பொன்வைத்தநாதர் கோவில்

பக்தைக்காக பல அதிசயங்கள் நிகழ்த்திய சிவபெருமான்

திருத்துறைப்பூண்டியில் இருந்து சுமார் 14 கி.மீ.தொலைவிலுள்ள தேவாரத்தலம். சித்தாய்மூர். இறைவன் திருநாமம் பொன்வைத்தநாதர். இறைவி அகிலாண்டேஸ்வரி, முற்காலத்தில், இவ்வூரில் சங்கரன் என்ற வணிகன் வசித்து வந்தான். இவர் ஒரு சிறந்த சிவபக்தர். இவரது மனைவி அன்பிற்பெரியாள். திருமணமாகி சில நாட்களில், சங்கரன் தன் வியாபாரம் நிமித்தமாக பக்கத்து நாட்டிற்கு சென்றுவிட்டான். கணவனுடன் வாழ்ந்த நாட்களில் அன்பிற்பெரியாள் கர்ப்பம் தரித்திருந்தாள். தனியாக வாழ்ந்த அவள், தினமும் பொன்வைத்தநாதர் கோயிலுக்கு சென்று கோவிலை சுத்தம் செய்வது, இறைவனுக்கு மாலை கட்டுவது போன்ற கைங்கரியங்களை செய்து வந்தாள். இவளது செயலுக்கு மகிழ்ந்த இறைவன், இவளது செலவிற்காக தினமும் ஒரு பொன் காசை கோயில் வாசல் படியில் வைத்தார். இதனால் இத்தல இறைவன் 'பொன்வைத்த நாதர்' எனப்பட்டார்.

சில மாதங்களில் இவள் கர்ப்பமாக இருப்பது வெளிஉலகிற்கு தெரிய வந்தது. சிவன் பொற்காசு கொடுப்பது யாருக்கும் தெரியாது. கணவன் ஊரில் இல்லை. இவளது செலவிற்கு பணம் ஏது?, எப்படி கர்ப்பமடைந்தாள் என ஊர்மக்கள் இவளை சந்தேகப்பட்டனர். எனவே அவளை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். கற்புக்கரசியான இவள் மிகுந்த மன தைரியத்துடன், சிவனே தஞ்சம் என கோயிலிலேயே தங்கினாள். பிரசவ காலம் நெருங்கியது. தனக்கென யாருமே இல்லை. தன்னை காப்பாற்றும்படி இறைவனை வேண்டினாள்.

உலக உயிர்களுக்கெல்லாம் தாயாக விளங்கும் அன்னை அகிலாண்டேஸ்வரியே இவளுக்கு பிரசவம் பார்த்தாள். குழந்தையும் பிறந்தது. வியாபாரத்திற்கு சென்ற கணவன் ஊர் திரும்பினான். ஊர் மக்கள் அவரிடம் உன் மனைவி நடத்தையில் சந்தேகம் உள்ளது என்றனர். அதைக்கேட்ட கணவன் வருந்தினான். மனைவியிடம் விபரம் கேட்டான். அவளோ நான் உண்மையானவள் என்பதற்கு இறைவனே சாட்சி என்றாள்.

அதற்கு கணவன், 'நீ உண்மையானவள் என்றால், மூடியிருக்கும் கோயில் கதவு தானே திறக்க வேண்டும். அர்த்தஜாம பூஜை தானாக நடக்க வேண்டும். நந்திக்கு பின்னால் இருக்கும் பலி பீடம் முன்னால் அமைய வேண்டும். கோயிலுக்கு பின்புறம் உள்ள தல விருட்சம் கோயிலுக்கு முன்னால் வளர வேண்டும் ' என நிபந்தனை விதித்தான். இதைக்கேட்ட அப்பெண் இறைவனை மனமுருகி வேண்டினாள். இவளது வேண்டுதலை இறைவன் ஏற்றார். அதன்படி ஊர் மக்கள் முன்னிலையில் கதவு தானே திறந்தது. பலிபீடம் நந்திக்கு முன்னால் அமைந்தது. தலவிருட்சம் கோயிலுக்கு முன்னால் வளர்ந்தது. அர்த்தஜாம பூஜையும் அர்ச்சகர் இல்லாமல் தானே நடந்தது. இறைவனின் திருவருளால் அனைத்தும் நடந்ததை அறிந்த மக்கள், அப்பெண்ணை வாழ்த்தினர்.

இன்றும் நந்தி கோயிலுக்கு வெளியே இருப்பதையும் நந்திக்கு முன் பலிபீடம் இருப்பதையும் காணலாம்.

உதவிக்கு யாருமின்றித் தனித்திருந்த வேளையில் தனக்கு அன்னை அகிலாண்டேஸ்வரி சுகப்பிரசவம் நிகழ உதவியதைப் போலவே, இந்தத் தலத்தில் வேண்டிக்கொள்ளும் பெண்கள் அனைவருக்கும் சுகப்பிரசவமே நிகழவேண்டும் என்று அன்பிற்பெரியாள் பிரார்த்தித்தாள். அவளின் பிரார்த்தனை இன்றளவும் நிறைவேறுவதாகச் சொல்கிறார்கள். ஏராளமான கர்ப்பிணிப் பெண்கள் இங்கு வந்து வழிபாடு செய்து போகிறார்கள். அவர்களின் வேண்டுதல்களும் நிறைவேறுகின்றன. வேண்டிக் கொண்டவர்கள் சுகப்பிரசவம் ஆனதும் மீண்டும் இந்தத் தலத்துக்கு வந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள்.

பொன்வைத்தநாதர்

கோயிலுக்கு முன்னால் தல விருட்சம்

கோயிலுக்கு வெளியே பலிபீடம்

நந்திக்கு முன் பலிபீடம்

 
Previous
Previous

செஞ்சடையப்பர் கோவில்

Next
Next

கரும்பாயிரம் கொண்ட விநாயகர் கோவில்