கந்தர்மலை முருகன் கோவில்.
தீராத நோய்களை தீர்க்கும் வள்ளி குளம் தீர்த்தம்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் இருந்து 27 கி.மீ. தொலைவில் உள்ள சுண்டக்காய்பட்டி என்ற கிராமத்தில், மலை மேல் அமைந்துள்ளது, கந்தர்மலை முருகன் கோவில். 750 அடி உயரமுள்ள இந்த மலைக்கோவிலுக்கு செல்ல 250 படிக்கட்டுகள் உள்ளன.
சூரியன், சந்திரன் ஒளி படாத வள்ளி குளம்
இந்த மலையின் மீது சித்தர்கள் வாழ்ந்து வருவதாக இன்றளவும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. அரிய வகை நாகங்களும் இங்கே அதிகமாக இருந்ததாக சொல்கிறார்கள்.
இன்றளவும் சித்தர்களும், நாகங்களும் அரூபமாக இங்கே நடமாடிக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.சித்தர்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதன் அடையாளமாக, மலை மீது உள்ள குகைக்குள், அதிகமான ருத்ராட்ச மணிகள் கிடைத்திருக்கின்றன. இங்கு 'வள்ளி குளம்' என்று ஒரு குளம் இருக்கிறது. இந்தக் குளத்தின் மேல் சூரிய ஒளி, சந்திர ஒளி படுவதில்லை. இந்த குளத்து நீரை எடுத்து பருகினால் தீராத நோய்கள் தீர்ந்துவிடும் என்பது பக்தர்களின் உறுதியான நம்பிக்கையாக இருக்கிறது.
ஒரு முறை கானகத்தில் முருகனோடு இருந்த வள்ளியம்மைக்கு திடீரென்று விக்கல் ஏற்பட்டது. அதை நிறுத்த ஏதாவது வழி சொல்லும்படி வள்ளியம்மை, முருகப்பெருமானிடம் வேண்டினாள். உடனே முருகப்பெருமான் 'எந்தக் குளத்தில் சூரிய ஒளியும், சந்திர ஒளியும் படவில்லையோ, அந்த குளத்தில் இருந்து நீர் எடுத்து பருகினால் விக்கல் நின்றுவிடும்' என்று கூறினார். இதையடுத்து வள்ளியம்மை இந்த கந்தர் மலை குளத்தில் நீர் எடுத்து பருகியதும், விக்கல் நின்று விட்டது.
இந்த குகைக் குளத்தில் உள்ள தண்ணீரை பக்தர்கள் வீட்டிற்கு எடுத்துச்சென்று தெளித்தால், சகல தோஷங்களும் நீங்கும். கந்தர்மலை வேல்முருகனை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண தடை நீங்கும். வியாபாரம் விருத்தியாகும். நோய் நொடிகள் அகலும். தீவினைகள் விலகி ஓடும். என்ன வேண்டுதல் வைத்தாலும் அதை உடனடியாக நிறைவேற்றுவார் 'கந்தர்மலை வேல்முருகன்' என்பது பக்தர்களின் நம்பிக்கை.
முகூர்த்த நாட்களில் நூற்றுக்கணக்கான திருமணங்கள், கந்தர்மலையில் நடக்கிறது. கந்தர்மலை வேல்முருகனை தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமன்றி, பெங்களூரு, புதுச்சேரியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
சூரியன், சந்திரன் ஒளி படாத வள்ளி குளம்