திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோவில்

திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோவில்

சிவபெருமான் அப்பர், சம்பந்தருக்கு படிக்காசு அளித்த தலம்

கும்பகோணம் - இரவாஞ்சேரி வழித்தடத்தில், 26 கி.மீ., தொலைவில், தென்கரை என்ற கிராமத்து அருகில் உள்ளது திருவீழிமிழலை. இறைவன் திருநாமம் வீழிநாதேஸ்வரர் . இறைவியின் திருநாமம் சுந்தரகுசாம்பிகை. தல விருட்சம் வீழிச் செடி. அதனால் தான் திருவீழிமிழலை என்று தலத்துக்குப் பெயர்.

மிழலைக்குறும்பர் என்ற வேடுவர் இத்தல இறைவன் மேல் கொண்ட அன்பினால் தினமும் விளாங்கனியை நைவேத்யம் செய்து வழிபட்டு வந்தார். இறைவன் அவரது அன்பிற்கு இரங்கி, அஷ்டமாசித்திகளை வழங்கினார். வேடுவரால் நிவேதனம் செய்யப்பட்ட விளாங்கனி, வீழிநாதரின் பாதத்தில் இன்றும் காட்சியளிக்கிறது. இதனால் இத்தலம் திரு+வீழி+மிழலை என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்திற்குப் பூகைலாசம், கல்யாணபுரம், பஞ்சாக்கரபுரம், தக்ஷிணகாசி, ஷண்மங்களஸ்தலம், சுவேதகானனம், ஆகாசநகரம், பனசாரண்யம், நேத்திரர்பணபுரம், தேஜிநீவனம் எனப் பத்துப் பெயர்களுண்டு.

திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் பல தலங்களையும் பணிந்து பாடி, பின் திருவீழிமிழலையை அடைந்து இறைவனைப் பணிந்து, இன்னிசைப் பாமாலைகள் சூட்டி இன்புற்றனர். இருவரும் தினமும், ஐந்நூற்று மறையவர்களுக்கும், மற்ற அடியார்களுக்கும் உணவு படைத்து வந்தனர். சம்பந்தரும், அப்பரும் தங்கியிருந்த திருமடங்கள் வடக்கு வீதியில் கீழ்க்கோடியிலும் (சம்பந்தர்), மேற்குக் கோடியிலும் (அப்பர்) உள்ளன. அப்பொழுது நாட்டில் உணவு பஞ்சம் ஏற்பட்டது. தங்களுடன் இருக்கும் அடியாருக்கு உணவு படைப்பது எப்படி என்று இருவரும் கவலை உற்றனர். அச்சமயம் வீழிமிழலைப் பெருமான் இருவருடைய கனவிலும் தோன்றி, உங்களை வழிபடும் அடியவர்களுக்காக, தினந்தோறும் உங்கள் இருவருக்கும் ஒவ்வொரு பொற்காசு தருகின்றோம். அதைக் கொண்டு நீங்கள் உங்கள் அடியவர்களுக்கு உணவு படைக்கலாம் என்று கூறி மறைந்தார்.

கனவு நீங்கி, பெருமான் கருணையை வியந்த அவர்கள் மறுநாள் காலையில் திருவீழிமிழலை கோவிலுக்கு சென்றனர். கிழக்கு பீடத்தில் ஒரு பொற்காசு காணப்பட்டது. அதை சம்பந்தர் எடுத்துக்கொண்டார். வலம் வரும்போது மேற்கு பீடத்தில் ஒரு காசு இருப்பதைக் கண்டு, அதை அப்பர் பெருமான் எடுத்துக்கொண்டார். தங்கள் மடத்துப் பணியாளர்களிடம் அக்காசுகளைக் கொடுத்து, வேண்டிய பண்டங்களை வாங்கி அடியவர்களுக்கு உணவு அளித்திடுங்கள் என்றார்கள். அவர்களும் வேண்டியவற்றை வாங்கி, இரண்டு மடத்து அடியவர்களுக்கும் உணவு படைத்தார்கள்.

சில நாட்கள் சென்றன. திருநாவுக்கரசர் திருமடத்தில் அடியவர்கள் சரியான நேரத்திற்கு உணவருந்துவதையும், தமது திருமடத்தில் காலதாமதமாக அடியவர்கள் உணவருந்துவதையும் ஞானசம்பந்தர் உணர்ந்து, சமையல் பணியாளர்களை நோக்கி, 'உணவு படைப்பதில் ஏன் காலதாமதம்?' என்று கேட்டார். அதற்கு அவர்கள், சிவபெருமான் கொடுத்த பொற்காசை கடைவீதிக்குக் கொண்டுசென்றால், நாவுக்கரசர் பெறும் காசுக்கு உடனே பொருட்கள் கொடுக்கிறார்கள். நாவுக்கரசருக்கு கிடைக்கும் காசு நல்ல காசாக இருக்கின்றது. ஆனால் நீங்கள் பெற்று வரும் காசு மாற்று குறைந்த காசாக இருக்கின்றது. அதனால் நீங்கள் பெற்ற பொற்காசு கொடுத்து நாங்கள் பண்டம் வாங்க சென்றால், நம்முடைய காசுக்கு வட்டங் (தரகு, கமிஷன்) கேட்டு தீர்த்து, பின்புதான் பண்டங்களைக் கொடுக்கிறார்கள். அதனால் தான் காலதாமதம் என்று கூறினர். மறுதினம் திருவீழிமிழலை கோவிலுக்குச் சென்ற சம்பந்தர்,

