குடுமியான்மலை சிகாநாதசாமி கோவில்

குடுமியான்மலை சிகாநாதசாமி கோவில்

சிற்பக்கலையின் பொக்கிஷமாக திகழும் குடுமியான்மலை

புதுக்கோட்டை – கொடும்பாளூர் – மணப்பாறை சாலையில், புதுக்கோட்டையில் இருந்து, 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது குடுமியான்மலை சிகாநாதசாமி கோவில்.

10-ம் நூற்றாண்டில் திருநலக்குன்றம் என அழைக்கப்பட்டுள்ளது. பின்னர் சிகாநல்லூர் எனவும், தற்போது குடுமியான் மலை என்றும் அழைக்கப்படுகிறது.

நம் தமிழகத்தில், சிற்பத்திலும், கட்டிடக்கலையாலும் சிறப்பு பெற்ற கோவில்கள் பல உள்ளன. அவற்றுள் உலகப் பிரசித்தி பெற்ற கோவில் குடுமியான் மலை. இன்றும் உலகின் பல நாடுகளிலிருந்தும் ஆய்வுமாணவர்கள் குடுமியான் மலையில் காணப்படும் சிற்பங்களை ஆய்வு செய்த வண்ணம் உள்ளனர்.

குடுமியான்மலை ராஜகோபுரத்தை அடுத்து உள்ளே நுழைந்தால், மிக அற்புதமாகவும், நேர்த்தியாகவும் சிற்பக்கலையின் பெருமையை பறைசாற்றுவிதமாக அமைந்துள்ள ஏராளமான சிற்பங்களை நாம் காணலாம். இவற்றில் மகாவிஷ்ணுவின் தசாவதாரங்கள், ஆஞ்சநேயர், விபீடணன், வாலி, சுக்ரீவன் சிலைகள் காணப்படுகின்றன்.

இக்கோவில் வசந்த மண்டபத்தில் அமைந்துள்ள சிற்பங்கள் ஒவ்வொன்றும் மிகுந்த நுணுக்கமான வேலைப்பாடுகளும், அற்புதமான அமைப்புகளுடனும் காணப்படுகின்றன.

இங்குள்ள சிற்பங்களின் முகத்தில் காணப்படும் தெய்வீக அழகு, அவைகளின் கைவிரல்கள், கால்விரல்கள் போன்றவற்றில் அணிந்துள்ள அணிமணிகளின் நுணுக்கமான வேலைப்பாடு, அங்கங்களின் துல்லியமான அம்சங்கள், ஆபரணங்களின் சிறந்த அம்சங்கள், மேலும் அவை வெளிப்படுத்தும் காவியக்காட்சிகள், அனைத்திலும் பெருகியுள்ள பேரெழில் நம்மை மீண்டும், மீண்டும் வியந்து போற்றும் வண்ணம் உள்ளது.

சங்கர நாராயணர் சிலையில் ஒருபாதியில் சிவபெருமானையும், மறுபாதியில் நாராயணைனையும் அவரவர்களுக்குரிய அடையாளங்களையும் சிற்பி வேறுபடுத்தி காட்டியிருப்பது மிகுந்த நுணுக்கமான வேலையாகும்.

ஊர்த்துவ தாண்டவர் சிற்பத்தில் அவர்முகத்தில் ஆவேச பாவத்தையும், கோதண்ட ராமர் சிற்பத்தில் அவர் முகத்தில் சாந்த பாவத்தையும் வேறுபடுத்தி காட்டியுள்ள இச்சிற்பங்களின் பெருமைக்கு ஈடுஇணையே இல்லை.

மோகினி அவதாரம் குறித்த சிலையும், அதற்கு எதிர்புறம் பெண்சிலையும் உயரத்திற்கு தக்கவாறு மாறுபட்ட சாமுத்திரிகா லட்சணங்களை சித்தரிப்பது சிந்திக்க வேண்டிய செயலாகும்.

ரதி சிற்பத்தில் அவள் கையில் அணிந்திருக்கக்கூடிய மோதிரங்களில் ஒவ்வொன்றும் ஒவ்வோர் விதமாக அழகுபடுத்தப்பட்டு உள்ளது. மேலும் ரதியின் நெற்றிசுட்டு, காதணி, கழுத்தில் உள்ள நகைகள் உடலை மறைத்துள்ள மெல்லிய துணி போன்றவை மிகமிக சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளன.

பிரகாரத்தில் சுற்றி வரும்போது, சண்டிகேஸ்வரர் சன்னதிக்கு அருகில் ஒரு முகத்துடன் கூடிய இரு உடல் அமைப்பு. காண்போரை வியப்பில் ஆழ்த்தும். இதை செதுக்கிய சிற்பியின் கற்பனைத்திறன், நம்மை பிரமிக்க வைக்கின்றது.

