திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவில்

திருவோண நட்சத்திரத் தலம்

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காவேரிப்பாக்கத்திலிருந்து 2.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலம் திருப்பாற்கடல். பெருமாளின் திருநாமம் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள். தாயாரின் திருநாமம் அலர்மேல் மங்கை.

சிவனும் விஷ்ணுவும் ஒன்று என்பதை உணர்த்துவதை போன்று, கருவறையில் சிவபெருமானின் ஆவுடையாரின்மீது பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் அபய கரத்துடன் காட்சியளிக்கிறார். பெருமாளின் 108 திவ்யதேசங்களில் 107-வது திவ்ய தேசமான திருப்பாற்கடலை மனித உடலுடன் சென்று தரிசிக்க முடியாது. இந்த குறையை போக்கவே பெருமாள் திருப்பாற்கடலில் அருள்பாலிக்கிறார். இந்த தலத்து பெருமாளை தரிசித்தால் 107வது திவ்ய தேசமான திருப்பாற்கடலை தரிசித்த பலன் கிட்டும். இத்தலத்தில் சிவபெருமானும் விஷ்ணுவும் ஒன்றாக அருள்பாலிப்பதால் பிரதோஷம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

27 நட்சத்திரங்களில் பெருமாளுக்குரிய திருவோணமும், சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே திரு என்ற அடைமொழியுடன் கூடியது. சந்திரனது 27 நட்சத்திர மனைவியருள் ஒருவரான திருவோண நட்சத்திர தேவி, தனது கணவனின் தோஷத்தைப் போக்குவதற்காக இத்தலத்து பெருமாளை வேண்டி தவமிருந்தாள். இவளது தவத்தில் மகிழ்ந்த பெருமாள், ஒரு மூன்றாம் பிறை நாளில் சந்திரனுக்கு காட்சி தந்து அவனது தோஷத்தை போக்கினார். அன்றிலிருந்து இத்தலம் திருவோண நட்சத்திரத் தலமானது.

திருவோண நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம்

திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ, அல்லது தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ, ரோகிணி, அஸ்தம் ஆகிய சந்திரனுக்குரிய நாளிலோ, மூன்றாம் பிறை நாளிலோ இத்தல பெருமாளுக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால், நற்பலன்கள் கிட்டும். திருவோணம் பெருமாளுக்குரிய நட்சத்திரம் என்பதால் அனைத்து நட்சத்திரக்காரர்களும், தங்களது வேண்டுதல் நிறைவேற இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

தீராத நோய்களைத் தீர்க்கும் அத்திப்பழ தானம்

திருப்பாற்கடல் பிரசன்ன வேங்கடெசபெருமாளை மனதாரப் பிரார்த்தித்து, அத்திப்பழங்களை தானமாக வழங்கினால், தீராத நோயெல்லாம் தீரும். இல்லத்தில் ஐஸ்வரியம் குடிகொள்ளும். மகாலக்ஷ்மி தாயாரின் பரிபூரண அருளைப் பெறலாம் என்பது வைணவ பெரியோர்களின் கருத்தாகும்.

Read More