"வாசிதீரவே காசுநல்குவீர்

மாசின் மிழலையீர், ஏசலில்லையே

காழி மாநகர் வாழி சம்பந்தன்

வீழிமிழலைமேல் தாழும் மொழிகளே''

என்னும் திருப்பதிகத்தைப் பாடினார். பின்னர் சிவபெருமான் திருஞானசம்பந்தருக்கும் நற்காசு வழங்கினார். அதுமுதல் காலத்தோடு அவருடைய அடியவர்களுக்கும் உணவு படைத்தார்கள். பின்பு மழை பெய்து எங்கும் செழித்து விளைபொருட்கள் மிகுந்தன. நாட்டில் பஞ்சம் அகன்றது.

இரண்டாம் கோபுரத்தைக் கடந்தவுடன் வெளித் திருச்சுற்றில் கிழக்கே, சம்பந்தருக்கு இறைவன் படிக்காசு அளித்த பலிபீடமும்; மேற்கே திருநாவுக்கரசருக்கு படிக்காசு வழங்கிய பலிபீடமும்; அருகில் படிக்காசு விநாயகரையும், அப்பர், திருஞானசம்பந்தர் திருவுருவங்களையும் தரிசிக்கலாம்.

Read More
திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோவில்

திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோவில்

பாதாளத்தில் அமர்ந்திருக்கும் அபூர்வ நந்தி

கும்பகோணம் - இரவாஞ்சேரி வழித்தடத்தில், 26 கி.மீ., தொலைவில் தென்கரை என்ற கிராமத்து அருகில் உள்ளது திருவீழிமிழலை. இறைவன் திருநாமம் வீழிநாதேஸ்வரர் . இறைவியின் திருநாமம் சுந்தரகுசாம்பிகை. சிவபெருமான் காத்தியாயன முனிவருக்கு மகளாக பிறந்த பார்வதி தேவியை திருமணம் புரிந்த தலம் இது. காத்தியாயன முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க கருவறையில் சிவபெருமானும் பார்வதியும் திருமண கோலத்தில் காட்சி தருவது இத்தலத்தின் சிறப்பு. திருமணப் பரிகாரத் தலங்களில் முக்கியமான தலம். திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரப் பாடல் பெற்ற தலம் இது.

இத்தலத்து இறைவனின் உற்சவ மூர்த்தி காசி யாத்திரைக்கு கிளம்பும் மாப்பிள்ளைக் கோலத்தில் அருள்பாலிப்பதால், மாப்பிள்ளை சுவாமி எனப்படுகிறார். சிவனும், பார்வதியும் திருமணக்கோலத்தில் வீற்றிருக்கும் தலங்கள் பல உண்டு. அங்கு மூலவரோ, உற்சவரோ மட்டுமே கல்யாண கோலத்தில் இருப்பர். மூலமூர்த்தி, உற்சவமூர்த்தி என இருவருமே திருமணக் கோலத்தில் விளங்கும் தலம் திருவீழிமிழலை ஒன்றே ஆகும்.

இறைவன் உமையை மணந்து கொண்ட தலம் என்னும் நிலைக்கேற்ப, கர்ப்பக்கிருக வாயிலில் அரசாணிக்கால் என்னும் தூணும், வெளியில் மகாமண்டபத்தில் பந்தக்கால் என்னும் தூணும் உள்ளன. திருமணத்தில் இரண்டு கால்களை முக்கியமாகச் சொல்வர். அரசனுடைய ஆணையை சாட்சியாக வைத்து திருமணம் நடக்கிறது என்ற பொருளில் ஒரு மரக் கொம்பினை நடுவர். மணமேடையில் இருக்கும் அந்தக் கொம்பு அரசாணைக்கால் எனப்படும். திருவீழிமிழலை கர்ப்பக்கிரக வாயிலில் அரசாணைக்கால் இருக்கிறது. இந்த அமைப்பு வேறெங்கும் இல்லாத விசேஷ அமைப்பாகும். மகாமண்டபம் திருமணமண்டபம் போல், பந்தல் காலுடன் காட்சியளிப்பது இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு. கொடிமரம் அருகே சிவலிங்கம் அமைந்திருப்பது இன்னொரு சிறப்பம்சம்.

