நாகப்பட்டினம் காயாரோகணேசுவரர் கோவில்

நாகப்பட்டினம் காயாரோகணேசுவரர் கோவில்

சிவபெருமான் சார்பில், இறந்தவர் உடலுக்கு மரியாதை செய்யும் வினோத நடைமுறை

நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள தேவார தலம் காயாரோகணேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் நீலாயதாட்சி அம்மன்.

இக்கோவிலில் இறந்தவர் சடலத்திற்கு, சிவபெருமான் சார்பில் மரியாதை செலுத்தும் வினோத நடைமுறை வழக்கத்தில் உள்ளது. பொதுவாக கோவிலின் சன்னதி தெருவிலோ அல்லது மடவிளாகத்திலோ யாராவது இறந்து விட்டால் கோவில் நடையை அடைத்து விடுவார்கள். பரிகார பூஜைகள் செய்தபின்னர் தான் நடையை திறப்பார்கள். ஆனால் இந்த தலத்தில் மட்டும் நடை திறந்தே இருக்கும். இந்த நடைமுறையின் பின்னணியில், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனாரின் வரலாறு பிணைந்துள்ளது.

சிவபெருமானால் பெயர் சூட்டப்பட்ட ஒரே நாயன்மார்

அதிபத்த நாயனார் அவதாரம் செய்த திருத்தலம் 'கடல்நாகை' எனும் இந்த நாகப்பட்டினம் ஆகும். மீனவரான அதிபத்த நாயனார், தான் வலைவீசி நடுக்கடலில் தினமும் பிடிக்கும் மீன்களில், முதல் மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணித்து வந்தார். அதாவது, தினமும் தான் கடலில் பிடிக்கும் முதல் மீனை அப்படியே கடலில் மீண்டும் சிவபெருமானுக்கு என அர்ப்பணித்து விட்டுவிடுவார். கடும் வறுமையிலும் அவர் இந்த திருத்தொண்டை தவறாது செய்து வந்தார். ஒரு நாள் ஒரே ஒரு மீன் தான் அதிபத்த நாயனாருக்கு கிடைத்தது. மனமகிழ்வுடன் அதையும் இறைவனுக்கே அர்ப்பணித்தார். வறுமையில் தவித்த அந்தக் குடும்பம் அன்று பசியால் வாடியது. இருப்பினும் சிவபெருமானுக்கு செய்த பணியை நினைத்து அதிபத்தர் திருப்தியடைந்தார். மறுநாள் அதிபத்தரின் வலையில் தங்க மீன் கிடைத்தது. அந்த தங்க மீனையும் சிவபெருமானுக்கே அர்ப்பணம் செய்தார். வறுமையிலும் கூட விலைஉயர்ந்த தங்க மீனை இறைவனுக்கு தியாகம் செய்த தொண்டை எண்ணி மகிழ்ந்த சிவபெருமான், 'அதிபக்தா' என்று அழைத்து, அவருக்கு காட்சி கொடுத்து அவரை ஆட்கொண்டார். அப்போது அதிபத்த நாயனார், சிவபெருமானிடம் தனக்கு மட்டுமல்ல தன் வம்சா வழியினருக்கும் முக்தி அளிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். இறைவனால் சூட்டப்பட்ட அதிபக்தா என்ற பெயர்தான் பின்னர் மருவி அதிபத்தர் என்றானது.

அதிபத்த நாயனாரின் வேண்டுதலுக்கு ஏற்ப, அவருக்கு மரியாதை தரும் விதமாக இன்றும் அவரது வம்சா வழியினர் யாராவது இறந்துவிட்டால், அவர்களுக்கு இத்தல சிவபெருமான் சார்பில் மரியாதை செய்யும் நிகழ்வு நடைபெறுகிறது. இறந்தவரின் உடலை ஆலயத்திற்கு முன்பாக வைத்து விடுவார்கள். அப்போது சிவாச்சாரியார், கருவறையில் உள்ள சிவலிங்கத்துக்கு அணிவித்த மாலை, வஸ்திரம் ஆகியவற்றை இறந்தவர் உடலுக்கு அணிவித்து, தீர்த்தம் கொடுப்பார். அதன்பிறகே இறுதிச் சடங்கிற்காக தூக்கிச் செல்வார்கள். இவ்வாறு செய்வதால் இறந்தவரின் ஆன்மா, சிவபதம் அடைவதாக நம்பப்படுகிறது.

