திருமங்கலம் பூலோகநாத சுவாமி கோவில்

திருமங்கலம் பூலோகநாத சுவாமி கோவில்

சிவபெருமான் பார்வதி தேவி திருமணத்திற்கு திருமாங்கல்யம் செய்த தலம்

மகாலட்சுமியே குபேரனிடம் திருமாங்கல்யத்திற்கு பொன் கொடுத்த தலம்

மயிலாடுதுறை வட்டத்தில் குத்தாலம் அருகே, திருமணஞ்சேரி தலத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருமங்கலம். இறைவன் திருநாமம் பூலோகநாதர்.

இறைவியின் திருநாமம் பூலோகநாயகி. இறைவன், இறைவிக்கு இப்படிப்பட்ட திருநாமம் அமைந்த தலம் வேறு எங்கும் இல்லை. பூலோகவாசிகளுக்கு, சிவபெருமான் தனது

திரு மணக் கோலத்தை தரிசிக்க அருள் புரிந்த தலம். சிவபெருமான் பார்வதி தேவி திருமணத்திற்கு திருமாங்கல்யம் செய்த தலம் இது. இதனால் தான் இந்த ஊர் திருமாங்கல்யம் என்று முதலில் அழைக்கப்பட்டு வந்து பின்னர் திருமங்கலம் என்று மருவியது.

திருமணஞ்சேரியில் சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்த போது அதில் கலந்து கொண்டு தரிசிக்க தேவலோகமே திரண்டு விட்டது. எங்கு பார்த்தாலும் தேவர்கள்தான் குழுமி இருந்தனர். இந்த தருணத்தில் பூலோகவாசிகளான சாதாரண மக்கள் நம் திருமணத்தைக் காண முடியாது வருந்துகின்றனரே என்ற எண்ணம் அம்மையப்பன் மனதில் தோன்றியது. உடனே, ஸப்தபதி என்ற சடங்கை நிறைவேற்றுவது போல், ஏழு அடி எடுத்து வைத்தனர். அம்மையும், அப்பனும் எந்தத் தலத்தில் தங்களது திருமணத்திற்கு 'திருமாங்கல்யம்' செய்யப்பட்டதோ, அந்தத் தலத்திற்கு வந்து நின்று காட்சி தந்தனர்.

இத்திருமணத்திற்கு மகாலட்சுமியே குபேரனிடம் பொன் எடுத்துக் கொடுத்ததாக ஐதீகம் உள்ளது. இதற்கு சான்றாக குபேரன் திருமாங்கல்யத்தை தனது தலையில் வைத்து சுமந்து செல்லும் சிற்பம் ஒன்றும் இந்த ஆலயத்தில் உள்ளது. எனவே இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டால், திருமணம் கைகூடும். மாங்கல்ய தோஷம் இருந்தால் அகலும். இந்த ஆலயத்தில் காலசம்ஹார மூர்த்தி சன்னிதியில் வைத்து, சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் செய்வது சிறப்பு.

இவ்வூரின் அருகாமையில் புகழ் பெற்ற திருமணஞ்சேரி, எதிர்கொள்பாடி, திருவேள்விக்குடி, முருகமங்கலம் போன்ற கோவில்களும் அமைந்துள்ளன.

Read More
கம்பம் கம்பராயப் பெருமாள் காசி விஸ்வநாதர் கோவில்

கம்பம் கம்பராயப் பெருமாள் காசி விஸ்வநாதர் கோவில்

கையில் கமண்டலம் ஏந்திருக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி

தேனி மாவட்டம், கம்பம் என்னும் ஊரில் அமைந்துள்ளது கம்பராயப் பெருமாள் காசி விஸ்வநாதர் கோவில். இங்கு சிவன், பெருமாள் கோவில்கள் ஒரே வளாகத்தில் தனித்தனி கொடி மரத்துடன் இருப்பது தனிச்சிறப்பாகும். தாயார் திருநாமம் அலமேலு மங்கை. அம்பிகையின் திருநாமம் காசி விசாலாட்சி. பல நூறு ஆண்டுகள் பழமையானது இக்கோவில்.

காசி விஸ்வநாதர் சன்னதியின் சுற்றுச்சுவரில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தி, வித்தியாசமான தோற்றத்தில் காட்சி அளிக்கிறார். இவர் இடது கையில் கமண்டலம் ஏந்தி இருப்பது நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத காட்சியாகும். யோக பட்டை அணிந்திருக்கும் இவரது தலைக்கு மேலே கல்லால மரம், காலுக்கு கீழ் முயலகன் மற்றும் சீடர்கள் கிடையாது. பீடத்தில் நாகம் மட்டும் இருக்கிறது. தனது பக்தர்களின் சாப விமோசனத்திற்காகவும், தோஷ நிவர்த்திக்காகவும் இவர் கையில் கமண்டல தீர்த்தத்துடன் காட்சி அளிக்கிறார்.

குரு பெயர்ச்சியால் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள், இவருக்கு வன்னி இலையால் அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.

Read More
ஒன்பத்து வேலி வன்மீகநாதர் கோவில்

ஒன்பத்து வேலி வன்மீகநாதர் கோவில்

பிறந்த நாளில் வந்து வழிபட வேண்டிய கோவில்

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள ஒன்பத்து வேலி கிராமத்தில், குடமுருட்டி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது, வன்மீகநாதர் கோவில். இறைவியின் திருநாமம் சோமகலா அம்பாள். இந்த கோவிலில் உள்ள சிவபெருமான், புற்றில் இருந்து தோன்றிய சிவலிங்கம் என்பதால் வன்மீகநாதர் என பெயர் வந்தது. வன்மீகம் என்பதற்கு புற்று என்று பொருள். சோமகலா அம்பாள், சந்திரனின் அம்சத்தை பெற்று விளங்குபவராக அமைந்து அருள் வழங்கி வருகிறார்.

ஒன்பத்து வேலி என்ற பெயர் ஒரு அபூர்வமான பெயராகும். ஜோதிட வல்லுநர்களும் கணிதமேதைகளும் பண்டைய காலத்தில் வாழ்ந்த தலமே ஒன்பத்து வேலியாகும்.

பக்தர்கள் தங்கள் பிறந்த நட்சத்திர நாளில், ஒன்பத்து வேலி வன்மீக நாதர் கோயிலுக்கு சென்று வழிபட்டால் அனைத்து விதமான செல்வங்களையும் பெற்று வளமான வாழ்வை அடைவார்கள் என்பது நம்பிக்கை. இதனால் ஒன்பத்து வேலி வன்மீக நாதர் வளமான வாழ்வை அருளும் வன்மீகநாதர் என அழைக்கப்படுகிறார். மேலும் உடலில் ஏற்படும் சரும நோய்கள் தீர்க்க வன்மீக நாதரை வழிபட்டால் நிவாரணம் கிடைக்கும் .ஒன்பதாம் தேதி பிறந்தவர்கள் இந்த தலத்தில் வழிபாடுகளை செய்வது விசேஷமானதாகும் .9 என்பது செவ்வாய்க்குரிய எண் ஆகும். இதனால் செவ்வாய் திசை , செவ்வாய் புத்தி உள்ளவர்கள் ஒன்பத்து வேலி வன்மீக நாதரை வழிபட்டால் வளமான வாழ்வு கிடைக்கும்.

