திருமலை பேடி ஆஞ்சநேயசுவாமி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருமலை பேடி ஆஞ்சநேயசுவாமி கோவில்

கை விலங்குடன் காட்சி அளிக்கும் பால அனுமன்

திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு நேர் எதிரே, சந்நிதி தெருவில் அமைந்துள்ளது பேடி ஆஞ்சநேயசுவாமி கோவில். திருமலைக்கு வருகை தரும் பக்தர்கள்

இக்கோவிலுக்குச் சென்று ஆசி பெற வேண்டும், பேடி ஆஞ்சநேய சுவாமியின் ஆசீர்வாதம் முழுமையான பயணத்தைக் குறிக்கிறது. ஸ்ரீ வெங்கடாசலபதி கோவில் மகா துவாரத்திலிருந்து நடந்து செல்லக்கூடிய தூரத்தில், பேடி ஆஞ்சநேய ஸ்வாமி கோவில் உள்ளது.

இக்கோவிலில் ஆஞ்சநேயர், பால அனுமன் தோற்றத்தில், கைகள் கூப்பிய அஞ்சலி முத்திரை கோலத்தில் காட்சி அளிக்கிறார். அவரது கைகள் விலங்குகளால் கட்டப்பட்டிருக்கின்றது. இதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி உள்ளது.

ஒரு சமயம் பால அனுமன் தனது வாகனமான ஒட்டகத்தைத் தேடி காடுகளில் அலைந்து கொண்டிருந்தார். ஆஞ்சநேயரின் அன்னையான அஞ்சனாதேவி, பால அனுமானைத் தடுக்கும் முயற்சியில், அவனைக் கைவிலங்கிட்டு, தான் திரும்பி வரும் வரை ஸ்ரீவாரி கோவில் முன் இருக்குமாறு தனது அன்பு மகனுக்கு உத்தரவிட்டதாக புராணம் கூறுகிறது. பின் அஞ்சனா தேவி அருகில் இருந்த மலையில் தவம் செய்ய சென்று விட்டாள். இதனால் தான், திருமலையில் உள்ள ஏழு மலைகளில் ஒன்றான அஞ்சனாத்ரி, அவள் பெயராலே அழைக்கப்பட்டு வருகின்றது.

தம் அன்பான சீடன் கோயிலின் முன் தனியாக நிற்பதைக் கண்டு, ஸ்ரீ வெங்கடேஸ்வர பகவான், ஒவ்வொரு நாளும் பால அனுமனுக்கு சரியான நேரத்தில் உணவை வழங்கவும், அவரது தாயார் அஞ்சனாதேவி, திரும்பி வரும் வரை அவரை நன்கு கவனித்துக் கொள்ளவும் கோயில் குருக்களுக்கு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனாலேயே ஒவ்வொரு நாளும் ஸ்ரீ பூவராகசுவாமிக்கும், ஸ்ரீ வெங்கடேசப் பெருமானுக்கும் நைவேத்தியம் சமர்பிக்கப்படும் அதே நைவேத்தியம் இந்தக் கோவிலுக்குக் கொண்டு வந்து அனுமனுக்குப் படைக்கப்படுகிறது.

Read More
அனுமன் சாலிசா
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

அனுமன் சாலிசா

அனுமன் சாலிசாவின் சிறப்புகள்

ஆலயத்துளிகள் தனது நான்காம் ஆண்டில் இன்று அடி எடுத்து வைக்கின்றது.

வாசகர்களின் ஆதரவிற்கு எங்கள் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

சுகுமார் & பல்லவி

துளசி இராமாயணம் என்பது துளசிதாசர் என்று அழைக்கப்படும் இராம்போலா துபே எழுதிய நூலாகும். பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர் ராமர் மீதான பக்திக்கு புகழ்பெற்றவர். துளசிதாசர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை வாரணாசி மற்றும் அயோத்தி நகரங்களில் கழித்தார். இவர் வாரணாசியில், அனுமன் தனக்கு காட்சி கொடுத்த இடத்தில் சங்கட மோட்ச அனுமன் கோயிலை நிறுவினார்.

