தட்சிணாமூர்த்தி கோவில்

வடதிசை நோக்கி அருள்பாலிக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி

சென்னை மாநகரத்தின் திருவொற்றியூர் பகுதியில் தனிக்கோவில் கொண்டு தட்சிணாமூர்த்தி அருள் பாலிக்கிறார்.

எல்லா கோயிலிலும் சுற்றுப்பகுதியில் தெற்கு நோக்கி அமைந்திருக்கும் தட்சிணா மூர்த்தி இந்த கோயிலில் மூலவராக அதுவும் வடக்கு நோக்கி அருள்பாலிப்பது, வேறெங்கும் காண முடியாத அமைபபு. இதனால், இத்தலம் 'வட குருதலம்' என அழைக்கப்படுகிறது. நவக்கிரகங்களில் குரு பகவான், வடக்கு நோக்கி காட்சியளிப்பதன் அடிப்படையில் இவ்வாறு பிரதிஷ்டை செய்ததாகச் சொல்கிறார்கள். குபேரனின் திசையான வடக்கு நோக்கியிருப்பதால், இவரிடம் வேண்டிக்கொள்ள குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

மூலவர் தட்சிணாமூர்த்தி வலது கையில் அக்னி, இடக்கையில் நாகம் வைத்து, காலுக்கு கீழே முயலகனை மிதித்தபடி சுவாமி காட்சி தருகிறார். பொதுவாக தட்சிணாமூர்த்தியின் கீழே சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் என நான்கு சீடர்கள் மட்டுமே இருப்பர். ஆனால் இங்கு மூலவரின் பீடத்தில் 18 மகரிஷிகள் சீடர்களாக இருக்கின்றனர். இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம். உற்சவர் தட்சிணாமூர்த்தியின் பீடத்தில் யானை வணங்கியபடி அமைக்கப்பட்டிருக்கிறது

வீடு கட்ட, புது நிலம் வாங்க விரும்புபவர்கள் கோவில் வளாகத்தில் கற்களை வீடு போல, அடுக்கி வைத்து வேண்டிக் கொள்கிறார்கள். கல்வி, கலை, இலக்கியம், இசை போன்ற துறைகளில் சிறப்பிடம் பெற இங்கு வேண்டிக் கொள்கிறார்கள். திருமணத்தடை நீங்க, ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் எலுமிச்சையில் நெய் தீபம் ஏற்றியும் வழிபடுகிறார்கள். தெட்சிணாமூர்த்தியிடம் வேண்டிக்கொள்பவர்கள் கொண்டை கடலை மாலை அணிவித்து, சன்னதி முன்பு நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

 
Previous
Previous

இருக்கன்குடி மாரியம்மன் கோவில்

Next
Next

அகத்தீஸ்வரர் கோவில்