மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

தைப்பொங்கலன்று சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்

கல் யானை கரும்பு தின்ற அதிசயம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு தைப்பொங்கல் அன்றும், சிவபெருமான் கல் யானைக்கு கரும்பு தந்த லீலை ஒரு விழாவாக நடத்தப்பட்டு வருகிறது. சோமசுந்தரர் சித்தராக வந்து கோயிலிலுள்ள கல் யானைக்குக் கரும்பு கொடுத்து உண்ண வைத்தது ஒரு தைப்பொங்கல் நாள் என்பதால், வருடம் தோறும் தைப்பொங்கலன்று இக்கோவிலில் இவ்விழா நடைபெற்று வருகிறது. இந்த தினத்தில் குழந்தை பாக்கியம் வேண்டி, மக்களும் கரும்பை படைக்கின்றனர். கரும்பு தின்றதாக கூறப்படும் வெள்ளைக்கல் யானையை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், சோமசுந்தரேஸ்வரர் சன்னிதிக்கு இடப்புறத்தில் இன்றும் நாம் பார்க்கலாம். தைப்பொங்கல் தினத்தில் இந்த கல்யானையை தரிசிப்பது சிறப்பு.

முன்னொரு காலத்தில், மதுரையை அபிஷேக பாண்டியன் என்ற மன்னன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். அப்போது சோமசுந்தர கடவுள், சித்தரின் வடிவம் எடுத்து மதுரை மாநகரில் பல அதிசயங்களை நிகழ்த்தினார். முதியவரை இளைஞராகவும், இளைஞரை முதியவராகவும், பெண்ணை ஆணாகவும், ஆணைப் பெண்ணாகவும் ஆக்கினார். ஊமைகளை பேசவும் குருடர்களை பார்க்கவும் செய்யவைத்தார். ஊசியை நிறுத்தி அதன் மேல் தன்னுடைய பெருவிரலை மட்டும் ஊன்றி நின்று நடனம் ஆடினார்.

சித்தர் நிகழ்த்திய அதிசயங்களைப் பற்றி அறிந்ததும், மன்னனே தன்னுடைய பரிவாரங்களுடன் சித்தரைத் தேடி வந்தான். இதுபற்றி அறிந்ததும் சித்தர், மீனாட்சி அம்மன் ஆலயத்தின் வாயு மூலையில் அமர்ந்து யோக தியானத்தில் ஆழ்ந்தார். இந்த இடம் சுந்தரேஸ்வரர் சன்னிதியின் சுற்றுப்பாதையில் துர்க்கை சன்னிதிக்கு அருகே உள்ளது. மன்னன் சித்திரை பார்க்க கோவிலுக்கு வந்தான். மன்னனோடு வந்த பாதுகாவலர்கள், சித்தரின் யோகத்தை கலைக்க முற்பட்டு, கையை ஓங்கினர். ஓங்கிய நிலையிலேயே அவர்கள் கைகள் நிலைபெற்று விட்டன. இதனால் மன்னன் அதிர்ந்து போனான். பின்னர், மன்னன் சித்தரிடம் பணிவாக பேசினான். 'சித்தரே, தாங்கள் தியான நிலையில் இங்கே அமர்ந்து இருப்பதன் நோக்கம் என்ன? மேலும் நீங்கள் சித்தர்தான் என்பதை நான் எப்படி தெரிந்து கொள்வது?' என்றான்.

கண் விழித்த சித்தர், 'மன்னா! நான்தான் ஆதியும் அந்தமும். சஞ்சரிக்கும் வல்லமை எனக்கு உண்டு. தற்போது மதுரை மக்களுக்கு சித்து விளையாட்டு காட்டி, அவர்களுக்கு தேவையான வரத்தை அளித்து வருகிறேன். என்பெயர் "எல்லாம் வல்ல சித்தர்" என்பதாகும்' என்று கூறினார். அதன்பின்னும் சித்தர் மேல் நம்பிக்கையில்லாத மன்னன், 'சித்தரே, தாங்கள் எல்லாம் வல்ல சித்தர் என்றால், இந்தக் கரும்பை இங்குள்ள கல் யானையை தின்னச் செய்யுங்கள்' என்று கூறி கரும்பை நீட்டினான். சித்தரும் அமைதியாக அருகில் இருந்த கல் யானையைப் பார்க்க, அது உயிர்ப்பெற்று, மன்னனின் கையில் இருந்த கரும்பை வாங்கித் தின்றது. அத்துடன் அரசனின் கழுத்திலிருந்த மாலையையும் பறித்தது. அதன் பின்னர்தான் மன்னன், சித்தர் வடிவில் வந்தது சொக்கநாதர் என்பதை உணர்ந்தான்' மன்னன், சித்தரை அங்கேயே தங்கியிருக்கும்படி வேண்டினான். மேலும் தனக்கு குழந்தை பாக்கியம் தந்தருள வேண்டும் என்றும் கேட்டான். எல்லாம் வல்ல சித்தரின் அருளால், அடுத்த ஒரு வருடத்தில் மன்னனுக்கு விக்கிரம பாண்டியன் என்ற ஆண் குழந்தை பிறந்தது.

சென்ற ஆண்டு பொங்கலன்று வெளியான பதிவு

சிவபெருமான் பக்தனுக்காக வயலில் விவசாய வேலை பார்த்த தலம்

https://www.alayathuligal.com/blog/3yjh5ljbhhfh72zkchhcwk75yhged7

 
Previous
Previous

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

Next
Next

சேங்கனூர் சீனிவாச பெருமாள் கோவில்