காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில்

கிணற்று நீர் பிரசாதமாக தரப்படும் விநாயகர் தலம்

சித்தூர் நகரத்திலிருந்து 11 கி.மீ. தொலைவிலும், திருப்பதியிலிருந்து 68 11 கி.மீ. தொலைவிலும் உள்ளது காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில். நாட்டில் மிகப்பெரிய விநாயகர் மூர்த்தி அமைந்துள்ள ஆலயங்களில் இதுவும் ஒன்று. இந்த ஆலயத்தில் மூலவராக இருக்கும் வர சித்தி விநாயகர், ஒரு கிணற்றிலிருந்து சுயம்பு மூர்த்தியாக தோன்றியவர்.

முன்னொரு காலத்தில், இப்பகுதியில் ஊனமுற்ற மூன்று சகோதரர்கள் இருந்தனர். ஒருவருக்கு வாய் பேச இயலாது. அடுத்தவருக்குக் காது கேட்காது. மூன்றாமவருக்கு கண் தெரியாது. அவர்களிடம் 'காணி' நிலமே இருந்தது. அவர்கள் அதில் விவசாயம் செய்து பிழைத்து வந்தனர். இருப்பினும் ஒருவர் பேசுவது மற்றவருக்கு புரியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். அந்த சகோதரர்கள் ஒரு கிணற்றில் உள்ள நீரை நம்பி விவசாயம் செய்து வந்தனர். ஒருமுறை கிணறு வற்றிப் போகவே, அதை ஆழப்படுத்த நினைத்து தோண்ட ஆரம்பித்தனர். அப்போது ஓரிடத்தில் ரத்தம் பீரிட்டது. அங்கு விநாயகர் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அந்த விநாயகரை வெளியில் எடுக்க, அந்த ஊர் மக்கள் கடுமையாக முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை. அதனால் ரத்தத்தை நிறுத்த மக்கள் இளநீரால் கிணற்றிலேயே அபிஷேகம் செய்தனர். அந்த இளநீர் அருகில் உள்ள காணியில் பாய்ந்தது. எனவே இந்த ஊருக்கு காணிப்பாக்கம் என்ற பெயர் ஏற்பட்டது. பின்னர் நாட்கள் செல்ல செல்ல, அந்த கிணற்றுக்குள்ளேயே விநாயகரை சுற்றி சன்னதி எழுப்பினர். தொடர்ந்து நீண்ட காலத்திற்குப் பிறகு அங்கு கோவில் உருவானது.

கிணற்று நீர் பிரசாதம்

இத்தலத்து விநாயகர் சுயம்புவாக தோன்றிய கிணறு இப்போதும் இங்குள்ளது. இந்த விநாயகரைச் சுற்றி கிணற்று நீர் எப்போதும் ஊறிக் கொண்டேயிருக்கிறது. இக்கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர்தான் இன்றைக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த கிணற்று நீரை நாம் அருந்தினால் நாம் வேண்டியது நிறைவேறும் என்பது ஐதீகம். இதனைப் பருகினால் ஊனம் தீரும் என்றும் நோய்கள் எல்லாம் நீங்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

தலைமை நீதிபதியாக கருதப்படும் விநாயகர்

இங்கு தினமும் சத்திய பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இங்கு கடன் வாங்கி ஏமாற்றியவர்கள், பெண்களை ஏமாற்றியவர்கள் என எந்த வகையான குற்றச் செயல்களாக இருந்தாலும், இங்கு நடக்கும் சத்திய பிரமாணத்தில் கலந்து கொண்டு சத்தியம் செய்தால், அவர் நிரபராதியாக இருந்தால் அவருக்கு எதுவும் ஆவதில்லை. ஆனால்,பொய் சத்தியம் செய்பவர்களுக்கு இந்த வரசக்தி விநாயகர் கடுமையான தண்டனை வழங்குவார் என்பது நம்பிக்கை. அதனால் இந்த காணிப்பாகம் பகுதியை சேர்ந்த பக்தர்களுக்கு விநாயகரை தலைமை நீதிபதியாக பார்க்கின்றனர்.

நாளுக்கு நாள் வளரும் விநாயகர்

காணிப்பாக்கம் விநாயகர் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருகிறார். கொல்லபல்லி கிராமத்தை சேர்ந்த ஒருவர், ஒரு வெள்ளி கவசம் சுவாமிக்கு வழங்கினார். ஆனால் தொடர்ந்து விநாயகர் சிலை வளர்ந்து கொண்டு வருவதால் அந்த வெள்ளிக்கவசம் விநாயகருக்கு பொருந்த வில்லையாம்.

பிரார்த்தனை

இந்த ஆலயத்தில் வழிபட்டால் உடல் ஊனமுற்றவர்கள் குறைகள் தீரும். கணவன் - மனைவி பிரச்சினைகள் தீரும். கொடுக்கல் வாங்கல் தகராறு, நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டு இருப்பவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். ஏராளமான பக்தர்கள் இங்கு வருவதால், இக்கோவிலில் பூஜை செய்வதற்கு முன்பதிவு செய்வது அவசியம். அவ்வளவு பக்தர்கள் கூட்டம் இருக்கும்.

Read More
திருச்சானூர் பத்மாவதி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருச்சானூர் பத்மாவதி கோவில்

திருச்சானூர் அலர்மேல் மங்கை தாயார்

ஆந்திர மாநிலத்தில், கீழ் திருப்பதியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருச்சானூர் பத்மாவதி கோவில். இக்கோவில் வெங்கடாசலபதியின் மனைவியான பத்மாவதி தேவி எனும் அலர்மேல் மங்கைக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில். பக்தர்களுக்கு சுகங்களை வாரி வாரி வழங்குவதால், திருச்சானூர், சுகபுரி என்றும் அழைக்கப்படுகிறது. பத்மாவதி தாயாருக்கு அலர்மேல் மங்கை என்ற பெயரும் உண்டு. சொல் வழக்கில், அலமேலு என்று அழைப்பார்கள். அலர் என்றால் தாமரை. 'செந்தாமரை மலர் மேல் வீற்றிருப்பவள்' என்று பொருள். பத்மம் என்றாலும் தாமரை. எனவே, அவளுக்கு, பத்மாவதி என்ற பெயரும் பொருத்தமாகிறது. அன்னை மகாலட்சுமியின் அம்சம் அலர்மேல் மங்கை. பத்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த சிறப்புடையவள் அலர்மேல் மங்கைத் தாயார்.'

திருச்சானூரில் அருளும் இந்தத் தாயாரின் சந்நிதியில் பிரம்மா, உலக நன்மைக்காக இரண்டு தீபங்களை ஏற்றி வைத்து வழிபட்டார் என்றும், அந்த விளக்குகள் இன்றும் ஒளி விட்டுப் பிரகாசிக்கின்றன என்றும் புராணங்கள் கூறுகின்றன. இங்கு தாயாருக்கு ஆலயம் எழுப்பும்படி தொண்டைமானுக்கு ஶ்ரீநிவாசனே உத்தரவிட்டார் என்கின்றது தலபுராணம். அதனால் பகவான் ஆனந்தம் அடைந்ததால், இந்த ஆலய விமானத்துக்கு ஆனந்த விமானம் என்று தொண்டைமான் பெயரிட்டான்.

