பெத்தநாயக்கன்பாளையம் ஆட்கொண்டீஸ்வரர் கோவில்

சூலத்தில் காட்சி தரும் அபூர்வ அர்த்தநாரீஸ்வரர்

சேலம் சென்னை நெடுஞ்சாலையில் சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ளது பெத்தநாயக்கன்பாளையம் என்னும் ஊர். இத்தலத்து இறைவன் திருநாமம் ஆட்கொண்டீஸ்வரர். இறைவியின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி. கருவறையில் லிங்கத்தின் கீழ் இருக்கும் ஆவுடையார், தாமரை மலர் அமைப்பில் இருக்கிறது. லிங்கத்தின் நடுவில் நெற்றிக்கண் இருப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். அநியாயம் செய்பவர்கள் பற்றி இவரிடம் முறையிட்டால், அவர்களைத் தண்டிப்பதுடன், தன்னை வணங்கும் பக்தர்களின் மனதை ஆட்கொள்வதால் இவரை 'ஆட்கொண்டீஸ்வரர்' என்கின்றனர்.

சூல அர்த்தநாரீஸ்வரர்

சிவபெருமான், சக்தியும் சிவமும் ஒன்றுதான் என்பதை உணர்த்துவதற்காக, தனது இடப்பாகத்தில் பார்வதிக்கு இடம் கொடுத்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்தார். மேலும் பெண்மைக்கு முக்கியத்துவம் தரும் வகையில், சக்தியிலிருந்து தோன்றுவதுதான் சிவம் என வலியுறுத்தும் விதமாக சக்தியின் ஆயுதமான சூலத்தின் மத்தியில் இருந்தும் காட்சி தருகிறார். இப்படி சூலத்தில் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளியிருப்பது இத்தலத்தின் விசேஷம். ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அனைவரும் சக்தி எனும் பெண்ணிலிருந்துதான் தோன்றுகின்றனர் என உணர்த்தும் விதமாக இக்கோலத்தில் இருக்கிறார்.

தாயை விட்டு பிரிந்துள்ள பிள்ளைகளும், பிரிந்த தம்பதிகளும் இவரை வணங்கிட பிரச்னைகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும் என்பது நம்பிக்கை.

 
Previous
Previous

சேங்கனூர் சீனிவாச பெருமாள் கோவில்

Next
Next

திருப்புலிவனம் வியாக்ரபுரீசுவரர் கோவில்