துளசிதாசர் காட்டிலே வாழ்ந்து வந்த காலத்தில், இறந்த ஒரு மனிதனை உயிர்மீட்டார். இந்தச் செய்தியானது முகலாய அரசர் அக்பர் செவிக்கும் எட்டியது. இதனால் அக்பருக்கு துளசிதாசரை காண வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. எவ்வாறேனும், துளசிதாசரை தன் தர்பாருக்கு அழைத்து வந்து, நேரடியாக அவர் செய்யும் அற்புதத்தைக்கண்டு ரசிக்க வேண்டும் என்று ஆசைப் பட்டார். அரசவைக்கு அழைத்து வரப்பட்ட துளசிதாசரிடம் அக்பர், ராமனின் அருளாலும், உங்களின் அருளாலும், இறந்தவரின் உயிரை மீட்டது போல, என்னுடைய அரசவையிலும் ஒரு அற்புதத்தை நீங்கள் நிகழ்த்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு, நான் மாயாஜாலக்காரன் அல்ல. ஸ்ரீராமரின் பக்தன் மட்டுமே என்று துளசிதாசர் சொல்ல, கோபப்பட்ட அக்பர், அவரைச் சிறையில் அடைத்தார். எல்லாம் ஸ்ரீராமனின் சித்தம் என்று கலங்காமல் சிறை சென்ற துளசிதாசர், தினமும் ஆஞ்சநேயர் மீது ஒரு போற்றிப் பாடல் இயற்றி வழி பட்டார். இப்படி தினம் ஒரு பாடலாக, சிறையில் இருந்தபோது 40 நாட்கள் அவர் எழுதிய 40 பாடல்கள் தான் அனுமன் சாலிசா.

முகலாய அரசர் அக்பரை பணிய வைத்த அனுமன் சாலிசா

அனுமன் சாலிசாவை துளசிதாசர் எழுதி முடிக்கும் தருவாயில் ஒரு அற்புதமான நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பொழுது நகரம் முழுவதும் பெரிய குரங்கு கூட்டம் ஒன்று புகுந்தது. அந்தக் குரங்குகள் சேட்டைகள். அரண்மனை, அந்தப்புரம், கடைவீதிகள், தோட்டத்துரவுகள், மரங்கள், தெருக்கள் என எல்லா இடங்களிலும் தங்கள் சேட்டைகளை செய்யத் தொடங்கின. மக்கள் அலறியடித்து ஓடத் தொடங்கினர். இதனைக் கண்ட அக்பர், செய்வது தெரியாது குழப்பம் அடைந்தார். ஹஜித் என்ற ஒரு பெரியவர், மன்னரிடம் சென்று, 'துளசிதாசரிடம் நீங்கள் கேட்ட அற்புதம் நிகழ்ந்து விட்டது. ராமதூதனுடைய அவதாரமான குரங்குகள் படையெடுப்பின் மூலம், ஒவ்வொரு மக்களுக்கும் ராம தரிசனம் கிடைத்து விட்டது. எனவே துளசிதாசரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்' என்று கூறினார். துளசிதாசரை விடுதலை செய்ய மன்னர் உத்தரவிட்டார். துளசிதாசரிடம், 'குரங்குகள் தொல்லையினால் நகர மக்கள் அவதிப்படுகிறார்கள். குரங்குகள் இங்கிருந்து மீண்டும் காட்டுக்குச் செல்ல தாங்கள் தான் உதவி செய்ய வேண்டும்' அக்பர் கேட்டுக் கொண்டார். உடனே துளசிதாசர் அனுமனிடம் மக்களின் துயரத்தை நீக்குமாறு வேண்டிக் கொண்டு தியானத்தில் ஆழ்ந்தார். துளசிதாசர் தியானத்தில் ஆழ்ந்திருந்த பொழுது, நகரத்தில் ஆங்காங்கே சேட்டை செய்து கொண்டிருந்த குரங்குகள் மாயமாக மறைந்தன. இதனைக் கண்டு மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். குரங்குகள் மறைந்ததை எண்ணி, துளசிதாசரின் மகிமையை அக்பர் உணர்ந்தார். ராமனின் பெருமையை அறிந்தார்.

அனுமன் சாலிசாவின் பலன்கள்

அபிராமி அந்தாதியில் உள்ள 100 பாடல்களுக்கும் , ஒரு நற்பலனை பெற்றுத் தரும் தன்மை உண்டு. அதுபோல, 40 பாடல்கள் கொண்ட அனுமன் சாலிசாவின் ஒவ்வொரு பாடலும், ஒரு குறிப்பிட்ட வரத்தை வழங்குகின்றது, பக்தரின் பக்தி அல்லது சிரத்தையைப் பொறுத்து, ஒவ்வொரு பாடலின் பலனையும் பெறுவார்கள். அனுமன் சாலிசாவின் 38 ஆம் பாடலில், யார் அனுமன் சாலிசாவை 100 நாட்கள், தினமும் 100 தடவை சொல்கிறார்களோ அவர்கள் பிறப்பு மற்றும் இறப்பு சக்கரத்திலிருந்து விடுபட்டு, அதிக ஆனந்தத்தை அடைவார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More
மானாமதுரை வீர அழகர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

மானாமதுரை வீர அழகர் கோவில்

பாஸ்போர்ட் ஆஞ்சநேயர்

ஒரு மாதமானாலும் ஆஞ்சநேயருக்கு சாற்றிய வடை மாலை கெடாமல் இருக்கும் அதிசயம்!

