமானது, மகிஷாசூரன் என்ற அரக்க மன்னனால் ஆளப்பட்டது. இவனது பெயரிலுள்ள மகிஷா என்ற வார்த்தை காலப்போக்கில் மருவி மைசூர் என்று தற்போது அழைக்கப்பட்டு வருகிறது. பெண் தெய்வமான சாமுண்டீஸ்வரி, மகிஷாசுரனை வதம் செய்து அந்த ஊர் மக்களை அரக்கனிடம் இருந்து காப்பாற்றியதால், காவல் தெய்வமாக மைசூர் நகரத்திலேயே தங்கிவிட்டாள் என்கிறது வரலாறு. சாமுண்டி மலைப்பாதையில் மகிஷாசுரன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு கையில் கத்தியும், மற்றொரு கையில் நாகபாசமும் கொண்டு உயர்ந்த வடிவில் மகிஷாசுரன் நிற்கிறான்.

கருவறையில் எட்டு கரங்களுடன் சாமுண்டீஸ்வரி அம்மன் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார். பழமையான இந்த விக்கிரகம் மார்க்கண்டேய மகரிஷியால் நிறுவப்பட்டது. சாமுண்டீஸ்வரி அம்மன் மூல விக்கிரகம் தங்க மூலாம் பூசப்பட்டது . மூலத்தான கதவுகள் வெள்ளியிலானது . அம்மனின் காலடியின் கீழ் மகிஷாசுரன் எருமை உடலுடனும், அசுரத் தலையுடனும் விழிகள் பிதுங்கிய வண்ணம் இருக்கிறான். திரிசூலத்தால் அம்மன் இவனைக் குத்தியபடி காட்சியளிக்கிறாள். மூன்றாவது ஆடிவெள்ளியில் தேவி அவதரித்தார் என்பதால், ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் இங்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

மைசூர் ராஜ வம்சத்தின் குல தெய்வம் சாமுண்டீஸ்வரி அம்மன். 1573ம் ஆண்டு மைசூரை நான்காம் சாமராஜ உடையார் ஆட்சி செய்து கொண்டிருந்தார். ஒருநாள் இவர் தனது குல தெய்வமான சாமுண்டி தேவியை தரிசிக்கச் சென்றார். தரிசித்து முடிந்ததும் பல்லக்கில் ஏறி மைசூருக்குப் புறப்பட்டார். சிறிது தொலைவு சென்ற பின் திடீரென இடி, மின்னல், மழை என்று இயற்கை சீற ஆரம்பித்தது. பாதுகாப்புக்காக ஒரு பெரிய மரத்தின் அடியில் பல்லக்கை வீரர்கள் நிறுத்தினார்கள். 'நாங்கள் பத்திரமாக ஊர் திரும்ப அருள்புரிவாய் அம்மா' என்று அந்த மரத்தடியிலிருந்தே சாமுண்டிதேவியை வேண்டியபடி அன்னை கோயில் கொண்டிருந்த மலையுச்சியைப் பார்த்தார். மழை ஒரு திரையாகி ஆலயம் தெரியாதபடி மறைத்தது. சரி, சற்றுத் தொலைவு சென்று பார்க்கலாம் என தன் வீரர்களுடன் சில அடி தூரம் மன்னர் நகர்ந்தபின், அவர் அதற்கு முன் பாதுகாப்புக்காக தங்கியிருந்த மரத்தில் இடி விழுந்து மரம் தீப்பற்றி எரிந்தது. தன்னைக் காப்பாற்றவே அந்த இடத்திலிருந்து தேவி, கோவிலைத் தெரியாமல் செய்திருக்கிறாள் என உணர்ந்த சாமராஜ உடையார், அதற்கு நன்றிக் கடனாக மைசூரின் எந்தப் பக்கத்திலிருந்து பார்த்தாலும் கோவில் தெரியும் வண்ணம் சாமுண்டீஸ்வரிக்கு ஆலயம் எழுப்பினார்.

உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா திருவிழா

சாமுண்டீஸ்வரி அம்மன் விஜயதசமி அன்று மகிஷாசுரனை வதம் செய்தாள். அதனால் தான் மைசூரில் தசரா பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. கிபி 1610-ம் ஆண்டில் இருந்து மைசூரை ஆண்ட உடையார் மன்னர்கள், போரில் வென்றதை நினைவுக்கூறும் வகையில் ஆண்டுதோறும் விஜயதசமி பண்டிகையின்போது 10 நாட்கள் தசரா விழாவை கொண்டாட தொடங்கினர். தசரா பண்டிகையின் முதல் நாள் மைசூர் உடையார் வம்ச மன்னர் சாமுண்டீஸ்வரி அம்மனை வணங்கி சிறப்பு பூஜைகள் செய்து விழாவினை தொடங்கி வைப்பார். பின்னர் புகழ்பெற்ற அரச தர்பார் வைபோகம் நடைபெறும் அதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு அரச வம்சத்தினரின் தர்பார் கோலத்தினை காண்பார்கள். நவராத்திரி ஒன்பது நாட்களும் சிறப்பான பூஜைகளும், கொண்டாட்டங்களும் மைசூரில் நடக்கும். விஜயதசமி தினத்தன்று ஜம்பூ சவாரி எனும் யானைகள் அணிவகுப்பு சிறப்பானது. அலங்கரிக்கப்பட்ட தலைமை யானையின் மீது சாமுண்டீஸ்வரி அம்மன் 750 கிலோ எடை கொண்ட தங்க மண்டபத்தில் பவனி வருவது தசரா திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாகும்.

ஞாயிறு, செவ்வாய், வெள்ளியன்று இத்தலத்தில் கூட்டம் அதிகம் இருக்கும். இந்த அன்னையை வணங்கினால், எதிரிகளை எளிதில் வெற்றிகொண்டு, வாழ்வில் நல்லருள் பெறலாம் என்பது ஐதீகம்.

Read More
ஹொரநாடு அன்னபூர்ணேசுவரி கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

ஹொரநாடு அன்னபூர்ணேசுவரி கோவில்

ஹொரநாடு அன்னபூர்ணேசுவரி அம்மன்

கர்நாடகா மாநிலம் சிக்மகளூரில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில், அடர்ந்த காட்டுப் பகுதியில், பத்ரா நதிக்கரையில் அமைந்திருக்கிறது ஹொரநாடு அன்னபூர்ணேசுவரி கோவில். அன்னபூரணி என்றாலே அன்னத்தை பூரண திருப்தியோடு பக்தர்களுக்கு அளிப்பவள் என்று பொருள். அன்னபூர்ணேஸ்வரி கோவிலில் உச்சிகால பூஜை நடந்து முடிந்த பிறகு அனைவருக்கும் சாப்பாடு வழங்கப்படுகிறது. அன்னபூரணியை தரிசித்துவிட்டு ஒருவர் கூட பசியுடன் கோவிலை விட்டு திரும்பி செல்ல முடியாது. கோவிலில் அம்மனை தரிசிக்கும் சிறு குழந்தைகளுக்கு கூட பசும்பால் தரப்படுகிறது.

கருவறையில் அன்னபூர்ணேசுவரி தங்கத்தாலான திருமேனி உடையவளாய், நான்கு கரங்களுடன் பீடத்தின் மேல் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார், அன்னையின் மேல் இரு கரங்கள் சங்கும் சக்கரமும் தாங்கி இருக்கின்றன. அபய முத்திரையுடன் விளங்கும் அன்னையின் வலது கீழ் கையில் காயத்ரி தேவியின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. வரத முத்திரை தாங்கி நிற்கும் இடது கீழ் கையில் ஸ்ரீ யந்திரம் பொறிக்கப்பட்டுள்ளது.

பார்வதிதேவி அன்னபூரணியாக அவதரித்த வரலாறு

ஒரு முறை, சிவபெருமானுக்கும்,பார்வதி தேவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிவபெருமான் உணவுப்பண்டங்களை மாயை என்று கூறினார். பார்வதியோ உணவு மாயை அல்ல என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சிவபெருமான் உணவு மாயை என்பதை நிரூபிக்க தட்பவெப்ப நிலை மாறாமல் நிறுத்திவிட்டார். இதனால் தாவரங்கள் வளரவில்லை. உணவு பொருட்கள் ஏதும் மக்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் நம் பூமியில் பஞ்சம் ஏற்பட்டது. இதனை நீக்க பார்வதி தேவியானவள், அன்னபூரணியாக அவதாரம் எடுத்து அனைவருக்கும் உணவினை வழங்கி பஞ்சத்தை போக்கி அருள்பாலித்தாள். இதன் பிறகு அன்னபூரணி நமக்கெல்லாம் உணவு அளிக்க நம் பூமியிலேயே தங்கிவிட்டாள் என்பது வரலாற்று கதை.