இந்த ஆலயத்தில் வழிபட்டப் பிறகே திருமலை சென்று ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்பது மரபு. மன அமைதியைத் தருவதோடு, வறுமையில் வாடும் மக்களுக்கு செல்வத்தை அளிப்பவளும் அவளே. அப்படிப்பட்ட அலர்மேல் மங்கையை தரிசித்து அல்லது மனக்கண்ணால் தியானித்து வழிபடுவதன் மூலம் சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும் என்பது நம்பிக்கை. திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு, பெருமாள் குறத்தியாக வந்து குறி சொன்னார். குறத்தி குறி சொன்ன கதையை கேட்டாலோ, படித்தாலோ திருமணத் தடை நீங்குவதுடன், அவர்கள், வம்சாவளிக்கே, திருமணத்தடை நீங்கி விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ‘வைகரீ ரூபாய அலர்மேல் மங்காய நமஹ' எனும் அலர்மேல் மங்கை தாயார் மந்திரம் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் காலையில் எழுந்த உடன் இந்த மந்திரத்தை கூறினால் பத்மாவதி தேவியின் அருள் கிட்டும் என்பது ஐதீகம்.

Read More
திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்

திருமலையானுக்கு தினமும் புதிய மண் சட்டியில் நைவேத்தியமாகும் தயிர் சாதம்

திருமலை வேங்கடவன் கோவிலில் பலவிதமான பிரசாதங்கள் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன. அதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது திருப்பதி லட்டு. பல்வேறு வகையான பட்சணங்கள், திருமலையின் பெரிய மடைப்பள்ளியில் தயார் செய்யப்பட்டாலும், திருமலையானுக்கு நிவேதனம் செய்யப்படுவது வெறும் தயிர் சாதம் மட்டும்தான். அதுவும் மண் பாத்திரத்தில் வைக்கப்பட்டதாக இருக்கும். புத்தம் புதிய மண் பாத்திரத்தில் வைத்து எடுத்து செல்லும் தயிர் சாதம் மட்டும், குலசேகர ஆழ்வார் படியை தாண்டி திருமலையானுக்கு நிவேதனம் செய்யப்படுகிறது. திருமலையானுக்கு ஒவ்வொரு நாளும் புதிய மண் சட்டியில் பிரசாதம் நிவேதிக்கப்படுகிறது. தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும், கர்ப்பக்கிரகத்துக்கு முன்பு உள்ள குலசேகரப்படியை தாண்டிச் செல்வதில்லை. அவனுக்கு படைக்கப்பட்ட தயிர் சாதம் மற்றும் மண் சட்டி ஆகியவற்றை பிரசாதமாக பெறுவது சாதாரணமான விஷயமல்ல. அவ்வாறு கிடைப்பது வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாக பக்தர்களால் கருதப்படுகிறது. இப்படி மண்சட்டியில் தயிர்சாதம் நிவேதனம் செய்யப்படுவதன் பின்னணியில் ஒரு சுவையான நிகழ்ச்சி உள்ளது.

இங்கு பீமன் என்ற குயவன் வாழ்ந்து வந்தான். அவன் பெருமாளின் மிக தீவிர பகதர். அவன் சனிக்கிழமைகளில் விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டார். ஆனால் மிகவும் ஏழையான பீமன் விரதம் என்பதற்காக கோவிலுக்கு செல்லக் கூடிய சூழல் இல்லாமல், எப்போதும் பானை போன்ற மண்பாண்ட பொருட்களை செய்து வந்தார். அப்படியே கோவிலுக்கு சென்றாலும், பூஜை செய்ய தெரியாது. அப்படி ஒரு கோவிலுக்கு செல்லும் போது, சுவாமியைப் பார்த்து, 'நீயே எல்லாம்' என்ற வார்த்தையை மட்டும் சொல்லி விட்டு வந்து விடுவார். இந்நிலையில், கோவிலுக்கு போக நேரம் இல்லாததால், பெருமாளையே இங்கு அழைத்துவிட்டால் என்ன என எண்ணினார். அதனால், அவர் களிமண்ணால் ஒரு பெருமாள் சிலையை செய்தார். அதை பூஜிக்க பூக்கள் வாங்க கூட பணம் இல்லை. அதனால் தினமும் தன் வேலையில் மீதமாகும் சிறிதளவு களிமண்ணை வைத்து பூக்களை செய்து வந்தார். அப்படி செய்த பூக்களை கோர்த்து, மண் பூ மாலையாக செய்து பெருமாளுக்கு அணிவித்தார். அந்த நாட்டை ஆண்ட அரசன் தொண்டைமானும் பெருமாளின் தீவிர பக்தன். அவர் சனிக்கிழமைகளில் தங்கப்பூ மாலையை அணிவிப்பார். அப்படி அவர் ஒருவாரத்தில் பெருமாளுக்கு தங்க பூ மாலை அணிவித்தார். மறு வாரத்தில் சென்று பார்க்கும் போது தங்க பூ மாலைக்கு பதிலாக களிமண்ணால் செய்யப்பட்ட மாலை பெருமாள் கழுத்தில் இருந்தது. இதைப் பார்த்ததும் அங்குள்ள கோயில் அர்ச்சகர்கள், பராமரிப்பாளர்கள் மேல் சந்தேகம் அடைந்து குழப்பத்தில் ஆழ்ந்தார். அவர் கனவில் தோன்றிய பெருமாள், குயவனின் பக்தியால், அவனின் களிமண் மாலையை தான் ஏற்றுக் கொண்டதாகவும், குயவனுக்குத் தேவையான உதவியை செய்யுமாறு அரசனிடம் கூறினார். திருமாலின் ஆணைப்படி குயவன் இருக்கும் இடத்திற்கு சென்ற அரசன், அந்த பக்தரை கௌரவித்தார்.பெருமாள் மீது குயவன் வைத்திருந்த பக்தியை கௌரவிக்கும் பொருட்டு, தற்போதும் கூட திருப்பதியில் தினமுமொரு புது மண் சட்டியில்தான் நைவேத்யம் செய்யப்படுகின்றது.

புரட்டாசி சனிக்கிழமையில் தான், சனி பகவான் அவதரித்து, புரட்டாசி மாதத்திற்கு சிறப்பை கொடுத்தார். இதன் காரணமாக புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை தரிசித்தால், சனியின் கெடுபலன்களிலிருந்து நம்மைக் காப்பார்.

Read More
திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்

குழந்தை பாக்கியம் கிடைக்கச் செய்யும் திருமலை அமிர்தகலசப் பிரசாதம்

திருமலை ஏழுமலையான் மடைப்பள்ளியில் தயாராகும் சிறப்பு நிவேதனம் லட்டு. திருமலை வேங்கடவனுக்கு 1715 ஆகஸ்ட் 2 முதல் லட்டை நைவேத்தியமாக படைப்பது துவங்கியது.உலகப் பிரசித்தி பெற்ற இப்பிரசாதம் புவிசார் குறியீடு( Geographical Indication) பெற்றுள்ளது. லட்டு தவிர வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம், புளியோதரை, கேசரி பாத், சர்க்கராபாத், ஜீராபாயசம், மோளா, ஹோரா, கதம்பசாதம், பகாளாபாத், பருப்பு வடை, பானகம், அப்பம், ஜிலேபி, மனோகரம், ஹோலிபூ, தேன்குழல், கயாபடி, வட்டபடி, மாவுதோசை, நெய்தோசை, வெல்லதோசை ஆகிய நிவேதனங்களும் தயாராகின்றன. மேலும், சித்ரான்னம், வடை, முறுக்கு, அதிரசம், போளி, மவுகாரம், பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவையும் பெரிய அளவில் தினமும் தயார் செய்யப்பட்டு, ஏழுமலையானின் அடியார்களான பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றது. திருமலை மடைப்பள்ளியில் தயாரிக்கப்படும் உணவுகளை, சீனிவாசப் பெருமாளின் தாயாரான வகுளவல்லி மேற்பார்வை செய்வதாக ஐதீகம்.

