கள்ளழகர் கோவில்

மதுரை சித்திரை திருவிழா - கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்

மதுரை சித்திரை திருவிழாவில், சித்திரா பௌர்ணமி தினத்தில் கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது. கள்ளழகரை காண பல லட்சம் மக்கள் வைகை ஆற்றங்கரையில் திரள்வார்கள்.

16ஆம் நுாற்றாண்டு வரை, கள்ளழகர் அழகர்கோவிலில் இருந்து புறப்பட்டு அலங்காநல்லுார் சென்று அங்கே அலங்காரம் செய்து கொண்டு தேனுார் ஆகிய ஊர்கள் வழியாக சோழவந்தான் வந்து அங்குள்ள வைகையாற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பாராம். சைவம், வைணவ சமயங்களை ஒன்று சேர்க்கும் விதத்தில் திருமலை நாயக்கர் இந்த விழாவை மதுரைக்கு மாற்றியமைத்தாராம். மாசி மாதத்தில் நடைபெற்ற மீனாட்சி திருக்கல்யாணத்தை சித்திரை மாதத்திற்கு மாற்றினாராம் திருமலை நாயக்கர். தங்கை மீனாட்சி கல்யாணத்தைக் காண சீர்வரிசைகளுடன் மதுரைக்கு புறப்பட்டு வரும் அழகர், மீனாட்சி திருமணம் நடந்து முடிந்து விட்டதால் சித்ரா பௌர்ணமியன்று வைகை ஆற்றில் இறங்கி பின்னர் தன் கோவிலுக்கு திரும்பி விடுவதாக வழக்கம்.

அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக உடுத்தும் ஆடைகள், அணியும் தங்க நகைகள் அனைத்தும் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும். இந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா, என பல வண்ணங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும். அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது, கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

வெள்ளை மற்றும் நீலப்பட்டு கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள்பட்டு கட்டிவந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் நடக்கும். அழகர் சிவப்புப் பட்டு கட்டிவந்தால் பேரழிவு ஏற்படும் என்கின்றனர். அந்த வருடம் போதிய விளைச்சலுமிருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காதாம். பச்சைப்பட்டு உடுத்தி வந்தால் நாடு செழிக்க நல்ல மழை பெய்யும் என்பது நம்பிக்கை.

இந்த ஆண்டு, 05.05.2023 வெள்ளிக்கிழமையன்று தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி வந்த கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்ற பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், தண்ணீர் பீய்ச்சியடித்து கள்ளழகரை குளிர்வித்திடும் தீர்த்தவாரி வழிபாடுகளை மேற்கொண்டனர்.

வைகை ஆற்றில கள்ளழகர் (2023)

வைகை ஆற்றில் கள்ளழகர் (05.05.2023)

வைகை ஆற்றில் கள்ளழகர் (05.05.2023)

 
Previous
Previous

கோடங்கிப்பட்டி சித்திரபுத்திர நாயனார் கோவில்

Next
Next

திருமங்கலக்குடி மங்களாம்பிகை உடனாய பிராணநாதேஸ்வரர் கோவில்