தயாநிதீசுவரர் கோவில்

கர்ப்பிணிப் பெண் உயிரை காப்பாற்றிய சிவபெருமான்

கும்பகோணத்திலிருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் வடகுரங்காடுதுறை. .இறைவன் திருநாமம் தயாநிதீசுவரர். இறைவி அழகுசடைமுடி அம்மை.

செட்டிப்பெண் என்ற பெயர் கொண்ட கர்ப்பிணிப் பெண் ஒருத்தி தாகம் தாளாமல் இக்கோயில் வழியே நடந்து வந்துகொண்டிருந்தாள். அவள் தாகத்தால் இறந்து விடுவாளோ என்ற நிலைமை ஏற்பட்டது. சுற்றிலும் எங்கும் தண்ணீர் இல்லை. அவள் உயிர் போகும் தருணத்தில் இத்தலத்து இறைவனை வணங்கினாள். சிவபெருமானே அங்கு தோன்றி அருகிலிருந்த தென்னைமரத்தை வளைத்து இளநீரை பறித்துக் கொடுத்தார். அந்தப்பெண் தாகம் நீங்கினாள். எனவே இறைவனுக்கு 'குலைவணங்கிநாதர்' என்ற பெயரும் உள்ளது.

சிட்டுக்குருவியொன்று இத்தலத்திற்கு அருகேயுள்ள நீர்நிலையிலிருந்து அலகால் நீர் கொணர்ந்து இறைவனுக்கு அபிசேகம் செய்துள்ளது. அதனால் மகிழ்ந்த இறைவன் அக்குருவிக்கு முக்தியளித்தார். இதனால் இறைவனுக்கு சித்தலிங்கேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. இத்தலத்தில் வாலி வணங்கியமையால் வடகுரங்காடுதுறை என்று அழைக்கப்படுகிறது

ஆலய விமானத்தில் வாலி இறைவனை வழிபடும் சிற்பமும், ஈசன் கர்ப்பிணிப் பெண்ணிற்கு தென்னங்குலை வளைத்த சிற்பமும் மிக அழகாக வடிக்கப்பட்டுள்ளது. கருவறையில் சற்று குட்டையான பாணத்துடன் காட்சி தருகிறார் குலைவணங்குநாதர். அம்மன் சந்நிதியில் இறைவி அழகுசடைமுடி அம்மை சிரத்தில் உயர்ந்த சடாமுடியுடன் அழகுடன் காட்சி தருகிறாள். பௌர்ணமி நாட்களில் அம்மன் அலங்காரம் மிகவும் அழகுடன் இருக்கும். பௌர்ணமி அன்று மாலை வேளையில் ஒன்பது மஞ்சள் கொண்டு மாலை தொடுத்து அம்மனுக்கு அணிவிப்பது எல்லா தோஷங்களையும் நீக்கும் என்று பக்தர்களின் நம்பிக்கை.

இக்கோயிலுக்கு முக்கியமாக கர்ப்பிணிப் பெண்களே வருகிறார்கள். இக்கோயிலில் சிவபெருமான் கர்ப்பிணிக்கு அருள் செய்ததால் இந்த தலத்திற்கு வந்தால் சுகமான பிரசவம் நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. பங்குனி உத்திர திருவிழா, நவராத்திரி பத்து நாள் விழா ஆகியவை சிறப்பாக நடக்கிறது. கார்த்திகையில் அம்பிகையை பெண்கள் 1008 முறை சுற்றி வருவது விசேஷ அம்சமாகும்.

 
Previous
Previous

தயாநிதீசுவரர் கோவில்

Next
Next

ஸ்ரீமாகாளீஸ்வரர் கோவில்