ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவில்

திருமண பாக்கியம் அருளும் ஸ்ரீ ஆண்டாள் கோவில் வளையல், மஞ்சள் கயிறு பிரசாதம்

மானிட உலகில் பெண்ணாக பிறந்து, இறைவனை அடைந்த ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த தலம் ஸ்ரீவில்லிபுத்தூர். பெரியாழ்வார் தம் நந்தவனத்தில் பூஜை செய்து கொண்டிருக்கும் போது ஒரு துளசிச் செடியின் அடியில் கலி பிறந்து 98 நிகழ்ந்த நள வருடத்தில் ஆடிமாதம் 8ம் தேதி செவ்வாய்க்கிழமை கூடிய பூர நட்சத்திரத்தில் ஸ்ரீ ஆண்டாள் அவதரித்தாள். கோதை தம் தந்தையாகிய பெரியாழ்வார் வடபெருங்கோவிலுடையானுக்குச் சாற்றுவதற்காக தொடுத்து வைத்திருந்த பூமாலைகளை எடுத்து அணிந்து கொண்டு, தாம் கண்ணபிரானுக்கு ஏற்ற மணப் பெண் தானா? என்று அழகு பார்க்க, இதனை அறிந்த பெரியாழ்வார் மிகவும் மனம் வருந்தியவராய் அம்மாலைகளை எம்பெருமானுக்கு சமர்ப்பிக்காமல் இருந்தார்.அன்று ஆழ்வாரின் கனவில் எம்பெருமான் தோன்றி தமக்கு கோதை சூடிக் களைந்த மாலையே சிறப்பு என்று கூற அன்று முதல் கோதை 'ஆண்டாள்' என்றும் ‘சூடிக் கொடுத்த நாச்சியார்’ என்றும் அழைக்கப்பட்டார். ஸ்ரீ ஆண்டாளுக்கு சாத்தப்படும் மாலையில் செவ்வந்தி (மஞ்சள்), விருட்சி (இட்லிப்பூ என்றும் சொல்வர்) (சிவப்பு), சம்மங்கி (வெள்ளை), மருள் (பச்சை), கதிர்பச்சைப்பூ (பச்சை) ஆகிய மலர்களும், துளசியும் பிரதானமாக சேர்க்கப்பட்டு மாலை செய்யப்படுகிறது. இப்பூக்கள் அனைத்தும் பெரியாழ்வார் உருவாக்கிய நந்தவனத்திலேயே வளர்க்கப்படுகிறது.

திருமணமாகாத பெண்கள் . துளசி மாலை வாங்கி வந்து ஸ்ரீ ஆண்டாளுக்கு சாத்தி வணங்கி, பின் அதனை வாங்கி கழுத்தில் அணிந்து கொண்டு, ஸ்ரீ ஆண்டாள் சன்னதி அருகிலிருக்கும் கண்ணாடி கிணற்றை சுற்றி வந்து கிணற்றினுள்ளே பார்த்துவிட்டு பின் மீண்டும் ஸ்ரீ ஆண்டாளிடம் வந்து வழிபடுகிறார்கள். இவ்வாறு வழிபடுபவர்களுக்கு வளையல், மஞ்சள் கயிறு பிரசாதமாக கொடுக்கின்றனர். இதனால், தடைபட்ட திருமணங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை.

ஸ்ரீ ஆண்டாள் சன்னதியின் முன்னால் துளசிமாடம் உள்ளது. இதில் இருக்கும் மண்ணைப் பக்தர்கள் சிறிதளவு எடுத்துக்கொள்கிறார்கள். இந்த மண்ணை வீட்டில் வைத்தால் தோஷங்கள் நீங்கி நல் வாழ்வு கிடைக்கும் என நம்புகின்றனர்.

