பிரம்மஞானபுரீஸ்வரர் கோவில்

அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தலையெழுத்தை மாற்றும் தலம்

கும்பகோணம் மகாமகம் மேல் கரையிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் கீழக்கொற்கை பிரம்மஞானபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் பிரம்மஞானபுரீஸ்வரர் இறைவி- புஷ்பாம்பிகை. பிரம்மாவுக்கு அருளியதால் சிவபெருமான் பிரம்மபுரீஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார். அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டிய தலம்..இந்தத் தலத்துக்கு வரும் அடியவர்களுக்கு ஞானம் கிடைப்பது மட்டுமின்றி, அவர்கள் வாழ்வில் சுபிட்சம் நிலவும் என்பது ஐதீகம்!

கொற்கை என்று தலத்திற்கு பெயர் வரக் காரணம்

முன்னொரு காலத்தில் 18 சித்தர்களில் ஒருவரான கோரக்கர் இப்பகுதியில் உள்ள அட்ட வீரட்டத் தலங்களை தரிசித்து வந்தார். அவர் இத்தலத்திற்கு வந்தபோது இருட்டிவிடவே, இங்கிருந்த பொது மடத்தில் தங்கினார். இந்த மடத்தில் ஏற்கெனவே நிறைய பக்தர்கள் தங்கியிருந்தனர்.

கோரக்கர் பயணக் களைப்பில் நன்றாக உறங்கிவிட்டார். நள்ளிரவு வேளையில் திடீரென கண்விழித்த கோரக்கர், மடத்தில் தங்கியிருந்த சிவபக்தை ஒருவரின் சேலைத்தலைப்பு தன் கை மேல் விழுந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் மனம் வருந்திய அவர், உடனே இதற்கு பிராயச்சித்தம் தேடி, அரிவாளால் தன் இரு கைகளையும் வெட்டிக் கொண்டார்.

பின் இந்த மடத்திலேயே சில காலம் தங்கி, தனது இந்த தோஷம் நீங்க இங்கிருந்த சந்திர புஷ்கரணியில் நீராடி, தனது குறுகிய கையால் தாளம் போட்டு, இத்தல ஞானபுரீஸ்வரரையும், புஷ்பவல்லியையும் தினமும் வணங்கி வந்தார். கோரக்கரின் பக்தியில் மகிழ்ந்தார் சிவபெருமான்.

சிவனின் அருளால் சித்தரின் கை கொஞ்ம், கொஞ்சமாக வளர்ந்தது. கோரக்கர் கை வெட்டுப்பட்டதால் இத்தலம் கோரக்கை எனவும், சிறிது காலம் குறுகிய கைகளில் பூஜை செய்ததால் குறுக்கை எனவும் வழங்கப்பட்டு தற்போது கொற்கை ஆனது.

பிரம்மஞானபுரீஸ்வரர் பெயர்க் காரணம்:

பிரம்மனிடம் இருந்த வேதத்திரட்டுக்களை மது, கைடப அசுரர்கள் எடுத்துக்கொண்டு போய் கடலுக்கடியில் ஒளித்து வைத்துக்கொண்டனர். வேதங்களை மீட்டு மகாவிஷ்ணு பிரம்மாவிடம் கொடுத்தார். இருந்தாலும் பிரம்மனால் முன்பு போல் இயல்பாக படைப்புத்தொழிலை செய்ய முடியவில்லை. எனவே அவர் விஷ்ணுவின் ஆலோசனைப்படி இத்தலம் வந்து, சந்திர புஷ்கரிணியில் நீராடி, அடிப்பிரதட்சணம் செய்து சிவனை வழிபட்டு வந்தார். ஒரு ஆவணி அவிட்ட நட்சத்திர நாளில், சிவன் பிரம்மனுக்கு ஞானம் கொடுத்தார். இதனால் பிரம்மா மீண்டும். சிறப்பாக படைப்புத் தொழில் புரிந்தார். இதனால் இத்தல இறைவன் பிரம்மஞானபுரீஸ்வரர் ஆனார்.

அவிட்ட நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டிய தலம்

இத்தலத்தில் அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அடிக்கடியோ,தங்ளது பிறந்த நட்சத்திர நாளிலோ, ஆவணி அவிட்டத்தன்றோ அடிப்பிரதட்சணம் செய்து வழிபாடு செய்தால் தலையெழுத்தே மாறிவிடும் என்பது ஐதீகம்.

குழந்தைகளின் கல்வியறிவு, வியாபார விருத்தி, மன உளைச்சல் நீங்க, தோஷங்கள் நிவர்த்தியாக இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.

 
Previous
Previous

பொன்வைத்தநாதர் கோவில்

Next
Next

பங்குனி உத்திரத் திருவிழா