எண்கணித ஜோதிடர்களும் நாடி கைரேகை ஜோதிடர்களும் கண்டிப்பாக வழிபட வேண்டிய தலம் வன்மீக நாதர் சுவாமி கோவில் ஆகும்.

இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வட மாநிலங்களில் இருந்தும் கூட பக்தர்கள் தங்கள் பிறந்த நாளில் வந்து வழிபட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

Read More
திருவிசநல்லூர் யோகநந்தீசுவரர் கோவில்

திருவிசநல்லூர் யோகநந்தீசுவரர் கோவில்

கார்த்திகை மாத அமாவாசையன்று கிணற்றில் கங்கை பொங்கும் அதிசயம்

கும்பகோணத்திற்கு அருகிலுள்ள தேவாரத்தலம் திருவிசநல்லூர். இறைவன் பெயர் யோகநந்தீசுவரர். இறைவியின் திருநாமம் சவுந்தரநாயகி. இவர் ஏழு முனிவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததால் இவருடைய லிங்கத் திருமேனியில் எழு சடைகள் இருக்கின்றன.

இத்தலத்தில் சுமார் 370 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர் ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள். சிறந்த சிவபக்தர். இவர் கர்நாடக சமஸ்தானத்தில் திவானாகப் பணிபுரிந்தவர். இன்றளவும், சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக, இவர் வாழ்ந்த வீட்டின் கிணற்றில், ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத அமாவாசையன்று கங்கை பொங்கி எழுந்தருளுகிறாள். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த ஆச்சரியமான நிகழ்வுக்கு பின்னால் இறையருளின் மகத்துவம் இருக்கின்றது.

ஸ்ரீதர அய்யாவாள் தந்தையார் மறைந்த திதி கார்த்திகை மாதத்தில் வரும். அத்தகைய ஒரு நாளில் இவர் பிராமணர்களுக்கு உணவளிப்பதற்காக அந்தணர்களை எதிர்பார்த்து தன் வீட்டு வாசலில் காத்திருந்தார். அப்போது தாழ்த்தப்பட்டவர் ஒருவர் அவர் இல்லம் வந்து பசியால் துடிப்பதாக சொன்னார். உடனே அந்தணர்கள் உண்பதற்காக வைத்திருந்த உணவை அந்த தாழ்த்தப்பட்டவருக்கு அளித்து மகிழ்ந்தார். சிரார்த்த சமையலை திதி கொடுக்கும் அந்தணர்கள் மட்டுமே உண்ண வேண்டும். மீதம் உள்ளதை பசுவுக்குத்தான் தருவார்கள். அந்த நியதியை அய்யாவாள் மீறியதால், அந்தணர்கள் வெகுண்டனர் ஸ்ரீதர அய்யாவாள் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக கங்கையில் நீராடி விட்டு வந்தால்தான் அவர்களால் திதி கொடுக்க முடியும் என்றனர். சிவபக்தரான ஸ்ரீதர அய்யாவாள் இறைவனைமனம் உருக வேண்டி, கிணற்றடியில் நின்றபடி கங்காஷ்டகம் பாடினார். ஐந்தாம் பாடல் பாடியவுடன் கிணற்றில் கங்கை பொங்கி வழிந்தது. கிணற்றின் நீர்மட்டம் விறுவிறுவென ஏறி, வழிந்து, அந்தத் தெரு முழுதும் கங்கை நீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்பொழுது தான் அந்த அந்தணர்கள் ஐயாவாளின் மகிமையை அறிந்தனர். மன்னிப்பும் கேட்டனர்.
இன்றளவும், ஆண்டுதோறும் கார்த்திகை அமாவாசையன்று, 300 ஆண்டுகளுக்குமுன் கங்கை பொங்கி வந்ததுபோல, அய்யாவாள் இல்லக் கேணியில் நீர் பொங்கி வருவதைக் காணலாம். நீராடலாம். கார்த்திகை மாதம் பத்து நாள் விழா நடக்கும். பத்தாம் நாள் கார்த்திகை அமாவாசையன்று காலை கிணற்றுக்கு பூஜை செய்வார்கள். முதலில் வேத விற்பன்னர்கள் நீராடியபின் பக்தர்கள் நீராடுவார்கள். அன்று முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் நீராடினாலும், கிணற்று நீர் குறையாமலேயே இருப்பது அதிசயம்!

Read More
சிவசைலம் சிவசைலநாதர் கோவில்

சிவசைலம் சிவசைலநாதர் கோவில்

எழுந்து நிற்க தயாராகும் நிலையில் காட்சி தரும் நந்தி

முதுகில் தழும்புள்ள, உயிரோட்டமுள்ள நந்தி

திருநெல்வேலியிலிருந்து மேற்கே சுமார் 57 கி.மீ தொலைவில் அமையப் பெற்றுள்ள தேவார வைப்புத் தலம் சிவசைலம் சிவசைலநாதர் கோவில். இறைவியின் திருநாமம் பரமகல்யாணி. இத்தலம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கடனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் இருக்கும் நந்தி மிகவும் அழகான, உயிரோட்டமுள்ள ஒரு சிலையாகும். இந்த நந்தி சிலையின் முதுகில் உளியால் ஏற்பட்ட ஒரு தழும்புள்ளது, அதன் பின்னணியில் ஒரு சுவையான கதை உள்ளது.