அமிர்தகலசப் பிரசாதம்

ஒவ்வொரு ஞாயித்துக்கிழமையும், திருப்பதி பெருமாளுக்கு அமிர்தகலசம் என்ற பிரசாதம் நைவேத்யம் செய்யப்படுகின்றது. இது அரிசிமாவு, மிளகு,வெல்லம், நெய் சேர்த்து செய்யப்படும் ஒரு பிரசாதம். பெருமாளுக்கு நைவேத்யம் செய்துவிட்டு, அடுத்து கருடாழ்வாருக்கு நைவேத்யம் செய்த பிறகு, இந்த பிரசாதத்தை பக்தர்களுக்கு விநியோகிக்கிறார்கள். இப் பிரசாதத்தின் சிறப்பு என்னவென்றால், அமிர்தகலசம் சாப்பிடும் தம்பதிகளுக்கு உடனே, குழந்தைப்பேறு கிடைக்கும் என்பதுதான். அதுமட்டுமில்லாம,இந்த அமிர்தகலசம் பிரசாதம் எடுத்துக்கொண்ட தம்பதிகளுக்குப் பிறக்கும் அந்த குழந்தையினால் அந்தத் தம்பதிகளுக்கு சிறப்பு உண்டாகும் என்றும் ஆகம சாஸ்திரம் சொல்கிறது. அந்த அளவிற்கு விசேஷ சக்தி கொண்ட பிரசாதம்தான் அமிர்தகலசம். இந்த அமிர்தகலசம் ஞாயிறு காலை மட்டுமே திருப்பதி கோவிலில் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

Read More
திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்

வைகுண்ட ஏகாதசி பலனை கொடுக்கும் ஆனந்த நிலைய பரமபதநாதர் தரிசனம்

திருமலையில் வெங்கடாஜலபதி கொலுவிருக்கும் கருவறையின் மேற்கூரையே ஆனந்த நிலையம் என அழைக்கப்படுகிறது. இது முழுவதும் கல்லால் வேயப்பட்டு, பொன்னால் போர்த்தப்பட்டதாகும். பொதுவாக இறைவன் வீற்றிருக்கும் கருவறையின் மேற்கூரை '"விமானம்' என அழைக்கப்படும்.அவ்விமானத்திற்கு பெயரிட்டு பெருமையோடு அழைப்பது வைணவ ஆகமத்தின் சம்பிரதாயமாகும். சடாவர்மன் சுந்தர பாண்டிய மன்னனால் கிபி 12ம் நூற்றாண்டில் இக்கோவில் விமானம் புதுப்பிக்கப் பட்டதாகவும், பின்னர் .வீரநரசிங்கராயர் என்னும் மன்னன் தன்னுடைய எடைக்கு இணையாக கொடுத்த பொன்னால் இவ்விமானம் வேயப்பட்டதாகவும் கல்வெட்டு வாயிலாக அறியமுடிகிறது.

ஆனந்த நிலைய விமானத்தில் வடக்கு முகமாக வெள்ளியினால் வேயப்பட்ட ஒரு திருவாசியின் கீழ் விமான வெங்கடேஸ்வரர் காட்சியளிக்கிறார். இவருக்கு அருகில் பரமபதநாதர் எழுந்தருளியிருக்கிறார். வைகுண்டத்தில், பாற்கடலில் மஹாவிஷ்ணு ஆதிசேஷனின் மேல் வலதுகால் மடித்து, இடதுகால் தொங்கவிட்டு எந்த கோலத்தில் எழுந்தருளி இருக்கிறாரோ, அந்த கோலத்தில் தான் இங்கேயும் எழுந்தருளி இருக்கிறார். இவரை வருடத்தின் 365 நாளும் தரிசிக்கலாம், இவரை தரிசிப்பது வைகுண்ட ஏகாதசியன்று பெருமாளை தரிசித்த பலனை கொடுக்கும் என்பது ஆகமம்.

Read More
திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்

பிரம்மதேவன் பெருமாளுக்கு நடத்திய திருமலை பிரம்மோற்சவம்

படைப்புத் தொழிலை செய்பவர், பிரம்மதேவன். தன் படைப்புகளில் உருவான அனைத்து உயிர்களும், நலமாகவும் வளமாகவும் வாழ்வதற்காக, பிரம்மதேவனால் நடத்தப்படும் உற்சவமே 'பிரம்மோற்சவம்' ஆகும். திருமலை வெங்கடாஜலபதி கோவிலில் ஆண்டுதோறும் பல திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. அவற்றில் மிகவும் பிரபலமானது புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவம் ஆகும். படைக்கும் கடவுளான பிரம்ம தேவரால், வேத ஆகமங்களின் அடிப்படையில், அனைத்து உயிர்களும், நலமாகவும் வளமாகவும் வாழ்வதற்காக, நடத்தப்படும் உற்சவம் பிரம்மோற்சவம் என அழைக்கப்படுகிறது. இந்து சமய நம்பிக்கையின்படி மற்ற திருவிழாக்களை விட இந்த பிரம்மோற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. பெருமாளை தரிசிக்க திருமலைக்கு வந்த பிரம்ம தேவர், பெருமாளுக்கு விழா எடுத்தார். இதுவே புகழ்பெற்ற பிரம்மோற்சவ விழாவாக தற்போது வரை கொண்டாடப்பட்டு வருகிறது. மற்ற கோவில்களை விட திருமலையில் நடக்கும் பிரம்மோற்சவம் தனித்துவமானது.

திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவம் கடந்த 1,400 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கி.பி 614-ம் ஆண்டு புரட்டாசி மாதத்தில் முதல் பிரம்மோற்சவம் நடைபெற்றதற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. பல்லவ நாட்டை ஆண்ட 'பெருந்தேவி' என்றழைக்கப்பட்ட 'சமவை' என்பவர்தான் முதன்முதலில் இந்த பிரம்மோற்சவத்தை நடத்தியுள்ளார். அப்போது அவர் வெள்ளியால் வடிவமைக்கப்பட்ட 'மணவாளப் பெருமாள்' என்னும் சிலையைத் திருப்பதி கோயிலுக்கு வழங்கினார். அந்தச் சிலைதான், 'போக சீனிவாசமூர்த்தி' என்று இப்போது அழைக்கப்பட்டு வருகிறது.

இந்த பிரம்மோற்சவத்தின் காலை மாலை இருவேளைகளிலும்,வெங்கடேசப் பெருமாள் தனது துணைவியர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் விதவிதமான வாகனங்களில் கோவிலைச் சுற்றி வலம் வருவார். இந்தத் திருவிழாவைக் காண லட்சக்கணக்கான மக்கள் திருமலையில் வந்து கூடுவார்கள். ஒன்பது நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழா திருவோண நாளில் நிறைவு பெறும்.