மதுரையிலிருந்து ராமேசுவரம் செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 49 கி.மீ. தொலைவில் உள்ள மானாமதுரை என்ற ஊரில் அமைந்துள்ளது வீர அழகர் கோவில். இத்தலத்தில் பெருமாள், மதுரை அழகர் கோவிலைப் போலவே ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சுந்தரராஜப் பெருமாள் என்ற திருநாமத்துடன் அருள்புரிகிறார். தாயார் திருநாமம் சௌந்தரவல்லி.

சீதாதேவியை தேடி வானர வீரர்கள் வானர வீரர்கள் இங்கு வந்தனர். இங்குள்ள பிருந்தாவனம் எனும் இடத்திலிருந்த சுவைமிக்க கனிகளை உண்டதால் மயக்கம் உண்டாகியதாம். பின்னர் ஶ்ரீராமர் அங்கு வந்து அவர்களை ஊக்கப்படுத்தி மீண்டும் வீரர்களாக்கிதாலேயே இத்தலம், 'வானரவீர மதுரை' என்றழைக்கப்பட்டு, பின் அப்பெயர் மருவி தற்போதைய 'மானாமதுரை' என்றானதாம். இத்தலத்துப் பெருமாள், ஆடித்திருவிழாவின் போது காஞ்சி வரதராஜப் பெருமாள் போல, தாயாரின் இருப்பிடத்திற்குச் சென்று திருமணம் முடித்துக் கொள்வார்.

இத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயர் பெருமாளைப் போல் மிகவும் பிரசித்தம். இவர் ஆறரை அடி உயர திருமேனியுடன், நின்ற கோலத்தில் கைகூப்பி அஞ்சலி முத்திரையுடன் காட்சி அளிக்கிறார். மறுபடியும் ஒரு ராவணன் தோன்றி விடக்கூடாது என்பதற்காக இவர் தெற்கு முகமாக அருள்பாலிக்கிறார்.

இங்குள்ள ஆஞ்சநேயருக்கு சாற்றப்படும் வடை மாலையானது, ஒரு மாதம் ஆனாலும் கெடாமல் இருப்பது அதிசயம். இவருக்கு வடைமாலை சாற்றி வழிபட்டால் விரைவில் பாஸ்போர்ட் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால் இவருக்கு வெளிநாட்டு பக்தர்கள் அதிகம்.

திருமணத்தடைநீங்க வியாழக்கிழமை வெற்றிலை மாலையும், காரியத்தடை நீங்க வியாழன், சனிக்கிழமைகளில் எலுமிச்சை மாலையும் இவருக்கு சாற்றலாம். இத்தலத்திலுள்ள தாயாருக்கு வெள்ளிக்கிழமைகளில் தாமரைத் திரியால் விளக்கு போட்டு வழிபட்டால் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம்.

Read More
அனந்தமங்கலம் இராஜகோபால சாமி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

அனந்தமங்கலம் இராஜகோபால சாமி கோவில்

மூன்று கண்களையும், பத்துக் கரங்களையும் உடைய அபூர்வ ஆஞ்சநேயர்

மயிலாடுதுறை மாவட்டத்தில், திருக்கடையூருக்கும் தரங்கம்பாடிக்கு இடையில் அமைந்துள்ளது அனந்தமங்கலம் ராஜகோபால சாமி கோவில். கருவறையில் மூலவர் வாசுதேவப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சேவை சாதிக்கிறார். உற்சவர் ராஜகோபால சுவாமி ருக்மணி, சத்யபாமாவுடன் எழுந்தருளி இருக்கிறார்.

இக்கோவில் பெருமாள் கோவிலாக இருந்தாலும், இங்கு எழுந்தருளியுள்ள திரிநேத்திர தசபுஜ வீர ஆஞ்சநேயர் மிகவும் பிரசித்தி பெற்றவர். அவரே முதன்மையான கடவுளாக இத்தலத்தில் வழிபடப்படுகிறார். அவர் மூன்று கண்களையும், பத்துக் கரங்களையும் உடையவராகவும், அவரது ஐந்து வலது கைகளில் சுதர்ஸனம், திரிசூலம், அங்குசம், பாணம், மத்தகக்ஷ்ம் என்ற ஆயுதங்களையும், இடது ஐந்து கைகளில் சங்கு, பத்மம், பாசம், கோதண்டம், நவநீதம் என்ற ஆயுதங்களையும் ஏந்தி, முதுகின் இருபக்கமும் கருடனுக்குரிய சிறகுகளோடு, அபூர்வமான தோற்றத்தில் காட்சித் தருகிறார். இதுபோன்ற ஆஞ்சநேயர் திருமேனியை வேறு எந்த கோவிலிலும் நாம் தரிசிக்க முடியாது.