ஒரு சமயம், தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு சாபம் ஒன்று ஏற்பட்டது. அதற்கு விமோசனமாக, சிவசைலத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனுக்கு எதிராக ஒரு நந்தியை பிரதிஷ்டை செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டது. அதன்படி இந்திரன், தேவர்களின் சிற்பியான மயனை அழைத்து, நந்தி விக்கிரகம் ஒன்றை நிர்மாணிக்க கூறினான். சிற்ப சாத்திரங்களை முறைப்படி கற்ற மயனும், சிவசைலம் வந்து இந்திரன் கூறியபடி, சிற்ப சாத்திர விதிமுறைப்படி ஓர் அழகிய நந்தியை உருவாக்கினான். சிற்ப சாத்திரங்களின் அனைத்து விதிகளின் படியும் முழுமையாக விளங்கிய அந்த கல் நந்தி இறுதியில் உயிர் பெற்று எழ, மயன் தன் கையில் இருந்த உளியால் நந்தியின் முதுகில் அழுத்த, நந்தி அவ்விடத்திலேயே நிலையாக தங்கியதாம். இதனால் நந்தியின் வலது கால் சற்று உயர்த்தப்பட்ட நிலையிலும் மற்ற மூன்று கால்கள் வளைந்திருப்பதையும் நாம் காணலாம். உளியினால் மயன் அழுத்திய தழும்பை இன்றும், இந்த நந்தியின் மீது நாம் பார்க்க முடியும். இந்த நந்தி தற்போதும் எழுந்திருக்க தயாராகும் கோலத்திலேயே அற்புதமாக காட்சியளிப்பது சிறப்பம்சம் ஆகும். மேலும் இந்த நந்தியின் உடம்பில் இருக்கும் அணிகலன்களும், அது தன் வாலை பின்னங்கால் வழியாக வளைத்து வைத்திருப்பதும், அதன் அழகிற்கு மேலும் மெருகு ஊட்டுகின்றன. இந்த நந்தி சிற்பத்தின் கலை அம்சம் நம்மை நிச்சயம் பிரம்மிப்பில் ஆழ்த்தும்.

இந்த கோவில் தேவர்களும், முனிவர்களும், சித்தர்களும் வழிபட்ட தலம் என்பதால், அதிர்வலைகள் நிறைந்த தலமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக இங்கு திருமணம் மற்றும் மணிவிழாக்கள் அடிக்கடி நடைபெறுகின்றன.

Read More
திருசோற்றுத்துறை ஓதவனேஸ்வரர் கோவில்

திருசோற்றுத்துறை ஓதவனேஸ்வரர் கோவில்

பக்தர்களின் பசியைப் போக்கிய பரமன்

சிவபெருமான், காசிக்கு அடுத்தபடியாக அட்சய பாத்திரம் கொடுத்த தலம்

தஞ்சாவூரில் இருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் திருசோற்றுத்துறை ஓதவனேஸ்வரர் கோவில். இத்தல இறைவனுக்கு சோற்றுத்துறை நாதர் என்ற பெயரும் உண்டு. இறைவியின் திருநாமம் அன்னபூரணி, ஒப்பிலா அம்மை.

‘சோறு' என்றால் 'முக்தி' என்ற பொருளும் உண்டு. பசிப்பிணி போக்கியதால் இத்தலத்து மூலவர் 'ஓதனவனேஸ்வரர்' என்று அழைக்கப்படுகின்றார். 'ஓதனம்' என்றால் 'அன்னம்' என்று பொருள். இத்தல இறைவனை வழிபடும் அடியார்களின் பசிப்பணி தீர இறைவன் சோறு வழங்குபவன் என்னும் பொருளைத் தருவதுடன், உயிரைப் பற்றிய பிறவிப் பிணி தீர வீடுபேறு தருபவன் என்ற பொருளும் உண்டு. அம்பிகையை மனதார வழிபட்டால், வறுமையும் பிணியும் விலகி விடும். திருவையாறைத் தலைமை தலமாகக் கொண்டு விளங்கும் சப்த ஸ்தானத் தலங்களில், இத்தலம் மூன்றாவது தலமாகும்.

ஒரு முறை திருச்சோற்றுத்துறை பகுதியில் பஞ்சம் ஏற்பட்டு மக்கிள் பசியால் வாடினர். இத்தலத்தில் வசித்து வந்த அருளாளர் என்ற சிவபக்தரும் பஞ்ச காலத்தில் பசியால் அவதிப்பட்டார். வருந்திய அருளாளன் இத்தல இறைவனிடம், பஞ்சத்தை தீர்த்து உணவு வழங்குமாறு முறையிட்டார். திடீரென்று மழை பொழிய ஊரே வெள்ளக் காடானது. அப்போது ஒரு பாத்திரம் வெள்ளத்தில் மிதந்து வந்தது. இதைப்பார்த்த அருளாளர் அதை கையில் எடுக்க, இறைவன் 'அருளாளா! இது அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம். இதை வைத்து அனைவருக்கும் சோறு போடு' என்று அசரீரியாக குரல் கொடுத்து அருள் செய்தார். அருளாளன், இந்த பாத்திரத்தை கையில் வைத்தபடி ஊராருக்கு சோறும், நெய்யும், குழம்புமாக போட்டு அவர்களின் பசி தீர்த்தார். அள்ள அள்ளக் குறையாமல் அன்னம் வழங்கிய சிவபெருமானுக்கு தொலையாச்செல்வர் என்ற பெயரும் உண்டு. இத்தலம் காசிக்கு அடுத்தபடியாக அட்சய பாத்திரம் கொடுத்த தலமாகும்.

இறைவன் அருளால் மக்களின் பசியைப் போக்கிய அருளாளருக்கும், அவர் மனைவிக்கும் இத்தலத்தில் கருவறை அர்த்த மண்டபத்திற்கு வெளியே சிலை உள்ளது. சப்தஸ்தான விழாவில் ஏழூர்வலம் வரும் அடியார்களுக்கு இங்கு அன்ன தானம் நடைபெறுகிறது.

Read More
திருநெடுங்களம் நித்திய சுந்தரேசுவரர் கோவில்

திருநெடுங்களம் நித்திய சுந்தரேசுவரர் கோவில்

நாகங்களை திருமேனியில் தரித்திருக்கும் அபூர்வ சர்ப்ப கால பைரவர்

திருச்சி – தஞ்சாவூர் சாலையில் அமைந்துள்ள துவாக்குடி என்ற ஊரிலிருந்து, நான்கு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் நெடுங்களம். இறைவன் திருநாமம் நித்திய சுந்தரேசுவரர், திருநெடுங்களநாதர், இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை, ஒப்பிலாநாயகி.

இந்தத் தலத்தில் சேத்திர பைரவர், சர்ப்ப கால பைரவர் என்று இரண்டு பைரவர்கள் அருள் பாலிக்கிறார்கள். சேத்திர பைரவர் வாகனத்துடனும் தற்பகால பைரவர் வாகனம் இல்லாமலும் எழுந்தருளி இருக்கிறார்கள். சர்ப்ப கால பைரவர் தனது கையில் ஒரு நாகத்தையும், வலது கால் மற்றும் இடது கால் இரண்டிலும் நாகங்கள் சுற்றத் தொடங்கி, திருமேனி முழுவதும் படர்ந்து இருக்கின்றன. இப்படி திருமேனி முழுவதும் சர்ப்பங்கள் பின்னி படர்ந்திருக்கும் காலபைரவரை வேறு தலத்தில் நாம் தரிசிப்பது அரிது.

இந்த சர்ப்ப கால பைரவரை வழிபட்டால், கால சர்ப்ப தோஷம், நாக தோஷம் முதலியவை விலகும். பாம்பு சம்பந்தப்பட்ட கெட்ட கனவுகள் நின்று விடும். தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாட்டுக்கு உகந்த நாள். அதிலும் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி, காலபைரவாஷ்டமி என்று போற்றப்படுகிறது. பைரவருக்கு சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து, செவ்வரளி மலர்கள் சமர்ப்பித்து, செவ்வாழைப் பழம் நைவேத்தியம் வைத்து, தேங்காய் அல்லது பூசணிக்காயில் நெய் தீபமேற்றி வழிபாடு செய்ய, துன்பங்கள் அனைத்தும் நீங்கி இன்பங்கள் பெருகும். பைரவரை வழிபட்டால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும், யம பயம் இருக்காது, திருமணத் தடை அகலும். சந்தான பாக்கியம் கிடைக்கும் என்கின்றன ஞான நூல்கள்.

Read More
வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில்

வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில்

கலை அழகு மிளிரும் சிற்பங்கள்

வேலூர் மாவட்டத்தின் தலைநகரான வேலூரில் அமைந்துள்ளது ஜலகண்டேஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி. 16-ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னரால் கட்டப்பட்டது இக்கோவில்.

நம் முன்னோர்கள் பக்தியை செலுத்துவதற்காக, ஆண்டவனின் இருப்பிடமாக அமைத்த கோவில்கள், கலைகளையும் சேர்த்து அளிக்கும் கலைக்கூடங்களாகவும் விளங்கின. சிற்பங்களையும் ஓவியங்களையும், சேர்த்து அளிக்கும் கலைக் கோவில்களாயின. அத்தகைய கலைக் கோவில்களில் ஒன்றுதான் வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில்.

இக்கோவிலுக்குள்ளே நுழைந்தால், வலது புறத்தில் குளமும், இடதுபுறத்தில் கலை அழகு மிளிரும் கல்யாண மண்டபமும் உள்ளது. கல்யாண மண்டபத் தூண்கள் மற்றும் கோவிலின் மற்ற தூண்களில் கண்ணைக் கவரும் ஆன்மீக சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கல்யாண மண்டபத்தில் வித்தியாசமான பல சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த மண்டபத்தில் வித்தியாசமான பல சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கிறது. மண்டபத்தின் வெளித்தூண்களில் இரண்டு ஆள் உயரத்திற்கான யாழி, குதிரை மீதமர்ந்த வீரர்களின் சிலைகள் நம் கண்களையும், கருத்தையும் கவர்கின்றன.

வெண்ணெய் பானையுடன் கிருஷ்ணர், பைரவர், நடராஜர், சரபேஸ்வரர், சிவமூர்த்தங்கள், கண்ணப்பர் வரலாறு, வில்லுடன் இராமர், ஆஞ்சநேயர், நரசிம்மரின் பாதம் அருகில் வணங்கியபடி கருடாழ்வார், மத்தளம் வாசிக்கும் பெருமாள், மகரிஷி யோகாசனம் செய்யும் சிற்பம் என கண்ணைக் கவரும் பலவிதமான சிற்பங்கள் இருக்கின்றன. மண்டபத்தின் மத்தியில் அழகான மேடையொன்று ஆமையின் முதுகில் இருப்பதுபோல வடிக்கப்பட்டுள்ளது. அந்த மேடைக்கருகில் உள்ள தூண்களில் சாளரம் போன்ற நுணுக்கமான வேலைப்பாடுகள் உள்ளன. மண்டபத்தின் கூரையில் மூன்று சுற்றுகளாக கிளிகள் தேங்காயை கொத்த அமர்ந்திருப்பது போல அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த மண்டபத்தின் அழகில் லயித்த வெள்ளையர் தளபதி ஒருவர். தூண்களோடு பெயர்த்துச் செல்ல விரும்பினார் இதற்காக வெளிநாட்டிலிருந்த கப்பலையும் வரவழைத்தார் ஆனால் அக்கப்பல் வழியிலேயே விபத்தைச் சந்தித்ததால் இத்திட்டத்தைக் கைவிட்டார்.

Read More
திருவட்டத்துறை தீர்த்தபுரீசுவரர் கோவில்

திருவட்டத்துறை தீர்த்தபுரீசுவரர் கோவில்

திருஞானசம்பந்தருக்கு சிவபெருமான் முத்துச் சிவிகை, முத்துக் குடை அளித்த தலம்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் இருந்து, 25 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் திருவட்டத்துறை தீர்த்தபுரீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி.

திருஞானசம்பந்தர் சீர்காழியில் உமையம்மை கையால் ஞானப்பால் பெற்று பதிகம் பாடி, சைவ சமயத்தை சிறப்பிக்க சிவபெருமான் குடிகொண்டிருக்கும் தலங்களுக்கெல்லாம் திருயாத்திரை தொடங்கினார். சம்பந்தர் சிறு பாலகனாக இருந்ததால் அவருடைய தந்தையார், சம்பந்தரைத் தூக்கிக்கொண்டு செல்வது வழக்கமாக இருந்தது.

திருதூங்காணைமாடம் சிவத்தலத்தை தரிசித்து திருவட்டத்துறை நோக்கிச் செல்லும்போது, தந்தை தோள்மீது எழுந்தருள்வதை விட்டு நடந்தே சென்றார். சம்பந்தர் தன் சிற்றடிகள் நோக நடந்து செல்வதைக் கண்டு யாவரும் வருந்தினர். திருவட்டத்துறை செல்லும் வழியில் மாறன்பாடி என்ற இடத்தில் இரவு தன் அடியார்களுடன் சம்பந்தர் தங்கினார்.

அன்றிரவு, திருவட்டத்துறையிலிலுள்ள அடியார்கள், மற்றும் கோவில் பணியாளர்கள் கனவில் இறைவன் தோன்றி சம்பந்தர் கால்கள் நோகாமல் இருக்க தான் முத்துச் சிவிகை, முத்துக்குடை, முத்துச் சின்னங்கள் அளிப்பதாகவும், அவற்றை சம்பந்தரிடம் சேர்த்து அவரை ஆலயத்திற்கு அழைத்து வரும்படியும் ஆணையிட்டார். இதேபோன்று, சம்பந்தர் கனவிலும் தோன்றி இவ்விவரங்களைக் கூறி, முத்துச் சிவிகையில் ஏறிக்கொண்டு தன்னை தரிசிக்க வருபடியும் ஆணையிட்டார்.