இந்த அன்னபூர்ணேசுவரி கோவிலில் அர்ச்சனை செய்தால் இங்கு தரப்படுகின்ற முக்கிய பிரசாதம் அரிசி தான். அந்த அரிசியை கொண்டு வந்து நம் வீட்டின் அரிசி ஜாடியில் போட்டு வைத்தால், என்றும் உணவுக்கு நம் வீட்டில் பஞ்சமே இருக்காது. நம் வீட்டில் உள்ள பாத்திரம் அட்சய பாத்திரமாக தான் என்றும் திகழும் என்பது நம்பிக்கை. அன்னபூர்ணேசுவரியை வணங்குபவர்களுக்கு, 'அன்னதோஷம்' என்னும் வறுமை அணுகவே அணுகாது.

Read More
ஆனேகுட்டே விநாயகர் கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

ஆனேகுட்டே விநாயகர் கோவில்

நெற்றியில் நாமம் தரித்த விநாயகர்

கர்நாடகா மாநிலம், உடுப்பியிலிருந்து சுமார் 31 கி.மீ தொலைவில் உள்ள கும்பாசி என்னும் ஊரில் ஆனேகுட்டே விநாயகர் கோவில் அமைந்துள்ளது. ஆனே என்றால் யானை, குட்டே என்பது சிறுகுன்றைக் குறிக்கிறது. யானை முகத்துடன் விநாயகர் குடியிருக்கும் குன்று என்பதே ஆனேகுட்டே என்றானது. கோவில் கருவறையில் விநாயகர் ஒரே கல்லிலான யானை முகம் கொண்ட 12 அடி உயரம் கொண்ட திருமேனியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இந்த விநாயகர் திருமேனியானது தமிழகத்தில் உள்ள விநாயகரின் வடிவமைப்பு போல் இல்லாமல், யானை போன்ற உருவ அமைப்பில் உள்ளது. இங்கு அமைந்துள்ள விநாயகரின் நான்கு கரங்களில், மேலிரு கரங்கள் வரம் தரும் வரஹஸ்தத்துடனும், கீழ் இரு கரங்கள் சரணடைந்தோரை காக்கும் அபயஹஸ்தத்துடனும் அமைந்திருக்கின்றன. இந்த விநாயகருக்கு நெற்றியில் திருநீறுக்குப் பதிலாக நாமம் அணியப்படுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இங்குள்ள விநாயகருக்கு விஷ்ணு ரூப கணபதி, விஷ்ணு ரூப பரமாத்மா, சித்தி விநாயகர், சர்வ சித்தி பிரதாய்கா என்ற பெயர்களும் உண்டு. தினமும் இவருக்கு வெள்ளிக்கவசம் சாற்றப் படுகின்றது.இந்த விநாயகர் சிலை வளர்ந்து வருவதாக பக்தர்களிடம் ஒரு நம்பிக்கையுள்ளது

திருவிழாக்கள்

இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, மார்கழி பிரம்மோற்சவம் ஆகியவை விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பறவைகளின் ஒலி கேட்டு தான், அதிகாலையில் நாம் எழுவோம். அந்தப் பறவைகளையே அதிகாலையில் எழுப்பவும், பறவைகள் மற்றும் கால்நடைகளுக்கு நோய் நொடி ஏற்படாமல் இருக்கவும் கார்த்திகை மாதத்தில், பட்சி சங்கர பூஜை என்னும் விசேஷ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

பிரார்த்தனை

கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், புத்திர பாக்கியம் மற்றும் வியாபாரத்தில் லாபம் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கின்றனர். இக்கோவிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் பக்தர்கள் விரும்பும் நாளில் 400 கிலோ அரிசி, 1008 அல்லது 125 தேங்காய்களால் விநாயகருக்கு அலங்காரம் செய்யயப்படுகிறது. இதனை மூடுகணபதி பூஜை, அரிசி கணபதி பூஜை என்கின்றனர்.

Read More
கொல்லூர் மூகாம்பிகை  கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

கொல்லூர் மூகாம்பிகை கோவில்

கொல்லூர் மூகாம்பிகை அம்மன்

அம்பிகையின் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகிய கொல்லூர் தலம், அம்பிகையின் காதுகள் விழுந்த பீடமாகப் போற்றப்படுகிறது. கொல்லூர் மூகாம்பிகை திருத்தலம் கர்நாடக மாநிலத்தின் தெற்கே, குடசாத்ரி மலையின் அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ அமைத்துள்ளது. மங்களூரிலிருந்து நூற்றி நாற்பது கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்த ஆலயம் சௌபர்ணிகையாற்றின் கரையோரமாக அமைந்திருக்கிறது.