இந்த ஆண்டு திருமலை திருப்பதி புரட்டாசி பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 18 ம் தேதி துவங்கி, செப்டம்பர் 26 ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன் விபரங்கள்

செப்டம்பர் 18 மாலை - த்வஜரோஹனம்

செப்டம்பர் 18 இரவு - பெரிய ஷேச வாகனம்

செப்டம்பர் 19 காலை - சின்ன ஷேச வாகனம்

செப்டம்பர் 19 இரவு - ஹம்ச வாகனம்

செப்டம்பர் 20 காலை - சிம்ம வாகனம்

செப்டம்பர் 20 இரவு - முத்துப்பந்தல் வாகனம்

செப்டம்பர் 21 காலை - கற்பக விருட்ச வாகனம்

செப்டம்பர் 21 இரவு - சர்வ பூபால வாகனம்

செப்டம்பர் 22 காலை - மோகினி அவதாரம்

செப்டம்பர் 22 இரவு - கருட வாகனம்

செப்டம்பர் 23 காலை - ஹனுமந்த வாகனம்

செப்டம்பர் 23 மாலை - தங்க ரத ஊர்வலம்

செப்டம்பர் 23 இரவு - கஜ வாகனம்

செப்டம்பர் 24 காலை - சூர்ய பிரபை வாகனம்

செப்டம்பர் 24 மாலை - சந்திர பிரபை வாகனம்

செப்டம்பர் 25 காலை - ரதோற்சவம்

செப்டம்பர் 25 மாலை - அஸ்வ வாகனம்

செப்டம்பர் 26 அதிகாலை - பல்லக்கு உற்சவம்

செப்டம்பர் 26 காலை - சக்ர ஸ்நானம்

செப்டம்பர் 26 மாலை - த்வஜ ஆவரோஹனம்

Read More
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில்

பக்தர்களுக்கு சுகங்களை வாரி வாரி வழங்கும் பத்மாவதி தாயார்

கீழ்த் திருப்பதிக்கு அருகே 5 கி.மீ தொலைவில் உள்ளது திருச்சானூர் பத்மாவதி கோவில். பக்தர்களுக்கு சுகங்களை வாரி வாரி வழங்குவதால், திருச்சானூர், சுகபுரி எனப்படுகிறது. வைகுண்டத்தில் நாராயணின் திருமார்பில் உறையும் மகாலட்சுமியே திருச்சானூரில் பத்மாவதி தேவியாய் அருள்கிறாள். ஆகாசராஜன் எனும் சோழ மன்னனுக்கும், தரணி தேவிக்கும் மகளாக பிறந்து வெங்கடாசலபதி என்ற திருமாலின் அவதாரத்தின் போது அவருக்கு மனைவியும் ஆனவர். இவருக்கு அலர்மேல் மங்கை தாயார் என்ற பெயரும் உண்டு.

அலர் என்றால், தாமரை. மேலு என்றால், வீற்றிருப்பவள். இதையே, பத்மாவதி என்கின்றனர். பத்மம் என்றாலும், தாமரை என்று பொருள். வதி என்றால், வசிப்பவள். ஆக, தாமரையில் வீற்றிருப்பவள் என்பது இந்தச் சொல்லின் பொருள். செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் லட்சுமியே, பத்மாவதியாக பூலோகத்தில் அவதாரம் செய்தாள். பத்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த சிறப்புடையவள் அலர்மேல்மங்கைத் தாயார். திருமலையில் ஸ்வஸ்திவசனம் எனும் சமஸ்கிருத வரவேற்பை தினமும் வேங்கடவனுக்கு சமர்ப்பிக்கிறார்கள். அதில், 'உன்னுடன் அந்தர்யாமியாக உள்ள அலர்மேல்மங்கைக்கும் நல்வரவு' என்று ஒரு சொற்றொடர் உண்டு. திருமலை நாயகனோடு ஒன்றிய நிலையில் அலர்மேல்மங்கை இருக்கிறாள் என்பது இதனால் தெளிவாகிறது. தினமும் இரவில் திருமலையிலிருந்து திருவேங்கடவன் இறங்கி வந்து அலர்மேல் மங்கைத் தாயாருடன் ஏகாந்தமாக இருந்து விட்டு பின் விடிவதற்குள் திருமலைக்குச் செல்வதாக ஐதீகம்.

பத்மாவதி-ஸ்ரீநிவாசன் திருமண வைபவத்தில், கறிவேப்பிலையால் ஏற்பட்ட ஊடல்

மகாலட்சுமி, திருமலையில் திருவேங்கடவனின் திருமார்பில் குடியேறவும் தனது அம்சமான பத்மாவதி கீழ்த் திருப்பதியில், திருச்சானூரில் எழுந்தருளுமாறும் வரம் பெற்றதாக வரலாறு. பத்மாவதி - ஸ்ரீநிவாசன் திருமணச் செலவுக்குப் பணம் இல்லாததால், ஸ்ரீநிவாசன் குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் ராமநிஷ்காம பொற்காசுகளை கடனாகப் பெற்று கலியுகம் முடியும் வரை கடனுக்கு வட்டி செலுத்துவதாக வாக்களித்தார் . பத்மாவதியை தரிசிப்பவர்கள் வேங்கடவன் ஆணைப்படி சகல செல்வங்களும் கிட்ட, அதில் ஒரு பகுதியை வேங்கடவனுக்குக் காணிக்கையாக செலுத்துகின்றனர். வட்டியை அளந்து கொடுக்கும் பொறுப்பை ஏற்ற கோவிந்தராஜப் பெருமாளை இன்றும் காசு அளக்கும் படியுடன் கீழ்த் திருப்பதியில் தரிசிக்கலாம். கல்யாண விருந்து தயாரானவுடன் ஸ்ரீநிவாசரின் யோசனைப்படி அந்த பிரசாதங்களை அஹோபிலம் நரசிம்மருக்கு, இருவரும் அந்த திசை நோக்கி வைத்து நிவேதித்தார்களாம்.

பத்மாவதி-ஸ்ரீநிவாசன் திருமண வைபவம் சிறப்பாக நடந்தேறியது என்று சீனிவாசனின் தாயார் வகுளாதேவி கர்வம் அடைந்தார். அவரது கர்வத்தை அடக்க நினைத்த நாரதர், பத்மாவதி தாயாரிடம் சென்று திருமணத்தில் கருவேப்பிலையும், கனகாம்பரம் மலரும் சேர்க்கப்படவில்லை என்று தெரிவித்தார். இதனால் திருமணத்திற்கு பின்னர் பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் ஊடல் ஏற்பட்டது. இந்த ஊடல் பெரிதாகி, பத்மாவதி தாயார் பெருமாளை விட்டுப் பிரிந்து சென்று திருச்சானூரில் தனிக்கோயில் கொண்டு எழுந்தருளினாள். இதனால்தான் திருமலை கோவிலில் இன்றும் கனகாம்பர மலரையும், கறிவேப்பிலையையும் எதற்கும் சேர்ப்பதில்லை.