மறுநாள் காலை, திருவட்டத்துறை அடியார்கள், கோவில் பணியாளர்கள் ஆலயத்தை திறந்து பார்க்க அங்கு முத்துச் சிவிகை, முத்துக் குடை, முத்துச் சின்னங்கள் ஆகியவை இருக்கக் கண்டு, இறைவனை கைகளைக் கூப்பி வணங்கினர். பின்னர் அவற்றை எடுத்துக்கொண்டு மாறன்பாடி சென்று சம்பந்தரிடம் கொடுத்து, அவரை முத்துச் சிவிகையில் உட்கார வைத்து, முத்துக் குடை நிழலில் திருவட்டத்துறை ஆலயம் அழைத்து வந்தனர். சம்பந்தரும் ஆலயம் வந்து இறைவனைத் தொழுது தேவாரப் பதிகம் பாடி வணங்கினார்.

Read More
நத்தம் வாலீஸ்வரர் கோவில்

நத்தம் வாலீஸ்வரர் கோவில்

தலை சடை விரித்த கோலத்தில் இருக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி

சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பஞ்செட்டி என்ற ஊரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நத்தம் வாலீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி.

இக்கோவிலில் இறைவன் கருவறையின் சுற்று சுவரில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தி, தன் தலை சடையை விரித்த கோலத்தில் காட்சி அளிப்பது நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத அரிய காட்சியாகும். இதற்கு பின்னணியில் உள்ள சம்பவம் என்னவென்றால், தேவர்கள் சிவபெருமானிடம் தாட்சாயணியின் மறைவுக்குப் பின் தங்களுக்கு சக்தி இல்லையே என்று வினவியபோது, சிவபெருமான் என்னிடம் கங்கா சக்தி உள்ளது என்று சடா முடியிலிருந்து கங்கையை விடுவித்து, கங்கையின் பிரவாக சக்தியைக் தேவர்களுக்கு காட்டினார். அந்தக் கோலத்தில் தான் நாம் அவரை இக்கோவிலில் தரிசிக்கிறோம்.

Read More
குடுமியான்மலை சிகாநாதசாமி கோவில்

குடுமியான்மலை சிகாநாதசாமி கோவில்

சங்கீத வித்வான்கள் அவசியம் காண வேண்டிய கோவில்

எங்கும் காண முடியாத இசைக் கல்வெட்டு

புதுக்கோட்டை – கொடும்பாளூர் – மணப்பாறை சாலையில், புதுக்கோட்டையில் இருந்து, 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது குடுமியான்மலை சிகாநாதசாமி கோவில்.

குடைவரைக் கோவில் அமைப்பைச் சேர்ந்த இக்கோவிலில், எங்கும் காண முடியாத இசையின் வடிவத்தை விளக்கும் வண்ணம் அமைந்த இசைக் கல்வெட்டு ஒரு தனி சிறப்பாகும். ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இது கருதப்படுகிறது. இங்குள்ள பாறைச் சரிவு ஒன்றில், 13 அடி x 14 அடி இடப்பகுதியில், இக்கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு தேவநாகரி எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் இறுதியில் சில தமிழ்ச் சொற்களும் உள்ளன.

சங்கீதக் கலை வித்தகர்கள் நிச்சயம் காணவேண்டிய, இசைத் தகவல்களைக் கொண்ட கல்வெட்டு இது. இங்குள்ள பாறைச் சரிவு ஒன்றில், 13 அடி x 14 அடி இடப்பகுதியில், இக்கல்வெட்டு அமைந்துள்ளது. தேவநாகரி எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டின் இறுதியில் சில தமிழ்ச் சொற்களும் உள்ளன.

இந்தக் கல்வெட்டு 38 கிடையாக அமைந்த இசைக் குறியீடுகளைக் கொண்ட வரிகளைக் கொண்டது. இடமிருந்து வலமாக வாசிக்கப்படக்கூடிய ஒவ்வொரு வரியிலும் 64 எழுத்துக்கள் உள்ளன. இந்த எழுத்துக்கள் 16 குழுக்களாக அமையும் வகையில் ஒவ்வொரு நான்கு எழுத்துக்களுக்கும் அடுத்து ஒரு சிறு இடைவெளி விடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு வரிகள் கிடைக் கோடுகளால் 7 பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் நான்கு முதல் ஏழு வரையான வரிகள் காணப்படுகின்றன. இக்கல்வெட்டில் ஏழு இராகங்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன. ருத்ராச்சாரியார் என்பவரின் சீடரான பரம மகேஸ்வரன் என்ற மன்னன் இந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ராகங்களைப் பாடியுள்ளதாக வரலாறு கூறுகிறது.இசைக் குறியீடுகளுக்கு 34 வெவ்வேறு எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Read More
திருவட்டத்துறை தீர்த்தபுரீசுவரர் கோவில்

திருவட்டத்துறை தீர்த்தபுரீசுவரர் கோவில்

சனி, செவ்வாய் தோஷங்களுக்கான பரிகார தலம்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் இருந்து, 25 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் திருவட்டத்துறை தீர்த்தபுரீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி. 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.

ஒருமுறை, சனி பகவானும் செவ்வாய் பகவானும், சூரிய சந்திரர்களால் சபிக்கப்பெற்று, அதன் காரணமாக எலும்புருக்கி நோய்க்கு செவ்வாய் பகவானும், பெருநோய்க்கு சனி பகவானும் ஆளாகினர். செவ்வாய், சனி இருவரும் பிரம்மாவிடம் சென்று தங்களுக்கு ஏற்பட்ட நிலைக்கு விமோசனம் கிடைக்க வழி கூறும்படி கேட்டனர். பிரம்மாவின் அறிவுரைப்படி, இருவரும் பூலோகம் வந்து பல சிவத்தலங்களில் சிவபெருமானை வழிபட்டனர். இறுதியாக இத்தலம் வந்து கடும் தவம் புரிந்து இறைவனை வழிபட்டு தங்கள் தோஷமும், சாபமும் நீங்கப் பெற்றனர்.

சனி பகவானும் செவ்வாய் பகவானும் தங்கள் தோஷம் நீங்க இத்தலத்தில் சிவ பூஜை செய்து வழிபட்டதால், சனி தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இத்தலத்து தீர்த்தங்களில் நீராடி ஈசனை வழிபட்டால், அனைத்து தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம். இத்தல விருட்சமான ஆலமரம் மக நட்சத்திரத்துக்கு உரிய மரமாகும். ஆகவே, மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தல இறைவனை வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும்.

Read More
அரிகேசநல்லூர் அரியநாதர் கோவில்

அரிகேசநல்லூர் அரியநாதர் கோவில்

தீபாவளி அன்று வழிபட வேண்டிய குபேரத் தலம்

செல்வச் செழிப்பை அருளும் தலம்

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி - அம்பாசமுத்திரம் சாலையில் வீரவநல்லூருக்கும் முக்கூடலுக்கும் இடையே, தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது

அரிகேசநல்லூர். இறைவன் திருநாமம் அரியநாதர். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. இக்கோவில் 1,600 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. அரிகேசரி என்ற பாண்டிய மன்னன் இந்த ஆலயத்தைக் கட்டியதால், மன்னன் பெயரால் இவ்வூர் அரிகேசநல்லூர் என்றழைக்கப்படுகிறது.