ராமபிரான் இலங்கையில் இராவணனை வதம் செய்துவிட்டு திரும்புகையில், ராவணனின் வழிவந்த அரக்கர்கள் அங்கே கடலுக்கு அடியில் தவம் செய்து கொண்டிருப்பதை கேள்விப்பட்டு அவர்களை அழிக்க அனுமனை அனுப்பினார். இலங்கைக்கு புறப்பட்ட ஆஞ்சநேயருக்கு திருமால் தன்னுடைய சங்கு, சக்கரத்தையும், பிரம்மா தனது பிரம்ம கபாலத்தையும், ருத்ரன் மழுவையும், ஸ்ரீதேவி பத்மமும், ஸ்ரீசக்தி பாசமும் அளித்தனர். ராமபிரான் வில்லையும், அம்பையும் வழங்கினார். கருடாழ்வார் தம் சிறகுகளை அளித்தார். கடைசியாக அங்குவந்த சிவபெருமான், பத்து கரங்களிலும் ஆயுதங்கள் தரித்து நின்றிருந்த அனுமனைப் பார்த்தார். தாம் என்ன தருவது என்று சிந்தித்தார். தம்முடைய சிறப்புக்குரிய மூன்றாவது கண்ணையே அனுமனுக்கு அளித்தார். மூன்று கண்களும் (திரிநேத்ரம்), பத்து கைகளும் (தசபுஜம்) கொண்டு வீரக்கோலத்தில் இருந்த அனுமன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

கடலுக்கு கீழே தவம் செய்த அசுரர்களையும் அவர்களது படையினரையும் அழித்து துவம்சம் செய்த அனுமன், தனக்கு தரப்பட்ட கடமையை செவ்வனே செய்து முடித்து, ஆனந்தத்துடனும் ராமனை சந்திக்கப் பயணமானார். அப்படி வரும் வழியில் கடற்கரை ஓரத்தில் இயற்கை அழகு நிரம்பிய இத்தலத்தில் ஆனந்தத்துடன் தங்கினார். அப்படி அவர் தங்கிய இடம் 'ஆனந்தமங்கலம்' என பெயர் பெற்றது. தற்போது வழக்கில் அனந்தமங்கலம் என்று அழைக்கப்படுகிறது.

பிரார்த்தனை

திருப்பதி சென்று வந்தால் திருப்பம் வரும், அனந்தமங்கலம் சென்றால் ஆனந்தம் கிடைக்கும் என்பது பழமொழி. இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட்டாலே சிவன், திருமால், பிரம்மா, ஸ்ரீராமர், இந்திரன், ருத்ரன், கருடாழ்வார் ஆகிய அனைவரையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். உடல் மற்றும் மனநலம் குன்றியவர்கள். திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள். தொழிலில் நஷ்டம் அடைந்தவர்கள். பில்லி, சூனியம், ஏவலால் பாதிக்கப்பட்டவர் கள் இத்தல் ஆஞ்சநேயரை வழிபட்டால் அவர்கள் அல்லல் நீங்கி ஆனந்தம் பெறுவதாக மக்களின் நம்பிக்கை. ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் வியாழக்கிழமை, இத்தல ஆஞ்சநேயரை வழிபட ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

Read More
செங்கல்பட்டு கோதண்டராமசாமி (வீர ஆஞ்சநேயர்) கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

செங்கல்பட்டு கோதண்டராமசாமி (வீர ஆஞ்சநேயர்) கோவில்

சனிபகவானை மிதித்த வண்ணம் காட்சி தரும் வீர ஆஞ்சநேயர்

செங்கல்பட்டு நகரில் அமைந்துள்ளது 1100 ஆண்டுகள் பழமையான செங்கல்பட்டு கோதண்டராமசாமி (வீர ஆஞ்சநேயர்) கோவில். கருவறையில் ராமபிரான், ஸ்ரீ பட்டாபிராமன் என்ற திருநாமத்தோடு, வீராசனத்தில் ஞான முத்திரையுடன் சீதாதேவியுடன் அமர்ந்த கோலத்தில் உள்ளார். .அருகில் லக்ஷ்மணர் நின்றபடியும் ,பரதன் ,சத்ருகன் மற்றும் ஆஞ்சநேயர் ஆகியோர் கிழே அமர்ந்தபடி உள்ளார்கள் , ராமபிரானோடு ஓடும் சத்ருகனும், பரதனும் உடன் இருப்பது ஒரு அரிய காட்சியாகும்.

இக்கோவிலின் வாயு மூலையில் வீர ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி உள்ளது. இவர் தனது வலது கரம் அபய முத்திரையுடனும், இடது கரத்தில் தாமரை ஏந்தியபடியும் தனது தனது காலால் சனி பகவானை அழுத்திய படியும் காட்சி தருகிறார் ,இது ஒரு அபூர்வமாக காணக்கூடிய தோற்றம் ஆகும். இதன் பின்னணியில் ஒரு சுவையான நிகழ்ச்சி உள்ளது.

