பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோவில்

பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோவில்

தட்சிணாமூர்த்தி சேலை அணிந்த கோலத்தில் காட்சி தரும் தேவாரத் தலம்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் இருந்து 8 கீ.மீ. தொலைவில் உள்ளது, தேவாரத் தலமான, ஓமாம்புலியூர் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோவில். ஓமாம்புலியூரின் பழைய பெயர் பிரணவபுரம். சிவபெருமான் அம்பாளுக்கு குருவாக இருந்து ஓம் என்னும் பிரணவத்தைப் போதித்ததால் 'ஓம்'. புலிக்கு முக்தி கொடுத்ததால் 'புலியூர்'. இந்த இரண்டும் சேர்ந்து ஓமாம்புலியூர் என்ற பெயர் ஏற்பட்டது.

சிவாலயங்களில் பொதுவாகப் பிராகாரத்தில்தான் தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அமர்ந்து இருப்பார். ஆனால், இக்கோவிலில் சுவாமி சன்னதிக்கும் அம்மன் சன்னதிக்கும் மத்தியில் மகாமண்டபத்தில் அமைந்துள்ள தனிக் கருவறையில், சிவபெருமான் தட்சிணாமூர்த்தியாக அமர்ந்து அம்பாளுக்கு குரு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார் . இப்படிப்பட்ட அமைப்பு வேறு எந்தத் தலத்திலும் கிடையாது. குருத் தலங்களில் இத்தலம் தலைசிறந்தாகக் கருதப்படுவதிற்கு இதுவே காரணமாகும். குருவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இங்கு மற்ற நவக்கிரகங்கள் கிடையாது.

அம்மனுக்கு உபதேசம் செய்த காரணத்தினால் தட்சிணாமூர்த்தி சேலை அணிந்திருப்பதும் மற்றும் இரண்டு தட்சிணாமூர்த்திகள் அருள்பாலிப்பதும் இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.

முருகப் பெருமான் பிரணவ உபதேசம் கற்ற தலம்

தந்தைக்கு முருகப் பெருமான் பிரணவ உபதேசம் செய்த இடம் சுவாமி மலை. அந்த உபதேசத்தை அவர் கற்ற இடம்தான் ஓமாம்புலியூர் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோவில். ஒரு சமயம், இங்கே எழுந்தருளியிருக்கும் புஷ்பலதாம்பிகைக்கு சிவபெருமான் குருவாக இருந்து ஓம் என்னும் பிரணவத்தை உபதேசம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த முருகப் பெருமானை, 'அம்பாளுக்கு உபதேசம் நடப்பதால், உள்ளே போக வேண்டாம்’ என்று நந்திதேவர் தடுத்தார். அதை மீறி, முருகப் பெருமான் வண்டாக உருமாறி அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட நீர் வெளியேறும் கோமுகம் வழியாக உள்ளே சென்று, அம்பாளின் தலையில் இருந்த பூவில் அமர்ந்து கொண்டார். சிவபெருமான் அம்பாளுக்கு செய்த உபதேசத்தை அவரும் படித்தார்.

பிற்பாடு, சுவாமிமலையில் தனக்கே உபதேசம் செய்த முருகப் பெருமானிடம், 'இதை நீ எங்கு படித்தாய்?' என்று சிவபெருமான் கேட்டபோது, 'பிரணவபுரத்தில் அம்மைக்கு நீங்கள் உபதேசம் செய்தபோது உங்களுக்கே தெரியாமல் படித்தேன்' என்றார் முருகப்பெருமான்.

காசியின் மீசம்

அப்பர், திருஞான சம்பந்தரால் பாடல்பெற்ற பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் சுயம்புவாக தோன்றியவர். பெரும்பாலும் சிவலிங்கத்தின் ஆவுடையானது பத்ம பீடமாகத்தான் (வட்ட வடிவில்) இருக்கும். ஆனால், இங்கே சதுர வடிவில் உள்ளது. காசியிலும் சதுர வடிவம் தான் என்பதால், இத்திருத்தலத்தை 'காசியின் மீசம்' என்கிறார்கள்.

ரேவதி நட்சத்திர பரிகாரத் தலம்

பக்தர்களின் தடைகளை நீக்கி சுகவாழ்வு தரும் இத்திருத்தலம் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பரிகாரத் தலமாகவும், குருதோஷங்கள் போக்கும் தலமாகவும் விளங்குகிறது. தங்கள் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க பெற்றோர்கள் அதிக அளவில் இங்கு வந்து தட்சிணாமூர்த்தியை வழிபடுகிறார்கள்.

Read More