குபேரன் இத்தலத்து இறைவனை வழிபட்டு, தான் இழந்த செல்வங்களைத் திரும்பப் பெற்றதால், இத்தலம் மிகவும் சிறப்புக்குரியது. ராவணன் தனது சகோதரன் குபேரனிடம் இருந்த செல்வங்களையெல்லாம் பிடுங்கிக் கொண்டு, அவனது புஷ்பக விமானத்தையும் அபகரித்துக் கொண்டு துரத்தியடித்தபோது, அவர் அரிகேசநல்லூர் வந்து சிவலிங்கம் பிரதிட்டை செய்து வழிபட்டார். அவர் ஸ்தாபித்த லிங்கம்தான் அரிகேசநல்லூர் சிவனாவார். குபேரன் இந்த சிவனை பூஜித்து, தான் இழந்த செல்வங்களையெல்லாம் திரும்பப் பெற்ற தலம் என்பதால், இந்த அரிகேசநல்லூர் சிவன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகக் திகழ்கிறது. கடன் தொல்லை இருப்பவர்கள், செல்வ வளம் வேண்டுபவர்கள் இங்கு வந்து குபேரன் பூஜித்த சிவனை வழிபாடு செய்தால் செல்வச் செழிப்பு உண்டாகி, வாழ்வில் எல்லா வளங்களும் உண்டாகும் என்பது ஐதீகம்.

இக்கோவிலில், இறைவன் சன்னிதிக்கு வடகிழக்கே செல்வத்தின் அதிபதியான குபேரனின் மிகப்பெரிய கற்சிலை காணப்படுகிறது. வலக்கையில் கதையை ஏந்தி, இடக்கையை மடித்த காலின் மீது வைத்துக் கொண்டு சுமார் 4 அடி உயரத்தில் மிகப்பெரிய உருவமாக குபேரன் காட்சியளிக்கிறார். இங்கே குபேரன் எழுந்தருளியிருக்கும் காரணத்தால் ஒரு காலத்தில் இந்த ஊர் அழகாபுரி என்னும் பெயரால் கூட அழைக்கப்பட்டதாம். இந்த குபேரனுக்கு தீபாவளி மற்றும் அட்சய திருதியை நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இந்த நாட்களில் வெளியூரிலிருந்தெல்லாம் ஏராளமான பக்தர்கள் வந்து இங்கே வழிபாடு செய்கின்றனர்.

Read More
தின்னக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் கோவில்

தின்னக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் கோவில்

சிவப்பு நிற கல்லால் ஆன அபூர்வ நந்தி

இரு முன்கால்களையும் மடக்கி வைத்திருக்கும் அரிய தோற்றம்

திருச்சி மாவட்டம் முசிறியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, தின்னக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் கோவிந்தவல்லி. இக்கோவில் திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தேவார வைப்பு தலமாகும்.

இக்கோவில் நந்தியம்பெருமான் பல சிறப்புகளைப் பெற்றவர். இவருடைய திருமேனியானது வழக்கத்திற்கு மாறாக, கருப்பு நிற கல்லுக்கு பதிலாக சிவப்பு நிற நிற கல்லால் ஆனது. வழக்கமாக சிவாலயங்களில் நந்தியம்பெருமான் மூன்று கால்களை மடக்கியும், ஒரு காலை மட்டும் நிமர்த்தியும் அமர்ந்த கோலத்தில் இருப்பார். ஆனால், இக்கோவிலில் நந்தியம்பெருமான் தன் இரு முன்கால்களையும் மடக்கி வைத்திருக்கின்றார். இது ஒரு அரிதான காட்சியாகும். மேலும் அவரது வலது காதும் மடிந்து காணப்படுவதும் சிறப்புக்குரியதாகும். அவர் தன் தலையை சற்றே சாயத்து தன் காதை இறைவன் பக்கம் திருப்பி இருப்பதும் ஒரு வித்தியாசமான தோற்றம் ஆகும்

தொடர்ந்து 11 பிரதோஷங்களில் பங்கேற்று, நந்தியெம்பெருமானை மனமுருகி வேண்டினால், நினைத்த காரியங்கள் அனைத்தும் நடைபெறும் என்பது பக்தர்களின் கூற்றாக உள்ளது.

Read More
பிளாஞ்சேரி கைலாசநாதர் கோவில்

பிளாஞ்சேரி கைலாசநாதர் கோவில்

காசியைப் போல் அஷ்ட பைரவர்கள் அருள் பாலிக்கும் தலம்

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் இருந்து வடக்கே 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பிளாஞ்சேரி கைலாசநாதர் கோவில். இறைவியின் திருநாமம் காமாட்சியம்மன். காசியில், அஷ்ட பைரவர்களுக்கும் தனித்தனி கோயில்கள் அமைந்துள்ளன. தமிழகத்திலும் அஷ்ட பைரவர்கள் அருளும் ஒரு திருத்தலம் தான் பிளாஞ்சேரி. இங்கே தனித்தனி சன்னதிகளில் அஷ்ட பைரவர்களும் அருள்பாலிக்க, சரபசூலினியும் குடிக் கொண்டிருக்கிறாள்.

சிவபெருமானின் திருவடிவங்களில் ஒன்று ஸ்ரீசரபமூர்த்தி வடிவம். இரண்யகசிபுவை வதைத்த நரசிம்ம மூர்த்தியின் ஆக்ரோஷத்தைத் தணிக்க, சிவபெருமான் எடுத்த திருவடிவே ஸ்ரீசரபமூர்த்தி வடிவம். இந்த மூர்த்தியின் வலப்புற இறக்கையில் இருந்து தோன்றியவளே ஸ்ரீசரப சூலினி. இந்தத் தலத்தில் ஸ்ரீசரப சூலினிக்குக் காவலாக எட்டு பைரவர்கள் தனித் தனிச் சன்னதிகளில் காட்சி தருகிறார்கள். சரபசூலினிக்கு மட்டுமல்ல, இங்கு வந்து வழிபட்டுச் செல்லும் பக்தர்களுக்கும் காவலாக இருந்து அருள்பாலிக்கிறார்கள் இந்த அஷ்ட பைரவர்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பக்தர்கள். இவர்கள் எண்மரையும் வழிபட்டால், எட்டுவிதமான பேறுகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

எட்டு பேறுகள் அருளும் அஷ்ட பைரவர்கள்

அசிதாங்க பைரவர்: அன்ன வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் இவர், நான்கு திருக்கரங்களோடு அருள்கிறார். ஜாதகத்தில் சந்திர திசை, சந்திர புக்தி நடைபெறும் அன்பர்களும் ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரக்காரர்களும் வழிபடவேண்டிய பைரவர் இவர். இவரை வழிபட்டால் கல்வி, கலை, செல்வம், பேச்சாற்றல் ஆகியவற்றில் சிறந்து விளங்கலாம். கலைத் துறையினர் இவரை வழிபட்டால் மகத்தான வெற்றிகளைப் பெறலாம்.