சனிபகவானுக்குரிய பரிகார தலம்

அனுமன் சீதையைத் தேடி, சேதுக்கரையில் இருந்து இலங்கைக்கு தாவ முயன்ற போது, அவரை ஏழரை சனி காலம் நெருங்க இருப்பதால் சனிபகவான் அவரை பிடித்துக் கொண்டார். அனுமன் தான் முக்கிய காரணத்திற்காக இலங்கை செல்ல இருப்பதால், தன்னை பின்னர் பிடித்துக் கொள்ளுமாறு சனி பகவானிடம் கூறினார். சனிபகவானும் அவரை அப்போது விட்டுவிட்டார். பின்னர் வானரப் படைகள், சேதுக்கரையில் இருந்து இலங்கைக்கு கற்பாறைகளை கொண்டு பாலம் அமைத்துக் கொண்டிருந்த போது சனி பகவான் மீண்டும் வந்தார். அனுமன் சனி பகவானை தன் தலையை மட்டும் பிடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். சனியும் அவ்வாறே அனுமன் தலையை பிடித்துக் கொண்டார். ஆனால் அனுமன் பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்ததால், அவர் தலையில் தூக்கிய பாறைகளுக்கும், அனுமன் தலைக்கும் இடையில் சிக்குண்டு தவித்தார். அதனால் அனுமன் தலையில் இருந்து விடுபட்டு, அனுமன் காலை பிடிக்க முயற்சி செய்தார். அந்த நேரத்தில் அனுமன் காலால் மிதித்து தரையில் அழுத்தினார். சனிபகவான் அனுமனிடம் தன்னை விட்டுவிடும்படி மன்றாடினார். தன்னை விடுவித்த அனுமனிடம் சனி பகவான் உன் பக்தர்கள் அனைவரையும், ஏன் உங்களை ஒரு கணம் நினைப்பவர்களைக் கூட நான் நான் பிடிக்க மாட்டேன் என்று உத்தரவாதம் அளித்தார். அனுமாரே சனிபகவானை மிதித்த வண்ணம் காட்சி தருகிறார் என்றால் அவரை தரிசித்து வழிபட்டால் சனி பகவானின் கொடூர பார்வையில் இருந்து பக்தர்களை காத்து விடிவு அளிக்கிறார் என்பது உண்மை. அதனால் தான் இத்தலம் , சனி பகவானால் ஏற்படக்கூடிய தாக்கத்திலிருந்து விடுபட வேண்டிக் கொள்ளும் சிறந்த பரிகார தலமாக விளங்குகின்றது.

Read More
பட்டீஸ்வர  கோபிநாதப் பெருமாள்  கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

பட்டீஸ்வர கோபிநாதப் பெருமாள் கோவில்

தென்னாட்டின் துவாரகை

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் உள்ள தேனுபுரீசுவரர் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது கோபிநாதப் பெருமாள் கோவில். தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சுவாமிநாத ஐயர் இக்கோவிலை தென்னாட்டின் துவாரகை என்று குறிப்பிட்டார். மூலவர் கோபிநாதப் பெருமாள், ருக்மணி மற்றும் சத்யபாமாவுடன் காட்சியளிக்கிறார். இந்த கோவிலின் தல புராணத்தின்படி, பெருமாள் ராமாயணத்தில் அனுமனுக்கு ராமனாக தனது வடிவத்தை காட்டியது இங்குதான்.

1000 இதழ்கள் கொண்ட அல்லி மலரை ஏந்தி இருக்கும் இரட்டை ஆஞ்சநேயர்

இத்தலம் மகாபாரதத்துடனும் தொடர்புடையது. இங்கு ஒரு காலத்தில் அழகான நீர் அல்லிகள் கொண்ட ஒரு பெரிய குளம் இருந்தது. அல்லி மலர்கள் 1000 இதழ்களுடன் மலர்ந்து காணப்பட்டன. திரௌபதி ஒருமுறை பீமனை அல்லி மலர்களை கொண்டு வர அனுப்பினாள். பீமன் இங்கு அல்லி மலர்களைப் பறிக்க வந்த போது, ராம நாமத்தை ஜபித்துக் கொண்டிருந்த அனுமனை எதிர்கொண்டான். அவன் அனுமனை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அனுமனை ஒரு குரங்காக பாவித்து அவருடைய வாலை நகர்த்தி வழி விடச் சொன்னான். ஆனால் அதற்கு பதிலாக அனுமன் தனக்கு வயதாகிவிட்டதாகக் கூறி, பீமனை தன்னுடைய வாலை நகர்த்தச் சொன்னார் பீமன் பலமுறை முயற்சித்தும் தோல்வியுற்றான், அது சாதாரண குரங்காக இருக்காது, மாறாக அனுமன் என்பதை உணர்ந்தான். பீமன் தன் தவறை உணர்ந்து கொண்டதை அனுமன் அறிந்து, தன் விஸ்வரூபத்தின் மூலம் பீமனுக்கு தன்னை வெளிப்படுத்தினான். பீமன் அவரை வணங்கிய பிறகு, அனுமன் திரௌபதியிடம் திரும்ப எடுத்துச் செல்ல 1000 இதழ்கள் கொண்ட அல்லி மலரை அவருக்கு வழங்கினார்.