திருச்சானூருக்கு அருகில் உள்ள கல்யாண வனத்தில் பத்மாவதித் தாயார் திருமணத்திற்காக மஞ்சள் அரைத்த யந்திரக் கல்லை இன்றும் காணலாம். கார்த்திகை மாதத்தில் தாயாருக்கு குங்குமத்தால் செய்யப்படும் லட்சார்ச்சனை வைபவம் தனிச் சிறப்புடையது. 'வைகரீ ரூபாய அலர்மேல்மங்காய நமஹ' எனும் மந்திரம் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் துயிலெழுகையில் இந்த மந்திரத்தை கூறினால் அன்று முழுதும் பத்மாவதி தேவியின் அருள் கிட்டும் என்பது ஐதீகம்.

திருமலை வேங்கடவனை தரிசிக்கும் முறை

திருமலை வேங்கடவனை தரிசிக்கும் முன், முதலில் கீழ்த் திருப்பதியில் கோவிந்தராஜப் பெருமாள், பிறகு அலர்மேல்மங்கைத் தாயார், அதற்குப்பின் திருமலை புஷ்கரணிக் கரையில் உள்ள வராகமூர்த்தி, அதன் பின்னரே வேங்கடவன் தரிசனம் என்பதுதான் இங்கு வழிபடு மரபு என்பார்கள்.

Read More
திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்

திருப்பதி ரத சப்தமி உற்சவம்

தை மாதத்தில், அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை சப்தமியையே ரத சப்தமி என்று அழைக்கிறார்கள். ரத சப்தமி நாள் சூரிய ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச்செல்லும் 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி பயணத்தை தொடங்குகின்றன என விளக்குகிறது புராணம்.

திருமலை திருப்பதியில் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழா மிகவும் விசேஷமானது. இந்தத் திருவிழாவின்போது, தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் மலையப்பசாமி ஒரு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருவார். ஆனால் தை மாதம் ரத சப்தமியன்று ஒரே நாளில் ஏழு வாகனங்களில் மலையப்ப சுவாமி தனித்தும்,ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடனும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார். ரதசப்தமி அன்று நடைபெறும் வாகன சேவைகள்

சூரிய பிரபை வாகனம் - அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 8 மணி வரை.

சிறிய சே‌ஷ வாகனம் - காலை 9 மணியில் இருந்து 10 மணி வரை

கருட வாகனம் - பகல் 11 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை

அனுமந்த வாகனம் - மதியம் 1 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை

கல்ப விருட்ச வாகனம் - மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணி வரை

சர்வ பூபால வாகனம் - மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை

சந்திரபிரபை வாகனம் - இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணி வரை

சூரிய பகவானை வழிபடும் விரதங்களில் முக்கியமானது ‘ரதசப்தமி’. ரத சப்தமி நாளில் சூரிய பகவானின் பெயரில் தானம் செய்யவது நல்லது. ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் ஏழு வகையான பாவங்களைச் செய்கிறான் என்று கூறப்படுகிறது. இவை வேண்டுமென்றே, தற்செயலாக, வாய் வார்த்தையாலும், உடல் செயலாலும், மனதாலும், முற்பிறவியிலும் செய்த பாவங்கள். ரத சப்தமி அன்று சூரிய பகவானை வழிபடுவதால் இந்த பாவங்களில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்

1. பக்தனுக்காக கரும்பு தின்ற திருமலை வெங்கடேசப் பெருமாள் https://www.alayathuligal.com/blog/558mb2xzflf6tm53dbbpmw9z5yk2kr-psams

2. திருப்பதி பெருமாளுக்கு முகவாயில் பச்சைக் கற்பூரம் சாற்றும் வழக்கம் ஏற்பட காரணமாக இருந்த கடப்பாரை

https://www.alayathuligal.com/blog/8r2h5k9nc4zyxc85agwjcf5fww5jhw

3. திருவேங்கடவனின் மாமனார்

https://www.alayathuligal.com/blog/558mb2xzflf6tm53dbbpmw9z5yk2kr

Read More
திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்

.

பக்தனுக்காக கரும்பு தின்ற திருமலை வெங்கடேசப் பெருமாள்

ஹாதிராம் பாவாஜி என்ற ஒருவர் வடநாட்டைச் சேர்ந்தவர். திருப்பதி பெருமாளின் மேல் மிகுந்த பக்தி கொண்டவர். அவரின் பக்தியை ஏற்று வெங்கடேசப் பெருமாள், பாவாஜி தங்கியிருந்த மடத்திற்கு வந்தார். தன்னுடன் சொக்கட்டான் விளையாடி அருள் செய்ய வேண்டும் என்று ஹாதிராம் பாவாஜி, வெங்கடேசப் பெருமாளைக் கேட்டுக கொண்டார். வெங்கடேச பெருமாளும் அதையேற்று ஹாதிராம் பாவாஜியுடன் சொக்கட்டான் விளைடாடினார்.

ஒருநாள் ஹாதிராம் பாவாஜியுடன் சொக்கட்டான் விளைடாச் சென்ற பெருமாள் தான் அணித்திருந்த மாலை (ஹாரம்) ஒன்றை ஹாதிராம் பாலாஜி தங்கியிருந்த மடத்திலேயே விட்டுச் சென்று விட்டார். ஹாரத்தைக் கண்டெடுத்த ஹாதிராம் பாலாஜி, காலையில் திருப்பதி கோயிலுக்குச் சென்று கொடுத்து விடலாம் என்று எண்ணினார். காலையில் திருப்பதி கோயிலுக்கு பூஜை செய்ய சென்ற அர்ச்சகர்கள் ஹாரம் இல்லாததைக் கண்டு அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

ஹாரத்தை வைத்திருந்த ஹாதிராம் பாலாஜியை, திருடன் என்று அதிகாரிகள் முடிவெடுத்து தண்டித்தனர். ஹாதிராம் பாலாஜி, பெருமாளே நேரில் வந்து சொக்கட்டான் விளளயாடிய உண்மையை சொல்லியும் யாரும் அவரை நம்புவதாக இல்லை. பாலாஜியை சிறை வைத்தனர். அவரிடம் நீங்கள் சொல்வது உண்மையானால் இந்த அறையிலுள்ள கரும்புக் கட்டுக்கள் அனைத்தையும் நீங்களே தின்று தீர்க்க வேண்டும். அப்படியில்லாவிட்டால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்று நிபந்தனை விதித்தனர். ஹாதிராம் பாலாஜி பக்தியுடன் பெருமாளை தியானிக்கத் தொடங்கினார். நள்ளிரவில் யானையாக வந்த பெருமாள் அனைத்து கரும்புக் கட்டுகளையும் தின்று தீர்த்து தனது பக்தனின் பெருமையை உலகறியச் செய்தார்.