இக்கோவிலில் இறைவன் எழுந்தருளி இருக்கும் கருவறை மண்டபத்திற்கு செல்ல நாம் 15 படிக்கட்டுகள் ஏறி செல்ல வேண்டும். பொதுவாக சிவாலயத்தில், நந்தி, கொடிமரம், பலிபீடம் ஆகியவை தரை மட்டத்தில் அமைந்திருக்கும். ஆனால் இக் கோவிலிலோ பாதாளத்தில் நந்தி அமைந்துள்ளது. முழு கோவிலே நந்திக்கு மேல் அமைந்திருப்பது போல் உள்ளது. இப்படிப்பட்ட பாதாள நந்தியை நாம் வேறு எந்த கோவிலிலும் தரிசிக்க முடியாது.

திருமண தடை உள்ளவர்கள் வழிபட வேண்டிய கோவில்

திருமண தடை உள்ளவர்கள் அவசியம் வழிபட வேண்டிய கோவில் இது. இக்கோவிலுக்கு வந்து வழிபட்ட பின் தொடர்ந்து 45 நாட்கள், தினமும் காலையில் எழுந்து, குளித்து முடித்ததும்,

தேவந்திராணி நமஸ்துப்யம்

தேவந்திரப்ரிய பாமினி

விவாஹ பாக்யமாரோக்யம்

என்று துவங்கும் சுலோகத்தைப் பாராயணம் செய்யவேண்டும். தினமும் காலையில் மட்டுமின்றி, மாலையிலும் பாராயணம் செய்து வந்தால், விரைவில் மாங்கல்ய வரம் கிடைக்கும்.

Read More
திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோவில்

திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோவில்

வியக்க வைக்கும் திருவீழிமிழலை வௌவால் நெத்தி மண்டபம்

கும்பகோணத்தில் இருந்து பூந்தோட்டம் செல்லும் சாலையில் சென்று தென்கரை என்ற இடத்தில் இருந்து ஒரு கிமீ தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருவீழிமிழலை . இறைவன் திருநாமம் வீழிநாதேஸ்வரர். இறைவியின் திருநாமம் சுந்தரகுசாம்பிகை.

இக்கோவில் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இக்கோவில் அம்மன் சன்னதியைச் சுற்றிவிட்டு வெளியே திருச்சுற்று வழியாக வரும்போது ராஜ கோபுரத்தினை அடுத்து, மிகவும் புகழ் பெற்ற வௌவால் நெத்தி மண்டபம் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டு அதிசயங்களில் ஒன்றான, கட்டடக்கலைக்குப் புகழ் பெற்ற மண்டபமாகும். சித்திரை மாதத்தில் இங்குதான் இறைவன் இறைவி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

இம்மண்டபம் 175 அடி நீளமும் 75 அடி அகலமும் கொண்டுள்ளதாகவும், நடுப்பகுதி வௌவால் நெற்றி அமைப்பிலும் உள்ளது. மண்டபத்தின் நடுப்பகுதியில் தூண்கள் கிடையாது. குறுக்கே எந்தவித பிடிமானமும் கிடையாது. நேரே கையை வளைத்து குவித்தார் போல, ஒவ்வொரு கல்லாக ஒட்ட வைத்து, மண்டபத்தின் கூரை உருவாக்கப்பட்டிருக்கிறது. வௌவால் தொங்க முடியாத வகையில் இருப்பதனால், வௌவால் நெத்தி மண்டபம் என்ற பெயர் ஏற்பட்டது. மண்டபத்தின் உள்ளே சென்று பார்க்கும்போது அதன் பிரமிப்பை நாம் உணர முடியும். நம் முன்னோர்கள் கட்டிடக் கலையில் பெற்றிருந்த சிறப்பையும், தொழில் நுட்பத் திறனையும் இந்த மண்டபம் நமக்கு பறை சாற்றுகின்றது.

தமிழகத்தின் அதிசயம் என துறை வல்லுனர்களால் ஒப்புகொள்ளப்பட்டதும், புதிதாக கற்றளி எழுப்பும்போது முற்கால சிற்பிகள் தங்களால் மீண்டும் உருவாக்க முடியாதவை என ஒப்புக்கொண்ட கோவில்/சிற்ப வேலைப்பாடுகள் ஆறு ஆகும். அவை கடாரங்கொண்டான் மதில் , ஆவுடையார் கோவில் கொடுங்கை , தஞ்சை பெரியகோவில் விமானம் , திருவலஞ்சுழி கருங்கல் பலகணி , திருவீழிமிழலை வௌவால் நெத்தி மண்டபம், திருநனிபள்ளி கோடி விட்டம் ஆகியவை ஆகும். முற்கால சிற்பிகள் தங்கள் வேலைக்கான ஒப்பந்தம் எழுதும்போது, மேற்கூறிய ஆறு வேலைப்பாடுகள் தவிர்த்து எந்த வேலைப்பாடும் தங்களால் செய்து தர முடியும் என்று உறுதி கொடுப்பார்களாகும். இதிலிருந்து இந்த வேலைப்பாடுகளின் உன்னதத் தன்மையை நாம் உணரலாம்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

திருவீழிமிழிலை திருத்தலத்து ஆலயத்து படிகளின் சிறப்பு

https://www.alayathuligal.com/blog/5fj3tlcrj9w49dly9czh33fnhdtaag

Read More