இக்கோவிலில் தனி சந்நிதியில் உள்ள இரட்டை ஆஞ்சநேயர்கள் மிகவும் பிரசித்தி பெற்றவர்கள். இரண்டு ஆஞ்சநேயகளும் தங்கள் கையில் 1000 இதழ்கள் கொண்ட அல்லி மலரை வைத்திருக்கிறார்கள்.

Read More
ஆம்பூர் பெரிய ஆஞ்சநேயர்  கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ஆம்பூர் பெரிய ஆஞ்சநேயர் கோவில்

அனுமன் சனிபகவானை இரு கால்களால் அழுத்தி நிற்கும் அபூர்வகோலம்

வேலூரில் இருந்து 23 கி.மீ தொலைவில் உள்ள ஆம்பூர் நகரத்தில் பெரிய ஆஞ்சநேயர் கோவில். பழங்காலத்தில் ஆமையூர் என அழைக்கப்பட்ட இந்த ஊர் பெயர் மருவி இன்று ஆம்பூர் என வழங்கப்படுகிறது. இக்கோவில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது

இக்கோவில் கருவறையில், பதினோரு அடி உயரமுள்ள, கருங்கல்லில் வடிக்கப்பட்ட புடைப்புச் சிற்பமாக பெயருக்கு ஏற்றபடி பெரிய ஆஞ்சநேயர், தெற்கு நோக்கி காட்சி தருகின்றார். இவரின் திருமுகம், கிழக்கு திசை நோக்கிய, கோலத்தில் காட்சி தருகிறது. இடது காலை முன் வைத்து சனியின் தலையினை அழுத்தியவாறும், வலது காலை சற்றே தூக்கி சனியின் வலது காலை அழுத்தியபடியும், பெரிய ஆஞ்சநேயர் காட்சி தருகின்றார். சனி பகவானின் முகம் பூமியை நோக்கியபடி உள்ளது. ஆஞ்சநேயரின் வால் , தலைக்குமேல் உயர்ந்து நுனி வளைந்து, அதில் மணி கட்டிய கோலத்தில் அமைந்துள்ளது. அவரது வலது கரம் அபயம் அளிப்பதாக உள்ளது. இடது கரம் சௌகந்திகா மலரின் தண்டினைப் பிடித்துள்ளது. காதுகளில் குண்டலங்கள் அலங்கரிக்கின்றன. மார்பில் முப்புரிநூல் விளங்குகின்றது.

புராண வரலாறு

சீதையை மீட்க, இராமபிரான் இலங்கை மீது போர்த் தொடுத்தார். அப்போரில் லட்சுமணன் மூர்ச்சையாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். இந்நிலையில், ஜாம்பவானின் ஆலோசனைப்படி, இமயமலையில் இருந்து சஞ்சீவி மூலிகையைக் கொண்டுவர ஆஞ்சநேயர் புறப்பட்டார். இதையறிந்த அசுர குருவான சுக்கிராச்சாரியார், சனியின் உதவியால் இதனைத் தடுக்க அறிவுறுத்தினார். ஆனால், அதற்குள் ஆஞ்சநேயர் இமயமலை சென்று, சஞ்சீவி மலையைக் சுமந்து, இலங்கை திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தன்னைப் பிடிக்க முயன்ற சனியைத் தன் காலில் கொண்டு வந்து தன் முழு பலத்தைத் தந்த ஆஞ்சநேயர், அவரை அழுத்தினார். வலி தாங்க முடியாத சனி, தன்னை விட்டு விடும்படியும், மன்னித்து விடும்படியும் வேண்டியதுடன், ராமரின் துதியையும் பாடினார். இராமபிரானின் துதியைக் கேட்ட ஆஞ்சநேயர், சனியைத் தன் பிடியில் இருந்து விடுவித்தார். அதே சமயம் ராமநாமத்தைக் கூறி என்னை வழிபடும் எவரையும் துன்புறுத்தக்கூடாது என்ற உறுதி மொழியையும் வாங்கிக்கொண்டார், அனுமன். பின்னர் இலங்கை சென்று சேர்ந்தார். அதன்பின் சஞ்சீவி மலை மூலிகையால் லட்சுமணன் நலம் பெற்றான் என்பது புராணம். இந்தக் கோலமே, இந்த ஆலயத்தின் மூலவராக விளங்குகின்றது.

பிரார்த்தனை

இவ்வாலயத்திற்கு ஆம்பூர் பகுதி மக்கள் மட்டுமின்றி, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா பகுதிவாழ் மக்களும் வந்து தரிசித்துச் செல்கின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளில் இராகுகால நேரத்தில் தீபமேற்றி வழிபட்டால் கோரிக்கைகள் நிறைவேறும் என்பது ஐதீகம். ஏழரை சனி நடப்பவர்கள், சனி தோஷம் உள்ளவர்கள், சனியால் கெடுபலனை அனுபவிப்பவர்கள் இத்தலம் வந்து பெரிய ஆஞ்சநேயரை வழிபட்டு சென்றால், சனி பகவானால் ஏற்படக்கூடிய தொல்லையிலிருந்து விடுபடலாம். அதேபோல, திருமணப்பேறு, குழந்தைப்பேறு வழங்கும் கண்கண்ட தெய்வமாகப் போற்றப்படுகிறார்.