திருமலையிலிருந்து பாபவிநாச தீர்த்தம் செல்லும் வழியில் உள்ள வேணுகோபாலசுவாமி கோவிலில் ஹாதிராம் பாவாஜியின் அதிஷ்டானம் உள்ளது.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்

1. திருப்பதி பெருமாளுக்கு முகவாயில் பச்சைக் கற்பூரம் சாற்றும் வழக்கம் ஏற்பட காரணமாக இருந்த கடப்பாரை

https://www.alayathuligal.com/blog/8r2h5k9nc4zyxc85agwjcf5fww5jhw

2. திருவேங்கடவனின் மாமனார்

https://www.alayathuligal.com/blog/558mb2xzflf6tm53dbbpmw9z5yk2kr

Read More
திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்

திருவேங்கடவனின் மாமனார்

வைண மத ஆச்சார்யரான இராமானுசரின் சீடர்களில் ஒருவர் அனந்தாழ்வான். கர்நாடகத்திலுள்ள மாண்டியா மாவட்டத்தில் பிறந்த இவருடைய இயற் பெயர் அனந்தன். இவர் இராமானுசரின் விருப்பத்திற்கிணங்க, திருமலையில் நந்தவனம் அமைத்து, அதில் மலரும் பூக்களை பறித்து தினமும் மாலை தொடுத்து திருவேங்கடவனுக்கு சமர்பித்து வந்தார்.

இவரின் நந்தவனத்தில், திருமலை பட்டத்தரசியான அலர்மேல்மங்கை நாச்சியாரோடு திருவேங்கடவன் இரவு நேரங்களில் உலாவும் போது ஒருநாள் இதனை கண்ணுற்ற அனந்தாழ்வார் யாரோ ஒரு காதல் இணைகள் தன் நந்தவனத்தில் புகுந்து பாழ்ப்படுத்துவதாக எண்ணி பிடிக்க முயற்சித்தார். உடனிருந்த ஆண்மகன் தப்பிக்க பெண்மகள் மட்டும் அனந்தாழ்வரிடம் பிடிபட எப்படியும் இவளை மீட்க அவள் காதலன் வருவான் என அந்நந்தவனத்திலேயே அலர்மேல்மங்கை நாச்சியாரை பிணையாக சிறைப்படுத்தினார்.

பொழுது விடிந்து வழக்கம்போல் அன்றலர்ந்த மலர்களை மாலைகளாக்கி திருவேங்கடவன் சன்னதியடைய அங்கே மார்புறை நாச்சியாராகிய அலர்மேல்மங்கை திருவேங்கடவன் மார்பில் இல்லாதிருக்கக் கண்டு அஞ்சி நடுங்கினார். முன்னிரவில் தானே தன் மனைவியாளோடு நந்தவனத்திற்கு வந்ததுவும், அனந்தாழ்வாரின் பிணையாக நந்தவனத்தில் கட்டுண்டு இருப்பவள் அனைத்து உயிர்களுக்கும் அன்னையாகிய அலர்மேல்மங்கை நாச்சியாரே என திருவேங்கடவன் தெரிவிக்க ஒரு நொடியும் ஐயனை அகலாத அன்னை தன் செய்கையால் ஒர் இரவு முழுதும் பிரிய நேரிட்டதை எண்ணி, அனந்தாழ்வார் மிக்க வருத்தம் கொண்டார். அதற்கு ஈடுசெய்யும் பொருட்டு அவரே நாச்சியாரின் தகப்பனாராக இருந்து மீண்டும் திருவேங்கடவனுக்கு மணம் முடித்து சேர்த்து வைத்தார். இச்செயலால் திருமலை உறையும் திருவேங்கடவனுக்கு இவர் மாமனார் என அன்றிலிருந்து அழைக்கப்பட்டு வருகிறார்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

திருப்பதி பெருமாளுக்கு முகவாயில் பச்சைக் கற்பூரம் சாற்றும் வழக்கம் ஏற்பட காரணமாக இருந்த கடப்பாரை

https://www.alayathuligal.com/blog/8r2h5k9nc4zyxc85agwjcf5fww5jhw

Read More
திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்

உலகளவில் புகழடைந்த, வைண குருமாரான இராமானுசரின் சீடர்களில் ஒருவர் அனந்தாழ்வான். இவர், கர்னாடகத்தின் மாண்டிய மாவட்டத்தில் சிறுப்புத்தூர் எனும் ஊரில் அனந்தன் என்னும் இயற்பெயரில் பிறந்தவர். சுவாமி இராமானுசர் மீது அளவுகடந்த பக்தி கொண்ட இவர், இராமனுசர் ஆணைப்படியே திருமலையில் எழுந்தருளியுள்ள திருவேங்கடமுடையானுக்கு நந்தவனம் அமைத்து மலர் கைங்கர்யம் செய்வதையே வாழ்க்கையின் பலனாக கொண்டு திருமலையிலேயே வாழ்ந்தவர்.

திருப்பதி திருமலைவாசனை தரிசிக்கச் செல்லும்போது, கருவறையின் பிரதான வாசலின் வலப் புறத்தில், ஒரு கடப்பாரை தொங்குவதைப் பார்க்கலாம். அந்தக் கடப்பாரை, திருமலை நந்தவனத்தின் தண்ணீர் தேவைக்காக அனந்தாழ்வான் வெட்டிய குளத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது. அந்தக் கடப்பாரைதான், திருமலைவாசனுக்கு தினமும் முகவாயில் பச்சை கற்பூரம் சார்த்தும் வழக்கம் ஏற்பட காரணமாக இருந்தது.

திருவரங்கத்தில் திருவரங்கப் பெருமானின் கைங்கர்யத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட ஶ்ரீராமாநுஜருக்கு, நீண்டகாலமாகவே ஒரு குறை இருந்துவந்தது. திருவரங்கத்தைப் போல்

நந்தவனமும், தபோவனமும் திருவேங்கடத்தில் அமைக்க முடியவில்லையே' என்பதுதான் அவருடைய ஆதங்கம். அலருடைய மனக்குறையை அறிந்த சீடர் அனந்தாழ்வான், தாம் அந்த கைங்கர்யத்தை செயவதாக தனது குருவிடம் தெரிவித்தார். ஏழுமலை ஆண்டவனுக்கு திருமாலை தொடுத்து சேவை செய்யும்பேறு தனக்குக் கிடைத்த மகிழ்ச்சியோடு தனது மனைவியுடன் அவர் திருமலைக்கு வந்து சேர்ந்தார்.

திருமலையில் நந்தவனம் அமைத்தார். மண்வெட்டியால் வெட்டி நிலத்தைப் பண்படுத்தி பூச்செடிகளை நட்டார். அந்த நந்தவனத்துக்கு தமது குருநாதரின் திருப்பெயரே நிலைக்கும்படி 'ராமானுஜ நந்தவனம்' என்று பெயரும் வைத்தார். இப்போதும் அந்த நந்தவனம் அதே பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

பின்னர் நந்தவனத்தின் தண்ணீர்த் தேவைக்காக குளம் வெட்டி அதில் தண்ணீரைத் தேக்க முடிவுசெய்தார். இச்சமயம் அவரது மனைவி கர்ப்பம் தரித்திருந்தார். 'நானும் உங்களுக்கு உதவுகிறேன்' என குளம் வெட்டும் பணியில் மனைவியும் சேர்ந்துகொண்டார்.

அனந்தாழ்வான் வெட்டிய மண்ணை ஒரு புறமிருந்து மறுபக்கம் கொண்டு சென்று மனைவி கொட்டிவிட்டு வந்தார். ஒரு கர்ப்பிணிப் பெண் மண் சுமந்து செல்வதைப் பார்த்த ஒரு சிறுவன், அவருக்குத் தானும் உதவுவதாகக் கூறினான். ஆனால், அனந்தாழ்வானோ, அந்தச் சிறுவனை எதற்கு சிரமப்படுத்த வேண்டும் என நினைத்து அவனை அனுப்பிவிட்டார். பெருமாளின் கைங்கர்யத்தில் தானும் தன் மனைவியும் மட்டுமே ஈடுபடவேண்டும் என்று நினைத்தார்.