மூகாம்பிகை தனது இரு கரங்களில் சங்கும் சக்கரமும் ஏந்திக் கொண்டு காட்சி அளிக்கிறாள். மேலும் இரண்டு கரங்களில் ஒரு கையில் அபயகரமும் மற்றொரு கையில் வரத கரம் தன் தாளை சுட்டிக்காட்டும் படி காட்டிக் கொண்டு பத்மாசனத்தில் அமர்ந்தபடி கருவறையில் வீற்றுள்ளாள். கன்னியாகுமரியில் பகவதி தேவியின் மூக்கில் மாணிக்க மூக்குத்தி அலங்கரிப்பது போல் கொல்லூரில் அவள் மார்பில், இடையில் மரகதம் பதித்த பொற்சரம் அலங்கரிக்கின்றது. கருவறையின் விமானம் முழுவதும் கெட்டியான தங்கத்தால் வேயப்பட்டுள்ளது.

இத்தலத்தில் முதன்முதலில் அம்பாள் மூகாம்பிகையானவள், சிலை வடிவில் இல்லை. மூலவராக சுயம்பு லிங்கம் மட்டுமே இருந்தது. சிவபெருமானின் லிங்கத்தில், அம்பாள் அரூபமாகவே பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருந்தார். ஆதிசங்கரர் இந்த கோவிலுக்கு வருகை தந்தபோது சுயம்பு லிங்கத்தை மட்டுமே தரிசனம் செய்தார். இந்த கோவிலில் இருக்கும் சுயம்பு லிங்கத்தை முதன்முதலில் வழிபட்டவர் கோல மகரிஷி ஆவார். லிங்கத்தில் அரூப வடிவில் மறைந்திருக்கும் அம்பாளை வெளிக்கொண்டு வருவதற்கு ஆதிசங்கரர் கடும் தவம் மேற்கொண்டார். ஆதிசங்கரரின் வேண்டுதலை ஏற்ற தேவி, மூகாம்பிகை வடிவில் ஆதிசங்கரருக்கு காட்சி தந்தால். அந்த ரூபத்தை மூகாம்பிகை சிலையாக உருவம் அமைத்து பிரதிஷ்டை செய்தார் ஆதிசங்கரர். ஆதிசங்கரர் மூகாம்பிகை மேல் தவம் புரிந்து எழ முயன்றார். அவரால் எழுந்திருக்க முடியவில்லை. அவருக்காக அம்பாளே கஷாயம் தயாரித்துக் கொடுத்தாள். அன்றிலிருந்து இரவு நேர பூஜைக்கு பின் கஷாயம் இங்கே பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இங்கு இருக்கும் அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. அலங்காரமும், ஆராதனையும் மட்டுமே நடைபெறும். அபிஷேகங்கள் எல்லாம் லிங்கத்திற்கு மட்டுமே நடைபெறுகிறது.

காளி தேவியுடனும், சரஸ்வதி தேவியுடனும் காட்சி தரும் மூகாம்பிகை

இத்தலத்தில் இருக்கும் லிங்கத்தின் நடுவே தங்க நிற கோடு இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. தங்க நிற கோடு இருப்பதை அபிஷேக நேரத்தில் மட்டுமே காண முடியும். லிங்கத்திற்கு இடது பக்கமாக பிரம்மா விஷ்ணு சிவன் இவர்கள் மூவரும், வலது பக்கமாக சரஸ்வதி லட்சுமி பார்வதி இவர்கள் மூவரும் வீற்றிருப்பதாக இருப்பதாக கூறப்படுகிறது. இங்கு வீற்றிருக்கும் லிங்கத்தை வணங்கினால் கோடி புண்ணியம் கிடைக்கும்.

முதன்முதலாக இந்த லிங்கத்தை கோல மகரிஷி வழிபட்டதால் கொல்லூர் என்ற பெயர் இந்த இடத்திற்கு வந்தது. இங்கு காட்சிதரும் ஸ்ரீ மூகாம்பிகையின் இரு பக்கங்களிலும் ஐம்பொன்னாலான காளி தேவியும், சரஸ்வதி தேவியும் காட்சி தருகின்றனர். இதனால் இவர்களுக்கு முப்பெரும் தேவியர் என்ற சிறப்பு பெயரும் உண்டு. அம்மனை சீவேலி என்று ஆலயத்தைத் திருவலம் செய்விக்கும் போது காலையில் உலா வருகின்ற தேவி காளியின் அம்சமாகவும், உச்சியில் உலா வருகின்ற தேவி திருமகளின் அம்சமாகவும் இரவில் உலா வருகின்ற தேவி கலைமகள் அம்சமாகவும் பாவிக்கப்படுகிறாள்.