இக்கோவில் சிற்பங்கள் அனைத்தும் மிக அற்புதமாகவும், நேர்த்தியாகவும் சிற்பக்கலையின் பெருமையை பறைசாற்றும் விதமாகவும் உள்ளன. சுருங்கச் சொன்னால் இக்கோவில், சிற்பக்கலையின் பொக்கிஷமாக திகழ்கின்றது. சிற்பக்கலை ரசிகர்களுக்கு, இக்கோவில் தெவிட்டாக விருந்தாக அமையும் என்பதில் ஐயம் இல்லை.

Read More
குடுமியான்மலை சிகாநாதசாமி கோவில்

குடுமியான்மலை சிகாநாதசாமி கோவில்

திருமேனியின் உச்சியில் குடுமியுடன் இருக்கும் அபூர்வ சிவலிங்கம்

புதுக்கோட்டை – கொடும்பாளூர் – மணப்பாறை சாலையில், புதுக்கோட்டையில் இருந்து, 18 கி.மீ தொலைவில் குடுமியான்மலை அமைந்துள்ளது.

மலைக் குன்றில், அடிவாரத்தின் கிழக்குப் பகுதியில் ஒன்று, அதன் அருகில் ஒன்று, குன்றின் மேல் ஒன்று என இங்கு மொத்தம் நான்கு கோவில்கள் உள்ளன. குன்றின் அடிவாரத்தின் கிழக்குப் பகுதியில் சிகாநாதசுவாமி கோவில் உள்ளது. இறைவியின் திருநாமம் அகிலாண்டேசுவரி.

குடுமியான் என்றால் உயர்ந்தவன் என்றும், குடுமி என்றால் மலை உச்சி என்றும் பொருள்படும்படி உள்ளது. உயர்ந்த மலைக் குன்றை ஒட்டி அமைந்த கோவிலில் குடிகொண்டுள்ளதால் குடுமியான்மலை என்ற பெயர் வந்தது.

இத்தலத்து இறைவன், சிவலிங்கத் திருமேனியின் உச்சியில், குடுமியுடன் காணப்படுகிறார். இதன் பின்னணியில் ஒரு சுவையான வரலாறு உள்ளது.

ஒரு சமயம் கோவிலில் பூஜை செய்து கொண்டிருந்த அர்ச்சகர், பூஜைக்கு வைத்திருந்த பூவை எடுத்து, அங்கு வந்த ஒரு பெண்ணுக்கு கோயில் கொடுத்துவிட்டார். அப்போது, கோவிலுக்குள் மன்னர் வந்துவிடவே, அர்ச்சகர் செய்வதறியாது அந்தப் பெண்ணிடம் இருந்து மீண்டும் அந்தப் பூவை எடுத்து, பூஜை செய்து மன்னருக்கு பிரசாதமாக கொடுத்தார். அந்தப் பூவில் இருந்த முடி குறித்து மன்னர் அர்ச்சகரிடம் விளக்கம் கேட்டார். அதற்கு சிவபெருமானின் தலையில் முடி இருப்பதாக அர்ச்சகர் விளக்கினார்..

சந்தேகம் விலகாத மன்னர் இன்று இரவு தான் இங்கேயே தங்க உள்ளதாகவும், விடியற்காலை சன்னதி திறந்ததும், தனக்கு இறைவனின் குடுமியை காட்டவேண்டும் எனவும் கட்டளை இட்டார். இல்லையெனில் அடுத்த நாள் சிரச்சேதம் செய்யப்படுவாய் என்றும் ஆணையிட்டார். அரசர் சொன்னது போல அங்கேயே தங்கியும் விட்டார்.

தான் எத்தனை பெரிய தவறு செய்து விட்டோம் என்பதை உணர்ந்த அர்ச்சகர், சிவபெருமானின் காலடியினைப் பிடித்து மன்றாடினார். தன்னை இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காக்கும்படி வேண்டினார். அவர் முன் தோன்றிய பெருமான், 'நீ உன் தவறை உணர்ந்ததால் வெறும் மூன்று நாழிகை மட்டும் நான் குடுமியுடன் இருப்பேன், அதற்குள் நீ உன்னைக் காப்பாற்றிக் கொள்'', என்று கூறி மறைந்தார்.

அடுத்த நாள் காலை மன்னனனிடம் சிவபெருமானுக்கு குடுமி உள்ளது என்பதைக் காண்பித்தார் அர்ச்சகர். ஆனாலும் சந்தேகம் நீங்காத அரசர் குடுமியை இழுக்த்துப் பார்த்தார். இழுத்த வேகத்தில் சிவபெருமானின் தலையில் இருந்து இரத்தம் பீறிட்டது. இதனைக் கண்ட அனைவரும் அதிர்ச்சியுற்றனர். மன்னரும் சிவனின் தலையில் குடுமி இருப்பது உண்மைதான் என்பதை உணர்ந்து, சுவாமி தன்னை மன்னித்தருள வேண்டினார். தன் கருணை உள்ளத்துடன் அனைவரையும் மன்னித்தருளிய இறைவன், இது தனது திருவிளையாடல் என்பதையும் அனைவருக்கும் உணர்த்தினார். அன்று முதல் இத்தலத்து இறைவன், அழகிய குடுமியுடன் காணப்படுகிறார்.

Read More