ஆனாலும், கர்ப்பிணிப் பெண் கஷ்டப்பட்டு மண் சுமப்பதைப் பார்த்து அந்தச் சிறுவன் மிகவும் வருந்தினான். சற்று வளைவான பாதையில் சென்று மண்ணைக் கொண்டுபோய் கொட்ட வேண்டியிருந்ததால், மனைவி அங்கு சென்று மண்ணைக் கொட்டி விட்டு வந்தார். அனந்தாழ்வான் இந்தப் பக்கம் மண் தோண்டினார். வளைவுக்கோ அதிக தூரம் இருந்தது. அவர் போகச் சொன்ன சிறுவன் போகாமல், அந்தப்பக்கத்தில் கூடையுடன் நின்றிருந்தான்.

'தாயே, நான் மண் சுமந்தால்தானே அவர் கோபப்படுவார். அவருக்குத் தெரியாமல் உங்களுக்கு உதவுகிறேன். இந்த வளைவுக்கு இந்தப் பக்கம் நான் சுமக்கிறேன். அந்தப்பக்கம் நீங்கள் சுமந்து வாருங்கள்' 'என்றான் சிறுவன். சிறுவனின் கெஞ்சல் மொழியைக் கேட்ட பிறகு அவளால் மறுக்க இயலவில்லை.

'சரி, தம்பி' என்று கூடையை மாற்றிக் கொடுத்தாள். சற்றுநேரம் இப்படியே வேலை நடந்தது. திடீரென்று அனந்தாழ்வானுக்கு சந்தேகம் தோன்றியது. 'மண்ணைக் கொட்டிவிட்டு சீக்கிரம் சீக்கிரமாக வந்து விடுகிறாயே' என்று மனைவியைக் கேட்க, 'சீக்கிரமாகவே சென்று போட்டு விடுகிறேன் சிரமம் இல்லை' என்று பதில் சொல்லி சமாளித்தாள்.

சிறிது நேரம் சென்றதும், அனந்தாழ்வான் கரையைப் பார்க்க வந்தார். சிறுவன் கர்மசிரத்தையாக மண்ணைக் கொண்டு போய் கொட்டிக்கொண்டிருந்தான். தன்னை அவர் கவனிப்பதைக்கூட பொருட்படுத்தாமல் சிறுவன் தன் பணியைச் செய்தவாறு இருந்தான்.

இதனால், கோபம் தலைக்கேற கடப்பாரையால் சிறுவனின் கீழ்த்தாடையில் அடித்தார். சிறுவனின் தாடையில் இருந்து ரத்தம் கொட்டியது. கடப்பாரையால் அடிபட்டு ரத்தம் பெருகிய நிலையில், அந்தச் சிறுவன் ஓடிப்போய்விட்டான்.

அவசரப்பட்டுத் தான் சிறுவனை ரத்தம் வரும்படி அடித்துவிட்டோமே என்ற வருத்தத்தில் அனந்தாழ்வானுக்கும், தொடர்ந்து வேலை செய்யப் பிடிக்கவில்லை. குடிசைக்குத் திரும்பிவிட்டார்.

மறுநாள் காலை திருமலை பெருமாளுக்கு அர்ச்சனைகள் செய்ய வந்த அர்ச்சகர்கள் கதவைத் திறந்ததும் அலறினர். பெருமாளின் தாடையிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. 'அர்ச்சகரே பயப்படவேண்டாம். அனந்தாழ்வாரை அழைத்து வாருங்கள்' என ஒரு அசரீரி கேட்டது. உடனே அவரை அழைத்துவந்தனர்.

பெருமாள் தாடையில் ரத்தம் வடிவதை அனந்தாழ்வான் கண்டார். ஆனால், அவருக்கு மட்டும், தான் மண்சுமந்த கோலத்தைக் காண்பித்தார் பெருமாள்.

'சுவாமி, என்னை மன்னித்து விடுங்கள். தங்கள் தொண்டுக்கு அடுத்தவர் உதவியை நாடக்கூடாது என்ற சுயநலத்தில் சிறுவனை விரட்டினேன். அவன் வலிய வந்து மண் சுமந்ததால் வந்த கோபத்தில் அடித்தேன். அந்தச் சிறுவனாக வந்தது தாங்கள்தான் என்று தெரியாது. சுவாமி என்னை மன்னித்தருள்க' என்று விழுந்து வணங்கினார் அனந்தாழ்வான்.

'அனந்தாழ்வா, நீ மலர்மாலை நேர்த்தியாகக் தொடுத்து அணிவிப்பதில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால், கர்ப்பிணியான உன் மனைவி மண் சுமப்பதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

பக்தர்களின் கஷ்டத்தைப் போக்கத்தான் நான் இங்கு இருக்கிறேன். என் பக்தை கஷ்டப்படுவதைக் கண்டு வேடிக்கை பார்க்க என் மனம் எப்படி இடம் கொடுக்கும்' என்று அசரீரியாகக் கேட்டார்.

'கருணைக் கடலே! என்னை மன்னியுங்கள் சுவாமி' என்றார்.

'சரி. ரத்தம் வழியாமல் இருக்க என்ன செய்வது?' என்று அர்ச்சகர்கள் குழம்பினர்.'சுவாமியின் தாடையில் பச்சைக்கற்பூரத்தை வைத்து அழுத்துங்கள் ரத்தம் வழிவது நின்றுவிடும்' என்றார்.

அர்ச்சகர்களும் மூலவரின் கீழ்தாடையில் பச்சைக் கற்பூரத்தை வைக்க, ரத்தம் வழிந்தது நின்று போனது. இதைநினைவுபடுத்தும் விதமாகவே திருப்பதிப் பெருமாளின் தாடையில் பச்சைக் கற்பூரம் வைக்கும் நிகழ்ச்சி இன்றளவும் தொடர்கிறது.

Read More
பள்ளிகொண்டீஸ்வரர் கோவில்

பள்ளிகொண்டீஸ்வரர் கோவில்

தக்ஷிணாமூர்த்தி தன் மனைவியுடன் இருக்கும் அபூர்வ காட்சி

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சுருட்டப்பள்ளியிலுள்ள பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள பெரும்பான்மையான தெய்வங்கள், தம்பதி சமேதராக காட்சி தருவது இக்கோயிலின் தனிச் சிறப்பாகும். மூலவர் பள்ளி கொண்ட ஈஸ்வரன் - சர்வ மங்களாம்பிகை, வால்மீகிஸ்வரர் - மரகதாம்பிகை, விநாயகர் - சித்தி, புத்தி, சாஸ்தா - பூரணை, புஷ்கலை, குபேரன் - கவுரிதேவி, சங்கநிதி மற்றும் பதுமநிதி இப்படி அனைவரும் தத்தம் மனைவியருடன் உள்ளனர். இங்கு தட்சிணாமூர்த்தி தனது மனைவி தாராவுடன் காட்சி தருகிறார். இது வேறு எந்த கோவிலிலும் காணக்கிடைக்காத அரிய காட்சியாகும். இந்த தட்சிணாமூர்த்தியை வணங்கினால் ஞானம், கல்வி, குழந்தைபேறு, திருமண பாக்கியம், மாங்கல்ய பாக்கியம் கைகூடும் என்பது நம்பிக்கை.

