திருப்புன்கூர் சிவலோகநாதர் கோவில்

குளம் வெட்டிய விநாயகர்

வைத்தீஸ்வரன் கோவிலிருந்து சுமார் 4 கி மீ தொலைவில் உள்ள தேவார தலம் திருப்புன்கூர். இறைவனின் திருநாமம் சிவலோகநாதர். இறைவியின் திருநாமம் சொக்க நாயகி, சௌந்தர நாயகி. அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவரான திருநாளைப்போவார் (நந்தனார்) வணங்குவதற்காக இறைவன் நந்தியைச் சற்று விலகியிருக்குமாறு அருள் செய்த தலம் இது. அதனால்தான் இன்றுவரை திருப்புன்கூர் ஆலயத்தில் நந்தி விலகியே நிற்கிறது என்கிறது தலபுராணம்.

திருநாளைப்போவார் கோவிலின் மேற்குபுறமுள்ள ரிஷபதீர்த்தத்தை வெட்டிச் சீர்ப்படுத்த எண்ணினார். அந்த பரந்து விரிந்த குளம் எத்தனை மண்ணை தோண்டினாலும் சீர்படவே இல்லை. தனியாளாக முயற்சி செய்ததால் அந்த பணி நிறைவடையாமல் நீண்டு கொண்டே இருந்தது. நாள்கள் பல கடந்தன. குளத்தை சீர்படுத்தும் பணிக்கு தனக்கு யாரும் துணை இல்லாததால் சிவபெருமானை வேண்ட, அவர் திருநாளைபோவாருக்கு உதவி செய்ய, கணபதியை செல்லுமாறு பணித்தார். விநாயகர், குளத்தை சீர் செய்யும் எல்லா பணிகளிலும் போவாருக்கு உதவினார். அவர் துணையால் திருநாளைப்போவார் அத்தீர்த்தத்தை வெட்டிச் சீர்ப்படுத்தினார். திருக்குளம் முழுவதுமாக சீர்படும் வரை, விநாயகர் தினமும் பணியாற்றி, எந்த கூலியும் வாங்காமல் தொண்டாற்றினார். அதுவே கணபதி தீர்த்தம் என்றும் பெயர் பெற்றது. எனவே இங்குள்ள விநாயகர் 'குளம் வெட்டிய விநாயகர்' என்றழைக்கப்படுகிறார். இந்தக் குளம் வெட்டிய விநாயகர், கோவிலின் வெளிப்பிரகாரத்தில் தனிச் சன்னதியில் எழுந்தருளி இருக்கிறார்.

 
Previous
Previous

வேலாயுதம்பாளையம் பாலசுப்ரமணியசுவாமி கோவில்

Next
Next

சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோவில்