கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோவில்

கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோவில்

கேது, கால சர்ப்ப தோஷ நிவர்த்தி தலம்

மயிலாடுதுறையில் இருந்து 24 கி.மீ. தொலைவில் உள்ளது கீழ்ப்பெரும்பள்ளம். இறைவன் திருநாமம் நாகநாதசுவாமி. இறைவியின் திருநாமம் சௌந்தர்யநாயகி. நவக்கிரக தலங்களில் இது, கேது தோஷ நிவர்த்திக்கான தலமாக விளங்குகின்றது. இறைவன் நாகநாதசுவாமி கிழக்கு நோக்கி லிங்க உருவில் எழுந்தருளியுள்ளார்.

கேது பகவான் தனி சந்நிதியில் மேற்கு நோக்கி, பாம்பு தலையுடனும் மனித உடலுடனும் இரு கைகளையும் கூப்பி சிவன் சந்நிதியை நோக்கி வணங்கியபடி உள்ளார். ஜாதகத்தில் நாகதோஷம் உள்ளவர்கள் வழிபட வேண்டிய தலம் கீழப்பெரும்பள்ளம். கேதுவின் நிறம் சிவப்பு என்பதால், இவரை செவ்வரளி மலர்களால் அர்ச்சித்து, சிவப்பு நிற ஆடை அணிவித்து வழிபட வேண்டும். மேலும், கொள்ளு சாதம் படைத்து வழிபட வேண்டும். படைத்த கொள்ளு சாதத்தை இங்கேயே வரும் பக்தர்களுக்கு விநியோகித்து விட வேண்டும். வீட்டுக்கு எடுத்துச் செல்லக் கூடாது. ஜாதகத்தின்படி கேது தசை மற்றும் கேது புத்தி நடைபெறும் காலங்களில் இத்தலம் வந்து கேதுவுக்குப் பால் அபிஷேகம் செய்து வழிபட்டால், கேதுவினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி நன்மை அடையலாம். இத்தலத்தில் கேதுவே பிரதானமாதலால், இங்கு நவக்கிரக சந்நிதி கிடையாது.

இத்தலத்தில் எமகண்ட காலத்தில் கேதுவுக்கு விசேஷ வழிபாடும், பூஜைகளும் நடைபெறும். அப்போது, 16 வகையான அபிஷேகம் மற்றும் ஹோமம் செய்தும், கொள்ளுப்பொடி, உப்பு, மிளகு கலந்த சாதத்தை நைவேத்யமாகப் படைத்தும், பலவண்ண வஸ்திரம் சாத்தியும், நல்லெண்ணெய் விளக்கு ஏற்றியும் வழிபடுகிறார்கள். இந்தப் பூஜையில் கலந்துகொண்டு கேது தோஷ பரிகாரம் செய்துகொள்ள பக்தர்கள் அதிக அளவில் இத்தலம் வந்து செல்கின்றனர்.

இத்தலம், கேது தோஷ நிவர்த்தி தலமாகவும், கால சர்ப்ப தோஷம் நீக்கும் தலமாகவும் விளங்குகிறது. இங்கு, மூலவரையும் அம்பாளையும் வழிபட்டு, 7 முறை வலம் வந்து, கேது பகவானுக்கு பரிகார பூஜை மேற்கொண்டால் கேது தோஷ், நாக தோஷ நிவர்த்தி கிட்டுகிறது. நரம்பு மண்டல நோய் உள்பட பல்வேறு நோய்களும் விலகுகின்றன. நாக தோஷம் உள்ளவர்கள் கோயிலின் எதிரே உள்ள அரசும், வேம்பும் உள்ள மேடையில் நாக பிரதிஷ்டை செய்து வழிபடுகின்றனர்.

கேது தோஷ பரிகாரத்தில் பங்கேற்பவர்களுக்குக் கோவில் பிரசாதமாக விபூதி, குங்குமத்துடன் உலர் பொடி ஒன்றும் வழங்கப்படுகிறது. பரிகாரம் செய்து கொள்வோர் தொடர்ந்து 7 நாள்கள் கோயில் விபூதி, குங்குமத்தை பக்தி சிரத்தையுடன் தரித்துக் கொண்டு, பிரசாதத்துடன் அளிக்கப்பட்ட உலர் பொடியை உண்ண வேண்டும். 7-ஆம் நாளின் நிறைவில், அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட்டு, தேங்காய் (சிதறு காய்) உடைத்து வழிபாட்டை நிறைவு செய்தால், கேது தோஷ பரிகாரம் நிவர்த்தியாவது உறுதி என்பது இத்தல ஐதீகம்.

Read More