ஆண்டு தோறும் ஆவணி மாதம், ஆயில்யம் நட்சத்திரத்தன்று அதிபத்தர் தங்க மீனை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் விழா நாகப்பட்டினம் காயாரோகண சாமி கோவிலில் நடைபெறுகிறது. அப்போது அதிபத்தரின் உற்சவர் சிலையை படகில் வைத்து கடலுக்குள் எடுத்துச் சென்று, அதிபத்தர் தங்க மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வினை நடத்திக் காண்பிக்கிறார்கள்.

Read More
நாகப்பட்டினம் காக்காகுளம் பிள்ளையார் எனும் சாபம் தீர்த்த விநாயகர் கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

நாகப்பட்டினம் காக்காகுளம் பிள்ளையார் எனும் சாபம் தீர்த்த விநாயகர் கோவில்

காக்கா பிள்ளையார்

நாகப்பட்டினம் சட்டநாத சுவாமி கோவிலின் உப கோயிலாக, அதன் எதிரே நீலா மேல வீதியில் இக்கோயில் அமைந்துள்ளது. காக்காகுளம் பிள்ளையார் எனும் சாபம் தீர்த்த விநாயகர் கோவில்.

இந்திரன், கௌதம முனிவரின் மனைவியான அகலிகையை அடைய எண்ணம் கொண்டு, முனிவரின் குடிலின் அருகே காக்கை உருவெடுத்து கரைந்தான். கௌதம முனிவரும் பொழுது விடிந்ததாக எண்ணி வெளியே சென்றுவிட இந்திரன் கௌதம முனிவரின் வடிவம் எடுத்து அகலிகையை நாடினான். கௌதம முனிவர் அகலிகை, இந்திரன் ஆகியோரை சபித்து விடுகிறார். பின் இந்திரன் தேவகுரு பிரகஸ்பதியின் ஆலோசனைப்படி சாப விமோசனம் பெற காக்கை உருவிலேயே நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வர சுவாமி, நீலாயதாட்சி அம்மன் கோவிலின் தென்மேற்கு பகுதியில் ஒரு தீர்த்தம் அமைத்து விநாயகப் பெருமானை முதலில் வழிபட்டான்.

இந்திரனின் சாபம் தீர்க்க வழி செய்ததால், சாபம் தீர்த்த விநாயகர் என்றும், இந்திரன் காக வடிவத்தில் அமைத்த குளத்தின் அருகே உள்ளதால் காக்காகுளம் பிள்ளையார் என்றும், தற்போது அதுவே மருவி காக்கா பிள்ளையார் என அழைக்கப்படுகிறார்.

திருநள்ளாற்றில் சனி தோஷம் முழுமையாக நீங்கப் பெறாத நள மகாராஜா பின் இக்கோயில் காக்காகுளத்தில் நீராடி, விநாயகரை வழிபட்டு சனியினால் காலில் ஏற்பட்ட தோஷம் நீங்கப் பெற்றதாக ஐதீகம். சூரிய பகவானும் இந்த விநாயகரை வழிபட்டு குழந்தை பாக்கியத்தை பெற்றதால் மார்ச் மாத இறுதி வாரங்களில் அஸ்தமனத்தின் போது சூரிய கதிர்கள் விநாயகரின் மீது படும்படி சூரிய பூஜை நடைபெறுகிறது.

மேலும் இந்திரனும், சூரிய பகவானும் அஞ்சலி முத்திரையில் கை கூப்பி விநாயகரை தொழுத வண்ணம் அமைந்திருப்பது வேறெந்த திருக்கோயில்களில் காணமுடியாத அமைப்பாகும்.

Read More
திருநாகை சவுந்தரராஜப்பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருநாகை சவுந்தரராஜப்பெருமாள் கோவில்

தாயார் வெள்ளி கருடி வாகனத்தில் எழுந்தருளும் திவ்ய தேசம்

நாகப்பட்டினம் சௌந்தரராஜ பெருமாள் கோவில், சோழ நாட்டு திவ்யதேசங்களில் ஒன்று. மூலவரின் திருநாமம் நீலமேகப்பெருமாள். தாயாரின் திருநாமம் சௌந்தர்யவல்லித்தாயார். ஆதிசேஷன் தவம் புரிந்து பெருமாளின் சயனமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட திருத்தலம். ஆதிசேஷன் வழிபட்ட காரணத்தாலேயே இவ்வூர் நாகன்பட்டினம் என்றாகி, பின்னர் நாகப்பட்டினம் என மாறியது.