Read More
மேலப்பாதி இரட்டை ஆஞ்சநேயர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

மேலப்பாதி இரட்டை ஆஞ்சநேயர் கோவில்

ஒரே கருவறையில் இரண்டு ஆஞ்சநேயர்கள் அருள்பாலிக்கும் அபூர்வ தோற்றம்

மயிலாடுதுறையில் இருந்து 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது மேலப்பாதி என்ற கிராமம். இங்கு மிகவும் பிரசித்திப் பெற்ற இரட்டை ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. செம்பனார் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது இக்கோவில். கருவறையில் இரண்டு ஆஞ்சநேயர்கள் எழுந்தருளி இருக்கிறார்கள். இப்படி இரண்டு ஆஞ்சநேயர்கள் ஒரே கருவறையில் அருள்பாலிப்பதை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

தல வரலாறு

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் செம்பனார் கோவிலுக்கும், மேலப்பாதிக்கும் இடையே ஓடும் காவிரி ஆற்றில் இறங்கிச் செல்லும் நிலை இருந்தது. எனவே அந்தப் பகுதி மக்கள் ஆற்றில் மூங்கில் பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த மக்களுக்கு இரண்டு மனித குரங்குகள் உதவி செய்தன. ஒரு நாள் பாலம் கட்டிய சோர்வில் இரண்டு குரங்குகளும் அருகில் இருந்த இலுப்பைக் காட்டு திடலில் ஓய்வு எடுத்தன. சிறிது நேரத்தில் அவை இரண்டும் அதே இடத்தில் ஐக்கியமாகி விட்டதாக இந்தக் கோவில் தல புராணம் தெரிவிக்கிறது. இதை கண்ட கிராம மக்கள், ஆஞ்சநேயரே இந்த குரங்குகளின் வடிவில் வந்து தங்களுக்கு பாலம் கட்ட உதவியதாக கருதினர். எனவே அந்த மக்கள், இதனால் அந்த குரங்குகள் ஐயக்கிமான இடத்திலேயே இரட்டை ஆஞ்சநேயர் கோவிலை எழுப்பினர்.

பிரார்த்தனை

இந்த ஆஞ்சநேயரிடம் என்ன வேண்டிக் கொண்டாலும் அது இரட்டிப்பு பலனை தரும் என்பது நம்பிக்கை. பொதுவாக விநாயகரை வணங்கி விட்டு பணிகளை துவங்குவது போல், இப்பகுதி மக்கள் இரட்டை ஆஞ்சநேயரை வணங்கி விட்டு தான் எந்த காரியத்தையும் துவக்குகிறார்கள்.

இங்குள்ள ஆஞ்சநேயர்களுக்கு வெண்ணெய் காப்பு சாத்தி வழிபட்டால், வெண்ணெய் உருகுவது போல இன்னல்கள் தீரும். சனி பகவானின் தாக்கம் குறையும். எடுத்த காரியங்கள் வெற்றி யாகும். எப்படிப்பட்ட தோஷமும் விலகி விடும்.நவகிரக தோஷங்கள் எதுவானாலும் இந்த தல இரட்டை ஆஞ்சநேயரை வழிபட விலகி விடும். அமாவாசை நாட்களில் இந்த ஆஞ்சநேருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. சிறப்பு அபிஷேகங்கள், துளசி மாலை, வடை மாலை, வெற்றிலை மாலை சாற்றி பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

Read More
கூகலூர் அதிசய ஆஞ்சநேயர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

கூகலூர் அதிசய ஆஞ்சநேயர் கோவில்

கூப்பிய கரங்களிடையே சிவலிங்கத்தை ஏந்திய அதிசய ஆஞ்சநேயர்

ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து 23 கி.மீ. தூரத்திலும், கோபிசெட்டிபாளையத்தில் இருந்து 11 கி.மீ. தூரத்திலும் உள்ள கூகலூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது அதிசய ஆஞ்சநேயர் கோவில்.