சரஸ்வதியின் அம்சமான மூகாம்பிகை

கல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதியின் அம்சமான மூகாம்பிகையே வழிபட்டால் மிகவும் சிறந்தது.

நவராத்திரி திருவிழாவே இங்கு வெகு சிறப்பான விழாவாக விளங்குகிறது. நவராத்திரியின் ஒன்பது தினங்களும் இங்கு விசேஷமான பூஜைகள் நடத்தப்படும். அம்பிகையை பிரதிஷ்டை செய்த ஆதிசங்கரர் மூகாம்பிகையை, சரஸ்வதி தேவியாக நினைத்து வணங்கி 'கால ரோகணம்' பாடி அருள் பெற்றார். இத்தலத்தில் இருக்கும் சரஸ்வதி தேவியின் சிலையானது, சரஸ்வதி பூஜை அன்று வீதி உலா எடுத்துச் செல்லப்படுகிறது. குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு வித்தியாரம்ப நிகழ்ச்சியும் சரஸ்வதி பூஜை அன்று சிறப்பாக இத்தலத்தில் நடத்தப்படுகிறது.

மூகாம்பிகை கலைகளுக்கு அதிதேவதையாக கருதப்படுகிறாள். கவிஞர்கள், எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள், பாடகர்கள், திரைத்துறையினர், நடிகர்கள், நாட்டியமணிகள், சிற்பிகள், ஓவியர்கள் போன்ற பல்வேறு துறையைச் சார்ந்த கலைஞர்கள் தங்கள் கலைத்திறன் சிறப்படைய வேண்டும் என்று கொல்லூர் மூகாம்பிகையை தொழுது செல்கின்றனர்.

கொல்லூர் ஆலயத்தில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் கவிஞர்களும் இசைக்கலைஞர்களும், நாட்டியக் கலைஞர்களும் தங்கள் படைப்புகளை படைத்து அம்மனுக்கு கலா அஞ்சலி செய்கிறார்கள்.

தொழிலில் வெற்றி பெற குங்கும அர்ச்சனை செய்கிறார்கள். நோய்களில் இருந்து விடுபட வடை நிவேதனம் செய்கிறார்கள். கல்வியில் சிறந்து விளங்க மகாதிருமதுர நிவேதனம் செய்கிறார்கள்.

ஆலயத்துளிகள் இணைய தளத்தில், சென்ற ஆண்டு நவராத்தரி ஒன்பதாம் நாளன்று வெளியான பதிவு

கூத்தனூர் சரஸ்வதி கோவில்

https://www.alayathuligal.com/blog/s44nerac2p3waedbzhth84byfbe7k5

Read More
கவிகங்காதீஸ்வரர் கோவில்

கவிகங்காதீஸ்வரர் கோவில்

அபிஷேகம் செய்யப்பட்ட நெய் வெண்ணெயாக மாறும் அதிசயம்

பெங்களூருவில் இருந்து 54 கிலோமீட்டர் தொலைவில் தும்கூர் மாவட்டத்தில், சிவகங்கா என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள மலையடிவாரத்தில் ஒரு குகையில் லிங்க வடிவத்தில் குடிகொண்டு அருள்பாலிக்கிறார் சிவபெருமான். இத்தல இறைவனுக்கு 'கவிகங்காதீஸ்வரர்' என்று பெயர்.

5 அடி உயரமும், நல்ல பருமனும் கொண்ட இந்த லிங்கத்தை மிக அருகில் நின்று தரிசனம் செய்யலாம். இந்த ஆலயத்தில் இறைவழிபாடு செய்யவும், அபிஷேகத்திற்காகவும் நெய் விற்பனை செய்யப்படுகிறது. அதை வாங்கி அபிஷேகத்தின் போது அர்ச்சகரிடம் கொடுத்தால், அவர் மந்திரங்கள் சொல்லி நெய்யைக் கொண்டு லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வார்.

மீண்டும் அந்த நெய் கொடுத்தவருக்கே பிரசாதமாக வந்து சேரும். ஆனால் அப்படி பிரசாதமாக வரும் நெய், வெண்ணெயாக மாறி இருக்கும் என்பதுதான் அதிசயம். இப்படி பிரசாதமாக அளிக்கப்படும் வெண்ணெய் பல நோய்களுக்கு அருமருந்தாக பயன்படுகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை

Read More