கருவறையில் நின்ற கோலத்தில், நெடியோனாக மார்பில் பெரிய பிராட்டியாருடன், சங்கு, சக்கரம், கதை தாங்கி தான முத்திரையுடன் எழிலாக, மந்தகாச புன்னகையுடன் திருமங்கையாழ்வாரை மயக்கிய 'நாகை அழகியாராக' நீலமேகப்பெருமாள் சேவை சாதிக்கின்றார். தங்க கவசத்தில் பெருமாளை சேவிக்க ஆயிரம் கண் வேண்டும். இவர் இடையை இத்திருத்தலத்திற்கே உரித்தான சிறப்பான தசாவதார ஒட்டியாணம் அலங்கரிக்கின்றது. நின்ற, இருந்த, கிடந்த என்ற மூன்று திருக்கோலச் சேவையும் இத்தலத்தில் உண்டு. மூலவர் நின்ற திருக்கோலம். “வீற்றிருந்த பெருமாள்” என்று அமர்ந்த திருக்கோலமும், பள்ளி கொண்ட திருக்கோலத்தில் அரங்கநாதனும் இங்கு காட்சி தருகின்றனர். நாகராஜனுக்கு மூன்று திருக்கோலங்களிலும் எம்பெருமான் சேவை சாதித்ததாக ஐதீகம் .

ஸ்ரீசௌந்தரராஜப்பெருமாள் ஆலயத்தில் மட்டுமே, ஸ்ரீசௌந்தர்யவல்லி தாயாருக்கு 'கருடி வாகனம்'(பெண் கருட வாகனம்) இருப்பது வேறு எந்த திவ்ய தேசத்திலும் இல்லாத தனிச்சிறப்பாகும். இத்திருக்கோயிலில் கருடபகவானை ஸ்ரீசௌந்தரராஜ பெருமாளே வீற்றிருக்கச் செய்ததால், இந்த சந்நிதியில் மட்டும் கருடபகவானுடன் கருடியும் வாகனமாக சேர்ந்து எழுந்தருளி உள்ளார். ஆகையால், பெருமாள் கருடவாகனத்திலும், தாயார் கருடிவாகனத்திலும் சேர்ந்துஎழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதிப்பர். அதன் படி, ஸ்ரீசௌந்தர்யவல்லித் தாயாரின் ஆனி பிரம்மோற்சவத்தின் நான்காம் திருநாள் மாலை 6 மணிக்கு உற்சவர் ஸ்ரீசௌந்தர்யவல்லித் தாயார், வெள்ளி கருடி வாகனத்திலும், ஸ்ரீசௌந்தரராஜ பெருமாள் வெள்ளி கருட வாகனத்திலும் எழுந்தருளி , கோவில் நந்தவனத்தில் வலம் வந்து சேவை சாதிக்கின்றனர். பெருமாள் கருட வாகனத்தின் சிறகுகள் மேல் நோக்கிய நிலையில் உள்ளன. தாயார் கருடி வாகனத்தின் சிறகுகள் கீழ் நோக்கிய நிலையில் உள்ளன.

இக்கோவில் ஆடிப்பூர பிரம்மோற்சவத்தின் நான்காம் நாள் மாலை, சூடிக்கொடுத்த சுடர்கொடி ஆண்டாள், வெள்ளிக் கருடி வாகனத்தில் மாடவீதியில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள் .

Read More
காயாரோகணர் கோவில்

காயாரோகணர் கோவில்

சிம்ம வாகனத்துடன் காட்சி தரும் பைரவர்

பொதுவாக சிவபெருமானின் அம்சமான பைரவர் நாய் வாகனத்துடன், கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி எழுந்தருளி நமக்கு காட்சி அளிப்பார்.