Read More
பள்ளிகொண்டீஸ்வரர்  கோவில்

பள்ளிகொண்டீஸ்வரர் கோவில்

Aசயன கோலத்தில் காட்சியளிக்கும் சிவபெருமான்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாகலாபுரம் அருகே உள்ள சுருட்டப்பள்ளியில் அமைந்துள்ளது பள்ளிகொண்டீஸ்வரர் கோவில். சென்னை – திருப்பதி நெடுஞ்சாலையில் 56 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தில் அருளும் பள்ளிகொண்டீஸ்வரர், சர்வ மங்களாம்பிகையின் மடியில் தலைவைத்து சயன கோலத்தில் காட்சி தருகிறார். திருமாலைப் போலவே சிவபெருமான் பள்ளி கொண்ட ஒரே கோவில் இதுதான் என்பது சிறப்பம்சமாகும்.

ஒரு சமயம் இந்திரன் முதலான தேவர்கள்,அமிர்தம் வேண்டி பாற்கடலை கடைய முற்பட்டார்கள். திருமாலின் உதவியோடு தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் ஒரு புறமும் நின்று, வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், மந்திர மலையை மத்தாகவும் கொண்டு பாற்கடலை கடைந்தனர். இருபுறமும் பிடித்து இழுத்ததால், வாசுகி பாம்பு வலி தாங்க முடியாமல் விஷத்தை கக்கியது. இதை கண்டு அஞ்சிய தேவர்களும், அசுரர்களும் கயிலை நாதனான சிவபெருமானிடம் தஞ்சம் அடைந்து அனைவரையும் காக்க வேண்டினர்.

சிவபெருமான் தன் அருகில் இருந்த சுந்தரரை அனுப்பி, விஷத்தை திரட்டி எடுத்து வரச் செய்தார். சுந்தரரும் பாற்கடலில் தோன்றிய மொத்த விஷத்தையும் ஒன்று திரட்டி, ஒரு கரு நாவல்பழம் போல செய்து சிவபெருமானிடம் கொடுத்தார். சிவபெருமான் அந்த கொடிய விஷத்தினை வாயில் போட்டு விழுங்கினார். விஷம் வயிற்றுக்குள் இறங்கினால் தீங்கு விளைவிக்கும் என்பதால், பார்வதிதேவி விஷம் உடலுக்குள் இறங்காமல் இருக்க, சிவபெருமானின் கண்டத்தை (கழுத்தை) பிடித்து விஷம் அங்கேயே தங்கும்படி செய்துவிட்டார். அதனால் தான் சிவபெருமானை 'நீலகண்டன்' என்று அழைக்கிறோம்.

விஷத்தை அருந்திய பின், உமையவளுடன் சிவபெருமான் கயிலாயம் புறப்பட்டார். வழியில் அவருக்கு களைப்பு ஏற்பட்டது. அதனால் அவர் ஓரிடத்தில் ஓய்வெடுத்தார். பார்வதி தேவியின் மடியில் தலை வைத்து களைப்பு நீங்க சயனித்தார். அந்த இடமே சுருட்டப்பள்ளி என்னும் இத்தலம் ஆகும்.

3 நிலை கொண்ட ராஜகோபுரத்தின் எதிரே, சுமார் 5 அடி உயர பீடத்தில் 5 அடி உயர நந்தீஸ்வரர் உள்ளார். இத்தலத்தில் இருக்கும் அம்பிகையின் பெயர் மரகதாம்பிகை. முதலில் மரகதாம்பிகையை வழிபட்ட பின்னரே சிவனை வணங்க செல்ல வேண்டும்.. மூலவர் பள்ளிகொண்டீஸ்வரர் தனி சன்னிதியில் காட்சி தருகிறார். இக் கோவிலில் துவாரபாலகர்கள் கிடையாது. அதற்கு பதிலாக சங்கநிதி வசுந்தராவுடனும், பத்மநிதி வசுமதியுடனும் காட்சி தருகிறார்கள். உள்ளே சென்றால் அன்னை மரகதாம்பிகை நின்ற கோலத்தில் சிம்ம வாகினியாக காட்சி தருகிறார்.

பிரசித்தி பெற்ற பிரதோஷ கால வழிபாடு

இந்த கோவிலில் பிரதோஷ கால வழிபாடு பிரசித்தி பெற்றது. இந்த ஆலயத்தில் தான், முதன் முதலில் பிரதோஷ வழிபாடு நடத்தப்பட்டதாகவும், அதன்பிறகே மற்ற சிவ ஆலயங்களில் பிரதோஷ வழிபாடு தொடங்கியதாகவும் ஒரு நம்பிக்கை உள்ளது. பிரதோஷ காலத்தில் இத்தலத்து ஈசனை வழிபட்டால் சகல செல்வங்களும் கிடைக்கும் என்பது தொண்நம்பிக்கை.மேலும் இந்த பள்ளிகொண்ட நாதனை சனிக்கிழமைகளில் வரும் மகாபிரதோஷ தினத்தில் வழிபட்டால் இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கும். பதவியிழந்தவர்கள் மீண்டும் பதவி அடைவர், பதவி உயர்வு கிடைக்கும், திருமணத்தடை விலகும், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். .

திருவாதிரை, மகா சிவராத்திரி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு வருடப் பிறப்பு நாட்கள், நவராத்திரி தினங்களில் இக்கோவிலில் சிறப்பு பூஜை நடக்கிறது.

Read More
வேத நாராயண சுவாமி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

வேத நாராயண சுவாமி கோவில்

பாதி மனித உருவமும் மீதி மீன் வடிவமும் கொண்ட பெருமாள்

சென்னை-திருப்பதி சாலையில் ஊத்துக்கோட்டையைத் தாண்டி, , ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தின, நாகலாபுரம் என்ற ஊரில் உள்ளது வேத நாராயண பெருமாள் கோவில். பெருமாளின் திருநாமம் வேத நாராயணப் பெருமாள். தாயாரின் திருநாமம் வேதவல்லித்தாயர். இத்தலத்தில், திருமால் மச்சவடிவில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக காட்சி தருவது, இத்தலத்தின் சிறப்பாகும். திருமால், தலையிலிருந்து இடுப்பு வரை மனித வடிவமும், இடுப்புக்கு கிழே மீன் வடிவமும் கொண்டுள்ளார்.திருமாலின் தசாவதாரங்களில் முதல் அவதாரம், மச்ச அவதாரமாகும். கோமுகன் என்னும் அசுரன், பிரம்மனிடம் இருந்து நான்கு வேதங்களைத் திருடி, மீன் வடிவில் கடலுக்கு அடியில் சென்று ஒளிந்து வைத்து கொண்டான் . திருமால் மச்ச வடிவில் அவதாரம் எடுத்து, கடலுக்கு அடியில் அசுரனை வதைத்து வேதங்களை மீட்டு பிரம்மாவிடம் ஒப்படைத்தார். நான்கு வேதங்களை மீட்டு பிரம்மாவிற்கு இத்தலத்தில் கொடுத்தன் காரணமாக, இத்தலத்து பெருமாளின் திருப்பெயர் வேத நாராயணப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறது.

Read More