குரு பைரவர்: ரிஷப வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். சூரிய திசை, சூரிய புக்தி நடைபெறும் ஜாதகர்களும் கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபடவேண்டிய பைரவர் இவர். பித்ரு தோஷங்கள் நீங்கவும், திருமணத் தடைகள் விலகவும், கணவன்- மனைவி இடையே பிரச்சினைகள் நீங்கிக் குடும்ப ஒற்றுமை ஏற்படவும் இவரை வழிபட வேண்டும்.

சண்ட பைரவர்: மயில் வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். செவ்வாய் திசை, செவ்வாய் புத்தி நடைபெறும் ஜாதகர்களும் அவிட்டம், மிருகசீரிடம், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபடவேண்டிய பைரவர். காரியத் தடைகள் அகலவும், துன்பங்கள் நீங்கவும், ரத்தம் சம்பந்தமான வியாதிகளில் இருந்து விடுபடவும் இவரை வழிபடுவது, விசேஷம்.

குரோதன பைரவர்: கருட வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். புதன் திசை, புதன் புக்தி நடைபெறும் ஜாதகர்களும் ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய பைரவர். கடன்தொல்லை தீரவும், செல்வம் பெருகவும், தோல் வியாதிகள் விலகவும் இவரை வழிபடவேண்டும்.

உன்மத்த பைரவர்: குதிரை வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். கேது திசை, கேது புக்தி நடைபெறும் ஜாதகர்களும் அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய பைரவர். சகலவிதமான திருஷ்டி தோஷங்கள் நீங்கவும், ஏவல், பில்லி-சூன்யம் போன்ற தீவினைகள் விலகவும், நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறவும் இவரை வழிபடவேண்டும்.

கபால பைரவர்: யானை வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். நான்கு திருக்கரங்களுடன் திகழ்பவர். சுக்கிர திசை, சுக்கிர புக்தி நடைபெறும் ஜாதகர்களும் பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய மூர்த்தி இவர். இவரை வழிபட்டால் ஜனவசியம், ஆட்சி-அதிகாரம், அரசியலில் உயர் பதவிகள் ஆகியவை வாய்க்கும்.

பீஷண பைரவர்: சிம்ம வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். நான்கு திருக்கரங்களோடு அருள்கிறார். குரு திசை, குரு புக்தி நடைபெறும் ஜாதகர்களும் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய பைரவர். குழந்தை பாக்கியம் கிடைக்கவும், இதயம் தொடர்பான பிணிகள், பக்கவாதம் ஆகியவை விலகவும் இவரை வழிபடவேண்டும்.

சம்ஹார பைரவர்: நாய் வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். பத்து திருக்கரங்களைக் கொண்டவர். சனி திசை-சனி புக்தி மற்றும் ராகு திசை-ராகு புத்தி நடைபெறும் ஜாதகர்களும் பூசம், அனுஷம், உத்திரட்டாதி, திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரக்காரர்களும் வழிபட வேண்டிய பைரவர் இவர். சத்ரு உபாதைகள் நீங்கவும், கண்டங்களிலிருந்து தப்பிக்கவும், விபத்துகளில் சிக்காதிருக்கவும், வாக்குப் பலிதம் வாய்க்கவும் இவரை வழிபட்டு பலன் பெறலாம்.

ஆயுள் கண்டம் இருப்பவர்கள் வழிபட வேண்டிய பரிகார தலம்

ஜாதகத்தில் அபமிருத்யு தோஷம் (உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கண்டம்) இருப்பவர்களுக்கும் சிறந்த பரிகாரத் தலம் இது. அவர்கள், தேய்பிறை அஷ்டமியன்று மாலை 6 மணியளவில் அஷ்ட பைரவர்களுக்கு நடைபெறும் சிறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டால், தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்

Read More
திருக்காட்டுப்பள்ளி அக்னீசுவரர் கோவில்

திருக்காட்டுப்பள்ளி அக்னீசுவரர் கோவில்

சிவபெருமான் கயிலாயத்தில் அம்பிகைக்கு உபதேசித்த கோலத்தில் காட்சி தரும் யோக தட்சிணாமூர்த்தி

திருவையாறு – கல்லணை சாலையில் திருவையாற்றுக்கு மேற்கே 15 கி.மீ. தொலைவில் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள தேவார தலம் திருக்காட்டுப்பள்ளி அக்னீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் சௌந்தரநாயகி.

இத்தலத்து இறைவனை அக்னி பகவான் வழிபட்டதால், கோயிலுக்கு 'அக்னீசுவரம்' என்று பெயர் வந்தது. மூலவர் அக்னீசுவரர் கருவறை, தரை மட்டத்திலிருந்து கீழே ஒரு தாழ்வான பகுதியில் இருக்கிறது. பிரம்மாவுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கிய தலம் இது. அக்கினீசுவரர் சந்நிதிக்கு இடது பக்கத்தில் பிரம்மாவுக்குத் தனி சந்நிதி அமைக்கப்பட்டிருக்கிறது.

மூலவரைச் சுற்றிவரும் பிராகாரத்தில் கோஷ்ட மூர்த்தமாக யோக தட்சிணாமூர்த்தி விளங்குகின்றார். சிவபெருமான் கயிலாயத்தில் அம்பிகைக்கு சிவாகமங்களை உபதேசித்த போது இருந்த அதே கோலத்தில், இங்கே யோக தட்சிணாமூர்த்தியாக எழுந்து அருளி இருப்பது தனிச்சிறப்பாகும். இதனால் இந்த யோக தட்சிணாமூர்த்தி மிகவும் விசேஷமானவர். இவர் குரங்காசனத்தில் அமர்ந்து, இரண்டு திருக்கரங்களுடன் கழுத்தில் மகரகண்டி, ருத்ராட்சம் அணிந்து, திருச்சடையில் சூரிய, சந்திரன் அணிந்து, தன் கையில் சிவாகம நூல் ஏந்தி யோக குருவாகக் காட்சி தருவது சிறப்பு. இவரை அப்பர் தன்னுடைய தேவாரத்தில், ஞான நாயகன் என்று போற்றுகின்றார். இவரை வாரந்தோறும் வியாழக்கிழமையில் ஐந்து நெய்தீபம் ஏற்றி முல்லைப் பூவால் வழிபட்டால், திருமணம், கல்வி, செல்வம் யோகத்தை அடையலாம். வழக்குகளில் நம் பக்கம் நியாயம் இருந்தால், எல்லா தடைகளும் நீங்கி வெற்றி பெறலாம்.