ஆனால் நாகப்பட்டினம் காயாரோகணர் கோவில் குளக்கரையில்(புண்டரீக தீர்த்தம்), தெற்கு திசை நோக்கி தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கும் பைரவர், சிம்ம வாகனத்துடன் காட்சி தருகிறார். இப்படிப்பட்ட பைரவரின் கோலத்தை நாம் காண்பது அரிது. இங்கு சிம்ம வாகன பைரவர் உக்கிர மூர்த்தியாக விளங்கியதால், இவருக்கு எதிரில் இரட்டை பிள்ளையார் பிரதிஷ்டை செய்து இவரை சாந்தப்படுத்தி இருக்கிறார்கள். இவருக்கு அருகில் இருக்கும் புண்டரீக தீர்த்தமானது மார்கழியில் கங்கையாக மாறி விடுவதாக ஐதிகம். அதனால் சிம்ம வாகன பைரவர், காசி காலபைரவருக்கு இணையானவர் என்று கருதப்படுகிறார்.தோஷங்களை நீக்கி சந்தோஷத்தைத் தந்தருளும் மகாசக்தி கொண்டவர் பைரவர். சுக்கிர தோஷத்தை நீக்குபவராகவும் பைரவர் திகழ்கிறார். அஷ்டமி நாளில் இவரை வணங்கினால் எண்ணியது நடக்கும். தடைகள் அனைத்தும் தவிடுபொடியாகும். சுக்கிர தோஷம் விலகும்.

தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபடுவது மிகுந்த பலத்தைத் தரும். எதிர்ப்புகள் தவிடுபொடி யாகும். வழக்கில் வெற்றி கிடைக்கும். பைரவரை, தேய்பிறை அஷ்டமி நாளில், வணங்கி னால், அஷ்டமத்து சனி உள்ளவர்களும், ஏழரைச் சனியால் பீடித்திருப்பவர்களும் கிரக தோஷம் அனைத்தும் நீங்கப் பெறுவார்கள்.

தெரு நாய்களுக்கு உணவளிப்பது நமக்கு பைரவரின் அருளைப் பெற்றுத் தரும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

பில்லி முதலான சூனியங்கள் அனைத்தும் விலகும். வீட்டின் வாஸ்து குறைபாடுகளும் நீங்கப் பெற்று, நிம்மதியும் முன்னேற்றமும் பெறலாம்.

Read More
லோகநாதப் பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

லோகநாதப் பெருமாள் கோவில்

பெருமாள் திருநீறு அணிந்து காட்சி தரும் திவ்ய தேசம்

பொதுவாக பெருமாள் கோவிலில் தீர்த்தமும், துளசியும்தான் பிரசாதமாகத் தருவார்கள, விபூதி பிரசாதம் தரமாட்டார்கள, திருக்கண்ணங்குடி லோகநாதப் பெருமாள் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் 'திருநீரணி விழா’ என்பது சிறப்பான விழாவாகும். சித்திரை பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் நடைபெறும் இந்த விழாவின் போது, பெருமாள் விபூதி அணிந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சி மூன்றே முக்கால் நாழிகை(90 நிமிடம்) நேரம்தான் நடைபெறும். இதற்கு வைணவர்கள் உட்பட அனைவரும் விபூதி அணிந்தே வருவார்கள். பெருமாள் கோவிலில் விபூதி பூசுவது இங்கு மட்டும்தான.சைவ வைணவ ஒற்றுமைக்கு இந்த விழா எடுத்துக்காட்டாகும். உபரிசரவசு என்ற மன்னனுக்காக இந்த விழா எடுக்கப்படுகின்றது, உபரிசரவசு சிறந்த சிவபக்தன. தினமும் விடியற்காலை வேளையில் சிவபூஜை செய்வது அவன வழக்கம். அவன் சித்திரை மாதம் ஒரு நாள் வான்வெளியில் பறந்து வந்து கொண்டிருந்த போது விடியற்காலை நேரம் நெருங்கிவிட்டது. சிவபூஜை செய்வதற்காக அவன் சிவாலயத்தை தேடிக் கொண்டிருந்தபோது, திருக்கண்ணங்குடி பெருமாள் கோவில் அவன் கண்ணில் பட்டது. அதை சிவன் கோவில் என்று தவறாக புரிந்து கொண்டு கோவிலினுள் நுழைந்தான். மன்னனின் சிவபூஜை தவறி விடக் கூடாது என்பதற்காக,பெருமாள் அவனுக்கு மூன்றே முக்கால் நாழிகை நேரம் சிவபெருமானாக காட்சி தந்து, சிவபூஜை செய்ய அருளினார. பெருமாள், உபரிசரவசுக்கு திருநீறு அணிந்து சிவலிங்கமாக காட்சி கொடுத்ததைத்தான் இத்தளத்தில், திருநீரணி விழாவாகக் கொண்டாடுகிறார்கள். இத்தலத்தில் கருடன் இரண்டு கரங்களையும் கட்டிக்கொண்டு காட்சியளிக்கிறார். இத்தகைய காட்சி வேறு எந்த தலத்திலும் காண முடியாது.

Read More