இக்கோவில் கருவறையில் அதிசய ஆஞ்சநேயர், ஆறடி உயரத்தில் நின்ற திருவடிவினராக, கூப்பிய கரங்களிடையே சிவலிங்கத்தை ஏந்தியவாறு வித்தியாசமாக காட்சி தருகிறார். இவர் அதிசய ஆஞ்சநேயர் என்றழைக்கப்படுகிறார். ஆஞ்சநேயரின் இந்த அபூர்வ தோற்றத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

பிரார்த்தனை

இந்த அதிசய ஆஞ்சநேயர் தினமும் தங்கள் வாழ்க்கையில் பல அற்புதங்களை நிகழ்த்துகிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மகப்பேறு இல்லாதவர்களும், நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த அதிசய ஆஞ்சநேயரை வழிபட்டு நற்பலன்கள் பெறுகிறார்கள். உடல்நிலை சரியில்லாதவர்கள், மகப்பேறு இல்லாதவர்கள் ஏதாவது ஒரு சனிக்கிழமை இங்கே வந்து வடைமாலை சாத்தி இவரை வழிபட்டால் நற்பேறு கிட்டும் என்பது ஐதீகம்.

Read More
தேவசமுத்திரம் காட்டுவீர ஆஞ்சநேயர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

தேவசமுத்திரம் காட்டுவீர ஆஞ்சநேயர் கோவில்

அனுமனுக்கு முழுத்தேங்காய் நேர்த்திக்கடன்

கிருஷ்ணகிரி நகரத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் உள்ள தேவசமுத்திரம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது காட்டுவீர ஆஞ்சநேயர் கோவில். இக்கோவில் விஜயநகரப் பேரரசின் காலத்தில் தோன்றியது. அக்காலத்தில் இப்பகுதி வனமாக இருந்ததால், காட்டுவீர ஆஞ்சநேயர் கோவில் என்று பெயர் பெற்றது. ஆஞ்சநேயர் இங்கு சாய்ந்த கோலத்தில், வலது புறம் திரும்பி நின்றும், தலை மேல் நோக்கியும் , வால் தூக்கி நின்றவாறும், வாலில் சிறிய மணி ஒன்று கட்டியவாறும் காட்சியளிக்கிறாா்.

வளரும் நந்தீசுவரா்

இக்கோவிலின் அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுவது வளரும் நந்தீசுவரர் ஆவாா். மூலஸ்தானத்திலிருந்து இடதுபுறமாக, கோவிலின் வெளிபுறம் பாறையின்மீது நந்தீசுவரர் மிக அழகான தோற்றத்துடன் காட்சியளிக்கிறாா். இந்த நந்தி வளர்ந்து வருவதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.

முழுத்தேங்காய் பிராத்தனை

எல்லா ஆஞ்சநேயர் கோவில்களிலும் வடைமாலை, வெற்றிலை மாலை, துளசி மாலை, வெண்ணெய் காப்பு, சந்தனக்காப்பு சாத்தி வழிபடுதல் விசேஷம். ஆனால் இங்கு முழுத்தேங்காய் நேர்த்திக்கடன் விசேஷம். இங்கு வருகை புரிந்து பிராத்தனை செய்யும் பக்தர்களுக்கு தேங்காய், வெற்றிலையுடன் கூடிய சிகப்பு நிற துணி பை வழங்கப்படுகிறது. அவர்கள் பிராத்தனை முடிந்த பிறகு அந்த பையினை கோவிலுனுள் ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும். எவரொருவர் ஒரு முழுத்தேங்காயை, மனதார வேண்டி அனுமனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றாரோ, அவருடைய கோரிக்கைகள் மூன்று மாதத்திற்குள் நிறைவேறும் என்பது ஐதீகம். காட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலில் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுவதால் மக்கள் கூட்டம் அலைமோதும். அந்த நாட்களில் அனுமனை வழிபட்டு தேங்காய் கட்டினால் தங்களது வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

Read More
Perumal, பெருமாள் Alaya Thuligal Perumal, பெருமாள் Alaya Thuligal

ஸ்ரீவைகுண்டநாதன் கோயில்

யாளி வாயில் அனுமன்

108 திவ்விய தேசங்களில்,தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நவத்திருப்பதிகளும் அடங்கும்.அவற்றில் ஒன்றான ஸ்ரீவைகுண்டம் தலத்து ஆலயத்தில் திருவேங்கடமுடையான மண்டபம் என்றழைக்கப்படும் மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தின் இரண்டு புறங்களிலும் ஒன்பது தூண்களில் யாளிகள் தாணப்படுகின்றன.அவற்றில் ஒரு தூணிலுள்ள யாளியின் வாயில் அனுமன் காட்சியளிக்கின்றார்.

Read More
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

அனந்தபத்மநாபன் கோவில்

திருவனந்தபுரம் அனுமன் வெண்ணெய் காப்பு

திருவனந்தபுரம் அனந்தபத்மநாபன் ஆலயத்தில் மூலவர் எதிரில் ஆஞ்சநேயர் காட்சியளிக்கிறார். இவருக்கு பக்தர்கள் வெண்ணெய் சாற்றி வழிபடுகிறார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இவர் மீது சாற்றப்படும் வெண்ணெய் எவ்வளவு நாட்களானாலும் உருகுவதுமில்லை.வெய்யில் காலங்தளில் கெட்டுப் போவதுமில்லை.

Read More