திருக்கொடியலூர் அகத்தீஸ்வரர் கோவில்

திருக்கொடியலூர் அகத்தீஸ்வரர் கோவில்

மங்கள சனீஸ்வர பகவானும், எமதர்மராஜனும் அவதரித்த தலம்

திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள திருமீயச்சூர் லலிதாம்பிகை கோவிலின் அருகில் அமைந்துள்ள தலம் திருக்கொடியலூர். இறைவன் திருநாமம் அகத்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி. அகத்தியர் ஸ்ரீலலிதாம்பிகையை தரிசித்து நவரத்தின மாலையை பாடி அம்பாளின் பேரருளை பெற்றபின், இத்தலத்துக்கு வந்து இறைவனையும் இறைவியையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார்.

சூரிய பகவான், அவர் மனைவியர்களான உஷாதேவி, சாயாதேவி ஆகிய மூலரும் கூடி ஈசனை ஆராதித்த தலம் இது என்பதால் திருக்கூடியலூர் என்றானது. அதுவே பின்னர் திருக்கொடியலூர் என்று மருவியது. இத்தல இறைவனை வேண்டி உஷாதேவி எமதர்மராஜனையும், சாயாதேவி சனீஸ்வர பகவானையும் பெற்றெடுத்தனர். இரு சகோதரர்களும் ஒருங்கே அவதரித்த தலம் இதுவாகும். இக்கோவிலில், தென் புறத்தில் எமதர்மராஜனும், வடப்புறத்தில் சனி பகவானும் அமைந்திருப்பது மற்ற எந்த ஒரு கோவிலிலும் இல்லாத தனிச்சிறப்பாகும்.

பிரார்த்தனை

இத்தல இறைவனை வேண்டி உஷாதேவியும், சாயாதேவியும் புத்திரபேறு பெற்ற காரணந்தால் இத்தலம் குழந்தைப்பேறு வழங்கும் சிறப்புத் தலமாகவும் கருதப்படுகிறது. இந்த ஆலயத்திற்கு வந்து எள்ளு தீபம், நல்லெண்ணெய் விளக்கேற்றினால் அனைத்து தோஷங்களும் அகலும்.

வியாழக்கிழமைதோறும் எமதர்மனுக்கும், சனிக்கிழமை தோறும் சனீஸ்வரருக்கும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

சனி பகவான் இத்தலத்தில் அபய ஹஸ்தத்துடன், அனுக்கிரக மூர்த்தியாக எழுந்தருளி இருப்பதால் அவர் மங்கள சனீஸ்வர பகவான் என்று அழைக்கப்படுகிறார். சனிக்கிழமைகளில் பக்தர்கள் இத்தலத்தின் தென்புறம் உள்ள தேவர் தீர்த்தத்தில் நீராடி, அகத்தீஸ்வரரை வழிபட்டு அபிஷேக தீர்த்தத்தை தங்கள் மீது தெளித்து கொண்டு பகவானுக்கு எள் தீபம் ஏற்றி அபிஷேகம் ஆராதனை செய்து வழிபடுதல், எள்சாதம் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு அன்னதானம் வழங்குதல், ஆகியவற்றால் சனிதோஷம் நீங்கப் பெறலாம்.

இத்தலத்தில், எமதர்மராஜாவிடம் பக்தர்கள் ஆயுள் நீடிக்க வேண்டிக் கொள்கிறார்கள். எமதர்மர் நீதிக்கு அதிபதியாக இருப்பதால் ஏமாற்றப்பட்டவர்கள், பொருளை திருட்டு கொடுத்தவர்கள், தலத்திற்கு அதிகளவில் வருகை தந்து பகவானை வணங்கி செல்கின்றனர். தங்கள் கோரிக்கையை பேப்பரில் எழுதி அதனை எமதர்மர் சந்நிதியில் வைத்து பூஜித்து வருகின்றனர். இவ்வாறு வேண்டுதல் வைக்கப்பட்ட சில நாட்களில் பொருட்கள் திரும்பக் கிடைத்துவிடுகிறது என்பதால், பக்தர்கள் தலத்திற்கு அதிகளவில் வருகை தந்து பூஜை செய்து செல்கின்றனர். இப்பூஜையினை எமதர்மரிடம் படிக்கட்டுதல் என்கிறார்கள். சனிக்கிழமைகளில் எமகண்ட நேரத்தில் (மதியம் 1:30 - 3:00 மணி) க்கு, இங்கு ஆயுள்விருத்தி ஹோமம் செய்யப்படுகிறது.

Read More