கருங்குளம் மார்த்தாண்டேஸ்வரர் கோவில்

கருங்குளம் மார்த்தாண்டேஸ்வரர் கோவில்

கல்யாண நவக்கிரக தலம் - நவக்கிரகங்கள் தங்கள் மனைவியர் சகிதமாக எழுந்தருளி இருக்கும் அரிய காட்சி

திருநெல்வேலியில் திருச்செந்தூர் சாலையில், 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது கருங்குளம் மார்த்தாண்டேஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் குலசேகர நாயகி.

ஒரு காலத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில், கேரளா அரசர் மார்த்தாண்டவர்மன் என்னும் மன்னன் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து மலையைச் சுற்றி அருமையான ஊர் ஒன்றை அமைத்தார். ஊருக்காகக் குளங்களை வெட்டினார். மரங்களின் நிழல்கள் பட்ட காரணத்தினால் எப்போதுமே குளங்கள் கருமையான நிறத்தில் காணப்பட்டது. எனவே இந்த ஊரை கருங்குளம் என அழைத்தனர். மார்த்தாண்ட மன்னன் இந்த ஊரை அமைத்த காரணத்தினால் மார்த்தாண்டேஸ்வர கருங்குளம் என இந்த ஊர் அழைக்கப்பட்டது. இதற்கிடையில் குலசேகரன்பட்டினத்தைத் ஆண்டு வந்த குலசேகர மன்னன், தாமிரபரணி ஆற்றில் நீராடி விட்டுச் செல்லும்போது, அம்பிகை இல்லாத மார்த்தாண்டேஸ்வர சிவனைக் கண்டு வணங்கி அங்கு ஒரு அம்பிகையைப் பிரதிஷ்டை செய்தார். குலசேகர நாதர் பிரதிஷ்டை செய்த அன்னைக்குக் குலசேகர நாயகி என்று பெயர். இதற்கிடையில் இந்த பகுதியில் முனிவர் பெருமக்களும், ரிஷிகளும் வந்திருந்து மார்த்தாண்டேஸ்வரரையும், இக்கோவிலுக்கு அருகில் உள்ள வகுளகிரி என்ற மலைமீது எழுந்தருளி இருக்கும் வெங்கடாசலபதியையும் வணங்கி நின்றனர். அப்பொழுது நவக்கிரகங்கள் அங்கே தம்பதி சகிதமாக காட்சியளித்தனர். அதைக் கண்டு முனிவர்களும், ரிஷிகளும் தங்களுக்குக் காட்சி தந்ததைப் போல மக்களுக்கும் தம்பதி சகிதமாக காட்சி தர வேண்டும் என்று வேண்டி நின்றனர். அதன்பின் இங்கு நவக்கிரகங்கள் தம்பதி சகிதமாக காட்சி தருகின்றனர். அதனால் இத்தலம், கல்யாண நவக்கிரக தலம் என்று அழைக்கப்படுகிறது.

இக்கோயிலில் நவக்கிரகங்கள் தங்கள் மனைவியர் சகிதமாக எழுந்தருளி இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இதுபோன்ற அமைப்பு தமிழகத்தில் ஒரு சில இடங்களிலேயே அமைய பெற்றுள்ளது.

இக்கோயிலில் நவகிரகங்கள் தங்கள் மனைவியர் சகிதமாக எழுந்தருளி இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இதுபோன்ற அமைப்பு தமிழகத்தில் ஒரு சில இடங்களிலேயே அமைய பெற்றுள்ளது.

பிரார்த்தனை

கணவன் மனைவியோடு இங்கு வருபவர்களுக்குக் கேட்ட வரங்கள் கிடைக்கின்றன. தாமிரபரணி நதிக்கரையில் நீராடி விட்டு இந்த சிவனை வணங்கி அதன்பின் வகுளகிரி வெங்கடாசலபதியை வணங்கினால் தடைப்பட்ட திருமணம் நடைபெறும், குழந்தை பேறு கிடைக்கும், நீண்ட ஆயுள் கிடைப்பதுடன், அடைபடாத கடன்கள் அடைபடும். தீராத வழக்குகள் நமக்குச் சாதகமாகும்.