இத்தலத்திலுள்ள இரண்டாம் பிராகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி, மேதா தட்சிணாமூர்த்தி எனப்படுகிறார். சிலா வடிவிலுள்ள இவரின் அடிப்பகுதியில் உள்ள துவாரம் வழியே, கருவறை கோஷ்டத்தில் உள்ள யோக தட்சிணாமூர்த்தியைப் பார்க்கலாம். இந்த அமைப்பும், இரண்டு குரு பகவான்கள் எழுந்தருளி இருப்பதும் இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

Read More
கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோவில்

கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோவில்

மூன்று கால்கள் மட்டுமே உள்ள அபூர்வ நந்தி

நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கும் கொல்லிமலையில் அமைந்துள்ளது அறப்பளீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் தாயம்மை. கொல்லிமலை, நாமக்கல்லில் இருந்து சுமார் 64 கி.மீ. தொலைவில் இருக்கிறது. கொல்லிமலைக்குப் போய் வர, அதிகக் கொண்டையூசி வளைவுகள் கொண்ட மலைப் பாதை உள்ளது.

திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற தேவார வைப்புத்தலம் இது. கவிச்சக்கரவர்த்தி கம்பரும் பாடியுள்ளார்.

கொல்லிமலை, கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில்ஓரி எனும் மன்னன் ஆண்ட பகுதியாகும். மூலிகை பொருட்களுக்கு பெயர் போன கொல்லிமலையில் நிறைய மர்மமான விஷயங்கள் இருப்பதாகவும், இம்மலையில் சித்தர்கள் குகைகளில் தங்கித் தவம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இக்கோவில் நந்திக்கு மூன்று கால்கள் மட்டுமே உள்ளன. இவருக்கு பின்புற வலது கால் கிடையாது. இது பற்றி ஒரு புராணக் கதை உள்ளது. இந்த நந்தி, இக்கோவிலுக்கு அருகில் உள்ள புளியஞ் சோலையில் பயிரிடப்பட்டிருந்த கடலைச் செடியின் பூக்களின் மணம் கவரவே, கடலைக் காய்களைத் தின்பதற்கு இரவில் அங்கு சென்றது. இதனை அறிந்த காவலர்கள், நந்தியை பயங்கர ஆயுதத்தால் தாக்க, நந்தியின் ஒரு கால் வெட்டுப்பட்டது. அந்த நிலையில் அப்படியே கோவிலுக்கு வந்து நந்தி அமர்ந்தது. அந்தத் தோற்றத்துடன் இன்றும் காட்சி தருகிறது நந்தி. விவரம் அறிந்த விவசாயிகள் தங்கள் செயலுக்கு வருந்தியதுடன், தினமும் நந்திக்குப் பிடித்த கடலைக் காய்களை அதற்குச் சமர்ப்பித்தார்கள்.

சிவராத்திரியின் போதும், பிரதோஷ காலத்தின் போதும் இந்த நந்தீஸ்வரரை வழிபட்டால் வாழ்வில் வசந்தம் வீசும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
அம்பல் பிரம்மபுரீசுவரர் கோவில்

அம்பல் பிரம்மபுரீசுவரர் கோவில்

மூலவருக்கு பின்புறம் சோமாஸ்கந்தமூர்த்தி அமைந்திருக்கும் அரிய காட்சி

மயிலாடுதுறை - திருவாரூர் சாலை மார்க்கத்தில் 23 கி.மீ. தொலைவில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தேவார தலம் அம்பல் பிரம்மபுரீசுவரர் கோவில். இத்தலத்திற்கு திருஅம்பர்ப் பெருந்திருக்கோயில் என்ற பெயரும் உண்டு. இறைவியின் திருநாமம் பூங்குழல்நாயகி, சுகந்த குந்தளாம்பிகை.

அம்பன், அம்பரன் என்ற இரு அசுரர்கள் இத்தல இறைவனை பூசித்து இறவா வரம் பெற்றனர். அவர்கள் வழிபட்டதால் இத்தலம் அம்பர் எனப் பெயர் பெற்றது. பிரம்மா, இத்தல இறைவனை வழிபட்டு தான், அன்ன வடிவம் பெற்ற சாபத்தை நீங்க பெற்றார். அதனால் இத்தல இறைவனுக்கு பிரம்மபுரீசுவரர் என்ற திருநாமம் ஏற்பட்டது. நாயன்மார்களில் ஒருவரான சோமாசிமாற நாயனார் அவதரித்த திருத்தலம் இது.

பொதுவாக சிவாலயங்களில், சிவபெருமான் கருவறையில் லிங்க வடிவில் எழுந்தருளி இருப்பார். சில தலங்களில் சிவபெருமானும், பார்வதியும் மூலவருக்கு பின்புறம் திருமணக் கோலத்தில் எழுந்தருளி இருப்பார்கள். இத்தலத்தில், கர்ப்ப கிரகத்தில் சுயம்பு மூர்த்தியாக விளங்கும் பிரம்மபுரீசுவரருக்குப் பின்னால், சோமாஸ்கந்தமூர்த்தி (சிவன் + முருகன் + பார்வதி) அமைந்திருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இத்தகைய காட்சியை நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது.

Read More
குணசீலம் தார்மீகநாதர் கோவில்

குணசீலம் தார்மீகநாதர் கோவில்

இரண்டு கால்களையும் மடித்தபடி காட்சியளிக்கும் அபூர்வ நந்தி

திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில், 22 கி.மீ. தொலைவில் உள்ள குணசீலத்தில் அமைந்துள்ளது தார்மீகநாதர் கோவில். இறைவியின் திருநாமம் ஹேமவர்ணேஸ்வரி.

பொதுவாக சிவாலயங்களில் நந்தியெம்பெருமான் ஒரு காலை சற்றே மடக்கியும், மற்றொரு காலை மடித்தபடியும் காட்சித் தருவார். ஆனால், இக்கோவிலில் தனது இரண்டு கால்களையும் மடித்தபடி காட்சியளிக்கிறார். நந்தியம்பெருமானின் இந்த கோலத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. பொதுவாக சித்தர்கள் நடமாடிய கோவிலிலோ, அவர்கள் கோவில் அமைவதற்கு உதவியிருந்தாலோ, நந்தியெம்பெருமானின் அமைப்பு மாற்றத்துடன் காணப்படுமாம். அந்த வகையில் நந்தியெம்பெருமான் தனது இரண்டு கால்களையும் மடித்தபடி காட்சியளிப்பதால், இக்கோவிலில் சித்தர்கள் நடமாட்டமும் இருப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

Read More