பேண்ட்,சர்ட் அணிந்த உற்சவப் பெருமாள்

நம் வீட்டு திருமண நிகழ்ச்சியில், மாப்பிள்ளை அழைப்பின்போது மணமகன் பேண்ட், சட்டை அணிந்து வருவர். இது இன்று, நேற்று நடக்கும் வழக்கமல்ல. பெருமாள், ஆண்டாளை திருமணம் செய்தபோதே, பேண்ட், சட்டை அணிந்து சென்றார். இதன் அடிப்படையில் இங்குள்ள உற்சவர் பெருமாள் பேண்ட், சட்டை அணிந்தே காட்சி தருகிறார். ஏகாதசி, அமாவாசை, தமிழ்வருடப்பிறப்பு ஆகிய விழாக்காலங்களில் இவர் வெள்ளை வேஷ்டி அணிந்திருப்பார்.

ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா

இன்று (07.08.2024) ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் உலகப் பிரசித்தி பெற்ற ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா நடைபெறுகின்றது.

Read More
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவில்

ஆண்டாள் - ஸ்ரீரங்க மன்னார் திருக்கல்யாண வைபவம்

தெய்வத் திருமணங்கள் பல நடைபெறும் திருநாள்தான் பங்குனி உத்திரம். இந்நாளில் நடைபெறும் ஆண்டாள் - ஸ்ரீரங்க மன்னார் திருக்கல்யாண வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

நாலாயிர திவ்வியப் பிரபந்தம் இயற்றிய 12 ஆழ்வார்களில், பெரியாழ்வாரும், ஆண்டாளும் அவதரித்த தலம் திருவில்லிபுத்தூர். ஆண்டாள், வடபத்ர சயனப் பெருமாள் மீது தீராத அன்பு கொண்டு மார்கழி நோன்பிருந்து பங்குனி உத்தர நன்நாளில் ஸ்ரீரங்க அரங்கனைக் கைத்தலம் பற்றினாள் என்பது வரலாறு. எனவே ஆண்டுதோறும் பங்குனி உத்திர நாளில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், ஆண்டாள் - ரங்கமன்னார் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறும்.பங்குனி உத்திரத்தன்று காலை ஆண்டாளும் ரங்கமன்னாரும் செப்புத்தேரில் வலம் வருவார்கள். மாலையில் பெண் அழைக்கும் நிகழ்ச்சி மற்றும் கன்னிகாதானம் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் சிறப்பு திருமஞ்சனம் முடிந்தவுடன், ஆண்டாளும் ரங்க மன்னாரும் திருமண வைபவம் நடைபெறும் ஆடிப்பூர கொட்டகைக்கு எழுந்தருளுவார்கள். கல்யாணத்திற்கான சீர்வரிசைகளை பெரியாழ்வாரின் சார்பில் கோவில் நிர்வாகத்தினர் மணமேடைக்கு கொண்டுவர, அதன்பின் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜை தொடங்கும். தொடர்ந்து கன்னிகாதானம் நடைபெற்ற நிலையில் பக்தர்களின் முன்னிலையில் திருமாங்கல்ய தாரணம் நடைபெறும்.

ஆண்டாள் மார்கழி மாதம் பாவை நோன்பிருந்து கண்ணனை நினைத்து அருளிய . 'வாரணமாயிரம்' என்று தொடங்குகிற 11 பாடல்களை, பெண்கள் தினமும் பாடி, பெருமாளையும் ஆண்டாளையும் வணங்கி வந்தால், சீக்கிரமே திருமண பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

வாரண மாயிரம் சூழ வலம்செய்து,

நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்,

பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,

தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்.

என்ற இந்தப் பாசுரம், வைணவர்கள் வீட்டு திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஓதப்பட்டு திருக்கல்யாணம் நடைபெறும். வைணவத் திருத்தலங்களில் செய்யப்படும் திருக்கல்யாண நிகழ்ச்சிகளில் இந்தப் பாசுரம் கட்டாயம் இடம் பெறும்.

Read More