Read More
கருங்குளம் வெங்கடாசலபதி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

கருங்குளம் வெங்கடாசலபதி கோவில்

சந்தனக்கட்டை வடிவில் பெருமாள்

திருநெல்வேலியிலிருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் வழியில் சுமார் 18 கி. மீ தொலைவில் உள்ள கருங்குளத்தில் இருக்கும் வகுளகிரி என்ற சிறிய மலைக் குன்றின் மீது அமையப் பெற்றுள்ளது கருங்குளம் வெங்கடாசலபதி கோவில். மேலே ஏறிச் செல்ல படிக்கட்டுகளும், சாலை வசதியும் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

திருப்பதியிலிருந்து பெருமாள் இங்கு வந்தமையால் இந்த கோவில் 'தென் திருப்பதி' என்று சிறப்பிக்கப்படுகிறது. திருப்பதிக்குப் போக முடியாத பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகளை இந்த வகுளகிரி பெருமாள் கோவிலில் நிறைவேற்றலாம்.

பெருமாளை மூன்று அடி உயரமுள்ள சந்தனக்கட்டை வடிவில் வைத்து அபிஷேக ஆராதனை செய்து பூஜித்து வருகிறார்கள். இதற்கு இரண்டு பக்கமும் சங்கு, சக்கரம் இருக்கிறது. இங்கு மூலவர் பெருமாள் சந்தன கட்டைகளாக இருந்தாலும், பால், சந்தனம் போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்தும் இதுவரை எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட வில்லை என்பது அதிசயமாக கருதப்படுகிறது.

சந்தனக்கட்டை வடிவில் பெருமாள் எழுந்தருளிய வரலாறு

முற்காலத்தில் சுபகண்டன் என்னும் அரசன் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு சிறந்த விஷ்ணு பக்தன். அவனுக்கு ஒரு முறை கண்ட மாலை என்னும் கொடிய நோய் பீடித்தது. தனது அந்த கொடிய நோய் நீங்க அவன் பெருமாளை பல கோவில்கள்தோறும் சென்று வழிபட்டு வந்தான். அப்படி அவன் ஒரு முறை திருப்பதி சென்று வெங்கடாசலபதி பெருமாளை வணங்கி தன் நோய் தீர மனமுருக வேண்டி நின்றான். அவனது பக்திக்கு இறங்கிய திருப்பதி பெருமாள், அன்று இரவு சுபகண்டனின் கனவில் தோன்றி, எனக்குச் சந்தனக் கட்டைகளால் தேர் ஒன்றைச் செய்வாயாக அப்படி செய்யும் போது அவற்றில், இரண்டு சந்தனக் கட்டைகள் மிச்சமாக இருக்கும். அந்த சந்தன கட்டைகளை தெற்கே இருக்கும் தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள வகுளகிரி மலையில் பிரதிஷ்டை செய்து வழிபட்டால் உன் நோய் நீங்கப் பெறுவாய் என கூறி அருள் புரிகிறார்.

கனவில் இருந்து திடுக்கிட்டு எழுந்த மன்னன் சுபகண்டன், மறுநாளே திருப்பதி வெங்கடாசலபதி பெருமாளுக்கு சந்தன மரக் கட்டைகளைக் கொண்டு தேர் செய்யத் தொடங்கினான். அவன் தேரை செய்து முடிக்கும் தருவாயில் அவனது கனவில் பெருமாள் கூறியவாறே, இரண்டு சந்தன கட்டைகள் மிச்சமாகின்றன. அந்த சந்தன கட்டைகளை எடுத்துக் கொண்டு, தென் பாண்டி நாட்டை அடைந்த சுபகண்டன், அங்கே தாமிரபரணி ஆற்றின் கரையில் இருந்த வகுளகிரி பகுதியை கண்டறிந்து கனவில் பெருமாள் கூறியபடியே தான் கொண்டு வந்திருந்த சந்தன கட்டைகளை முறைப்படி பிரதிஷ்டை செய்து தாமிரபரணியில் மூழ்கி பெருமாளை வழிபட அவனது நோய் நீங்கப் பெற்றதாக இக் கோவில் வரலாறு கூறப்படுகிறது.

இங்கு மலை மீது உள்ள கோவிலின் கருவறையில் சுபகண்டனால் கொண்டு வரப்பட்ட இரண்டு சந்தன கட்டைகளில் தான் பெருமாள் எழுந்தருளி காட்சியளிக்கிறார். சந்தன கட்டைகளுக்கு வஸ்திரம் அணிவித்து, திருநாமம் சாத்தி பெருமாள் அலங்காரம் செய்யப்படுகிறது.

Read More